பாயிரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாயிரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜூலை, 2009

நூல் எழுதுவோர், ‘பாயிரம்’ அறிவோம்!

      நூல் எழுதுவோர், பாயிரம் அறிவோம்!


பாயிரம் என்பது முகவுரை.  எந்த நூல் எழுதுவதாயினும் அந்த நூலுக்குப் பாயிரம் எழுத வேண்டுமென்பது மரபு. சிறந்த நூல்களுக்கு முகவுரை இன்றியமையாதது. அதனால் நூலை ஆராய்ந்து, அதன் முன்னதாக, அழகிய நுட்ப உரையாக, அணிந்துரையை, எந்த ஒரு நூற்கும் பெரிதும் இயைபுபட நந்தமிழ்ப் பெரியோர் வைத்தனர்.  
ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே என்கிறது நன்னூல். ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும், பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப் படாது என்பதே இதன் பொருளாகும்.

பாயிரத்தின் தேவை
பாயிரம், நூலிற்குப் புறத்தே உரைக்கப் படுவதால், புறவுரையாகும். கணவனுக்கு நல்ல மனைவி போல இன்றியமையாச் சிறப்பினதாகவும் அழகிய பெரிய நகரத்திற்கு வடிவமைந்த வாயில் மாடம் போல அழகியல் சிறப்பினதாகவும் அமைவது பாயிரம் என்பர்.
மேலும், பாயிரம் யானைக்குப் பாகன் போலவும், வானத்திற்கு விளக்கமாகிய நிலவும் கதிரவனும் போலவும் இன்றியமையாச் சிறப்புடையது என்றும் கூறுவர். பாயிரமின்றி நூல் படிப்பார், குன்று முட்டிய குருவியைப் போலவும் மலைப் பகுதிகளில் மாட்டிக் கொண்ட மான் போலவும் இடர்ப் படுவராம்.

பாயிரம்
பாய் என்ற சொல் பரந்து கிடப்பது என்று பொருளுடையது என்றும்  இதனை அடியாகக் கொண்டு பிறந்த பாயிரம் என்ற சொல், பரந்து விரிந்து செல்லும் நூலின் தொடக்கப் பகுதி என்று பொருள்படும் என்றும் அறிஞர்  கூறுவர். 
பாயிரத்திற்கு மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தரும் விளக்கத்தைக் காண்போம்: போர் மறவர் போர்க்களத்தில் முதலில் பகைவரை விளித்துக் கூறும் நெடுமொழி என்னும் மறவியல் முகவுரையைப் பாயிரம் குறித்தது. பின்பு பொருள் விரிவாக்கமாக நூலின் முகவுரையைக் குறித்தது என்கிறார். பயிர்தல் என்றால் ஊர்கின்ற விலங்குகளும் பறவைகளும் தமக்குள் ஒன்றை ஒன்று அழைத்தல்.
பயிர் > பயிரம் > பாயிரம் = அழைப்பு : போருக்கு அழைக்கும் முகவுரை, நூலின் முகவுரை.

பாயிரம், பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம் என இரண்டு வகையினதாகும்.

பொதுப் பாயிரம்
எல்லா நூல்களின் முன்பும் பொதுவாக உரைக்கப் படுவது பொதுப் பாயிரம். நூலுள் சொல்லும் பொருளல்லாத, நூலின் இயல்பு, நூலாசிரியனின் இயல்பு, கூறுகின்ற முறை, படிப்போர் இயல்பு, படிக்கும் முறை ஆகிய ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரமாகும்.
( கற்பிக்கப்படும் நூலாயின், நூல், கற்பிக்கும் ஆசிரியன், கற்பிக்கும் முறை, கற்கும் மாணவன், கற்கும் முறை ஆகிய ஐந்தினையும் பொதுப் பாயிரம் விளக்கும்)

சிறப்புப் பாயிரம்
பொதுப்பாயிரத்தின் ஐந்து கூறுகளும் எல்லா நூல்களுக்கும் பொதுவாய் கூறப்படுவதாகும். அவையெல்லாம் நூலுள் சொல்லும் பொருளல்லாத புறப்பொருளைக் கூறுவன.
அப் பொதுப் பாயிரம் போலன்றி நூலிற் சொல்லப் படுகின்ற பொருள் முதலிய உணர்த்துவது சிறப்புப் பாயிரமாகும். இப் பாயிரம், நூலுக்கு இன்றியமையாததாகும். அணியிழை மகளிர்க்கு, அணிகளில் சிறந்த ஆடை போல நூலுக்குச் சிறப்பானது சிறப்புப் பாயிரம் என்பர்.

சிறப்புப்பாயிரத்தில் கூறுவன
     நூலாசிரியர் பெயர், நூல் வந்த வழி, தமிழகம் முதலாக நூல் வழங்கப்படும் நிலப்பரப்பு, நூலின் பெயர், நூலின் வகை அல்லது கட்டமைப்பு, நூலிற் கூறப்பட்டுள்ள பொருள், நூல் யாருக்காக எழுதப்படுகிறது என்ற குறிப்பு, நூலால் பெறக்கூடிய பயன் ஆகிய எட்டுச் செய்திகளையும் சிறப்புப் பாயிரம் செப்பமாகக் கூறும்.
      இவற்றுடன் நூல் எப்பொழுது, எவ்விடத்தில், எக்காரணம் பற்றி எழுதப்பட்டது என்பனவும் கூறப்படும்.
      மேற்கண்ட பதினொரு குறிப்பையும் ஒருங்கேயேனும் ஒன்றிரண்டு குறைவாகவேனும் கூறி, அந்நூலைச் சிறப்பிப்பதும் மதிப்புரையும் சிறப்புப் பாயிரமே. 

சிறப்புப்பாயிரத்தை எழுதத் தகுந்தோர்
     நூலாசிரியரின் ஆசிரியர், நூலாசிரியரோடு உடன் பயின்றவர், நூலாசிரியரின் மாணவர், நூலின் உரை ஆசிரியர் சிறப்புப் பாயிரம் எழுதுதற்கு உரியோர் ஆவர்.
      இதுகாறும் தோன்றாத சிறந்த நூல்களைப் படைத்து, பல துறைகளிலும் நிறைவான புலமையைப் பெற்றிருந்தாலும் ஒருவர் தம்மைத்தாமே புகழ்ந்து தம் நூலில் தாமே சிறப்புப் பாயிரம் எழுதிக் கொள்ளுதல் பெருமைக்குரிய தகுதி ஆகாது.
      ஆயினும் கடவுள் வணக்கம், அவையடக்கம்,  நூற் பொருள், நூல் வந்த வழி, நூற் பெயர் முதலியவற்றை நூலாசிரியர் கூறுவதே பொருத்தம் ஆகையானும் அவை எவ்வகையினும் தற்புகழ்ச்சிக்கு இடந் தராமையானும் அவற்றை நூலாசிரியர் கூறுவது தக்கது என்று கொள்ளப்படும். அவ்வாறு கூறுவது தற் சிறப்புப் பாயிரம் என்று பெயர் பெறும்.

பாயிரத்தின் பெயர்கள்
     மேற்கூறிய பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் இருவகைக்கும் பொதுவாகவும் சிறப்பாகவும்பல பெயர்கள் உள்ளன. அவை, முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, பாயிரம் என்னும் எட்டாம். இவற்றின் பொருள் விளக்கம் வருமாறு:

  1. முகவுரை : இது நூலுக்கு முகத்தைப் போன்று இருப்பது. பெரும்பாலும்       நூல், ஆசிரியன், பதிப்பு முதலியவற்றின் வரலாற்றைக் கூறுவது.

  1. பதிகம் : இது நூலாசிரியனின் பெயர், நூல் வந்த வழி முதலிய பத்து அல்லது பதினொரு குறிப்புகளைத் தருவது.

  1. அணிந்துரை : நூலுக்கு அணியாக (அழகாக) அமைவது.

  1. நூன்முகம் : இது நூல் முகத்து உரைக்கப் படுவது.

  1. புறவுரை : நூலின் கருத்து அல்லாமல் நூலோடு தொடர்புடைய செய்திகளை வரலாற்றை எடுத்துரைப்பது.

  1. தந்துரை : இது நூலிற் சொல்லப்படாத பொருளைத் தந்துரைப்பது. பேரறிஞர்களின் முன்னுரை பெரும்பாலும் தந்துரையாக இருக்கும்.

  1. புனைந்துரை : இது நூலின் சிறந்த கூறுகளை எடுத்துரைத்துப் போற்றுவது. ( புனைதல் = சிறப்பித்தல், புகழ்தல்)

  1. பாயிரம் : இது முதன்முதல் பொருகளத்துப் போர் முகவுரையாகப் பகைவரை விளித்துத் தம் வலிமைச் சிறப்பைக் கூறும் நெடுமொழியைக் குறித்தது. பின்பு நூல் முகவுரைக்கும் வழங்கத் தலைப்பட்டது.

இக் கால நூல் வழக்கில், புறவுரை, பாயிரம் என்னும் இரண்டு பெயர்களும் பொதுப் பாயிரத்திற்கும் சிறப்புப் பாயிரத்திற்கும் பொதுவாக உள்ளன. மற்றவை சிறப்புப் பாயிரத்திற்கே சிறப்பாக உள்ளன்.

      உரைமுகம், தோற்றுவாய், முன்னுரை, பதிப்புரை, மதிப்புரை, சாத்துப்பா (சார்த்துப்பா) முதலிய பெயர்கள் இக்காலத்து எழுந்த புது வழக்கு. இவற்றுள் முன்னிரண்டும் தற்சிறப்புப் பாயிரத்தையும் பின் மூன்றும் சிறப்புப் பாயிரத்தையும், இடையொன்றும் அவ்விரண்டையும் சாரும். சாத்துப்பா என்பது செய்யுள். ஏனைய உரைநடை. என்று மொழிநூற் கதிரவன் பாவாணர் விளக்கிக் கூறுகிறார்.  
....................................................................................................................................................
உதவிய நூல்களும் இயற்றியோரும்:
1, தொல்காப்பியம் -  எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை.
2. நன்னூல் எழத்ததிகாரம்  தமிழண்ணல் உரை.
3. தேவநேயம் -10 தொகுப்பாசிரியர் : புலவர் இரா.இளங்குமரன்.
உதவியோர்க்கு உளமார்ந்த நன்றி.