வியாழன், 26 பிப்ரவரி, 2009

இன்னநிலை புரிந்தெழுவோம்!



      (நான்குகாய் +மா + தேமா)


மூண்டெழுந்த கொந்தளிப்பை முகம்மாற்றித் தணித்துவிடும்
     முடிவைக் கொண்டு
தூண்டலினால் காவலரும் துடிப்புவழக் குரைஞருடன்
     துலக்க மின்றி
வேண்டாராய்ப் பகையுணர்வில் வெறுப்புற்று மோதிடவும்
     விளைவாய்ப் பல்லோர்
ஆண்டடிதாக் குதல்களுக்கே ஆளானார் அவற்றோடே
     அவர்கள் ஊர்தி

காவலரின் கைத்தடிகள் கடுந்தாக்கில் நொறுங்கிவிழ
     கலங்கா நின்ற
நாவலராம் வழக்குரைஞர் நனிமிகவே தாக்கமுற
     நடுங்கா நெஞ்சின்
கோவமிகக் காவலர்குண் டாந்தடிகள் கட்டடத்தைக்
     குறியாய்த் தாக்க
வேவலுற எரிந்ததுகாண் விளைவிலொரு காவலகம்
     வெறுப்பி னாலே!

இன்னவகை மோதலினால் எவருக்கே இன்பயனென்(று)
     எண்ணிப் பாரீர்!
முன்னணியில் நின்றிருந்து முனைந்தீழப் போர்நிறுத்த
     முழக்கம் செய்தோர்
வன்குரலை ஒடுக்கிடவே வலிந்தங்குக் காவலரை
     வரச்செய் தாரே!
இன்னநிலை புரிந்தெழுவோம்! ஈழஉற வைக்காக்க
     எழுவோம் மீண்டும்!

----------------------------------------------------