திங்கள், 23 ஜூலை, 2018

“தமிழகத்தில் பார்ப்பனர்கள்” தமிழாக்க நூல் வெளியீட்டு விழாவில் (22-7-2018-இல் விழுப்புரத்தில்) தமிழநம்பி ஆற்றிய நூல் உருவாக்க உரை.

தமிழகத்தில் பார்ப்பனர்கள்தமிழாக்க நூல் வெளியீட்டு விழாவில் (22-7-2018-இல் விழுப்புரத்தில்) தமிழநம்பி ஆற்றிய நூல் உருவாக்க உரை.
அரியதொரு மொழியாக்க நூலின் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை ஏற்றிருக்கும் முன்னாள் அமைச்சர், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே! நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு விழுப்புரத்திற்கு வந்திருக்கினன்ற, அரியஆய்வுரை நிகழ்த்தவிருக்கின்ற திராவிடர்கழகத் தலைவர் விடுதலை நாளிதழின் ஆசிரியர் ஐயா அவர்களே! பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கு முரிய அவையினரே! நேர நெருக்கடியைக் கருத்திற்கொண்டு ஒவ்வொவரையும் தனித்தனியே குறிப்பிடாமல்,அவையோர் அனைவர்க்கும் பணிவான வணக்கத்தைத் தெரிவிக்கின்றேன்.
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மு.வி.சோமசுந்தரம் ஐயா அவர்கள், பதினொரு மாதங்களுக்கும் முன்னால், ‘Brahmin in the Tamolnadu’ என்ற ஆங்கிலநூலைப் பற்றிக் கூறி அதை மொழியாக்கம் செய்யும் முயற்சியைப் பற்றியும் கூறினார்கள். நாட்குறிப்புச் சுவடிகள் இரண்டில் எழுதி வைத்திருந்ததைக் காட்டி, மொழியாக்கம் செப்பமாகச் செய்ய உதவும்படி கேட்டுக் கொண்டார்கள்.                                                       
அன்பார்ந்த அவையினரே!                                                       ஆபிரகாம் தொ. கோவூர் என்னும் அறிஞர், மனநோய் மருத்துவர், மூடநம்பிக்கைகளை முனைப்புடன் எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி யூட்டிய பகுத்தறிவுப் பெருந்தகை ஆவார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய பல நூல்களில் ‘Begone Godmen” என்னும் நூலையும் “Gods demons and Spirits’ என்ற நூலையும் நான் விரும்பி, திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன்.

அந்நூல்களில், நிகழ்வாய்வுகள் உள்ளிட்ட கட்டுரைகள் பல இருந்தன. நிகழ்வாய்வுகள் என்றால் - case studies- அதாவது உளத்தியல் மருத்துவரான கோவூர் தம்மிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ள வந்த நோயாளிகள் எந்தவகை மனநோயால் தாக்கப்பட்டிருந்தனர் என்பதையும், அதற்கான காரணங்களையும், அந்நோயை அவர் எவ்வாறு குணப்படுத்தினார் என்பதையும் விளக்கிக் கூறியிருந்தவை. அக் கட்டுரைகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட உருப்படிகளை  22 ஆண்டுகளுக்கும் முன்னரே யான் மொழியாக்கம் செய்திருந்தேன்.

அவை, 1986-ஆம் ஆண்டு புதுவையில் தனித்தமிழ் அன்பர்கள் வெளியிட்ட ‘மதி’ மாத இதழிலும், புதுவைத் தனித்தமிழ்க் கழகப் பொறுப்பாண்மையினராகிய மதிப்பிற்குரிய சீனு..அரிமாப்பபாண்டியன் நடத்திய ‘தமிழருவி’ இதழிலும் வெளிவந்தன. அக்கட்டுரைகளுள், ‘உயிர்’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்த கட்டுரையும் ஒன்றாகும்.. அக்கட்டுரை, 1986- ஏப்பிரல் திங்கள் ‘மதி’ இதழில் வந்தது.  திராவிடர் கழக இதழாகிய ‘உண்மை’ இதழ், மதி இதழிலிருந்து அக்கட்டுரையை எடுத்து வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியைக் கூறக் காரணம் ஓரளவு தகுதியான, மொழியாக்கத்தில் முன்னரே யான் ஈடுபட்டிருந்ததைக் குறிப்பிடுவதற்காகவே!.

என் துணைவியார் இறந்த 40-ஆம் நாளில், 20-10-2017-இல் நானும் திருமிகு சோமசுந்தரம் ஐயாவும் இந்த, ஆங்கில நூலின் தமிழாக்கத்தில் ஈடுபட்டோம். ஐயா, அவர் எழுதி வைத்திருந்த கையெழுத்துப் படியைப் பக்கத்தில் வைத்திருப்பார், நாங்கள் இணைந்து மொழியாக்கம் செயத இந்நூல் அதிலிருந்து முழுவதும் வேறானதாகும். பொருள் குழப்பம் தோன்றிய சில இடங்களில், ‘ஐயா,, நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்’ என்று கேட்பேன். அவர் எழுதியிருந்ததைப் படிப்பார். அது பொருந்துவதாகத் தோன்றினால் அதை எடுத்தெழுதினோம். இல்லையேல் மறுபடியும் ஆழ்ந்து படித்துப் புதிதாக எழுதினோம்.

சோமசுந்தரம் ஐயா, இம்மொழியாக்க நூலில் எழுதியுள்ள தம் முன்னுரையில், இப்பணியின்போது காரசாரமான உரையாடல்கள் நிகழ்ந்ததனவென்ற உண்மையைக் குறிப்பிட்டுள்ளார். அவை மொழிநடை பற்றியோ, சொல்லாட்சிகள் பற்றியோ நிகழ்ந்தவை என்பதைக் காட்டிலும் மொழியாக்க நிலையில் நிகழ்ந்தவை என்பது பொருந்தும்.  
ஏறத்தாழ ஏழரை மாதஙகள்- காலையில் சரியாக 9 மணிக்குச் சென்றுவிடுவேன். என்னுடைய வண்டிப் பழுதானாலும் பேருந்தோ அல்லது பங்குத்தானியோ பிடித்துப் போய்விடுவேன். இடையறாது, பதினொன்றரை மணிவரை தொடர்ந்து இப்பணியில் ஈடுபடுவோம்.

முதலில், ஆங்கில நூலில், கால்பக்கமோ அரைப்பக்கமோ மொழியாக்கம் செய்த்தைக். கரட்டுப்படியாக rough copy-ஆக பழைய தாள்களில் எழுதுவேன். பிறகு, அதனைச் செப்பமாக்கிய பின்னர்ச் செப்பப் படியாக வெள்ளைத் தாளில் படியெடுத்து எழுதுவேன். இவ்வாறு, 285 பக்கங்கள் கரட்டுப் படியாகவும் 285 பக்கங்கள் செப்பப்படியாகவும் மொத்தம் 570 பக்கங்கள் கையால் எழுதினேன். இப் பணியின் போது ஆறுக்கும் மேற்பட்ட அகராதிகளைப் புரட்டிப் பயன்படுத்தித்தான் மொழியாக்கம் செய்தோம்.

அவை, கணிப்பொறியில் தட்டச்சு செய்து வந்தபின், இருவரும் மெய்ப்புப் பார்த்தோம் – பிழை திருத்தினோம். பிழைதிருத்தப் பணியை இன்னொருவரும் பார்க்கச் செய்தோம். இவ்வாறு செப்பம் செய்த பிறகு சோமசுந்தரம் ஐயா, மொழியாக்கப் படியை நூலாக ஆக்க சென்னைக்கு அனுப்பினார்கள்.

இந்தப் பணியில், பொருள் சார்ந்த பலனேதும் எதிர்பார்க்காமல், பெறாமல் ஈடுபட்டதை மகிழ்வோடும், மனநிறைவோடும் பெருமையோடும் இங்குக் கூறிக்கொள்கின்றேன்.

இப்பணீயில் முழுமையாக ஈடுபட்டதற்கான காரணத்தைக் கூறி உரையை முடித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நல்லபாம்பும் வரிப்புலியும் கூட மாறலாம் ஆனால் பார்ப்பனர் மாறமாட்டார்கள் என்ற பொருளில் தந்தை பெரியார் கூறிய கருத்தைப் படித்தது நினைவில் இருக்கிறது. பாவலரேறு பெருஞ்சித்திரனார், ‘ஆரியப் பார்ப்பனர் திருந்தினர் என்றே ஆருனக் குரைத்தனர்? அவர் குணம் ஒன்றே!’ - என்று பாடியுள்ளார்.

அக்கருத்துக்களுக்கு ஒப்ப, பேராசிரியர் ந.சுப்பிரமணியனாரின் இந்த நூல், பார்ப்பனர் அறிவாளிகள், திறமையாளர்கள், ,எளிதில் எதையும் பற்றிக்கொள்பவர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என்று பெருமை பேசிக்கொள்கிறது என்றபோதிலும்,

பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை, தம்மை நிலைநிறுத்திக் கொள்ள அவர்கள் செய்த தந்திரங்களை, அவர்கள் செய்த நம்பிக்கை இரண்டகங்களை, - நம்பிக்கைத் துரோகங்களை -, அவர்களால் தமிழர்க்கு நேர்ந்த கேடுகளைப் பற்றிய உண்மைகளை வேறெப்போதும் இல்லாத வகையில் ஒப்புக்கொள்ளுகின்ற நிலையில், உண்மையாகக் கூறுகிறது என்பதால், இதுவரையில் காணாத தனிச்சிறப்பும் புதிய புதுமையுமுடைதாக இருந்தததால், இவற்றைத் தமிழர் அனைவரும் அறிந்துகொள்ள வாய்ப்பேற்படுத்தித் தரவேண்டும்.– என்ற உந்துதலே இப்பணியில் ஈடுபடக் காரணம் ஆயிற்று.

இந்நூலைப் படிப்போம், மற்றவர்களுக்கும் கூறுவோம் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி முடித்துக்கொள்கின்றேன். நன்றி! வணக்கம்.

============================================================

செவ்வாய், 5 ஜூன், 2018

தங்கப்பா ஐயா மறைந்தார்!

தங்கப்பா ஐயா மறைந்தார்!




வாழ்க்கையின் நோக்கம் அன்பு, அன்பு, அன்பு செலுத்தலே என வலியுறுத்திய அன்பே!

இயற்கையோடியைந்த வாழ்க்கையே வாழ்க்கை என விளக்கிய எங்கள் ஆசானே!

சுற்றுச்சூழல் தூய்மையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த சிற்றூர் வரப்பு வாய்க்கால் மரநிழல் விரும்பியே!

இயற்கையைத் துய்க்க - எழில் உணர்ந்து மகிழ்ந்திட - எண்ணற்ற மாணவரை ஆற்றுப்படுத்திய ஏந்தலே!

தனித்தமிழைத் தாங்கி நின்று தாய்மொழியைக் காத்துயர்த்தத் தளராது பாடாற்றிய அறிஞனே!

செந்தலையார் குறிப்பிட்டது போன்று, தமிழின் அடையாளமாகத் திகழ்ந்த செவ்வியரே!

தமி.ழ்காத்த கேடகமே! தமிழ்ப்பகை அஞ்சி ஒடுங்க வைத்த வாளே!

கழக்கக்காலப் பாவலரை ஒத்த பாவலரே!

ஒருதனிச் சிறப்புமிக்க மொழிபெயர்ப்பாளரே!

தன்னேரில் கட்டுரைகளால், தெள்ளிய தெளிதமிழ் ஆசிரிய உரைகளால் 
தமிழ்ப்பகை அரசைச் சம்மட்டி அடியாய்த் தாக்கி இடித்துரைத்த எழுத்தாண்மையரே!

தமிழ்காக்கத் தாவி நின்ற கால்களே!

தமிழ் பகைக்கெதிராய்ப் புடைத்தெழும் தோள்களே!

எழுத்துப் பேச்சோடு நில்லாமல் களத்தில் முகத்து நின்ற போராளியே!

இந்திய இலக்கிய அமைப்பு இருமுறை தந்த பரிசெல்லாம் உங்களைச் சரியாக மதிப்பிட்டுவிடவில்லை! 
இதோ, உங்களை அறிந்த எங்கள் உள்ளம் கலங்கித் தவித்து கண்ணீர் விடுகிறதே அங்கேதான் உள்ளது உங்கள் மதிப்பு!

எல்லா நிலைகளிலும் தமிழும் தமிழரும் தமிழ்நிலமும் தாக்குதலுக் குள்ளாகியுள்ள நிலையில், ஏன் ஐயா பிரிந்து சென்றீர்கள்?

உங்களை நினைவில் நிறுத்தி, நீங்கள் பாராட்டிப் போற்றிய பாவலரேறுவை நினைவில் நிறுத்தி, தமிழ் இளைஞர் போராடுவர்!

தமிழ் மீட்க, தமிழர் நலன் மீட்க, தமிழ் நிலத்தை மீட்க எத்தகைய ஈகத்துக்கும் அணியமாகித் தமிழிளைஞர் போராடுவர்! 

வெற்றி காண்பர்!

போய்வாருங்கள் ஐயா!

நன்றி!
அன்பன்,
தமிழநம்பி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
(தலைசிறந்த தமிழறிஞரும் பாவலருமான ம.இலெ.தங்கப்பா 31.5.2018 அதிகாலையில் காலமானார்)
----------------------------------------------------------------------------------------------------------------------------------