இரங்கற் பா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரங்கற் பா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

அடிகளாசிரியர்க்கு இரங்கல்


அடிகளாசிரியர்க்கு இரங்கல்
                           
(விழுப்புரம் மாவட்டத்தில், சின்னசேலத்தை அடுத்த கூகையூர் என்னும் குகையூரில் குடத்திலிட்ட விளக்காய் வாழ்ந்த ஏற்றமிகு தமிழறிஞர், தொல்காப்பிய திருமந்திர ஆய்வாளர் அடிகளாசிரியர் கடந்த 8-1-2012இல் இயற்கை எய்திதினார். அப்பெரியாரின் நினைவேந்தும் பா இது)

உலகில்சீர் தொண்டாற்றி ஒளிசேர்த்தார் பலருள்ளும்
ஒப்பாய்க் கூறப்
பலகற்றும் ஆய்ந்தாழம் பற்பலநூல் விளக்கமுறப்
படைத்த ளித்தும்
இலகுறவே கூரையகம் ஏற்றதென கோரைப்பாய்
இருந்தே வாழ்ந்த
அலகில்லா எளிமைசேர் அடிகளாசி ரியருமைப்போல்
யாரே உண்டு?

மாறலிலாத் தமிழ்ப்பற்றில் மறைமலையார் நற்றொடர்பில்
மக்க ளுக்கே
தூறலற அழகழகாய்த் தூயதமிழ்ப் பெயரிட்டீர்!
தோய்ந்த ஆய்வுச்
சேறலுற செம்மொழியாம் செந்தமிழ்த்தொல் காப்பியத்தின்
சிறப்பு ரைக்கும்
சாறமுறு நூல்பலவும் சமைத்தளித்தீர்! ஐயமற
தமிழ்கற் பித்தீர்!

நூற்றியிரண் டாண்டகவை நுடங்காத வாழ்வினிலே
நுவன்றீர் தேர்ந்தே
தேற்றமுற ஆய்ந்தறிந்த தெளிவார்ந்த கருத்துக்கள்;
தேடி வந்த
ஏற்றமுறு சிறப்புகளோ எண்ணிலவாம்! இவைவிடுத்தே
எங்கே போனீர்?
ஆற்றல்சால் உம்நினைவை அகத்தேற்றோம்! வணங்குகிறோம்!
அடிகள் ஐயா!

(இலகுற எளிமையுற; தூறல் பழிச்சொல்லல், சேறல் எழுச்சி)

---------------------------------------------------------------

ஞாயிறு, 22 நவம்பர், 2009

புதுச்சேரி நற்றமிழ்ப் புரவலர் திருநாவுக்கரசு (தேசிகன்) ஐயா மறைவுக்கு இரங்கல்

 திருநாவுக்கரசு ஐயா மறைவிற்கு இரங்கல்       
                       
கேட்டா ரதிரக் கிளையர் செயலறக்
கோட்டியாய் மற்றவர் குழுமிக் குமுற
தனித்தமிழ்க் கழகத் தனிச்சிறப் பாளர்
நனிநற் பண்பின் இனிய ரொப்பிலா
திருநா விறந்த செய்தி வந்ததே!
உருகினர் ஏங்கினர் உற்றார் தவித்தனர்!

ஆற்றல் சான்றவர் அருளுள் ளத்தர்
ஆற்றிடு அருவினை அறிவியா துதவுநர்!
இன்னோர்க் கென்னாது எல்லார்க்கு முதவிய
செந்நோக் கினரச் சிறப்புறு செம்மல்!
இன்னின் னார்க்கே இன்னலென் றறிந்தே
இன்முகத் தோடவர் எழுவா ருதவ!

எந்நே ரத்திலும் எவரக்கும் உதவ
முந்தி முனையும் முனைப்பினர் உண்மை!
நட்பினர் குடும்ப நல்லது கெட்டதில்
நுட்பமாய் அறிந்தே ஒட்பத் துதவுநர்
எதிர்பா ராத இடுக்கண் எழுகையில்
மதிநுட் போடிவர் மாற்றிய கதைபல!

எவருரைப் பாரோ, இவரறிந் திடுவார்
கவலறுத் திடவே கடியவந் திடுவார்!
செந்தமிழ் நிகழ்வில் முந்தி நின்றிவர்
வந்து கனிந்து வருகவென் றழைக்கும்
ஒப்பருங் காட்சி உளத்தில் நிலைக்கும்!
செப்பருஞ் சிறப்பின் சீருக் குரியவர்!

ஆசாகு அய்யா தேசிகன் உயிரை
கூசாது நேர்ச்சி கொள்ளை கொண்டதே!
இழப்பு, இழப்பு, இழப்புபே ரிழப்பே!
உழப்புற லகற்றியவ் வுயர்ந்தோர்
சிறப்புறு செயல்கள் சிந்தையில் கொள்வமே!
-------------------------------------------------------------------------