புதன், 10 மார்ச், 2010

திருக்குறள் விளக்க மண்டிலப் பா

.என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர் 

இது பொருட்பால் படைச்செருக்கு அதிகாரத்தில் முதலாவது குறளாகும். குறள் எண்.771. பாவாணர் இக் குறளுக்குக் கூறும் உரையில்
             "ஒரு மறவன் தலைவன் மேல் வைத்த அன்புப்பெருக்கால், தன் மறத்தையும் தான் சேர்ந்த படையின் மறத்தையும் தலைவன் மேலேற்றிக் கூறியவையே இவை. படையின் வெற்றி படைத்தலைவன் வெற்றியாகக் கூறப்படுவது மரபாதலால், இங்ஙனம் கூறினான் என்க. 
            போரில் இறந்த மறவனுக்குக் கல்நட்டு, அதில் அவன் பெயரும் பெருமையும்பொறிப்பது பண்டை மரபு. ..... ஒரு மறவன் தன் திறத்தை மிகுத்துக் கூறுவது நெடுமொழி எனப்படும். 
            இதை வெட்சித்திணைக் கரந்தைப் பகுதித் துறையாகத் தலைதாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல்என்பர் தொல்காப்பியர் (தொல். பொருள். புறத். 5). 
            ஐயனாரிதனார் இதை நெடுமொழி கூறல்என்று கரந்தைப் படலத் துள்ளும், ‘நெடுமொழி வஞ்சிஎன்று வஞ்சிப் படலத் துள்ளும் அமைப்பார். இவற்றுள் முன்னது தன் அரசனை நோக்கியது. பின்னது தன் பகைவரை நோக்கியது" 
-         என்று விளக்குகிறார். 
         (வெட்சி ஆநிரை கவர்தல், கரந்தை ஆநிரை மீட்டல், வஞ்சி பகைவர் மண் கொள்ளுதல்)                                                                                                                                                 நெடுமொழி என்பது பெருமிதம். வஞ்சி மறவன் பெருமிதத்தால் தன்னை வியந்து கூறும் மொழி பற்றி இப்பெயர் பூண்டது இத்துறை. ஒரு மறவனால் நெடுமொழியாகக் கூறப்பட்டுள்ள இக் குறளை ஆறு அறுசீர் மண்டிலங்களில் விளக்கும்படி 'பன்மலர்' இலக்கிய மாத இதழ் கேட்டிருந்தது. அதன்படி எழுதப்பட்ட இந்த ஆறு அறுசீர் மண்டிலங்கள் பன்மலர் இதழ் 108இல் வெளிவந்தன :



மூத்த மாந்தன் உலகினிலே
     முன்னே பிறந்த மொழிக்குரியன்
பூத்துச் சிறந்தே பொலிவுற்ற
     புரையில் நாக ரிகங்கண்டான்
ஏத்தும் காதல் மானமுடன்
     ஈடில் வீர இயல்பாளன்
கூத்தும் இசையும் இயற்றமிழும்
     கூறாய்க் கொண்ட தமிழ்மொழியன்

ஒப்பில் வீரச் செம்மாப்பை
     உலகுக் குரைக்கும் ஒருகாட்சி
செப்பும் ஏழு சீருக்குள்
     சிறப்பாய்க் கண்முன் நிறுத்துகிறார்!
முப்பால் தந்த வள்ளுவனார்
     முதிர்ந்த முத்துக் குறளொன்றில்!
அப்பா! என்னே அருங்காட்சி!
     அவர்க்கே ஆகும் அருந்திறமே!

இரண்டு அரசர்க் கிடையினிலே
     ஏதோ இகலால் போர்மூண்டுத்
திரண்டு வந்த படையினரைத்
     தெரிந்தே ஊர்க்கு வெளியினிலே
அரணில் களத்தில் முழங்குகிறான்
     அங்கோர் மறவன் ஆர்ப்புடனே!
மிரண்டப் பகைவர் வெதிர்ப்புறவே
     விளக்கிச் சொன்னான் கைநீட்டி!

அங்கே காண்க அணியணியாய்
     அமைத்து நட்ட கற்களவை
இங்கெம் தலைவ ரெதிர்நின்றே
     இறந்த எண்ணில் வீரர்க்கே!
செங்கை வாளாற் சிதைவுற்றார்
     செறிந்தார் நடுகற் சீரணியாய்!
உங்கள் நன்மை உன்னியிதை
     உரைத்தேன் தெவ்விர் நில்லன்மின்!

நின்றார் எதிரில் கல்லாக
     நிற்ப தறிவீர் மாணாரே!
நன்றே கருதி உரைக்கின்றேன்
     நண்ணல் கருதீர் போரென்றே!
குன்றா உணர்வில் நெடுமொழியாய்க்
     கூறும் உரையால் தெளிவீரே!
என்னும் காட்சி விளக்கத்தில்
     இணையில் வீரம் இயம்புகிறார்!

எந்தச் சிறப்பைப் போற்றுவது?
     எதனை வியந்து கூறுவது?
முந்தைத் தமிழர் முழுவீரம்
     முன்னம் உணர்ந்து மகிழுவதா?
எந்தை ஐயன் வள்ளுவனின்
     இணையில் ஆற்றல் எண்ணுவதா?
இந்நாள் தமிழர் இழிநிலையை
     எண்ணி இரங்கிக் கவலுவதா?

----------------------------------------