கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 நவம்பர், 2008

முனைவர் கோவூர் பகுத்தறிவூட்டிய இலங்கையில் மூடநம்பிக்கை ஆட்சியாளர்கள்!

 
            உலகப்புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மாந்தநேய மன மருத்துவருமாகிய முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர் இந்தியாவிலுள்ள கேரளமாநிலத்தில் 1898இல் பிறந்தவர். கேரளாவில் பள்ளிப்படிப்பை முடித்தபின், கல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அதன்பின் கோட்டயம் கல்லூரியில் இரண்டாண்டுகள் உதவி விரிவுரையாளராகப் பணிபுரிந்தபின், 1928இல் அருள்திரு பி.டி. கேசு அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்குச்சென்றார். 
           
     1928இல் யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். 1943இல் இக் கல்லூரியினின்றும் விலகி கல்லியிலுள்ள இரிச்மான்டு கல்லூரியிலும் பின்னர் மவுண்டு வினியாவிலுள்ள தூய தாமசு கல்லூரியிலும் பணியாற்றினார். அதன்புறகு, கொழும்பு தர்சுட்டன் கல்லூரியில் அறிவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி 1959இல் பணி நிறைவு செய்தார். 
    
     கல்லூரிப் பணி முடித்த பின்னர்,  ஆவிகள் ஆதன்களின் தொடர்பான விந்தை நிகழ்வுகள் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டு எழுதியும் பேசியும் வெளிப்படுத்தித் தெளிவுறுத்தி வந்தார். எஞ்சிய வாழ்நாள் மழுவதும், பகுத்தறிவூட்டும் பணிகளிலும் மாந்தநேய மன மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார்.
    
     இயல்பிகந்த(வியக்கத்தக்க) ஆற்றல் உடையவராகக் கூறிக் கொள்பவர்கள் ஏமாற்றுக் காரர்களாகவோ மன நோயர்களாகவோ இருப்பர் எனபதை, அறியாமையில் உழலும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கோவூர் விரும்பினார்.
     
     அதற்காகவே, இயற்கையிகந்த வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலக்க உருவா பரிசளிக்க அவர் அணியமாய் இருக்கிறார் என்ற அறிவிப்பை வெல்விளி(challenge) யாகக் கூறினார்.  தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். 
     
     ஏறத்தாழ 50ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து மூடநம்பிக்கையை ஒழிக்கப் பாடுபட்டார்.  இறுதியில்,  1978 செப்டம்பர் 18ஆம் நாள் தம் 80ஆவது அகவையில், கொழும்பில் காலமானார்.
     
     முனைவர் கோவூர், மக்களுக்குத் தெளிவூட்டி, மூடநம்பிக்கைகளை எதிர்த்து நின்று, இலங்கை மண்ணில் இருந்து அயராது போரிட்டார். அந்த "இலங்கையை இன்று ஆளுகின்றவரும் இதற்குமுன்பு ஆட்சி செய்தவரும் போட்டி போட்டுக் கொண்டு இன்று பகுத்தறிவு சார்ந்த ஈனாயான புத்த மதத்தைப் புறக்கணித்து விட்டு, கணியர்களிடம் கருத்தறிந்து நடப்பதை இயல்பான வழக்க மாக்கிக் கொண்டிருக் கிறார்கள்.
       
     மலையாளத் தந்திரிகளான கணியர்களிடம் நம்பிக்கை தரும் சொற்களைக் கேட்டுப் பகற்கனா காண்பதையும், கழுவாய் தேட கோயில்களுக்கும் கடவுளராகக் கூறப்படுவாரின் இருப்பிடங்களுக்கும் துய்தச்செலவு மேற்கொள்வதையும் இவர்கள் இப்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் எம்.கே.நாராயணனையும் சந்திப்பதைப் போலவே இதையும் இவர்கள் செய்து வருகிறார்கள். தமிழர்களுக்கு எதிரானப் போரில் வெற்றி அடைவதற்கான எந்த ஒரு வழியையும் விட்டுவைக்கவில்லை"-என்று கருத்துரை (Opinion) இதழின் எழுத்தாளர் அம்பலம் எழுதுகிறார். 
     
     இந்த வகையில்,  இப்போது,  இலங்கை அரசுத் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது.  இரனில் விக்கிரமசிங்கே கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலின் நெடுநாளைய ஆர்வம் மிகுந்த பத்தராம்!அரசுத் தலைவர் தேர்தலில் இரனிலை எதிர்த்து வெற்றி பெற்ற பின், மகிந்தா இராசபக்சே 2006 சனவரியில் குருவாயூர் வந்து நெய்யளித்துத் 'துலாபாரம்' சடங்கு நடத்துவதை ஒரு நேர்த்திக்கடனாகவே செய்தார்.

      அண்மையில் இந்தியாவந்த இரனில்,  தில்லியில் அரசியற் காரர்களையும் அதிகாரிகளையும் பார்த்துப் பேசிய பிறகு, காரி(சனி)யி்னால் (!) ஏற்படும் இடர்களிலிருந்து விடுபடத் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில் தொலைவிலுள்ள இடமான திருக்கோலிக்காட்டில் உள்ள கோயிலுக்கு துய்தச்செலவு மேற்கொண்டார்.
� � g a ` �3 :p> 
                          
கவனிக்கப்படாதிருந்த அந்தக் கோயிலும், அதிலுள்ள காரி(சனிபகவான்) திருமுன்னும் புதியதாக தொன்ம(புராண) காரணங்கள் கண்டுகாட்டிப் பலரும் அறியுமாறு செய்யப்பட்டிருந்தன. யாரோ கணியம் பார்ப்பவரின் (சோசியர்) அறிவுறுத்தலின் பேரில் இரனில் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். இரனிலின் வருகை தமிழ்நாட்டுக் காவல், உளவுத்துறையினரால் மிகக் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தபோதிலும், ஊர் மக்களுக்கு எப்படியோ செய்தி தெரிந்து, அவர்கள் ஏழு இடங்களில் அவரை வழிமறித்துக் கொந்தளிப்பான கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
  
            
            கொரடாச்சேரி என்னுமிடத்தில் வண்டி மாடுகளைச் சாலையின் குறுக்கே நிறுத்திக் கிளர்ச்சி செய்தார்கள். இரனில் கோயிலை அடைந்த போது, அவர் ஐந்நூறுபேர் கொண்ட கும்பலை நேர்கொள்ள வேண்டியிருந்தது; அவர்களில் பெண்கள் பேரெண்ணிக்கையினராய் இருந்தனர். கும்பலைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் போதவில்லை.
           
     கோயிலிலிருந்து திரும்புகையில், தமிழர்கள் உரிமைபெற உதவுவதாகக் கூறிக்கொண்டே பதற்றத்துடன் தப்பிச்செல்ல வேண்டியதாயிற்று.

            அரசியல்காரர்களை எல்லாநேரங்களிலும் ஏமாளிகள் ஆக்குவது கணியர்கள் மட்டுமே, அல்லர். மக்கள் ஏமாளிகளாக இருப்பதால்,  உளவுத் துறையினரும் கொளகையற்ற அரசியல் காரரரும் கணியர்களைப் பயன்படுத்தித் தம்முடைய அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, கணியத்தின் வழி உளத்தியல் தாக்கம் உண்டாக்கு கின்றனர். 

            தேர்தல் நேரங்களில் எழுதப்படும் கணியப் பலன்கள் அரசியல் நோக்கம் உடையவையே.

                                                            ------------------
நன்றியுரைப்பு:
Tamilnet.com  இணைய தளத்திற்கு!
      
  
****************************************************************
 **

வெள்ளி, 18 ஜூலை, 2008

தமிழ்மக்கள் சிந்தனைக்கு...!


            தமிழர்களுக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள், தொல்காப்பியம் என்னும் இலக்கண இலக்கிய நூலே மிகப்பழமையான நூலாக உள்ளது. இந்நூல் 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என மொழியாய்வர் கூறுகின்றனர்.

            இந்நூலில், நூலாசிரியர் தொல்காப்பியர் அவருக்கும் முன்னர் இத்தமிழ் மண்ணிலிருந்த மொழி அறிஞர்களும் நுண்கலை வல்லாரும் பிற பெரியோரும் இவ்விவ்வாறு கருதினர் என்பதைக் குறிக்கும் வகையில், 'என்ப', 'என்மனார்', 'கூறுப', 'மொழிப' முதலான சொற்களை இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கையாண்டிருக்கின்றார்.


            இவையுந் தவிர, மரபு என்னும் சொல் தொல்காப்பியத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகின்றது. மரபியல் என்று ஓர் இயலே தொல்காப்பியத்தின் உறுப்பாக உள்ளது.


            இவற்றிலிருந்து சில செய்திகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது. தொல்காப்பியத்திற்கும் முன்னரேயே, பல துறைகளிலும் தமிழர்கள் நுண்ணறிவோடு பல நூல்களை உருவாக்கித் தந்திருக்கின்றார்கள் என்ற உண்மை தெரிகிறது. உயர்ந்த இலக்கியங்களையும் கலை அறிவியல் நூல்களையும் படைத்தளித் திருந்தமையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இவற்றிற்கான சான்றுகளையும் தொல்காப்பியத்தில் காணமுடிகிறது.


            தொல்காப்பியத்திற்கும் முன்பே தமிழ் இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாகத் தெரிகின்றது. அவற்றிற்கும் முனபே உயர்ந்த இலக்கியங்களும் நுண்கலை நூல்களும் இருந்திருக்க வேண்டுமெனவும் அவற்றிற்கும் முன்னரே பேச்சு மொழி வளர்ந்திருக்க வேண்டுமெனவும் தெளியத் தெரிகின்றது.


                        ஆம்! தமிழர் தொன்று தொட்டே - அதாவது மாந்தனாகப் படிமலர்ச்சி யடையத் தொடங்கிய காலத்திலிருந்தே - படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மொழி, பண்பாடு, நாகரிகத்தில் வளர்ந்து, உயர்ந்த நிலையெய்திச் செழித்திருந்த உண்மை தெரிகிறது. இந்நிலை எப்போது மாற்றமுற்று இன்றுள்ள தாழ்வுக்குக் காரணமாகியது?


            இந்தியாவிற்குள் புகுந்த ஆரியர், தெற்கு நோக்கிய அவர்களின் செலவின்வழி, தமிழ் மொழியின் வளச் சிறப்பையும் தமிழரின் வாழ்வியற் சிறப்பையும் கண்டறிந்து வியந்தனர். அவர்தம் கரவான சூழ்ச்சி வினைகளால் அச்சிறப்புகளைக் கவர்ந்து கொண்டு, அவர்தம் மொழியையும் வாழ்வையும் உயர்த்திக கொள்ளவும், தமிழையும் தமிழரையும் இழித்துத் தாழ்த்தவும், பலவாறாக முனைந்தியங்கினர்.


            இவ்வுண்மைகளைப் பரிதிமாற் கலைஞரின் 'தமிழ்மொழியின் வரலாறு' என்னும் நூலும் பிற ஆய்வறிஞர்களின் நுண்மாண் நுழைபுல ஆய்வு வெளிப்பாடுகளும் தெள்ளிதின் விளக்குகின்றன.


            மெல்ல மெல்ல, சிறிதுசிறிதாகத் தமிழில் வடசொற் கலப்பையும் தமிழ்ச்சொற்கள் வழக்கொழிப்பையும் மிகக் கரவோடும் திறத்தோடும் அவர்கள் மேற்கொண்டனர். தமிழர்தம் வீட்டு நிகழ்ச்சிகளில் திறக்கரவாகச் சமற்கிருதத்தை நுழைத்தனர். தமிழ், தன் நிலையிழந்து குலைந்துலைந்து இழிந்திட நேர்ந்தது.


            மடமுடவர்களாகவும் மதமடவர்களாகவு மிருந்த தமிழ் மன்னர்கள் ஆரியச் சூழ்ச்சியில் மயங்கி அவர்களின் எல்லாச் செயல்களுக்கும் துணை போயினர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்வீழ்ச்சிநிலை தொடர்ந்தது; இப்போதும் கூடத் தொடர்ந்து வருகின்றது.


            இற்றைக்கு இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர், உணர்வுற் றெழுந்த தமிழர்சிலர், தம் தாய்மொழியும் தாமும் தம் நாடும் வீழ்ந்துவிட்ட நிலையறிந்தனர். எப்பாடு பட்டேனும் அவற்றை மீட்க உறுதிபூண்டுச் செயற்படத் தொடங்கினர்.


            இப்பணியில், அவ்வணியில், தமிழறிஞர்களும் குமுகாய விடுதலைச் சிந்தனையாளரும் இருந்தனர். தமிழர்கள் நிலையிழந்து வீழ்ந்து கிடக்கும் அவலத்தை அவர்களுக்கு எழுத்து, பேச்சு, கூத்து போன்றவற்றால் விளக்கித் தமிழர் எழுச்சிபெறச் செய்யப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர்.


            நிறை தமிழ் மலையாம் மறைமலையடிகள், மாகறல் கார்த்திகேயனார், திரு.வி.க., வ.உ.சி., அயோத்திதாசர், பாவாணர், பாவேந்தர், வ.சுப.மா., பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற தமிழறிஞர்களும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணாத்துரை போன்ற பெரியோர்களும் தமிழரின் மொழி, பண்பாடு, நாகரிகம், வரலாறு போன்றவற்றின் மீட்சிக்கும் தமிழரின் உயர்ச்சிக்கும் அரும்பாடு பட்டோருள் சிலராவர். தந்தை பெரியார் தமிழர் தன்மான உணர்வு பெறவேண்டு மென்பதற்காகவே ஓர் இயக்கம் தொடங்கினார்.


            கொஞ்சம் கொஞ்சமாக, பையப் பைய பயன் விளைந்தது. தமிழர் தம் தாய்மொழியைப் பிறமொழிக் கலப்பின்றி எழுதவேண்டு மெனவும், தமிழ்ப் பெயரே தாங்கவேண்டு மெனவும், தம் குடும்ப நிகழ்ச்சிகளிலும் தாம் வழிபடும் தமிழகக் கோவில்களிலும் வடமொழியை அறவே விலக்கித் தழிழே இடம்பெறச்செய்யவேண்டுமெனவும் விழிப்புணர்வு கொளுத்தப் பட்டனர்.


            வேதாசலம் சுவாமிகள், மறைமலை அடிகளாகி வழிகாட்டினார். அவரின் 'ஞானசாகரம்' இதழ் 'அறிவுக்கடல்' ஆயிற்று. நாராயணசாமி தம் பெயரை நெடுஞ்செழியன் என்று மாற்றிக் கொண்டார். இராமையா அன்பழகனானார். இவ்வாறே பலரும் தமிழ்ப்பெயர் தாங்கியதோடு அவர்களின் பிள்ளைகளுக்கும் தூயதமிழ்ப் பெயரையே சூட்டி வழங்கினர்.


            தந்தை பெரியாரின் தளராத பேருழைப்பால், தமிழர் தனமானத் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தில் மூடநம்பிக்கை இழிவுகள் நீக்கி, வடமொழியை விலக்கி, நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கின. தாய்மொழியில் எல்லாருக்கும் புரியும் வகையில் சடங்கு நிகழ்ச்சிகள் நடத்தத் தொடங்கினர்.


            ஆனால், தமிழப் பற்றையும் தனமானத்தையும் வலியுறுத்தி வந்தோர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த சில ஆண்டுகளிலேயே, வரலாறு திரும்பத் தொடங்கி விட்டது. இன்றைய நிலையை எண்ணிப் பாருங்கள்! தமிழ் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழர்களிடமிருந்து விலக்கப்பட்டு வருகிறது.


            பல தமிழ்க் குடும்பங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் எழுதத் தெரியவில்லை. தமிழில் பேசுவதையும் இழிவாக எண்ணும் மனப்போக்குக் காளாகி விட்டனர். தமிழ்ப்பெயர் தாங்கிய பாட்டன்களின் பெயரன்களுக்கு மொழி புரியாத, பொருள் விளங்காத பெயரிட்டழைக்கும் போக்கு வளரத் தொடங்கி யுள்ளது. ஆங்கிலமும் வடமொழியும் தமிழர் வாழ்வை வன்கைப்பற்றலாகப் பற்றிப் பறித்துவிட்ட நிலை நிலவிடுவதைக் கண்டு கொண்டு வருகின்றோம்.


            செய்தித்தாள்கள், இதழ்கள், மின் ஊடகங்களில் ஆங்கிலம் வடமொழி முதலான அயல்மொழிகளில்தான் எந்தப்பேச்சும் உரையாடலும்! இடையிலே இணைப்பிற்காக ஓரிரு தமிழ்ச்சொற்கள்!


            கோயில்களில் பல்லாண்டுகளாகப் பெரும் போராட்டம் நடத்திய பின்னும் சில மணித்துளிகள் தேவாரம் திருவாசகம் ஓதலாம் என்று சலுகையாம்! தில்லையில் மட்டுமன்று! தமிழ்நாட்டின் எல்லா ஊர்க் கோயில்களிலும் தமிழ் வழிபாடு எனபது அறவே இல்லை!


            நம் சிற்றூர்க் காத்தமுத்துவுக்கும் கருத்தமுத்துவுக்கும் இடையிலான வழக்கு நயன் மன்றத்தில் ஆங்கிலத்தில்தான் நடைபெறுகிறது. சிற்றூர்ச் சின்னத்தாயி முறையீட்டுக்கு அரசு ஆங்கிலத்தில் விடைமடல் விடுக்கிறது!


            இசையரங்குகளில் தமிழிசைக்கு இடமில்லை. தெலுங்கும் வடமொழியும் பரக்கவிரித்து அமர்ந்து கொண்டு தமிழை உள்புகவிடாத நிலை!


            கவர்ச்சி ஓவியக் கழிசடைத் தாளிகைகள் இளைஞர்களைப் பாழ்வழிக்குத் துரத்துகின்றன. தப்ப முயல்வாரைத் தொலைக்காட்சியின் சோடி எண் ஒன்று, மானாட்ட மயிலாட்ட ஆட்ட பாட்டங்கள் பணபாட்டுச் சீரழிவை நோக்கி மின்னல் வேகத்தில் செலுத்து கின்றன.


            தமிழக மீனவர்கள் இனவெறிச் சிங்களக் கொலைவெறிப் படையால் நாள்தோறும் - கிழமைதோறும் - மாதந்தோறும் - தாக்கப் படுவதும், சுட்டுக் கொல்லப் படுவதும் அவர்களின் மீன்களும் வலைகளும் கொள்ளையடிக்கப் படுவதும் இங்கு வாடிக்கையான இயல்பு நிகழ்ச்சிகள்! இலங்கைத் தமிழன் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு பூண்டோடு கொன்றழிக்கப் படுவதைப் பற்றி இங்கு எவருக்கும் கவலையில்லை!


            இரண்டு, மூன்று தலைமுறைக்குள், எழுந்துநிற்க முயன்ற இத்தமிழன் ஆழக்குழியில் குப்புற வீழ்ந்துவிட்ட நிலையையே காண்கின்றோம். இனியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேண்டுமா? இன்னொரு பெரியாரும் இன்னொரு மறைமலையும் வருவார்களா? இல்லை, இப்படியே தமிழர் வரலாறு முடிந்துவிட வேண்டுமா?


            தமிழ்மக்களே, தமிழிளைஞரே, சிந்திப்பீர்! 

திங்கள், 10 மார்ச், 2008

தீராப்பழி ஏற்கத் துணிவதோ?

இலங்கையில் இப்போது கொடுமையான போர் நடந்து கொண்டிருக்கின்றது. இலங்கை அரசின் முப்படைகளும் குழந்தைகள், முதியோர், பொதுமக்கள், போராளிகள் என்று எந்த வேறுபாடுமின்றி ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ஒரு நாட்டின் அரசே தன் குடிமக்களைக் கண்டமேனிக்குக் குண்டுகள் வீசிக் கொன்று குவிக்கின்ற, உலகில் வேறெங்கும் காண முடியாத கொடுமை , அங்கு நடந்து கொண்டிருக்கின்றது.
நார்வே, அமெரிக்கா, சப்பான் ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் நடுவர்களாக இருந்து உருவாக்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்புடைய யாருக்கும் தெரிவிக்காமல் இலங்கை அரசு தன்விருப்பமாகவும் தடாலடியாகவும் திடீரென முறித்துக் கொண்டது. இந்நிலையை உலக நாடுகள் ஏற்கவில்லை என்றாலும் எந்த நாடும் இதுவரை இலங்கை அரசைத் தட்டிக்கேட்க முன்வரவில்லை.
கடல்கொண்ட குமரிக்கண்டத்தின் எஞ்சிய நிலப்பகுதியாக இலங்கையை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் அந்நாட்டின் ஆதிக்குடிகள். ஈழத்தின் மண்ணின் மைந்தர்கள். இலங்கையின் வடக்கு, கிழக்கு முதலிய பகுதிகளில் கி.பி.1832 வரைத் தம்மைத்தாமே ஆட்சி செய்து கொண்டு வாழ்ந்த மக்களின் பிறங்கடைகள். இவ்வுண்மையைத் தமிழகத் தமிழர்களில் பெரும்பாலரும் தெரிந்திருக்கவில்லை. இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ளவர்களில் இவ்வுணமையைத் தெரிந்தோர் மிகமிகக் குறைவானவரே!
இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லாருமே தமிழகத்திலிருந்து சென்றவர்கள் என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். கி.மு.150-இல் வரையப்பட்ட இலங்கையின் நாட்டுப்படத்தில் வடக்கு, கிழக்கு, வடமேற்குப்பகுதிகளும், தெற்கில் சில பகுதிகளும் தமிழ்மன்னர் ஆட்சிப் பகுதிகள் எனத் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளன. கி.மு.543இல் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்று சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று அவர்களின் 'மகாவம்சம்' என்ற சிங்கள நூல் குறிப்பிடுகிறது; வேறு சான்றுகளையும் ஆய்வாளர்கள் தருகின்றனர்.
சிறுபாணாற்றுப்படை(117-20), புறநானூறு (176:6-7) , பட்டினப்பாலை (191) போன்ற கழக (சங்க) இலக்கியங்கள் ' பதியெழ லறியாப் பழங்குடி' யான தமிழ்க்குடியே இலங்கையின் சொந்தக்குடி என்பதற்குச் சான்று சொல்கின்றன. அகநானூறு(88, 231, 307) குறுந்தொகையில்(189, 343, 360) மும்மூன்று பாடல்களும் நற்றிணையில் (366) ஒருபாடலும் எழுதிய ' ஈழத்துப் பூதன் தேவனார் ' தம் பாடல்களில் ஈழத் தமிழகத்தின் அகவாழ்வுச் சான்றுகளைக் காட்டியுள்ளார்.
1619இல் போர்த்துக்கீசியர் இலங்கையின் வடபகுதியையும், 1638இல் ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) இலங்கையின் கிழக்குப் பகுதியையும், 1795இலும், 1815இலும் ஆங்கிலேயர் இலங்கையின் பல பகுதிகளையும் கைப்பற்றி ஆண்டனர். ஆங்கிலேயரே 1833இல் இலங்கை முழுவதையும ஓர் அரசின் கீழ் இணைத்தனர். இலங்கையை ஆங்கிலேயர் ஆண்டபோது, தமிழகப் பகுதிகளும் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தன. தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேயரே இலங்கைக்கும் ஆட்சியராக இருந்தார். ஏறத்தாழ ஐந்து ஆறு தலைமுறைகளுக்கு முன்னர், ஆசைகாட்டி ஆங்கிலேயரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மதுரை, முகவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களாவர். அவர்களே இந்தியாவினின்றும் இலங்கைக்குச் சென்ற குடிகள்.
ஆங்கிலேயர் ஆட்சியினின்றும் இலங்கை 04-02-1948இல் விடுதலை அடைந்தது. விடுதலை பெற்ற கையோடு சிங்கள ஆட்சியாளர் இலங்கையின் தோட்டத் தொழிலாளர் 10இலக்கம் பேரின் குடியுரிமை, ஒப்போலை உரிமையைப் பறித்தனர்.(இலங்கையின் தோட்டத் தொழிலாளர் பட்ட துன்ப துயரங்களை 1980ஆம் ஆண்டில் தொலைக்காட்சி வழி பார்த்த இங்கிலாந்து மக்கள், இனி, இலங்கைத் தேயிலையை வாங்குவதில்லை என முடிவெடுத்து அறிவித்த செய்தி உலகம் முழுவதற்கும் இலங்கைத் தோட்டத் தொழிலாளரின் இரங்கத்தக்க நிலையை எடுத்துரைத்தது)
தமிழீழ மக்களால் "தந்தை" எனப் பெருமதிப்போடும் பேரன்போடும் அழைக்கப்பட்ட சட்டஅறிஞர் தலைவர் செல்வநாயகம் அவர்கள் பல்லாற்றானும் துன்புற் றுழலும் தமிழீழ மக்களின் இன்னலை நீக்கி வாழ்வுரிமையை உறுதிசெய்ய 1949இல் 'தமிழரசுக்கட்சி'யைத் தோற்றுவித்தார். பல அறப் போராட்டங்களைத் தமிழர்கள் அமைதியாக நடத்தினர். சிங்கள இனவெறி ஆட்சியாளர் அவற்றைப் பொருட்படுத்தவேயில்லை. 1956இல் தமிழுக்கு இடமளித்துச் சட்டம் வந்தது. ஆனால், அச்சட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஊர்திகளில் சிங்கள எழுத்து 'சிறீ' யைக் கட்டாயம் எழுத வேண்டுமென்ற ஆணையை எதிர்த்த தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
05-06-1956இல் இயற்றப்பட்ட இலங்கை அரசமைப்புச்சட்டம் தமிழரின் மொழி உரிமை, சமய உரிமை, கல்வி உரிமைகளைப் பறித்தது. கொந்தளிப்பான சூழலில், நிலைமை மோசமாகிவிடாமல் தடுக்க, பண்டாரநாயகா 26-07-1957இல் தந்தை செல்வாவுடன் கலந்து பேசி ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால், அந்த ஒப்பந்தத்தின்படி சிங்கள அரசு நடந்து கொள்ளவில்லை. பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, 1958இல் தமிழில் நுழைவுத் தேர்வுகளை எழுதலாம் என்றும் வடக்கு-கிழக்கு மாநிலங்களில் தமிழைப்பயன்படுத்தலாம் என்றும் ஒரு சட்டம் வந்தது. ஆனால், அதுவும் செயற்பாட்டுக்கு வரவில்லை. 1965தேர்தலில் சிங்களரின் பெரிய கட்சிகள் இரண்டிற்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. 14தொகுதிகளை வென்ற தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் துணைதரவைக் கேட்டுப் பெற்று ஆட்சிக் கட்டிலேறிய தட்லி சேனநாயகா 25-03-1965இல் தந்தை செல்வாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் அவரும் அவ்வொப்பந்தத்தை நிறைவேற்ற வில்லை.
தமிழர்களைப் புறக்கணித்து 22-05-1972இல் சிங்களர் கொண்டுவந்த அரசமைப்புச் சட்டமும் தமிழரின் மொழியுரிமை, மதவுரிமை, கல்வியரிமைகளை மறுத்து, சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்றது; புத்தமதம் அரசமதம் என்றது; தமிழினமாணவர் உயர்கல்வி தொழிற்கல்வியில் சேர சிங்கள மாணவரைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டு மென்றது; கூட்டாட்சி அமைப்பை மறுத்துச் சிங்கள ஒற்றையாட்சியையே உறுதி செய்தது. இச் சட்டத்தை 25-05-1972இல் தமிழரசுக் கட்சியினர் செல்வாவின் தலைமையில் கூடித் தீயிட்டு எரித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். பயனேதும் ஏற்படவில்லை.
இவ்வாறு, உரிமை பறிப்புகளும், ஒப்பந்த மீறல்களும், ஒடுக்குமுறைத் தாக்குதல்களும் தொலையாத் தொடர்கதையாகிப் போனபின்னர் தான், நிலையான தீர்வுக்குச் சிந்திக்கத் தொடங்கி, இலங்கை ஒற்றையாட்சியிலிருந்து தமிழர் தாயகம் தனியே பிரிந்து போக வேண்டும் எனத் தமிழீழத் தலைவர்கள் முடிவெடுத்தனர். இம்முடிவே 14-05-1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகப் பின்னர் நிறைவேற்றப்பட்டது.
தந்தை செல்வா, 'தமிழர்களுக்கான விடுதலை பெற்ற நாடு வேண்டும்' என்பது தமிழீழ மக்களின் தீர்மானமே என்பதை விளக்கமாக வெளிப்படுத்த விரும்பினார். அதற்காகவே, தம்முடைய 'காங்கேசன் துறை' நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினின்றும் 03-10-1072இல் விலகினார். பிறகு அத்தொகுதிக்கு 05-02-1975இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர்களின் தமிழீழப் பிரிவினைத் தீர்மானத்தை முன்வைத்துப் போட்டியிட்டார். மக்கள் அவரைப் பெரு வெற்றிபெறச் செய்து தமிழீழ விடுதலையே தமக்கு விடிவு தரும் என்ற தங்களின் முடிவினைத் தெளிவாக அறிவித்தனர். நாடாளுமன்றம் சென்று தமிழீழ விடுதலை பெற்றே தீருவோமெனச் செல்வா முழங்கினார்.
இதற்கிடையே, 1974சனவரியில் யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. 10-01-1974பிற்பகலில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு இருக்கும்போது வந்த40காவலர்கள், மாநாட்டில் கலந்து கொண்டோரைக் கலைந்து செல்லும்படி அறிவித்துக்கொண்டே, அங்குக் கூடியிருந்த ஐம்பதினாயிரம் தமிழ் மக்களையும் அல்லோலகல்லோலப் படுத்தினர்! ஆண், பெண்களின் உடைகளை உருவி அலறியோட அடித்தனர்! துமுக்கியாலும் சுட்டனர்! மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பலர் மின்தாக்குதலுக் குள்ளயினர்! இக்கொடிய வன்தாக்குதலில்11பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று உயிருக்குப்போராடினர்!
உரிமை பறிப்புகளும் ஒப்பந்த மீறல்களும் உருவாக்கிய நம்பிக்கையின்மையாலும், - 1956, 1958, 1961, 1974ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தொடர்ந்து நடந்த சிங்களக் கொலை வெறியாட்டத்தாலும், இனஅழிப்புத் தாக்குதல்களாலும் தமிழர்கள் செய்வதறியாது கலங்கி நின்றனர். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த கொடுங்கொடிய தாக்குதலில் குழந்தைகளும் பெண்களும் முதியோரு மடங்கிய தமிழ்மக்கள் பட்ட சொல்லொணா அல்லல் அவலங்கள் ஈழத்தமிழ் இளைஞரைச் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக எழுச்சி கொள்ளச்செய்தன. 05-05-1976இல் ஈழத்தமிழ் இளைஞர்கள் புதிய இயக்கத்தை உருவாக்கினர்.
காவற்படையும், போர்ப்படையும் கொண்டு சிங்கள அரசு தமிழினத்தை அடக்கி ஒடுக்கி அழிக்கும் போக்கு தொடர்ந்ததால் இலங்கையில் தமிழினம் வாழ்வுரிமையை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில், கொடுமைகளை எதிர்த்து நிற்கவும், தங்களைக் காத்துக் கொள்ளவு ம் ஆய்தம் தாங்கிய ஒரு படையை உருவாக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்கு ஈழத்தமிழர் தள்ளப்பட்டனர். அவ்வாறு, படையை உருவாக்கிக் கருவியேந்திப் போராடித் தம் தாயகத்தை நிறுவிய நாடுகள் பல உள்ளன. அந்நாடுகள் அ.நா.அவையின் (U.N.O) அனைத்துலகச் சட்டங்களின்படி ஒத்தேற்கப் பட்டுள்ளன( U.N.O. Declaration 1970, Universal Declaration of Human Rights, Section 15) என்பது அறியத்தக்க செய்தியாகும்.
ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்கும் பெருமுயற்சிக்கே தம் வளங்களையும் வாழ்நாட்களையும் செலவிட்ட ஈகச்செம்மல் தந்தை செல்வா 27-041977இல் மறைவுற்றார். 1977 ஆகத்து மாதத்தில் யாழ்ப்பாணத்திலும் திருக்கோணமலையிலும் சிங்களரால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பலர் கொல்லப்பட்டனர்.
1977ஆம் ஆண்டில் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியார் தலைமையில் நடந்தது. தமிழகத் தலைவர்கள் பலரும் அறிக்கை வழி கண்டனம் தெரிவித்தனர். சிங்கள அரசின் ஒடுக்குமுறை ஓயாது தொடர்ந்தது..
11-07-1979இல் செயவர்த்தனா நிறைவேற்றிய அச்சுறுத்த வன்முறைத் தடுப்புச் சட்டம் தமிழர்களைக் கொடுங்கொடிய முறையில் வேட்டையாடியது. 1981ஆம் ஆண்டில் தமிழர்க்கெதிராக தீயிட்டழிப்பு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு நடந்ததை நாடாளுமன்றில் அமைச்சரே ஒப்புக் கொண்டார்.1983இல் சிங்கள அரசு மேற்கொண்ட அரச அச்சுறுத்த வன்முறைகளும், சிங்களக் காடையரின் கொள்ளை கொலைக் கொடுமைகளும், தமிழ்ப்பெண்கள் பலவகைக் கொடுமைகளுக் காளாக்கப்பட்டுச் சீரழிக்கப்பட்டதும், சிறையிலிருந்த தமிழர்களைக் கொடுந் தாக்குதலால் படுகொலை செய்ததும் தமிழ்நாட்டு மக்களைப் பேரெழுச்சி கொள்ளச் செய்தன. ஈழத் தமிழர்க்காகப் பரிந்து எழுந்த தமிழகத் தமிழர்களின் பேரெழுச்சி, இந்தியாவை அதிர்ந்து குலுங்க வைத்ததோடு அனைத்து உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது.
இலங்கையில் இன்றுவரை 70,000 தமிழர்களுக்குமேல் கொல்லப் பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 7இலக்கம் பேர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து அல்லலுக் குள்ளாகி யுள்ளனர். உள்நாட்டில் 5இலக்கம் பேர் இடம்பெயர்ந்து இன்னற் படுகின்றனர்.
இனவெறிச் சிங்கள அரசு இந்தியா, பாக்கித்தான், இசுரேல், அமெரிக்கா முதலான நாடுகளிடமிருந்து ஆய்தங்களையும், வானூர்திகளையும், போர்ப் பயிற்சிகளையும், உளவு அறியும் உதவிகளையும் தடையின்றிப் பெற்றுத் தமிழர்களை ஒடுக்கி யும் அழித்தும் வருகிறது. சொந்த நாட்டு மக்களையே, தமிழர்கள் என்ற காரணத்தால் முப்படைகளையும் கொண்டு கண்டமேனிக்குக் குண்டுவீசிக் கொன்று குவிக்கின்றது. குழந்தைகள், பள்ளிச்சிறார், முதியோர் என்றும், கோயில், பள்ளிவாயில், திருச்சவை என்றும் எந்த வேறுபாடும் கருதாமல் குண்டுமழை பொழிந்து கொல்கின்றது. 22-02-2002இல் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை நார்வே முதலிய நாடுகளுக்கும் தெரிவிக்காமல் தன்விருப்பமாக முறித்துக் கொண்டு, இலங்கை மண்ணில் தமிழர்களே இல்லையெனும்படியான நிலையை உருவாக்கும் நோக்கில், கொடுமையாகக் கொலைவெறித் தாக்குதல் செய்து வருகிறது.
ஈழத்தமிழருக்கும் தமிழ்ஈழ விடுதலைக்கும் துணைநிற்கும் பேரெழுச்சியான நிலைமை 1983முதல் தமிழகத் தமிழரிடம் காணப்பட்டது. ஆனால், 1991இல் நடந்த இராசீவ் காந்தி கொலைக்குப் பின்னர், அவ்வெழுச்சி குறைந்து போனது. அதே போழ்தில், தமிழ்ஈழத்தைப் பற்றியும் ஈழப் போராளிகளைப் பற்றியும் பேச, எழுதவும் தயங்குகின்ற நிலை அடக்குமுறை அச்சுறுத்தலால் உருவாக்கப் பட்டது. இன்னும், தமிழ், தமிழர் என்றாலே தடை, தளைப்படுத்தம், சிறைப் படுத்தம் என்ற நிலை ஏற்பட்டது. என்றாலும், துணிவும் உணர்வும் மிக்க சிலரால் இந்த இறுக்கமான நிலையில் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வேற்பட்டு வருகிறது.
இந்த மண்ணில், ஈழப் போராளிகளால் எவ்வகை வன்முறை நிகழ்வதையும் தமிழகத்தில் உள்ள எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதே போழ்தில், தமிழகத் தமிழரின் தொப்பு ள்கொடி உறவான ஈழத்தமிழர்கள் அவர்கள் கண்முன்னேயே அல்லற் படுவதையும் அழிவதையும் எங்ஙனம் பொறுமையோடு பார்த்துக் கொண்டிரு ப்பார்கள்?
ஆகத்து 2002முதல், -9 என்னும் பெயரிய யாழ்ப்பாண நெடுஞ்சாலையை மூடியதால், யாழ்ப்பாணத்திலுள்ள இலக்கக் கணக்கான தமிழ்மக்கள் இன்றியமையா உணவுப் பொருள்களான அரிசி முதலானவும், மருந்து, துணி முதலானவும் கிடைக்காமல் பட்டினியாலும் நோயாலும் சாகின்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தம் அரத்த உறவான யாழ்ப்பாண மக்களுக்கென அளித்த உணவு, மருந்துப் பொருள்களை ச் செங்குறுக்கைக் கழகத்தின் வழியாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்புதற்கும் இந்திய அரசு இசைவு தரவில்லை. பலரும் பலவாறு வேண்டுகோள்கள் விடுத்தும் தமிழ்நாட்டரசும் கண்டுகொள்ளவில்லை!
இனஅழிப்பிற் காளாகி அழியும் ஈழத் தமிழர் நிலையில், இந்திய அரசிலும் தமிழ்நாட்டரசிலும் ஆட்சியாளர் மாறியதால் எவ்வகைப் புதிய விளைவும் ஏற்படவில்லை. இராசீவ் காந்தி கொலையுண்ட நிகழ்ச்சியுடன் 40 இலக்கம் ஈழத்தமிழரின் நிகழ்கால எதிர்கால வாழ்வை முடிச்சுப் போடக்கூடாது என்று 'தினமணி' (20-04-2002) ஆசிரியருரையும், 'தமிழ் ஓசை' (13-02-2008) ஆசிரியருரையும் மற்றும் பல்வேறு நடுநிலை அறிஞரும் கூறுவதை ஆட்சியாளர் கருத்திற் கொண்டதாகத் தெரி யவில்லை.
நடுவண் அரசிலும் தமிழ்நாட்டு அரசிலும் அமர்ந்துள்ள தமிழர்களாகிய அமைச்சர்களும், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களும், தமிழ்மண்ணில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களாக வலம் வந்துகொண் டிருப்போரும், தமிழராக உள்ள ஒவ்வொருவரும் நெஞ்சில் கைவைத்து எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிது! ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் தமிழினத்தின் போராட்டமாகும். அப்போராட்டம் தக்க தீர்வினை எட்டாமல், எக்காரணங் கொண்டும் வீழ்ச்சி அடையக்கூடாது. ஈழத்தமிழர் வீழ்ந்தால் அது, தமிழினத்தின் வீழ்ச்சியாகவே அமையும்!
இந்த இக்கட்டான சூழலைப் புரிந்து கொள்ளாமல் பொருள் சுரண்டும் அரசியலிலும், நாற்காலிக் கனவு நாட்டத்திலும், தன்னலவெறிப் போக்கிலுமே தமிழகத் தலைவர்கள் சென்று கொண்டிருப்பா ராயின், தீராப்பழி வந்து சேரும்! தமிழர் வரலாற்றில் இழிவு சேர்க்கும் பக்கங்களுக்குக் காரணமாகிப் போவோம்! எள்ளிநகைக்க இலக்காகிப் போவோம்! இவ்வுண்மையை மறந்துவிடக் கூடாது!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை ஓராயிரம் முறைக்கும் மேல் கடுந் தாக்குதல் நடத்தியிருக்கின்றது. தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளையும், அவர்கள் பிடித்த மீன்களையும், படகுகளையும் கொள்ளையடித்துக் கொடுங் கூத்தாடி அவர்களைச் சுட்டுக் கொன்று வருகின்றது. 250க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சிங்களவெறித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். பல நூறு மீனவர்கள் படுகாயப் படுத்தப் பட்டுள்ளனர்.
பலமுறை தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே சிங்களக் கடற்படை யினரால் தாக்கப்பட்டு ள்ளனர். இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம் இந்தியக் கடற்படையும் கடலோரக் காவற்படையும் எங்கே போயிருந்தார்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஒரு முறையும் கூட இவர்கள் தமிழக மீனவர்களை சிங்களர் தாக்குதலினின்றும் தடுத்துக் காத்ததாகச் செய்தி வந்ததில்லை. ஓரிரு இலக்கம் உருவாக்களை இழந்த உயிர்களுக்கு இழப்பீடாகத் தந்துவிட்டுக் கடமையை முடித்துக் கொள்ளும் அரசாக தமிழ்நாட்டரசு இருந்துவருகிறது.
இந்நிலையில் இந்திய அரசு, சிங்கள இனவெறி அரசுக்குக் கதுவீ (RADAR) உள்ளிட்ட உளவுக் கருவிகளும், ஆய்தங்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து கொடுத்து வருகின்றது! பூனாத் தேசியப் பாதுகாப்புக் கழகத்திலும் பிற இடங்களிலும் வழக்கமாகப் பிற நாட்டினர்க்கு விளக்கப்படாதவை பற்றியெல்லாம் இலங்கைப் படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு விளக்கிக் கூறிப் பயிற்சி தரப்படுகின்றது. இந்தியப் படையின் உளவுப்பிரிவு அதிகாரிகள் குழு கொழும்பு சென்று, அங்குப் போர்ப்படை உளவுப் பயிற்சிப் பள்ளி அமைப்பதற்கு ஆவன செய்து தருகின்றது (தமிழ் ஓசை-11-02-2008) என்ற செய்தியும் வருகின்றது.
இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களின் குருதிவழிச் சொந்தங்களைக் கொன்றழிக்கவும் இன்னும் தமிழ்நாட்டு மீனவர்களையே தாக்கிக் கொல்லவும், இந்தியா இலங்கை அரசுக்குச் செய்யும் பல்வேறு உதவிகளும் சிங்களர்க்குப் பயன்படுகின்றன. இவ்வகையில், தமிழர்களின் வரிப்பணமே தமிழர்களைத் தாக்கவும் அழிக்கவும் பயன்படுத்தப் படுகிறது எனில், மிகையன்று.
தமிழ்நாட்டரசு இவற்றைத் தக்கவாறு எதிர்த்துத் தடுக்க வேண்டுமல்லவா? இந்தி யஅரசை முறையாகச் செயற்படச் செய்து ஈழத்தமிழரையும் தமிழக மீனவரையும் காக்க வேண்டாவா? பதவிக்காகவோ வேறு அரசியல் பயன்களுக்காகவோ, இந்திய அரசை வற்புறுத்தி தமிழர்களைக் காத்திடும்படிச் செயற்படச் செய்யாமல், வாய்மூடி இருப்பதை விட இல்லாமற் போவதே மேலல்லவா!
இந்த அரசுகளை வற்புறுத்தி ஈழத் தமிழினத்தைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழினம் உள்ளது. தமிழிளைஞர்கள இம்முயற்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும். இக்கடமையில் தவறினால், ஈழத்தமிழர் நசுக்கி அழிக்கப்பட்டு விடுவார்கள். நெருக்கடியான இக்காலக் கட்டத்தில் விழிப்புற் றெழுந்து இதைக் கட்டாயம் செய்தாக வேண்டும். இல்லையேல், தீராப்பழி ஏற்று இழிவைச் சுமக்க வேண்டியவர்களாகிப் போவோம்!
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” என்று கூறும் புறநானூற்று வரிகள் வெறும் எழுத்துகள் அல்லவே!