கழக(சங்க)த்தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கழக(சங்க)த்தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 அக்டோபர், 2012

கழக(சங்க)த்தமிழ் – ஒரு பார்வை!


கழக(சங்க)த்தமிழ் ஒரு பார்வை!


(21-10-2012இல் விழுப்புரம் தமிழ்ச்சங்கப் பத்தாம் ஆண்டுவிழாப் பாட்டரங்கில் பாடிய பாடல்)

விழுஎன்றால் சிறப்பாகும் விழுமியஊ ராமிந்த விழுப்பு ரத்தில்
தழுவலுறும் தமிழ்ப்பற்றால் தமிழ்ச்சங்கம் தனைத்தோற்றித் தனிய ராக
ஒழுகலுற ஓரேரு உழவரென உழைப்பெடுத்து ஓயா தின்றும்
பழுதறவே விழாவெடுக்கும் பாலதண்டா யுதமென்னும் பசுமை நெஞ்சே!

அன்பார்ந்த தாய்க்குலமே! அறிஞர்களே! பெரியோரே! ஆக்கம் தேட
முன்னிறகும் இளைஞர்களே! முன்சங்கத் தமிழ்ச்சிறப்பை மொத்த மாக
இன்னேயிங் கியம்பவந்த பாவலரே! எல்லோர்க்கும் இனிது ரைத்தேன்
என்வணக்கம்! அறிஞரேற்றும் இனியசங்கத் தமிழென்றால் என்ன காண்போம்!

ஏசுவுக்கும் முற்காலத் திருந்ததமிழ் இலக்கியத்துள் இன்று மிஞ்சும்
மாசில்எட் டுத்தொகையும் மதிப்புறுபத் துப்பாட்டும் மட்டும் தானே!
வீசுபுகழ் நூல்எட்டுச் சேர்ந்ததெட்டுத் தொகையெனவே விளங்கும் பேரால்!
பாசுதமிழ் நெடும்பாடல் பத்துச்சேர்த் தாரதன்பேர் பத்துப்பாட்டே!

மேற்சொன்ன பதினெட்டே மேற்கணக்காம் மேலுமதே மேன்மை மிக்க
மேற்குவட்டு விளக்கொளியாய் மின்னுசங்கத் தமிழாகும்! மிகவி ளங்க
ஆற்றலுற கூறுதமிழ் நாகரிக ஆவணமே! ஆழம் நுட்பம்
சாற்றுமுறை இனிமையுடன் பொருளமைதி வடிவுஉத்தி தலைமை என்பார்!

மாந்தயினத் தெல்லாரின் மனமீர்க்கும் அழகுணர்ச்சி மகிழ்ச்சிப் பூங்கா!
காந்தமெனக் கவர்கின்ற கலைநுட்பக் கருவூலம் கற்பார் தாமும்
சாந்துணையும் எண்ணஎண்ணச் சலிக்காமல் களிப்பூட்டும் சாற ஊற்று!
ஏந்துமிகும் அயல்நாட்டார் எண்ணுகிலார் இதனாய்வை எளிதில் நீங்க!

ஒப்பற்ற இலக்கணமும் உயர்வான இலக்கியமும் உலகோர் போற்றும்
துப்புறவு தோய்தூய பொருளிலக்க ணச்சிறப்பைச் சொல்லற் காமோ?
ஒப்புறவில் பொதுமையிலே உயர்சங்கத் தமிழ்ப்புகழே ஓங்கி நிற்கும்!
செப்பமென இயற்பெயரைத் தவிர்த்துபொதுப் பெயருரைக்கும் சீர்மை என்னே!

இத்தமிழ இனந்தன்னின் இருப்பிதுவே அடையாளம் என்றும் சொல்லும்!
முத்தமிழின் பெட்டகமாய் மொழிச்சிறப்பை காதலினை மொழியா நிற்கும்!
இத்தரையில் வாழ்வியலை நேராக மக்களுக்கே எடுத்துக்கூறும்!
அத்துடனா? போர்வீரம் கொடைமானம் ஆட்சிதிறன் அறைதல் காண்பீர்!

இன்சங்கத் தமிழ்ப்பாக்கள் இரண்டா யிரத்துமுன்னூற் றெண்பத் தொன்றாம்!
நன்கவற்றைப் பாடியவர் நானூற்று எழுபத்து மூவ ராவர்!
அன்னவருள் முப்பதுபேர் அரும்பெண்டிர்! முப்பத்தோர் அரசராவர்!
இன்னவகை குமுகத்துப் பலபடியார் புலவர்களாய் இருந்தா ரென்க!

பழம்போலும் சங்கப்பா படியென்பார் வ.சுப.மா. படிப்பார் தம்மின்
கிழம்போகும் கீழ்மையும்போம் என்பாரே! சிறப்புகளின் கெழுமல் சுட்டிக் 
கழிநுட்ப ஆய்வாளர் கமில்சுலபில் சியார்ச்சுகார்ட்டுங் காட்டு வாரே!
முழுமையுற ஆராய்ந்தே தக்ககசி நோம்சோம்கி மொழிகின் றாரே!

(வேறு யாப்பு)

செப்பிய எல்லாச் சிறப்பையும் காட்டத்
துப்புறைப் பாடல் தொகைமிக உண்டு!
காலத் தருமை கருதியொன் றிரண்டு
ஏலத் தந்தே ஏற்றம் காட்டுவம்!

அன்புதோய் காதலை அகத்திணை நூல்கள்
இன்புறை எழிலில் இனிமையில் இயம்ப
மறமும் கொடையும் மற்றுமெய் யறிவின்
திறமும் பாடும் புறத்திணை நூலே!

உலகத் திற்கே ஒப்பிலாக் காதல்
இலக்கணம் இலங்கிட இயம்பிய பாடல்
யாயும் ஞாயும் யாரா கியரோ...

காதல் எப்படிப் பட்டதாம்? காண்க:
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே

காதற் பிரிவில் கலங்குரை எப்படி?
முட்டு வேன்கொல்? தாக்கு வேன்கொல்?
ஓரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்?...

இன்றும் அருகிருந்து இயம்புதல் போன்றே
என்றும் விளங்கும் எழிற்பா டல்கள்:
அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே...!

நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்தநம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே!

இயற்கையை விளக்கும் இனிய பாக்கள்
வியப்பில் ஆழ்த்தும் நாடகக் காட்சிகள்!
ஆடமைக் குயின்ற... என்று தொடங்கும்
பாடல் காட்டும் ஆடரங்கு அழகு!

அற்றை உடைச்சிறப்ப பறிந்திடச் சான்று:
கொட்டை கரைய பட்டுடை

பாம்புரி யன்ன கலிங்கம்

ஆவி யன்ன அவிர்நூற் கலிங்கம்

அரவுரியன்ன அறுவை

வணிகத் தொன்மை கணித்திடச் சான்று:
...கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி...

வணிகம் நடந்த வகைக்கிது சான்று:
...நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நல்நெஞ்சினோர்
வடுஅஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்பநாடிக்
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகெடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல்கொண்டி...

மறவுரம் விளக்கும் மாட்சியைக் காண்க:
களம்புகல் ஓம்புமின் தெவ்வீர்! போர்எதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்டேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே

குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளில் தப்பார்...

மங்கையர் மறவுர மாண்புக்குச் சான்று:
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே!

நற்பண் புக்கோர் நற்றிணைப் பாடல்:
விளையாடு ஆயமொடு வெண்மனல் அழுத்தி
மறந்தனம் துறந்த கான் முளை அகைய...

அறிவியல் அறிவு அறிந்திடச் சான்று:
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாள்மீன் விராய கோள்மீன் போல...

செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலையிய காயமும்...

கொடைப் பண்புரைக்கக் குவியும் சான்றுகள்:
உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே...!

இன்று செலினும் தருமே சிறுவரை
நின்று செலினும் தருமே பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலுஞ் செலினும் பொய்யலனாகி...

ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன்...
                             ...காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போல
கையகத் ததுவே பொய்யா காதே!

பொதுப் பண்பிற்கும் பொதுச் சார்பிற்கும்
இதுசான் றென்ன எத்தனை வரிகள்!
யாதும் ஊரே யாவரும் கேளிர்

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்

இன்னாது அம்மஇவ் வுலகம்:
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே

நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்

மெய்யியல் விளக்கம் மிளிரும் வரிகள்:
ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப...

தீதும் நன்றும் பிறர்தர வாரா

சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே

பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

எடுத்தெடுத் துரைப்பின் எல்லா வரிகளும்
அடுத்தடுத் தோர்சிறப் அறிவிக் கும்மே! 
அவற்றை எல்லாம் அணிபெறப் பாட
இவண் வருகின்றனர் ஏற்ற பாவலர்
இத்துடன் என்பா முடித்தேன் அவைக்கு
மெத்த நன்றி நன்றியென் றுரைத்தே!
-------------------------------------------------