ஞாயிறு, 25 டிசம்பர், 2016

திரு.வி.க. வின் இறுதிச் சொற்கள் – கி.ஆ.பெ..வி. எழுதிய செய்தி!






திரு.வி.க. வின் இறுதிச் சொற்கள் கி.ஆ.பெ..வி. எழுதிய செய்தி!
-------------------------------------------------------------

தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களும் நண்பர்களாக இருந்துள்ளனர். பல நேரங்களில் கி.ஆ.பெ.வி., திருவிகவைக் கண்டு பேசியிருக்கிறார்.

மறைமலையடிகளுக்கும் பெரியாருக்கும் முரண் ஏற்பட்ட காலத்தில், அடிகளார்மீது, பெரியாரைக் கொலைசெய்யத் தூண்டினார் எனக் குற்றம் சுமத்தி வழக்கொன்றும் போடப்பட்டிருந்தது. அவ்வழக்கைத் திரும்பப்பெறச் செய்ததற்குத் திரு.வி.க.வும் கி.ஆ.பெ.வி.யும் காரணமாக இருந்திருக்கின்றனர்.

திரு.வி.க., தாம் எழுதி வெளியிட்ட தம் வரலாற்றில், கி.ஆ.பெ.வி.யைப்பற்றி நீண்டதொரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.   

திரு.வி.க., அகவை முதிர்ந்து, நடைதளர்ந்து, கண்பார்வை குறைந்து, செயலிழந்து இல்லத்தில் இருக்கம் பொழுது, கி.ஆ.பெ.வி. பலமுறை சென்று அவரைப் பார்த்திருக்கிறார். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கச் சென்றபோதும், முனைவர் மு.வரதராசனார் அங்கு இருந்திருக்கிறார். மு.வ., திருவி.க.வைத் தம் தலைவராகவும் தம் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் கருதி வந்ததாகக்  கி.ஆ.பெ.வி. எழுதியுள்ளார்.

கடைசியாக ஒருமுறை கி.ஆ.பெ.வி., திரு.வி.க.வைக் காணச் சென்றநிகழ்வினை அவர் எழுதியவாறே கீழே காண்க:

திரு.வி.க. அவர்கள் படுக்கையில் அசைவின்றிக் கிடந்தார். கி.ஆ.பெ. வந்திருக்கிறார் என்று டாகடர் மு.வ., அவர்கள் காதருகில் சென்று உரக்கக் கூவினார். திரு.வி.க. கையை அசைத்து உட்காரச் சொன்னார்.

நான் அவரருகில் சென்று அவரது கையை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு,
ஐயா! நாட்டுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
மொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
மக்களுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
என்று கேட்டேன்.
அதையே அவர் மிகவும் ஓசை குறைந்த சொற்களால் திரும்பக் குறிப்பிட்டு,
நாடு இருக்கிறது... மொழி இருக்கிறது... மக்கள் இருக்கிறார்கள்... நீங்களும் இருக்கிறீர்கள்... பார்த்துக் கொள்ளுங்கள்
என்று கூறினார்கள். நாங்கள் கண்கலங்கினோம்....
வாழட்டும் திரு.வி.க. புகழ்!
வளரட்டும் திரு.வி.க. மரபு!
 - என்று முடித்திருக்கின்றார் கி.ஆ.பெ.வி.

(கி.ஆ.பெ.விசுவநாதம் படைப்புகள் 3, நெய்தல் பதிப்பகம், சென்னை-5., பக்கம் 397-399)
--------------------------------------------------------------