செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

‘தமிழர்களும் தமிழும்’ – நேற்று, இன்று, நாளை!

(24-2-2019 மாலை நடைபெற்ற விழுப்புரம் தமிழ்ச்சங்கத்தின் 16-ஆம் ஆண்டுவிழாப் பாவரங்கத்தில் தலைமை ஏற்றுப் பாடிய பா) 

‘தமிழர்களும் தமிழும்’ – நேற்று, இன்று, நாளை!

அரங்கிலுள பெரியோரே அறிவார்ந்த சான்றோரே, அன்பு பொங்கும்                                   இரங்கும்உளத் தாய்மாரே, இளையோரே, மாணவரே இவ்வரங்கில்      
அருந்திறத்தில் பாடவந்த ஆற்றல்சால் பாவலர்காள்! அந்த மிழ்பால்          
வரம்பில்லாப் பற்றுடைய வயங்குளத்தர் அனைவரையும் வணங்கு கின்றேன்!

விழுப்புரத்தில் தமிழ்ச்சங்கம் வீறுறவே தொடக்கிதொடர் வினையால் இன்றே 
செழிப்புறவே பதினாறாம் சீரார்ந்த ஆண்டுவிழா சிறப்பாய்க் காணும்         
பழிப்பிழிப்புப் பாராட்டாப் பாலதண்டா யுதனாரைப் பலவா றாகக்                 

கொழிப்புறவே போற்றிடுவோம்! குறைவின்றிப் புகழுரைகள் குவிப்போம் யாமே!

உலகிலுள மொழியறிஞர் உயர்தனிச்செம் மொழிதமிழென் றுரைப்ப தோடே
பலவகையும் சிறப்புயர்வுப் பாங்குகளை எடுத்துரைத்துப் பராவு கின்றார்!
நிலவுகின்ற மொழிகளிலே நிலைத்ததமிழ் முதன்மொழியாம் நிவப்பைச் சொல்லிப்
புலமையரும் உலகத்தின் புகழ்பெற்ற ஆய்வருமே போற்று கின்றார்!

முதன்மொழியாம் தமிழோடு முதல்நாக ரிகங்கண்ட மூத்த மக்கள்
முதன்முதலில் இலக்கியங்கள் முனைந்தாக்கித் தந்தாரே! முரணர் வீழ்த்தி
அதிஉயரப் பனிமலையின் அகன்றநெற்றிக் கயற்புலிவில் ஆழத் தீட்டி
அதிகமுமாய்க் கொள்ளாமல் குறைவாயும் கொடுக்காமல் அறத்தின் நின்றே

நல்வணிகம் தரைகடலில் நடத்திநலஞ் சேர்த்தார்கள்! நாட்டில் தேர்ந்த
நல்லபல நுண்கலைகள் நளிஅண்ட வானியலும் நாட்டி யம்சேர்
வல்லயிசைப் பண்ணோடும் வளயாழின் இசையெல்லாம் வளர்த்துத் துய்த்தார்!
வள்ளலெனக் கொடைகொடுத்தார், வாழ்வினிலே ஒளிமிகுந்தார், வரலா(று) உண்மை!   

இன்றுள்ள தமிழர்நிலை எண்ணிடுவீர்! இயல்பாக இவர்கள் பேச்சில்
ஒன்றலுறப் பிறமொழிகள்! ஒழிந்ததுதாய் மொழிவழியே ஓதும் கல்வி!
சென்றுதொழுங் கோயில்கள், செப்பிவழக் காடுமன்றம் சேர எங்கும்
இன்றுஎந்தத் துறையினிலும் இல்லைதமிழ் எனும்நிலையே இருத்தல் காண்க!

தாய்மொழியே படிக்காமல் தமிழ்நாட்டில் கற்குநிலை தணியாத் துன்பம்!
ஏய்த்தநிலை இங்கன்றி எங்குமிலை! ஆட்சிமொழி ஏட்டில் மட்டும்!
வாய்த்ததொரு நடுவரசோ வஞ்சகமாய் திணிக்குமிக வலிந்தே இந்தி!
தாய்த்தமிழை மாநிலத்துத் தமிழரசும் பேணாதே தாழ்ச்சி செய்யும்ச்

சப்பானில் கொரியாவில் சான்றபுகழ் இரசியாவில் சன்ன்றும் சோரா
ஒப்பரிய சீனத்தில் உயர்பிரான்சில் ஆட்சிசெய்வோர் உலகம் ஈனும்
செப்பமுறு அறிவியல்நூல் செறிநுட்ப நூலனைத்தும் சிறப்புச் சேர
தப்பின்றித் தம்மொழியில் தக்கவகை மொழிபெயர்த்துத் தருகின்றாரே!

இங்காள்வோர்க் கிவைபற்றி எள்முனையும் கவலையிலை! எவ்வெவ் வாறு
அங்கிகிங்குக் கொள்ளையிட லாகுமெனும் சிந்தனைக்கே அவர்க்கு நேரம்
பங்கிடவே போதவிலை! பார்த்துவரும் நிலையிதுவே! பழகி நாமும்
எங்கெதுவும் நடக்கட்டும் எனத்தமிழைப் புறக்கணித்தோம்! ஏற்றம் தோற்றோம்!

செய்தித்தாள் இதழ்களிலே செறிவற்ற நூல்களிலே சீர்மை அற்றே
மொய்த்தெழுதும் சொற்களிலே முறையற்ற மொழிக்கலப்பு முடுக்க மாக!
நெய்வண்ண மினுக்கலிலே நிமிர்த்தெழுதும் கடைப்பெயர்கள் நிலைமை என்ன?
துய்யதமிழ் தொலைத்துபிற தொடர்பற்ற மொழிகளிலே துலங்கல் அன்றோ?

ஊடகத்தில் தொலைக்காட்சி உரையாட்டில் நிகழ்ச்சிகளில் ஓய்வே இல்லாக்
கேடுவிளை நாடகத்தில் கிளர்ச்சியுறு கூத்தாட்டக் கீழ்மை தம்மில்
ஈடுசொல முடியாத இழிவான தமிழ்க்கொலைகள்! இன்னு மிங்கே
பாடாகப் படுத்துதிரை பழியெனவே தமிழழிக்கும்! பார்க்கின் றோமே!

பண்பாடு நல்லொழுங்கு பார்போற்றும் நல்லறங்கள் பலவும் சொன்ன
மண்ணிற்கே உரியவுயர் மாண்பெல்லாம் படிப்படியாய் மறையச் செய்யும்
கண்கெடுக்கும் இருதிரைகள் காட்டுகின்ற காட்சியெலாம் கருத்தில் மாசு
மண்டிடவே புகுத்துநிலை! மட்டின்றி நடக்கிறதே மயக்கம் ஊட்டி!

ஆற்றுரிமை நெகிழ்ந்ததுவேஅணுத்தீமை கொடுவுலைகள் அமைத்த தோடே
ஊற்றுநீர் நிலவளத்தை உறிஞ்சிடலும் நடக்கிறதே ஊக்கத் தோடே!
மாற்றமிலா ஒட்டார மனத்தில்இந்தி சமற்கிருதம் ஊன்றற் கென்றே
தேற்றமுறச் செயற்படுவார்தீந்தமிழை அழிப்பதற்கும் திட்டம் உண்டே!

இனிவருநாள் தமிழிளையோர் எழுவாரோ? இல்லைநம்மோர்க்(கு) இயல்பாய்ப் போன குனிந்துசெலும் உணர்வாலே குட்டுநிலை தொடர்ந்திடுமோ? கொடுமை மேலும் தணியாதே மிகுந்திடுமோ? தாய்த்தமிழும் வீழ்ந்திடுமோ தகைமை குன்றி!      பிணிநீங்கி நலம்வருமோ? பெருவாழ்வு வாய்த்திடுமோ? பீழை போமோ?

எந்தநிலை நேருமென எல்லோரும் செயலற்று இருத்தல் நன்றோ? செந்நெறியில் அமைவிலையால் சீறியெழுந் துரிமைபெறச் சிறந்த ஈகச்
செந்தமிழ இளையோரின் செழும்படையொன் றெழவேண்டும் செப்ப மாக!
அந்நல்நாள் விரைந்திடுக! அந்தமிழின் அரசமைக! ஆக்கம் சேர்க
!
______________________________________________________________________________

-      எனச்சொல்லி தலைவரின்பா இன்னிறைவு செய்கின்றேன்!
இனிபாவ லர்தம்மின் எழிற்பாக்கள் தொடர்ந்திடுமே!
================================================================================
ஆற்றாமை யால்நம்மின் அவலநிலை பாடிநின்றேன் அவையி ருக்க
நேற்றைக்கு நாமும்நம் நற்றமிழும் இருந்தநிலை நினைவைப் பாட,
மாற்றமாய் இன்றுள்ள மாறாக்கீழ் நிலைவிளக்க, மற்றும் நாளை
ஏற்றமதூஉம் வந்திடுமா எனப்பாடப் பாவலர்கள் எழுந்துள்ளாரே!
=========================================================================================

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

அந்தநாள் விரைந்திடுக!

(திருவெண்ணெய் நல்லூர்ப் புலவர் .கதிர்வேலு தம்தமிழ்ச்சோலைஎன்னும் இதழுக்குப் பாடல் கேட்டபோது எழுதித்தந்த பாடல் இது):

அந்தநாள் விரைந்திடுக!

உலகமுதன் மொழியென்றே ஓர்ந்தாய்ந்தோர் தமிழினுயர் 
வுரைக்க்க் கண்டோம்!
உலகமுதல் நாகரிகம் ஒள்ளாய்வால் தமிழரதென் 
றுறுதி செய்வர்!
உலகுயிர்பால் அன்பருளும் உயர்மானம் கொடைவீரம் 
ஓம்பும் பண்பும்
உலகினிலே இயல்பாகக் கொண்டிருந்த இனமிதென 
உரைக்கும் நூல்கள்!

பெருமையெலாம் மிகஅடுக்கிப் பேச்சாலே கவர்ந்தவர்கள் 
பெற்ற ஆட்சி 
திருடுதற்கும் கொள்ளைக்கும் திகழ்வாய்ப்பாய்க் கொண்டிங்கே
தீமை எல்லாம்
பெருகிடவே செய்தனரே! பிறங்கடைகள் தாய்மொழியைப் 
பேணாப் போக்கில்
கருகிடவே விட்டனரே கறையற்ற சிறப்பெல்லாம் 
கரைய விட்டே!

இன்றுள்ள தமிழர்நிலை எண்ணிடுவீர்! இயல்பாக 
இவர்கள் பேச்சில்
ஒன்றலுறப் பிறமொழிகள்! ஒழிந்ததுதாய் மொழிவழியே 
ஓதும் வாயப்பும்!
சென்றுதொழுங் கோவில்கள், செப்பிவழக் காடுமன்றம் 
சேர எல்லாத் 
துன்றாட்சித் துறைகளிலும் தொகுப்பாகத் தமிழிலையே, 
தொலைந்த தந்தோ!

பண்பாடும் நல்லொழுங்கும் பார்போற்றும் நல்லறங்கள் 
பலவும் சொன்ன 
மண்ணிற்கே உரியவுயர் மாண்பெல்லாம் படிப்படியாய் 
மறையச் செய்தே 
கண்கெடுக்கும் இருதிரையின் காட்சியெலாம் தமிழர்தம் 
கருத்தில் மாசு
மண்டிடவே புகுத்துநிலை மட்டின்றி நடக்கிறதே 
மயக்கத் தாழ்த்தி!

ஆற்றுரிமை நெகிழ்ந்ததுவே! அணுத்தீமை கொடுவுலைகள் 
அமைத்த தோடே
ஊற்றுநீர் நிலவளத்தை உறிஞ்சிடலும் நடக்கிறதே 
ஊக்கத் தோடே!
மாற்றமிலா ஒட்டார மனத்திலிந்தி சமற்கிருதம் 
வளர்த்தற் கென்றே 
தேற்றமுறச் செயற்பாடு! தீந்தமிழை அழிப்பதற்கும் 
திட்டம் உண்டே!

எந்தநிலை யானாலும் எல்லாரும் சமமென்றே 
இங்கே வாழ
செந்நெறியில் அமைவிலையால் சீறியெழுந் துரிமைபெறச் 
சிறந்த ஈகச்
செந்தமிழ இளையோரின் செழும்படையொன் றமைத்திடுக 
செப்ப மாக!
அந்ல்நாள் விரைந்திடுக! அந்தமிழர் அரசமைக! 
ஆக்கம் சேர்க!
--------------------------------------------------------------------------------