வியாழன், 10 மார்ச், 2016

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் இன்று!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் இன்று!
(10-3-1933)


இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க, உயர்ந்த, அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்!                                                                     

தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி, ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்!                                                                                    

மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம்!           

செத்தமொழி தாங்கிகளின் சித்தம் கலங்கடித்த போர்வாள்!                                                      

ஒப்பற்ற தமிழறிஞர்! உயர்ந்த ஆய்வாளர்! அரிய மெய்யறிவுச் சிந்தனையாளர்!                                                                  

சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு வேறுபாடு இல்லாத மெய்வாழ்வர்!                                                                             

ஈடற்ற செழுந்தமிழ்ச் சொற்பொழிவாளர்!                                                                             

தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய மூன்று இதழ்களைச் சிறப்புற நடத்திய ஈடெடுப்பற்ற இதழாளர்!                                                                                                         

சிறந்த இலக்கியப் புலமையாளர்!  அரிய மொழிபெயர்ப்பாளர்!

நல்ல ஓவியர்!    திறஞ்சான்ற அச்சுத்தொழில் வல்லார்!                                                      

தமிழ்இன இழிவு நீக்கத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்குமாக அயராது பொருது நின்ற போராளி!                                                                                                                    

மூன்றுமுறை தமிழகவிடுதலை மாநாடுகளை நடத்திய துணிவாற்றல் சான்ற வினையாண்மையர்!                                                                                                 

தமிழ்மொழி,  தமிழ்மக்கள் தமிழ்நாட்டு நலன்களுக்காக முப்பத்தைந்து முறைகளுக்கும் மேல் சிறைசென்ற அஞ்சாநெஞ்சர்!                                                                                          

சலுகை பெறவும் சாதிகூடாதென வாழ்ந்த சாதிமறுப்பாளர்!

சாதிமறுத்து மணம்புரிந்து கொண்டவர்!  தம் மக்களுக்கும் அவ்வாறே மணம் செய்வித்தவர்!

- இவ்வாறு பல்வேறு சிற்ப்புக்களுக்கு உரியவரே துரை.மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.

அவர் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அணுக்கத் தொண்டனாக இருந்த காலத்தை எண்ணிப் பெருமிதம் கொள்கின்றேன்!

இன்றைக்கும் தேவைப்படும் பாவலரேறு ஐயாவின் பா முழக்கம்:

ஆண்டுநூ றானாலும் அன்னைத் தமிழ்நாடு
வேண்டும் விடுதலை; எண்ணம் விலக்கோம் யாம்;
பூண்டோம் உறுதி! புறப்பட்டோம்! என்றேநீ
மூண்ட இடியாய் முழங்காய் தமிழ்மகனே!

தமிழ்மண் விடுதலை பெறும்வரை அம்முழக்கம் ஓயாது!


--------------------------------------------------------------