வியாழன், 6 ஆகஸ்ட், 2026

ஒற்றைத்தன்மைத் திணிப்பு!

 

ஒற்றைத்தன்மைத் திணிப்பு!


இந்தியா என்று இப்போது அழைக்கப்படும் இந் நாடு, ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் (அதாவது கி.பி. 1600-க்கு முன்பு), இன்று நாம் பார்ப்பதுபோல ஒரேநாடாக இருக்கவில்லை. பல்வேறு பேரரசுகள், சிற்றரசுகள், குறுநில மன்னர்களால் ஆளப்பட்ட ஒரு துணைக்கண்டமாக இருந்தது. பல மொழி, பல பண்பாட்டுக் குமுக மக்கள், அவர்களின் மொழி, நிலப்பரப்பு, இனத்தின் அடிப்படையிலேயே அடையாளப்படுத்திக் கொண்டனர். அவர்களில் முகன்மையாகப் பின்வரும் இனக்குழுக்கள் வலுவாக இருந்தன:

                சேர, சோழ, பாண்டிய மரபுகளின் வழிவந்த தமிழர்கள் தெற்கில் அவர்கள் நிலப்பரப்பில் வாழ்ந்தனர். சேரநாட்டுக் கடற்கரைப் பகுதிகளில் (கேரளா-மலபார்) மலையாளிகள் இருந்தனர். தெலுங்கர்கள் இன்றைய ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளிலும், காக்கத்தியர், நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்தனர். கன்னடர்கள் மைசூர், கர்நாடகப் பகுதிகளில் வாழ்ந்தனர். மராட்டியர்கள் மேற்கு இந்தியப் பகுதியில் ஒரு பேரினமாக இருந்தனர்.

                வங்காளிகள், சீக்கியர்கள் (பஞ்சாபிகள்), இராசபுத்திரர்கள் முறையே கிழக்கு, வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் தங்களுக்குரிய தனித்தன்மையான பண்பாடு பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்தனர். மொழி, பண்பாட்டு அடிப்படையில் மேற்குறிப்பிட்டோருடன் அசாமி, காசுமீரி முதலியோரும் பழங்குடி குமுகங்களும் வாழ்ந்து வந்தனர்/வருகின்றனர். இந்தியாவை ஒரு "தேசங்களின் நாடு" (Nation of Nations) என்று வரலாற்றாளர் குறிப்பிடுவர்.

இவர்கள் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் எப்போதும் ஒரே ஆட்சியின்கீழ் இருந்ததுஇல்லை. இந்த வரலாறு திரிக்கப்பட்டு இன்றைக்கு முழுப்பூசுணையைச் சோற்றில் மறைப்பதுபோல் மறைத்தும் திரித்தும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதைக் காண்கின்றோம்.

ஆங்கிலேயர் வருகையின்போது வடஇந்தியாவில் முகலாயப் பேரரசும் மராட்டியப் பேரரசும் இருந்தன. இராசபுதனத்தை இராசபுத்திரர் ஆண்டுவந்தனர். தென்னிந்தியாவின் வெவ்வேறு பகுதிகளை ஐதராபாத்து நிசாம்களும், நாயக்க மன்னர்களும், மைசூர் உடையார்களும், பாளையக்காரர்களும் ஆண்டு வந்தனர்.

இந்தியா உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் மிகப் பெரியதொரு நாடாக உள்ளது. அரசியல் பன்முகத்தன்மை என்பது கூட்டாட்சி அமைப்பு, பலகட்சி மக்கள்நாயகம், பலவேறு குமுகக் குழுக்களின் சார்பாளர் சேர்ந்த ஆட்சி என்பனவற்றில்தான் இருக்கின்றது.

இந்தியக் குடிமக்களில், மொழி, சமயம், சாதி, பண்பாடு, உடலமைப்பு, தோற்றம், உடை, உணவு முதலிய பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறைகள், இயற்கை வளங்கள், மலை, பாலைநிலம், கடற்கரை, காடு, சமவெளி எனப் பலவகை நில அமைப்புகள், தட்பவெப்பம், இசை, நாட்டியம் முதலிய நுண்கலைகள், நாட்டுப்புறக் கலைகள், வீர விளையாட்டுகள், மரபுகள், திருவிழாக்கள், சிந்தனைகள், கருத்துகள், படைப்பாற்றல், பொருளியல் முதலியவற்றில் வெளிப்படையான வேறுபாடுகள் உடையோர் இருக்கின்றனர். மேற்கூறிய வேறுபாடுகளால் அவர்களின் வாழ்வியல் முறைகளும் மாறுபடுகின்றன.

இவ்வுண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். அனைத்து மக்களிடத்தும் சமன்மையைப் பேண வேண்டும். இவற்றைக் கண்டுகொள்ளாது, பன்முகத்தன்மையை மறுப்பது, அறிவுடைமையன்று. இந்திய தேசியக் கட்சிகளின் உடனடி நன்மை கருதி எடுக்கப்படும் பன்முகத்தன்மைக்கு மாறான நடவடிக்கைகள், கூட்டாட்சிக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் ஊறு ஏற்படுத்தும் தீங்காக முடியும் என்பதை மறுக்கஇயலாது.

இந்திய அரசியல்சட்டம் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதோடு அதை உறுதிப்படுத்துகின்றது; அதனைக் காக்கும்வகையில் சட்டக்கூறுகளைக் கொண்டுள்ளது. அரசியல் சட்டத்தின் பேரால் உறுதி எடுத்துக்கொண்டு ஆட்சிப்பதவிக்கு வருவோர் அந்தச் சட்டத்தை எந்த அளவுக்கு மதிக்காமல் செயல்படுகிறார்கள் என்பதைக் கண்டு வருகின்றோம்.

இப் பன்முகத் தன்மைக்கு ஊறுசெய்தலும், வேற்றுமையில் ஒற்றுமைஎன்பதைப் பேணுவதில் விருப்பின்றிக் கரவாக மாறுபட்டு நடத்தலும் இந்தியாவின் நிலைப்புக்கு ஊறுசெய்வதாகவே முடியும் என்பதில் சற்றும் மிகையில்லை. பல மொழிகள், பல மதங்கள், பல பண்பாடுகள், பல குமுகங்கள் கொண்ட நாட்டை ஒன்றாக வைத்திருப்பதே அரசியல் சட்டத்தின் அடிப்படைநோக்கமே அன்றி ஒரேமாதிரியாக ஆக்குவதன்று. இந் நாட்டின் ஒற்றுமை என்பது வேறுபாடுகளை அழித்துவிட்டு ஒன்றாக்குவதில் இல்லை; வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு இணைந்திருக்கச் செய்வதிலேயே இருக்கிறது. இந்திய ஒற்றுமையின் அடிப்படைவேற்றுமையில் ஒற்றுமை(Unity in Diversity) என்பதில்தான் உள்ளது.

ஒரே நாடு ஒரே மொழிஎன்றால், பிற மொழிகள் பேசும் மக்கள் இரண்டாம்நிலைக் குடிமக்களாகிறார்கள். இதனால் நம்பிக்கையின்மை, எதிர்ப்பு, போராட்டம், வன்முறை, பிரிவினை இயக்கம் எனப் பதற்றம் உருவாகும். 1960களின் தமிழ்நாட்டு இந்திஎதிர்ப்பு - மொழிப்போராட்டங்கள் சான்றாக உள்ளன. ஆயிரக்கணக்கான வழக்குமொழிகள் உள்ள ஒரு நாட்டில் ஒரே மொழியைத் திணிப்பது, பிற மொழிகளைப் புறக்கணித்து, அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

       பல்வேறு குமுகங்களைக் கொண்ட நாட்டில் ஒன்றின் அடையாளத்தை மற்ற குமுகங்களின் மீது திணிக்கும்போது, அக் குமுகங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இது குமுகஒற்றுமையைச் சிதைக்கிறது. ஒரேநாடு ஒரே அடையாளம்என்றால், பலர் தங்கள் தனித்தன்மையை, தனியான அடையாளத்தை இழக்கும் தீங்கு ஏற்படுகிறது. அடையாள அழிப்பு (Identity erasure), “ஒரே…” என்ற போக்கு, மக்களிடையே நாம் இந்த நாட்டில் எங்கு நிறுத்தப்பட்டிருக்கிறோம்?”  என்ற எண்ணம் எழச்செய்து, நம்பிக்கையின்மையை உருவாக்குகிறது. ஒரே அடையாளத்தைத் திணிப்பது, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகிறது.

இந்தியாவில் பல பண்பாடுகள் இருக்கும் நிலையில், “தேசியப் பண்பாடு என்றும், ‘ஒரே நாடு, ஒரே பண்பாடுஎன்றும் கூறி ஒன்றை உயர்த்துவது, பிற பண்பாடுகளைத் தாழ்வாகக் காட்டும் நிலையை உருவாக்குகின்றது; பண்பாட்டு வல்லாண்மை (ஆதிக்க) உணர்வு, எதிர்ப்புநிலையை உருவாக்குகிறது; பொறுத்துப்போகும் மனநிலையைக் குறைக்கிறது. ஒரே பண்பாட்டை முன்னிறுத்துவது, பிற பண்பாடுகளை அழிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது.

பல மதங்கள் உள்ள நாட்டில் ஒருமதத்திற்குச் சார்பாக நடத்தல் குமுகத்தில் பகைஉணர்வு எழக் காரணமாகின்றது. இந்திய அரசியல் சட்டம், அரசு எந்த மதத்தையும் திணிக்கவோ, எந்த மதத்திற்கும் துணைதரவோ கூடாது என்கிறது. மதச்சார்பின்மையைக் கூறுகிறது.

இந்தியா ஒன்றாக இருப்பது அழுத்தத்தால் இல்லை; உடன் பாட்டால்தான்! இந்திய ஒன்றியஆட்சியின் வலிமை, பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ளும்போதுதான் நீடித்து இருக்கும். முன்பே கூறியவாறு இந்திய அரசியலமைப்பு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்பதைக் கூறவில்லை. மாறாகப் பல மொழிகள், மத உரிமை, பண்பாட்டு உரிமை என அனைத்தையும் பாதுகாக்கிறது.

ஒற்றுமைக்கு உண்மையான பாதை எல்லோரும் ஒரே மாதிரி ஆவதில் இல்லை. வேறுபாடுகளுடன் சமமதிப்பைப் பெறுதலில்தான் உள்ளது. இந்தியாவின் வலிமை, ஒரே மாதிரி சிந்தனை அன்று;  பல சிந்தனைகள் உடையோரும் ஒரே நாட்டில் இணைந்து வாழ்வதாகும். இந்திய ஒற்றுமை என்பது  பல்வேறு பண்பாடுகளுக்கிடையேயான குறுக்கீடற்ற இணக்கமான இணைப்பை  வலியுறுத்துகிறது. கட்டாய ஒற்றுமை  மனக்கசப்பை விதைத்து, பிரிவினை உணர்வுகளை வலுப்படுத்துகின்றது.

உலகம் முழுவதும், பல்வேறு மக்களை ஒரே அடையாளத்தில் இணைக்கும்  "சீர்திருத்த" முயற்சிகள், பெரும்பாலும்  இனஅடிப்படை மோதல்களுக்கும், பிரிவினை இயக்கங்கள் தோற்றத்திற்கும், நாடுகளின் பிளவுக்கும் வழிவகுத்து இருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு நிலப்பகுதிகள் அவற்றின் தனித்தன்மையைத் காப்பாற்றிக் கொள்ளும் உரிமையை வரலாற்று அடிப்படையில் வலியுறுத்துவதில் உறுதியானவையாக உள்ளன.

எனவே, “ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே அடையாளம், ஒரே மதம், ஒரே வழிபாடு…..” என்கின்ற போக்கு பன்முகத்தன்மையை அழித்து, குமுக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் கடுமையான சிக்கல்களை உருவாக்கும்.

                பல மொழிகளும் பல பண்பாடுகளும் இந்தியாவின் வாணிகம், சுற்றுலா, கல்வித்துறைகளுக்கு வலிமையாகும். ஒரே அடையாளத்தைத் திணிப்பது, பொருளியல் வாய்ப்புகளைக் குறைக்கும் போக்கினதாகவும் ஆகும்.      

மொழி, பண்பாடு, மதம் ஆகியவற்றில் சிறுபான்மையர் குமுகங்கள் ஒதுக்கப்படுவதை உணரும்போது, அவர்களுக்குப் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு உருவாகிறது. "நாங்கள் இந்தியர்களா இல்லையா?" என்ற கேள்வி எழுகிறது. தம் தாய்மொழியையோ, பண்பாட்டையோ கைவிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும்போது எதிர்ப்பும் பிரிவினை கோரிக்கைகளும் வலுப்பெறுகின்றன. அவர்களுக்கு இந்நாட்டிற்குப் புறம்பான உணர்வு உருவாகிறது. ஒருமைப்பாட்டைக் கட்டாயப்படுத்துவது உண்மையான ஒற்றுமையை உருவாக்காது, மேலோட்டமான, வல்லந்தமான "ஒருமைப்பாடு" மட்டுமே உருவாகும்.

                வெவ்வேறு மொழிகள் பேசினாலும், வெவ்வேறு கடவுளை வணங்கினாலும், வெவ்வேறு உணவுகள் சாப்பிட்டாலும் - எல்லோரும் சமமான இந்தியர்கள்" என்ற நிலையிருந்தால் மட்டுமே உண்மையான ஒற்றுமை இருக்கும். மாறாக, "இந்தி தெரியாதவன் இந்தியன் இல்லை" அல்லது "இந்தப் பண்பாடு மட்டுமே இந்தியப் பண்பாடு" என்று சொல்வது கோடிக்கணக்கான மக்களை விலக்குகிறது.

                ஒற்றைத்தன்மைத் திணிப்பு அரசியல், பொருளியல், உளத்தியல் அடிப்படையிலான தாக்கங்களை உருவாக்குகிறது. மக்களிடையே "நாம் - அவர்கள்" என்ற பிரிவினையை உருவாக்குகிறது. இது குமுக ஒற்றுமையைச் சிதைத்து, வன்முறைக்கும் கலவரங்களுக்கும் வழிவகுக்கிறது.

வரலாற்றில், தமிழ்நாடு கி.பி.1311-றிற்கு அதாவது மாலிக்காபூர் படையெடுப்புக்கு முன்னர் அயலர் ஆட்சியின் கீழ் இருந்ததில்லை. அதற்குப் பிறகும், ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படும் வரையிலும் தமிழகப் பகுதிகள் முழுமையுமாக அயலர் ஆட்சியின்கீழ் இருந்தது இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு வடவர் ஆட்சியின் கீழுள்ள தமிழகம், ஒற்றைத்தன்மைத் திணிப்பால் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருவது கண்கூடு.

                ஒற்றை மொழியைத் திணிக்க முயன்ற நாடுகளில் மோதல்கள் மிகுந்துள்ளன. பாகித்தானில் உருதுவை மட்டும் தேசிய மொழியாகத் திணித்தபோது, வங்காளமொழி பேசும் கிழக்குபாக்கித்தான் கொதித்தது; மொழி உரிமைக்காக 1952-இல் மாணவர்கள் உயிரீகம் செய்தனர். இறுதியில் 1971-இல் வங்கதேசம் தனி நாடாகப் பிரிந்தது.

                செர்பிய அடையாளத்தை மற்றவர்கள் மீது திணிக்க முயன்றநிலை  (மிலோசெவிச்சு தலைமையில்) உயூகோ-சுலேவியாவின் பிரிவினைக்கும், குரோசியா, போசுனியா, கோசோவோ போர்களுக்கும் முதன்மைக் காரணமாக அமைந்தது.

                சீனஅரசு, சிஞ்சியாங்கு மாகாணத்தில் வாழும் உய்குர் முசுலிம்கள் மீதும், திபெத்தியர்கள் மீதும் கட்டாய மொழி, பண்பாட்டைத் திணிப்பது தொடர்மோதல்களையும் அடக்குமுறையையும் ஏற்படுத்தி உள்ளது.

                துருக்கியில், குருது மொழி, உடை, பண்பாடு மீது நீண்டகாலமாகத் தடைகள் விதித்து அடக்கியதுடன், துருக்கிய அடையாளத்தைத் திணித்ததால்  பல ஆண்டுகளாக வன்முறை மோதல் தொடர்கிறது.

                இலங்கையில், சிங்களமொழியை மட்டும் அரசு மொழியாக்கிய 'சிங்களம் மட்டும்' (Sinhala only Act) சட்டம், தமிழ் மக்களை தனிமைப்படுத்திய நிலையை உருவாக்கி, பல்லாண்டுக்கால உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது.

இவற்றிற்கு நேர்மாறாக சுவிட்சருலாந்து நான்கு ஆட்சி மொழிகளுடன் (செருமன், பிரெஞ்சு, இத்தாலியன், உரோமன்) அமைதியாகச் செயல்படுகிறது. கனடா, ஆங்கிலம்-பிரெஞ்சு இருமொழிக் கொள்கையுடன் ஒற்றுமையைக் காக்கிறது. பன்முகத்தன்மையை மதிப்பது ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. ஒருமைப்பாட்டை வல்லந்தமாகத் திணிப்பது சிதைவை உருவாக்குகிறது.



ஒருநாட்டிற் கொரேமொழிதான்; ஒருநாட்டிற் குப்பண்பா டொன்றென் போரே!

ஒருநாட்டிற் கோரடையா ளம்மட்டில் தானென்னும் ஓலத் தீரே!

ஒருநாட்டிற் கொருமதந்தா னொருவுடைதா னெனமுழங்கி உருமு வோரே!

ஒருநாட்டில் ஆளுகின்ற உம்போக்கால் புரட்சியெழல் உறுதி உண்மை!

                                                                                     - ..


தமிழரும் பெயரும்!

 

தமிழரும் பெயரும்!



‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றும், ‘நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான், நான், நான்!’ என்றும் முழங்கினார் பாவேந்தர்! ‘தமிழே எனக்கிங்கு உயிர்மலர்ச்சி! – செந்தமிழே எனக்கிங்கு உடலம்!’ என்றும், ‘அறம் பெருகும் தமிழ்படித்தால், திறம் பெருகும், மறம் பெருகும், ஆண்மை வரும், மருள்விலகும், பொய்மையெலாம் புறம்பெயரும், வாழ்வு புதுமைபெறும்’ என்னும் கருத்துப் பெறவும் பாடினார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். இத்தகையோர் வாழ்ந்த மண் இது!

இந்தத் தமிழகத்தில் இப்போது தமிழர் தம் தாய்மொழியைப் பேணிப் பாதுகாத்துப் புரக்கும் நிலை மிகமிக இரங்கத்தக்கதாக உள்ளதென்பது மிகையாகச் சொல்லப்படுவதன்று! முற்றும் உண்மையே! ஓர் எடுத்துக்காட்டைப் பார்த்தால் இந் நிலை தெளிவாக விளங்கும்.

17-06-2026 அன்று வந்த நாளிதழ்களில், ’தி இந்து’ - ஆங்கில நாளிதழ், ‘இந்து தமிழ் திசை’, ‘தினமணி’ - தமிழ் நாளிதழ்கள் ஆகிய நாம் பார்த்த மூன்று நாளிதழ்களில் முதற்பக்கத்தில் ‘அப்போலோ கல்வி நடுவ’த்தின் முழுப்பக்க விளம்பரம் ஒன்று வந்திருந்தது. அந்த விளம்பரத்தில் அக் கல்வி நடுவத்தில் பயின்று, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – தொகுப்பு 1’ தேர்வில் முன் நிலைகளில் தேறிய நாற்பது பேர்களின் படம், பெயர், வரிசை(தரம்) எண்ணுடன் அவர்கள் இப்போது செய்யும் வேலையையும் வெளியிட்டிருந்தனர்.

ஆண்களும் பெண்களுமாகக் கலந்து காணப்பட்ட அந்த நாற்பதின்மர் பெயர்களையும் ஒன்றிற்கு இரண்டுமுறை கூர்ந்து பார்த்ததில், அப் பெயர்களில் ஒன்றே ஒன்று மட்டுமே தமிழ்ப்பெயராக இருக்கக் கண்டோம். PUGALANBU. K – என ஆங்கிலத்தில் எழுதியிருந்த அப்பெயர், ‘புகழன்பு’ எனும் தமிழ்ப் பெயரென்றே கருதுகின்றோம். அந்த விளம்பரத்தில் கண்ட நாற்பது தமிழரில் ஒருவரே தமிழ்ப்பெயர் தாங்கி இருக்கின்றார் என்பதே நிலை!

பெயர் என்பது வெறும் கூப்பிடுவதற்கான குறியீடு இல்லை; அது ஒரு மாந்தனின் முகவரி; தாய்மொழியைப் பேணுகின்ற நிலையின் ஒரு முகன்மைக் கூறு! பிள்ளைகளுக்குப் புரியும் தாய்மொழியில் பெயரிடுவது, அவர்களுக்கு நாம் தரும் தன்னம்பிக்கை மட்டுமன்று, பண்பாட்டின், வரலாற்றின், மரபின், மொழியின், கலையின் வாழ்வியலின் அடையாளம். அறிந்தோ, அறியாமலோ, பொருள் புரிந்தோ, புரியாமலோ பிறமொழியில் நாம் சூட்டும் பெயர், உளத்தியல்படி நம்மை அறியாமல் அம்மொழியின் வல்லாண்மைக்கு நாம் நம்மை அறியாமலே ஆளாக்கிக் கொள்வதாகும் எனில் மிகைஉரை இல்லை, உண்மையே!

பெயரிடுவதில் போலி நாகரிகம் புன்மைப் பெருமைகள் புகுந்து விட்டன. புரியாத மொழியில் பேசுபவர்களை உயர்வாக எண்ணும் ஒருவகை அறியாமை போன்றதே புரியாத மொழியில் பெயர் சூட்டிப் போலிப் பெருமை கொள்வதுமாகும்!. தாய்மொழியைத் தாழ்த்தி அயல்மொழியை உயர்வாக எண்ணும் அவலம், அறியாமை இதில் இருப்பதை உணரவேண்டும். உண்மையில், உலகின் மூத்த மொழி, முதல்தாய்மொழி, வளமான இயற்கை மொழி தமிழே என்ற ஆய்வறிஞர் கூற்றை மறந்து, நாம் போலித்தனங்களுக்கு நம்மைநாமே ஆளாக்கிக் கொள்கின்றோம்.

தமிழர் தமிழில் பெயரிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதே ஓர் இரங்கத்தக்க நிலை என்பதை உணரவேண்டும். புதுச்சேரி, தமிழ்நாட்டு அரசுகளும், தமிழர் இயக்கங்களும் மக்களிடையே இந்த உணர்வை உருவாக்கித் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்ட ஊக்குவிக்கவேண்டும்.

தம்மிடம் வந்து காசு கொடுத்து எந்தப் பெயர் வைப்பது என்று கேட்போரிடம் பிறந்த நாள் நேரம் கேட்டுவிட்டுப், புரியாத அயல் மொழிப் பெயர்களையும் தமிழ் இலக்கண வரையறையைப் பொருட் படுத்தாத பிறமொழிப் பெயர்களையும் சூட்டும்படி வலியுறுத்துவதையும், மொழிக்கு முதலில்வரா எழுத்துகளில் தொடங்கும் பெயர்களாக வைக்கத் தூண்டுவதையும் காண்கிறோம். இத்தகைய தமிழுக்கு எதிரானபோக்குப் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றது. இந்தப் போக்கில் உள்ள சூதைப் புரிந்து கொண்டு விழிப்புறவேண்டும்.

நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டி நாம் தொன்மைச் சிறப்பும் பண்பாட்டு நாகரிகச் சிறப்பும் கொண்ட தமிழர்கள் என்று அடையாளம் காட்டவேண்டும். தாய்மொழி தமிழில் பெயர்வைத்துக் கொள்வது பெருமைதரும் செயல் என்று கருதவேண்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
. - கு.466.

{புதுவை 'நற்றமிழ் - சூலை 2026 - இதழில் வந்தது )

வெள்ளி, 24 ஜூலை, 2026

பாவலர் ம. இலெ. தங்கப்பா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவேந்தல்

 

பாவலர் ம. இலெ. தங்கப்பா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவேந்தல்

 



வாழ்க்கையின் நோக்கம் அன்பு, அன்பு, அன்பு செலுத்தலே என வலியுறுத்திய அன்பே!

இயற்கையோடியைந்த வாழ்க்கையே வாழ்க்கை என விளக்கிய எங்கள் ஆசானே!

சுற்றுச்சூழல் தூய்மையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த சிற்றூர் வரப்பு வாய்க்கால் மரநிழல் விரும்பியே!

இயற்கையைத் துய்க்க - எழில் உணர்ந்து மகிழ்ந்திட - எண்ணற்ற மாணவரை ஆற்றுப்படுத்திய ஏந்தலே!

தனித்தமிழைத் தாங்கி நின்று தாய்மொழியைக் காத்துயர்த்தத் தளராது பாடாற்றிய அறிஞனே!

செந்தலையார் குறிப்பிட்டது போன்று, தமிழின் அடையாளமாகத் திகழ்ந்த செவ்வியரே!

தமிழ்காத்த கேடயமே! தமிழ்ப்பகை அஞ்சி ஒடுங்க வைத்த வாளே!

கழகக்காலப் பாவலரை ஒத்த பாவலரே!

ஒருதனிச் சிறப்புமிக்க மொழிபெயர்ப்பாளரே!

தன்னேரில் கட்டுரைகளால், தெள்ளிய தெளிதமிழ் ஆசிரிய உரைகளால் தமிழ்ப்பகை அரசைச் சம்மட்டி அடியாய்த் தாக்கி இடித்துரைத்த எழுத்தாண்மையரே!

தமிழ்காக்கத் தாவி நின்ற கால்களே!

தமிழ்ப் பகைக் கெதிராய்ப் புடைத்தெழும் தோள்களே!

எழுத்து பேச்சோடு நில்லாமல் களத்தில் முகத்து நின்ற போராளியே!

இந்திய இலக்கிய அமைப்பு இருமுறை தந்த பரிசெல்லாம் உங்களைச் சரியாக மதிப்பிட்டுவிடவில்லை!

இதோ, உங்களை அறிந்த எங்கள் உள்ளம் கலங்கித் தவித்துக் கண்ணீர் விடுகிறதே அங்கேதான் உள்ளது உங்கள் மதிப்பு!

எல்லா நிலைகளிலும் தமிழும் தமிழரும் தமிழ்நிலமும் தாக்குதலுக் குள்ளாகியுள்ள நிலையில், ஏன் ஐயா பிரிந்து சென்றீர்கள்?

உங்களை நினைவில் நிறுத்தி, நீங்கள் பாராட்டிப் போற்றிய பாவலரேறுவை நினைவில் நிறுத்தி, தமிழ் இளைஞர் போராடுவர்!

தமிழ் மீட்க, தமிழர் நலன் மீட்க, தமிழ் நிலத்தை மீட்க எத்தகைய ஈகத்துக்கும் அணியமாகித் தமிழிளைஞர் போராடுவர்!

வெற்றி காண்பர்! போய்வாருங்கள் ஐயா!

நன்றி! அன்பன், தமிழநம்பி.

‘தமிழர்களும் தமிழும்’ – நேற்று, இன்று, நாளை!

 

(24-02-2019 மாலை நடைபெற்ற விழுப்புரம் தமிழ்ச்சங்கத்தின் 16-ஆம் ஆண்டுவிழாப் பாவரங்கத்தில் தலைமை ஏற்றுப் பாடிய பா)

தமிழர்களும் தமிழும்’ –

நேற்று, இன்று, நாளை!

- தமிழநம்பி



அரங்கிலுள பெரியோரே அறிவார்ந்த சான்றோரே, அன்பு பொங்கும் இரங்கும்உளத் தாய்மாரே, இளையோரே, மாணவரே இவ்வரங்கில் அருந்திறத்தில் பாடவந்த ஆற்றல்சால் பாவலர்காள்! அந்த மிழ்பால் வரம்பில்லாப் பற்றுடைய வயங்குளத்தர் அனைவரையும் வணங்கு கின்றேன்!

விழுப்புரத்தில் தமிழ்ச்சங்கம் வீறுறவே தொடக்கிதொடர் வினையால் இன்றே
செழிப்புறவே பதினாறாம் சீரார்ந்த ஆண்டுவிழா சிறப்பாய்க் காணும்
பழிப்பிழிப்புப் பாராட்டாப் பாலதண்டா யுதனாரைப் பலவா றாகக்
கொழிப்புறவே போற்றிடுவோம்! குறைவின்றிப் புகழுரைகள்
குவிப்போம் யாமே!

உலகிலுள மொழியறிஞர் உயர்தனிச்செம் மொழிதமிழென் றுரைப்ப தோடே
பலவகையும் சிறப்புயர்வுப் பாங்குகளை எடுத்துரைத்துப் பராவு கின்றார்!
நிலவுகின்ற மொழிகளிலே நிலைத்ததமிழ் முதன்மொழியாம் நிவப்பைச் சொல்லிப்
புலமையரும் உலகத்தின் புகழ்பெற்ற ஆய்வருமே போற்று கின்றார்!

முதன்மொழியாம் தமிழோடு முதல்நாக ரிகங்கண்ட மூத்த மக்கள்
முதன்முதலில் இலக்கியங்கள் முனைந்தாக்கித் தந்தாரே! முரணர் வீழ்த்தி
அதிஉயரப் பனிமலையின் அகன்றநெற்றிக் கயற்புலிவில் ஆழத் தீட்டி
அதிகமுமாய்க் கொள்ளாமல் குறைவாயும் கொடுக்காமல்
அறத்தின் நின்றே

நல்வணிகம் தரைகடலில் நடத்திநலஞ் சேர்த்தார்கள்! நாட்டில் தேர்ந்த
நல்லபல நுண்கலைகள் நளிஅண்ட வானியலும் நாட்டி யம்சேர்
வல்லயிசைப் பண்ணோடும் வளயாழின் இசையெல்லாம்
வளர்த்துத் துய்த்தார்!
வள்ளலெனக் கொடைகொடுத்தார், வாழ்வினிலே ஒளிமிகுந்தார்,
வரலா(று) உண்மை!

இன்றுள்ள தமிழர்நிலை எண்ணிடுவீர்! இயல்பாக இவர்கள் பேச்சில்
ஒன்றலுறப் பிறமொழிகள்! ஒழிந்ததுதாய் மொழிவழியே ஓதும் கல்வி!
சென்றுதொழுங் கோயில்கள், செப்பிவழக் காடுமன்றம் சேர எங்கும்
இன்றுஎந்தத் துறையினிலும் இல்லைதமிழ் எனும்நிலையே
இருத்தல் காண்க!

தாய்மொழியே படிக்காமல் தமிழ்நாட்டில் கற்குநிலை தணியாத் துன்பம்!
ஏய்த்தநிலை இங்கன்றி எங்குமிலை! ஆட்சிமொழி ஏட்டில் மட்டும்!
வாய்த்ததொரு நடுவரசோ வஞ்சகமாய் திணிக்குமிக வலிந்தே இந்தி!
தாய்த்தமிழை மாநிலத்துத் தமிழரசும் பேணாதே தாழ்ச்சி செய்யும்

சப்பானில் கொரியாவில் சான்றபுகழ் இரசியாவில் சற்றும் சோரா
ஒப்பரிய சீனத்தில் உயர்பிரான்சில் ஆட்சிசெய்வோர் உலகம் ஈனும்
செப்பமுறு அறிவியல்நூல் செறிநுட்ப நூலனைத்தும் சிறப்புச் சேர
தப்பின்றித் தம்மொழியில் தக்கவகை மொழிபெயர்த்துத் தருகின் றாரே!

இங்காள்வோர்க் கிவைபற்றி எள்முனையும் கவலையிலை! எவ்வெவ் வாறு
அங்கிகிங்குக் கொள்ளையிட லாகுமெனும் சிந்தனைக்கே அவர்க்கு நேரம்
பங்கிடவே போதவிலை! பார்த்துவரும் நிலையிதுவே! பழகி நாமும்
எங்கெதுவும் நடக்கட்டும் எனத்தமிழைப் புறக்கணித்தோம்! ஏற்றம் தோற்றோம்!

செய்தித்தாள் இதழ்களிலே செறிவற்ற நூல்களிலே சீர்மை அற்றே
மொய்த்தெழுதும் சொற்களிலே முறையற்ற மொழிக்கலப்பு முடுக்க மாக!
நெய்வண்ண மினுக்கலிலே நிமிர்த்தெழுதும் கடைப்பெயர்கள்
நிலைமை என்ன?
துய்யதமிழ் தொலைத்துபிற தொடர்பற்ற மொழிகளிலே துலங்கல் அன்றோ?

ஊடகத்தில் தொலைக்காட்சி உரையாட்டில் நிகழ்ச்சிகளில் ஓய்வே இல்லாக்
கேடுவிளை நாடகத்தில் கிளர்ச்சியுறு கூத்தாட்டக் கீழ்மை தம்மில்
ஈடுசொல முடியாத இழிவான தமிழ்க்கொலைகள்! இன்னு மிங்கே
பாடாகப் படுத்துதிரை பழியெனவே தமிழழிக்கும்! பார்க்கின் றோமே!

பண்பாடு நல்லொழுங்கு பார்போற்றும் நல்லறங்கள் பலவும் சொன்ன
மண்ணிற்கே உரியவுயர் மாண்பெல்லாம் படிப்படியாய் மறையச் செய்யும்
கண்கெடுக்கும் இருதிரைகள் காட்டுகின்ற காட்சியெலாம் கருத்தில் மாசு
மண்டிடவே புகுத்துநிலை! மட்டின்றி நடக்கிறதே மயக்கம் ஊட்டி!

ஆற்றுரிமை நெகிழ்ந்ததுவே! அணுத்தீமை கொடுவுலைகள் அமைத்த தோடே
ஊற்றுநீர் நிலவளத்தை உறிஞ்சிடலும் நடக்கிறதே ஊக்கத் தோடே!
மாற்றமிலா ஒட்டார மனத்தில்இந்தி சமற்கிருதம் ஊன்றற் கென்றே
தேற்றமுறச் செயற்படுவார்! தீந்தமிழை அழிப்பதற்கும் திட்டம் உண்டே!

இனிவருநாள் தமிழிளையோர் எழுவாரோ? இல்லைநம்மோர்க்(கு)
இயல்பாய்ப் போன
குனிந்துசெலும் உணர்வாலே குட்டுநிலை தொடர்ந்திடுமோ?
கொடுமை மேலும்
தணியாதே மிகுந்திடுமோ? தாய்த்தமிழும் வீழ்ந்திடுமோ தகைமை குன்றி!
பிணிநீங்கி நலம்வருமோ? பெருவாழ்வு வாய்த்திடுமோ? பீழை போமோ?

எந்தநிலை நேருமென எல்லோரும் செயலற்று இருத்தல் நன்றோ?
செந்நெறியில் அமைவிலையால் சீறியெழுந் துரிமைபெறச் சிறந்த ஈகச்
செந்தமிழ இளையோரின் செழும்படையொன் றெழவேண்டும் செப்ப மாக!
அந்நன்னாள் விரைந்திடுக! அந்தமிழர் அரசமைக! ஆக்கம் சேர்க!
-------------------------------

 

அச்சம் அறியாத் தமிழ்த்தொண்டர் அ. நக்கீரனார்!

 

அச்சம் அறியாத் தமிழ்த்தொண்டர்

. நக்கீரனார்!


ஆளுநர் மாறினும் அடாச்செயல்கள் மாறிலை!

 

ஆளுநர் மாறினும் அடாச்செயல்கள் மாறிலை!



இந்திய ஒன்றிய அரசின் அமைச்சர்களில் பெரும்பான்மையர் தேசியத் தற்பணியர் அமைப்பின் (RSS) வழிவந்த இந்துத்துவக் கொள்கையர் - இந்துமத வல்லதிகார மனப்பான்மையர் - என்பது வெளிப்படையாகும். இவர்கள் ஆட்சியில் இல்லாத, அதாவது பா.ச.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுகின்ற மாநிலக்கட்சியார்க்கு அல்லது வேறு எதிர்க்கட்சியார்க்கு இயலுகின்ற வகையெல்லாம் தொல்லை, இடைஞ்சல் தந்து தடையாக இருப்பதற்காகவே இவர்களுக்குத் தோதான ஆட்களை அம் மாநிலங்களில் ஆளுநர்களாக அமர்த்துகின்றனர்.

இப்படி அமர்த்தப்படும் இந்த ஆளுநர்கள், மாநில ஆட்சிக்குத் தொல்லை தருவதோடு மட்டுமன்றி மாநில மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், மரபுகள், நாகரிக நடைமுறைகள் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாது, மதிக்காது அவற்றைக் கொச்சைப்படுத்தி இழிவு செய்யும் நோக்கிலும் போக்கிலும் நடந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இரவிந்திர நாராயண இரவி ஆளுநராக இருந்தபோது, மாநிலச்சட்டமன்றம் நிறைவேற்றியணுப்பும் தீர்மானங்களைக் கிடப்பில் போடுவது, தேவையின்றிக் குடியரசுத்தலைவருக்கு விடுத்துவிடுவது போன்ற பல அடாச் செயல்களுக்காக அவரை உச்சநயன்மன்றம் கடுமையாகக் கண்டித்தது; எச்சரித்தது.

நாம் முன்னரே ‘நற்றமி’ழில் குறிப்பிட்டவாறு, பொதுவாக ‘இந்துத்துவா’க்காரர்களுக்கு அடிப்படையான ஒரு செயல்திட்டம் இருக்கிறது. அது இந்தியநாட்டை ஆரியநாடாக்க அதாவது பார்ப்பனரே தலையாயவர் பிறரெல்லாம் அவர்களுக்கு அடிமைகள் என்ற நிலை கொண்ட நாடாக உருவாக்க வேண்டுமென்பதே அது. அவர்களுக்கு விருப்பமான சிலஅடிமைகளுக்குச் சில அதிகாரப்பதவிகளைத் தருவார்கள். அந்தக் கரவான திட்டத்தின் நிறைவேற்றத்தை நோக்கியே அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கரவாக இருக்கும். மொழித்திணிப்பு, மாநில அதிகாரப்பறிப்பு, அடக்குமுறைச்சட்டங்கள், பெண்களை முன்னேற விடாமை, அனைவரும் எல்லாநிலையிலும் கற்கத் தடைசெய்யும் கல்வித்திட்டம் முதலிய பல தந்திரமான திட்டங்கள் இருக்கும்.

ஆனால் இவற்றை மறுக்கவும், மறைக்கவும் அவர்கள் ‘ஆரியர்’ என்ற இனமே இல்லையென்றும், ஆரியர் வந்தேறிகள் இல்லையென்றும் கருத்துருவாக்க ஆள்சேர்த்து வரலாற்றைத் தவறாகச் சித்திரிக்கிறார்கள். இங்கு ஆளுநராக இருந்த இரவிந்திர நாராயண இரவி, ‘சனாதனம்’ என்றும், கால்டுவெல் ‘பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர்’ என்றும், செம்பு ஆலையைத் தமிழ்நாட்டில் திறக்கவேவேண்டும் என்றும், தமிழ்நாடு மட்டும் முன்னேறுவது சரியில்லை என்றும், இந்தி சமற்கிருதத் திணிப்புக்குத் துணைதரவாகவும் பேசிவந்தது இதைச் சார்ந்ததே.

இவர்கள் நேரடியாக எதிர்த்து வெற்றிபெற முடியாத ஒருவரோ அல்லது ஒரு கருத்தியலோ இருந்தால், அந்நிலையில், அவரை அல்லது அக்கருத்தியலைத் தம்மோடு அணைத்துச் சேர்த்துத் தம்மவராக அல்லது தமதாக ஆக்கிக் கொண்டுப் பின் கொஞ்சம்கொஞ்சமாக அழித்துவிட்டுத் தம்மை வலுப்படுத்திக் கொள்வார்கள்.

திருவள்ளுவரையும் திருக்குறளையும் அவர்கள் இந்த வகையில்தான் தம்மவராக, தமதாக ஆக்கிக்கொள்ள முனைகிறார்கள். உலகப் பொதுவான ஈடெடுப்பற்ற திருக்குறள் கருத்துகளை இவர்களால் எதிர்க்க முடியாது என்பதால்தான், இரவிந்திர நாராயண இரவி, ‘மதப் பரப்புநரான சி.யு.போப்பு திருக்குறளிலுள்ள பத்தி(பக்தி) சிந்தனைகளை நீக்கிப் பெரிய அவமதிப்பைச் செய்திருக்கிறார்’ என்றும் அவரின் உள்நோக்கம் கொண்ட திருக்குறள் மொழிபெயர்ப்பு ‘ஆதன் இல்லாத பிணம் போல இருக்கிறது’ என்றும் கூறினார். திருக்குறள் வாழ்வியல் நெறி நூல் என்று குறைத்து மதிப்பிடுகின்றனர். அது ஒரு தொல்வரலாற்று (இதிகாசம்) நூல் என்றும் அதில் நிலையான ஆதனிகத்தின் (ஆன்மிகத்தின்) ஆதன் (ஆன்மா) இருக்கிறதென்றும் கூறியதோடு, திருக்குறளில் இருக்குமறையிலுள்ள (இருக்கு வேதத்திலுள்ள) சொற்கள் உள்ளன என்றும் (அதாவது இருக்குமறையின் கருத்துகளே திருக்குறளில் உள்ளன என்ற கரவான கருத்தைக்) கூறினார்.

அவர், திருவள்ளுவரைப் ‘பாரத சனாதனத்’தின் ஒளிவீசும் துறவி என்றபோதே தமிழர் அனைவரும் அவரைக் கண்டித்து உரைத்தனர். அத்துடன், காவி உடையுடன் கைகளில், நெற்றியில் திருநீற்றுப்பூச்சுடன், கழுத்தில் முண்மணிக்காய் மாலையுடன் வரைந்த திருவள்ளுவர் உருவப் படத்தை வைத்திருந்தார். இதைக் கண்ணுற்ற தமிழர் பலரும் கடுமையாக எதிர்த்தனர்.

தமிழ்நாட்டரசு தமிழர் திருநாளான பொங்கலை அடுத்த நாள் திருவள்ளுவர் நாள் எனக் கடைப்பிடித்து வருகையில் அவர் ‘வைகாசி அனுசம்’ திருவள்ளுவர் நாளென தாமே அறிவித்து மேற்கூறியவாறே திருவள்ளுவர் படத்தையும் காட்சிக்கு வைத்திருந்தார். அதற்காகத் தமிழரின் கடுங் கண்டனங்களைப் பெற்ற அவர், 2026, மார்ச்சு 11-ஆம் நாள் தமிழ்நாட்டிலிருந்து நீங்கி மேற்குவங்க ஆளுநராகப் போனார்.

கேரள ஆளுநராக இருக்கும் கோவாவைச் சேர்ந்த இராசேந்திர விசுவநாத்து அருலேகர், மார்ச்சு 12, 2026 முதல் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். இவரும் இரவிந்திர நாராயண இரவியைப் போலவே, அண்மையில் ‘வைகாசி அனுசம்’ திருவள்ளுவர் நாளெனக் கூறிக்கொண்டு, காவி உடையுடன் கைகளில், நெற்றியில் திருநீற்றுப்பூச்சுடன், கழுத்தில் முண்மணிக்காய் மாலையுடன் வரைந்த திருவள்ளுவர் உருவப்படத்தை வைத்து வணங்கியதைச் செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன.

திருவள்ளுவர் குறிப்பிட்ட எந்தவொரு மதத்திற்கும், சாதிக்கும், மொழிக்கும் அப்பாற்பட்ட ஒரு 'உலகப்பொதுமறை' தந்தவர். அவருக்கு ஒரு குறிப்பிட்ட சமய அடையாளத்தைத் (காவி உடை, திருநீறு, முண்மணிக்காய் மாலை) திணிப்பது, அவருடைய உலகளாவிய பொதுக்கருத்தின் எல்லையைச் சுருக்க முயல்வதாகும். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இன்று நாம் பார்க்கும் சமயப் பிரிவுகளோ, குறியீடுகளோ கிடையாது. எனவே, அவருக்குப் பிற்காலச் சமய அடையாளங்களை வழங்குவது வரலாற்று அடிப்படையில் பொருத்தமற்றதாகும்.

அரசியல் அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் இத்தகைய படங்களைப் பயன்படுத்துவது, தமிழ்ப் பண்பாட்டின் அடையாளத்தைச் சுருக்கி இழிவுபடுத்தும் முயற்சியாகவே தெரிகிறது. சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய ஒரு பேரறிஞரை இழிவுபடுத்துவது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும் இரண்டு அமைச்சர்களும் பொறுப்பு ஆளுநர் அருலேகரின் இச்செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இரண்டு பொதுவுடைமைக் கட்சிகளும், ம.தி.மு.க.வும் பல தமிழ் அமைப்புகளும், குமுகஊடகங்களில் எழுதும் பலரும் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கும் முன்பு, 10-05-2026 அன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில், வழக்கமாகத் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைக்கு மாறாக, வந்தேமாதரம் என்ற சமற்கிருதப்பாடல் முதலிலும், தேசியப்பாடல் இரண்டாவதாகவும் பாடியபின்பு இறுதியாகவும் மூன்றாவதாகவும் தமிழ்வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. இதற்குப் பல கட்சிகளும் அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன.

மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநர்களின் இத்தகைய போக்குகளைப் பற்றியும் இவற்றிற்கு நிலையான தீர்வு காணவேண்டிய இன்றியமையாமையைப் பற்றியும் தமிழ் இளையோர் சிந்திக்கவேண்டும்.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின் – கு. 965 
                                                                             - த.ந.

(சூன் 2026 புதுவை 'நற்றமிழ்' இதழில் வந்தது) 

செவ்வாய், 16 ஜூன், 2026

நன்றியுரை!

 

                                                                நன்றியுரை!

=========================================================================

(விழுப்புரம் ‘மருதம்’ – 19ஆம் ஆண்டுவிழாவின் போது 16-01-26 அன்று ‘வாழ்நாள் தமிழ்ப்பணி மருதம் விருது’ தரப்பட்டதற்காக,  புதுச்சேரியில்  22-05-26இல் நடைபெற்ற தமிழ்மாமணி இறைவிழியனார் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் விழாவில் ‘நற்றமிழ் அறக்கட்டளை’யாரால் நடத்தப்பட்ட ‘பாராட்டு நிகழ்ச்சி’யில் ‘தமிழநம்பி’ ஏற்புரையாக ஆற்றிய நன்றியுரை)

==========================================================================

நற்றமிழ் நிறுவுநர், தமிழ்ப்போராளி, தமிழ்மாமணி, புலவர் மு.இறை விழியனார் அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் விழாவின் தலைவரும், ‘நற்றமிழ் அறக்கட்டளையின் தலைவருமான பேரன்பிற்கும் பெருமதிப்புக்குமுரிய பெ.மூர்த்தி ஐயா அவர்களே! தமிழ்வாழ்த்துப் பாடிய பைந்தமிழ்ப் பாவலர் இரா.இளமுருகனார் அவர்களே! இசைப்பாவினால் அனைவரையும் மகிழ்வித்த கலைமாமணி முனைவர் கா.இராசமாணிக்கம் ஐயா அவர்களே!  முன்னிலை வகிக்கும் பெரியோர்களே!

ரவேற்பரை நிகழ்த்திய நற்றமிழ் அறக்கட்டளையின் துணைத் தலைவர் திருவமை தாசுநிர்மலாசெகதீசன் அம்மையார் அவர்களே! நிகழ்வை ஒருங்கிணைக்கும் தொகுப்புரையர் தலைமையாசிரியர், இலக்கியச்சிந்தனையாளர் திரு.பு.விசாகன்அவர்களே! தமிழின் பெருமையை மீட்டெடுக்கும் ஈடெடுப்பற்ற மொழியாய்வர், சொல்லாய்வர், வேரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் அருளியார் அவர்களே!

தமிழ்மாமணி புலவர் மு.இறைவிழியனார் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் மலரை வெளியிட்ட  முதுபெரும் தமிழறிஞர் தெளிதமிழ் இதழாசிரியர் செ.இராமலிங்கன் ஐயா அவர்களே! மலரைப் பெற்றுக் கொண்ட பெரியோர்களே

அகத்தியர் புரட்டு நூலை வெளியிட்ட அறிவியல் அறிஞர் தாமரைக்கோ ஐயா அவர்களே! நூலைப் பெற்றுக்கொண்ட பெரியோர்களே!

நற்றமிழ்இணையதளம் அறிமுகம் செய் இருக்கும் புத்திலக்கிய ஈடுபாட்டாளர் நற்றமிழ் இதழின் துணையாசிரியர் சீனு. தமிழ்மணி ஐயா அவர்களே! இணையதள வடிவமைப்பாளர் சிவ.கோவிந்தன் ஐயா அவர்களே! 

நன்றியுரையாற்ற விருக்கும் பகுத்தறிவுத் தொண்டுச் செம்மல் திரு.கோ.மு.தமிழ்ச்செல்வன் ஐயா அவர்களே! 

ஐயா இறைவிழியனார் நினைவு நூலகம், நூலக வாசகர் வட்டம், அறக்கட்டளையின் திருக்குறள் தொடர் சொற்பொழிவுகள், நற்றமிழ் இணையதளம் ஆகியவற்றின் அரிய வினைப்பாடுகளில் துணையிருக்கும் பேருள்ளங்களே!  இந்த அரிய நிகழ்ச்சிக்கு அடிப்படையான உழைப்பாளராக இருந்து அரும்பணி யாற்றிவரும் செயலாண்மையும் அறிவாண்மையும் சான்ற பண்பாளர்நற்றமிழ்இதழின் பொறுப்பாண்மையர் செழியன் ஐயா அவர்களே! 

அவையிலுள்ள அறிஞர்களே!, பெரியோரே! தாய்மாரே! இளேயோரே! அனைவர்க்கும் என் பணிவான அகங்கனிந்த வணக்கம்.

நிறையநேரம் நான் பேசமாட்டேன். விரைவில் முடித்து விடுவேன்! அமைதிகாத்து செவிமடுக்கப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.   

     விழுப்புரம்மருதம்’ – என்ற அமைப்பின் மூலவர், தலைமை ஒருங்கிணைப் பாளர் இரவி கார்த்திகேயன் ஐயா, குமுகநயன்மை உணர்வும் தமிழ்மொழி ஈடுபாடும் தமிழ்ப் பண்பாட்டுச் சிந்தனையும் உடையவர். நான் பாவலரேறு ஐயாவிடம் கொண்டிருந்த தொடர்பு பற்றியும் புதுவையில் அருளி ஐயாவிடம் கொண்டிருந்த தொடர்பு பற்றியும் எல்லாம் அவர்க்குச் சரியாகத் தெரியாது. 

பதினேழு ஆண்டுகளுக்குமுன், அவரிடம், ‘தமிழ்க் கணிப்பொறிப் பயிலரங்குஒன்றை விழுப்புரத்தில் நடத்த உதவி செய்யவேண்டுமெனக் கேட்டேன். ஒப்புக் கொண்டார். புதுவை இரா.சுகுமாரன் ஐயாவும் இன்னும் பல அன்பர்களும் அரிய உதவிசெய்தனர். பயிலரங்கு விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி கணிப்பொறி ஆய்வுக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடந்தது. உலகதுரை ஐயாவும் பிறரும் உதவியாக இருந்தனர்.புதுவையில் இருந்தும் கூட சிலர் வந்து பயிலரங்கில் கலந்துகொண்டனர். அந்தப் பயிலரங்கிற்கு முழுமையாக ஒத்துழைத்து உதவியவர் இரவி கார்த்திகேயன் ஆவார்.

அதற்கும் முன்பாக, விழுப்புரத்தில் தமிழில் மரபுப்பா எழுதப் பயிற்சி தரும் பயிலரங்கு ஒன்றைப்பாடல் வளாகம்என உருவாக்கப்பட்ட அமைப்பின் சார்பில் நடத்தினேன். பாவலர் பாலதண்டாயுதம், காலஞ் சென்ற ஐயா விழுப்பரையனார், எழில். இளங்கோ, ஆசிரியர் கு.அண்டிரன் ஐயா, உலகதுரை ஐயா முதலிய அன்பர்கள் துணையிருந்தனர். நல்லுள்ளம் சோழன் ஐயா பள்ளியில் வகுப்புகள் நடந்தன. ஏறத்தாழ ஒன்றரை யாண்டுக்காலம் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்பு நடந்தது. தொடக்க நிகழ்விலும் நிறைவு நிகழ்விலும் யாப்பறிபுலவர் அரங்க. நடராசன் ஐயாவும் இந்திய அரசின் இலக்கியப் பரிசை இருமுறை பெற்ற தங்கப்பா ஐயாவும் கலந்து கொண்டனர். இறுதி நிகழ்வில்நற்றமிழ்ஆசிரியராக அப்போது இருந்த திருவமை அரியநாயகி அம்மையார் கலந்துகொண்டு பயின்றோர் அனைவர்க்கும் சான்றிதழ்களை வழங்கினார். இவற்றை யெல்லாம் பற்றி இரவி கார்த்திகேயன் நன்றாக அறிந்திருந்தார்.

     இடையில், ‘விழுப்புரம் தமிழ்ச்சங்கத்தை நிறுவி நடத்திவந்த தமிழ்உள்ளம் பாவலர் பாலதண்டாயுதம் ஐயா, விழுப்புரம் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருக்க வலியுறுத்தினார். பிறபணிகளில் ஈடுபடுவதால், என்னால் அந்த அளவு உழைப்பளிக்க இயலாதென்ற என் இயலாமையைத் தெரிவித்தபின், அந்த அன்புள்ளம் என்னை விழுப்புரம் தமிழ்ச்சங்கத்தின் துணைச் செயலாளர் என்றே தொடர்ந்து குறித்துவந்தார். என்னால் இயன்றவரை அவருக்கு நிகழ்ச்சிகளின் போதும் ஆண்டுவிழாக்க ளிலும் பிறநிலைகளிலும் உதவி வந்தேன். இவற்றையும் இரவிகார்த்தி கேயன் ஐயா அறிவார்.

என் துணைவியார் இறப்பிற்குப் பிறகு, 2017-இல் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.வி.சோமசுந்தரம் ஐயா, ந.சுப்பிர மணியன் என்ற பார்ப்பன அறிஞர் ஆங்கிலத்தில் எழுதிய “The Brahmin in the Tamil Country” என்ற ஆங்கில நூலை மொழிபெயர்த்து எழுதுவதில் உதவும்படி கேட்டார். அவர் அமராவதியில் படைத்துறை சார்ந்த ஆங்கிலப் பள்ளியில் பணிநிறைவு செய்தவர். அவருக்குத் தமிழ் சொற்றொடர் அமைப்பதில் சிக்கல் இருந்தது.

     ஒவ்வொரு நாளும் காலை பத்துமணி முதல் மூன்றரை மணிநேரம் ஏறத்தாழ நான்கு மாதங்கள் அந்த நூலை மொழிபெயர்க்க அவர்க்கு உதவிசெய்து தூயதமிழில் அந்த நூலை எழுதிக்கொடுத்தேன். அதற்காக அவர் தரமுன்வந்த பொருளுதவியையோ வேறு எந்த உதவியையோ ஒரு சிறிதும் ஏற்கவில்லை. ஆனால், நூலில் என் உழைப்பை அவர் முறையாக, சரியாகக் குறிப்பிடவில்லை என்பது வேறு செய்தி. அந்த நூல் விடுதலை அச்சகத்தில் அச்சாகும் போது சில தூய தமிழ்ச் சொற்களை மாற்றி அயல்சொற்களில் எழுதிவிட்டனர். எனினும் அந்த நூலில் எல்லா இடங்களிலும்  தூய தமிழ்ச்சொற்களை அவர்கள் மாற்றவில்லை என்பதை நூலைப் பார்த்தபோது தெரிந்தது. இந்தச் செய்திகளை நான்கூறக் காரணம் இவற்றை ஐயா இரவிகார்த்திகேயன் அறிந்திருந்தார் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்காகவே ஆகும்.

     அதன்பிறகு நான் ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்த்தஆபிரகாம் கோவூரின் நிகழ்வு ஆய்வுகள்என்ற நூலை புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில், திருவமை சுடர் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வின்போது ஐயா இரவி கார்த்திகேயன் ஐயா அவர்களே வெளியிட்டார்.

     2023-இல் விழுப்புரம் தமிழிளைஞர் கூட்டமைப்பின் கோ.பாபு, தினகர் அன்பழகன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பள்ளிப்பாடத்திட்டப்படி பாடநூலில் உள்ள தமிழிலக்கணங்களை விளக்கிச் சொல்லித்தரும் வகுப்பு நடத்தினேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மூன்றரைமணி நேரம் என முப்பத்து நான்கு வகுப்புகள் நடந்தன. அதனைத் தொடர்ந்தே அவர்களுக்கு உதவுவதற்காகவே, ‘தமிழில் பிழைநீக்கி எழுதுவோம்என்ற பெயரில் எழுதிய என் தொகுப்பு நூலை 2024-இல் விழுப்புரம் தமிழிளைஞர் கூட்டமைப்பு வெளியிட்டது. இதனையும் இரவிகார்த்தி கேயன் ஐயா நன்கு அறிவார்.

இக்கால், தூயதமிழ் மாத இதழான ‘நற்றமிழ்’ ஆசிரியர் பொறுப்பில் உழன்று வருவதையும் இரவிகார்த்திதேயன் ஐயா அறிவார்.

     இடையிடையே, நான் விழுப்புரத்திலுள்ளமருதம்உள்ளிட்ட இலக்கிய அமைப்புகளின் பாட்டரங்கங்கள், கருத்தரங்குகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வந்ததும் இரவிகார்த்திகேயன் ஐயாவுக்கு நன்கு தெரியும்.

இவற்றையெல்லாம் அறிந்திருந்த ஐயா இரவிகார்த்திகோயன்இந்தத் ஆள், தமிழநம்பி, தமிழ்,தமிழ் என்று ஏதாவது ஒரு நிலையில் தொடர்ந்து ‘;ழைப்பறித்துக் கொண்டிருக்கின்றான்என்று கருதிய காரணத்தால், என்னைமருதம்வாழ்நாள் தமிழ்ப்பணி விருதுக்காகத் தேர்ந்தெடுத்துச் சிறப்புச்செய்தார். அதற்காகவே, இங்கு இப்போது இந்தப் பாராட்டு நிகழ்வை நற்றமிழ் அறக்கட்டளையார் ஏற்பாடு செய்துள்ளனர்.     

என் நெஞ்சங்கனிந்த நன்றியை அறக்கட்டளைத் தலைவர் மூர்த்தி ஐயா அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பணிவோடு தெரிவித்துக் கொள்கின்றேன். 

     அரியதொரு தமிழ்ப்பாவில் வாழ்த்தியதுடன், பாராட்டுரையில் அளவுகடந்து பாராட்டிப் புகழுரை வழங்கிய ஆய்வறிஞர் பேரா.சிரியர் அருளியார்க்கும், சிறப்பாகப் பாராட்டி உரையாற்றிய திருவமை பூங்கொடி பராங்குசம் அம்மையார்க்கும், இதற்கு அடிப்படையானவரான செழியன் ஐயாவுக்கும் என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  

     பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் பாடுவார்:

"எதுவரை எம்மூச்சு இயங்குகின்றதோ, 

எதுவரை எம்முடல் இம்மண் தோயுமோ, 

எதுவரை எம்மனம் நினைவலை எழுப்புமோ, 

அதுவரை மொழியின ஆர்ப்படங்காது!" -------- என்பார்.

     என்னால் இயங்க இயலும் வரை தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன் களுக்காக இயங்குவேன் என்ற உறுதியுடன் என் உரையை முடிக்கின்றேன். நன்றி. (புதுச்சேரி 22-5-26)                                                                                                                   -------------------------------------------------------------------------------------------------------------