வியாழன், 29 டிசம்பர், 2016

‘செந்தமிழ்ப் பாடினி’ பாவலர் திருவமை மணிமேகலை குப்புசாமி எழுதிய ‘செந்நெற் பயன்மழை’ நூல்

‘செந்தமிழ்ப் பாடினி’ பாவலர் திருவமை மணிமேகலை குப்புசாமி எழுதிய ‘செந்நெற் பயன்மழை’ நூல்.
---------------------------------------------------------------------------------------------------------------
பாவேந்தர் பாரதிதாசன், 23-8-1960 நாளிட்ட குயில் இதழில் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்  பற்றி எழுதிய பன்னிரண்டு வெணபாக்களுள் ஒன்றில், எந்தமிழ் மேலென்று உணமை எடுத்துரைப்போன்; செந்தமிழன்! செந்நெற் பயன்மழை... என்று எழுதியிருப்பார்.
செந்நெல்லைப் பயனாக்ககும் மழையாக அவர் பாவாணரைப் புகழ்ந்திருப்பார். அதே,செந்நெற் பயன்மழை என்னும் தொடரை நூலாசிரியர் மணிமேகலை அவர்கள் பாவேந்தர் பாவாணர் இருவரையும் குறிக்கப் பயன்படுத்தி நூலின் தலைப்பாக்கி உள்ளார்.
நூலாசிரியர் மணிமேகலை, பாவேந்தரின் மகள் வயிற்றுப் பெயர்த்தி ஆவார். தேர்ந்த பாவலராகத் திகழ்பவர். பல பாடல் நூல்களை ஆக்கி அளித்தவர். அவருடைய முதல் உரைநடை நூலாக செந்நெற் பயன்மழை வந்துள்ளது.   

நூல், ஐந்து பகுதிகளாகத் தரப்பட்டுள்ளது. பாவேந்தர், பாவாணர், பாவேந்தர் போற்றிய பாவாணர், பாவாணர் போற்றிய பாவேந்தர், பாவேந்தரும் பாவாணரும் ஆகியவை அந்த ஐந்து பகுதிகளாகும்.

பாவேந்தர் என்னும் பகுதியில், சுருக்கமாக அவர் வாழ்க்கைக் குறிப்புகளாகப் பிறப்பு, குடும்பம், கல்வி, தோற்றம், திருமணம், ஆசிரியப்பணி, பணிநிறைவு, இதழ்ப்பணி, படைத்த நூல்களைப்பற்றிய செய்திகளைத் தந்துள்ளார். பாவேந்தர் படைத்த நூல்கள் 92-ஐயும் பட்டியலிட்டுள்ளார்.
சிலநிகழ்வுகள் என்னும் தலைப்பிலும், மறைவுக்குப் பின் என்ற தலைப்பிலும் இவர் தரும் பல செய்திகள் இதுவரை பலரும் அறியாதவை; வரலாற்றுச் சிறப்புடையனவாகும். மக்கள் பாவலர்
பட்டுக்கோட்டையார் பாரதிதாசன் வாழ்க! என்று எழுதிவிட்டுத்தான் எழுதத் தொடங்குவார், பெங்களூரில் இசைநிகழ்ச்சி நடத்திய எம்.எசு.சுப்புலட்சுமியைப் பாடவிடாமல் கலகம் செய்த கன்னடர்களைக் கண்டித்துக் குயில் இதழில், கன்னடம் பணியவேண்டும் என்றதலைப்பிட்டுக் கடுமையாகப் பாடல் எழுதியது போன்ற பல செய்திகளைக் காணலாம்.

பாவாணர் என்ற தலைப்பிலும், பாவாணரின் சுருக்க வரலாறு, பணி, படைத்த நூல்களின் பட்டியல், சில நிகழ்வுகள், மறைவுக்குப்பின் ஆகிய செய்திகளைத் தருகிறார். மொழி ஆராய்ச்சி என்ற பாவாணரின் முதற்கட்டுரை 1931 சூன்-சூலை செந்தமிழ்ச்செல்வி இதழில் வந்தது போன்ற பல செய்திகளைத் தந்திருக்கின்றார்.

பாவேந்தர் போற்றிய பாவாணர் என்னும் பகுதியில், பாவாணருக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நேர்ந்த ஒத்துழைப்பின்மையும் மதிப்புக்குறைவும் வேலைநீக்கமும் பற்றிய செய்திகளையும், பாவேந்தர் முழுமையாகப் பாவாணரைத் தாங்கி அவருக்குத் துணையாக வலிவாக எழுதிய பல செய்திகளையும் தந்திருக்கிறார்.

பாவாணர் போற்றிய பாவேந்தர் என்ற பகுதியில் பாவாணர், பாவேந்தரின் கொள்கைப்பற்றையும், அன்பையும் போற்றிய பல செய்திகளைத் தந்துள்ளார்.

பாவாணரும் பாவேந்தரும் என்னும் பகுதியில் இருவரின் செயல்பாடுகளில் காணும் கொள்கை ஒற்றுமையையும் விளக்கிக் கூறுகின்றார்.

பாவேந்தரைப் பற்றியும் பாவாணரைப் பற்றியும் அறிந்தவர்களும் தெரிந்திராத பல செய்திகள் நூலில் உள்ளன. இந்நூல்,
தமிழன்பர்களும், ஆய்வாளர்களும் பயன்கொள்ளத் தக்கதாம்.

இந்த நூல்லைப் பதிப்பித்தோர் முகவரி:         
விளாதிமிர் பதிப்பகம்,
44, நான்காம் குறுக்குத் தெரு,
குறிஞ்சி நகர்,
புதுச்சேரி 605 008.
தொலைப்பேசி: 0413 2255693
கைப்பேசி: 94421 86802.
-------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

திரு.வி.க. வின் இறுதிச் சொற்கள் – கி.ஆ.பெ..வி. எழுதிய செய்தி!






திரு.வி.க. வின் இறுதிச் சொற்கள் கி.ஆ.பெ..வி. எழுதிய செய்தி!
-------------------------------------------------------------

தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களும் நண்பர்களாக இருந்துள்ளனர். பல நேரங்களில் கி.ஆ.பெ.வி., திருவிகவைக் கண்டு பேசியிருக்கிறார்.

மறைமலையடிகளுக்கும் பெரியாருக்கும் முரண் ஏற்பட்ட காலத்தில், அடிகளார்மீது, பெரியாரைக் கொலைசெய்யத் தூண்டினார் எனக் குற்றம் சுமத்தி வழக்கொன்றும் போடப்பட்டிருந்தது. அவ்வழக்கைத் திரும்பப்பெறச் செய்ததற்குத் திரு.வி.க.வும் கி.ஆ.பெ.வி.யும் காரணமாக இருந்திருக்கின்றனர்.

திரு.வி.க., தாம் எழுதி வெளியிட்ட தம் வரலாற்றில், கி.ஆ.பெ.வி.யைப்பற்றி நீண்டதொரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.   

திரு.வி.க., அகவை முதிர்ந்து, நடைதளர்ந்து, கண்பார்வை குறைந்து, செயலிழந்து இல்லத்தில் இருக்கம் பொழுது, கி.ஆ.பெ.வி. பலமுறை சென்று அவரைப் பார்த்திருக்கிறார். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கச் சென்றபோதும், முனைவர் மு.வரதராசனார் அங்கு இருந்திருக்கிறார். மு.வ., திருவி.க.வைத் தம் தலைவராகவும் தம் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் கருதி வந்ததாகக்  கி.ஆ.பெ.வி. எழுதியுள்ளார்.

கடைசியாக ஒருமுறை கி.ஆ.பெ.வி., திரு.வி.க.வைக் காணச் சென்றநிகழ்வினை அவர் எழுதியவாறே கீழே காண்க:

திரு.வி.க. அவர்கள் படுக்கையில் அசைவின்றிக் கிடந்தார். கி.ஆ.பெ. வந்திருக்கிறார் என்று டாகடர் மு.வ., அவர்கள் காதருகில் சென்று உரக்கக் கூவினார். திரு.வி.க. கையை அசைத்து உட்காரச் சொன்னார்.

நான் அவரருகில் சென்று அவரது கையை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு,
ஐயா! நாட்டுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
மொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
மக்களுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
என்று கேட்டேன்.
அதையே அவர் மிகவும் ஓசை குறைந்த சொற்களால் திரும்பக் குறிப்பிட்டு,
நாடு இருக்கிறது... மொழி இருக்கிறது... மக்கள் இருக்கிறார்கள்... நீங்களும் இருக்கிறீர்கள்... பார்த்துக் கொள்ளுங்கள்
என்று கூறினார்கள். நாங்கள் கண்கலங்கினோம்....
வாழட்டும் திரு.வி.க. புகழ்!
வளரட்டும் திரு.வி.க. மரபு!
 - என்று முடித்திருக்கின்றார் கி.ஆ.பெ.வி.

(கி.ஆ.பெ.விசுவநாதம் படைப்புகள் 3, நெய்தல் பதிப்பகம், சென்னை-5., பக்கம் 397-399)
--------------------------------------------------------------