முத்துக்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்துக்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஜனவரி, 2022


வித்தியதும் ஆகாதே வீண்!

=========================

 தன் இன்னுயிர் ஈவதற்குமுன்…

வரலாறு காணாத…

ஒப்புயர்வற்ற…

ஒருதனிச் சிறப்பார்ந்த…

அறிக்கை வெளியிட்டு உணர்வு கொளுத்திய…

ஈடற்ற ஈகி…

முத்துக்குமார் நினைவைப்போற்றுவம்!

கடமை உணர்வோம்!

====================================

வித்தியதும் ஆகாதே வீண்!

======================================

(வெள்ளொத் தாழிசை)

இறப்பில் எழுச்சிதந்த எங்கள் குமரா!

மறத்திற்கே நல்லுருநீ; மாத்தமிழர் மானத்

திறத்தை விளக்கும் திரு.

 

தன்னேரில் ஆவணத்தால் தந்தவுயி ரீகத்தால்

தன்னலத்தார் அஞ்ச தமிழிளைஞர் ஏழ்ச்சிகொள 

நன்முத்தே இட்டாயே வித்து.

 

முத்துக் குமாரேயெம் மூத்த பெருமுரசே

செத்தெழுச்சி தந்ததனிச் சீரா! திருவிளக்கே!

வித்தியதும் ஆகாதே வீண்.

====================================================

சனி, 30 ஜனவரி, 2010

விழுப்புரத்தில் வீரவணக்கப் பொதுக்கூட்டம்




            விழுப்புரத்தில் முத்துக்குமாருக்கு வீரவணக்கப் பொதுக்கூட்டம் 30-01-2010 காரி(சனி)க்கிழமை மாலை 06-30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
           
            விழுப்புரம் அஞ்சலகத்திற்கு அருகில் பெரியார் சிலைப் பக்கத்தில் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு திரு. சோதி நரசிம்மன் தலைமை ஏற்றார்.
*
            தொடக்கத்தில், வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கும், ஈழமக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வற்புறுத்தித் தீக்குளித்து உயிர்நீத்த மற்ற ஈகிகளுக்கும் ஈகச்சுடர் ஏற்றிப் பெண்கள் வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து பலரும் மெழுகுத்திரி ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
*
            அதன்பின், சோதிநரசிம்மனும் இன்னொரு தோழரும் உரையாடல் வழியாகத் தமிழ் மொழி அழிப்பு, தமிழர் நிலம் பறிப்பு ஈழத்தமிழர் படுகொலைகள், தமிழக மீனவர் சிங்களக் கடற்படையிரால் தாக்கப்பட்டுக் கொல்லப்படுதல் ஆகியவற்றை விளக்கினர். இடையிடையே இசைக்குழுவினர் விளக்கம் தரும் பாடல்களைப் பாடினர்.
*
            சொற்பொழிவாளர்கள் எழில். இளங்கோவும் திருச்சி வேலுச்சாமியும் ஈழத்தமிழருக்குத் துணையிருக்க வேண்டுமெனவும் இந்திய அரசும் தமிழக அரசும் ஈழத்தமிழருக்கு எதிரான போக்கைக் கைவிட வேண்டுமெனவும் விளக்கிப் பேசினர்.
*
            பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இரவு பத்துமணி அளவில் திரு. கொ.ப.சிவராமன் நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது.

------------------------------------------------------------------------------------------------------------

*