வியாழன், 29 ஜனவரி, 2026

வள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்? எதைத்தான் கேட்டோம்?

 

வள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்? எதைத்தான் கேட்டோம்?



திருவருட்பே ரொளிவள்ளல் இராமலிங்க அடிகளெனும்

திருப்பே ராளர்

மருளுறுத்தும் தெய்வியத்தில் கண்டபல பொய்ம்மைகளை

மறுத்துச் சொன்ன

ஒருதனிச்செஞ் சிறப்பார்ந்த தூய்துறவி துணிவார்ந்தே

உண்மை கூறி

உருகிடுநல் அருளுணர்வால் உலகத்தார் உள்ளத்தில்

உயர்ந்த பெம்மான்!

வழிவழியே வந்தபல துறவுருவர் மொழிமறுத்து

வழக்கம் மாற்றி

இழிபழிசேர் சாதிமதப் பொய்யினிலே புகுத்தாமல்

இருள்சேர்க் காமல்

கழிபழியாம் வேற்றுமைகள் களைந்துபொது உணர்வுடனே

கடமை ஆற்ற

செழிபிழிவாய் ஒற்றுமைதோய் தூயதொரு நல்லவழி

சிறப்பைச் சொன்னார்!

ஒருதெய்வம் ஒளியென்றார் உருவுமுதற் படியென்றார்

உண்மை நேய

அருண்மிகுத்தே ஆருயிர்கட் கெல்லாம்நாம் அன்புசெய

அறிவும் சொன்னார்!

திருக்கோயில் மேளஇசை பழந்தேங்காய் படையலெலாம்

தேவை இல்லை,

திருத்தமிலா ‘வேதாக மம்புராண’ங் குழப்பமெனத்

தெரிந்து சொன்னார்!

கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போகவெனக்

கடிந்து சொன்னார்!

தண்ணருள்கொண் டெவ்வுயிர்க்கும் பசிபோக்கல் வேண்டுமென்றார்!

தன்னைக் கூட

விண்தெய்வம் எனமக்கள் சுற்றமனம் வெம்பிநொந்தார்!

விழைவின் மீறி

வெண்மையினால் கொன்றுபலி யிடுங்கொடுமை கண்டஞ்சி

விடவும் சொன்னார்!

தருக்கியசங் கரரடங்க தலைமைசொலத் தந்தைமொழி

தமிழே என்றார்!

உருக்கமுடன் பெண்கல்வி உதவியவர் கைம்மைநிலை

ஒழிப்பீ ரென்றார்!

ஒருமைப்பாட் டுணர்வுசெழித் தெவ்வுயிரும் தம்முயிராய்

உணரச் சொன்னார்!

அருளில்லாக் கொடுங்கோலும் ஒழிகவருள் நயந்தோரே

ஆள்க என்றார்!

இறைக்கொள்கை ஏற்றாருள் இவர்போலும் புரட்சிமனம்

எவர்க்கும் இல்லை!

முறையான அவருரையில் எதையேற்றோம்? என்செய்தோம்?

முழுதும் விட்டோம்!

கறைசாதி மதஞ்சுமந்தோம்! கனிவிழந்தோம்! பொதுமைகெடக்

கரவு சேர்த்தோம்!

நிறைவள்ள லவருரைத்த வுயிரொருமைப் பாட்டுணர்வை

நினைத்த துண்டோ?

__________________________________________________________________________________

வலை: thamizhanambi.blogspot.com மின்னஞ்சல் : thamizhanambi44@gmail.com

**********************************************************************************

நல்லெண்ணம் வளர்ப்போம்!

 நல்லெண்ணம் வளர்ப்போம்!


மாந்தர்க்குத் தகைமைமதிப் புயர்வுசிறப் பளிப்பதெலாம்
மனத்தின் எண்ணம்

வேந்தெனினும் நல்லெண்ணம் இலையெனிலோ விழலாவான்
விரைவில் வீழ்வான்!

சாந்துணையும் உயர்வூட்டும் சாலஉயர் எண்ணங்கள்
சரிவே காணா
ஏந்துடைய நல்வாழ்வு எளிதாகப் பெறநல்ல
எண்ணம் வேண்டும்!

 

ஒருவரைநீ வாழ்த்தினையேல் உனைநீயே வாழ்த்தினையென்
றுணர்ந்து கொள்க!

ஒருவர்க்குத் தீங்குசெய நினைத்தாயேல் உனக்கேநீ
தீங்கு செய்தாய்!

ஒருவரைநீ சினந்தாயேல் ஊறுன்றன் மனத்திற்கும்
உடற்கும் உண்டே!

ஒருக்காலும் மாறாத உறுதியிது எண்ணங்கள்
உயர்த்தும்; தாழ்த்தும்!

 

தப்பாதே நல்லெண்ணம் வளர்க்கின்ற சூழ்நிலைகள்
தமையே தேர்க!
எப்போதும் நற்றொடர்பும் ஏற்றமுறும் தல்லுறவும்
இணைத்துக் கொள்க!

இப்போது மனத்தினிலே எழுச்சிகொளும் நல்லெண்ணம்
இனிமை சேர்க்கும்!

முப்போதும் செயல்களெலாம் முழுச்செப்ப வெற்றியுடன்
முயும், உண்மை!

 

ஓய்வினிலும் பொழுதோட்டும் ஒருநேரந் தனிலதிலும்
உங்கள் நெஞ்சம்

ஏய்தலுற நல்லெண்ணம் எழக்கண்டும் கேட்டுரைத்தும்
இயைந்து நின்றால்

ஆய்வறிவர் முடிவிதுவே அடரெண்ணம் ஏந்துமனம்
அளிக்கும் வெற்றி!

தோய்கின்ற தொழிலதிலும் தூயவுள நல்லெண்ணம்
துணையாய்க் கொள்க!

 

எண்ணத்தை ஆக்குவதார்? உள்வாங்கு்ம் செய்திகளே!
எனவே என்றும்
ஒண்ணலுறுஞ் செய்திகளே உள்வாங்கும் படிச்சூழல்
ஓர்ந்து தேர்க!
எண்ணவராம் வள்ளுவரும் உயர்வையுள ஓதியதை
எண்ணிப் பாரீர்!
திண்ணரெனப் பொறிவாயில் தேர்ந்தவிக்கச் சொன்னதையும்
தெளிந்து கொள்க!

 

நல்லெண்ணம் மனங்கொள்க! நல்லுணர்வைப் போற்றிடுக!
நனமை நாடி

நல்லாரோ டுறவாடி நல்லுறவைப் பேணிடுக!

நயந்தே நாளும்

வல்லாரும் வலியவுள மெல்லியரும் நல்லெண்ணம்
வளர்த்து வாழ்க!

எல்லாரும் நல்லவராய் இயங்கிநலந் தோய்ந்திடவே
இனிது வாழ்க!