ஞாயிறு, 29 நவம்பர், 2015

பெண்!...

பெண்!...
(மும்மொழி வல்லார் உரைவேந்தர் ஒளவை.துரைசாமி விளக்குகிறார்)

க. மனு நூலில்!
      “ஒருவன் ஒழுக்கமும் நற்பண்பும் எத்துணைச் சிறிதும் இலனாயினும், பொல்லாத காமுகனாயினும் அவன் மனைவி அவனையே தெய்வமாகக் கருதி பணிபுரிய வேண்டும் என்றும்,
     மகளிர்க்கெனத் தனித்த முறையில் வேள்வியோ தவமோ விரதமோ இல்லையாகலான், கணவனுக்குச் செய்யும் தொண்டும் பணியுமே மகளிர்க்கு மேலுலக இன்ப வாழ்வு பெறுதற்கு வாயிலாம் என்றும்,
     மணமான ஒருத்தி தன் பெற்றோர் மனையில் இருந்துகொண்டு தன் கணவனுக்குப் பணிந்து அவன் விருப்பிற்கேற்ப நடவாளாயின், நாடாளும் வேந்தன், சான்றோர் கூடிய பேரவையில் அவளை நிறுத்தி, வேட்டை நாய்கள் கடித்துத் துன்புறுத்துமாறு அவளை அந்நாய்களுக்கு இரையாக்க வேண்டுமென்றும்,
     தன்கணவன் நற்குண நன்மாண்புகளை இழந்து பொல்லாக் குடியனாயும் நோயுற்றவனாயும் மாறியது காரணமாக அவனை வெறுத்துப் புறக்கணிப்பாளாயின், அவள் மூன்று திங்களுக்கு உயரிய ஆடை அணிகலனின்றி வேறோர் தனியிடத்தே ஒதுக்கப்பட வேண்டுமென்றும் மனுநூல் கூறுகிறது.

உ. யாகஞவல்கியும், அத்திரியும், வாசிட்ட நூலும், ஆங்கீரசரும் கூறுவதென்ன?
      கணவன் சொல்வழி யடங்கி யொடுங்கி ஒழுகுவதே மகளிர் கடன்; அதுவே அவர்கட்கு உயர்ந்த அறமாம்என யாகஞவல்கியர் இயம்புகின்றார்.
     கணவன் உயிரோடு இருக்கும்போதே தான் பேறு விரதம் மேற்கோடலும் வேள்வி செய்தலும் உடையளாயின், அவள் தன் கணவன் தலையை வெட்டினவளாகின்றாள் எனவும், புண்ணிய நீராடும் ஒருத்தி, தன் கணவனுடைய அனிகளையோ உடல் முழுதுமோ நீராட்டி அந்நீரையே உட்கொள்பவள் புத்தேளிர் வாழும் உலகில் பெருஞ்சிறப்புப் பெறுவாள்எனவும் அத்திரி என்பார் அறிவிக்கின்றார்.
.
     மறுமையில் கணவன் எய்தும் கதியினும் மேற்கதியை மனைவியாவாள் பெறுவதில்லை யாகலான், கணவனுக்கு அடங்கா தொழுகுபவள் இறந்தால் இன்ப உலகு எய்தாள்; எனவே, அவள் என்றும் தன் கணவன் மனம் நோக நடவாளாதல் வேண்டும்என்று வாசிட்ட நூல் வற்புறுத்துகின்றது.
     கணவற்கு அடங்காது ஒழுகுபவள் கையில் எவரும் உணவு தரப் பெறுதல் கூடாது; அவள் காமி எனக் கருதப்படுவாள்என ஆங்கீரசர் கடிகின்றார்.

{நன்றி! செம்மொழிப் புதையல்’ - ஒளவை துரைசாமி, மணிவாசகர் பதிப்பகம் 2006, பக்கம் 160, 161.}

பெண்!...(தொடர்ச்சி)
(உரைவேந்தர் ஒளவை துரைசாமியார் விளக்கம்)
பெண்மக்கட்குரிய நலம் கூறப்புக்க தொல்காப்பியர், ”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலன” என்று தெரிவிக்கின்றார்.
கல்வி கேள்விகளால் உண்டாகும் திண்ணிய அறிவுஒழுக்கம் கற்புஎன்று தமிழ்ச் சான்றோரால் குறிக்கப்படும்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற வேந்தனது நலம் கூறப்புகுந்த சான்றோர், ‘உலகம் தோன்றிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை’ என்றும்,வேதங்களைக் குறிக்கக் கருதிய சான்றோர் அவற்றை ‘எழுதாக் கற்பு’ என்றும் குறிப்பதே இப் பொருண்மைக்கு ஏற்ற சான்றாகும்.
மகளிர்க்கு கல்வியறிவின் திணிநிலை ஒழுக்கத்தைக் கற்பென வாளா ஓதாமல், ‘செயிர்தீர் காட்சிக் கற்பு’ என்று தொல்காப்பியர் சிறப்பித்துக் கூறியருளுகின்றார். கற்பென்னும் திண்மையுண்டாவது மகளிர்க்குரிய தகுதிகளுள் பெருமை வாய்ந்தது என்று பண்டைத் தமிழர் பணித்துள்ளனர்.
மகளிர் மகப்பெறுதல் என்பது இயற்கையறம்; அதனால் உடற்கூறு வேறுபட்டதன்றி, ஆணுக்கு அடிமையாய்த் தனக்கென உரிமையும் செயலுமற் றிருத்தற்கன்று என்பது தமிழ் மரபு. ஆண்டவன் படைத்தளித்த இவ்வுலகில் ஆணைப்போலப் பெண்ணும் வாழப் பிறந்தமையின், ஆணுக்கு உரிமைதந்து பெண் அடிமையாய்க் கிடந்து மடிய வேண்டுமென்பது அறமாகாது.
ஆண்மக்களைப் போலாது பெண்மகள் ஒருத்தி மனையின்கண் செறிப்புண்டிருந்த போது உரிமை வேட்கையால் உந்தப் பெற்றமையின்,
“விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இன்செறிந் திருத்தல்
அறனும் அன்று ஆக்கமும் தேய்ம்”
என்று கூறுவது இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வாழ்க்கைத் துணையாவன. வாழ்க்கை இருபாலார்க்கும் பொது.; இருவரும் கூடியே அதனைச்செய்தல் இயற்கையாதலால் இருவர்க்கிடையே வேற்றுமை கண்டு புகுத்துவது, இயற்கை வாழ்க்கையை இடையூற்றுக் குள்ளாக்கும் என்பது கண்டே பண்டைச் சான்றோர் மனைவியை வாழ்க்கைத் துணை என்று வழங்கின்ர். அவளது துணையின் சிறப்புணர்ந்து தேற்கொண்ட கணவனைக் கொண்டான் என்று குறித்தனர்.
{நன்றி! ‘செம்மொழிப் புதையல்’ - ஒளவை துரைசாமி, மணிவாசகர் பதிப்பகம் 2006, பக்கம் 163, 164.}
-----------------------------------------------------------------------------------------------------