தமிழ் காத்த கிளர்ச்சியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் காத்த கிளர்ச்சியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார் – ௩



பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார்
======================================================

ஆபிரகாம் பண்டிதர்
------------------


சிலப்பதிகார இசைத்தமிழ்ப் பகுதிகளைச் செவ்வையாக ஆராய்ந்து, பெருந்தொகையைச் செலவிட்டு, ஆயப்பாலை வட்டப்பாலைப் பண்திரிவு முறைகளையும் வீணையியல்பையும் தம் கருணாமிர்த சாகரத்தின் வாயிலாக விளக்கிக்காட்டி, தமிழிசையின் முன்மையையும் தாய்மையையும் நிறுவியவர், தஞ்சை ஆபிரகாம் பண்டிதரே.

கா.நமச்சிவாய முதலியார்
-------------------------


தமிழர் பலர் தமிழாசிரியத் தகுதிபெற இயலாதவாறு, வடமொழிப் பயிற்சியோ டிணைக்கப்பட்டிருந்த சென்னைப் பல்கலைக்கழக புலவன் (வித்துவான்) தேர்வுப் பாடத்திட்டத்தைக் கவனித்து, அதன் தீங்கைக் கண்டு, தனித்தமிழ்ப் பிரிவு (7 ) ஏற்படுத்திய பெருமை, அப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராயிருந்த நமச்சிவாய முதலியாரதே.

மு.சி.பூரணலிங்கம் பிள்ளை
--------------------------


தமிழ் நாகரிக வரலாற்றையும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு, தமிழின் பெருமையை அயல்நாட்டார் அறியச்செய்த அருந்தமிழ்த் தொண்டர், ஆங்கிலப் பேராசிரியர் பூரணலிங்கம் பிள்ளையாவார்.

(தமிழ் வரலாறு-2, பாவாணர், பக்கம் 119,120., தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை–17) 
--------------------------------------------------------------------------------------------------------    

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார் - உ



பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார்
=========================================================

சிவஞான முனிவர் (18ஆம் நாற்.)
-----------------------------


வடமொழி உயர்வென்றும் தமிழ் நாழ்வென்றும் கருதப்பட்ட காலத்திலும் இடத்திலும் இருந்துகொண்டு, தம் ஆழ்ந்த தென்மொழி வடமொழிப் புலமையாலும், அரிய இலக்கணவாராய்ச்சியாலும், செய்யுள் வன்மையாலும் தருக்க வாற்றலாலும், தமிழ் வடமொழிக்கு எள்ளளவும் இளைத்ததன்றென நிறுவியவர் மாதவச்சிவஞான முனிவராவர்.

சுந்தரனார் (19ஆம் நூற்)
---------------

சுந்தரனார் தம் மனோன்மணீயத்திற் பின்வருமாறு தமிழை ஆரியத்தோடுறழ்ந்து, ஆரியச்செருக்கை அடக்கினார்.

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
 உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்
 ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
 சீரிளமைத் திறம்வியந்து செயல்மந்து வாழ்த்துதுமே....

சதுர்மறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
 முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே...

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
 எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே...

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
 உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி...

மனங்கரைந்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
 கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ

பா.வே. மாணிக்க (நாயகர்) (20ஆம் நூற்.)
--------------------------

தம் நுண்மாண் நுழைபுலத்தாலும் பன்மாண் பொறிவினைப் பயிற்சியாலும், தமிழ் நெடுங்கணக்கை ஆழ்தாய்ந்து தமிழே உலக முதன்மொழியென முதன்முதற் கண்டவரும், அதை அஞ்சாது எங்கும் எடுத்துவிளக்கிய தண்டமிழ்த் தறுகண்ணாளரும் பா.வே. மாணிக்கநாயகரே.

(தமிழ் வரலாறு-2, பாவாணர், பக்கம் 117,118., தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை17)  
________________________________________________________________________

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார் - க



பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார் - க
================================================================

திருவள்ளுவர் (கி.மு.முதல் நூற்றாண்டு)


திருவள்ளுவர், ஆரியப் பல்சிறு தெய்வ வழிபாட்டை நீக்கிக் கடவுள் வழிபாட்டை நிறுவியும், அருள் நிறைந்த துறவியரே அந்தணர் என்று வரையறுத்தும், குலத்திற்கேற்பத் தண்டனை கூறும் ஆரிய முறையை அகற்றி நடுநிலை நயன்மை நாட்டியும் தமிழ்ப் பண்பாட்டை கிளர்வித்தார்.

நக்கீரர் (கி.பி. 2ஆம் நூற்.)


நக்கீரர், ஆரியம் நன்று, தமிழ் தீது எனவுரைத்த குயக்கொண்டானை அங்கதம் பாடிச் சாவித்து, பின்பு பினர் வேண்டுகோட் கிணங்கி அவனை உயிர்ப்பித்து, தமிழின் உயர்வை மெய்ப்பித்துக் காட்டினார்.

பரஞ்சோதி முனிவர் (16ஆம் நூற்.)


பரஞ்சோதி முனிவர், தம் திருவிளையாடற் புராணத்தில்,

கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?
 
- என்று பாடித் தமிழிலக்கண உயர்வை எடுத்துரைத்தார்.

(தமிழ் வரலாறு-2, பாவாணர், பக்கம் 117, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை17)
--------------------------------------------------------------