புதன், 7 மே, 2008

ஓர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றப் பயிலரங்கு

விழுப்பரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் "தமிழ்க் கணிப்பொறி" வலைப்பதிவர் பயிலரங்கு 11-05-2008 ஞாயிறு அன்று காலை 9மணிமுதல் மாலை வரை ஒருநாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலரங்கு நடைபெறும்.
பயிலரங்கில் பயிலுநர், ஒருங்குகுறி எழுத்துருவை(Unicode font)ப் பயன்படுத்திடத் தேவையான தொழினுட்ப அறிமுகம் அளிக்கப்படுவர்.
வலைப்பூக்கள் அல்லது வலைப்பதிவுகள் இணைய இணைப்பு தவிர வேறு செலவு ஏதுமின்றி ஒருவர் தம்முடைய கருத்துகளையும், படைப்புகளையும், திறனாய்வுகளையும் உலக மக்களிடம் எடுத்துச் செல்ல உதவுகின்றன. அவ்வலைப்பதிவுகளை உருவாக்கவும் பயன்படுத்தவும் கையாளவும் பயிற்சி தரப்படுவர்.
விழுப்புரம் பயிலரங்கிற்கு எல்லா வகையிலும் "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்" சார்ந்த திரு.இரா.சுகுமாரன், திரு.கோ.சுகுமாரன் இருவரும் தம் நண்பர்களுடன் பேருதவி செய்கின்றனர்.
பயிலரங்கு காலை 09.00 மணிக்குத்தொடங்கி மாலைவரை நடைபெறும். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் தலைமையில் தமிழ்நாட்டரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் க.பொன்முடி பயிலரங்கைத் தொடக்கி வைக்கிறார். கடலூர் தொலைத் தொடர்பு மாவட்ட துணைப் பொதுமேலாளர்திரு கே.இரவீந்தரன், கோட்டப் பொறியாளர் திரு.கி.இராதாக்கிருட்டிணன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி கருத்துரைக் கின்றனர்.
பகல் உணவுக்கு ஏற்பாடு செய்யதுள்ளனர். தமிழ் மென்பொருள் அடங்கிய குறுவட்டு (C.D) ஒன்று விலை ரூ.15=க்கு பயிற்சி பெறுவார்க்கு தரப்படும். பயிற்சிக்கெனக் கட்டணம் ஏதும் இல்லை.
பயிற்சிபெற விரும்புவார் கீழ்க்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்க:
94434 40401, 99527 41221, 94437 36444. மின்னஞ்சல்: thamizhanambi44@gmail.com
-விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்.