அருந்தமிழ்த் தொண்டர் அண்ணல்தங்கோ!
குடியாத்தம் முருகப்பன் அண்ணல்தங்கோ, (1904 ஏப்பிரல் 12 – 1974 சனவரி 4) தனித்தமிழ்உணர்வாளர்; தமிழ்த் தேசியக் கொள்கையர்; தமிழ் மண்ணின் விடுதலை விரும்பிய உணர்வாளர்; ஆரிய எதிர்ப்பு
இயக்கத்தின் பெயரில் உள்ள ‘திராவிட’ என்னும் சொல்லைத்‘தமிழ்’ என மாற்ற வற்புறுத்திய
கொள்கையாளர். இந்திய விடுதலைப் போராளி; எழுத்தாளர்; பாவலர்; நூலாசிரியர்; இதழாசிரியர்; திரைப்படப் பாடலாசிரியர் எனப்
பன்முகத்திறனாளியாவார்.
பெற்றோர் முருகப்பன் – மாணிக்கம்மாள். வேலூர் மாவட்டம் குடியாத்தம் என்னும் ஊரார். பெற்றோர் இட்ட
பெயர் சுவாமிநாதன் என்பதாகும். இளம் அகவையிலேயே தந்தையை இழந்ததால்
தொடக்கக் கல்விக்குமேல் படிக்க வாய்ப்பில்லை. இருப்பினும், தம்சொந்த முயற்சியால் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சங்கதமொழிகளைக் கற்றுத்
தேர்ச்சியடைந்தார்.
தம் பதினான்காம் அகவையிலேயே பேராயக்கட்சியில் சேர்ந்தார். 1922இல், ஈ.வெ.இராமசாமிப்
பெரியார் தலைமை வகித்த திருப்பத்தூர் வட்ட அரசியல் மாநாட்டை நடத்துவதில்
முதன்மையாளராக இருந்தார். 1923இல் மதுரையில் கள்ளுக்கடை மறியல் காரணமாக இருமுறை மும்மூன்று மாதங்களென ஆறு மாதக்
கடுங்காவல் தண்டனையை அடைந்தார். நாகப்பூரில் தடையைமீறி இந்தியக் கொடியை ஏற்றி வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டதால் ஏழு மாதங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்றார். 1925இல் நிகழ்ந்த வைக்கம் போராட்டம், 1928-ல் சயுமன் குழு எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டு சிறை
சென்றார்.
1927இல் ஆங்கிலேயக் கொடுங்கோலன் நீலன் சிலை உடைப்புப் போராட்டம் காரணமாக ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்றார். தண்டனை தந்த நயனகர் நாடகத் தந்தையாகப் போற்றும் பம்மல் சம்பந்தனார். சிறையில், பம்மல் சம்பந்தனார் எழுதிய ‘இலீலாவதி சுலோச்சனா’ எனும் நாடகத்தை நடத்தி, அதில் அண்ணல்தங்கோவே கதைநாயகனாக நடித்துச் ‘சிறை வாழ்வாளிகள் நலநிதி‘யைத் திரட்டித்தந்தார். அந் நாடகத்தில், ஆங்கில ஆட்சியின் வல்லாண்மைக்கெதிராகத் தடை செய்யப்பட்ட முழக்கத்தை முழங்கினார். அம் முழக்கத்தைக் கேட்டு, சிறை அதிகாரிகள் மிரண்டு போயினர். வரதராசுலு நாயுடுவுடன் இணைந்து வ.வே.சு. ஐயருக்கு எதிரான குருகுலப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
1927 இல் சங்கதம் என்னும்
சமற்கிருதம் தவிர்த்த தமிழ்த் திருமணத்தில் தூய தமிழில் திருக்குறளைக் கூறித்
தம் திருமணத்தைத் தாமே நடத்தி, சிவமணி அம்மாளை மணந்தார். இதன் மூலம் ‘திருக்குறள்’ நெறி தமிழ்த்
திருமணத்தை’ அறிமுகப்படுத்தினார்.
அண்ணல்தங்கோவே நூற்றுக்கணக்கான தமிழ்த் திருமணங்களைத் தலைமை தாங்கி நடத்தி வைத்ததைப்
பேராசிரியர் க.அன்பழகன் தாம் எழுதிய “தமிழர் திருமணமும் இனமானமும்” என்ற நூலில் புகழ்ந்துரைக்கிறார்.
1934 பெப்புருவரி 18இல் பெரு முயற்சியில் திரட்டிய தீண்டாமை ஒழிப்பு நலநிதி அளிப்புக் கூட்டத்திற்குக் காந்தியடிகளைக்
குடியாத்தம் அழைத்து வந்தார். ஏதோ காரணமாகக் காந்தியாருடன் வந்த இராசாசி, தி.எசு.எசு.இராசன் இருவரின் வற்புறுத்தலில், நிதியை மட்டும் பெற்றுக் கொண்ட காந்தியடிகள் அண்ணல்தங்கோ ஏற்பாடு செய்திருந்த
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், முன்னரே இசைவு தந்திராத ஆம்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டுச் சென்றார். இதனால் மனம் உடைந்த அண்ணல்தங்கோ பேராயக் கட்சியினின்றும் விலகினார்.
1936இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் இணைந்தார். (இதுவே பின்னர் நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட அமைப்பாகும்). ஈரோடு சென்ற அண்ணல்தங்கோ பெரியாரின் குடி அரசு இதழில் சிறிது காலம் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். 1944இல் இந்த அமைப்பும் தன்மதிப்பு இயக்கமும் இணைந்த புதிய அமைப்பு உருவான போது, அதற்குத் ‘தமிழர் கழகம்’ எனப் பெயரிடுமாறு அண்ணலதங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதம், சவுந்தரபாண்டியன், தங்கவேலு முதலானோர் வலியுறுத்தினர். ஆனால் அக் கருத்து ஏற்கப்படாமல் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயரிடப்பட்டது. அதனை எதிர்த்து அண்ணல் தங்கோவும் கி.ஆ.பெ.விசுவநாதமும் பிறரும் அந்த அமைப்பை விட்டே விலகினர்.
அண்ணலதங்கோ 1937இல் வேலூரில் “உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு
பேரவை”யைத் தொடங்கினார். ஆண்டுதோறும் பொங்கல் விழா நடத்தி, அவ் விழாவில் தமிழ் அறிஞர்கள், தேவநேயப்பாவாணர், ஔவை துரைசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம், அ.கி.பரந்தாமன், வெள்ளைவாரணனார், இலக்குவனார், பாவேந்தர், திருக்குறள் முனுசாமி, சிதம்பரநாதன், மே.வீ.வேணுகோபாலர், ஆதித்தனார், திருக்குறள்பீடம் அழகரடிகள், மு.வரதராசன், டாக்டர் தருமாம்பாள், மயிலை சிவமுத்து, கா..அப்பாத்துரை முதலானோரை
உரையாற்றவைத்து மக்களிடம் தமிழ்உணர்வை வளர்த்தார். 1937இலும் 1938இலும் “தமிழர் உரிமை மாநாடு”களை நடத்தினார்.
1942இல் ‘தமிழ் நிலம்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தித்
தமிழ் உணர்வு ஊட்டினார். ‘பராசக்தி’ திரைப்படத்திலும், ‘பெற்ற மனம்’, பசியின் கொடுமை’, ‘கோமதியின் காதலன்’ ஆகிய திரைப்படங்களிலும் பாடல் எழுதி இருக்கிறார்.
வடமொழிக் கலப்பின்றி, தூயதமிழில் பேசும்
வழக்கமுடையவராக இருந்ததால், பெரும்புலவர் மே.வீ. வேணுகோபாலர், திருக்குறள்பீடம் அழகரடிகள் இருவரும் இணைந்து ‘தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ’ என்ற சான்றிதழை அளித்தனர். அண்ணல்தங்கோ தம் மகனுக்குத் ‘தமிழர்தங்கோ’ என்றும், பெண் மக்களுக்குத் ‘தமிழரசி’, ‘நாவுக்கரசி’ என்றும் பெயரிட்டழைத்தார்.
மறைமலையடிகளாரின் நாட்குறிப்புத் தொகுப்பு நூலான “மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்” எனும் நூலில், அடிகளாரிடம் அண்ணல்தங்கோ நெருங்கிப் பழகியிருந்ததை அடிகளாரே பதிவிட்டுள்ளார் என்ற செய்தி, தொடக்கப்பள்ளியில் மட்டுமே படித்துப் பின்னர்த் தானே கற்றுயர்ந்த அண்ணல்தங்கோவின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றிப் பெரும்பேறாகும்.
தமிழுணர்வுமிக்க இவரே தமது வடமொழிப் பெயர் சாமிநாதன் என்பதைத் தூயமிழில் அண்ணல்தங்கோ என மாற்றிக்கொண்டார். அது மட்டுமன்றித் தாம்
பழகுவோரின் பெயர்களைத் தூய தமிழ்ப்பெயராக மாற்றியமைத்த பெருமைக்குரியவராக அண்ணல்தங்கோ விளங்கினார். அவர் தமிழாக்கி வழங்கிய பெயர்கள்: காமராசர் - காரழகனார், கருணாநிதி - அருள்செல்வம், சி.பி.சின்ராசு -- சி.பி.சிற்றரசு, கிருபானந்தவாரியார் – அருளின்பக் கடலார், தனபாக்கியம் - பொற்செல்வி, காந்திமதி - மணியம்மை, கி.ஆ.பெ.விசுவநாதம் -- கி.ஆ.பெ.நெடுந்துறைகோ, சி.பா.ஆதித்தனார் - சி.பா.பகலவனார், மே.வீ..வேணுகோபாலர் - மே.வீ. குழற்கோமான், தருமாம்பாள் – அறச்செல்வியார், சனார்த்தனம் – மன்பதைக்கன்பன், நாவலர் சா.சோமசுந்தரபாரதியார் - சா. நிலவழகனார், எனப் பட்டியல் நீளும். அரங்கண்ணல், ‘நினைவுகள்’ என்ற தன்வரலாற்று
நூலில், அரங்கசாமி எனும்
தம்பெயரை, பெயர்மாற்றத்தந்தை
அண்ணல்தங்கோ இசைவோடு ‘அரங்கண்ணல்’ என்று மாற்றிக் கொண்டேன் எனக் குறிப்பிடுகின்றார்.
தமிழறிஞர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் ஒரு அவையில் சொற்பொழிவாற்றும் போது, “அதோ வந்திருக்கிறார்
அண்ணல்தங்கோ! இங்கே நான் பேசும்போது, எத்தனை வடமொழி, பிறமொழிச் சொற்களைப்
பயன்படுத்துகிறேன் என்று எண்ணி எண்ணி, அதனை என்னிடம் கூறிக் குத்திக் காட்டவே வந்திருக்கிறார்” என்றாராம்.
1972-ல் இந்தியா விடுதலை அடைந்த வெள்ளிவிழா நிகழ்வில் கலந்துகொள்ள அண்ணல்தங்கோ அழைக்கப்பட்டார். அப்போது, விடுதலைப் போராட்ட வீரர்க்கான தாமிரப்பதக்க விருதை அன்றைய தலைமை அமைச்சர் இந்திராகாந்தி நேரடியாகத் தந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்திய ஒன்றிய அரசு வேலூரின் நடுவான பகுதியில் அளித்த 15 குறுக்கம் (ஏக்கர்) நிலத்தை அரசுக்கே திருப்பியளித்தார்.
அண்ணல்தங்கோ, ‘அண்ணல் முத்தம்மாள்
பாடல்கள்’, ‘மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா?’, ‘சிறையில் நான் கண்ட
கனவு (அல்லது) தமிழ்மகள் தந்த செய்தி’, ‘அறிவுப்பா’, ‘என் உள்ளக்கிழவி
சொல்லிய சொல்’, ‘நூற்றுக்கு நூறு
காங்கிரசு வெற்றிப்படைப் பாட்டு’ முதலான நூல்களை எழுதியுள்ளார். அண்ணல்தங்கோவின் படைப்புகள் 2008ஆம் ஆண்டு நாட்டுடமை
ஆக்கப்பட்டன.
வாழ்வு முழுதும் தன்னலமற்ற தூய தொண்டராக வாழ்ந்த தமிழ் உணர்வாளரான அண்ணல்தங்கோ, குடற்புண் நோயால்
தாக்குண்டு 1974, சனவரி 4இல் மறைந்தார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், மிக வருந்திக் கண்கலங்கி கீழ்க்காணும் இரங்கற்பா பாடினார்:
அண்ணல்தங்கோ, அண்ணல்தங்கோ!
“சேயவன் வழுத்தொடு செந்தமிழ் பேணித்
தூய தமிழ்க்கா வலனெனத் தோன்றித்
தேயப் பிரிவைத் தீர்க்கத் துணிந்த
அண்ணல்தங்கோ அண்ணல்தங்கோ
தன்முயற் சியினால் தன்னை உயர்த்தி
மன்னியல் விடுதலை மாண்ட மறவ
உள்ளுவ தெல்லாம் உயர்வே யுள்ளித்
தெள்ளிய கொள்கை திறம்பாச் சான்றோய்
நீயெமை மறப்பினும் நினைமற வேமே
சேயரும் கேளிரும் நேயரும் ஆயேம்
மாயிரு ஞாலம் மன்னிய காலே
தெள்ளிய கொள்கை திறம்பாச் சான்றோய்!”
அண்ணல்தங்கோ தெளிவான கொள்கைகளாகக் கொண்டிருந்தவை தனித்தமிழ், தனித்தமிழ்நாடு, எண்ணுவதெல்லாம் உயர்வாய் எண்ணும் பண்பு போன்றவை! “தூய தமிழ்க் காவலன்”, தேயப் பிரிவைத் (தேசப் பிரிவை) தீர்க்கத் துணிந்த – மன்னிய விடுதலை மறவன்” என்றெல்லாம் பாவாணர் போற்றுகிறார்.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ’கு.மு. அண்ணல்தங்கோ நூலகம்’ அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டரசு, கு.மு. அண்ணல்தங்கோவிற்குக், குடியாத்தத்தில், உருவா 50 இலக்கத்தில், மணிமண்டபத்துடன் கூடிய திருவுருவச் சிலை அமைக்க இருப்பதாக அறிவித்துப் பணிகள் மேற்கொண்டது. திறப்புவிழா நடந்ததாகத் தெரியவில்லை.
12-4-2025ஆம் நாள் அண்ணல்தங்கோவின் 126ஆம் பிறந்தநாளாகும். அவர் நினைவைப் போற்றுவோம்! அவர் பணிகளைத் தொடர முயல்வோம்!
(புதுவை நற்றமிழ் 14-4-2025 இதழில் வந்தது)