பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 செப்டம்பர், 2016

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் காட்டும் தமிழின் சொற்சிறப்பு!



முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் காட்டும்
தமிழின் சொற்சிறப்பு!




     பிறமொழிச்சொற்கள் உருவத்தை மட்டுமே காட்டுவன. தமிழ் மொழிச் சொற்கள் உருவத்தையும் பருவத்தையும் காட்டுவன...

பேதை          பெண் 5 ஆண்டுக்கும் கீழ்
பெதும்பை      பெண் 10 ஆண்டுக்கும் கீழ்
மங்கை         பெண் 16 ஆண்டுக்கும் கீழ்
மடந்தை        பெண் 25 ஆண்டுக்கும் கீழ்
அரிவை        பெண் 30 ஆண்டுக்கும் கீழ்
தெரிவை       பெண் 35 ஆண்டுக்கும் கீழ்
பேரிளம் பெண்  பெண் 45 ஆண்டுக்கும் கீழ்

பெண் என்ன? ஆண் என்பதைத்தான் பாருங்கள்:

பாலன்         ஆண் 7 ஆண்டுக்கும் கீழ்
மீளி            ஆண் 10 ஆண்டுக்கும் கீழ்
மறவோன்      ஆண் 14 ஆண்டுக்கும் கீழ்
திறலோன்      ஆண் 15 ஆண்டுக்கும் கீழ்
காளை         ஆண் 16 ஆண்டுக்கும் கீழ்
விடலை        ஆண் 30 ஆண்டுக்கும் கீழ்
முதுமகன்      ஆண் 30 ஆண்டுக்கும் மேல்.

     இவ்வாறு பன்னிரு பாட்டியல் ஆண்களுக்கும் ஏழு பருவப் பெயர்களைத் தருகிறது. ஆண்களின் பருவத்தைப் பின்வருமாறும் கொண்டு கூறலாம்.

பிள்ளை        ஆண் குழந்தைப்பருவம்
சிறுவன்        ஆண் பாலப்பருவம்
பையன்         ஆண் பள்ளிப்பருவம்
காளை         ஆண் காதற்பருவம்.
தலைவன்      ஆண் குடும்பப்பருவம்
முதியோன்     ஆண் தளர்ச்சிப்பருவம்                     
கிழவன்         ஆண் மூப்புப்பருவம் ...

     ஆண் பெண் மட்டுமல்ல; பூ என்பதை எடுத்துக்கொள்ளுங்கள்; பிளவர் என்பர் ஆங்கிலேயர். புஷ்பம் என்பர் வடமொழியாளர். அவ்வளவுதான்; உருவத்தையும் பருவத்தையும் சேர்த்துக்காட்ட அவர்களிடம் சொற்களில்லை. தமிழிற் பாருங்கள்:

அரும்பு         பூ    அரும்பும் நிலை
மொட்டு        பூ    மொக்குவிடும் நிலை
முகை          பூ    முகிழ்க்கும் நிலை
மலர்           பூ    மலரும் நிலை
அலர்           பூ    மலர்ந்த நிலை
வீ              பூ    வாடும் நிலை
செம்மல்        பூ    வதங்கும் நிலை

     எப்படி தமிழில் உள்ள சொற்களின் சிறப்பு!... இலை என்ற உருவத்தையும் பருவத்தையும் காட்டி மகிழ்விக்கும் சொற்கள்:

கொழுந்து       இலை     குழந்தைப்பருவம்
தளிர்           இலை     இளமைப்பருவம்
இலை          இலை     காதற்மருவம்
பழுப்பு          இலை     முதுமைப்பருவம்
சருகு           இலை     இறுதிப்பருவம்....

     இதிலும், ஆல், அரசு, அத்தி, மா, பலா, வாழை முதலியவற்றின் இலைகளுக்கு இலை என்று பெயர்.
அகத்தி, பசலை முதலியவற்றின் இலை இலையாகாமல் கீரை எனப் பெயர் பெறும்.
     மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் பூண்டு என்று பெயர்.
     அறுகு, கோரை முதலியவற்றின் இலைகள் புல்லாகிவிடும்.
நெல், வரகு முதலியவற்றின் இலைகள் தாள் என்றாகும்.
     மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் பெயர் இலை அன்று, தழை.
     சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகள் இலையாகா; அவற்றின் பெயர் மடல்.
     கரும்பு நாணல் முதலியவற்றின் இலைகள் இலையாகா; அவற்றின் பெயர் தோகை.
     தென்னை, பனை, ஈந்து, கமுகு முதலியவற்றின் இலைகள் இலையெனப் பெயர் பெறா; அவற்றின் பெயர் ஓலை.
     என்னே தமிழின் சொல்வளம்!....

(நூல்; தமிழின் சிறப்பு, ஆசிரியர்: கி.ஆ.பெ.விசுவநாதம், தொகுப்புநூல்: முத்தமிழ்க் காவலரின் அறிவுக்கு உணவு, பக்கம் 220,221,222., வெளியிட்டோர்: பெரியண்ணன் நூலகம், நல்லாமூர், விழுப்புரம் வட்டம்)
------------------------------------------------------------------------