திங்கள், 28 ஏப்ரல், 2025

அருந்தமிழ்த் தொண்டர் அண்ணல்தங்கோ!

 

      அருந்தமிழ்த் தொண்டர் அண்ணல்தங்கோ!


குடியாத்தம் முருகப்பன் அண்ணல்தங்கோ, (1904 ஏப்பிரல் 12 – 1974 சனவரி 4) தனித்தமிழ்உணர்வாளர்; தமிழ்த் தேசியக் கொள்கையர்; தமிழ் மண்ணின் விடுதலை விரும்பிய உணர்வாளர்; ஆரிய எதிர்ப்பு இயக்கத்தின் பெயரில் உள்ள திராவிடஎன்னும் சொல்லைத்தமிழ்என மாற்ற வற்புறுத்திய கொள்கையாளர். இந்திய விடுதலைப் போராளி; எழுத்தாளர்; பாவலர்; நூலாசிரியர்; இதழாசிரியர்; திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முகத்திறனாளியாவார்.

பெற்றோர் முருகப்பன் மாணிக்கம்மாள். வேலூர் மாவட்டம் குடியாத்தம் என்னும் ஊரார். பெற்றோர் இட்ட பெயர் சுவாமிநாதன் என்பதாகும். இளம் அகவையிலேயே தந்தையை இழந்ததால் தொடக்கக் கல்விக்குமேல் படிக்க வாய்ப்பில்லை. இருப்பினும், தம்சொந்த முயற்சியால் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சங்கதமொழிகளைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார்.

தம் பதினான்காம் அகவையிலேயே பேராயக்கட்சியில் சேர்ந்தார். 1922இல்,  ஈ.வெ.இராமசாமிப் பெரியார் தலைமை வகித்த திருப்பத்தூர் வட்ட அரசியல் மாநாட்டை நடத்துவதில் முதன்மையாளராக இருந்தார். 1923இல் மதுரையில் கள்ளுக்கடை மறியல் காரணமாக இருமுறை மும்மூன்று மாதங்களென ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையை அடைந்தார். நாப்பூரில் தடையைமீறி இந்தியக் கொடியை ஏற்றி வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டதால் ஏழு மாதங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்றார். 1925இல் நிகழ்ந்த வைக்கம் போராட்டம், 1928-ல் சயுமன் குழு எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

1927இல் ஆங்கிலேயக் கொடுங்கோலன் நீலன் சிலை உடைப்புப் போராட்டம் காரணமாக ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்றார். தண்டனை தந்த நயனகர்  நாடகத் தந்தையாகப் போற்றும் பம்மல் சம்பந்தனார். சிறையில், பம்மல் சம்பந்தனார் எழுதிய இலீலாவதி சுலோச்சனாஎனும் நாடகத்தை நடத்தி, அதில் அண்ணல்தங்கோவே கதைநாயகனாக நடித்துச் சிறை வாழ்வாளிகள் நலநிதியைத் திரட்டித்தந்தார். அந் நாடகத்தில், ஆங்கில ஆட்சியின் வல்லாண்மைக்கெதிராகத் தடை செய்யப்பட்ட முழக்கத்தை முழங்கினார். அம் முழக்கத்தைக் கேட்டு, சிறை அதிகாரிகள் மிரண்டு போயினர். வரதராசுலு நாயுடுவுடன் இணைந்து வ.வே.சு. ஐயருக்கு எதிரான குருகுலப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

1927 இல் சங்கதம் என்னும் சமற்கிருதம் தவிர்த்த தமிழ்த் திருமணத்தில் தூய தமிழில் திருக்குறளைக் கூறித் தம் திருமணத்தைத் தாமே நடத்தி, சிவமணி அம்மாளை மணந்தார். இதன் மூலம் திருக்குறள்நெறி தமிழ்த் திருமணத்தைஅறிமுகப்படுத்தினார். அண்ணல்தங்கோவே நூற்றுக்கணக்கான தமிழ்த் திருமணங்களைத் தலைமை தாங்கி நடத்தி வைத்ததைப் பேராசிரியர் க.அன்பழகன் தாம் எழுதியதமிழர் திருமணமும் இனமானமும்என்ற நூலில் புகழ்ந்துரைக்கிறார்.

1934 பெப்புருவரி 18இல் பெரு முயற்சியில் திட்டிய தீண்டாமை ஒழிப்பு நலநிதி அளிப்புக் கூட்டத்திற்குக் காந்தியடிகளைக் குடியாத்தம் அழைத்து வந்தார். ஏதோ காரணமாகக் காந்தியாருடன் வந்த இராசாசி, தி.எசு.எசு.இராசன் இருவரின் வற்புறுத்தலில், நிதியை மட்டும் பெற்றுக் கொண்ட காந்தியடிகள் அண்ணல்தங்கோ ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், முன்னரே இசைவு தந்திராத ஆம்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டுச் சென்றார். இதனால் மனம் உடைந்த அண்ணல்தங்கோ பேராயக் கட்சியினின்றும் விலகினார்.

1936இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் இணைந்தார். (இதுவே பின்னர் நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட அமைப்பாகும்). ஈரோடு சென்ற அண்ணல்தங்கோ பெரியாரின் குடி அரசு இதழில் சிறிது காலம் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். 1944இல் இந்த அமைப்பும் தன்மதிப்பு இயக்கமும் இணைந்த புதிய அமைப்பு உருவான போது, அதற்குத் தமிழர் கழகம்எனப் பெயரிடுமாறு அண்ணலதங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதம், சவுந்தரபாண்டியன், தங்கவேலு முதலானோர் வலியுறுத்தினர். ஆனால் அக் கருத்து ஏற்கப்படாமல் திராவிடர் கழகம்எனப் பெயரிடப்பட்டது. அதனை எதிர்த்து அண்ணல் தங்கோவும் கி.ஆ.பெ.விசுவநாதமும் பிறரும் அந்த அமைப்பை விட்டே விலகினர்.

அண்ணலதங்கோ 1937இல் வேலூரில் உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவையைத் தொடங்கினார். ஆண்டுதோறும் பொங்கல் விழா நடத்தி, அவ் விழாவில் தமிழ் அறிஞர்கள், தேவநேயப்பாவாணர், ஔவை துரைசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம், அ.கி.பரந்தாமன், வெள்ளைவாரணனார், இலக்குவனார், பாவேந்தர், திருக்குறள் முனுசாமி, சிதம்பரநாதன், மே.வீ.வேணுகோபாலர், ஆதித்தனார், திருக்குறள்பீடம் அழகரடிகள், மு.வரதராசன், டாக்டர் தருமாம்பாள், மயிலை சிவமுத்து, கா..அப்பாத்துரை முதலானோரை உரையாற்றவைத்து மக்களிடம் தமிழ்உணர்வை வளர்த்தார். 1937இலும் 1938இலும் தமிழர் உரிமை மாநாடுகளை  நடத்தினார்.

1942இல் தமிழ் நிலம்என்ற இதழைத் தொடங்கி நடத்தித் தமிழ் உணர்வு ஊட்டினார். பராசக்திதிரைப்படத்திலும், ‘பெற்ற மனம்’, பசியின் கொடுமை’, ‘கோமதியின் காதலன் ஆகிய திரைப்படங்களிலும் பாடல் எழுதி இருக்கிறார்.

      வடமொழிக் கலப்பின்றி, தூயதமிழில் பேசும் வழக்கமுடையவராக இருந்ததால், பெரும்புலவர் மே.வீ. வேணுகோபாலர், திருக்குறள்பீடம் அழகரடிகள் இருவரும் இணைந்து தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோஎன்ற சான்றிதழை அளித்தனர். அண்ணல்தங்கோ தம் மகனுக்குத் தமிழர்தங்கோஎன்றும், பெண் மக்களுக்குத் தமிழரசி’, ‘நாவுக்கரசிஎன்றும் பெயரிட்டழைத்தார்.

மறைமலையடிகளாரின் நாட்குறிப்புத் தொகுப்பு நூலான மறைமலையடிகளாரின்  அடிச்சுவட்டில்எனும் நூலில், அடிகளாரிடம் அண்ணல்தங்கோ நெருங்கிப் பழகியிருந்ததை அடிகளாரே பதிவிட்டுள்ளார் என்ற செய்தி, தொடக்கப்பள்ளியில் மட்டுமே படித்துப் பின்னர்த் தானே கற்றுயர்ந்த அண்ணல்தங்கோவின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றிப் பெரும்பேறாகும்.

தமிழுணர்வுமிக்க இவரே தமது வடமொழிப் பெயர் சாமிநாதன் என்பதைத் தூயமிழில் அண்ணல்தங்கோ என மாற்றிக்கொண்டார். அது மட்டுமன்றித் தாம் பழகுவோரின் பெயர்களைத் தூய தமிழ்ப்பெயராக மாற்றியமைத்த பெருமைக்குரியவராக அண்ணல்தங்கோ விளங்கினார். அவர் தமிழாக்கி வழங்கிய பெயர்கள்: காமராசர் - காரழகனார், கருணாநிதி - அருள்செல்வம், சி.பி.சின்ராசு -- சி.பி.சிற்றரசு, கிருபானந்தவாரியார் அருளின்பக் கடலார், தனபாக்கியம் - பொற்செல்வி, காந்திமதி - மணியம்மை, கி.ஆ.பெ.விசுவநாதம் --      கி.ஆ.பெ.நெடுந்துறைகோ, சி.பா.ஆதித்தனார் - சி.பா.பகலவனார், மே.வீ..வேணுகோபாலர் - மே.வீ. குழற்கோமான், தருமாம்பாள் அறச்செல்வியார், சனார்த்தனம் மன்பதைக்கன்பன், நாவலர் சா.சோமசுந்தரபாரதியார் - சா. நிலவழகனார், எனப் பட்டியல் நீளும். அரங்கண்ணல், ‘நினைவுகள்என்ற தன்வரலாற்று நூலில், அரங்கசாமி எனும் தம்பெயரை, பெயர்மாற்றத்தந்தை அண்ணல்தங்கோ இசைவோடு அரங்கண்ணல்என்று மாற்றிக் கொண்டேன் எனக் குறிப்பிடுகின்றார்.

தமிழறிஞர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் ஒரு அவையில் சொற்பொழிவாற்றும் போது, “அதோ வந்திருக்கிறார் அண்ணல்தங்கோ! இங்கே நான் பேசும்போது, எத்தனை வடமொழி, பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறேன் என்று எண்ணி எண்ணி, அதனை என்னிடம் கூறிக் குத்திக் காட்டவே வந்திருக்கிறார்என்றாராம்.

1972-ல் இந்தியா விடுதலை அடைந்த வெள்ளிவிழா நிகழ்வில் கலந்துகொள்ள அண்ணல்தங்கோ அழைக்கப்பட்டார். அப்போது, விடுதலைப் போராட்ட வீரர்க்கான தாமிரப்பதக்க விருதை அன்றைய தலைமை அமைச்சர் இந்திராகாந்தி நேரடியாகத் தந்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்திய ஒன்றிய அரசு வேலூரின் நடுவான பகுதியில் அளித்த 15 குறுக்கம் (ஏக்கர்) நிலத்தை அரசுக்கே திருப்பியளித்தார்.

அண்ணல்தங்கோ, ‘அண்ணல் முத்தம்மாள் பாடல்கள்’, ‘மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா?’, ‘சிறையில் நான் கண்ட கனவு (அல்லது) தமிழ்மகள் தந்த செய்தி’, ‘அறிவுப்பா’, ‘என் உள்ளக்கிழவி சொல்லிய சொல்’, ‘நூற்றுக்கு நூறு காங்கிரசு வெற்றிப்படைப் பாட்டுமுதலான நூல்களை எழுதியுள்ளார். அண்ணல்தங்கோவின் படைப்புகள் 2008ஆம் ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்டன.

வாழ்வு முழுதும் தன்னலமற்ற தூய தொண்டராக வாழ்ந்த தமிழ் உணர்வாளரான அண்ணல்தங்கோ, குடற்புண் நோயால் தாக்குண்டு 1974, சனவரி 4இல் மறைந்தார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், மிக வருந்திக் கண்கலங்கி கீழ்க்காணும் இரங்கற்பா பாடினார்:

அண்ணல்தங்கோ, அண்ணல்தங்கோ!

சேயவன் வழுத்தொடு செந்தமிழ் பேணித்

தூய தமிழ்க்கா வலனெனத் தோன்றித்

தேயப் பிரிவைத் தீர்க்கத் துணிந்த

அண்ணல்தங்கோ அண்ணல்தங்கோ

தன்முயற் சியினால் தன்னை உயர்த்தி

மன்னியல் விடுதலை மாண்ட மறவ

உள்ளுவ தெல்லாம் உயர்வே யுள்ளித்

தெள்ளிய கொள்கை திறம்பாச் சான்றோய்

நீயெமை மறப்பினும் நினைமற வேமே

சேயரும் கேளிரும் நேயரும் ஆயேம்

மாயிரு ஞாலம் மன்னிய காலே

தெள்ளிய கொள்கை திறம்பாச் சான்றோய்!

அண்ணல்தங்கோ தெளிவான கொள்கைகளாகக் கொண்டிருந்தவை தனித்தமிழ், தனித்தமிழ்நாடு, எண்ணுவதெல்லாம் உயர்வாய் எண்ணும் பண்பு போன்றவை! தூய தமிழ்க் காவலன்”, தேயப் பிரிவைத் (தேசப் பிரிவை) தீர்க்கத் துணிந்த மன்னிய விடுதலை மறவன்என்றெல்லாம் பாவாணர் போற்றுகிறார். 

குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கு.மு. அண்ணல்தங்கோ நூலகம்அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டரசு, கு.மு. அண்ணல்தங்கோவிற்குக், குடியாத்தத்தில், உருவா 50 இலக்கத்தில், மணிமண்டபத்துடன் கூடிய திருவுருவச் சிலை அமைக்க இருப்பதாக அறிவித்துப் பணிகள் மேற்கொண்டது. திறப்புவிழா நடந்ததாகத் தெரியவில்லை.

12-4-2025ஆம் நாள் அண்ணல்தங்கோவின் 126ஆம் பிறந்தநாளாகும். அவர் நினைவைப் போற்றுவோம்! அவர் பணிகளைத் தொடர முயல்வோம்!

(புதுவை நற்றமிழ் 14-4-2025 இதழில் வந்தது)

அகத்தியர் புரட்டு: தமிழ், தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி! - 2

 

அகத்தியர் புரட்டு:

தமிழ், தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி! - 2


இந்திய ஒன்றியஅரசின் கல்வி அமைச்சராக இருக்கும் தருமேந்திர பிரதான் என்பவர், அகத்தியமுனி, தமிழ் இலக்கியத்தை முதன்முறையாக எழுதியவர் என்றும் காசிக்கும் தமிழகத்துக்கும் இடையிலான சிறந்த இணைப்பாக இருந்தார் என்றும், செம்மொழி தமிழின் இலக்கியத்தில் அகத்தியரின் பங்கு அதிகமானது என்றும் தமிழ்மொழியில் அகத்தியர் பல நூல்களை எழுதியுள்ளார் என்றும் உரிய தரவுகள் சான்றுகளின்றிக் கூறியிருக்கின்றார்.

இரங்கத்தக்க நிலை! அவருக்குச் சொல்லித் தந்தவர் ஒன்றால் தமிழ் இலக்கியம் அறியாதவராக இருக்க வேண்டும் இன்றேல் வேண்டுமென்றே பொய் உரைத்திருக்கவேண்டும்! அகத்தியமுனி, தமிழ் இலக்கியத்தை முதன்முறையாக எழுதியவராம்! முதன் முறையாக இல்லாவிட்டாலும் இறுதியாகவேனும் ஏதாவது ஒரு கழக(சங்க)ப்பாடல் அவர் பெயரில் உண்டா? பத்துப்பாட்டில் ஏதேனும் ஒரு பாட்டேனும் எழுதியிருக்கின்றாரா? அன்றி எட்டுத்தொகைப் பாடல் தொகுப்புகளில் ஏதேனும் ஒரு பாடலாவது எழுதியுள்ளாரா? பதினெண் கீழ்க்கணக்கில், ஐம்பெரும்பாவியங்களில், பிற நூல்களில் கூட அவர் எழுதியதாக எதுவும் இல்லை.

அகத்தியர் பேரில் நிறைய கற்பனையான கட்டுக்கதைகள் பலகாலமாக நிலவிவருகின்றன. உரையாசிரியர்கள் அக்கதைகளின் உண்மையை ஆராயாமல் அவர் பெயரைக் கையாண்டுள்ளனர். அவ்வளவே! கழக(சங்க) இலக்கியங்களில் பாடல் ஆசிரியராக எங்கும் அகத்தியர் பெயர் இல்லவே இல்லை.

கழக இலக்கியங்களிலேயே பிற்காலத்ததென்று கூறப்படும் பரிபாடலில் ஓரிடத்தில் பொதியில் முனிவன்என்ற பெயர் காணப்படுகின்றது. (இலக்கியம் படைத்தவராக இல்லை). பரிபாடலில் வையை என்ற தலைப்புடைய பாடல் பதினொன்றில் 10-13ஆம் அடிகளில் கீழ்க்காணுமாறு உள்ளது.

மதிய மறைய வருநாளில் வாய்ந்த

பொதியில் முனிவன் புரைவரைக் கீறி

மிதுன மடைய…”

- இதன் பொருள், “இராகு மதி மறையும்படி வரும் நாளிலே, பொதியில் முனிவன் (அகத்தியன்) என்னும் மீன் உயர்ந்த தன் இடத்தைக்கடந்து மிதுன ராசியைச் சேர” – என்பதாகும். எனவே, ஒரு விண்மீனைக் குறிக்கும் பெயராக, பொதியில் முனிவன் என்ற பெயர் இடம் பெறுகிறது, அவ்வளவே!

புறநானூறு 201ஆம் பாடலில் வரும் வடபால் முனிவன்என்ற பெயர் அகத்தியரைக் குறிப்பதெனக் கூறிக்கொள்கிறார்கள். வடபால் முனிவன் தடவினுள் தோன்றிஎன்றது, சம்பு முனிவன் வளர்த்த வேள்வித் தழலில் வந்த வேளிர் மரபில் வந்தவன் (இருங்கோவேள்) என்பதைக் குறிப்பது. (தடவு வேள்வி) இதுவும் கற்பனையான பழங்கதையாகலின், ஆராய்ச்சிக்குரியதன்று என ஆய்வாளர் (ஞா.தே.பா.முதலியோர்) குறிக்கின்றனர்.

அகத்தியர் எழுதியதாக அகத்தியம் என்னும் ஓர் இலக்கண நூலைக் குறிப்பிடுகின்றனர். அந்நூல் தொல்காப்பியத்திற்கும் முந்தியது என்ற கதையும் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்ற கதையும் கூட உண்டு. இவற்றிற்கெல்லாம் எந்த அடிப்படைச் சான்றும் இல்லை. சில உரையாசிரியர்கள் அடிப்படைச் சான்று இலாது கூறப்பட்ட கதைகளை வைத்தே அகத்தியரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார்கள் என்று ஐயுற வேண்டியிருக்கின்றது. அந்தக் கதைகள் அறிவுக்கொப்பாத, அறிவியலுக்கொப்பாத கதைகளே.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூற்றுக் கணக்கான சிறிய பெரிய படைப்புகள் முழுமையாகக் கிடைக்கின்றன. எழுநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை (மயிலைநாதர் காலம் வரை) தொடர்ந்து பலரது பார்வையில் பட்டதாகக் கூறப்படும் அந்த அகத்தியம் என்ற இலக்கண நூல் முழுமையாகவோ அன்றிச் சிதைந்தோ இதுவரை ஒரு சுவடி கூடக் கிடைக்காமல் போனது ஏன் என்றும் ஆய்வர் வினவுகின்றனர்.

சில நூல்களுக்கு உரையாசிரியர்கள் எழுதிய உரைகளில் மேற்கோளாகச் சில நூற்பாக்களைக் காட்டியுள்ளனர். அவ்வளவுதான். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்த அவ்வரைகுறை அகத்திய நூற்பாக்கள் எனக் கூறப்படுபவை சிறந்தவையாகக் கொள்ளக்கூடியன அல்ல என்பதுடன் அவை மிகமிகப் பிற்கால நடையை ஒத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அகத்தியர் இயற்றியதாக வேறு எந்த நூலும் தமிழில் கிடைத்ததாகத் தெரியவில்லை. அவர் பல நூல்கள் இயற்றியுள்ளார் என்று கூறுகிறவர்கள் அவற்றில் ஓரிரு நூல்களையும் கூடக் கூறுவதில்லை.

இவையுந் தவிர, தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் எழுதிய பனம்பாரனார், தொல்காப்பியர், முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்தார் என்றதோடு, ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று குறிப்பிட்டுக் காட்டுகையில் அகத்தியம் என்ற ஒரு பெயரைக் குறிப்பிடவே இல்லை. அறம்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு என எழுதிய பனம்பாரனார் அகத்தியர் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. இந் நிலையில் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்ற ஒரு கதையைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

முக்கழகத்தில் (முச்சங்கத்தில்) முதலிரண்டு கழகங்களிலும் அகத்தியர் இருந்தாரெனக் கதை கூறப்படுகின்றது. அவர் முதற் கழகத்தில் 4440 ஆண்டுகள் இருந்தார் என்றும் இரண்டாம் கழகத்தில் 3700 ஆண்டுகள் இருந்தார் என்றும், ஆக இரு கழகங்களிலும் 8140 ஆண்டுகள் அகத்தியர் ஒருவரே இருந்தார் எனவும் கூறுவது பொருந்துமாஎன்று ஆராய்ச்சியாளர் கா. நமச்சிவாயர் வினவுகின்றார்.

அகத்தியர் என்னும் சொல் தொல்காப்பியத்திலோ, கழக இலக்கியத்திலோ, சிலப்பதிகாரத்திலோ, நன்னூலிலோகூட இல்லை என்று குறிப்பிட்டோம். ஆனால், சிலம்பின் உரையாசிரியர்கள் அகத்தியரைப் பற்றிக் குறிப்பிடுவதைக் காண்கின்றோம். மணிமேகலையில் நாட்டில் நிலவிய கதையொன்றின் தொடர்பாக நேரிடையாக அகத்தியன் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது.

செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்

கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர

முனிவன் அகத்தியன் தனாது

கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை - என்னும் அடிகள் உள்ளன.

(இதன் பொருள்: சிவந்த கதிர்களையுடைய ஞாயிற்றின் வழித் தோன்றினோராகிய சோழர் மரபினை விளக்குமாறு உதித்த காந்தன் எனப் பெயரிய மன்னவன் நாட்டில் நீர்ப் பெருக்கினை விரும்பி வேண்டிக் கொள்ள, தேவ முனிவனாகிய அகத்தியன் தனது கமண்டல நீரைக் கவிழ்த்தலாற் போந்த காவிரியாகிய பாவை என்பதாகும்). எனவே, இக்கதை மணிமேகலைகாலத்திலேயே வழக்கில் இருந்திருக்கின்றது.

கம்பர் தம் இராமாயணத்தில், அகத்தியர் பற்றிய கற்பனைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இராமர் முதலியவர்களோடு தொடர்புபடுத்திச் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். இவை தவிர பாரதத்திலும் பிற்காலப் பெரிய புராணம், கந்தபுராணம், மச்சபுராணம் முதலிய பழங்கதைகளிலும் (புராணங்களிலும்),  தேவாரப் பாடல்களிலும் அகத்தியர் பற்றிய கதைகள் காணப்படுகின்றன.

அகத்தியர்என்ற பெயரில், பலர் இருந்துள்ளனர் என்றும் ஆரிய அகத்தியர் வேறு,  தமிழ் அகத்தியர் வேறு என்றும் ஆய்வாளர்கள் வேறுபட்டுக் கருத்துரைக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில், கம்பர் காலக்கணக்கையும் கருத்தில் கொள்ளாமல் அகத்தியர் ஒருவரே எனக் கொண்டதாலும் அவர் குறித்த எல்லாக் கற்பனைக் கதைகளையும் உண்மை என ஏற்றதாலுமே தம் இராமாயணத்தில் அவரைப் பற்றிய கதைகளைச் சேர்த்துள்ளார். அவ்வாறே பாரத்திலும் அக்கதைகள் இடம்பெற்றுள்ளன.

கம்பஇராமாயணத்தின் மூல நூலாசிரியரான வான்மீகி அவருடைய இராமாயணத்தில் அகத்தியர் பொதிய மலையில் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டு இருக்கின்றார். இக் குறிப்பிலிருந்து அகத்தியர் தமிழ் முனிவர் என்பதும், இராமாயண காலத்திலேயே தென்னாட்டில் பொதியமலைச் சாரலில் வாழ்ந்து தமிழ் வளர்த்து வந்தார் என்பதும் பெறப்படுகின்றன என்றும் அவர் தமிழ் அகத்தியரேயாவர் என்றும் தமிழ்நாட்டவரேயாவர் என்றும் சில ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

கந்தபுராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கச்சியப்பர் அந்த அகத்தியரைத் தமிழ்  அகத்தியர் என்றே குறிக்கின்றார். அவரை மலயத்து வள்ளல்என்றும், ‘தமிழ் மாமுனி ’  என்றும் கந்தபுராணம் காட்டுகின்றது. எனவே, ஒரு கதையின்படி அகத்தியர் சிவபெருமான் மணம் காணச் சென்றிருந்தாலும், அவர் தமிழ்நாட்டிலிருந்து சென்றார் எனக் கொள்ளல் வேண்டும் என்று அறிஞர் அ.மு.பரமசிவானந்தம் கூறுகின்றார்.

முன்பே குறிப்பிட்டவாறு, கா.சுப்பிரமணியப்பிள்ளை அகத்தியர் இருவர் என்று கூறுகிறார். மறைமலையடிகள், மிகப்பழங்காலத்தே இருந்த அகத்தியர் தமிழ்நாடு புகுந்தவரல்லர் என்றும் அவர் தமிழ் அறிந்தவரும் அல்லர் என்றும் கூறுகிறார். அகத்தியர் பலர் என்று ஆய்வாளர் கா.நமச்சிவாயர், துடிசைகிழார் அ.சிதம்பரனார், இரா.இராகவையங்கார் முதலானோர் கூறுகின்றனர். அகத்தியர் இருவராய் இருக்கலாமோஎன வி.எ.சுமித்துஎன்னும் ஆய்வாளரும் ஐயுறுகிறார். (The oxford History of India, by V.A. Smith .p.42 1958 Edition).

அறிஞர் ஆ. சிவலிங்கனார் அகத்தியர்கள்என்னும் அவருடைய ஆய்வுநூலில், ”அகத்தியர் ஒருவர் அல்லர். நால்வருக்கு மேற்பட்டு இருந்திருத்தல் வேண்டும், அவருள் தமிழ் அகத்தியர் இருவர். ஆரிய அகத்தியர் இருவர். இந் நால்வருமே சிறந்தவர்கள். பிற அகத்தியர்களும் இருந்திருக்கின்றனர்என்று கூறுகிறார்.

ஆய்வாளர் முனைவர் ப.தங்கராசு, “அகத்தியர் என்னும் பெயருடையோர் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் பலர் வாழ்ந்துள்ளனர்; இவர்களுள் தமிழகத்தில் அகத்தியர் பெயரால் எழுவர் இருந்துள்ளனர். வடநாட்டில் வேத காலத்திலும், பாரத, இராமாயண காலத்திலும் அகத்தியர்கள் இருந்துள்ளனர். இவர்கள் ஆரிய அகத்தியர்கள் என்றும்,வட நாட்டில் மட்டுமின்றி, கம்போதியா, சாவகம் போன்ற கீழை நாடுகளிலும் அகத்தியர்கள் வாழ்ந்துள்ளனர்என்றும் கூறுகின்றார்.

பி.தி.சீனிவாசையங்கார், “சமசுகிருத நூல்களில் இசுவாகு காலம் முதல் கிருட்டினன் காலம் வரையில் கூறப்படும் அகத்தியர்கள், வசிட்டர்கள், விசுவாமித்திரர்கள் ஒரு தனி அகத்தியர், விசுவாமித்திரர் வசிட்டர்களைக் குறிப்பனவல்ல. அவை குடும்பப் பெயராகப் பலருக்கு வழங்கிய பெயர்களாகும். அப் பெயர்கள் குடும்பப் பெயரேயன்றித் தனிப்பட்டவர்களுக்குரிய பெயர்களல்லஎன்கிறார்.

(One of the most illuminating suggestions of his (Partigers) is that the Agastyas, Vasisthas, and Viswamitras mentioned in the Sanskrit works were not each one man who baffles the reader by appearing and reappearing in every age from that of Iksvaku to that of Sri Krishna: History of the Tamil-P. liv-P. T. S. Iyengar.)

துடிசைகிழார் அ.சிதம்பரனார், “அகத்தியர் என்னும் பெயர் அடைகொடுக்கப்பட்டு வழங்காததால், நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும் பலநாட்டு அகத்தியர்களுடைய வரலாறுகளை ஒரே அகத்தியர் வரலாறு என்று கருதி, நூல்களிலும் உரைகளிலும் எழுதிவிட்டார்கள். படிப்பவர்களும் பிரித்து அறிந்து படிப்பதில்லை. இப்படிப் பல அகத்தியர்களுடைய வரலாறுகள் ஒன்றுபட்டுக் கிடப்பதால், சில புலவர்கள் அகத்தியர் என்னும் பெயர் உடையவர் பலர் இருந்திருக்க வேண்டும் என்று முடிவுகட்டுகிறார்கள். இது சரியான முடிவே ஆகும்என்று எழுதியுள்ளார்.

இன்னுஞ் சிலர், அகத்தியர்கள் முனிவர், சித்தர், சோதிடர், மருத்துவர், மெய்யியல் ஞானி, மொழிஅறிஞர் என்று அறுவரென்று எவ்வகைத் தரவுகளும் சான்றுகளும் இன்றிக் கூறி வருகின்றனர். ஆனால், செம்மொழித் தமிழ் நிறுவனத்தின் பண உதவியில் ஆங்காங்கே நடைபெறும் அகத்தியக் கருத்தரங்கங்களில் உரை நிகழ்த்துவோர், செய்தி ஊடகங்களில் கட்டுரைகள் வடிக்கும் தினமணிவகையார் ஆகிய மேதைகளும் கோதைகளும் ஒன்றிய அமைச்சர் ஒப்பித்ததைப் போல, அகத்தியர் ஒருவரே எனக் கருத்திற் கொண்டு அவரைப் பன்முகத் திறனாளியாகக் கட்டமைத்துக் கூறி வருகின்றனர்.

சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழையும் பாணினிக்குச் சங்கதத்தையும் (வடமொழி) கற்றுக்கொடுத்தான் என்ற கதை உள்ளது. அகத்தியர் முருகப்பெருமானிடம் தமிழ் கற்றவர் என்ற பெருமையை உடையவர் என்று இன்னுமொரு கதையும் இருக்கிறது. ஆனால், ஒன்றிய அமைச்சர் தருமேந்திரப் பிரதான், அகத்தியரிடம்தான் முருகன் தமிழ் இலக்கணம் கற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது என்று புதுக்கதை விடுகின்றார்.

நாவலர் சோமசுந்தர பாரதியார், “சிலர் அகத்தியரன்றோ தமிழ் மொழியை உண்டாக்கினார் என்று நினைக்கலாம். சிலர் வடமொழியும் தமிழ்மொழியும் சிவபெருமானானல்லவோ தோன்றின என்று எண்ணலாம். கடவுள் மொழிகளை உண்டாக்கினார் என்று கூறுவதை விட மொழிகள் கடவுளர்களை உண்டாக்கின என்று கூறுவது சாலப் பொருந்தும். புராணேதிகாசங்கள் பாடினோர் மக்கள் மனத்தகத்துப் பத்திப்பயிர் விளைப்பான், எல்லாம் கடவுளால் தான் உண்டாயிற்று என்று கூறுவர். அவர்கள் அங்ஙனம் கூறார்களெனின் அவர்கள்  பாடும் புராணக் குவியல்கள் பயனிலவாய் ஒழியும் என்று எழுதியுள்ளார். (தமிழும் தமிழரும் பக். 100)

செல்வகேசவராய முதலியார் க.மு. அவர்கள், “அகத்தியர் தமிழைத் தாமே படைத்தாரென்பது எவ்வாற்றானும் பொருந்தாது. ஒரு பாஷையை ஒருவர் உண்டாக்கினாரென்பது பாஷா தத்துவ சாத்திர முடிவுக்கு முற்றும் முரண்பாடாகும். கடவுட்டன்மை ஒருவற்கேற்றி அவன் தானாகவே ஒரு பாஷையைச் சிருஷ்டித்து இலக்கியங்களையும் உண்டாக்கிப் பலரும் பயிலச் செய்தான் என்பது பிரகுர்தி விரோதமான அசம்பாவிதமே யாகும். இலக்கியம் கண்டதற் கிலக்கணம் இயம்பல்”, பன்னாட்டிலுள்ள பாவலர்க்கும் நாவலர்க்கும் உடன்பாடாயிருப்ப அகத்தியர் தாமே இலக்கியம் கற்பித்து இலக்கணமும் இயற்றினாரென்பது பொருந்துமா?” என்கின்றார்.

வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் அவர்கள் தமிழ் மொழியின் வரலாறு என்னும் நூலிற் கூறுவது: -- தமிழ்ப்பாஷையின் தோற்ற விஷயமாக யாம் மேற்கூறிப் போந்தன அனைத்தும் எவ்வாறு கருதப் படினும் படுக. கருத்துக்கள் தன் முயற்சியானெழும் ஒலிகளின் சம்பந்தமாகவே வெளிப்படுகின்ற இயல்பினின்றுமே பாஷைகளுண்டாத லியலும் என்பது யாவரும் மறுக்கமுடியாததோர் பாஷைநூ லுண்மை. இவ் வுண்மையை யொட்டியே தமிழ்ப்பாஷையின் தோற்றமும் ஏற்பட்டிருத்தல் மிகவும் கவனிக்கற்பாலதே. ஈதிவ்வாறாகத் தமிழ் நூலாசிரியர் பலரும், இக் காலத்தினும் ஆங்கிலநூற் பயிற்சியில்லாத நண்பருட்சிலரும் தமிழ்மொழியும் வடமொழியும் தேவபாஷைக ளென்றும் இவ்விரண்டும் முறையே அகத்தியனார்க்கும் பாணினியார்க்கும் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டன என்றும் கூறாநிற்பர்.

உ. வே. சாமிநாதய்யர் கூற்று: இவர் (அகத்தியர்) வருவதற்கு முன்னரே இந் நாட்டிலிருந்த தமிழையும் அதனிலக்கணத்தையும் இவர் தந்தாரென்று கூறியிருப்பது உபசாரவழக்கு என்பதாகும். (சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்)

சில மெய்யியல் நூல்களையும், மருத்துவ நூல்களையும், கணிய (சோதிட) நூல்களையும் அகத்தியர் எழுதியதாகக் கூறி வருகின்றனர். (அகத்தியர் கருப்பசூத்திரம், அகத்தியர் மருத்துவம், அகத்தியர் செந்தூரம், சமரச நிலை ஞானம், அகத்தியர் ஐந்து சாத்திரங்கள், வாகடம், பூசாவிதி, இரசவாத சூத்திரம் எட்டு முதலிய பல) இவர் எழுதிய நூல்களாகக் கூறப்படுவனவற்றின் பெயர்களைப் பார்த்தாலேயே இவை மிகவும் பிற்கால நூல்கள் எனத் தெரிகின்றன என்றும் இவர் எழுதியதாகக் கூறப்படும் நூல்களின் பாடல்களில் பயின்றுவந்துள்ள சொற்கள் இவரைப் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட பிற்கால நூல்களின் ஆசிரியராக ஓர் ஈர்ப்புக்காக அகத்தியர் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலக்கட்டத்தைச் சார்ந்தவர்கள், வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவர்கள், வெவ்வேறு நம்பிக்கை கொண்டவர்கள் என்ற கருத்தும் ஆய்வறிஞர்களால் முன்வைக்கப்படுகின்றன.

ஒன்றிய அமைச்சர், தமிழ் அரசர்களான சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் குலகுருவாகவும் அகத்தியர் இருந்துள்ளார் என்று கூறியிருக்கின்றார். உண்மை என்னவென்றால் வேள்விக்குடிச் செப்பேட்டிலும் சின்னமனூர் செப்பேட்டிலும் பாண்டிய மன்னர்களின் சடங்காளராக(புரோகிதராக)வும் குலகுருவாகவும் அகத்தியரைக் கொண்டிருந்தனர் என்றும் பாண்டியர்கள் நிலங்களைப் பார்ப்பனர்களுக்குத் தானமளித்ததாகவும் குறிப்புள்ளது என்கின்றனர். இவை பிற்காலச் செய்திகளே. வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் திரு.கணியன்பாலன் முதலானோர் செப்பேட்டுச் செய்திகள் நம்பத்தன்மையற்றவை என்று கூறுவதும் எண்ணத் தக்கதாகும்.

முனைவர் ப.தங்கராசு, “அகத்தியர் என்னும் பெயருடையோர் தென்னிந்தியாவினின்று கீழை நாடுகளுக்குச் சென்று கம்போதியாவில் இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் பரப்பியதோடு அரச பரம்பரையையும் தோற்றுவித்துள்ளனர். சாவகத்தில் முதன் முதலில் சிவன் கோயிலைக் கட்டியவர் பாண்டியநாட்டினின்று சென்ற, அகத்தியர் என்றறிய முடிகிறதுசாவகத்திலும், பாலியிலும் அகத்தியர் பெயர் சத்தியம் செய்வதற்கு உரிய பெயராகப் பயன் படுத்தப்பெற்றுள்ளது.என்கிறார்.

இச் செய்திகளைக் கொண்டே அமைச்சர் தருமேந்திர பிரதான், அகத்தியர் வழிபாடுகள் கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, சாவா, கம்போடியா, மற்றும் வியத்நாமில் நடத்தப்படு கின்றன என்கின்றார்.

இனி, எழுத்தாளர் மாலன் வகையாரின் அகத்தியர் தொடர்பான கருத்துகள் உள்ளீடற்றவையா யிருப்பதைத் தக்க சான்றுகளுடன் காட்டுவோம். அகத்தியர் பற்றி இதுவரை வந்துள்ள ஆய்வுநூல்கள் என்னென்ன என்றும் அவை கூறும் ஆய்வுமுடிவுகள் பற்றியும் சுருக்கமாகக் காண்போம்.

(அகத்தியர் புரட்டுதொடரும்)