சனி, 29 ஜனவரி, 2022


வித்தியதும் ஆகாதே வீண்!

=========================

 தன் இன்னுயிர் ஈவதற்குமுன்…

வரலாறு காணாத…

ஒப்புயர்வற்ற…

ஒருதனிச் சிறப்பார்ந்த…

அறிக்கை வெளியிட்டு உணர்வு கொளுத்திய…

ஈடற்ற ஈகி…

முத்துக்குமார் நினைவைப்போற்றுவம்!

கடமை உணர்வோம்!

====================================

வித்தியதும் ஆகாதே வீண்!

======================================

(வெள்ளொத் தாழிசை)

இறப்பில் எழுச்சிதந்த எங்கள் குமரா!

மறத்திற்கே நல்லுருநீ; மாத்தமிழர் மானத்

திறத்தை விளக்கும் திரு.

 

தன்னேரில் ஆவணத்தால் தந்தவுயி ரீகத்தால்

தன்னலத்தார் அஞ்ச தமிழிளைஞர் ஏழ்ச்சிகொள 

நன்முத்தே இட்டாயே வித்து.

 

முத்துக் குமாரேயெம் மூத்த பெருமுரசே

செத்தெழுச்சி தந்ததனிச் சீரா! திருவிளக்கே!

வித்தியதும் ஆகாதே வீண்.

====================================================

சனி, 15 ஜனவரி, 2022

தமிழ் வாழ...!

 

தமிழ் வாழ…!

 

பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது;

பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது;

எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை

எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி னாலும்,

தட்டி, சுவர் , தொடர்வண்டி, உந்துவண்டி

தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்’ என்றெழுதி வைத்தே

முட்டிநின்று, தலையுடைத்து முழங்கி னாலும்

மூடர்களே, தமிழ்வாழப் போவதில்லை !

 

தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்

தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும் !

தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்

தொங்கு கின்ற பலகைகளை மாற்றச் சொல்லிக்

கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும் !

கற்கின்ற சுவடிகளில், செய்தித் தாளில்,

விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்

விதைத்திடுதல் வேண்டும் தமிழ்; வாழும் அன்றே !

 

-      --- பாவலரேறு ‘தென்மொழி’ பெருஞ்சித்திரனார்.