மூலதிராவிடம் - என்பது முறையற்ற ஏய்ப்பு !
====================================================================
அண்மையில் ஒரு திரைப்பட
நடிகர், திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு
பேசும்போது, அவருடைய கன்னட நண்பருடன் அவருக்குள்ள நெருக்கத்தைக்
குறிக்கும் வகையில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது (தாய் மகள் உறவு) என்ற
பொருள்படும்படி பேசிவிட்டாராம். அதனைத் தொடர்ந்து கருநாடகத்தில் எதிர்ப்பு உண்டாகி, அந்த நடிகரின் படத்தைக்
கருநாடகத்தில் வெளியிட தடையேற்பட்டது. இதன்
தொடர்பாகப் பலரும் பல கருத்துகளைக் கூறினார்கள்.
முத்துமணி என்பவர் தினமணி நாளிதழில்
ஒரு கட்டுரை எழுதினார். அதில், ‘நாகாக்க… காவாக்கால்’ என்று அந்த நடிகரை
எச்சரித்திருந்தார். அக் கட்டுரையில் பெட்டிச்செய்தியாகத், ‘தாய்மொழி
அல்ல ஒரு தாய்மக்கள்’ என்ற தலைப்பிட்டும் எழுதியிருந்தார். அதில், ‘தமிழும், கன்னடமும் ‘சகோதர’ மொழிகளே அன்றிக், கன்னடத்துக்குத் தமிழ்
தாய்மொழி அல்ல’ என்று எழுதியதோடு ‘முதனிலைத் திராவிடமொழியை
மொழியியல் அறிஞா்கள் தற்போது மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்கள்’ என்றும் எழுதியிருந்தார்.
இதிலே, ‘முதனிலைத் திராவிட மொழி’ (Proto-Dravidian
language) என்பதும், ‘மீட்டுருவாக்கம்’ (Reconstruction) என்பதும் என்ன என்று கொஞ்சம்
பார்ப்போம்.
முதனிலை மொழி (Proto-language) அல்லது மூலமொழி அல்லது
முந்துமொழி என்பது கற்பனையாக – ஊகமாகக் - கொள்ளப்படும் ஒரு
மொழியாகும். மூலமொழி என்பது துல்லியமான வரலாற்றுப் பதிவுகள் இல்லாத நேரத்தில், அறிவியலால் கணிக்கப்படும்
ஒரு புனைவு (hypothetical
construct) தான். அது உண்மையில் இருந்ததா என்பதை 100% மெய்ப்பிக்க
முடியாது. இது ஒரு அறிவியல் புனைப்பு (scientific hypothesis) என்று கூறுகிறார்கள்.
மூலமொழி என்பது உண்மையில் இருந்திராத, ஆய்வுக்காக மீட்டுருவாக்கம்
செய்யப்பட்ட (Hypothetical
reconstructed language) ஒன்றே என்றும்
கூறியுள்ளார்கள். மேலும், ''மூலமொழிக்
கொள்கை'' என்பது மொழிஆய்வில் அனைவரும் ஏற்றுக்கொண்ட கொள்கை என்று
கொள்ளமுடியாது. இதற்குப் பின்னால் வகுப்பு (வர்க்க) அரசியல் இருக்கிறது என்கிற
கருத்தும் உண்டு.
மாருக்சியர் இசுதாலின், “மொழிக்குடும்பம், பொதுவான, பழைமை யான மூலமொழியில்
இருந்து பிரிந்து உருவான கிளைமொழி களை உள்ளடக்கியது எனும் இந்தோ ஐரோப்பியச்
சிந்தனைக் கொள்கையைக் குறிக்கும்” எனக் கூறியுள்ளதாக
அறிகிறோம்.
முன்னதாக இருந்த ஒரு மொழியிலிருந்தே (உண்மையில் அப்படி ஒரு
மொழி இல்லாமலும் இருக்கும்) குடும்ப மொழிகள் உருவாயின என்ற முன்முடிவுக் கொள்கையை
அடிப்படையாகக் கொண்ட ஆய்வுமுறையே மூலமொழி ஆய்வாகும்.
மூலமொழி என்பது சில தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு
கருதுகோள் (hypothesis) மட்டுமே, அது ஒரு நேரடியான உண்மை
அல்லது நேரடியாக மெய்ப்பிக்கப்பட்ட ஒன்று அன்று என்ற கருத்தும் உண்டு. எனவே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகள் மூலத்
திராவிடமொழி ஒன்றிலிருந்து உருவாயின என்பது மொழிநூலார் சிலரின் ஊகமே தவிர முடிந்த முடிவு அன்று.
இனி, ‘மீட்டுருவாக்கம்’ என்றால் என்ன என்று
பார்ப்போம்:
மொழியியல் மீட்டுருவாக்கம் (Linguistic
Reconstruction) என்பது, ஒரு மொழிக்குடும்பத்தைச்
சேர்ந்த பல மொழிகளை ஒப்பீடு செய்து, அக் குடும்ப மொழிகள்
வந்திருக்கக் கூடிய பண்டைய "மூலமொழி" (Proto-language) (அப்படி ஒன்று இருந்தால்) எப்படி இருந்திருக்கும் என்று
கணிப்பதற்கான அறிவியல் செயல்முறை என்ற விளக்கம் தருகின்றனர்.
மொழியியல் மீட்டுருவாக்கம்
என்பது, இப்போது இல்லாத – இறந்துபோன - அல்லது
நேரடியாகக் கிடைக்கப்பெறாத ஒரு மொழியின் (மூலமொழி - Proto-language - என்று
கூறப்படுவதின்) கூறுகளை, அதிலிருந்து உருவான அந்தக் குடும்ப மொழிகளின் -
ஒப்பீட்டு ஆய்வு மூலம் மீண்டும் உருவாக்குவதாகும் என்றவாறும்
விளக்கம் தருகின்றனர்.
இது, உயிரோடில்லாத, நேரடிப் பதிவுகள் இல்லாத ஒரு மொழியை, நம்மிடம் உள்ள பிற மொழிகளின்
வழியாகப் புனைந்து உருவாக்கும் செயல். இது ஒரு புனைவு (hypothesis) — உறுதியான
பதிவு கிடையாது. ஆனால், இது ஒப்பீட்டு முறையில் தரவுகள், ஒலிவினை நெறிகள் ஆகியவற்றை
அடிப்படையாகக் கொண்டது என்றும் விளக்கப்படுகிறது.
சரி, எல்லா
மொழிக்குடும்பங்களுக்கும் "மூலமொழி" மீட்டுருவாக்கம்
செய்யப்படுகிறதா? என்றால், ‘இல்லை’ என்பதே விடையாகும்.
இலத்தீனிலிருந்து உரோமன்
குடும்பமொழிகள் (பிரெஞ்சு, இசுப்பானிசு, போர்த்துகீசியம், இத்தாலியன், உருமேனியன் போன்றவை)
உருவாயின என்று கூறுகிறார்கள். இலத்தீன், பிரெஞ்சு, இசுப்பானிசு, போர்த்துகீசியம், இத்தாலியன், உருமேனியன் போன்றவை கிளைமொழிகள்
என்றோ, அக்காதங்கை மொழிகள் (Sister languages) என்றோ கூறுவதில்லை.
சமற்கிருதத்திலிருந்து வட
இந்திய மொழிகள் (இந்தி, பெங்காலி, மராத்தி, குசராத்தி போன்றவை) உருவாயின
என்று பொதுவாகக் கூறப்படுகிறது. சமற்கிருதம், இந்தி, பெங்காலி, மராத்தி, குசராத்தி போன்றவை
கிளைமொழிகள் என்றோ, அக்கா தங்கை மொழிகள் (Sister languages) என்றோ கூறுவதில்லை. இவை
எடுத்துக்காட்டுகள் மட்டுமே. பெரும்பாலும் இப்படித்தான் உலகில் பல்வேறு மொழிகள்
பற்றிய ஆய்வு நடக்கிறது.
தமிழ் இயற்கையான மொழி என்பதால், அது மூலமொழி ஆகாது என்றும், ஆனால், இலத்தீன், சமற்கிருதம் பேசப்படாத மரபு
மொழிகள் (இறந்துபட்ட மொழிகள்) என்பதால் அவற்றை மூலமொழியாகப் பார்த்து
விடுகிறார்கள் என்றும் கருத்து கூறப்படுகிறது
தமிழர்களிடம் ஓர் அமைதிக்காகப், ‘பிற திராவிட
மொழிகளைக் காட்டிலும், மூலத்திராவிட மொழியோடு மிக நெருக்கமாக இருப்பது தமிழ்தான்’ என்று கூறிவிடுவார்கள்.
இனி, இலத்தீனுக்கும், சமற்கிருதத்திற்கும் பல்வேறு
கூறுகளில் உள்ள தகுதிகளைவிடத் தமிழின் தகுதிகள் குறைவானவையா? ‘இல்லை’ என்று ஒப்புகிறார்கள்.
உண்மையில், அந்த இரண்டு மொழிகளின் தகுதி நிலைகளுக்கும் மேலான தகுதிநிலை
உடையது தமிழ். அதை யாரும் மறுக்க இயலாது.
இப்படிப்பட்ட நிலைகளில், மொழியியல் மீட்டுருவாக்கம்
என்னும் பொதுக்கொள்கை முரணாக இருப்பது தெளிவு. தமிழை மட்டும் கிளைமொழிகளுள் ஒன்று
என்று கூறுவதும், அதைவைத்து மீட்டுருவாக்கம் என்று கூறி
வலியுறுத்துவதும் ஏன்?
மேலையரை (மேற்கு நாட்டினரை)ப் பொறுத்தவரை, இலத்தீன் உரோமானியப்
பேரரசின் அதிகார அடிப்படை மொழியாக இருந்ததால், அதன் வழித்தோன்றல்
மொழிகளுக்கு - உரோமானிய குடும்பமொழிகளுக்கு -
இலத்தீன் தாய்மொழி என்பது எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், தமிழ்மொழிக்கு அப்படியொரு
அரசியல் நடுவம் – அதிகாரநிலை இல்லை - என்ற
உண்மை எண்ணிப் பார்க்கத்தக்கது.
பல சமையங்களில், மேலை நாட்டு மொழியியல்
ஆய்வுகளில் ஒரு குறிப்பிட்ட வல்லாண்மைப் (மேலாதிக்கப்) பார்வை இருப்பதால், இந்திய மொழிகளின் ஆய்வு
முறையில் குறிப்பாகத் திரவிடமொழிகளின் ஆய்வுமுறையில் வேறுபாடுகள் இருக்கின்றன
எனவும் கருத்து தெரிவிக்கப்படுகின்றது.
உலகமொழியறிஞர்கள்
தொல்காப்பியம், கழக இலக்கியங்களில் போதிய பயிற்சிபெறா நிலை (Lack of Proficiency and Awareness of Tolkappiyam and
Sangam Literature among World Linguists) அவர்களுக்கு முறையாக
அறிமுகப்படுத்தாத நிலையும்கூட காரணமாக உள்ளது.
மேற்குலக
மொழியியல் ஆய்வுகள் பெரும்பாலும் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சுற்றியே
வளர்ந்தன. இதனால், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் போன்ற மொழிகளில்
அவர்களுக்கு ஆழ்ந்த புலமை உண்டு.
அவர்களுக்குத் தொல்காப்பியம், கழக இலக்கியம் போன்ற நூல்கள்
மொழியியல், இலக்கியம், பண்பாடு, குமுகவியல் எனப் பல்துறை
சார்ந்த மிக உயர்ந்த கருவூலங்கள் என்பதையும், தமிழ் உலகின் தொன்மையான மொழி
என்பதையும் முறையாக அறிமுகப்படுத்தாததும், அரிய தமிழ் இலக்கியங்கள்
முழுமையாக ஆங்கிலத்திலும் பிற முகன்மை மொழிகளிலும் கிடைக்காததும் பெரும்
குறைபாடாகவும் காரணமாகவும் இருக்கிறது..
மொழியறிஞர்களில், கழகஇலக்கியம், தொல்காப்பியம் போன்றவற்றில்
போதிய பயிற்சியும் தோய்வும் உடையவர்கள் உலக அளவில் மிகக் குறைவு. இதனால், தமிழின் தனிச்சிறப்பான
மொழியியல் கூறுகள், அதன் வரலாற்றுப் போக்குகள், பிற மொழிகளுடனான அதன்
தொடர்புகள் போன்றவை முழுமையாக ஆராயப்படாமல் இருக்கின்றன என்பது உண்மையாகும்.
இனி, இந்திய ஒன்றியத்தில் தமிழின்
நிலையைப் பார்ப்போம்:
இலத்தீன், உரோமானியப் பேரரசின்
ஆட்சிமொழியாக அதிகார நிலையில் இருந்தது. சமற்கிருதம் இந்திய ஒன்றியத்தில்
ஆட்சிமொழியினும் மேலான அதிகார நிலையில் இருந்துவருகிறது. பிறமொழிகள் பட்டினியால்
வாடுகையில், பலகோடிக்கணக்கான உருவாக்களை வீணில் விழுங்கிக் கொண்டு
இருக்கிறது.
இந்திய ஒன்றியத்திலோ உலகில்
வேறு எங்குமோ தமிழ் ஆட்சிமொழியாக இல்லை. எனவே தமிழ், அரசின் அதிகார அடிப்படை மொழி
என்ற வாய்ப்பைப் பெறவில்லை.
இந்தியஒன்றியத்தில் இந்திபேசும்மக்கள் ஒப்பீட்டில்
மிகுதியாக இருப்பதும், இந்திமொழியைத் தேசியமொழியாக்கும்
முயற்சிகளும், இந்தி அல்லாத மொழிகளை, குறிப்பாகத் தமிழை, ஒருவகைச் சிறுபான்மைநிலைக்குத் தள்ளியுள்ளன. இது தமிழின்
தொன்மையையும், தனித்தன்மை வாய்ந்த பிற
சிறப்புகளையும் உலகஅளவில் எடுத்துச் செல்வதில் முன்னேறா நிலைக்குக் காரணமாக
இருப்பதை மறுக்கஇயலாது.
மொழியியல்
என்பது ஓர் அறிவியல் பிரிவு என்றாலும் மொழி, வரலாறு தொடர்பான நிலைகளில்
சில சமையங்களில் அரசியல், குமுக, பண்பாட்டு இடையீடுகள்
இருப்பதுண்டு என்றே கூறுகிறார்கள். திராவிட மொழிகளின் தோற்றம், 'மூலதிராவிட' கருத்து முதலியவை பற்றிய
தருக்கங்கள், சில சமையங்களில், பண்பாட்டு அடையாளம், அரசியல் அதிகாரம்
போன்றவற்றுடன் இணைந்துவிடுகின்றன என்ற கருத்து உண்டு.
மொழியியல்
அடிப்படையில் தமிழ் தகுதியைப் பெற்றிருந்தாலும், தமிழின் தனித்தன்மையை, தனித்தகுதியைக்
குறைப்பதற்கான சில அரசியல் ஆற்றல்களின் முயற்சி இருப்பதை மறுப்பதற்கில்லை என்று
கூறுகின்றார்கள்.
மொழிக்குடும்பத்தில் தமிழ் ஒரு பொதுவான தாய்மொழி என்பதை
ஏற்றுக்கொள்வது, தங்கள் மொழியின் தனித்தன்மையைக் குறைப்பதாக மொழிக்குடும்பத்தில் உள்ள பிறமொழியினர்
உணர்வதால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்று ஆட்சியாளர்கள் எண்ணக்கூடும் என்ற பொய்க்காரணமும் கூறப்படுகின்றது.
தமிழ் முதல்தாய்மொழி அல்லது திராவிட மொழிகளுக்குத் தாய்
என்ற கூற்று ஏற்கப்பட்டால், தமிழ்த்தேசிய
உணர்வுகளுக்கும், திராவிட இயக்க அரசியலுக்கும் வலுவேற்பட்டுவிடும் என்ற
வலுவற்ற கருத்தும் இருப்பதை மறுப்பதற்கில்லை என்கிறார்கள்.
இவற்றையெல்லாம் கருதாத
இக்காலத் ‘தினமணி’, மொழிப்புலன், ஆய்வுத்தகைமையற்ற
தக்கையராகிய சில ‘சொத்தைப்பணி’ எழுத்தரின் கூற்றுகளை
கட்டங்கட்டிப் பெட்டிச்செய்தியாக வெளியிட்டு வருகிறது என்பதே அவலமாகும்.
(புதுவை 'நற்றமிழ்' ஆடவை - 15-6-2025 இதழில் வந்தது)