மொழித்தூய்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழித்தூய்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

தமிழர்கள் மட்டுமே மொழித்தூய்மையை வலியுறுத்துகிறார்களா?



தமிழர்கள் மட்டுமே மொழித்தூய்மையை வலியுறுத்துகிறார்களா?
---------------------------------------------------------------------------------------------------------

                                 

     ஆங்கிலத்தில் பிரெஞ்சு இலத்தீன்மொழிச் சொற்கள் கலந்து பொருட்குழப்பத்தை ஏற்படுத்துவதால் அம்மொழிகள் கலப்பற்ற தூய ஆங்கிலம் எழுத வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார் ஆங்கில வரலாற்று ஆசிரியர் பிரீமன் என்பவர்.தனிஆங்கிலக் கழகம்’ (society for pure English) என்ற அமைப்பு 1918 முதல் இயங்கி வருகின்றது.

     பிரெஞ்சு மொழியில் பிறமொழிச்சொற்களை நீக்குவதற்கென்றே பிரான்சு நாட்டின் தலைவராயிருந்த திகால் பல சட்டங்களை இயற்றினார்.
செருமானியரும் மொழிச் சீர்திருத்தத்தில் பல அயற்சொற்களை விலக்கினர்.

     புரட்சியாளர் இலெனின், ‘உருசிய மொழியைக் கெடுப்பதை நிறுத்துங்கள்; பிறசொற் கலப்பை எதிர்த்துப் போரிடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டவராவார்.

     துருக்கியின் வல்லாட்சியராக, வல்லதிகாரியாக இருந்தவர் கமால் அத்தாதுர்க் ஆவார். அந்தக் கமால் அத்தாதுர்க், துருக்கி மொழியில் கலந்திருந்த இருபதாயிரம் அரபி, பாரசிகச் சொற்களை நீக்கிவிட்டு 1,58,000 தூய துருக்கிச்சொற்களை உருவாக்கினார்.

     சீன மொழி தூய சீனமாக்கப்பட்ட பிறகு, மாண்டரின் எனப்பட்டது. தூய சீன மொழியையே பேசவேண்டுமென்று பொதுவுடைமை அரசு கட்டளையிட்டது.

     இங்கே, இந்தியாவில் கருநாடகத்தில், தூய கன்னட இயக்கம் திருள் கன்னடம் என்றும் அச்ச கன்னடம் என்றும் வழங்கப்பட்டது.

     அச்ச தெலுகு இயக்கம் தூய தெலுங்கில் இலக்கியங்களைப் படைத்தது.
 
     பச்ச மலையாளம் என்ற பெயரில் தனிமலையாளம் வழங்கப்பட்டது.

     இந்தச் செய்திகளையெல்லாம் முனைவர் சாரதா நம்பி ஆரூரன் தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்என்ற நூலில் (2008இல் வெளிவந்தது) மிக விரிவாகவும், தெளிவாகவும் அடிப்படைச் சான்றுகளோடும் தந்துள்ளார்.

     பிரெஞ்சு மொழியிலும் சீன மொழியிலும் அயற்சொற் கலப்பு தண்டனைக்குரிய குற்றமாக உள்ளதை அறிகிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------
                                                   
                                                                      

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

நா.பார்த்தசாரதியின் "மொழியின் வழியே"


       நா.பார்த்தசாரதியின் மொழியின் வழியே


தமிழ் வாசகர்களால் புதின ஆசிரியராகப் பரவலாக அறியப்பட்டவர்  நா.பார்த்தசாரதி. தமிழ்த் தாளிகை உலகில் 1960, 70ஆம் ஆண்டுகளில் முதன்மையான புதின எழுத்தாளராகத் திகழ்ந்தவர் இவர்.  தமிழ் படித்துத் தமிழாசிரியராக வேலை செய்தவர்! கல்கி இதழின் துணையாசிரியராகப் பணி செய்தவர். தீபம் என்ற இதழைத் தொடங்கி, விடாமுயற்சியுடன் 23 ஆண்டுகள் நடத்தியவர். தினமணிக் கதிர் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

நா.பா., ஏறத்தாழ பதினைந்து புதினங்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள், குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம், சமுதாய வீதியிலே போன்றவை பலராலும் விரும்பிப் படிக்கப்பட்ட புதினங்கள் எனலாம். புதினங்கள் மட்டுமின்றிக் கட்டுரை நாடகம் பாடல்களும் கூட இவர் எழுதியிருந்தாலும், புதின ஆசிரியராகவே பரவலாக அறியப்பட்டுப் பெயர் பெற்றார். 

மொழியின் வழியே
மொழியின் வழியே என்ற தலைப்பைக் கொண்ட இவருடைய கட்டுரை நூல், 1961இல் முதற் பதிப்பாகவும் 2002இல் இரண்டாம் பதிப்பாகவம் வந்தது. 144 பக்கங்களைக் கொண்ட இந்நூல், நம் தாய்மொழியாகிய தமிழ் தொடர்பான  பல்வேறு கூறுகளைக் கூறும் 21 தலைப்புகளில் எழுதப்பெற்ற கட்டுரைகளைக் கொண்டதாகும். கட்டுரை நூலாகையால் இது பரவலாக அறியப்படவில்லை. இந்நூலில் காணப்படும் சில கருத்துக்கள், புதின ஆசிரியராக இவரைப் படித்தவர்களுக்கு வியப்பளிக்கக் கூடியவையாக இருக்கக் கூடும்!
இந்நூலில் பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. தலைப்பையும் அத் தலைப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை ஒரு சோற்றுப் பதனாக மிகச் சுருக்கமாகவும் கீழே காண்போம்.

மொழியும் பணபாடும்
      மரபும் இலக்கணமும் தூய்மைக்கும், வழக்கும் இலக்கியமும் பண்பாட்டிற்கும் காரணமாக நிற்கின்றன எனகிறார் நா.பா. காற்றையும் நீரையும் பெற்று வளர்ந்து கிளைத்து வளமடைந்த பழுமரம் ஒன்றிற் கனியும் கனியைப்போல, மரபையும் இலக்கணத்தையும் போற்றி ஒழுகும் மொழியில் பண்பாடு கனியும்.
      மொழியின் நிலைத்த வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் மக்கள் வழக்கு இன்றியமையாதது ஆவது போலவே அதன் தூய்மைக்கும் பண்பாட்டிற்கும் மரபு, இலக்கணம், பழவழக்கு, இலக்கியமும் ஆகியவை இன்றியமையாதவை ஆகின்றன.
சான்றோர் மொழி ஆட்சிகளை மூலமாகக் கொண்டே மொழியின் பண்பாடும் உருப்பெறுகின்றது.
மொழியின் முன்னேற்றம்
     பழமையும் பண்பாடும் பொருந்திய எந்த மொழியும் தனது மரபிலிருந்து விலகியபின் முன்னேற இயலாது. மரபுடன் கைகோத்து நடவாத மொழி தனது கட்டுக்குலைந்து சீரழிவது ஒருதலை.  
பண்பட்ட இலக்கிய மொழி(செம்மொழி)களுங்கூட மரபைப் போற்றியே வாழவேண்டும். காலத்திற்கு ஒவ்வாத சில வரையறைகளைக் காலத்திற் கேற்பச் சீர்திருத்திக் கொள்வது தவறன்று. அதுவும் மொழிவல்லுநர் துணையின்றிச் செய்யப்படுமானால் தவறுதான்.  
      ஒரு மொழி முன்னேற வேண்டுமானால், மொழியை ஆர்வத்தோடு பேணுகின்ற பெருமக்கள் மிகுதியாக இருக்கின்ற நாடாக அம்மொழி பயிலும் நாடு இருக்க வேண்டும். அது வளர்ச்சிக்கு முதற் காரணம்.
      மொழியை எழுதுவதிலும் பேசுவதிலும் மிகுதியான கவனம் கொள்ள வேண்டும். முழுமுதலாகிய இறைவனிடம் பக்தி செலுத்துவது போல் மொழியின் மேல் பயபக்தி ஏற்படவேண்டும். கடவுளைப்போல் முதன்மை வாய்ந்தது ஆகும் மொழி. மொழியுணர்ச்சியற்ற மக்கள் வாழ்கின்ற நாடு நாகரிகத்திலோ, அறிவு வளர்ச்சியிலோ பண்படவே முடியாது. மொழிப் பற்ற்றின்றி விழிப்பற்றுக் கிடக்கும் மக்கள் விலங்குகளினும் இழிந்தவர். தாய்மொழியை ஏற்றமுறவும் முன்னேற்றவும் மறந்துவிடுகின்ற சமுதாயம் வாழத் தகுதியற்றது.  
பிழையற எழுதுதல், பிழையறப் பேசுதல், மரபு குலையாது நூலியற்றல், தான்தோன்றிகளாகாது, ஆன்றோர் சென்ற நெறியைப் பாதுகாத்தல், புதிய முறையைப் பழைய முறைக்குக் கேடின்றி ஏற்றுக் கொள்ளுதல் முதலிய செயல்களாலல்லவா ஒரு மொழி முன்னேற முடியும்?
      எந்த ஒரு மொழியும் அரசியலோடு இசையாதவரை தனித்து முன்னேற முடியாது என்கிறார்.

மொழியும் வரலாறும்       
      போர் பூசல்களையும் அரசாட்சிக்கு இருவேறு வேந்தர் போட்டி யிடுதலையும் ஒழுக்க வரையறை கடந்த அரசியற் சூழ்ச்சிகளையுமே பெரும்பாலும் உலக வரலாறுகள் பரக்க விரித்துப் பேசுகின்றன.
தமிழகத்து வரலாற்றில் இவற்றிற்கு ஒரு சிறிதும் இடமில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், இவை மிகக் குறைவான அளவிலும், ஒழுக்கத்தையும் அறவுணர்ச்சியையும் வற்புறுத்தும் உண்மைகள் நிறைந்த அளவிலும், தமிழகத்து வரலாற்றில் விளங்கும்.
ஒழுக்கமும், அறமும், அவையிரண்டுங் கலந்த பண்பாடும் உலகின் எந்த வரலாற்றிலும் இவ்வளவு கலந்ததுங் கூட இல்லை. போரிலும் கூட, வடக்கிருந்து மானம் காக்க உயிர்விடும் அரசர்களையும், பகைவன் கை நீர் பருக நாணி உயிர் துறந்த கணைக்கால் இரும்பொறைகளையுமே நாம் காண்கிறோம்.
கால முற்பாடு பிற்பாட்டிற்குரிய அடையாளமாக, அடிமை முத்திரையான கி.மு கி.பி.யைத் தவிர்த்து தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) என்றும் தொ.மு. (தொல்காப்பியருக்கு முன்) தொ.பி. (தொல்காப்பியருக்குப் பின்) என்று எழுதினால் என்ன?

மொழியும் கற்பிக்கையும் (போதனையும்)
     தமிழுக்கு அந்த(கல்வி மொழி)த் தகுதிஇல்லை. அதை உண்டாக்குவதும் அருமை. என்று கூறுவது அறியாமையால் நேரும் பிழைபட்ட முடிவு; பொருந்தாத துணிவு; இந்த முடிவால் தமிழ் உள்ளம் குமுறாமல் இருக்க முடியாது.
      (இந்த வகையில் பாரதியாரின் தமிழ் உள்ளம் குமுறியதை அவரின் சொல்லவுங் கூடுவதில்லை அவை.... என்ற பாரதியின் பாடலை எடுத்துக் காட்டி எழுதுகிறார்)
      தமிழில் கலைகளை கற்பிக்கலாம்; கலைச் சொற்கள் உள்ளன; இன்றியமையா நிலையில் கலைச் சொற்களை உண்டாக்கிக் கொள்ளலாம்.  தமிழ் மொழியைப் போல எல்லாக் கலைகளுக்கும்  இடங்கொடுக்கும் பரந்த இயல்புடைய மொழி மற்றொன்று காண்பதரிது.

மொழியும் இசையும்
     இசைக் கலையைப் பகுதி பகுதியாகப் பிரித்து நுண்ணிதாக ஆராய்ந்து இவை குணம், இவை குற்றம், இவை இலக்கணம், இவை வழு என அக் கலைக்கு நிலையான வரையறைகள் கண்ட பெருந்திறன் பழந் தமிழர்க்கு இருந்துள்ளது.
      (இசை மரபு என்னும் பழந்தமிழ் இசைநூல் குறித்தும் உள்ளாளப் பாடல் முறை குறித்தும் விளக்குகிறார்)

மொழியும் பாட்டும் (கவியும்)
     பாட்டைச் சுவைக்கிறவர்கள் பண்பட்டு உயரவேண்டும் என்பதைப் பாடுகின்றவன் நோக்கமாகக் கொள்ளவேண்டும். உலகின் உயர்நிலை இழிநிலைக் காட்சிகளை மற்றவர்கள் காணாத ஒரு புதிய நோக்குடன் கண்டு தனக்கே உரிய சிந்தனைக் கலவையோடு அணிசெய்து படிப்போர்க்குக் கவர்ச்சி நிறைந்து தோன்றும்படி கூறும் தகுதி வாய்ந்தவன் எவனோ, அவன் பாட வேண்டும்.
      (தொல்காப்பியம் கூறும் பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல்... என்ற பாட்டிலக்கண மரபை எடுத்துக்காட்டுகிறார்)
      பொது(சாதாரண) நடையில் பொது(சாதாரண)க் கருத்தை உரைபோலச் சொல்லுகின்ற ஒருவகைப் பாட்டு மேல்புலத்தார் வழக்கில் உண்டு. இக் காலத்தில் தமிழ் வழக்கிலும் அது பரவி வருகிறது. நடைச்செய்யுள் என்பர் அதனை. உயரிய பொருட்பாடு அமையாவிட்டால் இவ்வகைச் செய்யுள்களும் பயனற்றவையே எனகிறார்.

மொழியும் செவிப்பயனும் என்ற கட்டுரையில் கேள்விச்செல்வம் குறித்து திருக்குறளை எடுத்துக்காட்டி விளக்குகிறார்.

      
மொழியும் மரபும்
                அறிபுலனுக்கும் நுகர்புலனுக்கும் அவை பிறக்கும் மனத்திற்கும் ஆகிய இம் மூன்றோடும் தொடர்புபடும் இலக்கியம், மரபை விலக்கிய முறையிலே தோற்றுவிக்கப் படுமானால் சமுதாயத்தோடு இயைபு இழப்பது உறுதி. இலக்கியங்களைச் சமூகத்தோடு இணைக்கும் பொறுப்புடையதே மரபு.
(மரபு வழுக்களையும் வழுவமைதிபற்றியும் விளக்குகிறார்.)
பாட்டு, உரை, எழுத்து, பேச்சு ஆகிய எல்லாத் துறைகளிலும் மரபை எதிர்ப்பது, மீறுவது என்பது ஒரு பொழுது போக்கு விளையாட்டாகிவிட்டது இப்போது. மரபின் சிதைவு மொழியையும் சிதைக்கத் தொடங்காது என்பதற்கு என்ன உறுதி?

மொழியும் மனத்தத்துவமும் என்ற தலைப்பில் அப்பனைப் போல் மகன் என்ற கூற்றைச் சரியென்று நிறுவ முயலும் நா.பா.வின் முயற்சி இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலையில் ஏற்றுக் கொள்ளுமாறு இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.

இரண்டு மணிமொழிகள் கட்டுரையில் இரு குறள்களின் சிறப்பை விளக்குகிறார்.

மொழியில் ஒப்புநயம் என்ற கட்டுரையில் திருக்குறளில் ஒரே உவமை, ஒன்றில் நிலையாத தொடர்பின்மையையும் மற்றொன்றில் நிலைத்த தொடர்பையும் பொதுத் தன்மைகளாகப் பொருத்திக் கூறப்பட்டிருக்கும் நயத்திற்காக வள்ளுவரைப் பாராட்டுகிறார்.

தென்னிந்திய மொழிகள், மொழியும் நாடகமும் கட்டுரைகளில் தலைப்புக் கொத்த பல செய்திகளைக் கூறுகிறார்.

மொழியும் சிறுகதைகளும்
எழுத்தாளர்களே! இன்றைய வளர்ச்சியின் வேகத்தில் உங்களுக்கிருக்கும்
பொறுப்பைத் தவற விட்டுவிடாதீர்கள்.
      தமிழ் மரபும், தமிழ்ப் பண்பும், தமிழ் மக்கள் இனமும் என்றும் எதற்காகவும் பொறுப்பின்மைக்குத் தொடர்ந்து ஆதரவளித்தது இல்லை.


மொழியும் புதின வளர்ச்சியும் கட்டுரை, தமிழ்ப்புதின வரலாற்றை வளர்ச்சியைக் கூறுகின்றது.

தாளிகை(பத்திரிகை)களும் மொழிநடையும்
     நாளிதழிலிருந்து மாத இதழ்கள் வரை பெரும்பாலானவற்றின் மொழி நடையில் காணும் பிழைகளைக் களைய வேண்டும்.
சந்திப் பிழையும், மரபுப் பிழையும், பொருட் பிழையும் மலியப் பெரும்பாலான பிறமொழிச் சொற்களைக் கலந்து ஆசிரியருரை எழுதுவதும் தவறாக மொழி பெயர்ப்பதும் அச்சுக்கோப்பில் தவறு செய்வதும் இதழின் மொழிநடையைக் கெடுக்கும்.
கொச்சை மொழி, அயற்சொல் பயன்பாட்டிற்கு வரம்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒழுங்கும், மரபும், இலக்கணமும் இல்லாத மொழிநடையில் கருத்துக்கள் தங்குமா? தங்கத்தான் முடியுமா?
இறுதியாக, மொழியைப் பாதுகாக்க முடியாவிட்டாலும் அதன் தூய்மையைக் கெடுத்துக் கறைப்படுத்தும் பணியை அல்லது பழியை நீங்கள் செய்ய வேண்டாம்.

மொழியும் உரைநடையும் 
     சொற்களின் வகையும் பொருள்நிலையும் தெரிந்து பயன்படுத்த வேண்டும். மொழியை எளிமையாகவும், தூய்மையாகவும், தெளிவாகவும் பயன்படுத்துகிறவர்களைப் போற்ற வேண்டும்.
      பல பேர்கள் சேர்ந்து ஒரு பிழையைச் செய்துவிட்டு அதையே மரபாக்கிவிடும் தன்னலத்தை இன்று எங்கும் காண்கிறோம்.
      தப்புத் தப்பாக யாப்பும் கோப்புமின்றி ஆயிரம் கவிதைகள் எழுத முயல்வதைக்  காட்டிலும் எளிமையும் தூய்மையும் தனித்தன்மையும் இலங்க நான்கு வாக்கியங்கள் நன்றாகவும் அழகாகவும் எழுதிவிடுவது எவ்வளவோ சிறந்தது. பிழையில்லாமல் தெளிவாக எழுதுவதே ஓர் அறம்
      தெளிவுக்குச் சுருக்கம் தேவை. சுருக்கத்தில் அழகு அதிகம். தெளிவும் சுருக்கமும் இருந்தால் முறையும் இருக்கும்.

மொழியும் சுவையும்
     நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எண்வகை மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் வரிசைப் படுத்தியமைக்குக் காரணங்களை விளக்குகிறார். ஏனைச்சுவைகளுக் குள்ளது போல, சமனிலைச் சுவைக்கு மெய்யின் கண் நிகழும் வேறுபாடு இன்மையின் ஆசிரியர் தொல்காப்பியர் அதனைக் கூறாராயினர் என்னும் பேராசிரியர் கருத்தை எடுத்துக் காட்டுகிறார்.

மொழியும் புதிய விளைவுகளும்
     பிறமொழி பயிற்சி காரணமாக தமிழ் மொழி மரபுக்கு ஏலாத சொல்லிய அமைப்புகளை எடுத்துக் காட்டுகிறார். இடம் போட்டு வைத்தல், பங்கெடுத்துக்கொள்ளல், முயற்சிக்கிறேன், ஒருநூறு, மோசமானவராக இருக்கிறீர்கள் போன்ற தவறான ஆட்சிகளை விளக்குகிறார்,
      இருமொழி இணைந்து பிரியாது  ஒரு தொடராய் நிற்கும் பிறமொழிச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவது நல்லதாகாது என்கிறார்.
      தமிழ் புதிய வளர்ச்சியைப் பெறுவதற்குப் பழமையின் ஆசியும் அறிவுரையும் வேண்டும். புதுமையின் உழைப்பும் வேண்டும் என்று கூறுகிறார்.

மொழியும் பொறுப்புணர்ச்சியும்          
இலக்கியத்தில் படைப்போர் படிப்பொர் ஆகிய இருபாலார்க்கும் பொறுப்புணர்ச்சி குன்றும் போது தம் நிலையினின்று தாழ்கின்றனர். பொலிவு குன்றுகின்றனர். பண்பிழக்கின்றனர்.
யார் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்தல் தவறு. உரையாடலாகப் பேசும் பேச்சிலும், சொற் பொழிவிலும் செய்யப்படும் தவறுகள் காற்றோடு போய்விடும். எழுத்தில் செய்யப்படும் பிழைகளோ செய்தவரின் பொறுப்பின்மைக்கு நிலைத்த சான்றாக என்றும் இருந்துவிடக்கூடியவை.
(எழுத்தாளர்களைப் பழைய இலக்கியங்களையும், இலக்கண வம்புகளையும், மரபுகளையும் புறக்கணிக்காதீர்கள் என்று அறிவுறுத்துகிறார். முந்தைத் தலைமுறையின் அறிவைப் போற்றவும்,மதிக்கவும் தெரியாவிட்டால் பிந்தைத் தலைமுறையின் போற்றுதலும் மதிப்பும் உங்களுக்கு எய்தாது என்று கூறுகிறார்.)

மொழியும் அறநூல்களும்
                நல்லவற்றை விரும்பவும் தீயவற்றை வெறுக்கவும் கற்றுக் கொடுத்த பண்பை நமக்கு அளித்தது எது? இந்த நாளிலும் கூட நமக்கு அறத்திலும் ஒழுக்கத்திலும் நம்பிக்கை பய்விடவில்லையே! இதற்குக் காரணம் நமது பழமையான அறநூல்களே எனபதில் ஐயமில்லை.
அறநூல்கள் விதை நெல்லைப் போன்றவை. வாழ்வை ஒழுங்குப் படுத்தும் உண்மைகளை நாம் அவற்றிலிருந்துதான் பயர் செய்து வளர்க்க வேண்டும். சமய நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள், காவியங்கள் என்ற மற்றைய துறைகள் எல்லாம் அறநூல்கள் என்ற விதை நெல்லிலிருந்து பயிர் செய்யப்பட்டவைதாம்.

முன்னுரையில் நா.பா.
     மனம் நடக்கிற வழியில் கால்கள் நடக்க வேண்டும் என்று நினைப்பது சிறந்தது. என்னுடைய மனம் நடக்கின்ற வழி எப்போதுமே தமிழ்வழி. உலகத்துச் சிந்தனைகளை எல்லாம் சிந்தித்தாலும் அவற்றைத் தமிழ்நாட்டு மனத்தோடு தமிழனாக இருந்து  தமிழின் வழியே சிந்திக்க வேண்டும் என்பது என் குறிக்கோள்.
      தமிழ்வழியில் நடக்காதவர்களுக்கு அருகே என்னுடைய கால்கள் நடக்க நேரும்போதும் கூட மனம் தமிழ் வழியிலேயே நடந்துகொண்டிருக்கும். கால்கள் எந்தெந்த வழிகளில் நடக்க நேர்ந்தாலும் மனம் ஒரே வழியில் நடக்கும்படி பழக்கிக் கொள்வதைத்தான் தவம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அந்தத் தவத்தைத் தமிழ்த் தவமாகச் செய்து கொண்டு வருகின்றேன்.
      இந்தத் தமிழ்வழி நடையில் வாசகர்களை எல்லாம் என்னோடு அழைத்துச் செல்ல ஆசைப் படுகிறேன். அந்த ஆசை காரணமாகத்தான் இந்த நூலுக்கு மொழியின் வழியே என்ற பெயரையும் சூட்டினேன்.
      இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே வங்காளிகளுக்கு ஏற்பட்டிருக்கிற தாய்மொழியுணர்ச்சி நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் தமிழர்களுக்கு ஏற்படவில்லையே என்பதை நினைக்கும் போது சிற்சில சந்தர்ப்பங்களில் நான் மனம் புழுங்கியது உண்டு. தமிழ் நன்றாகத் தெரிந்த தமிழர்களே தங்கள் தாய் மொழியில் உரையாடுவதற்கு வெட்கப்படுகிறார்களே!
      இந்த நிலைகள் யாவும் மாறி நாட்டுணர்ச்சி பெருக வேண்டும். அப்படிப் பெருகுவதற்கு எதைச் சிந்தித்தாலும் நம்முடைய மொழியின் வழியே சிந்திக்கப் பழக வேண்டும். மாசுகோவிலோ, அமெரிக்காவிலோ, லண்டனிலோ உங்கள் கால்கள் எந்த நாட்டின் வழியில் நடந்தாலும் மனம் தமிழ் வழியில் நடக்கட்டுமே! இது என் வேண்டுகோள். - இவை நா.பா. முன்னுரையில் எழுதியிருந்ததின் பகுதிகளாகும்.

      நா.பார்த்தசாரதி அவர்கள் தனித்தமிழ் இயக்கஞ் சார்ந்தவரல்லர். தனித்தமிழ்க் கொள்கையாளரும் அல்லர். அவருடைய எழுத்தாக்கங்கள் வடசொற் கலந்தே எழுதப் பட்டுள்ளன. ஆனால், இந்நூலில் காணப்படும் கட்டுரைகளில் பல இடங்களில் மரபு, தூய்மை, வழக்கு, இலக்கணம் பேணப்பட வேண்டும் என்று பலவாறு வலியுறுத்துவதைக் காண்கின்றோம். அறிவுரையாகவும் வேண்டுகோளாகவும் இவற்றையே அழுத்தமாகக் கூறுகிறார்.
அவர் வலியுறுத்தும்  இக் கருத்துக்கள் தமிழுக்கும் தமிழர்க்கும் காப்பளித்து நலன் சேர்க்கும் கருத்துக்கள் என்பதில் ஐயமில்லை.  இந்நூலை அவர் தம்முடைய ஏனைய நூல்களைப் போலன்றி நடையில் செறிவோடு எழுதியிருப்பதைப் பல இடங்களில் காணலாம்.

*****************************************************************
 
    

   
  
         

புதன், 30 ஜனவரி, 2008

தூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்!

          மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்க நெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டிலங்குகிறது. எல்லாரும் புரிந்து கொள்ளக் கூடியவாறு இக்கருத்தைச் சான் கிரகாம் தம் நூலில் (English word-book) விளக்கிக் கூறுகிறார்.

தமிழ்மொழி உலக முதன்மொழி என்றும் முதற்றாய்மொழி என்றும் கூறும் தேவநேயப் பாவாணர் போலும் அறிஞர்களின் கருத்துக்களை ஏற்கத் தயங்குவோர் இருக்கலாம். ஆனால், தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் மொழியறிஞர்களாகிய கால்டுவெல், இராபர்ட்டு நொமிலி, எல்லிசு, வீரமாமுனிவர், போப், சியார்ச்சு காட்டு போன்ற பலரும் ஐயத்திற்கிடமின்றி ஒப்புகின்றனர். அவர்களின் நடுவுநிலை மதிப்பீடுகள், தமிழ் தனித்தியங்கவல்ல செம்மொழி என்னும் கருத்தை வலியுறுத்துகின்றன.

இனி, தூயதமிழ் அல்லது தனித்தமிழ் என்று குறிப்பிடும் தமிழ் எது? பலரும் கேட்கும் இக்கேள்விக்கு விடை இதுதான் : ஆரியர் இங்கு வருமுன் தமிழ் இயற்கையாக எப்படி வழங்கியதோ அப்படி வழங்குவதே தூயதமிழ். மொழியறிஞர் தேவநேயப் பாவாணர், “தமிழென ஒன்றும் தனித்தமிழென்றும் இருவேறு மொழிகள் இல்லை – தமிழதுதானே தனித்தமிழாகும் தவிர்த்திடின் பிறசொல்லை!” என்பார்.

மிகச் செழிப்பாக வளர்ந்திருந்த தூய இனிய செந்தமிழ், ஆரியரின் வேத மத்ததாலும், சமண, பவுத்த மதங்களாலும் தாக்குண்டு, படிப்படியாய் சீரிழந்தது. அரசியலில் களப்பிரர், பல்லவர் அரசுகள், வடமொழிக்கே ஊக்கம் அளித்துப் போற்றிப் புரந்தன. மாற்றார் ஆட்சியில், மொழி்யுணர்வும் வரலாற்றறிவும் தமிழரிடை முற்றும் மறைந்த காலத்து, தமிழ்மொழியைக் கெடுத்துப் பெருமை குன்றச் செய்யவேண்டு மென்றக் கரவான உள்நோக்கத்தோடு தமிழில் பிறமொழிச்சொற் கலப்பு நடந்தது. தமிழரின் வழிப்பின்மையும் நாணாமை நாடாமை நாரின்மை பேணாமையும் அதற்கு வசதியாக அமைந்தது. பின்பு, அரபியர், பார்சியர், சீனர், போர்ச்சுக்கீசியர், ஆங்கிலேயர் தொடர்பால் தமிழ் மேன்மேலும் கலப்புற்றது.

மொழிக்கலப்பு தமிழின் வளர்ச்சியைத் தடுத்தது. மொழிக்கலப்பும் ஒலிக்கலப்பும் தமிழினின்று மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம், குடகம், துடவம், கோத்தம், கோண்டி, கொண்டா, கூய், ஒராஒன், இராசமகால், பிராகுவி, குருக்கு, குவீ, பர்சீ, கடபம், மாலத்தோ, நாய்க்கீ, கோலாமி முதலிய மொழிகள் பிரிந்து வழங்க வழிவகுத்தன. இதனால், மக்களும் பிரிந்தனர்.

தமிழிற் கலந்துள்ள பிறமொழிச்சொற்கள் தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண்டவையல்ல. வளமிக்க தமிழ்மொழிக்குச் சொற்கடன் தேவையுமில்லை. மொழியறிஞர் எமினொ போன்ற பிறநாட்டு அறிஞர்கள் பலரும் தமிழின் வேர்ச்சொல் வளம் ஈடற்றதென்றுரைப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழில் வலிந்து பிறமொழிக் கலப்பைத் தொடர்ந்து வருகின்ற சில எழுத்தாளர்கள் நடைமுறையில் – வழக்கில் – உள்ள எளிய தமிழ்ச்சொற்களையும் புறக்கணித்து வீம்புக்காகவும் உள்நோக்கத்தோடும் அயல்மொழிச் சொற்களை கலந்தெழுதிக் குழப்பி வருகின்றனர்.

வடமொழி தேவமொழி என்றும் அம் மொழியையும் அதன் சொற்களையும் வழங்குவது இறைவனும் விரும்பும் ஏற்றம் என்றும் தவறான கருத்து வலிவாகப் பரப்பப் பட்டதால் வரைதுறையின்றி வடமொழிச் சொற்களை எவ்வகை எதிர்ப்புமின்றிக் கண்டமண்டலமாகத் தமிழில் கலந்தெழுதும் நிலையேற்பட்டது. இந்நிலையால், தமிழினுடைய தூய்மையும் வளமுங் கெடவும் பெரும்பேரளவிலான தமிழ்ச் சொற்கள் பொருளிழக்கவும் வழக்கொழியவும் நேர்ந்தது.

நன்றாக எளிதில் புரியக்கூடிய பொருத்தமான தமிழ்ச்சொற்களை விலக்கி, அரிதான, விளங்காத, சரியாகப் பொருந்தாத வடசொற்கள் வலிய திணித்துக் கலக்கப்பட்டதற்கான சில சான்றுகளைப் பாருங்கள் :

வலிந்து திணித்த வடசொற்கள் / வழக்கு வீழ்த்தப்பட்ட தமிழ்ச்சொற்கள்

தர்மம் /அறம்
கருணை /அருள்
நீதி /நயன்
தராசு /துலை
அங்கம் /உறுப்பு
யாகம் /வேள்வி
சந்தேகம் /ஐயம், ஐயுறவு
பயம்/ அச்சம்
தேகம் /யாக்கை, உடம்பு
சந்தோஷம், ஆனந்தம், குதூகலம் /மகிழ்ச்சி, உவகை, களிப்பு, இன்பம்
உத்தியோகம்/ அலுவல்
மைத்துனன், மச்சான்/ அளியன்
புதன்/ அறிவன்
சங்கீதம்/ இசை
ராகம்/ பண்
ஆச்சரியம /வியப்பு
அமாவாசை /` காருவா
பௌர்ணமி /வெள்ளுவா
விருத்தாசம்/ பழமலை, முதுகுன்றம்
பிருகதீசுவரர் /பெருவுடையார்
பாதாதிகேசபரியந்தம் /அடிமுதல்முடிவரை
பஞ்சேந்திரியம்/ஐம்புலன்
துவஜாரோகணம் /கொடியேற்றம்
ஹாஸ்யரசம் /நகைச்சுவை
குலஸ்திரீபுருஷபாலவிருத்த ஆயவ்ய்ய பரிமாண பத்திரிக்கை /குடிமதிப்பு அறிக்கை (census report)
ஜன்னல் /பலகணி, காலதர், சாளரம், காற்றுவாரி

இப்பட்டியலை முடிக்கத் தனிநூலே தேவை.

பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகத் தோன்றுவதுபோல, வடசொற்களோடு கலந்த பல தமிழ்ச் சொற்களும் வடசொற்களாகக் கருதப்படுகின்றன.

வலிந்த மொழிக்கலப்பு செய்தபோதே, தமிழ்மொழியையும் தமிழ்ச் சொற்களையும் இழிவுறுத்தும் கொடுமையும் நடந்தது. தமிழை இழிவுபடுத்தினாலே போதும், தமிழர் இழிந்தவராகி விடுவர் என்ற உள்நோக்கத்துடன் இச்செயல்கள் நடந்தன. ‘சோறு’ என்பது தாழ்வென்றும், ‘சாதம்’ என்பது உயர்வென்றும், ‘நீர்’ என்பது இழிவென்றும் ‘ஜலம்’ என்பது உயர்வென்றும் மிகவலிந்த கருத்துத் திணிப்புப் பல்வேறு வகைகளில் நடைபெற்று வந்தது. இப்போக்கு இப்போதும்கூடச் சில இடங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

வடசொற் கலப்பால் தமிழரின் மொழியுணர்வு மரத்துப் போனதால் புதிது புதிதாய் ஆங்கிலம் உருது முதலான பிறமொழிச் சொற்கள் தடையின்றிக் கலந்து தமிழைச் சிதைக்கின்றன. தேவையின்றி வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால், தமிழ் பன்மொழிக் கலவையாக மாற நேர்கிறது. தமிழர் அடையாளமற்ற, வரலாறற்றக் குடியாக மாறும் பெருங்கேட்டிற்கு வழிசெய்கிறது.

பிறமொழிகளிலுள்ள அரிய நூல்களை மொழிபெயர்ப்பதே தமிழை வளப்படுத்தச் சிறந்தவழி. அவ்வாறன்றிப் பிறமொழிச் சொற்களைத் தமிழில் கலப்பது தமிழை அடையாளந் தெரியாத மொழியாக்கி அழித்தொழிக்க முயலும் செயலாகும்.

தமிழ மன்னர் எதெதில் வலுவற்றவராக இருந்தாரோ அததைப் பயன்படுத்தி அவர்களைச் செயல்திறமற்றவராக்கி, அதிகார நிலையைக் கைக்கொண்டவர்கள், நுண்ணுத்தியோடு தீண்டாமை உள்ளிட்ட சாதி வேறுபாட்டுக் கொடுமை இழிவுகளை தமிழ்மக்களிடம் கடுங் கரவுணர்வோடு புகுத்தினர். மேற்கத்திய அறிஞர் எட்கர் தர்சுட்டன் தம் நூலில் (castes and tribes of southern India) இக்கொடுமைகளைப் பதிவு செய்துள்ளார். இப்படிப்பட்ட கொடுமைகளிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக மீண்டுவரும் முயற்சியும் தமிழின் தூய்மையைக் காக்கும் முயற்சியும் ஓரளவு ஒப்புமை உடையனவாம்.

முன்னோர் ஆக்கிய மொழியை வளப்படுத்தற்குப் பின்னோரும் புதுச்சொற்கள் ஆக்குதல் வேண்டும். வளர்ந்துவரும் அறிவியல்துறைச் சொற்களுக்கான கலைச்சொற்களை தமிழியல்புக்கேற்பப் புத்தாக்கம் செய்வது இயலாதெனக் கூறி அச்சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமெனச் சிலர் கூறுகின்றனர்! அன்றன்று தோன்றும் புதுப்புது கருத்துகட்கும் புதிதுபுதிதாக வரும் நூல்களில் காணப்பெறும் பல்வேறு அறிவியல் துறைகளின் சொற்களுக்கும் உடனுக்குடன் தமிழ்க் கலைச்சொற்கள் அமைக்கப் பெறல் வேண்டும்.

பிரான்சு, கொரியா, உருசியா, சப்பான், சீனா போன்ற நாடுகளில் அவர்கள் மொழியில் நடைபெறும் இப்படிப்பட்ட வேலைகள் தமிழ்மொழியில் மேற்கொள்ளப் படவில்லை. இந்நிலையில், தமிழிலுள்ள பல அரிய சொற்களை வழக்கு வீழ்த்தும் பணியும் மிகக் கரவாக நடந்து வருகிறது. என்றாலும், இதுவரையில் தமிழில் முயற்சிகளே நடக்காமலுமில்லை! நடந்துள்ள முயற்சிகளைச் சீர்செய்து இனி செய்ய வேண்டியவற்றிற்கு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ளாமல், பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கண்டுபிடிக்கச் சோம்பற்பட்டவர் பக்கத்திலுள்ள சிற்றப்பன் வீட்டில் மாப்பிள்ளை தேடியது போன்ற வழியைக் கூறுவதா?

இன்றுங்கூட - தமிழ்வழிக் கல்வியை முறையாக நடைமுறைப் படுத்துவதோடு தமிழ்வழியில் படித்தோர்க்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்னும் நிலைவந்தால், புதிதுபுதிதான அறிவியல் கலைச்சொற்களோடு மளமளவென நூல்கள் எழுதிக் குவிக்கப்படும்! தமிழ்ப் பாடநூல் நிறுவனம் முன்பு ஓரளவு செய்ததைச் சான்றாகக் கொள்ளலாம். சீரோடு அவற்றைச் செப்பம் செய்து, அவற்றின் துணையோடு சிறந்த கல்வியைத் தாய்மொழி வழியே தரமுடியும்.

வழக்கற்று, கிட்டத்தட்ட அழிந்தேபோன நிலையிலிருந்த தம் தாய்மொழி எபிரேயத்தை மீட்டெடுத்துச் செப்பம்செய்து, அம்மொழிவழியே கல்விகற்றுப் பலதுறைகளிலும் முன்னேறி வாழ்ந்துவரும் யூதர்களின் மொழிநிலையிலான முயற்சியை நினைத்துப் பார்க்கத் தவறுகிறார்கள், வசதியாக!

எம்மொழியிலும் எல்லாமொழி ஒலிப்புகளும் இல்லை. சீன எழுத்தின் ஒலிப்பு வேறு எந்த மொழியிலுள்ளது? ஒருமொழி தன் இயல்பிற் கேற்காத ஒலிகளை ஏற்பின், நாளடைவில் அது சிதைந்து வேறொரு மொழியாகிவிடும். தமிழ் என்பதை ‘டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தமிஷ், தமிஸ்’ - என்றெல்லாம் தானே ஆங்கிலத்தில் எழுதுகின்றனர்! பலுக்குகின்றனர்! ஆங்கிலம் ஏன் ‘ழ’ என்னும் தமிழ் எழுத்தை ஏற்கக்கூடாது என்று கேட்பதா?

தமிழர் பேச்சில் பலசொற்றொடர்கள் ஈறுதவிர முற்றும் சமற்கிருதமாகவும் ஆங்கிலமாகவும் மாறிவருகின்றன. இந்நிலை, எழுதும்போதும் – வரிவடிவிலும் – தொடர்கிறது. பிரஞ்சு மொழி வெளியீடுகளில் தேவையற்றுப் பயன்படுத்தப்படும் ஒவ்வோர் ஆங்கிலச் சொல்லுக்கும் 2 ‘பிரான்’ தண்டம் கட்டச் செய்யும் சட்டத்துக்குப் பிரான்சு நாட்டின் தலைவராயிருந்த தெ கால் வழிசெய்ததாகச் செய்தியொன்று உண்டு. இப்படிப்பட்டக் கட்டுப்பாடுகள் சீனத்திலும் உண்டென அறிகிறோம். மொழி வளர்ச்சிக்கு முதல்தேவை அதன் மொழிக்கலப்பற்ற தன்மையைப் பேணிக் காப்பதே!

பிரான்சு, கொரியா, உருசியா, சப்பான் போன்ற நாடுகளில் அவரவர் தாய்மொழியன்றிப் பிறமொழி அறியா அறிவியலறிஞர், ஆய்வறிஞர் செயற்பாடுகளைக் குறைகூறத் துணிவார்களா? புதிதுபுதிதாக வரும் நூல்களை உடனுக்குடன் மொழிபெயர்க்க அங்குள்ள ஏற்பாடுகளைப்போல், இங்கு எந்த ஏற்பாடும் செய்யப்படாதது அன்றோ குறை!

இன்னுஞ் சிலர், தம் ‘இடைப்பட்ட’ ஆராய்ச்சியால் ‘பகல்’, ‘இரவு’ மொழிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிறமொழிச் சொற்களை ‘ஆக்கிரமிப்பு’ச் சொற்கள் என்றும் வளமாக்கும் சொற்கள் என்றும் பிரித்து முதல்வகையை மட்டுமே தவிர்க்கலாம் என்கிறார்கள்! அதாவது, ‘டெலிபோன், டி.வி., கம்பியூட்டர்’ மட்டும் வேண்டாவாம்! ஆனால், ‘ஜாங்கிரி’, ‘ஜிலேபி’, ‘அல்வா’ அப்படியே வேண்டுமாம்! இப்படி வேறுபடுத்துதற்கான அளவுகோலை, அன்பு செலுத்துதற்கு அவர்கள் அளவுகோல் கண்டுபிடித்துள்ளதைப் போல, இதற்கும் கண்டுபிடித்துள்ளார்களாம்!

சில ‘மிகுமேலறிவுப் பெரும்பெரிய’ எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், சப்பானியர்கள் அவர்கள் மொழியிலேயே பயில்கிறார்கள் என்று வானளாவப் புகழ்கிறார்கள். ஆனால், தமிழர்கள் தமிழ்வழியிலேயேப் படிக்க வேண்டும் என்றால் இவர்களுக்கு அருவருப்புத் தோன்றிவிடும்! தாய்நாடு என்றால் தலையாட்டுவார்கள்! தாய்மொழி என்றாலோ தமிழ்த்தாய் என்றாலோ இவர்களுக்கு உடலெங்கும் எரிச்சல் கண்டுவிடும்! இவர்கள் இலக்கணப்படி, பிறமொழிகலவாது எழுதப்படும் பா, பாவே (அவர்கள் கூற்றில் ‘கவிதையே’) அன்று!

நாட்டையும் மொழியையும் உலகமே தாயாகக் கருதுகிறது. ஆனால்,தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டுப் பற்றும் இவர்களுக்குக் காமமாகத் தெரியும்!. பாரதியைப் போற்றிப் புகழ்ந்து தள்ளுவார்கள். அந்தக் காலத்திலேயே பாரதி, இயனறவரை தமிழில் பேசவேண்டும் என்று சொன்னதையும் பாடங்கள் அனைத்தும் தமிழிலேயே கற்பிக்கப்படவேண்டும் என்று சொன்னதையும் கண்டுகொள்ள மாட்டார்கள்!

ஒருமுறை, தமிழ்க்காப்புக்கென சிறு முயற்சியாக ஊர்வலம் செல்ல முனைந்தவர்கள், இப்படிப்பட்ட ‘பெரும்பெரிய எழுத்தாளர்’ ஒருவரை அழைத்தபோது அவர், “டோன்ட் ஒர்ரி, டமில் வில் லிவ் பார் எவர்” எனத் திருவாய் மலர்ந்துத் தம் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தியிருக்கின்றார்!

இவர்கள் எழுதும் சில சொற்றொடர்களைப் பாருங்கள்-

‘மிஸ் தமிழ்த்தாய்க்கு நமஸ்காரம்’,
‘நல்ல கவிதை என்றால் தனித்தமிழில் இருக்கக்கூடாது’,
‘தமிழ்ப்பற்று பொருந்தாக் காமம்’,
‘தமிழ்ப்பற்று தற்கொலைக்குச் சமம்’ .....

ஆழ்மனத்தின் அருவருப்பான நிலைகளும் பொறுத்துக் கொள்ள இயலாக் காழ்ப்பின் பொருமலும் எரிச்சலும் தானே இவ்வாறு வெளிப்படுகின்றன!

தமிழ்மீது ‘அக்கறை’யுள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் இப்போலிகள் தங்குதடை தயக்கமின்றிப் பிறமொழிச் சொற்களைக் கலந்தெழுதுவதை ஒட்டாரமாகச் செய்துவருகிறார்கள். தூயதமிழ் பேணும் முயற்சி செல்லாக் காசாகிப் போனதென்றும் அப்படி முயன்றோர் காலச்சுழியில் காணாமல் போய்விட்டார்கள் என்றும் எழுதி மகிழ்ந்து கொள்கிறார்கள்! முழுப்பூசணிக் காயைச் சோற்றில் மறைக்க முயலுகிறார்கள்!

நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள் தூயதமிழ்பேணும் முயற்சி தொடங்கியபோது எழுதப்பட்டுவந்த தமிழ்நடைக்கும் தொண்ணூறாண்டுகளுக்குப் பிறகு இப்போது பொதுவாக எழுதப்படும் தமிழ்நடைக்கும் உள்ள வேறுபாடே அம்முயற்சி கண்டுள்ள குறிப்பிடத்தக்க வெற்றியை அவர்களுக்கு விளக்கிக் கூறும். நூற்றுக் கணக்கான வழக்கு வீழ்த்தப்பட்ட சொற்கள் மீடகப்பட்டுப் பயன்படுத்தப் படுவதையும், பல்லாயிரக் கணக்கான சொற்கள், குறிப்பாகப் பல்வேறு அறிவியல்துறைக் கலைச்சொற்கள் புத்தாக்கம் செய்யப்பட்டுப் பயன்படுத்தப் படுவதையும் அவர்கள் அறிய விரும்புவதில்லை!

தாய்மொழிக் காப்புணர்வுடன் தமிழர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான இம் முயற்சியால், அரசுதுறையிலும் பொதுமக்களிடத்திலும் ஆசிரியர் மாணவரிடையிலும் இதழ்களிலும் சிறிதேனும் நல்லதமிழ் காணப்படுவதை ஒப்பத்தானே வேண்டும்!

கீழ்க்காணும் வரிகள் 1920-இல் ஒரு தமிழ்ப் பாவலர் ‘தேசியக்கல்வி’ என்ற கட்டுரையில் எழுதியவை.

“தமிழ்நாட்டில் தேசியக்கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகரமுதல் னகரப்புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ்பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்.
ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப் படுவதுமன்றிப் பலகைக் குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்லவேண்டும். ‘ஸ்லேட்’, ‘பென்சில்’ என்று சொல்லக்கூடாது. .............................................................
மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ‘அவயவி’ சரியான வார்த்தை இல்லை. ‘அங்கத்தான்’ கட்டிவராது. ‘சபிகன் சரியான பதந்தான். ஆனால், பொதுமக்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப்பார்த்தேன். ‘உறுப்பாளி’ ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை, என்னசெய்வேன். கடைசியாக ‘மெம்பர்’ என்று எழுதிவிட்டேன். இன்னும் ஆர அமர யோசித்துப் பார்த்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன். .........
தமிழ்நாட்டில் முழுதும் தமிழ்நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நம் பத்திராதிபர்களிடம் காணப் படுகிறது.”

மேலே கண்ட பகுதியை எழுதியவர் பாவலர் சுப்பிரமணிய பாரதியே!

இப்படிப்பட்ட மணிப்பவள நடையை இப்பொழுது ஒருவர் எழுதினால், அவர், தமிழ்மொழியில் வேண்டுமென்றே வீம்புக்காக வடசொற்களைக் கலந்து எழுதுகிறார் என்று கூறுமளவிற்கு இன்றைக்குத் தூயதமிழ் பேணும் முயற்சி முன்னேற்றம் கண்டுள்ளதெனக் கூறலாம்.

முழுமையான வெற்றிபெற இன்னும் தொலைவு உள்ளதென்பது உண்மை. ஆனால், தூயதமிழ் பேணும் முயற்சியே தமிழ்மொழியைக் காக்கும் என்பதும் தமிழை வளர்த்தெடுத் துயர்த்த இன்றியமையாத தென்பதும் உறுதியாகும். தூயதமிழ் காக்கும் முயற்சி மட்டும் இல்லாதிருந்தால், இருபதாம் நூற்றாண்டில் இன்னுமொரு மலையாளம் தோன்றியிருக்கும்! சில கோடித்தமிழர்கள் இன்னொருவகை மொழியினத்தவராக மாறியிருப்பர் என்றால் மிகையுரையன்று, உண்மையே!

பிறமொழிக் கலப்பால் தமிழ்வளமும் தமிழரின் நலமும் கேடுற்றுள்ளது; தமிழர் வாழ்வியலும் பண்பாட்டுக் கூறுகளும் சிதைவுற்றுவிட்டன. தூயதமிழைக் காப்பது தமிழரின் நலன்களில் கருத்துச் செலுத்துவதாகும்! தமிழின், தமிழரின் மீட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் பாடுபடுவதாகும்!

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
 
-----------------------------------------------------------------------------------------
நன்றியுரைப்பு :-
மறைமலையடிகளார்,
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்,
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர்க்கும்
ஏனைத் தமிழ்மீட்சி முயற்சியாளர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி!
-----------------------------------------------------------------------------------------