சிலப்பதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிலப்பதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

இளங்கோ அடிகள்

    
(தி.ஆ. 2044 மடங்கல் (ஆவணி) 2, (18-8-2013) அன்று விழுப்புரம் தமிழ்ச் சங்க விழாப் பாட்டரங்கத்தில் இளங்கோ அடிகள் என்ற தலைப்பில் பாடிய கலிவெண்பா)

    இளங்கோ அடிகள்!

            - தமிழநம்பி -


பாட்டரங்கின் நற்றலைவ! பைந்தமிழ் முன்மரபில்
தீட்டும் விரைவியப் பாவல! என்றென்றும்
நெஞ்சில் நிறைந்தார் நிலைப்புகழை  இவ்வரங்கில்
எஞ்சலின்றிக் கூற எழுந்துள்ள பாவலர்காள்!

ஓரேர் உழவர், உழன்று விழாவெடுக்கும்
தீராத் தமிழ்ப்பசியர் தேர்ந்த மருத்துவர்
பாவலர் நல்லெளிமை பாலதண் டாயுதரே!
ஆவலுடன் வந்தே அமைந்திருந்து கேட்கின்ற
அன்புசால் தாய்க்குலமே! ஆன்ற பெரியோரே!
இன்தமிழ்ப் பற்றார்ந்த எந்தமிழ நல்லிளைஞீர்!
எல்லார்க்கும் நெஞ்சார்ந்த என்வணக்கம் கூறுகிறேன்!

நல்ல தலைப்பொன்றை நான்பாடத் தந்தார்!
நெஞ்சில் நிறைந்த இளங்கோ அடிகள்!ஆம்!
எஞ்சலின்றி எல்லாத் தமிழருளம் ஈர்க்கும்
புரட்சி நெருப்பினில் பூத்த துறவி!
மிரட்சி கொளச்செய்யும் மேன்மைமிகு பேரறிஞர்!

சேரப் பெருமன்னன் சேரலா தன்தனக்கும்
வீரமணக் கிள்ளிமகள் வீரிநற்சோ ணைக்கும்
இளங்கோ பிறந்தார் இரண்டாம் மகனாய்!
இலங்குசெங் குட்டுவன்தான் இவ்விணையர் மூத்தமகன்!

சேர னமர்ந்திருந்தான் சேர்ந்தேதன் மைந்தருடன்
ஆரழகு மண்டபத்தே; ஆங்கோர் நிமித்திகன் 
வந்துதன் வாயவிழ்த்தான் வல்லவன் போலெண்ணி!
இந்தஇரு மைந்தர் இருக்கும் உருவில்
விளங்கும் இலக்கணம் விள்ளுவதைச் சொல்வேன்!             
இளங்கோ அரசாள்வார் எல்லாரும் போற்றிடவே!
என்றுறுதி யாக இறுத்தசொல் பொய்யாக்க
அன்றப் பொழுதே அரசுடையைத் தான்நீக்கி
என்றும் அரியணை ஏறேன்!செங் குட்டுவனே
நன்றர சாண்டிடுவார் என்றுரைத்துத் தேர்ந்த
துறவுடையைத் தானுடுத்தித் தூய்துறவி ஆனார்!
நிமித்திகத்தை வீழ்த்தியதை நேர்வென்றார் அன்றே!
தமியனாய் ஓர்புரட்சி தான்செய்தார் அந்நாள்!

அருந்தமிழ் நூலெழுதும் ஆற்றலர்தம் நூலில்
இருந்துதமைத் தாழ்த்தி எளியேன், கடையேன்,
அறியேன், சிறியேன் அனைய அவையடக்கம்
அறிவிப்பார்! ஆனால் அடிகளோ செம்மாப்புக்             
காட்டும் பெருமிதத்தில் கண்விரிய ஆர்ப்பரிப்பார்!
நாட்டுதும் யாமொரு பாட்டுடைச் செய்யுள்!
தகைமை விளக்கும் வகையில் முழக்கம்!
இதுவோர் புதுமைதாம்! இன்னுமொன் றாகப்
பொதுப்போக் குடைத்துப் புதுவழி காட்டினார்!

பாவலர்கள் எல்லாரும் பைந்தமிழில் ஆக்கியநூல் 
ஏவல்போல் மன்னர் கடவுளையே போற்றும்!   
வணிகக் குடியொன்றில் வந்தவோர் பெண்ணைத்
துணிவாய்த் தலைவியெனத் தூக்கி நிறுத்தியந்தக்
கற்புக் கடம்பூண்ட கண்ணகி என்பவள்
உற்றவை கூறும் ஒருவர லாற்றைச்
சிறிதே புனைவுகள் சேர எழுதிச்
செறிதமிழ்ப் பாவியமாய்ச் செப்பமாய்ச் செய்தளித்தார்!

கண்ணகியாள் வாழ்வைச் சிலப்பதி காரத்தில்
தெண்ணீர்த் தெளிவில் திகழ்அணிகள் சேர
பொருள்செறி செய்தி பொதுளப் படைத்தார்
அருமை பெருமை அனைத்தும் விளக்கி!

அடிகள் தமையும் அவராக்கித் தந்த
முடிவில் சிறப்பமைந்த முத்தமிழ்ச் செய்யுள்
சிலப்பதி காரத்தின் செம்மாப் பினையும்
உலகிற்குப் பாரதி ஓங்க உரைத்தார்!

பாரதி சொல்வார், புலவரிலே கம்பனைப்போல்
ஆரறி வுக்குறள் வள்ளுவ  ரைப்போல்
வளப்பாப் புலவர் இளங்கோ தமைப்போல்
விளங்குல கெங்கும் பிறந்திலை என்றுமீ
துண்மையாம்! வெற்றுப் புகழ்ச்சி யிலையென்பார்!
இன்னுமவர், நெஞ்சத்தை அள்ளும் சிலப்பதி
காரமென் றோர்மணி ஆரம் படைத்ததிப்
பாரகத் தேதமிழ் நாடென்று பாடினார்!

இத்தனைப் போற்றலில் முத்திரை பெற்றநூல்
முத்தமிழ் வேந்தரின் மொத்த உயர்வெலாம்
நன்னடுவு மாறாத நா,மனத் தூய்மையில்
இன்னருஞ் செய்தியாய் எல்லார்க்கும் சொல்லிடும்!
எல்லா மதத்தையும் ஒப்ப மதித்திடும்!
அல்லவை நீக்கி அருள அடிதொழும்
அவ்வக் கடவுள் அடியாரைப் போலவே
செவ்வேள் அருகன் சிவன்மா லுடனினும்
கொற்றவை யன்னமற் றெல்லாரும் போற்றிடும்!      
                 
காவிரி வைகை கவின்பேரி யாற்றுடன்
தாவற மூன்று தலைநகர் பூம்புகார்
வஞ்சி மதுரை யுடனுறை யூரையும்
எஞ்சலில் லாதொப்ப ஏற்றியே போற்றிடும்! 

பட்டினப் பாக்கம் மருவூர்ப்பாக் கம்மென
முட்டிலாச் சீர்சேர் இரட்டை நகரெனும்
பூம்புகார் பற்றிப் புகன்றவை யந்நகர்
பத்தொன்ப தாம்நூற்றாண் டில்ஆங் கிலரின்
இலண்டன் நகரம் இருந்ததின் மேலாய்
இரண்டாம்நூற் றாண்டில் இருந்ததாம் பூம்புகார்!
இக்கால ஆய்வர் இயம்ப வியக்கிறோம்!
அக்கால் தமிழர் அருமுயர்(வு) எண்ணி!

வணிகவளம் கட்டடங்கள் வாடாத் தொழில்கள்
அணிசெய் நகரமைப்பு ஐவகை மன்றம்
அறம்காத்தல்! அல்லும் பகலுமங் காடி!
பிறநாட்டார் உண்டுறையும் பேரிடம்! நுண்கலைகள்
பட்டுடைகள் ஆடைவகை பிட்டுதொட் டுண்டிகள்
தட்டிசெய் நன்னகை தக்க எலிமயிரில்
தந்திடும் ஆடை தகுபருத்தி நெய்தவையும் 
சந்தனம் போலுமணம் தட்டின்றி வீசுநவும்
யாழ்குழலும் இன்னிசைக்கும் எல்லாக் கருவிகளும்      
வாழ்க்கைப் பொருள்பலவும் பாங்காக்க் கூறுகிறார்!

முப்பதுகல் என்பர் முழுதாய்ப் புகார்ப்பரப்பு!
அப்போ தறுபதாயி ரம்குடிகள் அங்கென்பர்!
ஆமாமாம்! மூன்றிலக்கம் அப்போது வாழ்ந்திருந்தார்!
தாமேவந் தங்கயலார் தங்கி இருந்தார்!  

சிலம்பில் அடிகளார் செந்நா கரிகப்
புலப்பா டெனவே புறச்சிறப்பைக் காட்டி
அகச்சிறப்பாய்க் காட்டுவார் அன்பு,பண் பாட்டை!
மிகச்சிறப் பைச்சிலம்பு மேவயிதும் ஏதாம்!

உரைப்பா வரிஇசைப்பா வோடு பலவாம்
குரவையுங் கூத்தொடு கூறுபிற செய்தி
சிலம்பினை முத்தமிழ்ப் பாவியம் ஆக
இலங்க அடிகள் இயற்றிய நுட்பம்
துலக்கமாய் ஆய்வர் விளக்கி உரைப்பர்!
இலக்கிய ஆய்வர் இதுவரை ஆய்ந்த
இலக்கியந் தம்முள் சிலப்பதி காரம்
இலக்கில் மிகப்பலர் இனிதாய்ந்த நூலாகும்!

பண்பொழுக் கம்,பிறர்க்கு நற்பய னாதலறம் 
நன்னயன்மைக் காப்பதற்குப் போராடல் நாளும்
பொறுமையெனும் நற்குணங்கள் பொன்போற் பொலியும்               
அருந்திறல் பெண்ணாய் அமைந்துளார் கண்ணகி!
அத்தகைய பெண்ணாளை ஆழிசூழ் இவ்வுலகம்
எத்திசையும் போற்றிட ஏற்றிடும் தெய்வமாய்!
என்பார் அடிகள் இப்படைப்பால்! ஓரிடத்தில்-

கணவன் பிரிவினால் கண்ணகியாள் வாட
துணைதோழி தேவந்தி சொல்லுவாள் செய்தியிதை
காவிரி யாறு கடலில் கடைசி
கலக்குமிடம் சோமகுண் டத்துடன் சூரிய
குண்டத் தினிலும் குளித்தெழுந்து காமவேள்
தண்கோயில் சென்று தலைவணங்கிக் கும்பிட்டால்
இன்புறலாம் கேள்வனுடன் என்றாட்குக் கண்ணகி
பின்னு விடையாய், பெருமைதரா தச்செயல்     
என்றவட்குப் பீடன்(று) எனவுரைத்த மாண்புரை
இன்னுமோர் சான்றாம் இளங்கோ புரட்சிக்கு!

ஐவகையாய் இந்நிலம் ஆம்பிரிவும் அவ்வவற்றின்
தெய்வம் முதலாம் திணைப்பொருள் எல்லாம்
அடிகள் பனுவலில் ஆங்காங் குரைப்பார்
படித்தார் அறிந்திருப்பர் பாலை நிலத்திற்கு
இவரொரு வர்தான் இலக்கணம் தந்தார்!
தவலற அடிகளார் தந்த வரையறை
முல்லை குறிஞ்சி முறையில் திரிவுற்று
நல்லியல் பற்றிடப் பாலையென் றாகும்

நிகர்நிற்கா மன்னர்கள் நேர்மையின் நீங்கி
இகழ்ந்துரை செய்தனர் என்பதால் அன்னார்
தலைநெரியக் கல்கொணர்ந்து  தந்துகண்ண கிக்குச்
சிலைசமைத்த செய்தி சிறப்பாய்ப் பதிந்துள்ளார்!   

நன்மரபு காத்திடவும் நன்குநிலை நாட்டிடவும்
என்றுமே பண்பாட்டால் இன்மொழியால் ஒன்றிணைந்து
ஒற்றுமைபோற் றித்தமிழர் ஓங்கியிங்கு வாழந்திடவும்
அற்றைக்கிப் பாவியத்தில் மூவேந்தர் முந்நாட்டை
ஒன்றாகப் போற்றி உயர்வெல்லாம் பாடிவைத்தார்!

என்றும் நினைவினில் நின்று நிலைத்திடும்
பொன்றாச் சிறப்புப் புகழ்பெற்ற சொற்றொடர்கள்
நம்சிலம்பில் உண்டுபல நற்சான்றாய் ஈங்குசில :
 “பதியெழுவறியாப் பழங்குடி
 “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்
விடுதல் அறியா விருப்பினன்
நடந்தாய் வாழி காவேரி
இலம்பாடு நாணுத்தரும் எனக்கு
சிலம்புள கொண்ம்
பிறவா யாக்கைப் பெரியோன்
கவவுக்கை நெகிழாமல்
நாளங்காடி
அல்லங்காடி
பீடன்று
அஞ்செஞ்சீறடி
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
ஆறைங் காதம் அகநாட்டு உம்பர்
வம்பப் பரத்தை வறுமொழி யாளன்
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
தேரா மன்னா செப்புவ துடையேன்
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
யானோ அரசன் யானே கள்வன்

புரட்சித் துறவியார் போற்றற் குரிய.
இளங்கோ அடிகள் இயற்றிய பாவியம்
ஒப்பில் சிறப்பின் சிலப்பதி காரம்
எப்போதும் நெஞ்சத்தை ஈர்ப்பதால் உண்மையில்
செஞ்சொல் இளங்கோ அடிகள் இருக்கிறார்
நெஞ்சில் நிறைந்தே நிலைத்து!
  
-----------------------------------------