வெள்ளி, 3 ஏப்ரல், 2009

போர் நிறுத்தம் : 'மனோகரா' படமும் தி.மு.க. தேர்தல் அறிக்கையும்



கலைஞர் கருணாநிதி உரையாடல் எழுதிய 'மனோகரா' படத்தில் ஒரு காட்சி :

வசந்த சேனையின் மகனான கிறுக்கன் வசந்தனும் ஒரு மருத்துவனும் அக்காட்சியில் இருப்பார்கள்.

வசந்தன் மருத்துவனிடம், "என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்பான்.

அந்த மருத்துவன் கலுவத்தில் (குழி அம்மியில்) பச்சிலை மருந்து அரைத்துக் கொண்டே வசந்தனிடம் கூறுவான்: "இளவரசே! உங்க நோயும் நீடிச்சி, என்னுடைய வேலையும் நீடிக்கணும்னு வேண்டிக் கொண்டிருக்கிறேன், இளவரசே" என்று விடை கூறுவான்.

இன்று (2-3-2009) வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில்,"இலங்கையில் போரை நிறுத்த தி.மு.க. தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்" என்று கூறப்பட்டுள்ளதாக, "சன்" தொலைக்காட்சித் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தது.

கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சி மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்குமாம்! இதுவரை ஈழப்போரில் இறந்த ஏதுமறியாத் தமிழ் மக்கள் மட்டுமே ஐந்தாயிரம் பேருக்கு மேல் என்றும் அடிபட்டுக் காயமுற்றோர் தொகை பத்தாயிரத்தைத் தாண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இவர்கள் கூற்றுப்படி, போரை உடனடியாக நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கப் போவதாகத் தெரியவில்லை! முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்! - அதாவது முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்... அவ்வளவுதான்!

இப்போது, 'மனோகரா' மருத்துவன் கூறியதை எண்ணிப் பாருங்கள்!

பித்துப் பிடித்த வசந்தனுக்கு அந்த மருத்துவனால் பி(பை)த்தியம் தீரப் போவதுமில்லை!

இலங்கையில், ஈழத் தமிழரைக் கொன்று குவிக்கும் போர், இவர்களால் தடுத்து நிறுத்தப்படப் போவதுமில்லை!

எத்தனை நுட்பமாக உள்ளத்தில் உள்ளது வெளிப்படுகிறது எனபதை எண்ணிப்பாருங்கள்!