ஞாயிறு, 8 மார்ச், 2026

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்!

 

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்!



சென்னையில் சவுக்கார்பேட்டை என்ற பகுதி உள்ளதைப் பலரும் அறிவர். இங்கே ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்தே மார்வாரி, குசராத்தி குமுகத்தினர் குடியேறத் தொடங்கினர். இப்போது, மார்வாரி, குசராத்தி குமுகத்தினருடன் இராசத்தானி, செயின், அகர்வால் முதலிய வடஇந்திய வாணிகக் குடும்பங்கள் சேர்ந்துகொண்டன. இன்று தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய மார்வாரி குமுகம் இங்கேதான் உள்ளது. பலர் (குறிப்பாகப் பெரியவர்கள்) இந்தி, இராசத்தானி, குசராத்தி பேசுகின்றனர். தமிழ் பேசப்படாத இடங்களும், குறைவாகப் பேசப்படும் இடங்களும் இங்குண்டு.

வடமாநிலத்தாரின் மிகப்பெரும்பான்மை காரணமாகவே சவுக்கார்பேட்டை “சிறு வடஇந்தியா” (Little North India) என்று அழைக்கப்படுகிறது. சவுக்கார் என்ற பெயர் சாகுகார் (Sahukar = வாணிகர் / கடன் கொடுப்பவர்) என்பதிலிருந்து வந்தது. இவர்கள் சவளி, நகை, மாழைப் பொருள்களின் மொத்த / சில்லறை வாணிகத்தில் ஆளுமையுடன் உள்ளனர்.

வட்டிக்குப்பணம் கொடுக்கும் தொழிலில் தொடங்கி இன்றைக்கு மொத்தவிற்பனை (Wholesale) வாணிகத்தில் இவர்கள் தனிஆளுமை செலுத்துகின்றனர். வாணிக அடிப்படையில் இவர்கள் ஒரு வலுவான அமைப்பை (Community) வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது, தங்களுக்குள் வாணிகம் செய்வது போன்ற காரணங்களால் அது ஒரு மூடிய குமுகமாகவே (Closed Community) தெரிகிறது. சுருக்கமாகச் சொன்னால், சவுக்கார்பேட்டை என்பது வடமாநிலத்தவர்களின் வாணிகக்கோட்டை.

வடஇந்திய குமுகத்தினரின் வாணிக வலையமைப்பில் வேறெவரும் ஊடுருவ முடிவதில்லை. அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அங்குள்ள வாணிகமுறைகள், வாழ்க்கைமுறைகள் அவர்களின் நடைமுறையிலேயே அமைந்துள்ளன.

அடகு, வயிரம், நகை, துணி, பட்டு, பலசரக்கு, தங்கம், உசிலை (மசாலா), கடன்வாணிகம் முதலியவை பெரும்பாலும் மார்வாரி / குசராத்தி குடும்பங்களின் வலிய பிடியின்கீழ் உள்ளதால், அவர்களே எல்லாம் முடிவுசெய்யும் நிலை இருக்கிறது. ஆண்டுக்கு ஆயிரம் கோடிகளுக்கு மேல் விற்றுமுதல் நடப்பதாகவும் கூறப்படுகின்றது.

குடியிருப்புப் பகுதிகளில் வடஇந்தியர்களின் வல்லாண்மை மிக அதிகம். கடைகளுக்கு மேல்

அவர்களின் வீடுகள் உள்ளன. சொந்த குமுக வலைப்பின்னல் (community network) உள்ளது. சில குடியிருப்புகளில், குறிப்பிட்ட குமுகங்களுக்கு மட்டும் வாடகைக்குவிடும் / விற்பனை செய்யும் போக்கு உண்டு. (இது சட்டத்திற்கு எதிரானது). பல கடைகளில் தமிழ்பேசுவதில் சிக்கல் இருக்கிறது.

சொந்தக் கோவில்கள் (Swaminarayan, Jain temples) கோலி, இரக்குசா பந்தன் (Holi / Raksha Bandhan) கொண்டாட்டங்கள் வடஇந்திய குமுகாய உணர்வை வெளிப்படுத்துகின்றன. இவை தமிழர்க்கு எதிரானவையாகச் சிலபோது அமைந்துவிடுவதும் உண்டு. இவை குறித்துக் குமுகஊடகங்களில் (Quora, social media) உறழாடல்கள் நடப்பதுண்டு. இந்தப் பகுதியில் மார்வாரி, குசராத்தி மொழிகள், உணவுவகைகள், பண்பாட்டுக் கூறுகள் ஆளுமை இருப்பது உண்மை.

இங்குள்ள பல கடைகளில் வேலை செய்பவர்களாகவும், சரக்குந்துப் பணியாளர்களாகவும், சிறுபான்மை சரக்குந்து உரிமையாளர்களாகவும், சுமைதூக்கும் கூலித்தொழிலாளர்களாகவுமே தமிழர்கள் சிலர் உள்ளனர். பட்டறைகள், நகைவேலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் அமர்த்தப்படுகின்றனர். சில சமையம் உழைப்புச் சுரண்டல், குழந்தைத் தொழிலாளர் பற்றிய செய்திகளும் வருகின்றன.

காலப்போக்கில் வடவர்க்கு இடநெருக்கடி ஏற்படவே கூடுதல் தொகை கொடுத்து அடுத்துள்ள வீட்டை / இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியதால், அந்தக் கூடுதல் பணத்தால் ஈர்க்கப்பட்ட தமிழர்கள் பலரும் சொந்த இடத்தை விற்றுவிட்டு வேறு இடங்களுக்குக் (அண்ணா நகர், தியாகராயர் நகர் போன்ற பகுதிகளுக்குக்) குடிபெயர்ந்தனர்.

இப்படியாகச் சவுக்கார்பேட்டைக்குள் புகுந்தால் ஏதோ வட இந்தியாவுக்குள் நுழைந்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகின்ற நிலை இருப்பது உண்மை. பெயர்ப்பலகைகள் இந்தியில் இருப்பது, அங்குள்ள உணவகங்களிலும் தெருக்களிலும் காணப்படும் நெருக்கடி, அப்பகுதி ஒருவகையில் தனிநாடு போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன. இந்தப் பண்பாட்டு வேறுபாடுகள், அப்பகுதியை அயலகமாக உணரச் செய்வதுடன் அதனை ஒரு தனிப் பண்பாட்டுத் தீவாக (Cultural Pocket) மாற்றி உள்ளன.

அங்குக் காணும் பண்பாட்டு வேறுபாடு, மொழித்தடை நிலையைத் ‘தங்கள் குமுகத்தினரோடு ஒன்றாக இணைந்து வாழும் தன்மை’ (community cohesion) என்று பொதுவாகக் கூறுகின்றனர். மும்பை போன்ற வடஇந்திய நகரங்களில் தொகுப்பாக வாழும் தமிழர் நிலையை எண்ணிப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. சேறும் நீருமாயுள்ள தூய்மையற்ற பகுதிகளில் நெருக்கமாகத் தகரக் குடிசைகளிலும் மரத்தடுப்புகளிலும் வாழும் மாந்தப் பிறவிகளாகத்தான் அவர்கள் இருக்கின்றனர்.

சென்னை சவுக்கார் பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளிகள் 28-க்கும் மேல் உள்ளன. அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளவை அல்ல. அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்குமானவை. ஆனால், நடைமுறையில் அப் பள்ளிகள் முழுக்கமுழுக்க வடநாட்டுக்காரர்களுக்காக மட்டுமே இயங்கும் தனியார்பள்ளிகள் போல் இயங்குகின்றன என்பது அதிர்ச்சியானதாகும்.

இப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர், அலுவலகப் பணியர் அனைவரும் வடநாட்டினர். 20 ஆண்டுகளுக்கும் முன் பணியமர்த்தப்பட்ட ஓரிரு தமிழக ஆசிரியர்கள் அங்கு உள்ளனர். அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அங்கே எந்தப் பள்ளியிலும் தமிழ் பயிற்றுவிப்பதும் இல்லை. தமிழ்மாணவர்களைச் சேர்ப்பதுமில்லை. தமிழ்மாணவர்களைச் சேர்க்கச் சென்றால் அவர்கள் சொல்வது, ‘அவர்களைச் சேர்த்தால் எங்கள் பள்ளியில் வீண் சிக்கல் ஏற்படும்’ என்பதாகும். மேலும் ஓரிரு ஆசிரியர்களைத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் பார்ப்பனராகவே இருக்கின்றனர். பார்ப்பனராக இருந்தாலும் இந்தி தெரிந்தவராக இருக்க வேண்டுமென்கின்றனர். இங்கு மட்டும் ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது.

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தி லிருந்து இப்பள்ளிக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் தே.த.அ. (RSS) பள்ளிகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. சென்னையின் நடுப்பகுதியான சவுக்கார்பேட்டையில் தமிழ்மொழிக்கும், தமிழ்மாணவர்களுக்கும் வஞ்சகம் செய்து கொண்டிருக்கும் இவ்வகையான பள்ளிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

குசராத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகக் கூறித் தமிழ்வழிப் பள்ளியை மூடவேண்டும் என அண்மையில் குசராத்துஅரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இங்கே சவுக்கார்பேட்டையில் உள்ள 28-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழியில் வகுப்பு நடத்துவதற்குத் தமிழகஅரசு கோடிக்கணக்கில் நிதி வழங்கிக் கொண்டுள்ளது. தமிழிலேயே சொல்லித்தராத இந்தப் பள்ளிகளுக்குத்தாம் கோடிக்கணக்கில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இங்கு நிரப்பப்படாமல் இருக்கும் ஆசிரியர் பணியிடங்களுக்கு வட இந்தியாவிலிருந்து வெறும் இளங்கலை பட்டம் பெற்றவர்களை அழைத்து வந்து பணிஅமர்த்துகிறார்கள். தமிழ்நாட்டில், அதுவும் தலைநகரமான சென்னையில் தமிழ்நாட்டவருக்கோ, அவர்களின் தாய்மொழியான தமிழுக்கோ தொடர்பு இல்லாமல் இந்தப் பள்ளிகள் தமிழ்நாடு அரசின் நிதி உதவியோடு எப்படி நடக்க முடிகிறது என்பது வியப்பூட்டுகிற செய்திதான்.

மொத்த வாணிகங்கள் (Whole Sale) அனைத்தும் வடஇந்தியர் கையில்! அவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது - அவர்களின் ஒப்போலைகள் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தீங்கு இருப்பதை பொருட்படுத்தாமல் இருக்கமுடியாது. தமிழகஅரசியலர் இதில் கவனம் கொள்ளவேண்டியது இன்றியமையாததாகும். அண்மைக்காலமாக வடநாட்டிலிருந்து வேலை தேடிவருவோர் தமிழ்நாட்டில் குவிவது தொடர்கிறது.

சென்னை சவுக்கார்பேட்டையைப் போலவே, தமிழகம் முழுவதும் பெரிய வாணிகத் தொழில்கள் வடமாநிலத்தவர் கைகளில் இருக்கின்ற நிலையே உள்ளது. தமிழ்நாட்டின் பல முதன்மை நகரங்களில் குசராத்திகள், மார்வாரிகள் தங்களின் தனித்தன்மையான பண்பாடு, வாணிகத்துடன் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சவளி, நிதித் (Finance) துறைகளில் முன்னணியில் உள்ளனர்.

கோயம்புத்தூரில் வடஇந்திய குமுகத்தினர் மிக அதிக அளவில் செழிப்பாக வாழ்கின்றனர். ஏறத்தாழ 120 ஆண்டுகளுக்கும் மேலாக இராசத்தானி, குசராத்தி குமுகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இரத்தினசபாபதிபுரம், சாய்பாபா குடியிருப்பு (Sai Baba Colony), குதிரைப்பந்தயச் (Race Course) சாலை, நகரமண்டபம் (Town Hall) முதலிய இடங்களில் வசதியான வீடுகள், சொத்துகளுடன் வாழ்கின்றனர். இரங்கை கவுடர் வீதி (Rangai Gowder Street), ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி பகுதிகளில் இவர்களது மொத்த வாணிக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன.

சென்னையில் சவுக்கார்பேட்டை போல கோயம்புத்தூரின் இரத்தினசபாபதிபுரம் பகுதி ஒரு சிறிய வடஇந்தியா போல் உள்ளது. பருத்தி வாணிகம், சவளி ஆலைகள், நகை வாணிகத்தில் இவர்கள் பெரும் ஆளுமை செலுத்துகின்றனர். இங்குள்ள மார்வாடி குமுகத்தினருக்கெனத் தனியே சமணக் கோவில்களும் உள்ளன.

கோயம்புத்தூர் – சுக்ரவார் பேட்டை (Sukrawarpet) என்பது நகரின் மிகப் பழமையான வாணிகப் பகுதிகளில் ஒன்று. “சுக்ரவார்” என்றால் இந்தியில் வெள்ளிக்கிழமை என்று பொருள்; பல வடஇந்திய நகரங்களில் “சுக்ரவார் கடைத்தெரு” (Friday market) என்ற பெயர் வழக்கில் உள்ளது. அதுபோலவே இந்தப் பகுதியும் ஒரு வாணிகத் தெருவாக – சந்தையாக உள்ளது. மார்வாரி, குசராத்தி, இராசத்தானி, செயின் போன்ற வடஇந்திய வாணிகக் குமுகங்கள் பல தலைமுறைகளாக இங்கு வளமாக வாழ்கின்றன.

மதுரையில் குசராத்தி, மார்வாரி குமுகத்தினர் நீண்ட காலமாக வாணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாகச் சவளி மற்றும் நகை வாணிகத்தில் இவர்கள் முன்னிலையில் உள்ளனர். மதுரையின் தெற்கு மாசி வீதி (South Masi Street), அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவர்கள் குடியிருப்புகள், கடைகள் மிகுதியாகும். மதுரையில் உள்ள ‘சவுராட்டிரா’ குமுகத்தினரும் பழங்காலத்தில் குசராத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. திருமலை நாயக்கர் காலத்தில் மதுரைக்கு வந்த இவர்கள், மதுரையின் சவளித் தொழிலின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான பல கல்வி நிறுவனங்கள், வாணிக வளாகங்கள் மதுரையில் உள்ளன.

திருச்சியில் தலைக் காவல் வாயில் (Main Guard Gate), பெரிய கடைவீதி, சிறிய கடைவீதி பகுதிகளில் வடஇந்திய வாணிகர்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். தில்லை நகர், குடியிருப்புப் (cantonment) பகுதிகளில் மார்வாரி, குசராத்தி குமுகங்கள் புத்தம்புது வசதிகளுடன் கூடிய வீடுகளில் வாழ்ந்து வருகின்றன. திருச்சியில் சவுராட்டிரா மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

உள்ளொட்டி (பனியன்), அணியப்பாட்டு (readymade) ஆடைத்தொழிலுக்குப் பெயர்பெற்ற திருப்பூரில், இராசத்தான், குசராத்தைச் சேர்ந்த பல முதலாளிகள் பெரியஅளவில் முதலீடுசெய்து அங்கேயே நிலையாகக் குடியேறியுள்ளனர். தாராபுரம் சாலையையும், அவிநாசி சாலையையும் ஒட்டியுள்ள பகுதிகளில் இவர்கள் சொத்துகளுடன் வாழ்கின்றனர்.

ஈரோட்டில் ‘கனி அங்காடி’யில் உள்ள சவளிச் சந்தை காரணமாக மார்வாரி குமுகத்தினர் நகரின் முதன்மைப்பகுதிகளில் வசதியாக வாழ்ந்து வருகின்றனர்.

சேலத்தின் ‘இலீ கடைத்தெரு’, செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் வடஇந்திய வாணிகர்கள் அதிகஅளவில் காணப்படுகின்றனர். வெள்ளி அணிகலன் தொழில் மற்றும் சவளித் தொழிலில் வடமாநிலத்தவர் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தின் முதன்மையான வாணிக வீதிகளில் மார்வாரி குமுகத்தினரின் கடைகளும், வீடுகளும் அதிக அளவில் இருப்பதைக் காணலாம்.

தஞ்சாவூரில், ‘தஞ்சாவூர் மராத்தியர்’, சில குசராத்தி குடும்பங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்திலிருந்தே இவர்கள் இங்கு நிலைபெற்றுவிட்டனர்.

சவுக்கார்பேட்டை போலவே இந்த ஊர்களிலும் இவர்களின் பகுதிகளில் வடநாட்டு உணவகங்கள், இனிப்புக் கடைகள் மற்றும் சமணக் கோயில்கள் அதிகம் இருப்பதைக் காணலாம். இவர்கள் வாழும் பெரும்பாலான இடங்களில் பளிங்குக் கற்களால் ஆன அழகான சமணக் கோவில்கள் அல்லது கிருட்டினர் கோவில்களைக் கட்டியுள்ளனர். இக் குமுகத்தினர் பல நகரங்களில் அறக்கட்டளைகள் மூலம் சொந்தமாகப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை நடத்தி வருகின்றனர்.

பொதுவாகத் தமிழ்நாட்டின் எல்லா மாவட்ட, வட்டத் தலைநகரங்களிலும் மார்வாரி, குசராத்தி மக்கள் வளமாக வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சொன்னால், தமிழ்நாட்டின் சிற்றூர்களில் கூட இவர்களின் அடகுக்கடைகளைப் பார்க்கலாம். தங்களின் சொந்த மாநிலத்தின் உணவு முறையையும், பண்பாட்டையும் கடைப்பிடிக்கும் இவர்கள், வாழ்வதற்காகக் கலப்புத்தமிழையும் தடையின்றிப் பேசுகின்றனர்.

முன்பே கூறியவாறு, அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டிற்கு வேலைதேடிவரும் வடமாநிலத்தார் பெருந்தொகையினராக உள்ளனர். அதிகாரஅடிப்படையில் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டும் 12.17 இலக்கம் பேர். ஆனால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகம். ஏறத்தாழ 70 இலக்கம் பேர் தமிழ்நாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்தல் கட்டாயமில்லை என்பதால், பெரும்பாலானோர் பதிவு செய்வதில்லை. இவர்களில் பாதிப்பேர் குடும்பத்துடன் வந்துள்ளனர். இவர்களால் தமிழ்நாட்டில் உள்ளூர்த் தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகிறது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுகிறது.

ஒடிசா, பீகார், சார்கண்டு, மேற்கு வங்காளம், அசாம், உத்தரப் பிரதேசம், இராசத்தான், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தே இவர்கள் கூட்டம்கூட்டமாக வருகின்றனர். இவர்களில் ஒடிசா, பீகார், சார்கண்டு, மேற்கு வங்காளத்திலிருந்து வந்தவர் மிகுந்த எண்ணிக்கையினராவர். இவர்கள் திருப்பூர், காஞ்சிபுரம் (திருப்பெரும்புதூர், ஒரகடம்), கோயம்புத்தூர், சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம் முதலிய இடங்களில் வேலைசெய்கின்றனர். இவர்கள் தத்தம் தகுதிக்கேற்ப கட்டுமானத்தொழில், உருவாக்கத்தொழில், வேளாண்மைத்தொழில், சவளித்தொழில் முதலியவற்றிலும், உணவகங்களிலும், காவற்காரர்- களாகவும், தூய்மைப்பணியாளராகவும் வேலை செய்கின்றனர்.

வடமாநிலங்களைவிடத் தமிழகத்தில் கூலி, மாதச்சம்பளம் அதிகமாகக் கிடைப்பதனாலும், பிற மாநிலங்களை விடத் தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பான அமைதிச்சூழல் கருதியும், இங்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதாலும் இவர்கள் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் இப்போது நகர்ப்பகுதிகளில் மட்டுமின்றித் தமிழ்நாட்டுச் சிற்றூர்ப் பகுதிகளிலும் வேலைசெய்து வருகின்றனர்.

தமிழர்களைப் பொறுத்தவரை, இப்போதைக்குக் குறைவான கூலிக்கு அடக்கமாக வேலைசெய்வதால் வடஇந்திய கூலிக்காரர்களை பெரும் அளவில் வேலைக்கு அமர்த்திக்கொள்கின்றனர்.

தமிழ்நாட்டரசு வடமாநிலத் தொழிலாளர்களின் நலனுக்காகத் தனி நலவாரியங்களை உருவாக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் இணையதளம் மூலம் மேற்கொண்டு வருகிறது.

திருப்பூரில் மட்டும் ஆடை உருவாக்கத்துறையில் உள்ள ஏறத்தாழ 6 இலக்கம் தொழிலாளர்களில் பாதிப்பேர் வடமாநிலத்தவர் கள் ஆவர். திருப்பூரில் பின்னலாடைத் தொழிலுக்காக வந்த இவர்கள், இப்போது மீச்சிறு (Micro), சிறு தொழிற்சாலைகளின் உரிமையாளர்களாக (Entrepreneurial Owners) உயர்ந்துள்ளனர். இவர்கள் அங்கேயே சொந்தமாக வீடுகளை வாங்கித் தங்கிவிட்டனர்.

இவர்கள் அடிக்கடி தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்வது, அடிதடி, குத்துவெட்டு, திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் வன்முறை, கஞ்சங்குல்லை (கஞ்சா) முதலிய வெறிமயக்கப்பொருள் விற்பனை முதலிய குற்றச்செயல்களில் ஈடுபட்டுத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொல்லை தருவதையும் சட்டம்- ஒழுங்குச் சிக்கல்களை உருவாக்குவதையும் கண்டுவருகின்றோம்.

வடஇந்தியர் வளமாக இருந்துகொண்டு வல்லாளுமை செலுத்துவது பற்றி முற்பகுதியில் கூறப்பட்ட போக்கும், பிற்பகுதியில் குறிப்பிட்ட, இலக்கக் கணக்கில் வேலைதேடி வந்து குடியேறிக் கொண்டிருக்கும் வசதிக்குறைவான வடஇந்தியர் குவியும் போக்கும் தொடர்வது தமிழர் நலனுக்கு எந்த வகையும் நன்மை பயக்காது என்பதுடன் தமிழர்க்குப் பெருங்கெடுதலாகும் என்பதைத் தமிழ்நாட்டு அரசியலர் உணரவேண்டும்.

தம்முடைய தன்னலம் ஒன்றையே கருத்தில் கொள்ளாது, தக்க காப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவேண்டும்.

தமிழ்நாட்டு அறிஞர்களும் தமிழநலன் பற்றி உண்மையாகக் கவலைப்படுவோரும் நிலைஉணர்ந்து கருத்துச்செலுத்த வேண்டுமென நற்றமிழ் வலியுறுத்துகின்றது.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும். குறள் - 435.

எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய். குறள் - 429

--------------------------------------------------------------------------------------------------------
புதுவை 'நற்றமிழ்' கும்பம் திபி2057 ஆசிரியவுரை
--------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 29 ஜனவரி, 2026

வள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்? எதைத்தான் கேட்டோம்?

 

வள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்? எதைத்தான் கேட்டோம்?



திருவருட்பே ரொளிவள்ளல் இராமலிங்க அடிகளெனும்

திருப்பே ராளர்

மருளுறுத்தும் தெய்வியத்தில் கண்டபல பொய்ம்மைகளை

மறுத்துச் சொன்ன

ஒருதனிச்செஞ் சிறப்பார்ந்த தூய்துறவி துணிவார்ந்தே

உண்மை கூறி

உருகிடுநல் அருளுணர்வால் உலகத்தார் உள்ளத்தில்

உயர்ந்த பெம்மான்!


வழிவழியே வந்தபல துறவுருவர் மொழிமறுத்து

வழக்கம் மாற்றி

இழிபழிசேர் சாதிமதப் பொய்யினிலே புகுத்தாமல்

இருள்சேர்க் காமல்

கழிபழியாம் வேற்றுமைகள் களைந்துபொது உணர்வுடனே

கடமை ஆற்ற

செழிபிழிவாய் ஒற்றுமைதோய் தூயதொரு நல்லவழி 

சிறப்பைச் சொன்னார்!


ஒருதெய்வம் ஒளியென்றார் உருவுமுதற் படியென்றார்

உண்மை நேய

அருண்மிகுத்தே ஆருயிர்கட் கெல்லாம்நாம் அன்புசெய

அறிவும் சொன்னார்!

திருக்கோயில் மேளஇசை பழந்தேங்காய் படையலெலாம்

தேவை இல்லை,

திருத்தமிலா ‘வேதாக மம்புராண’ங் குழப்பமெனத்

தெரிந்து சொன்னார்!


கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போகவெனக்

கடிந்து சொன்னார்!

தண்ணருள்கொண் டெவ்வுயிர்க்கும் பசிபோக்கல் வேண்டுமென்றார்!

தன்னைக் கூட

விண்தெய்வம் எனமக்கள் சுற்றமனம் வெம்பிநொந்தார்!

விழைவின் மீறி

வெண்மையினால் கொன்றுபலி யிடுங்கொடுமை கண்டஞ்சி

விடவும் சொன்னார்!


தருக்கியசங் கரனடங்க தலைமைசொலத் தந்தைமொழி

தமிழே என்றார்!

உருக்கமுடன் பெண்கல்வி உதவியவர் கைம்மைநிலை

ஒழிப்பீ ரென்றார்!

ஒருமைப்பாட் டுணர்வுசெழித் தெவ்வுயிரும் தம்முயிராய்

உணரச் சொன்னார்!

அருளில்லாக் கொடுங்கோலும் ஒழிகவருள் நயந்தோரே

ஆள்க என்றார்!


இறைக்கொள்கை ஏற்றாருள் இவர்போலும் புரட்சிமனம்

எவர்க்கும் இல்லை!

முறையான அவருரையில் எதையேற்றோம்? என்செய்தோம்?

முழுதும் விட்டோம்!

கறைசாதி மதஞ்சுமந்தோம்! கனிவிழந்தோம்! பொதுமைகெடக்

கரவு சேர்த்தோம்!

நிறைவள்ள லவருரைத்த வுயிரொருமைப் பாட்டுணர்வை

நினைத்த துண்டோ?

_____________________________________________________

வலை: thamizhanambi.blogspot.com மின்னஞ்சல் : thamizhanambi44@gmail.com

**********************************************************************************

நல்லெண்ணம் வளர்ப்போம்!

 நல்லெண்ணம் வளர்ப்போம்!


மாந்தர்க்குத் தகைமைமதிப் புயர்வுசிறப் பளிப்பதெலாம்
மனத்தின் எண்ணம்

வேந்தெனினும் நல்லெண்ணம் இலையெனிலோ விழலாவான்
விரைவில் வீழ்வான்!

சாந்துணையும் உயர்வூட்டும் சாலஉயர் எண்ணங்கள்
சரிவே காணா
ஏந்துடைய நல்வாழ்வு எளிதாகப் பெறநல்ல
எண்ணம் வேண்டும்!

 

ஒருவரைநீ வாழ்த்தினையேல் உனைநீயே வாழ்த்தினையென்
றுணர்ந்து கொள்க!

ஒருவர்க்குத் தீங்குசெய நினைத்தாயேல் உனக்கேநீ
தீங்கு செய்தாய்!

ஒருவரைநீ சினந்தாயேல் ஊறுன்றன் மனத்திற்கும்
உடற்கும் உண்டே!

ஒருக்காலும் மாறாத உறுதியிது எண்ணங்கள்
உயர்த்தும்; தாழ்த்தும்!

 

தப்பாதே நல்லெண்ணம் வளர்க்கின்ற சூழ்நிலைகள்
தமையே தேர்க!
எப்போதும் நற்றொடர்பும் ஏற்றமுறும் தல்லுறவும்
இணைத்துக் கொள்க!

இப்போது மனத்தினிலே எழுச்சிகொளும் நல்லெண்ணம்
இனிமை சேர்க்கும்!

முப்போதும் செயல்களெலாம் முழுச்செப்ப வெற்றியுடன்
முயும், உண்மை!

 

ஓய்வினிலும் பொழுதோட்டும் ஒருநேரந் தனிலதிலும்
உங்கள் நெஞ்சம்

ஏய்தலுற நல்லெண்ணம் எழக்கண்டும் கேட்டுரைத்தும்
இயைந்து நின்றால்

ஆய்வறிவர் முடிவிதுவே அடரெண்ணம் ஏந்துமனம்
அளிக்கும் வெற்றி!

தோய்கின்ற தொழிலதிலும் தூயவுள நல்லெண்ணம்
துணையாய்க் கொள்க!

 

எண்ணத்தை ஆக்குவதார்? உள்வாங்கு்ம் செய்திகளே!
எனவே என்றும்
ஒண்ணலுறுஞ் செய்திகளே உள்வாங்கும் படிச்சூழல்
ஓர்ந்து தேர்க!
எண்ணவராம் வள்ளுவரும் உயர்வையுள ஓதியதை
எண்ணிப் பாரீர்!
திண்ணரெனப் பொறிவாயில் தேர்ந்தவிக்கச் சொன்னதையும்
தெளிந்து கொள்க!

 

நல்லெண்ணம் மனங்கொள்க! நல்லுணர்வைப் போற்றிடுக!
நனமை நாடி

நல்லாரோ டுறவாடி நல்லுறவைப் பேணிடுக!

நயந்தே நாளும்

வல்லாரும் வலியவுள மெல்லியரும் நல்லெண்ணம்
வளர்த்து வாழ்க!

எல்லாரும் நல்லவராய் இயங்கிநலந் தோய்ந்திடவே
இனிது வாழ்க!

 

புதன், 14 ஜனவரி, 2026

பொங்கலோ பொங்கல்!

 

பொங்கலோ பொங்கல்!

=========================

இற்றைக்குப் பொங்கல்நாள் ஏற்றமிகு திருநாளே

இளைஞ, வாநீ!

கற்கின்ற வேற்றுமொழி கரிப்பானை அதன்கழுத்தில்

கட்டி வைக்கும்

சுற்றிமுடி நூல்சோம்பல் தோயுமில வயம்மஞ்சள்

தூய பால்தான்

எற்றைக்கும் இரண்டகத்தால் இனமிழக்கும் குருதியதை

எடுத்துள் ஊற்று!

ஏனலுறு அரிசியென ஏற்றிருக்கும் அடிமைநிலை

இடுபா னைக்குள்!

 

மானமெனும் விறகெரித்து மலிந்தகடை அரசுதரும்

மதுகு டித்தே

கூனலுற மயக்கத்தே கூவிடுவாய் தமிழ்மகனே

குரைநா யாக

வானத்துங் கேட்டிடவே வல்லொலியில் ‘பொங்கல்லோ

பொங்கல்’ என்றே!

(ஏனல்=கதிர்)

----------------------------------------------------------------------------------------------

வியாழன், 8 ஜனவரி, 2026

காலத்தால் மறைந்த தொலைவரிப் பணி

 

        காலத்தால் மறைந்த தொலைவரிப் பணி

     காலத்தால் மறைந்த தொலைவரிப் பணி     ================================================================ 

    காலத்தால் மறைந்த தொலைவரிப் பணி

    தோழமை அன்புநிறை தூயமன நல்லோரே!

ஆழறிவு ஆய்வர் அமெரிக்க நாட்டினர்

சாமுவெல் மோர்சென்னும் ஓவியர் ஆராய்ந்து  

காமுறத் தாமுழைத்துக் கண்டு பிடித்தார்

தொலைவர் விரைவில் தொடர்புகொள ஏலும்

தொலைவரி என்கின்ற துள்ளொலித் 'தந்தியை! 

 நல்லவர் சாமுவெல் இல்லத் தரசியார்

பொல்லாத சாவடைந்த அல்லலுறு தீச்செய்தி

காலத்தில் கிட்டாத காரணத்தால் துன்பாழ்ந்தார்!

ஞாலத்தில் மீவிரைவில் நாம்செய்தி தானனுப்பக்

கண்டுபிடிப் போம்கருவி என்றுறுதிச் சூளேற்றுத்

திண்ணிய பேருழைப்பில் கண்டதே ‘தந்தி யாம்

நூறுடன் எண்பத்தெட் டாண்டின்முன் நுட்பமாய்க்

கூறுறத் தந்தார் குறையறத் ‘தந்தி! 

ஒருநூ(று) அறுபதுடன் ஓரிரண்டாண்(டு) இங்கே  

அருமையாய்த் தந்தி அடித்தார் அனைவருமே! 

செம்பு இரும்புவகை ஊடகத்தின் ஊடாகக் 

கம்பிவழிச் செய்தி கடத்துவதால் சங்கதத்தில்         

 ‘தந்தியென் றாரிந்தத் தக்க தொலைவரியை!

எந்தத் தொலைவுக்கும் எட்டியதே செய்தி! 

அடுத்துவந்த  ஆய்வாளர் அக்கம்பி தன்னை

விடுத்துத் தவிர்த்தபுதுக் கம்பியிலாத் தந்தி

அலையியக்கத்  தாலே அரும்பணியைச் செய்யும்   

தலையியக்கம் என்றவகைக் கண்டு பிடித்தாரே    

இன்னவகை முன்னேற்றம் இத்துடன் நிற்கவில்லை!

பன்வகையும் நுண்ணாய்வால் பாரோர்க்குத் தூரத்

தொலையச்சு என்றே துலக்கமாகச் சொல்லும் 

நிலையில் ‘தெலிபிரிண்டர்’ நேர்அச்சைத் தந்தனரே!

பின்னர்க் கணிப்பொறி என்னும் பெயருடனே

பென்னம்பே ராற்றலிங்குப் பேராட்சிச் செய்கிறது!        

கட்டில்லாக் கைப்பேசிமட்டில் இணையத்தால்  

கட்டுகட ‘தந்தி’ மறைந்ததுவே காலத்தால்!

சட்டமும் ஏற்கும் சரியான ஆவணமாய்த் 

திட்டமாய்த் ‘தந்தித் திகழ்ந்திட்ட காரணத்தால்

யாரும் இடைநுழைந்தே ஏதமெதும் செய்யவொணாத் 

தேறுநிலை காப்பு திகழ்கின்ற காரணத்தால்        

இக்காலும் இத்தாலிஇன்சப்பான் நல்பிரேசில்

ஒக்கசில நாட்டில் உயிர்வாழும் ‘தந்திமுறை!  

கப்பல் தொடர்பிற்கும் கண்காணித் தேநாடு

தப்பாமல் காக்கும் தகுதிமிகு போர்ப்படைக்கும்

எப்போதும்  ‘தந்தி ’ இனிதுதவி செய்கிறது!

இப்போதும் தேவை இருக்கிறது ‘தந்திக்கு!          

 சிற்றூரில் ‘தந்தியென வந்தாலே மக்கள் 

அரற்றி அலறி அழுததொரு காலம்! 

அறிவியல்முன் னேற்றமின்று யாரும் அறிவார்!

சிறியராம் பிள்ளைகளும் சிற்றூரில் பேரூரில்                 

கைப்பேசி கையாளல் கண்டு  வியக்கின்றோம்!               

மெய்ம்மறந்தே மூழ்கியதில் மீளா விருப்பமுடன்        

காலத்தை வீணடிக்காக் கோலத்தர் யாரேனும் 

ஞாலத்தில் உள்ளாரோ  ஐயம் அரிதேதான்!

இவ்வாறு  ‘தந்தி’ இருந்தநிலை இக்காலம்

எவ்வாறு மாறிய(து) என்பதையும் கண்டோம்!                 

இதுவே உலகியல்(பு) ஏதொன்றும் மாறல்        

பொதுநெறியாம் மாறாதே பூவுலகில் என்றும்!     

 அமைதியுடன் கேட்ட அவையோர்க்கு நன்றி! 

நமைக்கவர்ந்த ‘தந்தி’ நனிமறைந்த தைப்பாட

நல்வாய்ப்பை நல்கிய நல்லாரை உள்ளிட்ட 

 எல்லாரும் வாழ்க இனிது. 

               - தமிழநம்பி  -

---------------------------------------------------------------------------------------------------------------


செவ்வாய், 6 ஜனவரி, 2026

தமிழ்காக்க நடவடிக்கை எடுப்பீர்!

 

தமிழ்காக்க நடவடிக்கை எடுப்பீர்!

முதுகலைப்பட்டந்தாங்கி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கணிப்பயிற்றுநர்கள் போன்ற பணிகளுக்குத் தேர்வுபெறத் தமிழ்மொழித் தேர்வில் வெற்றிபெறுவது கட்டாயத் தேவை என்று 2022-இல் தமிழ்நாட்டு அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கான 1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காகப் போட்டித்தேர்வை தமிழ்நாட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் 12.10.2025 அன்று நடத்தியது.

இதில் தேர்ச்சி பெற, தமிழ்மொழித் தேர்வில் 40% மதிப்பெண்கள் பெற்வேண்டியது கட்டாயமாகும். 40% தகுதி மதிப்பெண் பெறாதவர்கள், முதன்மைப் பாடத் தேர்வு எழுதினாலும் அந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யாமல் புறக்கணிக்கப்படும்.

இத் தமிழ்த் தகுதித் தேர்வை 2,20,412 பேர் எழுதியிருந்தார்கள். எழுதியவர்களில் ஏறத்தாழ 85,000 பேர் தேர்ச்சி பெறவில்லை என்று சிலரும், ஏறத்தாழ 84,000 பேர் தோல்வியுற்றதாக வேறுசிலரும் கூறுகின்றனர். துல்லியமான எண்ணிக்கை அதிகார அடிப்படையில் அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த முடிவு தமிழர் அனைவர்க்கும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது உண்மையாகும். முடிவாக, ஏறத்தாழ  36 விழுக்காட்டுத் (% ) தேர்வர்கள் தோல்வி அடைந்ததாகக் கூறுகின்றனர்.

                தமிழகத்தில் தாய்மொழியான தமிழ் பயிற்றுவிப்போர் -பயில்வோரின் தகுதிநிலையை மேற்குறித்த தேர்வுமுடிவுகள் கூறுகின்றன. இந்த இரங்கத்தக்க நிலைக்கு யார் காரணம்? ஓர் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் மிகவும் மனம் வருந்தி, “ஏழாம் வகுப்பில் பயிலும் ஒரு மாணவர்க்குத் தமிழ் நெடுங்கணக்குஅதாவது அ, , , ,………ஒள, ,   க், ங், ச், ஞ்,……..ற், ன் - சொல்லவும் எழுதவும் தெரியாத நிலையாகவே பள்ளிக்கல்வி நிலை இருக்கிறதுஎன்று கூறியதைக் கேட்கநேர்ந்தது. இது சற்றும் மிகையின்றிக் கூறப்படும் உண்மை நிலையாகும். அரசுப்பள்ளிகளின் நிலைமை இவ்வாறே உள்ளது. இதைப் பள்ளி ஆசிரியர் பலரும் ஒப்புக்கொள்வர்.

                இந்தநிலை, பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாதா? என்ன ஆக்க அடிப்படையிலான நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்? இந்தத் தமிழ்த் தகுதித்தேர்வு முடிவுகள் அவர்களுக்கும் தெரிந்துதானே இருக்கும்? ஆசிரியர்களின் நிலையே இரங்கத்தக்கதாய் இருக்கிறதே! இதுவரை பள்ளிக்கல்வித் துறை இவ்விழிநிலை போக்க ஏதாவது செய்திருக்கின்றதா?

                தமிழ் வாழ்க!’ என்று அரசுக் கட்டடங்களில் எழுதிவைத்தாலே தமிழ் வாழ்ந்துவிடுமா? மக்களை மயக்கி ஒப்போலை பெறும் வழியாகவன்றோ தெரிகிறது! இனியேனும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அதிகாரிகளும் விழிப்புற வேண்டும்! தமிழைக் காக்கும் உண்மையான முயற்சியாக மாணவர்க்கு முறையாகவும் சரியாகவும் தமிழைப் பயிற்றுவிக்கத் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்! முதலமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நெஞ்சை அழுத்தும் கவலையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.