வியாழன், 19 ஜூன், 2008

மூடநம்பிக்கைகள் இங்கும் அங்கும்!


                   ( ஆங்கிலமூலம் : ஆபிரகாம் தொ.கோவூர்   தமிழாக்கம் : தமிழநம்பி ) 


            1953ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில், கொழும்பில், ஓர் அமெரிக்கக் கணவன் மனைவி இணையை உணவுவிடுதி யொன்றில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவில் ஒருமாதச் சுற்றுச் செலவிற்குப் பின் அவர்கள் சிரீலங்காவிற்கு வந்திருந்தனர்.
            நான் அவர்களிடம் இந்தியாவைப் பற்றிய அவர்களின் கருத்தைக் கேட்டேன். அந்த அம்மையார், ‘நல்ல நாடு; ஆணால், மக்கள் மூடநம்பிக்கை முட்டாள்களின் கூட்டம்என்று கூறினார்.
            அப்பெண்மணி அலகாபாத் பிரயாகையில் அந்த ஆண்டு கும்பமேளாவின் போது அவர்கள் பார்த்த கொடுமையான காட்சியை விளக்கிக் கூறினார்:            கங்கை, யமுனை மற்றும் வானத்திலிருந்து கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஓடிவருவதாக ஏமாளி மக்கள் நம்பும் கற்பனை ஆறான சரசுவதி ஆகிய மூன்றும் கூடுமிடத்தில் ஏறத்தாழ 60 இலக்கம் மக்கள் சேர்ந்திருந்தனர்.
            அந்த ஆறுகள் கூடுமிடத்தில் கும்பமேளாவின் நன்னிமித்த நேரத்தில் நீரில் மூழ்கி அவர்களுடைய பாவங்கள் அனைத்தையும் போக்கிக் கொள்ளவே அங்கேக் கூடியிருந்தனர்.
            சங்கு ஊதியும் கோயில் மணிகளை ஒலித்தும் நன்னிமித்த நேரம் தெரிவிக்கப் படுகின்றது. இலக்கக் கணக்கான ஆண்களும் பெண்களும் அந்நேரத்தைத் தவறவிடக் கூடாது என்ற பேரார்வத்துடன், அதிகம் வழுக்கும் மண்ணில் விழுந்து விட்டவர்களைத் தூக்கிவிடுவதில் நேரத்தை வீணாக்காமல்(?) ஆற்றில் முழுக்குப்போட விரைகின்றனர்.
            அந்தத் தூயகுளிப்பு முடிந்தபோது, ஆயிரக் கணக்கான சேறுபூசிய பிணங்களை அவ்வாற்றங் கரைகளில் எடுத்துச் சேரக்கின்றார்கள். இவ்வகையில், பேரெண்ணிக்கையி லான மாந்தரின் சாவுகள் எவரையும் கவலைக் குள்ளாக்கினவாகத் தெரியவில்லை.
            அந்த ஏமாளிகளுக்கு அத்தகைய சாவு விரும்பத்தக்கதா யிருக்கின்றது. ஏனென்றால், அங்கு இறந்தவர்கள் துறக்கம் (சொர்க்கம்) செல்வார்கள் என்று - அல்லது மேலும் சிறப்பான நிலையில் மீண்டும் பிறப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள். ஆனால் அமெரிக்கர்களுக்கோ, அஃது ஓர் கொடிய காட்சியாக இருந்தது.
            தன்னுடைய பாவங்களைக் கழுவப் பிரயாகைக்கு வந்திருந்த இந்தியக் குடியரசு தலைவர் பர்.இராசேந்திர பிரசாத்தும் கூட அந்த ஏமாளி மடயர்களில் ஒருவராயிருந்த இழிவைக் குறிப்பிட்ட திருவாட்டி இராபர்ட்டு, ‘உங்கள் மக்களின் பேரளவிலான மூட நம்பிக்கைகளைப் பற்றி நீங்கள் எப்போதாவது ஆழ்ந்து சிந்தித் திருக்கின்றீர்களா?’ என்று என்னிடம் கேட்டார்.
            ‘ஆம், எங்கள் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றியும் உங்கள் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றியும் மிக ஆழமாகச் சிந்தித் திருக்கின்றேன்என்றேன் நான்.
            எங்கள் மக்களும் கூட மூட நம்பிக்கைக்காரர்கள் என்று எண்ணுகிறீர்களா என்ன?’ என்றார் அவர்.
            ஆம், எங்கள் மத நூல்களும், குருமார்களும் கங்கையின் தூயநீரில் மூழ்குவதால் பாவங்களைக் கழுவி விடலாம் என்று கூறுவதை எங்கள் மக்கள் குருட்டுத்தனமாக நம்பி அப்படியே செய்கின்றனர். உங்கள் மதநூல்களும் உங்கள் குருமார்களும் மெய்யறிவுக் குளிப்பு’ (Baptism) என்ற புறக்கழுவல், அல்லது தெய்வ விருந்து’ (Holy communion) என்ற அகக்கழுவல் மூலம் பாவங்களைக் கழுவி விடலாம் என்று கூறுவதை நீங்கள் குருட்டுத்தனமாக ஒப்புக் கொள்கிறீர்கள்.
            ‘ மெய்யறிவுக் குளிப்புக்காகவோ தெய்வ விருந்திற்காகவோ நன்னிமித்த நேரம் என்று எதுவும் இல்லாத நல்வாய்ப்பு உங்களுக்கு இருப்பதால் கூட்ட நெருக்கடிக் குழப்பங்களும் அதனால் ஏற்படும் சாவுகளும் இல்லாமல் இருக்கின்றன! என்று விடை கூறினேன்.
            எங்கள் உரையாடலை முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த திரு.இராபர்ட்டிடம் ஐயா, எங்கள் சிந்தனைக்கு நிறைவான தீனி அளித்தீர்கள்என்று கூறினேன்.
            ஒருமுறை சிலோன் பெந்தகொசுதலியரின் தலைமை நிலையத்தினர் என்னை விருந்துக்கு அழைத்திருந்தனர். என் துணைவியாருடன் நான் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகே என்னை அழைத்ததன் முகன்மையான நோக்கத்தை அறிந்தேன். அய்ரோப்பிய பெந்தகொசுதலியர் உள்பட கிறித்துவ மதத்தில் பதவிகளிலுள்ள எல்லாத் தலைவர்களும் என்னுடன் தருக்கம் செய்ய அங்கே கூடியிருந்தனர்!
            நாக்கொடை’ (Glossolalia) என்ற நரம்புக் கோளாற்று நிலை பற்றி அறிவியல் சான்றுகளுடன் நான் விளக்கியும் கூட, ‘தூய ஆவியின் துணையால் ஏற்படும் திறமையென நம்பும் அவர்களை, அக்குருட்டு நம்பிக்கையினின்றும் மாற்ற முடியவில்லை.
            உணாமிசை (Dining table) க்குச் சென்றதும், திருத்தந்தை ஆல்வின்சு பக்கத்தில் எனக்கு இருக்கை அளித்தனர். விருந்தின் போதும் கலந்துரையாடல் தொடர்ந்தது. பெந்தகொசுதலியர், நோயுற்றாலும் மருந்துண்ணாமை பற்றிப் பேச்சு நடந்தது.
            ஒருவர் செய்த பாவத்திற்குத் தண்டனையாகவே அவருக்குக் கடவுள் நோயை உண்டாக்குகின்றார். நாம் கடவுளிடம் நோயைத் தீர்க்கும்படி முறையிடுகின்றோம். கடவுளின் கருத்தை வீழ்த்தும் வகையில் மாந்தன் மருந்துகளை ஏற்பது தவறாகும்என்றார் திருத்தந்தை ஆல்வின்சு.
            மாந்தன் மருத்துவ அறிவினால் கடவுளை, அவருடைய கருத்தை வீழ்த்த முடியுமென்றால், கடவுளைவிட மாந்தன் மிகுந்த ஆற்றல் உடையவன் என்று ஆகாதா? நீங்கள் மருந்தை ஏற்றுக் கொள்வதில்லை யென்றால், உணவை மட்டும் ஏற்றுக்கொள்வது ஏன்?’ என்றேன் நான்.
            உணவு மருந்தன்று; ஏசுவே உணவை உட்கொண்டிருக்கின்றார்என்றார் திருத்தந்தை ஆல்வின்சு.
            நீங்கள் சொல்வது தவறு! பசி என்ற நோய்க்கு உணவு ஒரு மருந்தாகும். விடாய் என்ற நோய்க்கு நீர் ஒரு மருந்தாகும்என்று கூறி முடித்தேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------