திங்கள், 21 ஆகஸ்ட், 2017

பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார் – ௩



பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார்
======================================================

ஆபிரகாம் பண்டிதர்
------------------


சிலப்பதிகார இசைத்தமிழ்ப் பகுதிகளைச் செவ்வையாக ஆராய்ந்து, பெருந்தொகையைச் செலவிட்டு, ஆயப்பாலை வட்டப்பாலைப் பண்திரிவு முறைகளையும் வீணையியல்பையும் தம் கருணாமிர்த சாகரத்தின் வாயிலாக விளக்கிக்காட்டி, தமிழிசையின் முன்மையையும் தாய்மையையும் நிறுவியவர், தஞ்சை ஆபிரகாம் பண்டிதரே.

கா.நமச்சிவாய முதலியார்
-------------------------


தமிழர் பலர் தமிழாசிரியத் தகுதிபெற இயலாதவாறு, வடமொழிப் பயிற்சியோ டிணைக்கப்பட்டிருந்த சென்னைப் பல்கலைக்கழக புலவன் (வித்துவான்) தேர்வுப் பாடத்திட்டத்தைக் கவனித்து, அதன் தீங்கைக் கண்டு, தனித்தமிழ்ப் பிரிவு (7 ) ஏற்படுத்திய பெருமை, அப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராயிருந்த நமச்சிவாய முதலியாரதே.

மு.சி.பூரணலிங்கம் பிள்ளை
--------------------------


தமிழ் நாகரிக வரலாற்றையும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு, தமிழின் பெருமையை அயல்நாட்டார் அறியச்செய்த அருந்தமிழ்த் தொண்டர், ஆங்கிலப் பேராசிரியர் பூரணலிங்கம் பிள்ளையாவார்.

(தமிழ் வரலாறு-2, பாவாணர், பக்கம் 119,120., தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை–17) 
--------------------------------------------------------------------------------------------------------