புதன், 26 ஆகஸ்ட், 2026

தமிழரின் கல்வி பற்றிய சுருக்க வரலாறும்- இன்றைய இக்கட்டு நிலையும்!

 

தமிழரின் கல்வி பற்றிய சுருக்க வரலாறும்- இன்றைய இக்கட்டு நிலையும்!



‘கல்வி’ என்னும் சொல் ‘கல்’ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது என்பர். ‘கல்’ என்பதற்குத் ‘தோண்டு’, ‘அகழ்’ என்று பொருள். தோண்டத்தோண்ட ஊற்று நீர் பெருகுவது போல, [TN1] கற்கக் கற்க அறிவு வளரும் என்பதால் இப்பெயர் என்றும் விளக்குவர்.

திருவள்ளுவரும் ‘தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு’ என்று விளக்கியுள்ளார். வரலாற்றுத் தொடக்கத்திலிருந்து இன்று வரை தமிழர்தம் கல்வியில் பல ஏற்றஇறக்கங்களைக் கண்டு வந்துள்ளனர். ஆனால், இக்காலத் தமிழரின் கல்விநிலை முன் எப்போதும் இல்லாத இரங்கத்தக்க நிலையாக உள்ளது என்பதே உண்மை.

இக்கால் தமிழர்க்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களிலேயே மிகப் பழமையதாகிய தொல்காப்பியம் ஈராயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். இது, முழுமையான இலக்கண, இலக்கிய நூல் மட்டுமன்று, அதற்கு முந்தைய காலத் தமிழ்நாட்டின் கல்விநிலையைக் காட்டும் அரிய கண்ணாடியுமாகும்.

தொல்காப்பியர் தாம் புதிதாக ஒன்றைப் படைப்பதாகக் கூறாமல், ஏற்கெனவே நிலவிய மரபைத் தொகுத்துத் தருவதாகவே பல இடங்களில் தெரிவிக்கிறார்: என்ப, என்மனார், என்றிசினோரே முதலிய தொடர்கள் பல நூற்பாக்களில் உள்ளன. பலஇடங்களில் காணப்படும் மரபு என்ற சொல்லும் மரபியல் என்றே உள்ள இயலின் பெயரும், ‘நூல்’ என்பதற்குத் தரும் விளக்கமும் தொல்காப்பியத்திற்கு முன்பே இருந்த நீண்டகால கல்விமரபைக் கூறுகின்றன. தொல்காப்பியப் பாயிரம் கூறும், “முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்தோனே” என்ற தொடரும் சான்று

கூறுகின்றது.

தொல்காப்பியத்திற்கு முன்னரே மொழி, இலக்கணம், செய்யுளியல், கணக்கு, வானியல், ஏரணம் (தருக்கம்), இசை, நாட்டியம் முதலிய பல துறைகளில் ஒரு முதிர்ந்த கல்வி மரபு இருந்துள்ளதை அந்நூலின்வழியே அறிய முடிகிறது. எனவே, தொல்காப்பியம் கல்வியின் “தொடக்கம்” அன்று; மாறாக, முன்னரே இருந்த வளமான கல்வி, இலக்கண மரபுகளின் அடித்தளத்தில் உருவாக்கிய ஒரு நூல் ஆகும்.

பண்டைத் தமிழகத்தில் கல்வி விரிவாக மக்களிடம் பரவி இருந்தது என்பதற்கான சான்றுகள் பெருமளவில் கிடைத்துள்ளன. வெவ்வேறு பகுதிகளில், வேறுபட்ட இடங்களில் நடைபெற்ற பல அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள நூற்றுக்கணக்கான பானை ஓடுகளில்

பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள், தமிழ்நாட்டில் பரவலாக மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கான அடிப்படைச் சான்றுகளாக அமைகின்றன. பல்வேறு குமுகப் பின்னணியினர் கல்விகற்றதற்கான சான்றுகள், கல்வி பொதுவானதாகவும், மிகத் தேவையானதாகவும் கருதப்பட்டதைக் காட்டுகின்றன.

கீழடி அகழ்வாய்வு கி.மு. 600 அளவிலேயே பழந்தமிழ்க் குமுகத்தில், பரந்துபட்ட அளவில், அனைத்துப் பிரிவு மக்களும் கல்வியறிவு பெற்றிருந்ததை உறுதிசெய்கிறது. தமிழகத்தில் கொடுமணல் போன்ற இடங்களில் நடந்த அகழாய்வுகளும் அதனை உறுதிசெய்கின்றன.

“கழக(சங்க)க் காலத்தில், மொழி, இலக்கியம், இலக்கணம், அறம், மருத்துவம், வானியல், வாணிகம், இசை, கூத்து, கணக்கு, அரசியல், போரியல், இயற்கை உள்ளிட்ட பலதுறைகளில் தமிழரின் கல்வியறிவு சிறந்திருந்தது. கற்றல் குறித்தும் அதன் தாக்கங்கள் குறித்தும் பண்டைய தமிழ் மக்கள் தெளிவாக அறிந்திருந்ததைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று (183) தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. கழகக்காலப் பெண்களில் புலமை உடைய பாவலர்களாக நாற்பதுக்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். குறத்தி, குயத்தி, வேட்டுவச்சி, காவற்பெண்டு போன்ற எளிய நிலையில் இருந்த பெண்களும் கற்ற புலவர்களாக இருந்தனர்.

“இந்து நாளிதழ், 24.6.2010 -இல், தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், கழக(சங்க)க்காலத் தமிழகத்தில், மிகப் பரந்த அளவில், எளிய மக்களும் கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறார். ஒதுக்குப்புற சிற்றூர்ப் பகுதியில் வாழும்

கள்விற்பவர் கூடத் தமது பானையில் தம் பெயரை எழுதி வைக்கும் அளவு தமிழகம் பரந்த அளவிலான கல்விஅறிவைக் கழக(சங்க)க்காலத்தில் கொண்டிருந்தது என்பதை எடுத்துக்காட்டுகளோடு அவர் விளக்குகிறார்” என்று வரலாற்று ஆசிரியர் கணியன்பாலன் எழுதுகிறார்.

“சேவியர் தனிநாயகம் அடிகளார் [TN2] அன்றைய கல்வி, கற்பவனைச் சான்றோன் ஆக்கியது; அவனை உலக வாழ்வுக்குத் தகுதிப்படுத்தியது; கற்றோர் அவையிலும், ஊர்ப்பொது மன்றங்களிலும் முந்தியிருக்கச் செய்தது; அது, வாழும் உலகை அதன்

இன்பங்களை உறுதிப்படுத்துவதாக இருந்தது; மனித ஆற்றலில் விளங்கும் தன்னிறைவையும், குழந்தைகளின் மீதான அன்பு, இல்லறத்தின்மீதான பற்று, காதல்செய்ய, மணம்புரிய, இல்லறம்பேண, பொதுநலம் பேணி பிறர்க்கென வாழ இக்கல்வி கற்போரைத் தகுதிப்படுத்தியது. தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பொதுவாழ்வைக் கல்வி பரிந்துரைத்தது என்கிறார்” எனவும் கணியன் பாலன் எடுத்துக்காட்டுகின்றார்.

கழகக்காலத்திற்குப் பின், களப்பிரர் காலத்தில் புத்த சமணப் பள்ளிகள் கல்வியை வழங்கின. அது, அற இலக்கியம், பாவியங்களின் (காப்பியங்களின்) காலமாக இருந்தது; பின்னர்ப் பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி நகரமாக இருந்தது. கடிகைகள், மடங்கள், கோயில்கள் சார்ந்தவையாகக் கல்வி நிறுவனங்கள் இருந்தன. தமிழ், சமற்கிருதம் ஆகிய இருமொழிக்கல்விக் காலமாக அஃது இருந்தது.

அதன்பின், பிற்காலச் சோழர்கள் காலம், மிக முறையான, நிறுவனவயமாக்கப்பட்ட, நிதி உறுதி செய்யப்பட்ட கல்வி முறைக்குச் சிறந்த சான்றாக விளங்கியதைக் கல்வெட்டுகள் விரிவாகப் பதிவு செய்துள்ளன: திருமுக்கூடலில் மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவக் கல்வி வழங்கப்பட்டது. திருப்புவனையில் முகன்மைக் கல்வி நிறுவனம் இருந்தது. சிவனிய, மாலிய மடங்கள் மதக் கல்வியை வழங்கின. தமிழ், சமற்கிருதம், மறை (வேதம்), இலக்கணம், தருக்கம், கணக்கு, வானியல், (சித்த)மருத்துவம், அறம், சட்டம், சமயம் முதலிய பலதுறைகளில் கல்வி வழங்கப்பட்டது.

பின்னர்ப் பாண்டியர் மறுமலர்ச்சிக்காலத்தில் மதுரையை நடுவமாகக் கொண்டு தமிழ் இலக்கியக்கல்வி தொடர்ந்தது. தமிழ் இலக்கியங்கள் உருவாக்கம், உரை எழுதுதல், நூல்களைப் பாதுகாத்தல் ஆகியவை கல்வியின் முகன்மையான பகுதிகளாக இருந்தன.

அதன்பின், நாயக்கர் ஆட்சிக் காலத்தில், தெலுங்கு, சமற்கிருதக் கல்வி மேலோங்கியது. இக் காலத்தில் தமிழ், தெலுங்கு, சமற்கிருதம், சமயம், இலக்கணம், இலக்கியம், கணக்கு, வாணிகம், மருத்துவம் ஆகிய துறைகளில் கல்வி வழங்கப்பட்டது. கல்வி பெரும்பாலும் மடம், கோயில், திண்ணைகளில் தனியார் துணைதரவு சார்ந்து இருந்தது. உயர்கல்வி குறிப்பிட்ட குமுகங்களுக்கு மட்டும் இருந்தது.

ஆர்க்காட்டு நவாபு ஆட்சிக் காலத்தில் அரபு, பாரசீக மொழிகளும், கணக்கும் கற்பிக்கப்பட்டன. மராத்தியர் ஆட்சிக்காலத்தில், தஞ்சை சரசுவதி பெருங்கூட நூலகம் போன்ற நிறுவனங்கள் அறிவு நூல்களையும் கையெழுத்து நூல்களையும் பாதுகாப்பதில் முதன்மைப்பங்கு ஆற்றின.

கைவினைஞர்கள், நெயவாளர்கள், கற்றச்சர்கள், மருத்துவர்கள் (சித்தமருத்துவம்), உழவுத்தொழிலர், வாணிகர் போன்றோரின் குடும்பங்களில் கல்வியும் தொழிலும் தலைமுறை தலைமுறையாக வீடுகளிலேயே கற்பிக்கப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முந்தைய காலத்தின் திண்ணைப் பள்ளிக் கூடங்களில் நடந்த அடிப்படைக் கல்வியில், வாசிப்பு, எழுதுதல், கணக்கு, மனப்பாடப்பயிற்சி, அறநூல்கள், வாணிகக் கணக்கு முதலியவை கற்பிக்கப்பட்டன. ‘தாமசு மன்ரோ’ நடத்திய ஆய்வில் மதராசு மாநிலத்தில் ஒவ்வொரு சிற்றூரிலும் திண்ணைப் பள்ளி இருந்ததும் பிற மாநிலங்களைவிட இங்குத் தொடக்கக் கல்வி கற்றவர்களின் விழுக்காடு அதிகமாக இருந்ததும் தெரிந்தது. மதராசு மாநிலத்தில் மட்டும் ஏறத்தாழ 11,575 முதல் 12,498 திண்ணைப் பள்ளிகள் இருந்தன; 1.5–1.8 இலக்கம் மாணவர்கள் பயின்றனர் என்றும் தெரிந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மரபுவழிக்கல்வி முறையிலிருந்து பள்ளி–கல்லூரி–பல்கலைக்கழக அமைப்புக்கான மாற்றம் நிகழ்ந்தது. ஆங்கிலக் கல்வி, அறிவியல் கல்வி, அச்சு நூல்கள், பல்கலைக்கழகங்கள், புதிய பாடத்திட்டம் ஆகியவை வளர்ந்தன.

கிறித்துவ மதப்பரப்புக்குழுவினர் (missionaries) பள்ளிகளைத் தொடங்கி நடத்தினர். ஏழைகள், ஒடுக்கப்பட்ட குமுகக் குழந்தைகள், பெண்கள் கல்விபெற சிறப்புப்பள்ளிகளில் தமிழ் தொடர்ந்து பயிற்றுமொழியாக இருந்தது. எனினும், 1835-இல் மெக்காலே அறிக்கையின்படி, உயர்கல்வியும், அரசு வேலைவாய்ப்புக்கான கல்வியும் ஆங்கில வழியில் கட்டமைக்கப்பட்டன. தமிழ் ஒரு பாடமொழியாயிற்று. 1857-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது., மாநிலக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, அறிவியல், சட்டம் பயிற்றும் கல்லூரிகள் முதலியவை உயர்கல்வியின் நடுவங்களாக உருவெடுத்தன.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகமாகியது. சிற்றூர்களிலும் தொடக்கப்பள்ளிகள் உருவாகத் தொடங்கின. நகரங்களில் ஆங்கிலவழிக் கல்வி வழங்கும் உயர்நிலைப் பள்ளிகள் வளர்ந்தன. பெண்களுக்கான பள்ளிகள் படிப்படியாக உருவாயின.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி குமுக மாற்றத்திற்கான கருவியாகவும் மாறியது. நயன்மை (நீதி)க் கட்சி ஆட்சி, 1920-இல், முதன்முதலில் கட்டாயத் தொடக்கக்கல்வியைச் சட்டம் ஆக்கியது. மாநகராட்சிப் பள்ளியில் முதன்முதலாகப் பகலுணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டில் சென்னை, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் கல்வி நிறுவனங்கள் வளர்ந்தன. தமிழையும் கலைகளையும் வளர்க்கும் நோக்கில் சிதம்பரத்தில் 1929-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. 1930-ஆம் ஆண்டுகளில் ஊர்மக்கள் உள்ளூர்மொழி இதழ்கள் படிக்கும் அளவுக்கு எழுத்தறிவு உயர்ந்தது.

1937-இல் அமைந்த பேராயக்கட்சி (காங்கிரசு) அரசில் இராசகோபாலாச்சாரி பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது.

1947-இல் ஆங்கிலேயர் வெளியேற்றத்திற்குப் பின், மதராசு மாநில எழுத்தறிவு உயர்ந்திருந்தது. 1952-இல் தமிழ்நாட்டு முதலமைச்சரான இராசகோபாலாச்சாரி 1953-இல் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்ததோடு பல பள்ளிகளை மூடினார். 1954-இல் ஆட்சிக்கு வந்த காமராசர் மூடிய பள்ளிகளைத் திறந்ததோடு புதிய பள்ளிகளையும் திறந்தார். இலவயக் கல்வியையும் பகலுணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். 1960-களில் இருந்தே ஏழை மாணவர்களுக்கு 11-ஆம் வகுப்பு வரை இலவயக் கல்வி வழங்கப்பட்டது

1965-இல் இந்திமொழி கட்டாயத் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் எழுந்தன. இதன் விளைவாக அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனதும் 1968-இல் தமிழ்நாடு இருமொழிக் கொள்கை (தமிழ் + ஆங்கிலம்)யைப் பின்பற்றும் என்ற தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். ஐந்து ஆண்டுகளுக்குள் எல்லாக் கல்லூரிகளிலும் தமிழ் மூலமே பயிற்றுவிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்; அரசின் எல்லாத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் விரைவுபடுத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

1968-இல் தேசியக் கல்விக் கொள்கை மும்மொழித் திட்டத்தை (தாய்மொழி + இந்தி + ஆங்கிலம்) பரிந்துரைத்தபோது, தமிழ்நாடு அதை ஏற்கவில்லை. இருமொழிக் கொள்கையே தொடர்ந்தது. 1969-இல் இருந்து மாணவர்களுக்கு இலவயச் சீருடை வழங்கப்பட்டது.

1971-இல் தமிழ்நாட்டரசு கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 31%, பட்டியலினத்தார்க்கு 18% என இட ஒதுக்கீட்டை உயர்த்தியது. 1980-இல் ம.கோ.இரா (எம்.சி.ஆர்) அரசு பிற்படுத்தப் பட்டோருக்கு 50% என்றும் மொத்தம் 69% (பி.ப 30%, மி.பி.ப/சீ.ம 20% , ப.இ 18%, ப.கு 1%,)

என்றும் உயர்த்தியது. 1993-94 சட்டம் மூலம் 9-ஆவது பட்டியலில் சேர்க்கப்பட்டு இவ் ஒதுக்கீடு நயன்மன்ற வழக்குகளில் இருந்து பாதுகாக்கப்பட்டது.

இடையில், இந்தியாவில் பேராயக் கட்சி நெருக்கடி நிலை கொண்டுவந்த காலத்தில், 1976-இல் இந்திராகாந்தி அரசு, முழுக்க முழுக்க மாநில அரசுகளின் அதிகார வரம்பில் இருந்த கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றிக்கொண்டது.

காமராசர் காலத்தில் தொடங்கிய பகலுணவுத் திட்டத்தை ம.கோ.இரா (எம்.சி.ஆர்) 1982-இல் விரிவுசெய்து, முட்டை, பழம் போன்றவற்றைச் சேர்த்து, ஊட்ட உணவுத் திட்டம் ஆக்கினார்.

இராசிவுகாந்தி கொண்டுவந்த 1986 தேசிய கல்விக் கொள்கையில் (NEP-1986) மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தித்திணிப்பு இருந்ததால் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்தது. இந்தியைத் திணிக்கும் ‘நவொதயா’ பள்ளிகளையும் தமிழ்நாடு ஏற்கவில்லை. ம.கோ.இரா. அரசு, இருமொழிக் கொள்கையைச் சட்டம் இயற்றி உறுதி செய்தது.

1989–1991: பள்ளிகளில் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி என்ற மூன்றடுக்கு அமைப்பு படிப்படியாக வலுப்பெற்றது. 2001–2006-இல் தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளின் வளர்ச்சி அதிகமாகியது.

2006-இல் தமிழ்நாட்டரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்றியது. 2010-இல் சமச்சீர் கல்வி வழி எல்லாப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் உறுதிசெய்யப்பட்டது. நுழைவுத் தேர்வை நீக்கி 2007 முதல் +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்தது. உயர்கல்வியில் மொத்த சேர்க்கைத் தகவு (GER) இந்திய நிரவளவை விட அதிகமாயிற்று.

2011–2021: அதிமுக ஆட்சிக்காலத்தில் விலையில்லா மடிக்கணினி, சீருடை, பாடப்புத்தகங்கள், மிதிவண்டி, கல்வி உதவித் தொகைகள், பள்ளி உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் செயல்பட்டன.

2020 - தேசிய கல்விக் கொள்கை (NEP 2020): இந்தி, சமற்கிருதத்தைத் திணிப்பதால் அதை ஏற்க மறுத்ததால், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்படி, (சமக்கிரா சிக்குசா அபியான்) தமிழ்நாட்டிற்கு 2024-25 ஆம் ஆண்டிற்கு வழங்க வேண்டிய நிதி உருவா 2,152 கோடி தரப்படவில்லை.

ஒன்றிய அரசு பி.எம்சிரி (PM SHRI - மாதிரிப் பள்ளித் திட்டம்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாட்டைப் பலமுறை வலியுறுத்தியது. 2025 சனவரி நிலையின்படி கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் பி.எம்.சிரி-யை நடைமுறைப்படுத்தாததால் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (சமக்குரா சிக்குசா) நிதி தரப்படவில்லை.

மு.க.இசுதாலின் ஆட்சியில், பள்ளிகளில் காலை உணவுத் திட்டமும், மாணவமாணவிகள் உயர்கல்விக்குச் செல்வதை ஊக்குவிக்கும் திட்டங்களும் செயற்படுத்தப்பட்டன.

திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் தமக்குள் அரசியல் போட்டி இருந்தாலும், கல்வி, மொழி, இடஒதுக்கீடு ஆகியவற்றில் பெரும்பாலும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. இந்திய தேசிய பேராயம், பா.ச.க. ஆகிய இரண்டுமே கல்வியில் தமிழர்க்கு எதிரான போக்கைக் கொண்டவை என்பதே உண்மையாக இருந்துவருகின்றது.

இப்போதைய இக்கட்டுகளுள் ஒன்று ‘தேசிய தேர்தகவு நுழைவுத் தேர்வு’ (National Eligibility cum Entrance Test - (NEET) என்பதாகும். இது. இந்தியா முழுவதிலும் மருத்துவம், பல்மருத்துவம், மரபார்ந்த மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர நடத்தப்படும் ஒரே பொது நுழைவுத் தேர்வாகும். 2018 - வரையில் ‘நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்’ (CBSE) இந்தத் தேர்வை நடத்தியது. 2019 – முதல் தேசியத் தேர்வு முகமை (National Testing Agency - NTA) இத் தேர்வை நடத்தி வருகிறது.

பொதுவாகப் பலதேர்வுகள் எழுதும் சுமை குறைவு என்றும், ஒரே இந்திய தகை (தர) நிலையை உருவாக்குகிறது என்றும், தகுதி அடிப்படையிலான முறையை இத் தேர்வு உறுதி செய்கிறது என்றும் கூறப்படுகின்றன. ஆனால், இத்தேர்வு நகர்ப்புறத்தில் கட்டணம் என்றபெயரில் பெருந்தொகைகளைக் கொள்ளையடிக்கும் தனியார் பயிற்சி நடுவங்கள் கொழுக்க வழி வகுத்துள்ளது. இத்தேர்வில் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தை ஒட்டியே வினாக்கள் இடம்பெறுவதால், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்க்குப் பின்னடைவாக உள்ளது. இவற்றால், சிற்றூர் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை எட்டாக்கனியாக்கிவிட்டது. இக் காரணங்களால் மாணவர் மனஅழுத்தத்திற்கு ஆளாயினர். சிலர் வாழ்வு தற்கொலையில் முடிந்தது. இந்தியஅரசு, சமன்மையின்மையில் இத் தேர்வை நடத்துகின்றது என்ற தெளிவான குற்றச்சாட்டு உள்ளது. எனவேதான், இத்தேர்வைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்துவரும் தமிழ்நாடு இத் தேர்விலிருந்து விலக்குக் கோரி வருகிறது.

இந்த நிலைகளுடன் நடத்தப்படும் இத்தேர்வில் கொடுமை என்னவென்றால், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் அடிக்கடி நிகழ்வதாகும். 2015 - இல் பத்து மாநிலங்களில் கருவிகள் மூலம் விடைகள் அனுப்பப்பட்ட மோசடி வெளிப்பட்டு, தேர்வு மீண்டும் நடத்தப்பட்டது. 2016-இல் மாநிலங்களுக்கிடையே வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2017-இல் 2008-2012 காலக்கட்டத்தில் மோசடி மூலம் சேர்க்கை பெற்ற 634 மருத்துவர்களின் பட்டங்களை உச்ச நயன்மன்றம் “பாரிய மோசடி” என்று கூறி நீக்கியது. 2018-இல் வினாத்தாள் மொழி பெயர்ப்புச் சிக்கல்; ஒரு பயிற்சி நிறுவனம் மோசடியில் ஈடுபட்ட வழக்கு! 2019-இல் ஆள்மாறாட்டக் கும்பல் கண்டுபிடிப்பு; உதித்து சூரியா உள்ளிட்ட வழக்குகள்!

2021-இல் வேறு ஆட்களைத் தேர்வு எழுத வைத்த ஆள்மாறாட்ட மோசடி! 16 மாணவர்களின் முடிவுகள் செல்லாதவையென தேர்வுமுகமை அறிவிப்பு! 2022 - இல் தில்லி அரியானா ஆள்மாறாட்ட வழக்குகள்! 2023-இல் சில இடங்களில் மோசடி முறையீடுகள்! 2024-இல் பீகார், சார்கண்டில் வினாத்தாள் கசிவு! 67-மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், சிலர் கணக்கியல் அடிப்படையில் பெறவே முடியாத மதிப்பெண்கள் பெற்றதும் சிக்கலை அதிகமாக்கியது. அத்துடன் ‘பரிவு மதிப்பெண்’ கோளாறு! – மாணவர் போராட்டங்கள்; உச்சநயன்மன்ற உசாவல்கள்! நடுவண் புலனாய்வு அமைப்பு (CBI) 50 பேரைத் தளைப்படுத்தல்!

2026-இல் முன்கூட்டிப்பரவிய ‘கணிப்பு வினாத்தாள்’ உண்மை வினாத்தாளுடன் ஒத்துப்போனதால் தேர்வு செல்லாததாக்கப்பட்டது! 45 பேர் தளைப்படுத்தப்பட்டனர். மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் துயரத்திற்கும் இது வழிவகுத்தது.

இத்தகைய போக்குகளால் மனஅழுத்தமுற்ற மாணவர்களும் படித்துப் பட்டம் பெற்றும் வேலையின்றி உழலும் இளைஞர்களும் அண்மையில் தில்லி ‘சந்தர்மந்தர்’ திடலில் ‘கரப்பான்பூச்சி சனதாக்கட்சி’த் தலைமையில் தே.தே.நு.தேர்வை (NEET) நேர்மையாக நடத்தவும், கல்வி அமைச்சர் தருமேந்திர பிரதான் பதவி விலகவும் வலியுறுத்தி மிகப் பெருமளவில் திரண்டு முப்பது நாள்களுக்கும் மேல் போராட்டம் நடத்தினர். ஒன்றியக் கல்வி அமைச்சர் பதவி விலகியதைக் கண்டோம். கல்வியும் தேர்வுகளும் இந்திய நாட்டில் இப்படித்தான் இருக்கின்றன.

இன்று தமிழருக்கு நேர்ந்துள்ள மிக முகன்மையான பேரிக்கட்டாகத் தமிழ்நாட்டில் தாய்மொழிவழிக்கல்வி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவரும் நிலை உள்ளது. தமிழ்வழிக்கல்வி இல்லாத நிலை தமிழ், தமிழரின் எல்லா நிலைத் தாழ்ச்சிக்கும் காரணமாக இருந்துவருவதைத் தமிழ்நாட்டு ஆட்சியாளரும், தமிழ்மக்களும் உணராதிருப்பது பெருங்கேட்டிற்கு வழிவகுக்கும் நிலையாக உள்ளது.

களப்பிரர் காலத்திலும் சமணம், புத்தம் ஓங்கியிருந்த காலத்திலும் தமிழே கல்வி மொழியாக இருந்தது. புத்தப் பள்ளிகளான ‘விகாரை’களிலும் தமிழே பயிற்றுமொழியாக இருந்தது. பல்லவர் காலத்தில் தொடக்கக்கல்வி தமிழிலும் மறை (வேதம்) மெய்யியல் (தத்துவம்) முதலியவற்றில் உயர்கல்வி சமற்கிருத மொழியிலும் காஞ்சிபுரத்தில் கற்பிக்கப்பட்டது.

பின்னர்ச் சோழர்காலத்தில் நிகண்டு, இலக்கணம், அறநூல்கள், கம்பராமாயணம், பெரியபுராணம், பத்தி இலக்கியங்கள் முதலியவற்றைத் தமிழில் கற்றனர். “எண்ணாயிர“த்திலும் வேறுசில இடங்களிலும் சமற்கிருத ‘வேதக்’ கல்லூரிகள் இருந்தன. பிற்காலப் பாண்டியர் காலம், தமிழில் சமயம், இலக்கியம், பத்திநூல்கள், உள்ளூர் மேலாண்மை முதலியவை கற்பிக்கப்பட்ட காலமாகும்.

விசயநகரத்தார் கீழிருந்த நாயக்கர் காலத்திலும், நாயக்கர் தனிஅரசு காலத்திலும் தெலுங்குக்கும், சமற்கிருத மறை(வேத)க் கல்விக்குமே அவர்கள் துணையிருந்தனர். சிற்றூர்கள்தோறும் திண்ணைப்பள்ளிகள் தமிழில் கல்வி பயிற்றின. தமிழ், கணக்கு, அறநூல்கள் தமிழில் கற்பிக்கப்பட்டன. மராத்தியர் காலத்தில் கல்வித்துறையில் தமிழுடன் மராத்தி, தெலுங்கு, சமற்கிருதமும் சேர்ந்திருந்தன.

ஆங்கிலேய ஆட்சிக்கு முன்னர்த் திண்ணைப்பள்ளிகள், கோயில்கள், மடங்களில் தமிழ்வழியில் உள்ளூர்க் கல்விமரபு இருந்தது. கிறித்துவ விடையூழியர்கள் (மதப்பரப்புநர்) தமிழில் அறிவியல், நிலத்தியல், கணக்கு முதலிய பாடங்களுக்கு நூல்கள் உருவாக்கிப் பள்ளிகளில் தமிழ்வழியில் பயிற்றினர். ஆங்கிலேய ஆட்சியில், சார்லசு உட்டு அறிக்கையின் படி, தமிழ்ப் பகுதிகளில் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழியாக அதிகார அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1947–1960ஆம் ஆண்டுகளில், அரசுப்பள்ளிகளில் முகன்மையாகத் தமிழ்வழிக் கல்வி இருந்தது; தமிழில் பாடப்புத்தகங்கள், வாசிப்பு நூல்கள், அறிவியல் நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன. முறைசார்ந்த பள்ளி அமைப்பினால், திண்ணைப் பள்ளிகள் படிப்படியாக மறைந்தன. தொடக்கக் கல்வியில் தமிழும் இடைநிலைக் கல்வியில் தமிழும் ஆங்கிலமும் உயர்கல்வியில் ஆங்கிலமும் பயிற்று மொழிகளாயின. உயர்கல்வியில் ஆங்கிலமே பயிற்றுமொழி. தமிழ் ஒரு பாடமாக மட்டுமே இருந்தது. உயர்வகுப்பார் ஆங்கிலவழியை விரும்பினர்.

1920-இல் நயன்மைக்கட்சி ஆட்சியில் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. அரசுப்பணிகளுக்கு ஆங்கில அறிவு கட்டாயமாக்கப்பட்டதால், மேல்நிலைக் கல்வி ஆங்கிலத்திற்கு மாறத்தொடங்கியது. மக்களிடையே தமிழ்வழிக் கல்வியை விட ஆங்கில வழிக் கல்விக்கே அதிக வரவேற்பு ஏற்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின்னும் ஆங்கிலேயர் காலக் கொள்கை தொடர்ந்தது. தொடக்கப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழியாக இருந்தது. இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழும் ஆங்கிலமும் இருந்தன. கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமே பயிற்று மொழி. 1960–61இல் கல்லூரியில் இளங்கலைப் பாடங்களுக்குத் தமிழ் பயிற்றுமொழியாக்கப்பட்டது.

1965-இல் பெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இது கல்விக் கொள்கையிலும் தாக்கம் ஏற்படுத்தியது. கல்லூரிகளில் ஆங்கிலம் தொடர்ந்தது. தமிழ்வழிப் படிப்பு ஆய்வு முறையில் விரிவடைந்தாலும், முழுமையாக மாறவில்லை. 1968-இல் அண்ணா சட்டமன்றத்தில் ஐந்து ஆண்டுகளுக்குள் எல்லாக் கல்லூரிகளிலும் தமிழ் மூலமே பயிற்றுவிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் அவர் காலத்திற்குப் பிறகும் நிலைமை மாறவில்லை.

1978-ஆம் ஆண்டு வரை, ஆங்கிலவழிக்கல்வி தரும் 34 பதின்மப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. 1980-களுக்குப் பின் ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகளான தனியார் பதின்மப் பள்ளிகள் (Private Matriculation Schools) பெருமளவில் தொடங்கப் பட்டன. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் (CBSE) பள்ளிகளும் பெருகின. செயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி, அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கிலவழிப் பிரிவுகளை அறிமுகப்படுத்தியது. தி.மு.க. அரசும் அதையே பின்பற்றியது. 1990 – 2000-த்தில் சிறிய நகரங்களிலும் சிற்றூர்களிலும் ஆங்கிலவழிப் பள்ளிகள் மிகப் பெரிய வாணிக வளர்ச்சியைக் கண்டன. அரசுப் பள்ளியில் படிக்கும் சிற்றூர்ப்புற மாணவர்கள் உள்ளிட்ட பெரும்பாலோர் இன்று ஆங்கிலவழிப் பிரிவுகளிலேயே சேர்கின்றனர். தமிழ்வழிக்கல்வி, இவ்வாறு ஆட்சியாளர்களாலும் போலிநம்பிக்கையும் பொய்ப்பெருமையும் நாடிய தமிழப் பெற்றோர்களாலும் சிறுமையுற்றது.



தமிழின் வளர்ச்சிக்கும் தமிழரின் முன்னேற்றத்திற்கும் அருமருந்தெனத்தக்க தமிழ்வழிக்கல்வியின் வீழ்வால் இன்று தமிழே தெரியாத தமிழர் தலைமுறைகள் உருவாகத் தொடங்கிவிட்டன. இந்நிலையே தமிழருக்கு நேர்ந்துள்ள பேரிக்கட்டு நிலையாகும்! தமிழர்

அடையாளமிழந்த கூட்டம் ஆகக்கூடிய இக்கட்டு நேர்ந்துள்ளது. இது யாரால் எப்போது எவ்வாறு சீர் செய்யப்படும் என்று தெரியவில்லை. தமிழ் இளையோர் சிந்திக்கவேண்டும். தக்க திட்டத்துடன் சீர் செய்ய முனைய வேண்டுமென நற்றமிழ் ஆழ்ந்த கவலையுடன் கேட்டுக்கொள்கின்றது.



சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டூன்றும் களிறு. - கு.5977.



கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்

பெருமையிற் பீடுடைய தில். -கு.1021.

- த.ந

                 (நற்றமிழ் தி.ஆ.2057 மடங்கல் (2026, ஆகத்து) இதழில் வந்தது)                                    .



வியாழன், 6 ஆகஸ்ட், 2026

ஒற்றைத்தன்மைத் திணிப்பு!

 

ஒற்றைத்தன்மைத் திணிப்பு!


இந்தியா என்று இப்போது அழைக்கப்படும் இந் நாடு, ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் (அதாவது கி.பி. 1600-க்கு முன்பு), இன்று நாம் பார்ப்பதுபோல ஒரேநாடாக இருக்கவில்லை. பல்வேறு பேரரசுகள், சிற்றரசுகள், குறுநில மன்னர்களால் ஆளப்பட்ட ஒரு துணைக்கண்டமாக இருந்தது. பல மொழி, பல பண்பாட்டுக் குமுக மக்கள், அவர்களின் மொழி, நிலப்பரப்பு, இனத்தின் அடிப்படையிலேயே அடையாளப்படுத்திக் கொண்டனர். அவர்களில் முகன்மையாகப் பின்வரும் இனக்குழுக்கள் வலுவாக இருந்தன:

                சேர, சோழ, பாண்டிய மரபுகளின் வழிவந்த தமிழர்கள் தெற்கில் அவர்கள் நிலப்பரப்பில் வாழ்ந்தனர். சேரநாட்டுக் கடற்கரைப் பகுதிகளில் (கேரளா-மலபார்) மலையாளிகள் இருந்தனர். தெலுங்கர்கள் இன்றைய ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளிலும், காக்கத்தியர், நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்தனர். கன்னடர்கள் மைசூர், கர்நாடகப் பகுதிகளில் வாழ்ந்தனர். மராட்டியர்கள் மேற்கு இந்தியப் பகுதியில் ஒரு பேரினமாக இருந்தனர்.

                வங்காளிகள், சீக்கியர்கள் (பஞ்சாபிகள்), இராசபுத்திரர்கள் முறையே கிழக்கு, வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் தங்களுக்குரிய தனித்தன்மையான பண்பாடு பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்தனர். மொழி, பண்பாட்டு அடிப்படையில் மேற்குறிப்பிட்டோருடன் அசாமி, காசுமீரி முதலியோரும் பழங்குடி குமுகங்களும் வாழ்ந்து வந்தனர்/வருகின்றனர். இந்தியாவை ஒரு "தேசங்களின் நாடு" (Nation of Nations) என்று வரலாற்றாளர் குறிப்பிடுவர்.

இவர்கள் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் எப்போதும் ஒரே ஆட்சியின்கீழ் இருந்ததுஇல்லை. இந்த வரலாறு திரிக்கப்பட்டு இன்றைக்கு முழுப்பூசுணையைச் சோற்றில் மறைப்பதுபோல் மறைத்தும் திரித்தும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதைக் காண்கின்றோம்.

ஆங்கிலேயர் வருகையின்போது வடஇந்தியாவில் முகலாயப் பேரரசும் மராட்டியப் பேரரசும் இருந்தன. இராசபுதனத்தை இராசபுத்திரர் ஆண்டுவந்தனர். தென்னிந்தியாவின் வெவ்வேறு பகுதிகளை ஐதராபாத்து நிசாம்களும், நாயக்க மன்னர்களும், மைசூர் உடையார்களும், பாளையக்காரர்களும் ஆண்டு வந்தனர்.

இந்தியா உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் மிகப் பெரியதொரு நாடாக உள்ளது. அரசியல் பன்முகத்தன்மை என்பது கூட்டாட்சி அமைப்பு, பலகட்சி மக்கள்நாயகம், பலவேறு குமுகக் குழுக்களின் சார்பாளர் சேர்ந்த ஆட்சி என்பனவற்றில்தான் இருக்கின்றது.

இந்தியக் குடிமக்களில், மொழி, சமயம், சாதி, பண்பாடு, உடலமைப்பு, தோற்றம், உடை, உணவு முதலிய பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறைகள், இயற்கை வளங்கள், மலை, பாலைநிலம், கடற்கரை, காடு, சமவெளி எனப் பலவகை நில அமைப்புகள், தட்பவெப்பம், இசை, நாட்டியம் முதலிய நுண்கலைகள், நாட்டுப்புறக் கலைகள், வீர விளையாட்டுகள், மரபுகள், திருவிழாக்கள், சிந்தனைகள், கருத்துகள், படைப்பாற்றல், பொருளியல் முதலியவற்றில் வெளிப்படையான வேறுபாடுகள் உடையோர் இருக்கின்றனர். மேற்கூறிய வேறுபாடுகளால் அவர்களின் வாழ்வியல் முறைகளும் மாறுபடுகின்றன.

இவ்வுண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். அனைத்து மக்களிடத்தும் சமன்மையைப் பேண வேண்டும். இவற்றைக் கண்டுகொள்ளாது, பன்முகத்தன்மையை மறுப்பது, அறிவுடைமையன்று. இந்திய தேசியக் கட்சிகளின் உடனடி நன்மை கருதி எடுக்கப்படும் பன்முகத்தன்மைக்கு மாறான நடவடிக்கைகள், கூட்டாட்சிக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் ஊறு ஏற்படுத்தும் தீங்காக முடியும் என்பதை மறுக்கஇயலாது.

இந்திய அரசியல்சட்டம் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதோடு அதை உறுதிப்படுத்துகின்றது; அதனைக் காக்கும்வகையில் சட்டக்கூறுகளைக் கொண்டுள்ளது. அரசியல் சட்டத்தின் பேரால் உறுதி எடுத்துக்கொண்டு ஆட்சிப்பதவிக்கு வருவோர் அந்தச் சட்டத்தை எந்த அளவுக்கு மதிக்காமல் செயல்படுகிறார்கள் என்பதைக் கண்டு வருகின்றோம்.

இப் பன்முகத் தன்மைக்கு ஊறுசெய்தலும், வேற்றுமையில் ஒற்றுமைஎன்பதைப் பேணுவதில் விருப்பின்றிக் கரவாக மாறுபட்டு நடத்தலும் இந்தியாவின் நிலைப்புக்கு ஊறுசெய்வதாகவே முடியும் என்பதில் சற்றும் மிகையில்லை. பல மொழிகள், பல மதங்கள், பல பண்பாடுகள், பல குமுகங்கள் கொண்ட நாட்டை ஒன்றாக வைத்திருப்பதே அரசியல் சட்டத்தின் அடிப்படைநோக்கமே அன்றி ஒரேமாதிரியாக ஆக்குவதன்று. இந் நாட்டின் ஒற்றுமை என்பது வேறுபாடுகளை அழித்துவிட்டு ஒன்றாக்குவதில் இல்லை; வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு இணைந்திருக்கச் செய்வதிலேயே இருக்கிறது. இந்திய ஒற்றுமையின் அடிப்படைவேற்றுமையில் ஒற்றுமை(Unity in Diversity) என்பதில்தான் உள்ளது.

ஒரே நாடு ஒரே மொழிஎன்றால், பிற மொழிகள் பேசும் மக்கள் இரண்டாம்நிலைக் குடிமக்களாகிறார்கள். இதனால் நம்பிக்கையின்மை, எதிர்ப்பு, போராட்டம், வன்முறை, பிரிவினை இயக்கம் எனப் பதற்றம் உருவாகும். 1960களின் தமிழ்நாட்டு இந்திஎதிர்ப்பு - மொழிப்போராட்டங்கள் சான்றாக உள்ளன. ஆயிரக்கணக்கான வழக்குமொழிகள் உள்ள ஒரு நாட்டில் ஒரே மொழியைத் திணிப்பது, பிற மொழிகளைப் புறக்கணித்து, அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

       பல்வேறு குமுகங்களைக் கொண்ட நாட்டில் ஒன்றின் அடையாளத்தை மற்ற குமுகங்களின் மீது திணிக்கும்போது, அக் குமுகங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இது குமுகஒற்றுமையைச் சிதைக்கிறது. ஒரேநாடு ஒரே அடையாளம்என்றால், பலர் தங்கள் தனித்தன்மையை, தனியான அடையாளத்தை இழக்கும் தீங்கு ஏற்படுகிறது. அடையாள அழிப்பு (Identity erasure), “ஒரே…” என்ற போக்கு, மக்களிடையே நாம் இந்த நாட்டில் எங்கு நிறுத்தப்பட்டிருக்கிறோம்?”  என்ற எண்ணம் எழச்செய்து, நம்பிக்கையின்மையை உருவாக்குகிறது. ஒரே அடையாளத்தைத் திணிப்பது, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகிறது.

இந்தியாவில் பல பண்பாடுகள் இருக்கும் நிலையில், “தேசியப் பண்பாடு என்றும், ‘ஒரே நாடு, ஒரே பண்பாடுஎன்றும் கூறி ஒன்றை உயர்த்துவது, பிற பண்பாடுகளைத் தாழ்வாகக் காட்டும் நிலையை உருவாக்குகின்றது; பண்பாட்டு வல்லாண்மை (ஆதிக்க) உணர்வு, எதிர்ப்புநிலையை உருவாக்குகிறது; பொறுத்துப்போகும் மனநிலையைக் குறைக்கிறது. ஒரே பண்பாட்டை முன்னிறுத்துவது, பிற பண்பாடுகளை அழிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது.

பல மதங்கள் உள்ள நாட்டில் ஒருமதத்திற்குச் சார்பாக நடத்தல் குமுகத்தில் பகைஉணர்வு எழக் காரணமாகின்றது. இந்திய அரசியல் சட்டம், அரசு எந்த மதத்தையும் திணிக்கவோ, எந்த மதத்திற்கும் துணைதரவோ கூடாது என்கிறது. மதச்சார்பின்மையைக் கூறுகிறது.

இந்தியா ஒன்றாக இருப்பது அழுத்தத்தால் இல்லை; உடன் பாட்டால்தான்! இந்திய ஒன்றியஆட்சியின் வலிமை, பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ளும்போதுதான் நீடித்து இருக்கும். முன்பே கூறியவாறு இந்திய அரசியலமைப்பு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்பதைக் கூறவில்லை. மாறாகப் பல மொழிகள், மத உரிமை, பண்பாட்டு உரிமை என அனைத்தையும் பாதுகாக்கிறது.

ஒற்றுமைக்கு உண்மையான பாதை எல்லோரும் ஒரே மாதிரி ஆவதில் இல்லை. வேறுபாடுகளுடன் சமமதிப்பைப் பெறுதலில்தான் உள்ளது. இந்தியாவின் வலிமை, ஒரே மாதிரி சிந்தனை அன்று;  பல சிந்தனைகள் உடையோரும் ஒரே நாட்டில் இணைந்து வாழ்வதாகும். இந்திய ஒற்றுமை என்பது  பல்வேறு பண்பாடுகளுக்கிடையேயான குறுக்கீடற்ற இணக்கமான இணைப்பை  வலியுறுத்துகிறது. கட்டாய ஒற்றுமை  மனக்கசப்பை விதைத்து, பிரிவினை உணர்வுகளை வலுப்படுத்துகின்றது.

உலகம் முழுவதும், பல்வேறு மக்களை ஒரே அடையாளத்தில் இணைக்கும்  "சீர்திருத்த" முயற்சிகள், பெரும்பாலும்  இனஅடிப்படை மோதல்களுக்கும், பிரிவினை இயக்கங்கள் தோற்றத்திற்கும், நாடுகளின் பிளவுக்கும் வழிவகுத்து இருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு நிலப்பகுதிகள் அவற்றின் தனித்தன்மையைத் காப்பாற்றிக் கொள்ளும் உரிமையை வரலாற்று அடிப்படையில் வலியுறுத்துவதில் உறுதியானவையாக உள்ளன.

எனவே, “ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே அடையாளம், ஒரே மதம், ஒரே வழிபாடு…..” என்கின்ற போக்கு பன்முகத்தன்மையை அழித்து, குமுக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் கடுமையான சிக்கல்களை உருவாக்கும்.

                பல மொழிகளும் பல பண்பாடுகளும் இந்தியாவின் வாணிகம், சுற்றுலா, கல்வித்துறைகளுக்கு வலிமையாகும். ஒரே அடையாளத்தைத் திணிப்பது, பொருளியல் வாய்ப்புகளைக் குறைக்கும் போக்கினதாகவும் ஆகும்.      

மொழி, பண்பாடு, மதம் ஆகியவற்றில் சிறுபான்மையர் குமுகங்கள் ஒதுக்கப்படுவதை உணரும்போது, அவர்களுக்குப் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு உருவாகிறது. "நாங்கள் இந்தியர்களா இல்லையா?" என்ற கேள்வி எழுகிறது. தம் தாய்மொழியையோ, பண்பாட்டையோ கைவிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும்போது எதிர்ப்பும் பிரிவினை கோரிக்கைகளும் வலுப்பெறுகின்றன. அவர்களுக்கு இந்நாட்டிற்குப் புறம்பான உணர்வு உருவாகிறது. ஒருமைப்பாட்டைக் கட்டாயப்படுத்துவது உண்மையான ஒற்றுமையை உருவாக்காது, மேலோட்டமான, வல்லந்தமான "ஒருமைப்பாடு" மட்டுமே உருவாகும்.

                வெவ்வேறு மொழிகள் பேசினாலும், வெவ்வேறு கடவுளை வணங்கினாலும், வெவ்வேறு உணவுகள் சாப்பிட்டாலும் - எல்லோரும் சமமான இந்தியர்கள்" என்ற நிலையிருந்தால் மட்டுமே உண்மையான ஒற்றுமை இருக்கும். மாறாக, "இந்தி தெரியாதவன் இந்தியன் இல்லை" அல்லது "இந்தப் பண்பாடு மட்டுமே இந்தியப் பண்பாடு" என்று சொல்வது கோடிக்கணக்கான மக்களை விலக்குகிறது.

                ஒற்றைத்தன்மைத் திணிப்பு அரசியல், பொருளியல், உளத்தியல் அடிப்படையிலான தாக்கங்களை உருவாக்குகிறது. மக்களிடையே "நாம் - அவர்கள்" என்ற பிரிவினையை உருவாக்குகிறது. இது குமுக ஒற்றுமையைச் சிதைத்து, வன்முறைக்கும் கலவரங்களுக்கும் வழிவகுக்கிறது.

வரலாற்றில், தமிழ்நாடு கி.பி.1311-றிற்கு அதாவது மாலிக்காபூர் படையெடுப்புக்கு முன்னர் அயலர் ஆட்சியின் கீழ் இருந்ததில்லை. அதற்குப் பிறகும், ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படும் வரையிலும் தமிழகப் பகுதிகள் முழுமையுமாக அயலர் ஆட்சியின்கீழ் இருந்தது இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு வடவர் ஆட்சியின் கீழுள்ள தமிழகம், ஒற்றைத்தன்மைத் திணிப்பால் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருவது கண்கூடு.

                ஒற்றை மொழியைத் திணிக்க முயன்ற நாடுகளில் மோதல்கள் மிகுந்துள்ளன. பாகித்தானில் உருதுவை மட்டும் தேசிய மொழியாகத் திணித்தபோது, வங்காளமொழி பேசும் கிழக்குபாக்கித்தான் கொதித்தது; மொழி உரிமைக்காக 1952-இல் மாணவர்கள் உயிரீகம் செய்தனர். இறுதியில் 1971-இல் வங்கதேசம் தனி நாடாகப் பிரிந்தது.

                செர்பிய அடையாளத்தை மற்றவர்கள் மீது திணிக்க முயன்றநிலை  (மிலோசெவிச்சு தலைமையில்) உயூகோ-சுலேவியாவின் பிரிவினைக்கும், குரோசியா, போசுனியா, கோசோவோ போர்களுக்கும் முதன்மைக் காரணமாக அமைந்தது.

                சீனஅரசு, சிஞ்சியாங்கு மாகாணத்தில் வாழும் உய்குர் முசுலிம்கள் மீதும், திபெத்தியர்கள் மீதும் கட்டாய மொழி, பண்பாட்டைத் திணிப்பது தொடர்மோதல்களையும் அடக்குமுறையையும் ஏற்படுத்தி உள்ளது.

                துருக்கியில், குருது மொழி, உடை, பண்பாடு மீது நீண்டகாலமாகத் தடைகள் விதித்து அடக்கியதுடன், துருக்கிய அடையாளத்தைத் திணித்ததால்  பல ஆண்டுகளாக வன்முறை மோதல் தொடர்கிறது.

                இலங்கையில், சிங்களமொழியை மட்டும் அரசு மொழியாக்கிய 'சிங்களம் மட்டும்' (Sinhala only Act) சட்டம், தமிழ் மக்களை தனிமைப்படுத்திய நிலையை உருவாக்கி, பல்லாண்டுக்கால உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது.

இவற்றிற்கு நேர்மாறாக சுவிட்சருலாந்து நான்கு ஆட்சி மொழிகளுடன் (செருமன், பிரெஞ்சு, இத்தாலியன், உரோமன்) அமைதியாகச் செயல்படுகிறது. கனடா, ஆங்கிலம்-பிரெஞ்சு இருமொழிக் கொள்கையுடன் ஒற்றுமையைக் காக்கிறது. பன்முகத்தன்மையை மதிப்பது ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. ஒருமைப்பாட்டை வல்லந்தமாகத் திணிப்பது சிதைவை உருவாக்குகிறது.



ஒருநாட்டிற் கொரேமொழிதான்; ஒருநாட்டிற் குப்பண்பா டொன்றென் போரே!

ஒருநாட்டிற் கோரடையா ளம்மட்டில் தானென்னும் ஓலத் தீரே!

ஒருநாட்டிற் கொருமதந்தா னொருவுடைதா னெனமுழங்கி உருமு வோரே!

ஒருநாட்டில் ஆளுகின்ற உம்போக்கால் புரட்சியெழல் உறுதி உண்மை!

                                                                                     - ..


தமிழரும் பெயரும்!

 

தமிழரும் பெயரும்!



‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றும், ‘நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான், நான், நான்!’ என்றும் முழங்கினார் பாவேந்தர்! ‘தமிழே எனக்கிங்கு உயிர்மலர்ச்சி! – செந்தமிழே எனக்கிங்கு உடலம்!’ என்றும், ‘அறம் பெருகும் தமிழ்படித்தால், திறம் பெருகும், மறம் பெருகும், ஆண்மை வரும், மருள்விலகும், பொய்மையெலாம் புறம்பெயரும், வாழ்வு புதுமைபெறும்’ என்னும் கருத்துப் பெறவும் பாடினார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். இத்தகையோர் வாழ்ந்த மண் இது!

இந்தத் தமிழகத்தில் இப்போது தமிழர் தம் தாய்மொழியைப் பேணிப் பாதுகாத்துப் புரக்கும் நிலை மிகமிக இரங்கத்தக்கதாக உள்ளதென்பது மிகையாகச் சொல்லப்படுவதன்று! முற்றும் உண்மையே! ஓர் எடுத்துக்காட்டைப் பார்த்தால் இந் நிலை தெளிவாக விளங்கும்.

17-06-2026 அன்று வந்த நாளிதழ்களில், ’தி இந்து’ - ஆங்கில நாளிதழ், ‘இந்து தமிழ் திசை’, ‘தினமணி’ - தமிழ் நாளிதழ்கள் ஆகிய நாம் பார்த்த மூன்று நாளிதழ்களில் முதற்பக்கத்தில் ‘அப்போலோ கல்வி நடுவ’த்தின் முழுப்பக்க விளம்பரம் ஒன்று வந்திருந்தது. அந்த விளம்பரத்தில் அக் கல்வி நடுவத்தில் பயின்று, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – தொகுப்பு 1’ தேர்வில் முன் நிலைகளில் தேறிய நாற்பது பேர்களின் படம், பெயர், வரிசை(தரம்) எண்ணுடன் அவர்கள் இப்போது செய்யும் வேலையையும் வெளியிட்டிருந்தனர்.

ஆண்களும் பெண்களுமாகக் கலந்து காணப்பட்ட அந்த நாற்பதின்மர் பெயர்களையும் ஒன்றிற்கு இரண்டுமுறை கூர்ந்து பார்த்ததில், அப் பெயர்களில் ஒன்றே ஒன்று மட்டுமே தமிழ்ப்பெயராக இருக்கக் கண்டோம். PUGALANBU. K – என ஆங்கிலத்தில் எழுதியிருந்த அப்பெயர், ‘புகழன்பு’ எனும் தமிழ்ப் பெயரென்றே கருதுகின்றோம். அந்த விளம்பரத்தில் கண்ட நாற்பது தமிழரில் ஒருவரே தமிழ்ப்பெயர் தாங்கி இருக்கின்றார் என்பதே நிலை!

பெயர் என்பது வெறும் கூப்பிடுவதற்கான குறியீடு இல்லை; அது ஒரு மாந்தனின் முகவரி; தாய்மொழியைப் பேணுகின்ற நிலையின் ஒரு முகன்மைக் கூறு! பிள்ளைகளுக்குப் புரியும் தாய்மொழியில் பெயரிடுவது, அவர்களுக்கு நாம் தரும் தன்னம்பிக்கை மட்டுமன்று, பண்பாட்டின், வரலாற்றின், மரபின், மொழியின், கலையின் வாழ்வியலின் அடையாளம். அறிந்தோ, அறியாமலோ, பொருள் புரிந்தோ, புரியாமலோ பிறமொழியில் நாம் சூட்டும் பெயர், உளத்தியல்படி நம்மை அறியாமல் அம்மொழியின் வல்லாண்மைக்கு நாம் நம்மை அறியாமலே ஆளாக்கிக் கொள்வதாகும் எனில் மிகைஉரை இல்லை, உண்மையே!

பெயரிடுவதில் போலி நாகரிகம் புன்மைப் பெருமைகள் புகுந்து விட்டன. புரியாத மொழியில் பேசுபவர்களை உயர்வாக எண்ணும் ஒருவகை அறியாமை போன்றதே புரியாத மொழியில் பெயர் சூட்டிப் போலிப் பெருமை கொள்வதுமாகும்!. தாய்மொழியைத் தாழ்த்தி அயல்மொழியை உயர்வாக எண்ணும் அவலம், அறியாமை இதில் இருப்பதை உணரவேண்டும். உண்மையில், உலகின் மூத்த மொழி, முதல்தாய்மொழி, வளமான இயற்கை மொழி தமிழே என்ற ஆய்வறிஞர் கூற்றை மறந்து, நாம் போலித்தனங்களுக்கு நம்மைநாமே ஆளாக்கிக் கொள்கின்றோம்.

தமிழர் தமிழில் பெயரிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதே ஓர் இரங்கத்தக்க நிலை என்பதை உணரவேண்டும். புதுச்சேரி, தமிழ்நாட்டு அரசுகளும், தமிழர் இயக்கங்களும் மக்களிடையே இந்த உணர்வை உருவாக்கித் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்ட ஊக்குவிக்கவேண்டும்.

தம்மிடம் வந்து காசு கொடுத்து எந்தப் பெயர் வைப்பது என்று கேட்போரிடம் பிறந்த நாள் நேரம் கேட்டுவிட்டுப், புரியாத அயல் மொழிப் பெயர்களையும் தமிழ் இலக்கண வரையறையைப் பொருட் படுத்தாத பிறமொழிப் பெயர்களையும் சூட்டும்படி வலியுறுத்துவதையும், மொழிக்கு முதலில்வரா எழுத்துகளில் தொடங்கும் பெயர்களாக வைக்கத் தூண்டுவதையும் காண்கிறோம். இத்தகைய தமிழுக்கு எதிரானபோக்குப் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றது. இந்தப் போக்கில் உள்ள சூதைப் புரிந்து கொண்டு விழிப்புறவேண்டும்.

நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டி நாம் தொன்மைச் சிறப்பும் பண்பாட்டு நாகரிகச் சிறப்பும் கொண்ட தமிழர்கள் என்று அடையாளம் காட்டவேண்டும். தாய்மொழி தமிழில் பெயர்வைத்துக் கொள்வது பெருமைதரும் செயல் என்று கருதவேண்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
. - கு.466.

{புதுவை 'நற்றமிழ் - சூலை 2026 - இதழில் வந்தது )