நன்றியுரை!
=========================================================================
(விழுப்புரம் ‘மருதம்’ – 19ஆம் ஆண்டுவிழாவின் போது 16-01-26 அன்று
‘வாழ்நாள் தமிழ்ப்பணி மருதம் விருது’ தரப்பட்டதற்காக, புதுச்சேரியில் 22-05-26இல் நடைபெற்ற தமிழ்மாமணி இறைவிழியனார்
20-ஆம் ஆண்டு நினைவேந்தல் விழாவில் ‘நற்றமிழ் அறக்கட்டளை’யாரால் நடத்தப்பட்ட ‘பாராட்டு
நிகழ்ச்சி’யில் ‘தமிழநம்பி’ ஏற்புரையாக ஆற்றிய நன்றியுரை)
===================================================================================
நற்றமிழ் நிறுவுநர், தமிழ்ப்போராளி, தமிழ்மாமணி, புலவர் மு.இறை விழியனார் அவர்களின் இருபதாம்
ஆண்டு நினைவேந்தல் விழாவின் தலைவரும், ‘நற்றமிழ் அறக்கட்டளை’யின் தலைவருமான பேரன்பிற்கும்
பெருமதிப்புக்குமுரிய பெ.மூர்த்தி ஐயா அவர்களே! தமிழ்வாழ்த்துப் பாடிய பைந்தமிழ்ப்
பாவலர் இரா.இளமுருகனார் அவர்களே! இசைப்பாவினால் அனைவரையும் மகிழ்வித்த கலைமாமணி
முனைவர் கா.இராசமாணிக்கம் ஐயா அவர்களே! முன்னிலை வகிக்கும் பெரியோர்களே!
வரவேற்பரை நிகழ்த்திய நற்றமிழ் அறக்கட்டளையின் துணைத் தலைவர்
திருவமை தாசுநிர்மலாசெகதீசன் அம்மையார் அவர்களே! நிகழ்வை ஒருங்கிணைக்கும்
தொகுப்புரையர் தலைமையாசிரியர், இலக்கியச்சிந்தனையாளர் திரு.பு.விசாகன்அவர்களே!
தமிழின் பெருமையை மீட்டெடுக்கும் ஈடெடுப்பற்ற மொழியாய்வர், சொல்லாய்வர், வேரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் அருளியார் அவர்களே!
தமிழ்மாமணி புலவர் மு.இறைவிழியனார் இருபதாம்
ஆண்டு நினைவேந்தல் மலரை வெளியிட்ட முதுபெரும் தமிழறிஞர் தெளிதமிழ் இதழாசிரியர்
செ.இராமலிங்கன் ஐயா அவர்களே! மலரைப் பெற்றுக் கொண்ட பெரியோர்களே
‘அகத்தியர் புரட்டு’ நூலை வெளியிட்ட அறிவியல் அறிஞர் தாமரைக்கோ ஐயா அவர்களே! நூலைப் பெற்றுக்கொண்ட பெரியோர்களே!
‘நற்றமிழ்’ இணையதளம் அறிமுகம் செய்த இருக்கும் புத்திலக்கிய
ஈடுபாட்டாளர் நற்றமிழ் இதழின் துணையாசிரியர் சீனு. தமிழ்மணி ஐயா அவர்களே! இணையதள
வடிவமைப்பாளர் சிவ.கோவிந்தன் ஐயா அவர்களே!
நன்றியுரையாற்ற விருக்கும் பகுத்தறிவுத் தொண்டுச் செம்மல்
திரு.கோ.மு.தமிழ்ச்செல்வன் ஐயா அவர்களே!
ஐயா இறைவிழியனார் நினைவு நூலகம், நூலக வாசகர் வட்டம், அறக்கட்டளையின் திருக்குறள் தொடர் சொற்பொழிவுகள், நற்றமிழ் இணையதளம் ஆகியவற்றின் அரிய வினைப்பாடுகளில் துணையிருக்கும்
பேருள்ளங்களே! இந்த அரிய நிகழ்ச்சிக்கு அடிப்படையான
உழைப்பாளராக இருந்து அரும்பணி யாற்றிவரும் செயலாண்மையும் அறிவாண்மையும் சான்ற
பண்பாளர் ‘நற்றமிழ்’ இதழின் பொறுப்பாண்மையர் செழியன் ஐயா அவர்களே!
அவையிலுள்ள அறிஞர்களே!, பெரியோரே! தாய்மாரே! இளேயோரே! அனைவர்க்கும் என்
பணிவான அகங்கனிந்த வணக்கம்.
நிறையநேரம் நான் பேசமாட்டேன். விரைவில் முடித்து விடுவேன்!
அமைதிகாத்து செவிமடுக்கப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
விழுப்புரம் ‘மருதம்’ – என்ற அமைப்பின் மூலவர், தலைமை ஒருங்கிணைப் பாளர் இரவி கார்த்திகேயன் ஐயா, குமுகநயன்மை உணர்வும் தமிழ்மொழி ஈடுபாடும் தமிழ்ப் பண்பாட்டுச் சிந்தனையும்
உடையவர். நான் பாவலரேறு ஐயாவிடம் கொண்டிருந்த தொடர்பு பற்றியும் புதுவையில் அருளி ஐயாவிடம் கொண்டிருந்த தொடர்பு பற்றியும் எல்லாம் அவர்க்குச் சரியாகத் தெரியாது.
பதினேழு ஆண்டுகளுக்குமுன், அவரிடம், ‘தமிழ்க் கணிப்பொறிப் பயிலரங்கு’ ஒன்றை விழுப்புரத்தில் நடத்த உதவி செய்யவேண்டுமெனக் கேட்டேன். ஒப்புக்
கொண்டார். புதுவை இரா.சுகுமாரன் ஐயாவும் இன்னும் பல
அன்பர்களும் அரிய உதவிசெய்தனர். பயிலரங்கு விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி
கணிப்பொறி ஆய்வுக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடந்தது. உலகதுரை ஐயாவும் பிறரும் உதவியாக இருந்தனர்.புதுவையில் இருந்தும் கூட சிலர் வந்து பயிலரங்கில் கலந்துகொண்டனர். அந்தப் பயிலரங்கிற்கு
முழுமையாக ஒத்துழைத்து உதவியவர் இரவி கார்த்திகேயன் ஆவார்.
அதற்கும் முன்பாக, விழுப்புரத்தில் தமிழில் மரபுப்பா எழுதப் பயிற்சி தரும் பயிலரங்கு ஒன்றைப் ‘பாடல் வளாகம்’ என உருவாக்கப்பட்ட அமைப்பின் சார்பில் நடத்தினேன். பாவலர் பாலதண்டாயுதம், காலஞ் சென்ற ஐயா விழுப்பரையனார், எழில். இளங்கோ, ஆசிரியர் கு.அண்டிரன் ஐயா, உலகதுரை ஐயா முதலிய அன்பர்கள் துணையிருந்தனர்.
நல்லுள்ளம் சோழன் ஐயா பள்ளியில் வகுப்புகள் நடந்தன. ஏறத்தாழ ஒன்றரை யாண்டுக்காலம் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்பு நடந்தது. தொடக்க நிகழ்விலும் நிறைவு நிகழ்விலும்
யாப்பறிபுலவர் அரங்க. நடராசன் ஐயாவும் இந்திய அரசின் இலக்கியப் பரிசை இருமுறை
பெற்ற தங்கப்பா ஐயாவும் கலந்து கொண்டனர். இறுதி நிகழ்வில் ‘நற்றமிழ்’ ஆசிரியராக அப்போது இருந்த திருவமை அரியநாயகி அம்மையார் கலந்துகொண்டு
பயின்றோர் அனைவர்க்கும் சான்றிதழ்களை வழங்கினார். இவற்றை யெல்லாம் பற்றி இரவி
கார்த்திகேயன் நன்றாக அறிந்திருந்தார்.
இடையில், ‘விழுப்புரம் தமிழ்ச்சங்க’த்தை நிறுவி நடத்திவந்த தமிழ்உள்ளம் பாவலர்
பாலதண்டாயுதம் ஐயா, விழுப்புரம் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருக்க வலியுறுத்தினார்.
பிறபணிகளில் ஈடுபடுவதால், என்னால் அந்த அளவு உழைப்பளிக்க இயலாதென்ற என்
இயலாமையைத் தெரிவித்தபின், அந்த அன்புள்ளம் என்னை விழுப்புரம்
தமிழ்ச்சங்கத்தின் துணைச் செயலாளர் என்றே தொடர்ந்து குறித்துவந்தார். என்னால்
இயன்றவரை அவருக்கு நிகழ்ச்சிகளின் போதும் ஆண்டுவிழாக்க ளிலும் பிறநிலைகளிலும் உதவி
வந்தேன். இவற்றையும் இரவிகார்த்தி கேயன் ஐயா அறிவார்.
என் துணைவியார் இறப்பிற்குப் பிறகு, 2017-இல் பகுத்தறிவாளர் கழகத் தலைவர்
மு.வி.சோமசுந்தரம் ஐயா, ந.சுப்பிர மணியன் என்ற பார்ப்பன அறிஞர்
ஆங்கிலத்தில் எழுதிய “The Brahmin in the Tamil Country” என்ற ஆங்கில நூலை மொழிபெயர்த்து எழுதுவதில் உதவும்படி கேட்டார். அவர்
அமராவதியில் படைத்துறை சார்ந்த ஆங்கிலப் பள்ளியில் பணிநிறைவு செய்தவர். அவருக்குத்
தமிழ் சொற்றொடர் அமைப்பதில் சிக்கல் இருந்தது.
ஒவ்வொரு நாளும் காலை பத்துமணி முதல் மூன்றரை மணிநேரம் ஏறத்தாழ நான்கு மாதங்கள்
அந்த நூலை மொழிபெயர்க்க அவர்க்கு உதவிசெய்து தூயதமிழில் அந்த நூலை
எழுதிக்கொடுத்தேன். அதற்காக அவர் தரமுன்வந்த பொருளுதவியையோ வேறு எந்த உதவியையோ ஒரு
சிறிதும் ஏற்கவில்லை. ஆனால், நூலில் என் உழைப்பை அவர் முறையாக, சரியாகக் குறிப்பிடவில்லை என்பது வேறு செய்தி. அந்த நூல் விடுதலை அச்சகத்தில்
அச்சாகும் போது சில தூய தமிழ்ச் சொற்களை மாற்றி அயல்சொற்களில் எழுதிவிட்டனர்.
எனினும் அந்த நூலில் எல்லா இடங்களிலும் தூய தமிழ்ச்சொற்களை அவர்கள் மாற்றவில்லை என்பதை நூலைப் பார்த்தபோது தெரிந்தது.
இந்தச் செய்திகளை நான்கூறக் காரணம் இவற்றை ஐயா இரவிகார்த்திகேயன் அறிந்திருந்தார்
என்று குறிப்பிட்டுச் சொல்வதற்காகவே ஆகும்.
அதன்பிறகு நான் ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்த்த ‘ஆபிரகாம் கோவூரின் நிகழ்வு ஆய்வுகள்’ என்ற நூலை புதுவை ‘மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன’த்தில், திருவமை சுடர் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வின்போது ஐயா
இரவி கார்த்திகேயன் ஐயா அவர்களே வெளியிட்டார்.
2023-இல் விழுப்புரம் தமிழிளைஞர் கூட்டமைப்பின் கோ.பாபு, தினகர் அன்பழகன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பள்ளிப்பாடத்திட்டப்படி பாடநூலில் உள்ள
தமிழிலக்கணங்களை விளக்கிச் சொல்லித்தரும் வகுப்பு நடத்தினேன். ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும் மூன்றரைமணி நேரம் என முப்பத்து நான்கு வகுப்புகள் நடந்தன.
அதனைத் தொடர்ந்தே அவர்களுக்கு உதவுவதற்காகவே, ‘தமிழில் பிழைநீக்கி எழுதுவோம்’ என்ற பெயரில் எழுதிய என் தொகுப்பு நூலை 2024-இல் விழுப்புரம் தமிழிளைஞர் கூட்டமைப்பு
வெளியிட்டது. இதனையும் இரவிகார்த்தி கேயன் ஐயா நன்கு அறிவார்.
இக்கால், தூயதமிழ் மாத இதழான ‘நற்றமிழ்’ ஆசிரியர் பொறுப்பில் உழன்று வருவதையும்
இரவிகார்த்திதேயன் ஐயா அறிவார்.
இடையிடையே, நான் விழுப்புரத்திலுள்ள ‘மருதம்’ உள்ளிட்ட இலக்கிய அமைப்புகளின் பாட்டரங்கங்கள், கருத்தரங்குகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வந்ததும் இரவிகார்த்திகேயன்
ஐயாவுக்கு நன்கு தெரியும்.
இவற்றையெல்லாம் அறிந்திருந்த ஐயா இரவிகார்த்திகோயன் “இந்தத் ஆள், தமிழநம்பி, தமிழ்,தமிழ் என்று ஏதாவது ஒரு நிலையில் தொடர்ந்து ‘;உழைப்பறி’த்துக் கொண்டிருக்கின்றான்” என்று கருதிய காரணத்தால், என்னை ‘மருதம்’ வாழ்நாள் தமிழ்ப்பணி விருதுக்காகத்
தேர்ந்தெடுத்துச் சிறப்புச்செய்தார். அதற்காகவே, இங்கு இப்போது இந்தப் பாராட்டு
நிகழ்வை நற்றமிழ் அறக்கட்டளையார் ஏற்பாடு செய்துள்ளனர்.
என் நெஞ்சங்கனிந்த நன்றியை அறக்கட்டளைத் தலைவர் மூர்த்தி ஐயா அவர்களுக்கும்
மற்றவர்களுக்கும் பணிவோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
அரியதொரு தமிழ்ப்பாவில் வாழ்த்தியதுடன்,
பாராட்டுரையில் அளவுகடந்து பாராட்டிப் புகழுரை வழங்கிய ஆய்வறிஞர் பேரா.சிரியர் அருளியார்க்கும், சிறப்பாகப் பாராட்டி உரையாற்றிய திருவமை பூங்கொடி
பராங்குசம் அம்மையார்க்கும், இதற்கு அடிப்படையானவரான செழியன்
ஐயாவுக்கும் என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் பாடுவார்:
"எதுவரை எம்மூச்சு இயங்குகின்றதோ,
எதுவரை எம்முடல் இம்மண் தோயுமோ,
எதுவரை எம்மனம் நினைவலை எழுப்புமோ,
அதுவரை மொழியின ஆர்ப்படங்காது!" -------- என்பார்.
என்னால் இயங்க இயலும் வரை தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன் களுக்காக இயங்குவேன் என்ற உறுதியுடன் என் உரையை
முடிக்கின்றேன். நன்றி. (புதுச்சேரி 22-5-26)
--------------------------------------------------------------------------------------------------------------------------------