ஞாயிறு, 23 டிசம்பர், 2007

திருக்குறளில் மூன்றுகுறள்கள்

            திருக்குறளைப்பற்றி இரவரெண்டு பர்சிவெல் என்னும் மேற்கத்திய அறிவர் 'இதற்குச்சமமாகிய நூல் மக்களாய்ப்பிறந்தோர் பேசும் வேறு எம்மொழியிலும் காணமுடியாது' என்பார்.                                                                             'எல்லாப்பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை' என்பார் மதுரைத் தமிழ்நாகனார். திருக்குறளில் எல்லாக்குறள்களுமே வாழ்வாங்கு வாழ வழிகூறும் ஈடு எடுப்பற்ற அறிவு வெளிப்பாடுகள் தாம்! மாந்தரை நெறிப்படுத்தும் வழிகாட்டிகளே! வாழ்வின் உண்மையான இன்பநுகர்ச்சியை எடுத்துரைக்கும் பட்டறிவுப் புதையல்களே! ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒன்றிரண்டு குறள்களேனும் நேரடிநாகவோ மறைமுகமாகவோ ஏதேனும் ஒருவகையிலேனும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கக்கூடும். அவ்வகையில், தமிழர் பெரும்பாலரை வழிநடத்திப் பெருமிதம் கொள்ளச்செய்திருக்கும் மூன்று குறள்களை, -அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பால்களில் ஒவ்வொனுறிலும் ஒவ்வொரு குறளை- இப்போது காண்போம்.                                                                        

1.     ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். - குறள்214.

இக்குறள் அறத்துப்பாலில் ஒப்புரவறிதல் அதிகாரத்தில் நான்காம் குறளாகும். இதன் பொருள் :
மாந்தராய்ப்பிறந்தவர் அனைவரும் ஒப்பானவர், சமமானவர், ஒத்தவர் என்பதை அறிகின்றவனே உயிர்வாழ்கின்றவன் ஆவான். மற்றையான் செத்தாருள் ஒருவனாக - நடைப்பிணமாக - வைத்து எண்ணப்படும் என்பதாகும்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று 972-ஆம் குறளிலும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். எல்லா உயிர்களும் சமமானவை என்று அறியாதவன் நடைப்பிணமாகக் கருதப்படுவதால், அஃறிணையைக் குறிப்பிடுவதைப் போல 'செத்தாருள் வைக்கப்படும்! ' என்று கூறுகிறார். உரையாசிரியர் மணக்குடவரும் 'பெருமை குலத்தினால் அறியப்படாது' என வள்ளுவர் கூறுவதாக தெளிவிக்கிறார்.
'பெருமையும் சிறுமையும் தான்தர வருமே' என்று 'வெற்றிவேற்கை'யும் கூறும். 'ஆக்கும் அறிவினல்லது பிறப்பினால் மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க’ என நன்னெறியும் நவிலும்.
தந்தை பெரியார், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் பெருங் கொடுமையைத் தம் வாணாள் முழுமையுங் கடுமையாக எதிர்த்துவந்ததோடு அதுகுறித்த அறிவையும் உணர்வையும் ஊட்டி, மாந்தருக்குள் வேறுபாடு கற்பித்தக் கயமையையும் கடுமையாகச் சாடிவந்ததைத் தமிழர் நன்கறிவர். பிறப்பிலேயே உயர்வு தாழ்வெனறு மாந்தரைக் கூறுபோடும் ஆரிய வேதங்களும் ‘மனுதர்மம்’ முதலான மாந்தநேயமற்ற, ஒருசாரார் உயர்வுக்கே எழுதப்பெற்ற நூல்களும், இக்காலத்தும் நயன்மை உணர்வற்ற கரவான கழிமிகு தன்னலப் போக்கரால் உயர்த்திப் பிடிக்கப்படுவதையும் நடுவுநிலை நன்னெஞ்சர் விளக்கி வருகின்றனர்.
இவ்வகைக்கொடிய நிலைகளைக் கண்டறிகிறபோதெல்லாம், -காரறிவாளர் மிகத் திறமையாகத் திணித்த சாதியால் கூறு பட்ட தமிழர்கள் தமக்குள்ளேயே தாக்கிக்கொண்டு அழிகின்ற இழிவைக் காணும்போதெல்லாம் - இக் குறள் கூறும் உண்மையைத் தமிழர்களே உணர்ந்துதெளிந்திடாமை நெஞ்சைப் புண்ணாக்கி நோவுறுத்துவதாக இருந்துவருகிறது.
2.     புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. குறள் 780.                                                                        இக் குறள் பொருட்பாலில் படைச்செருக்கு அதிகாரத்தில் பத்தாம் குறளாகும். புரத்தல் என்றால் காத்தல், நிலைபெறுத்தல் என்று பொருள். புரந்தார் என்பவர் காத்தவர், நிலைபெறச் செய்தவர் ஆவார். புரந்தார் முற்காலத்தில் பெற்றோராகவோ, அரசராகவோ, வேறு சான்ன்றோராகவோ இருந்திருக்கலாம்; இக்காலத்தில் பெற்றோராகவோ வேறு உறவினராகவோ நடுவுநிலை சான்ற அறிஞராகவோ பிறராகவோ இருக்கக்கூடும்.
‘தம்மைப் பெரிதும் அன்பருளோடு ஓம்பிப் பாதுகாத்தவரும் நிலைபெறச் செய்தவருமாகியவர் கண்ணீர் பெருகிச் சொரிந்து அழுகின்ற வகையில், உயர்ந்த ஓர் நோக்கத்திற்கான செயற்பாட்டின் பொருட்டுச் சாகப்பெறின், அச்சாவு இரந்தாயினும் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது’ – என்பதே இக்குறளின் பொருளாகும்.
இரத்தலைவிட இழிவானது வேறில்லை. ‘ஈ என இரத்தல் இழிந்தன்று’ எனப் புறநானூறு கூறும் (204). ‘ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்ததில்’ (கு.1066) எனப் பிறிதோரிடத்தில், மானம்தீர வரும் இரப்பிற்கு அஞ்சிடக் கூறிய திருவள்ளுவப் பேராசான், புறனடையாக, அத்தகைய மானம்தீர வரும் இரப்பும் புரந்தார் கண் நீர்மல்க இறப்பதற்காக இரப்பதாயின், தகுதியானதே என்று தெளியக் கூறுகிறார்.
பொதுவான சாவாக இருந்தால், உறவினரும் நண்பரும் மட்டுமே வருந்தி அழுவர். தாய்நாட்டிற்காகவோ, தாய்மொழிகாக்கவோ, தாம்பிறந்த குடிநலன் காக்கவோ - மக்களினத்தின் நலத்திற்காக, இணையற்ற உயர்ந்த புகழ்விளைக்கும் செயற்பாட்டில் உயிர் துறக்கின்றவர், மக்கள் பலவாறு பாராட்டிப் போற்ற, நினைவுச்சின்னமாக நிலைத்திருப்பர். சிறந்த பெருமையையும் பயனையும் விளைக்கும் அவ் உயிர்துறப்பு இரந்தாயினும் கொள்ளத்தக்கது என்பதே நுண்ணறிவுத் தெள்ளியர் வள்ளுவனாரின் தேர்வுரையாகும்.
தாய்மொழியைக் காப்பதற்காகத் தம் இன்னுயிரையும் ஈந்த ஈகமறவர்களின் உயிரிழப்புகளும், இனப்படுகொலைகளை எதிர்த்துப் போர் புரிந்துவரும் தமிழீழ விடுதலை மறவர் மறத்தியரின் வீரச்சாவுகளும் இக்குறளை என்றென்றும் நினைவில் நிலைக்கச்செய்துவிட்டன.                                                                                            
3.     தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. குறள் 1107.                                                                                  இது, காமத்துப்பாலில், புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில் ஏழாம் குறளாகும். இக்குறளின் பொருள் : அழகும் ஒளிறும் மாநிறமும் பெற்ற அருமை நிறைந்த காதலியொடு கொள்ளும் புணர்ச்சித்தழுவல்,- தமக்குச்சொந்தமான உரிமை இல்லத்தில் இருந்துகொண்டு, தம்முடையசொந்த முயற்சியால் முறையாக ஈட்டிய வருவாயைக்கொண்டு சமைத்து உருவாக்கப்பட்ட உணவைத், தாமும் விருந்தினருமாக, நிறைவாரப் பகுத்துஉண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் இணையானது - என்பதாகும்.                                                         ஈண்டுத் திருவள்ளுவப் பெருந்தகை வேறுசில இடங்களில் கூறியிருக்கும் கீழ்க்காணும் கருத்துக்களும் ஒப்புநோக்கத்தக்கன.                                                                    * முயற்சிசெய்து ஈட்டியபொருள் முழுவதும் தகுதியுடையார்க்கு உதவி செய்வதற்கே ஆகும் – (கு.212)                                                                                                               * முறையான முயற்சியால் கிடைத்தது தெளிந்த நீர் போன்ற கூழே ஆயினும் அதனை உண்பதைவிட இனிமையானது வேறில்லை – (கு.1065)                                       * எப்போதும் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீயநோய் அணுகாது. – (கு.227)                                                                                          * கிடைத்த உணவை இயன்றவரைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தானும்உண்டுப் பலவகை உயிர்களையும் பாதுகாத்தல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையான அறமாகும். – (கு.322)
           இவற்றுடன், ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்னும் புறநானூற்று வரியும் (பு.17), மணிமேகலை வரியும் (மணி.1255) ஒப்புநோக்கத் தக்கனவாம். மாந்தர் வாழ்வில் மிகஉயர்ந்த இனிமையை, இன்பநிலையைப் பகுத்துண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் எனக்கூறும் இக்குறளைப் படித்தறியும்போது, ஈடிணையற்ற நாகரிகம் பண்பாடு கொண்ட சான்றாண்மையராக முன்னோர் இருந்திருக்கின்றனர் என்ற எண்ணத்தால் நெஞ்சம் பெருமையால் இருமாந்து பூரிக்கும். ஆனால், அதேபோழ்தில், இன்றுள்ள தமிழரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆற்றொணாக் கவலைகள் நெஞ்சை அழுத்தும். இவை அடிக்கடி நிகழும்.                                                             **************************************************************************                                                                                                                         உதவிய நூல்கள் :                                                                                                                                              1. பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிப்பெருமாள், பரிதியார் உரைகள்.                                2. மு.வ.-வின் ‘திரக்குறள் தெளிவுரை’                                                                                                    3. பாவாணரின் ‘திருக்குறள் மெய்ப்பொருளுரை’                                                                                    4. வ.சுப.மா.-வின் ‘வள்ளுவம்’                                                                                                                    5. ப.அருளி-யின் ‘நம் குறள்மறை கூறும் இல்வாழ்வு இன்பியல்’                                                           நன்றி!.