வன்கொடுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வன்கொடுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 ஜூலை, 2020


சாத்தான்குளம்… தூத்துக்குடி நிகழ்வுகளுக்குத் தீர்வு உண்டா?           தொடர்ந்து படியுங்கள்...!
-------------------------------------------------------------------
காவல்துறையின் வன்கொடுமைகளுக்கு (Torture) எதிராக,  தில்லி, மதராசு உயர்நயன்மன்றங்களின் தலைமை நயனர் (Chief Judge) ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. அசித் பிரகாசு சா, சூலை 3, 2020 ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் காண்க:

===========================================================

இந்தியாவின் வன்கொடுமைப் (Torture) பண்பாடு 

இப்போது முடிவடைதல் வேண்டும்!


வழக்கறிஞர் குழாம், ஊடகங்கள், குடிமக்கள் 

குழுகாயம், மாணவர் குழுக்கள் உள்ளடங்கிய

 மக்கள் மட்டுமே வன்கொடுமை (Torture) 

நடைமுறைகளுக்கு எதிராக எழ முடியும்!

            
               இப்பொழுது ஒவ்வொருவரும், ஒரு சிறிய நகரான தூத்துக்குடியில், அப்பாவும் மகனுமான இரட்டையர் பி.செயராசு, செ.பெனிக்கிசின் துயரச் சாவு பற்றிக் கேள்விப்பட் டிருக்கிறார்கள். செயராசு 58, ஊரடங்குச் சட்டங்களை மீறி அவருடைய மகனின் கைப்பேசிக் கடையைத் திறந்திருந்ததைப் பற்றிய வாய்ச்சண்டையை யொட்டித் தளை செய்யப்பட்டார். பெனிக்கிசும் தளைப் படுத்தப்பட்ட பிறகு, இருவரும் இரக்கமின்றி நையப்புடைத்துச் சாகடிக்கப்பட்டனர்.  

            ஊரடங்கின் போது கடையைத் திறந்து வைத்துக் கொண்டிருந்த குற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், செயராசுக்கும் பெனிக்கிசுக்கும் இயல்பாக அதிக அளவு மூன்று மாதச் சிறை மட்டுமே வழங்கப் பட்டிருக்கும்.  இரங்கத்தக்க இந்தக் கதை, காவல்துறையோடு மட்டும் முடிய வில்லை. அவர்கள் இருவரும் இறந்ததற்கு முன்னால், காவல்துறை, நயன்மன்ற வளாகத்தில் இருந்த ஒரு நடுவரை அவர்களைக் காவலில் வைக்க நாடியிருக்கிறது. அவர், அந்த இருவரையும் நேரில் கூட பார்க்காமலும், அவர்களைக் காவலில் வைக்க உள்ளார்ந்த காரணங்களைக் கேட்டறியக் கூட முற்படாமலும், எந்திரத்தனமாக இசைவு வழங்கியிருப்பதாகத் தெரிகிறது. கொடுமையான ஊரடங்குச் செயற்படுத்த முறைகள் தொடங்கி, முற்றிலும் கொடிய, விலக்க முடிந்திருக்கக் கூடிய இறப்புகளுடன்  முடிந்த, தொடர்ச்சியான நிகழ்ச்சிகள், நாம் முழுமையாகத் தகர்ந்துபோன சட்ட நடைமுறைப் படுத்தும் அமைப்புடன் வாழ்கிறோம் என்பதற்கு அறிகுறியாக இருக்கின்றன.

காவல்துறைப் பண்பாட்டின் நோய்:

            தமிழ்நாட்டுக் காவல்துறை, சட்டத்தைச் செயற்படுத்தப் பல பத்தாண்டுகளாக வன்கொடுமை (Torture) முறைகளைப் பயன்படுத்திக் கெட்ட பெயர் எடுத்திருக்கின்றது. மதராசு உயர்நயன் மன்றத்தின் தலைமை நயனராக இருந்த என் பணிக்காலத்தின் போது, இதைப் போன்ற பல்வேறு வழக்குகள் நயன்மன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டன. ஆனால், இந்தச்சிக்கல் தமிழ்நாட்டுக்கு மட்டும் வரையறைப் படுத்தப் பட்டதன்று. வன்கொடுமை, நாடு முழுமையிலும் காவல்துறைப் பண்பாட்டில் உண்மையாகவே ஒருங்கமைந்த பகுதியாக இருக்கின்றது. இந்தப் பண்பாடு, இந்தியாவை ஆட்சி செய்த அயலவர் காவற்படையின் கொடுஞ்செயல்களின் எச்சமாக, இன்றைய இந்தியாவில் நாமும் மறக்க விரும்புவதாக இருந்துகொண்டு இருக்கிறது என்பது தவறாக உறழாடுவது ஆகாது. 
         
            அதிகார அடிப்படையிலான தரவுகளும் இந்தக் காவல்துறை வன்கொடுமை உண்மையானது என்று ஒப்புக்கொள்கின்றன. ஆனால், அந்தத் தரவுகளின் தகுதி எப்போதும் ஐயத்திற்கு உரியதாக இருக்கிறது. மாந்தர் உரிமைக்கான ஆசிய நடுவம், பன்னாட்டு பொது மன்னிப்பு அமைப்பு, மக்களாட்சி உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் உள்ளிட்ட அரசுசாரா அமைப்புகள், நோக்கர்களின் ஆண்டாண்டு அறிக்கை வழி அறியப்படும் உண்மைகளையும் காரணங்களையும் கொண்ட வழக்கில், காவல் துறையின் படர்ந்து பரவுகிற வன்கொடுமைகளை மிக நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.

            வன்கொடுமை குறித்த தரவுகள், இந்திய காவல்துறை பண்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக மட்டும் வன்கொடுமையைக் காட்டவில்லை, மாறாக, சில புலனாய்வுகளில் {பேரச்சக் கொடுஞ்செயல் (terror) போன்ற வழக்குகளில்} அது நடுவப் பகுதியாகவே கருதப்படுகிறது. உண்மை என்னவென்றால், நடைமுறையிலுள்ள சட்டங்களில் {பேரச்சக் கொடுஞ்செயலர், சீர்குலைவுச் செயற்பாட்டாளர் (நீக்கச்) சட்டம், பேரச்சக் கொடுஞ்செயல் விலக்கச் சட்டம், மகாராட்டிரா திட்டமிட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் போன்றவையாக அவை புதுப்பிக்கப்பட்டுள்ள சட்டம்-ஆகியவற்றில்} குற்ற ஏற்புரையை(confession),சான்றாக ஏற்க, இசைந்ததின் ஊடாக, அத்தகைய வன்கொடுமைகளுக்குத் துணைதந்து ஊக்குவிக்கின்றன. வாய்ப்புக் கேடாக, காவல் துறையில், சட்ட நடைமுறைப் படுத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இனமரபுக் கூற்றுக் காடி (DNA) பகுப்பாய்வு போன்ற புதிய தொழில் நுட்பங்களை திறம்புதுப்பித்து உயர்த்தல் முன்னெடுக்கப்படவில்லை. 

இந்தியாவின் “ஊரறிந்த கமுக்கம்” என்று சிலரால் அடையாளமிடப்பட்டது, பன்னாட்டுச் செயற்களத்தில்  நேரடியாகக் கையாளப்படாமல் தவிர்க்கப் படுகின்றது. அரசு அறிமுகப்படுத்திய அல்லது அரசு ஏற்றுக்கொண்ட வன்கொடுமையின் அதிகார பூர்வமான நிலையை 2017-இல் அப்போதைய தலைமை-வழக்கறிஞரின் (Attorney-General) மேற்கோளில் பார்க்க முடியும். செனிவாவில் ஒன்றிய நாடுகளின் மாந்த உரிமை மன்றத்தில் இந்தியாவினுடைய உலகந்தழுவிய ஆண்டு மீளாய்வுக் கூட்டத்தில் நிகழ்த்திய தொடக்க உரையில், தலைமை-வழக்கறிஞர், காந்தியையும் புத்தரையும் குறிப்பிட்டுள்ளார். அவர், “இந்தியா… அமைதியில், வன்முறையின்மையில், மாந்தர் கண்ணியத்தைக் காப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. அவ்வாறே, வன்கொடுமை கருத்து எங்களுடைய பண்பாட்டுக்கு முற்றிலும் புறம்பானது; நாட்டின் ஆட்சி முறையில் அதற்கு இடமேயில்லை.” என்று கூறினார்.  இதுவே பாசாங்குத் தனத்திற்கு, பாடப் புத்தக எடுத்துக் காட்டாக இருக்கும்.

            ஐயத்திற்கு இடமின்றித் தூத்துக்குடி வழக்கில் குற்றம் செய்த அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுக்கொண்டிருக்கிறது, பலியானோர் குடும்பத்திற்குக் கொஞ்சம் இழப்பீடு கூட அளிக்கப்படும். ஆனால், அத்தகைய துண்டுத் துணுக்கான நடவடிக்கை, தேவையானதைச் செய்யாது. நமக்கு உண்மையான தேவை என்னவென்றால், வன்கொடுமை நாடு சார்ந்த காவல்துறைப் பண்பாட்டின் நோய், கட்டமைப்பு சார்ந்த சிக்கலாக இருக்கின்றது என்ற ஏற்பிசைவாகும். அந்தச் சிக்கலுக்கான தீர்வு, இந்தியா 1997-இல் கையெழுத்திட்டுள்ள ‘ஒன்றிய நாடுகள் வன்கொடுமைக்கு  எதிரான ஒபந்தத்தின் (UNCAT) படியான, பன்னாட்டுச் சட்டத்தின் நெறிகளைத் தளர்வின்றி நடைமுறைப்படுத்துவதன் மூலமும், அதை மிகுந்த இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதன் மூலமும் ஆகும்.

வன்கொடுமை பற்றி உச்சநயன்மன்றம்:

            ஒன்றிய நாடுகள் வன்கொடுமைக்கு  எதிரான ஒபந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதற்கு முன்பே, நம்முடைய உச்சநயன்மன்றம், நாட்டின் வன்கொடுமை பண்பாட்டினால் விளைந்த பல சிக்கல்களை முனைப்பாக எடுத்துக்காட்டிப் புகழ்வாய்ந்த சட்டக்கோட்பாட்டைக் கொண்டுவந்தது.  அரியானா அரசுக் கெதிரான இரகுபிர்சிங் வழக்கில் (1980) நயன்மன்றம், “திரும்பத்திரும்ப நிகழும் பேய்த்தனமான காவல்துறை வன்கொடுமைகள் - சட்டத்தின் காப்பாளர்கள் மாந்த உரிமைகளைக் குத்திக் கிழித்துச் சாகடிக்கும் பொழுது, பொது குடிமக்கள் மனத்தில் மோசமான அச்சத்தை உருவாக்கி, அவர்கள் வாழ்வையும் உரிமையையும்  நெருக்கடியில் உள்ளாக்கியிருப்பதைக் கருதி நயன்மன்றம் ஆழ்ந்த கலக்கத்திற் காளாகி யிருக்கிறது.” – என்றது.  இந்த உணர்ச்சிவயக் கருத்துக்கள், பிரான்சிசு கொராலி முல்லின் ஒன்றிய அரசின் ஆட்சிப்பகுதியாகிய தில்லிக்கு எதிரான வழக்கிலும் (1981), சீலா பார்சி மகாராட்டிர அரசுக்கெதிரான வழக்கிலும் (1987) மீளக்கருதிப் பார்க்கப்பட்டது. இவ் வழக்குகளில், கொடுமைப்படுத்தலும் வன்துன்புறுத்தலும் சட்டக் கூறு 21-ஐ மீறுகிறது என்று நயன்மன்றம் கண்டித்தது. சட்டக்கூறு -21-றிற்கான இந்தப் பொருள் விளக்கம் ‘ஒன்றியநாடுகள் வன்கொடுமைக்கு  எதிரான ஒப்பந்தம்’ கொண்டுள்ள நெறிகளை உள்ளடக்கியிருக்கின்றது. ஒன்றியநாடுகள் வன்கொடுமைக்கு  எதிரான ஒப்பந்தம்  உலகெங்கிலும் வன்கொடுமையையும் அதைச்சார்ந்த துன்புறுத்தல்களையும்  விலக்கவும், பிற கொடிய, மாந்தத் தன்மையற்ற அல்லது இழிவுபடுத்துகிற நடைமுறை அல்லது தண்டனை அளிக்கும் செயல்களை  நீக்குவதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

            இந்தியா, ஒன்றியநாடுகள் வன்கொடுமைக்கு  எதிரான ஒப்பந்தத்தில் 1997-இல் கையொப்பமிட்டிருந்த போதிலும், அது இன்னும் அதிகார பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 2010-இல் ஒரு வலுக்குன்றிய வன்கொடுமை தடுப்புச் சட்ட முன்வரைவை மக்களவை நிறைவேற்றியது. மாநிலங்களவை, பின்னர் அதனை, ஒன்றியநாடுகள் வன்கொடுமைக்கு  எதிரான ஒப்பந்தத்துடன் நேரமைந்திருப்பதை மீளாய்வு செய்ய தேர்வுக் குழுவிற்கு (select committee) அனுப்பியது. (நானும் கூட நயன்துறைப் பணியிலிருந்து பணி ஓய்வுக்குப் பின் 2010-இல் இக் குழுமுன் கருத்துரைத்திருக்கிறேன்). 2012-இல் அந்தக் குழு பரிந்துரைத் தளித்த சட்டம், பயனளிக்கவில்லை. அப்போதைய ஒன்றிணைந்த முற்போக்குக் கூட்டணி அரசு, அந்தச் சட்டவரைவை கால எல்லை கடக்கவிட்டு விட்டது. 2016-இல், மூத்த வழக்கறிஞரும் முன்னாள் ஒன்றிய அரசின் சட்ட அமைச்சருமான அசுவனிகுமார், வேண்டுகைமடல் வழி ஒரு வன்கொடுமை சட்டம் இயற்ற உச்சநயன்மன்றத்தை நாடினார். 2017-இல், சட்டக்குழு அதனுடைய 273-ஆம் அறிக்கையையும் வன்கொடுமை சட்ட முன்வரைவையும் அளித்தது. ஆனால், அரசைக் கட்டாயப்படுத்தி சட்டமியற்றும் உரிமை தனக்கில்லை என்று கூறி உச்சநயன்மன்றம் அந்த வேண்டுகையை, தள்ளுபடி செய்துவிட்டது.  ஒப்பந்த உறுதியளிப்பு அரசியல் முடிவு; அது கொள்கை தொடர்பான முடிவு என்றது. இந்தச் சிக்கல் தொடர்பான திரு.குமார் அவர்களின் இரண்டாவது வேண்டுகையும் முதலாவதைப் போன்றே முடிந்தது.

            உச்சநயன்மன்றம் இப்படித் தள்ளுபடி செய்தது அதன் சொந்த புகழ்வாய்ந்த சட்டக் கோட்பாட்டையும், கடந்த காலத்தில் அது உதவிய பல்வகை சட்ட வடிவங்களையும் - பெண்களுக்கு எதிரான அனைத்து வகைப் பாகுபாட்டை நீக்கி, வேலை செய்யுமிடத்தில் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தைச் சீர்திருத்தல் - சுற்றுச்சூழல் வழக்குகளில் வழக்கமாக்கப்பட்ட பன்னாட்டுச் சட்டங்கள் - தனியாண்மை உரிமை – (முன்கூட்டிச் செயற்படும் ஒரு நயன்மன்றத்தை வெளிப்படுத்தும் இந்த நீண்ட பலவகைப்பட்ட பட்டியல், பாராளுமன்றத்தைச் சட்டமியற்றும் செயற்பாட்டில் தூண்டும் பொறுப்பைக் கொண்டுள்ளது), அதன் முயற்சிகளையும் புறக்கணிக்கும் அடையாளமாக இருந்தது.     தவறுகைகளுடனும் கூட, அந்தக் குழுவின் முன்சட்டவரைவு, ஒன்றும் இல்லாததைவிட மேலாக இருந்தது.  இந்தச் சட்டவரைவை அடிப்படையாகக் கொண்ட ஒரு வடிவம் மாநில அரசுகளுக்கு அவற்றின் கருத்தறிய சுற்றுக்கு விடப்பட்டது. ஆனால், எந்தக் கருத்தும் வரவில்லை; எதுவும் வரப்போவதாகவும் தெரியவில்லை. இந்தத் தயக்கம், எல்லா அரசுகளும் காவல்துறையின் கொடுஞ்செயல்களைச் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் தேவையான தீச் செயல் என்று ஒட்டுமொத்தமாக ஒப்புக் கொள்வதைப்போல் தோன்றுகிறது.

வன்கொடுமையை இன்றே முடிக்க!

            உள்துறை அமைச்சகமோ அல்லது இந்த அரசோ வன்கொடுமை சட்டத்தை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. உண்மையில், வன்கொடுமை சட்டவரைவு நடத்திய பாங்கு, அடுத்தடுத்த அரசுகளால் இந்திய மக்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்பதை வெளிப் படுத்துகிறது. வன்கொடுமை தொடர்பான சட்டத்தை இயற்ற 23 ஆண்டுகளாக வாய்ப்புகள் இருந்திருந்தும் அவ்வாய்ப்புகள் வேண்டு மென்றே தவிர்க்கப்பட்டன. மாநில அரசுகளைக் கலந்தாய்வு செய்வதென்பதும் பொருளற்றதாகும். காவல்துறை தற்பாதுகாப்புக் கருவியாகப் பயன்படுவதால், எல்லா அரசுகளும் இருக்கும் நிலையே நீடிப்பதைத் துய்க்க விரும்புகின்றன என்பது புலனாகின்றது. எந்த சமநிலைக் குலைவும் அரசியலில் விரும்பப்படவில்லை. 

             ஊக்கம் கெடுப்பதாக இது தெரிந்த போதும், எல்லாம் இழந்துவிட வில்லை. நம்மைச் சுற்றி ஊக்கத் தூண்டுதலும் மிகுதியாக இருக்கின்றது. சியார்சு பிளாயிடை ஒரு காவலர் அமெரிக்க மின்னியாபொலிசில், 8 நிமையம் 46 நொடிகள் மூச்சுவிட முடியாதபடி கழுத்தை அழுத்திக் கொன்றதனால், ”கறுப்புயிர்களும் இன்றியமையாதவை” இயக்கம் மேலெழுந்தது. அதில் பல இந்தியர்களும் கூட சேர்ந்து கொண்டனர். அந்த இயக்கம் மக்களால் வழிநடத்தப்பட்டது; காவல் துறைக்கு தொகை ஒதுக்காமலிருத்தல், காவல் துறையின் வலுக்குறைத்தல் உள்ளிட்ட அமெரிக்கக் காவல்துறை பற்றிய முனைப்பான சீர்திருத்தங்கள் குறித்துத் தேசிய அளவிலான கருத்துரையாடல்களைத் தொடக்கியது. ஏற்கக்கூடிய வகையில் நம் நாட்டிலும் கூட சட்டக்குழு கருத்துரைத்தபடி, சட்ட மாற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் நிறுவனங்கள் ‘வன்கொடுமையை  இன்றே முடிக்க’ ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படுகின்றது. உலகின் மற்ற பகுதிகளில் எழுந்ததைப்போல இந்த வன்கொடுமைகளுக்கு எதிராக மக்கள் எழுச்சிமட்டுமே பயனளிக்கும். “மக்கள்” என்பதன் மூலம் நான், முகன்மையான பங்களிப் பாளராகிய வழக்கறிஞர் குழாம், ஊடகங்கள், குடிமக்கள் குமுகாயம், மாணவர் குழுக்களை உள்ளடக்குகிறேன்.  இவர்கள் ஒவ்வொருவரும், நாம் விரும்பும் மாற்றத்திற்கு ஆற்ற வேண்டிய பங்குப் பணியுள்ளது. யார் முதலில் பொறுப்பை ஏற்க முடிவு செய்ககிறார்கள் என்பதை மட்டுமே பொருத்தது அது.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கும், கட்டுரை ஆசிரியர் அசித் பிரகாசு சா அவர்களுக்கும் நன்றி!