பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 பிப்ரவரி, 2010

கூட்டாகப் பொய்யுரைப்போர்!

* கூட்டாகப் பொய்யுரைப்போர்!


எக்கேடு வந்திடுமோ எந்தத் தீங்கு
     எந்தமிழ இனமுறுமோ என்றே தோன்றும்
இக்காலிச் சிவசங்கர் இங்கே ஆளும்
     இரண்டகரோ டுரையாடி இருப்ப தாலே!
அக்காலம் மேனனொடு அமுக்க மான
     அழிசூழ்ச்சி நாராயன் வந்து போனால்
மிக்கதாக் கீழத்தே நடக்கும்! ஒன்னார்
     மீமுயல்வால் பணிந்தார்கள் என்றே பொய்ப்பர்!

சென்னைக்கு வந்தவர்கள் செய்தி சொல்வார்
     சிங்களவர் போர்நிறுத்தம் செய்த தாக!
முன்னைவிட மேலதிக ஆய்தம் மற்றும்
     முனைந்துளவுச் செய்தியெலாம் அவர்க்க ளிப்பர்!
பின்னையுமே போர்நுட்ப ஆள னுப்பி
     பெருங்கப்பல் அவர்க்கீந்து துணையி ருப்பர்!     
தொன்னையிலே நெருப்பெடுத்து வந்த தாகத்
     துணிந்திங்கே கூட்டாகப் பொய்யு ரைப்பர்!

எனவேதான் இக்காலும் எத்தர் கூடி
     எந்தமிழர் அழிவிற்கே சூழ்ந்தார் என்றே
இனநலனை எண்ணிடுவோர் கவலு கின்றார்!
     ஏமாற்றுக் காரணங்கள் உண்மை யில்லை!
மனங்கனல நடப்பதெலாம் பார்த்தி ருக்கும்
     மறஞ்சான்ற இளந்தமிழர் மறக்க மாட்டார்!
சினமடக்கி வைத்தவர்கள் சீறும் நாளில்
     சீர்கெட்ட இவர்தப்ப வழியு முண்டோ?

--------------------------------------------------

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இன்முகத்தோடு உள்ளனராம்!

   இன்முகத்தோடு உள்ளனராம்!

இனக்கொலையர் வெங்கொடுமை எல்லை மீற
      இனியுமிதைப் பொறுப்பதுவோ என்றெ ழுந்த
மனக்கனலர் திரண்டறிவு ஆற்றல் வீரம்
      மாசற்ற ஈகத்தால் மண்ணை மீட்டே 
இனக்கொடியை ஈழத்தில் ஏற்றி ஆண்டார்!
      எல்லாரும் நல்லாட்சி இதுவென் றாரே!
தனக்கெனவே வாழ்ந்திடுவார் தில்லி யோடு
      தன்மானம் கெட்டுஓர்ஒப் பந்தம் போட்டார்!


சிங்களனை ஆளாக்கித் தில்லி யங்கே
      செந்தமிழ இனந்தன்னைச் சிதைத்த ழிக்க
இங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை மாற்ற
      ஏய்த்துநடித்(து) ஏமாற்றி எல்லாம் செய்தார்!
எங்குமிலாக் கொடுங்குண்டு வீசி அங்கே
      எண்ணற்ற தமிழர்களைக் கொன்றார் இங்குப்
பொங்குணர்வில் பதின்மூவர் பொசுங்கிச் செத்த
      போதுமதைப் பொருட்படுத்தாக் கொடுமை என்னே!


உயிரிருந்த மூன்றிலக்கம் பேரை அங்கே
      ஒருசேர முள்வேலி அடைப்புக் குள்ளே
செயிர்உருவர் சிறைவைத்துச் சிதைக்கின் றாரே
      சிந்தைமிக நொந்தவரும் சிறுகச் சாக!
அயிறற்கு உணவில்லை அருந்த நீரும்
      அழற்காயம் நோய்கட்கு` மருந்து மில்லை!
எயிலிருக்கும் கோட்டையிருந்(து) இரண்ட கத்தில்
      இவருரைத்தார் இன்முகத்தோ(டு) இருப்ப தாக!


அடைத்துவைத்த கூடாரம் மிதந்த தங்கே
      அடைமழையின் வெள்ளத்தில் அவர்ந னைந்தே
முடைநாற்ற நீரினிலே நின்ற வாறே
      முன்னறியாத் துனபத்தில் மூழ்கிப் போனார்!
கடைகெட்ட தொலைக்காட்சி காட்டு மிங்கே
      களிப்போடு பேசியமர்ந் திருப்ப தாக!
விடைசொல்லும் நாளொன்று வந்தே தீரும்!
      விழிப்புவரும்! விடிவுவரும்! வீழ்வார் வஞ்சர்! 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
  

வெள்ளி, 31 ஜூலை, 2009

ஆற்றாமைச் சீற்றத்தில் ஐந்து!

1 2 ஆற்றாமைச் சீற்றத்தில் ஐந்து!
   
ஓருயிர்க்கே வஞ்சமென ஓரினத்தைக் கொன்றழித்தார் !
நேரதற்கு நீதுணையாய் நின்றா'யே ! பூரியனே !
சீருறையும் செந்தமிழர் செப்பும் தலைவனெனப்
பேருனக்கேன் சீச்சீ பிழை ! 3 4 


எல்லா நிலையிலும் ஈழத் தமிழரின் 
பொல்லா நிலைக்குப் பொறுப்பு நீ ! நல்லார் 
உமிழ்கிறார்! தூ!தூ! உனக்குப் பதவி 
அமிழா திருக்கும் அமர். 5 6 



கட்டபொம்மை ஆங்கிலர்க்குக் காட்டிக் கொடுத்திட்ட
எட்டப்பன் போலானார் எம்முதல்வர் ! திட்டமுடன்
சிங்களர் ஈழத்தில் செந்தமிழர் கொன்றழிக்கப் 
பங்கேற்றார் தில்லியுடன் பார் ! 



ஆய்தங் கொடுத்தாய் ! அரிய உளவுரைத்தாய் !
போய்நின்று போரும் புரிந்திட்டாய் ! ஏய்த்திட்டாய் !
சீச்சீ ! சிறுமையாய் ! சிங்களர்க்கும் கீழானாய் !
தீச்செயலில் தில்லி திளைத்து. 9 0 



ஏடுமழும் ஈழத்தே எந்தமிழர் துன்பெழுதில் 
வீடுநா டெல்லாம்போய் வெந்துயரில் ! ஈடு 
சொலவுலகில் யார்க்கின்னல் சூழ்ந்ததிதைப் போன்றே 
உலகிலறம் ஓய்ந்ததென ஓது !  

-----------------------------------------------------------------------------------------

திங்கள், 25 மே, 2009

இரண்டகர் இரண்டுபேர்!




ஓரிலக்கம் பேர்கொன்றான் ஈழ மண்ணில்!
    உடனிக்கால் மூன்றிலக்கம் மெல்லக் கொன்றே 
ஓரினத்தை உருத்தெரியா தழிக்கின் றானே 
    உரிமைநிலத் தடயமெலாம் ஒக்க நீக்கி!
பூரியனின் கொடுமைகட்குத் துணையாய் நிற்போர்
    பொய்ம்முகத்தி னித்தாலிப் பொல்லாப் பேயும் 
சீரியநல் லார்காறித் தூ !தூ ! வென்றே 
    சினந்துமிழும் தன்னலப்பேய்க் கலைஞன் தானும்!

            ----------------------------

செவ்வாய், 5 மே, 2009

பாவேந்தர் இன்றிருந்தால்...!

(29-4-2009 அன்று பாவேந்தர் பேரவை நடத்திய பாவேந்தர் பிறந்தநாள் விழாவில் "பாவேந்தர் இன்றிருந்தால்" என்ற தலைப்பில் பாடிய மண்டிலப் பாக்கள்)


பெரியோரே! அறிஞர்களே! பெற்றெடுத்த தாய்க்குலமே!
     பீடு சான்ற
அரிமாவின் குருளைகளே! அறிவார்ந்த பிள்ளைகளே!
     அனைவ ருக்கும்
பரிவார்ந்த வணக்கங்கள்! பாவேந்தர் விழாவினிலும்
     பதைப்பு நெஞ்சில்!
சொரிகின்ற குண்டுமழை சுட்டழிக்கும் ஈழத்தில்
     சொந்தம் மாய்க்கும்!

பாவேந்தர்:

நோவேற்றித் தாய்த்தமிழை நொய்வித்தார் நொட்டுரையை
     நொறுக்கி வீழ்த்தி
தாவாற்றி தலைநிமிர்த்தி தமிழ்த்தாயின் தளையறுத்து
     தழைக்கச் செய்யப்
பாவாற்ற லாற்றமிழின் பகைஒடுக்கிப் படர்நீக்கப்
     பாடு பட்ட
பாவேந்தை அறியாரைப் பலகற்றும் தமிழரெனப் 
     பகர லாமோ?

தன்னலத்தார்:

ஆர்த்தெழுந்த இளைஞர்களை அறிவார்ந்த காளைகளை
     அணையச் சேர்த்தே
நேர்த்தியுறு போர்த்திறத்தில் நேரொழுங்கில் பயிற்றியவர்
     நெடுமீ கத்தால்
கூர்த்தவினை முடித்தீழக் கொடியேற்றி ஆண்டாரைக்
     குலைத்த ழித்துத் 
தீர்த்தவழி தன்குடும்பம் திளைக்கவளம் தீக்கரவில்
     தேர்ந்தார் அந்தோ!

பாவேந்தர் இன்றிருந்தால்...

அமுதூட்டல் போல்நஞ்சை அகமகிழ ஊட்டுந்தாய்
     ஆனார் என்னே!
உமிழ்வாரே பாவேந்தர் உறுபழியர் முகத்திழித்தே
     உலறிச் சீறி!
இமிழுலகில் தமிழர்க்கே இன்துணையாய் இருவென்றே 
     இருத்தி வைத்தால்
தமிழீழ இனமழிக்கத் தகவிலர்க்குத் துணைபோனாய்!
     தாழ்ந்தாய் என்பார்!

பொங்குதமி ழர்க்ககின்னல் புரிவார்க்கே அழிவுறுதி
     புரியு மாறே
சங்குமுழக் கோடுலகில் சாற்றியதை மறப்போமா?
     சற்றுக் கூட
தங்குதயக் கின்றியந்தத் தகையறியாக் கொலைவெறியர்
     தருக்குஞ் சொல்லார்
சிங்களவர் வீழ்ச்சிக்கே சீறிஅறம் பாடிடுவார்
     சினத்தால் தீய்ப்பார்!

வேகுந்தீக் கிரையாகி வீணிலுயிர் இழப்பாரை
     விளித்த ழைத்துச்
சாகின்ற தமிழாநீ சாகச்செய் வார்சாகச்
     செய்வாய் என்பார்!
மாகுன்றத் தோளனுயர் மறத்திற்குப் பொருளானான்
     மண்ணிற் காணா
வாகறிவுப் பெருவீரன் வரிப்புலிக்குத் துணையிருப்பாய்
     வாழந்தே என்பார்!

உரஞ்செறிந்த எழுச்சியுடன் உலகிலுள்ள தமிழரெலாம்
     ஒன்றாய் நிற்பீர்!
நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி
     நண்ணி யந்தக்
கரம்புமன இனக்கொலையர் கடுமொடுக்கு முறையெதிர்த்தே 
     கனல்க என்பார்!
வரம்பறியாக் கொடுமையற வாழ,தமிழ் மண்மீட்க
     வாழ்த்துச் சொல்வார்!

இரண்டகரை இனங்காண்பீர்! இழித்தொதுக்கி வைத்திடுவீர்!
     ஈழம் சாய்த்த
வறண்டமனத் தில்லியரை வலிமையுடன் எதிர்த்தினத்தை
     வாழ வைப்பீர்!
இரண்டுநிலை இந்தியனுந் தமிழனுமாய் இருக்காதீர்!
     இனிஎ ழுந்தே
திரண்டிடுவீர் தமிழரென! தேர்ந்திடுவீர் அடையாளம் 
     தெளிவாய் என்பார்!        

வியாழன், 26 பிப்ரவரி, 2009

இன்னநிலை புரிந்தெழுவோம்!



      (நான்குகாய் +மா + தேமா)


மூண்டெழுந்த கொந்தளிப்பை முகம்மாற்றித் தணித்துவிடும்
     முடிவைக் கொண்டு
தூண்டலினால் காவலரும் துடிப்புவழக் குரைஞருடன்
     துலக்க மின்றி
வேண்டாராய்ப் பகையுணர்வில் வெறுப்புற்று மோதிடவும்
     விளைவாய்ப் பல்லோர்
ஆண்டடிதாக் குதல்களுக்கே ஆளானார் அவற்றோடே
     அவர்கள் ஊர்தி

காவலரின் கைத்தடிகள் கடுந்தாக்கில் நொறுங்கிவிழ
     கலங்கா நின்ற
நாவலராம் வழக்குரைஞர் நனிமிகவே தாக்கமுற
     நடுங்கா நெஞ்சின்
கோவமிகக் காவலர்குண் டாந்தடிகள் கட்டடத்தைக்
     குறியாய்த் தாக்க
வேவலுற எரிந்ததுகாண் விளைவிலொரு காவலகம்
     வெறுப்பி னாலே!

இன்னவகை மோதலினால் எவருக்கே இன்பயனென்(று)
     எண்ணிப் பாரீர்!
முன்னணியில் நின்றிருந்து முனைந்தீழப் போர்நிறுத்த
     முழக்கம் செய்தோர்
வன்குரலை ஒடுக்கிடவே வலிந்தங்குக் காவலரை
     வரச்செய் தாரே!
இன்னநிலை புரிந்தெழுவோம்! ஈழஉற வைக்காக்க
     எழுவோம் மீண்டும்!

----------------------------------------------------

வெள்ளி, 30 ஜனவரி, 2009

முத்துக்குமார் நினைவாக...!

அவரும் இவரும் நீயும்!
அவர்:
ஒருவருடை இறப்பினுக்கே ஓரினத்தைப் பழிவாங்கும்
     உளங்கொண் டாரோ?
உருளுலகில் இந்நாட்டை உயர்வல்ல அரசாக்க
     உளங்கொண் டாரோ?
உருவாகும் ஈழத்தால் ஒற்றுமைக்கிங்(கு) ஊறென்றே
     உளங்கொண் டாரோ?
ஒருமுடிவாய்ப் பலவகையும் உதவுகிறார் சிங்களர்க்கே
     உணமை ஏதோ?
இவர்:
ஈழத்தில் இனமழிய இவ்வாட்சி எதற்காக
     இனியெம் சொந்தம்
ஆழத்தாழ் துயர்மூழ்கி அழிகின்ற நிலைமாற்ற
     ஆளும் தில்லி
தாழவிடா தாட்சியினைத் தாங்குகின்றோம் ஈழப்போர்
     தடுப்போம்! என்றே
சூழல்கண் டுரைத்தார்பின் சோர்ந்தாரே! பதவிக்காய்ச்
     சுருங்கி னாரே!
நீ:
இங்குதமிழ் நாடாளும் இயலாத்தன் னலத்தாரின்
     ஏய்ப்புக் கூறி
பொங்கீழத் தமிழினத்தைப் பொல்லாரோ டிணைசேர்ந்து
     போரில் மாய்க்கும்
எங்குமிலாக் கொடுமைசெயும் இந்தியத்தின் இரண்டகத்தை
     எடுத்துக் கூறி
மங்கலிலாப் புகழோடே மாய்ந்தமுத்துக் குமாரேயெம்
     மறமே வாழ்க!

திங்கள், 12 ஜனவரி, 2009

கொடுமையிதே! அறக்கொலையே!

(எண்சீர் மண்டிலம்: காய் - காய் - மா - தேமா)


இகழ்சேர்க்கும் எனஅஞ்சீர்! அறமுங் கொல்வீர்!
     இந்தியத்தை ஆளுகின்ற அரசே! இங்கே
புகலருங்கே டினத்திற்கே புரிந்தும் கண்ணைப்
     பொத்திக்கொண் டறியார்போல் நடித்துக் கொண்டு
அகலலிலா தந்திரத்தில் ஆளு கின்ற
     அருட்செல்வர் தலைமையுள அரசே! நீங்கள்
மிகக்கரவாய் தமிழினத்தின் அழிவிற் கென்றே
     மேன்மேலும் இரண்டகங்கள் செய்கின் றீரே!

தினைத்துணையும் அறவுணர்வே அற்றுப் போனீர்!
     தெரிந்திருந்தும் சிங்களர்க்கே உதவி செய்வீர்!
அனைத்துவகை ஆய்தங்கள் அள்ளித் தந்தீர்!
     அரியஉள வுந்தொகையும் அவர்க்கே ஈவீர்!
முனைத்தெழுந்து பாக்கித்தான் சீனத் தோடு
     மும்முரமாய்ப் படைநடத்தத் துணையும் செய்வீர்!
எனைத்தென்ற அளவின்றி உதவு கின்றீர்!
     இனக்கொலையில் எந்தமிழர் அழிந்து போக!

தூசாகக் கருதுகின்றீர் தமிழர் தம்மை!
     துளிக்கூட எம்முணர்வை மதிக்க வில்லை!
காசாவைத் தாக்குவதைக் கண்டிக் கின்றீர்!
     கனிவுடனே ஆப்கான்மற் றெவர்க்கும் உங்கள்
ஊசலிலாத் துணைதரவு உண்டே! ஆனால்
     உரிமைமறுத் தினமழிக்கும் சிங்க ளர்க்கும்
கூசாமல் உதவுகின்றீர்! கொள்கை அற்றீர்!
     கொடுமையிதே! அறக்கொலையே! கொதித்துச் சொன்னேன்!

புதன், 26 நவம்பர், 2008

அண்ணாவின் பெருமை!

       
பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள்
பெரிதாய்ப் போற்றும்
ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால்
உற்ற பேறே!
எருவெனவே உயிருடம்பை இத்தமிழ மண்ணுக்கே
ஈந்த பெம்மான்
திருமைமிகு அண்ணாவின் பெருமையினைச் சிறிதிங்கே
தெரிந்து கொள்வோம்!



அறிஞருளும் அறிஞரவர் அரசியல்சீர் கற்றறிந்தார்
அவரின் பேச்சைப்
பொறிமடுத்தார் வயப்படுவர்; புரிந்தபிறர் வேட்டிருப்பர்;
புரியார் தம்மை
நெறிப்படுத்தும் குமுகாய நிலைதிருத்தும் பெரும்பணியர்
நெஞ்சக் கூட்டில்
வெறியன்பால் தமிழ்மக்கள் விருப்பத்தோ டடைத்துவைத்த
வெல்லுஞ் சொல்லார்!



உலகினிலே முதன்முதலாய் உயர்ந்திருந்த ஓரினத்தை
ஒப்பே இல்லா
இலகுதமிழ் முதன்மொழியை ஏய்ப்பினிலே வீழ்த்திய
ரியத்தின் மாயை
துலக்கமுற விளக்கியவர் தோல்வியிலா எழுத்தாற்றல்
துணையி னாலே
இலங்குகதை கட்டுரைகள் ஏற்றமிகு மேடைதிரை
எல்லாம் வென்றார்!



பொருநரென மேடையிலும் புத்தெழுத்து நடையினிலும்
பொலிவு சேர
அருந்தமிழ்க்கு அணிசேர்த்தார்! அயற்சொற்கள் தவிர்த்தெழுத
ஆவல் கொண்டார்!
இருந்தமிழ்க்கு மறுமலர்ச்சி இவராலே வந்ததெனில்,
இதுவே உண்மை!
பெருஞ்சிறப்பில் செந்தமிழ்க்கே பீடுறவே எடுத்தாரோர்
பெருமா நாடே!



எழுத்தாளர் கல்கிமகிழ்ந் திவர்அறிஞர், தென்னாட்டின்
பெர்னாட் சாஎன்(று)
அழுத்தமுறப் புகழ்ந்துரைத்தார்! ஆங்கிலத்தில் அண்ணாவின்
ஆற்றல் பேச்சு
இழுத்ததந்த வாச்பேயி நேருவுட னெல்லாரின்
இனிய சிந்தை!
வழுத்திதமிழ் மக்களெல்லாம் வாய்மகிழ அண்ணனென
வழங்கி னாரே!



இருபத்து மூன்றுதிங்கள் இவர்முதல்வ ராயிருந்தார்
இதற்குள் ளேயே
இருமொழியே போதுமென இந்திமறுத் தோர்சட்டம்
இயற்றித் தந்தார்!
பெருமகிழ்வில் தமிழ்நாடாய்ப் பெயர்மாற்றம் செய்திட்டார்!
பின்தன் மானத்
திருமணங்கள் செல்லுமெனுந் திருத்தத்தால் தமிழ்மானம்
திரும்ப மீட்டார்!



இனக்கொலைகள் அன்றைக்கும் ஈழத்தில் ஐம்பத்தோ(டு)
இரண்டாண் டின்முன்
கனக்குமனத் தோடண்ணா கனிவற்ற தில்லியினைக்
கடிந்து ரைத்தார்!
மனக்குமுற லோ(டு)ஐநா மன்றிற்கும் எழுதிநிலை
மாற்றக் கேட்டார்!
இனக்காவல் மறவனவர் இருந்திருந்தால் இன்றிருக்கும்
ஈழ நாடே!



அண்ணாவின் உரோம்செலவில் ஆற்றலுடை ஒருமறவர்
அடைப்பின் நீக்க
பண்ணவராம் போப்பவரும் அண்ணாவின் வேண்டுகைக்குப்
பரிந்தி சைந்தே
திண்ணமிகு இரானடேயை விடுவிக்கச் சிறைக்கதவும்
திறந்த தன்று!
எண்ணமெலாம் நன்னேயம் இயக்கமெலாம் நன்னெறியன்(று)
இலங்கி னாரே!



பெரிதுபெரி தண்ணாவின் பெரும்பெருமை முடிந்திடுமோ
பேசு தற்கே!
அரியதமிழ் மீட்பிற்கு அண்ணாவே முன்னணியர்
அறியார் யாரே!
விரிந்ததவர் சிந்தனைகள் தளையறுத்துத் தமிழருயர்
விடிவைத் தேடி!
அரிதவரின் பெருமைசொலல் அவரவரும் தம்முணர்வால்
அறிந்து கொள்வீர்!

 -------------------------------------------------------------
        

   
   

ஞாயிறு, 23 நவம்பர், 2008

பாவலர் பாரதியார் நினைவேந்தி...!

(எண்சீர் மண்டிலம்: காய் – காய் – காய் – மா )


பாரதிக்குத் தனிச்சிறப்பு பழந்தமிழச் சித்தர்
            பாப்போல எளிதாகப் பாடிஎளி யோரும்
தேரஉணர்ந் தெழுச்சிகொளத் தேசப்பற் றூட்டித்
            தீக்கனலாய்ப் பரப்பியமை தெரியாதார் இல்லை!
வீரவர லாற்றுடனே வெவ்வேறு செய்தி
            விளக்கியநல் எழுத்தாளர்! வீறிழந்து மக்கள்
சீரழிந்தே அடிமையுற்ற சிறுமைநிலை போக்கச்
            சீறிஎழச் செய்தஇத ழாசிரியர் இவரே!
.
தொன்மையுடன் புதுப்புதுமை தோய்ந்தகருத் தெல்லாம்
            துளித்தயக்கு மில்லாது துணிவுடனே சொன்னார்!
முன்மையுறத் தாய்மொழியில் முறையாகக் கற்பீர்;
            முந்திடும்ஆங் கிலவழியோ முழுபேடிக் கல்வி!
வன்மையுடன் அதைத்தவிர்ப்போம்; வண்டமிழின் வழியே
            வழங்கிடுவோம் கல்வியென வழிவகையும் சொன்னார்!
மென்மையொடும் அன்போடும் மிகப்பரிந்து சொன்னார்
            மேனமையுறத் தாய்மொழியே மிக்கதுணை என்றே!
.
ஒருபக்கப் பாரதியே உருவாக்கிக் காட்டும்
            உதவாத போக்கிங்கே உள்ளதிது நன்றோ!
ஒருவிடுக அயற்சொல்லை ஒல்லும்வா யெல்லாம்
            ஓங்குகலை சேர்த்துதமிழ் உயர்த்திடுக என்றார்!
தெருளுறவே அவருரைத்த தேர்ந்தகருத் திதனைத்
            தெரிந்திருந்தும் பிறசொல்லைத் தீந்தமிழில் கலக்கும்
அருவருப்பை மாற்றிடுவோம் அறிவியலும் கலையும்
            அருந்தமிழில் வளர்த்திடுவோம்! அன்புணர்வில் வாழ்வோம்!
------------------------------------------------------------------------------------------------