வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பாவேந்தே, நின் நினைவில்...!



பாவேந்தே, நின் நினைவில்...!


ஏக்கழுத்தும், பீடுநடையும்
அரிமா நோக்கும், அஞ்சா நெஞ்சமும்
நினக்கே உரியவை!

இருளற்றம் பார்க்கும் விளக்கே போல்
தமிழ்ப் பகையை இல்லாமல் ஓட்டியது
நின் பார்வை யன்றோ?

உவரி ஒலியிட்ட எலிப்பகை கெட்டவகை
தமிழ்ப் பகை கெட்டழிந்தது
நின் மூச்சால், உயிர்ப்பால் அன்றோ?

ஈராயிர மாண்டு வீழ்ச்சியிற் கிடந்தவரை
விடுதலைப்பா முரசறைந்து
எழுச்சிக்குத் தொடக்கமிட்ட
இரண்டாவது வள்ளுவனே!

நல்லுயிர் உடம்பு செந்தமிழ்
மூன்றும் நீ, நீ, நீயேயன்றோ?

இன்றிந் நாட்டில் இழிஞர் ஆட்சியால்
மண்ணையும் மாசில்லா மொழியையும்
மற்றெல்லாத் தமிழ நலன்களையும்
தோற்று நிற்கிறோம்!

தமிழால் உயர்ந்தோர் தமிழை வீழ்த்தினர்!
அமிழ்ந்த உணர்வால் அயலர் அரியணையில்!
அவலம்! அனைத்திலும் தமிழர்க்கு அவலம்!

இற்றைக்கும் பாவலர்கள் இங்குண்டு! என்சொல்ல!
தூய்தமிழ் போற்றுவர் தெளிதமிழ் இதழில்!
பரிசுக்குப் பல்லிளித்துப் பார்ப்பன இதழ்களில்
அயற்சொல் கலந்தெழுதி அருந்தமிழ் கொல்லுவர்!

ஐயா, புரட்சிப் பாவேந்தே!
வாராது வந்த தமிழ் எழுச்சி நெருப்பே!
எந்த நற்செய்தியும் இலையுனக்குச் சொல்ல!

இழிவில் உறையும் இந்நிலை மாற்றிட
என்றெழு வோமோ? இலையழி வோமோ!
நீயிலா நிலையில் நெஞ்சங் கலங்கி
ஓய்ந்துநின் நினைவில் தோய்ந் தெழுதினனே!

--------------------------------------------

திங்கள், 25 ஏப்ரல், 2016

பிழை தவிர்க்கச் சில செய்திகள்!



பிழை தவிர்க்கச் சில செய்திகள்:

 1.      சொல்லின் இறுதியில் மெய்யெழுத்தாய் வரக்கூடியது இடையின ரகரமே; வல்லின றகரம் அன்று.
எடுத்துக்காட்டு: அவர், ஊர், குதிர், பதர்

           
            2.  சொல்லின் இடையில் இரண்டு புள்ளி(மெய்) எழுத்து           சேர்ந்து வருமிடங்களில், முதல் புள்ளியெழுத்தாக                              இருக்கக்கூடியது இடையின ரகர மெய்யாகவே இருக்கும்.        வல்லின றகர மெய்யாக இருக்காது.
            எ-டு: நேர்த்தி, பார்த்து, அயர்ச்சி

ற் மெய்யெழுத்தை அடுத்து இன்னொரு புள்ளி எழுத்து வராது.

     பிழை     ---  திருத்தம்
     முயற்ச்சி       முயற்சி
     நேற்த்தி        நேர்த்தி
     பயிற்ச்சி        பயிற்சி


3.      இரட்டிக்கும் இடங்களில் வல்லின றகரமே வரும். இடையின ரகரம் இரட்டிக்காது.
எ-டு: வெற்றி, கற்றோர், அற்ற, ஆற்றை


4.      ல், ன் என்ற புள்ளி எழுத்துக்கள் சேர்ந்து(புணர்ந்து) வருங்கால், திரிபில் வருவது வல்லின றகரமே.
எ-டு: கல்+பலகை    = கற்பலகை
      கல்+தாழை    = கற்றாழை
      வருதல்+கு    = வருதற்கு

     தன்+பெருமை   = தற்பகருமை
     பொன்+தோடு   = பொற்றோடு
     அதன்+கு       = அதற்கு


சில இன எழுத்துக்களின் பெயர்கள்

     ண - டண்ணகரம், முச்சுழிணகரம்.
     ந - தந்நகரம், மொழிமுதல் நகரம்.
     ன - றன்னகரம், இருசுழி னகரம்.

     ர - இடையின ரகரம், சின்ன ரகரம்
     ற - வல்லின றகரம், பெரிய றகரம்.

            ழ - சிறப்பு ழகரம், பெரிய ழகரம்,மகர ழகரம்.
            ள - பொது ளகரம், சின்ன ளகரம்.

(பாவாணருக்கு நன்றி!)
-------------------------------------

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

யாருங் காண்கிலேன் எழிற்பா வேந்தே!



யாருங் காண்கிலேன் எழிற்பா வேந்தே!

நீயே,
செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!
ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை!
வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில்
செம்மை சேருயர் செ்ழுந்தமிழ் காத்தனை!

உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம்
இறவா மொழியால் எழுந்திடப் பாடினை!
ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி
முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில்
தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை!

கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை!
புதுவை பொரித்த புரட்சிக் குயிலே!
எதுவும் யாரும் இணையுனக் கில்லை!
முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர்
வினைசா வெனின்அச் சாநாள் திருநாள்

புலவர்க்குக் கைவேல் பூந்தமிழ்என்றனை!
நலங்கெடுப் பார்எலாம் நடுங்கிட இயங்கினை!
சிறுத்தையே, புலியே, சீயமே, சிம்புளே!
திருப்பு முகத்தை! திறந்திடு விழியை!
மொழிப்பற் றுற்றே விழிப்புற் றெழுக!

அழிப்புறுந் தமிழை பழிப்பறக் காப்பாய்!
எனத்தமி ழிளைஞரை ஏவினை! இக்கால்
இழிதுன் பில்தமிழ்! இடிக்குரல் ஆர்த்தே
பழியறக் காத்திட, பகைவே ரறுத்திட
யாருங் காண்கிலேன், எழிற்பா வேந்தே!

தீருமோ இத்துயர் தெரியேன்
நீயிலா நிலையில் நெஞ்சங் கலங்கியே!
---------------------------------------------
(விழுப்புரம் பாவேந்தர் பேரவையின் பொறுப்பாண்மையர் உயர்திரு. உலகதுரை, பாவேந்தர் சிலை திறப்பின்பொழுது வெளியிடவிருக்கும் மலருக்காகப் பாடல் எழுதித் தருமாறு ஏறத்தாழ ஈராண்டிற்கு முன்னர் கேட்டபோது எழுதித்தந்த பாடல்)