செய்திக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 மே, 2008

விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்க நிகழ்ச்சிகள்



விழுப்புரத்தில் 11-05-2008 ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் நிகழ்வாக நடைபெற்ற தமிழ்க் கணிப்பொறி வலைப்பதிவர் பயிலரங்கு பற்றிய முழுமையான செய்திகளைத் தொகுத் தளிக்கின்றோம். செய்திகள் விடுபட் டிருப்பின் அறிந்தோர் தெரிவிக்க வேண்டுகிறோம்.
தமிழ்க் கணிப்பொறி வலைப்பதிவர் பயிலரங்கு 11-05-2008 ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் நிகழ்வாக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் கணிப்பொறிப் பயிற்றறையில் மிகவும பயனுற நடந்து முடிந்தது.
இப்பயிலரங்கை விழுப்புரத்தில் நடத்துதற்கு அடிப்படையாக அமைந்த
சில செய்திகள் உண்டு.
2007ஆம் ஆண்டு திசம்பர் 9ஆம் நாள் புதுச்சேரியில் சற்குரு விடுதியில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் இதே தலைப்பிலான ஒரு பயிலரங்கை நடத்தியது. அப்பயிலரங்கில் கலந்துகொள்ள விழுப்புரத் திலிருந்து தமிழநம்பி, எழில்.இளங்கோ ஆகிய இருவரும் பெயர் பதிந்தோம். எதிர்பாராத சூழல்களால் எழில்.இளங்கோ புதுச்சேரி பயிலரங்கில் கலந்து கொள்ள முடியாத நிலையேற்பட்டது.
புதுச்சேரிப் பயிலரங்கில், இத்தகைய பயிலரங்குகள் சிற்றூர்ப்புறங்களல் எல்லாம் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை நிறைவுவிழாவில் சிறப்புரை யாற்றிய பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பெருமதிப்பிற்குரிய பொன்னவைக்கோ ஐயா அவர்களும தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய தோழர்கள் இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன் ஆகிய இருவரும் வலியுறுத்தினர்.
பயிலரங்கின் பயன் வழுப்புரம் பகுதியிலுள்ள, கணிப்பொறியை இயக்கப் போதுமான அடிப்படைச் செயற்பாடுகளைத் தெரிந்த, தமிழ்தெரிந்த அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற அழுத்தமான எண்ணம் இருந்தது.
எனவே, புதுவை இரா.சுகுமாரன் அவர்களிடம் விழுப்புரத்தில் தமிழ்க் கணிப்பொறி வலைப்பதிவர் பயிலரங்கு நடத்தவேண்டும் என்ற விழைவைத் தெரிவித்தோம். அவர் எவ்வகைத் தயக்கமுமின்றி இசைந்ததோடு எல்லா வகையிலும் உதவுவதாக உறுதிகூறினார். அத்துடன், அவருக்கு நன்கு அறிமுகமாயிருந்த விழுப்புரம்பகுதி தினமணி நாளேட்டின் செய்தியாளரிடம் அவரே செய்தியைக் கூறியுள்ளார்.
இந்நிலையில், வழுப்புரம் பகுதி தினமணி செய்தியாளர் திரு. செயப் பிரகாசு விழுப்புரம் தமிழ்க் கணிப்பொறி வலைப்பதிவர் பயிலரங்கிற்கான ஒருங்கிணைப்பாளர் தமிழநம்பியை நேர்கண்டு செய்திகளைத் தொகுத்து தினமணியில் எழுதினார். அச்செய்தி 6-4-2008ஆம் நாள் தினமணியில் இணையத்தில் தமிழ் வளர்க்கும் வலைப்பதிவுகள் விழுப்புரத்தில் புதிய அமைப்பு என்னும் தலைப்பில் ஒரு சிறிய செய்திக் கட்டுரையாக சிறப்புற வெளிவந்தது. அதற்காக, விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம் அச்செய்தியாளருக்கும், தினமணி நாளேட்டிற்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. அந்தச் செய்திக் கட்டுரையின் நோட்டப் படப் படியைக் கீழே காணலாம்:

அந்தச் செய்திக் கட்டுரையில், ஏப்பிரல் மாத இறுதியில் விழுப்புரத்தில் இலவசமாகப் பயிலரங்கு நடத்தவிருப்பதைப் பற்றியும், பயிலரங்கு பற்றிய செய்திகளை அறியத் தொடர்பு கொள்ள வேண்டிய ஒருங்கிணைப்பாளரின் தொலைபேசி எண்களும் மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது.
செய்தியைப் படித்தவர்கள் ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு நடைபெறவிருக்கும் பயிலரங்கில் பயிற்சிபெறத் தம் பெயரைப் பதிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளத் தொடங்கினர். அவ்வாறு பெயர் பதிந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பதானதும் பயிலரங்க ஏற்பாடு குறித்துபபேச தோழர் இரா.சுகுமானை அடிக்கடி தொடர்புகொண்டு தொல்லை கொடுத்தோம். தோழர் கோ.சுகுமாரன் பல்வேறு பணிகளின் பொருட்டு தொடர்ந்து வெளியூர் சென்றதால் விழுப்புரம் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் குழு புதுவை சென்று பேசுவதாக இருந்த முடிவு மாறியது.
தோழர் இரா.சு. அவர்களே ஏப்பிரல் இறுதியில் ஒருநாள் மாலை விழுப்புரம் வந்தார். பயிலரங்கைத் தொலைபேசி நிலையத்தில் நடத்துவ தென்றே முதலில் திட்டமிட்டோம். தோழர் இரவிக்கார்த்தி அரசு கலைக் கல்லூரி வசதியாக இருக்குமென்று கருதினார். தோழர் இரா.சு., இரவிக் கார்த்தி, எழில்.இளங்கோ, தமிழநம்பி முதலான ஒருங்கிணைப்புக் குழுத் தோழரகளுடன் கலந்து பேசிவிட்டு 11-5-2008 அன்று பயிலரங்கை நடத்துவதென்ற முடிவெடுத்தபின் இரவு பதுவைக்குத் திரும்பிவிட்டார்.
இரண்டு நாள்கள் கழித்துத் தொடர்பு கொண்டபோது, தோழர் இரா.சு., பயிற்சி தருகின்றவர்கள் வர இயலாதநிலை யிருப்பதால் பயிலரங்கை நடத்தும் நாளைத் தள்ளி வைக்க வேண்டு மென்றார். மே 11இல் நடத்த இயலாத நிலையி லுள்ளதாகவும் கூறினார். அதற்குள், இங்குக், கல்லூரியில் பயிலரங்கு நடத்த இசைவு பெற்றுவிட்டதையும், மே 11க்குப் பிறகுக் கல்லூரியில் மாணாக்கர் சேர்க்கை தொடர்பான வேலையழுத்தம் இருக்கு மென்பதால் கல்லூரியில் நடத்த இசைவதில் அவர்களுக்குத் தொல்லை இருப்பதாக அவர்கள் தெரிவித்ததையும் கூறினோம். மேலும், தோழர் இரா.சு. அவர்கள் ஒருவரே பயிற்றுவித்தாலும் கூடப் பயிலரங்கை நன்கு நடத்திவிட முடியும் என்ற நம் நம்பிக்கையைத் தெரிவித்தோம். ஆனால், இரா.சு. மனம் ஒப்பவில்லை.
இந்நிலையில், தோழர் கோ.சுகுமாரனைப் பெரு முயற்சிக்குப் பின் தொடர்பு கொண்டு சூழ்நிலைகளை விளக்கிக் கூறிப் பயிலரங்கை மே11இல் நடத்த வேண்டியிருப்பதை வலியுறுத்தினோம். அவரும் இரா.சு.வும் 4-5-08 அன்று விழுப்புரம் வருவதாகவும் அதைப்பற்றிப் பேசலாமெனவும் கோ.சு. கூறினார்.
அவ்வாறே, இரண்டு சுகுமாரன்களும் 4-5-08 முற்பகலில் வுழுப்பரம் வந்தனர். தமிழநம்பி, இரவிக்கார்த்தி, எழில்.இளங்கோ,சோதிநரசிம்மன், பேராசிரியர் பு.குமரன், செயப்பிரகாசு ஆகியோர் அவர்கள் இருவரோடும் கல்லூரிக்குச் சென்றோம். அங்கு எல்லா வற்றையும் பார்த்தும் கேட்டும் அறிந்த பிறகு, கோ.சு. 11-5-2008இலேயேப் பயிலரங்கை வைத்துக் கொள்ளலாமெனக் கூற, தோழர் இரா.சு. ஒருவாறு ஒப்பினார்.
புதுவை திரும்பியபின், இரா.சு. சென்னை புதுவையில் உள்ள பயிற்று விக்கும் தோழர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் மே11இல் பயிலரங்கிற்கு விழுப்புரத்திற்கு வருவதற்கான நிலையை உருவாக்கி இருக்கிறார். அதன் பின்பே அவருக்கு மனம் அமைதியாயிற்று. அப்புறம் தான் அவர் பேச்சில் பதற்றம் மறைந்து அமைதியைக் கண்டோம்.
பயிலரங்கிற்காக, 6-5-08 அன்றே அகலப்பட்டை இணைய இணைப்பை இயல்பாகக் கட்டவேண்டிய தொகையைக்கட்டி அரசு சார்ந்த தொலைத் தொடர்பு நிறுவனத்திடமிருந்து பெற்றோம். பின்னர், இருபத்தி இரண்டு கணிப்பொறிகள் தமிழ்க் கணிப்பொறி வலைப்பதிவர் பயிலரங்கிற்கென அணியப் படுத்தப்பட்டன. பயிலரங்க அழைப்பிதழும் செய்தி விளக்கத் துண்டறிக்கையும் ஒரே தாளில் அச்சிடப்பட்டன. அது இதுவே:

இதற்கிடையில், தோழர் இரவிக்கார்த்தி, பயிலரங்கைத் தொடக்கி வைக்க தமிழ்நாட் டரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு க.பொன்முடி அவர்களிடம் இசைவைப் பெற்றிருந்தார். பயிலுநர் பற்றிய குறிப்புகளை அவர்களே எழுதித்தரும் வகையில் பயிலுநர் பதிவுத் தாள்கள் ஒரு நூறு அணியப் படுத்தப் பட்டன. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் வெளியிட்ட மலரிலிருந்து சில கட்டுரைகள் படப்படி எடுக்கப்பட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பயிலுநர்க்கு அளிக்க சிறு தொகுப்பு நூல்கள் அணியப் படுத்தப் பட்டன.
பயிலரங்கு தொடர்பாக இரண்டு பெரிய விளம்பரப் பதாகைகளும் சிறிய அளவில் மூன்று பதாகைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவை தவிர, பகல் உணவிற்கும் இரண்டு முறை தேனீரும் ஈரட்டி(biscuit)யும் அளிக்கவும் குடிநீருக்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டன.
பயில்வோராகப் பதிந்து கொண்டோர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து நூறைத் தாண்டியது. 10-5-2008ஆம் நாள் வரையில் பதிவு செய்து கொண்டவர்கள் பட்டியல்: 1. எழில். இளங்கோ விழுப்புரம் 2. கோ. பாபு
3. கார்த்திகேயன் 4. பா. சோதி நரசிம்மன் 5. தாமோதரன் 6. சிவச்சந்திரன்
7. இலலித் குமார் 8. கா.தமிழ்வேங்கை 9. துரை. செந்தில் குமார்
10. திருவாட்டி செந்தில் குமார் 11. இரா. பாலசுப்பிரமணியம்
12. .இரவிகார்த்திகேயன் 13. இரா..சொக்கநாதன் 14. வே,நாகராசன்
15. அசோக்குமார் 16. சீ. விக்கிரமன் 17. அசாருதீன் 18. பேரா. மகாவிஷ்ணு
19. சா. மா. அறிவுக்கண்ணு 20. . சிவக்குமார் 21. இதயவேந்தன்
22. .ரஸ்கின்ஜோசப் 23. செ.. . கந்தன் 24. தமிழோசைப்பித்தன்
25. தி. பழநிச்சாமி 26. பேரா. மாதவி 27. பேரா. தமிழரசி 28. பேரா. கலைச்செல்வி 29. பேரா. வேலு 30. நன்மொழி 31. வைத்திலிங்கம்
32. பாலாஜி 33. பிரபாசங்கர் 34. சபாபதிபெரியார் நகர் 35. சதாசிவம்
36. முருகப்பன் 37. செந்தில்முருகன் 38. உமாமகேசுவரி 39. எம். தேவி
40. எம். சத்தியா 41. டி.இளமதி 42. சுபலட்சுமி 43. ஜி.சத்தியா 44. வி.சத்தியா
45. சத்தியவாணி 46. பத்மினி. 47. சுபாஷிணி 48. இந்திரா 49.மேரி
50. ஸ்டெல்லா 51. சபாபதிபொறிஞர் 52. இராசேந்திரன் 53. பூவராக மூர்த்தி 54. மாணிக்கம் 55. சண்முகம் 56. சிகாமணி 57. மாணிக்கமூர்த்தி
58. கி. இராதாகிருட்டிணன் 59. கே. இரவீந்திரன் 60. இரமேஷ்கள்ளக் குறிச்சி 61. இராம்குமார் 62. வெற்றியரசுகாஞ்சி 63. தினகரன்
64. தமிழ்ப்பரிதி 65. அறிவுக்கனல் கோவிந்தன் 66. சிறிதரன். 67. சரவணன்திண்டிவனம் 67. சபா. குப்புசாமி - புதுவை 68. அரிமா பாண்டியன்
69. கு. இளங்கோ 70. தமிழ்நாவன் 71. சண்முகம்சங்கராபுரம்
72. சனார்த்தனம் 73. கோதண்டம் 74. மாரிமுத்துபழனி 75. முத்துவேல் - கல்பாக்கம். 76. வள்ளலார் அடிமை வடலூர் 77. மருத்துவர் கோவிந்தராசன் அறந்தாங்கி 78. இராமச்சந்திரன் திருவாண்டார்கோவில்
79. குமரேசன் 80. இராஜ்மோகன் 81. இத்ரிஷ்கான் 82. ஏழுமலை
83. சம்பத்து 84. இர. கதிரவன் 85. இலாடமுத்து புதுவை
86. இலா. அருள்மொழி 87. இலா. தத்தை 88. கு.அ. தமிழ்மொழி
89. நாகராசன் 90. இராஜேஷ் விழுப்புரம் 91. தமிழோசைப்பித்தன்
92. ச.இரவிவர்மன் 93. மருத்துவர் கோவிந்தராசன் அறந்தாங்கி
94. மாகிர் அதிராம்பட்டினம் 95. கதிரவன் ஆவின்
96. குணசேகரன் 97. ச.அனுரேகா 98. கு.அ. தமிழ்மொழி
99. த. நிலவரசி 100. இரா. முருகன் 101. எம்.ஜாபர் சாதிக் அலி
102. செ. நீலமேகம் 103. வெற்றிச்செழியன் 104. வி. முருகன் பாப்பனப்பட்டு 105. கோ. செந்தில்குமார்
(எதிர்பார்த்த வாறே, பெயர் பதிந்தவர்களில் சிலர் வரவில்லை; பதியாமல் வந்த கொஞ்சம் பேரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்)
10-5-2008 காரி(சனி)க் கிழமை அன்றே பயிலரங்கம் பற்றிய விளம்பரப் பதாகைகள் கட்டப்பட்டன. கல்லூரியின் கணிப்பொறிப் பயிற்றறைப் பகுதிக் கருகிலுள்ள இடங்க ளெல்லாம் தூய்மை செய்யப் பட்டன. திரு.உலகதுரை குழுவினரால் கல்லூரி வாயிலில் இருந்து பயிற்றறை வரையிலும் அழகாகப் பல்வேறு வண்ணங்களில் கொடிகளை ஏந்திய மெல்லிய இருப்புக்குழாய்க் கம்பங்கள் எழிலுற நடப்பட்டன.
10-5-2008 மாலை இரா.சு. வைத் தொடர்பு கொண்டபோது மறுநாள் காலை எட்டரை மணிக்கு விழுப்புரம் கல்லூரிக்குத் தம் குழுவினருடன் வந்துவிடுவதாகக் கூறினார்.
11-5-2008 ஞாயிறு காலை 7மணிக்குக் கைப்பேசியில் அழைத்த சென்னைத்தோழர் பாலபாரதியின் எழுச்சிக்குரல் தலைவா, கிளம்பி வந்து கொண் டிருக்கிறோம்! சரியான நேரத்திற்கு வந்துவிடுவோம்! எனக்கூறி ஊக்கியது.
விடியற் காலையிலேயே கல்லூரி வளாகத்திற்கு வந்த இரவிக் கார்த்தியும் பேரா.குமரனும், உலகதுரையும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஒருங்கிணைப்புக் குழுத் தோழர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஒதுக்கிய பணிகளில் ஈடுபட்டிருந்தனர். புதுவைப் பயிற்றுநர்குழு எட்டரைமணிக்கு வந்தது; உடனடியாகக் கணிப்பொறிகளை அணியப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 9மணிக்கெல்லாம் பயிலுநர் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்தனர். அவர்களிடம் பதிவுத் தாள்களில் அவ்வர்களைப் பற்றிய விளத்தங்கள் எழுதி வாங்கப்பட்டன. ஒலிபெருக்கி, காட்சித்திரைகள் அணியப் படுத்தியபின், காலை 10மணிக்கெல்லாம் பயிற்சி தொடங்கியது.
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் பயிலரங்க நிகழ்ச்சி பற்றி விளக்கியுரைத்தார். பின்னர்ப், பேராசிரியர் மு.இளங்கோவன் அறிமுகவுரை ஆற்றினார். மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. க.பொன்முடி வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு வரச் சிறிது நேரமாகும் என்று செய்தி தெரிந்ததால், பயிலரங்கு தொடங்கியது. பேரா.மு.இளங்கோவன், தமிழில் தட்டச்சு செய்வது பற்றியும், தமிழ் 99 விசைப் பலகை பற்றியும், ஒருங்குகுறி (Unicode) பற்றியும் கூறி நிறை குறைகளையும் விளக்கினார். இடையே, இரா.சுகுமாரன் சில ஐய வினாக்களுக்கு விடையளித்தார்.
அடுத்து, சென்னைப் பதிவர்கள் மா.சிவக்குமார், பாலபாரதி ஆகியோர் மின்னஞ்சல் கணக்கு தொடங்குவது குறித்து வகுப்பு நடத்தினர். அவற்றைத் தொடர்ந்து பயிலுநர் அனைவரும் மின்னஞ்சல் கணக்கு தொடங்கும் பணியில் ஈடுபட்டனர்.
பயிலரங்க நிகழ்வுகளை இர.கதிரவன் தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருக்கின்றார். தோழர் கோ.சுகுமாரன் நிகழ்வுகளைப் படங்களோடு உடனுக்குடன் பதிவுசெய்து தமிழ்மணத்தின்வழி உலகெங்கிலுமுள்ளோர் பார்க்கத் தந்துகொண்டிருக்கின்றார்.
மா.சிவக்குமார், பாலபாரதி ஆகியோர் வலைப்பதிவு பற்றி விளக்கி அறிமுகம் செய்தனர். வலைப்பதிவு தொடங்குவது, வலைப்பதிவில் எழுதுவது, பின்னூட்டம், மறுமொழி பற்றி நன்கு விளக்கினர். பயிலுநர் அனைவரும் வலைப்பதிவு தொடங்கும் பணியில் ஈடுபட்டனர். பயிற்சிபெற வந்த ஏறத்தாழ எண்பது பேர்களில் இருபது பேருக்கும் மேல் புதிதாக வலைப்பதிவு தொடங்கிக் கொண்டனர்.
இந்நிலையில், பயிலரங்கில் உரையாற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் அரங்கிற்கு வந்தார். அவருடன் விழுப்புரம் நகரமன்றத் தலைவர் திரு.சனகராசு, கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களும் ஆர்வலரும் வந்தனர்.
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் தமிழநம்பி, ரவிகார்த்திகேயன் ஆகியோர் முறையே நோக்கஉரையும், வரவேற்புரையும் ஆற்றினர். விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் திரு பாவா மொய்தீன், நகரமன்றத் தலைவர் திரு.சனகராசு முதலானோர் உரைக்குப்பின், இறுதியில் அமைச்சர் திரு. க.பொன்முடி உரையாற்றினார். அப்போது அவர் ,
கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்த வேண்டுமென தலைவர் கலைஞர் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் ஒரு மாநாடு நடத்தினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய பன்னாட்டு அறிஞர்களை அழைத்துச் சென்னை மாநாட்டை நடத்தினார்.
கணிப்பொறியில் தமிழ் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை. நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும்போது தமிழில் பேசாமை தான் காரணம். ஆங்கிலத்தில் பேசும் அடிமைத்தனம் நமக்கு இருக்கிறது. அதை நாகரிகம் எனத் தவறாகக் கருதிக் கொண்டு இருக்கின்றோம்.
கணினியில் தமிழைப் பயன்படுத்துவதால், குறைந்தது, தமிழர்களை இணைக்கும் பயனாவது ஏற்படும். இந்த முயற்சி தொடர வேண்டும். கல்லூரி மாணவர்கள் இடையில் இந்த முயற்சியைக் கொண்டு சென்றால் தமிழ் வளரும். குறிப்பாகக் கல்லூரிப் பேராசிரியர்கள் இதற்கு உரிய முயற்சி எடுக்க வேண்டும்.
விழுப்புரம் அரசுக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் முதுநிலை - தெரிசெய்தி தொழில்நுட்பப் (Information technology) பாடப்பிரிவுத் தொடங்க உள்ளோம். அதில் இந்த முயற்சியைத் தொடர வேண்டும். என்று பல கருத்துக்களைக் கூறினார்.
அமைச்சர் திரு.க.பொன்முடியின் உரை முடிந்ததும், அவருக்குப் புதியதாக. "கலைஞர்" என்ற பெயரில் ஒரு வலைப்பதிவு தொடங்கி வைத்து விளக்கமளித்த போது அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
அமைச்சர் உரையாற்றிச் சென்றபின், பயிற்சி தொடர்ந்தது.
புகைப்படம், ஒலிகள், காண்பொலிப் படம் இணப்பது குறித்து வினையூக்கி செல்வா, அருணபாரதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிலுநர் பலரும் ஆர்வத்துடன் தங்களுக் கெழுந்த ஐயங்களைக் கேட்டு அவற்றிற்கான விளக்கம் பெற்றனர்.
அடுத்தபடியாகப், பதிவுகளைத் திரட்டியில் இணைப்பது குறித்து விக்கி பயிற்சி அளித்தார். அவருடன் இரா.சுகுமாரன் கருத்து விளக்கம் அளித்தார்
குறிப்பாகத், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவு, திரட்டி, தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் வலைப்பதிவுகளை இணைப்பது பற்றி விரிவாக பயிற்சி அளித்தனர். இடையே, பாலபாரதி திரட்டிகளின் கருவிப் பட்டைகளை இணைப்பது பற்றியும் பயிற்சி அளித்தார்.
பகல்உணவாக மரக்கறிப்புலவு, பருப்புக்குழம்புச் சோறு, தயிர்ச்சோறு, வடை முதலியன எளிய முறையில் அளிக்கப்பட்டன.
பகல்உணவிற்குப் பின், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "தமிழ் மென்பொருள்" குறித்து, க.அருணபாரதி, இரா.சுகுமாரன் ஆகியோர் விளக்கி பயிற்சி அளித்தனர். இந்த மென்பொருள்களை மென்பொருள் பொறிஞர் க.அருணபாரதி உருவாக்கினார் என்ற செய்தி குறிப்பிடத் தக்கதாகும்.
பயிலரங்கில் 'இணைய உலாவிகள்' பற்றி பாலபாரதி விளக்கம் அளித்தார். குறிப்பாக நெருப்பு நரி (fire fox) பற்றி விரிவாகப் பயிற்சி அளித்தார். அதில் உள்ள பாதுகாப்பு, வசதிகள் பற்றியும் எடுத்துரைத்தார்.மேலும், பல இணைய உலாவிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினார்.
தமிழில் இயங்குதளங்கள் பற்றிய விளக்கமும் பயிற்சியும் அடுத்து இடம் பெற்றது. இரா.சுகுமாரனும் மா.சிவக்குமாரும் விளக்கினர்.
கடலூர் சீனுவாசன் "கூகுள் ரீடர்" பற்றியும், அதன் பயன் பற்றியும் விரிவாகப் பயிற்சி அளித்தார். ஒருவர் ஐயமெழுப்பிய போது, "கூகுள்" தேடல் ஆங்கிலத்திலும், தமிழிலும் தட்டச்சு செய்து தேடலாம் என்று கூறி இரா.சுகுமாரன் விளக்கினார். மேலும், "கூகுளி"ன் பல்வேறு பயன்பாடுகள் பற்றியும் விளக்கம் அளித்தனர்.
கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றி குறிப்பாகத் தமிழில் எழுதுதல், தமிழ் மின்னஞ்சல், தமிழில் அரட்டை பற்றியும் க.அருணபாரதி விளக்கினார்.
சென்னையிலிரிந்து வந்த பயிற்றுநர்கள், சிவக்குமார், பாலபாரதி, செல்வா, விக்கி வெங்கடேசு புதுவைத் தோழர்களாகிய இரண்டு சுகுமாரன்கள், பேரா.மு. இளங்கோவன், க.அருணபாரதி கடலூர் சீனுவாசன் ஆகியோருக்கு நினைவுப் பரிசாகப் புத்தகங்கள் அளிக்கப்பட்டன.
நிறைவு விழாவில், கடலூர் பி.எசு.என்.எல். துணைப் பொதுமேலாளர் கே.இரவீந்தரன், விழுப்புரம் கோட்டப் பொறியாளர் கி.இராதாகிருஷ்ணன், விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரிப் பேராசிரியர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைபாளர் இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர். விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் இரவிகார்த்திகேயன், எழில்.இளங்கோ முதலானோர் கருத்துரையாற்றினர்.
கடலூர் பி.எசு.என்.எல். துணைப் பொதுமேலாளர் கே.இரவீந்தரன் அவர்கள் பயிற்சி பெற்றோர்க்குச் சான்றிதழ் வழங்கினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் பயிற்சி பெற்றோர்க்கு மென்பொருள், எழுத்துருக்கள் அடங்கிய இரண்டு குறுவட்டுகள் (C.Ds) இலவயமாக அளிக்கப்பட்டன.
இறுதியில்,. விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழநம்பி நன்றியுரைத்தார். பயிற்சி அளித்தோர், கல்லூரி முதல்வர், பி.எசு.என்.எல். அதிகாரிகள், ஒருங்கிணைப்பாளர்கள் இரவிக்கார்த்திகேயன், பேரா.பு.குமரன், எழில். இளங்கோ, பிரபா.தண்டபாணி, தயா.இளந்திரையன், இரா.ச.சொக்கநாதன், சீ.விக்கிரமன், குபேரன், உலகதுரை, குமார், பச்சையப்பன், சோதிநரசிம்மன், பாபு, அழகுவேல், பன்னீர்செல்வம், செயப்பிரகாசு, நாகராசன் முதலானோர்க்கும், மற்றும் உதவிசெய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத்தெரிவித்தார். நன்றியுரையுடன் பயிலரங்கு இனிது முடிவுற்றது.