ஞாயிறு, 31 அக்டோபர், 2010

எண்ணிக் கொதித்தெழு தம்பி!

கொதித்தெழடா!

எண்ணிக்  கொதித் தெழடா! தம்பி
ஏதும் முறையிலா இழிநிலை மாற்றிட  ..  ..  ..  .. (எண்ணிக்)

உயர்வென்றும் தாழ்வென்றும் பிறப்பினிலே பொய்
உரைத்துப் பழித்தே இழித்திடுவார்!
அயர்வின்றி உழைப்பவர் தாழ்ந்தவரா இந்த
அடாப்பழி தொடர விடுவதுவா?  ..  ..  ..  ..  ..  ..  (எண்ணிக்)

சாதி சமயத்தின் பேராலே நாட்டில்
சண்டை கொடுமைகள் உயிர்க்கொலைகள்!
ஆதி எதுவென ஆராய்ந்தால் அது
அரசியற் காரரின் தூண்டுதலே!  ..  ..  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

ஊழல் சுரண்டல் பதுக்குதல்கள் தன்
உறவுக்கு முறைமீறி ஒதுக்குதல்கள்!
ஏழைகள் மென்மேலும் ஏழையராய் இங்கு
எல்லா மிழந்தே வாழ்நிலைகள்!  ..  ..  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

பள்ளிக் குழந்தைகள் படித்திடவும் பணம்
பறிகொள்ளைக் கொடுமையைப் பார்த்திருந்தும்
கள்ளத் தனமாகத் துணைபோவார்! இதைக்
காறி உமிழ்ந்து திருத்திடவே  ..  ..  ..  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

செல்வர்க்கே உதவிடும் சட்டதிட்டம் பொருள்
சேர்ந்து குவிந்திடும் அவர்க்குமட்டும்!
சொல்லும் திறத்தாலே ஏமாற்றி மக்கள்
சொந்த உணர்வை மழுங்கடித்தார்!  ..  ..  ..  ..  ..  .. (எண்ணிக்)

சொந்த இனங்கொலத் துணைபோனார்! வந்த
'சோனி'க்கும் சொத்தைக்கும் நாயானார்!
இந்த இழிவினில் தம்குடும்பம்  பதவி
எலும்புபெறக் காட்டிக் கொடுத்ததெலாம்  ..  ..  ..  ..  (எண்ணிக்)

ஞாயம் நயன்மைகள் சொல்பவரைச் சொந்த
நாட்டில் சிறைக்குள்ளே பூட்டுவதோ?
தேயத்தில் கொள்ளை அடிப்பவர்கள் என்றும்
திளைத்துக் கொழுத்துத் திரிவதுவோ?  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

அச்சம் துடைத்தெறி, ஆர்த்தெழுவாய்! அவர்
அழிவினை முடிவுசெய், அதர்ந்தெழுவாய்!
எச்சில் உமிழ்வாழ்க்கை ஏனினியும் அட,
இரண்டிலொன் றாகட்டும் என்றேநீ  ..  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

-------------------------------------------------------------

5 கருத்துகள்:

Kandumany Veluppillai Rudra சொன்னது…

இழிநிலை மாற்றி எழுச்சி கொள்ள
இதுவல்லோ தருணம் இன்பத் தமிழா!

Unknown சொன்னது…

உருத்திரா சொன்னது…

இழிநிலை மாற்றி எழுச்சி கொள்ள
இதுவல்லோ தருணம் இன்பத் தமிழா!

good

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

அன்புள்ள தமிழநம்பி ஐயா!
வணக்கம்.
கள்ளத்தனமாகத் துணைபோக உச்சாணிக் கிளையிலுள்ளவரே அணியமாகிவிட்டதொரு மாற்றார்ச்சூழலில் தங்கள் பாவடிகள் தொடுதோலடிகளாய் மாற்றங்கொள்வதில் வியப்பேதுமில்லை. தூய்மை மிகுந்த தங்கள் பாமாலைக்குப் பாராட்டுகள்!

பிள்ளைகளுக்கு விடுமுறை விடும்பொழுது, நான் சென்று இணையமலசும் நடுவங்கள் அமைதி குலைகின்றன. எனவேதான் என் கருத்தூட்டங்கள் அத்திப்பூக்களாகின்றன. பொறுத்தருளுங்கள்.

அன்புடன்
தேவமைந்தன்

தமிழநம்பி சொன்னது…

நன்றி உருத்திரா ஐயாவுக்கும் சிந்தனைக் களத்திற்கும்!

தமிழநம்பி சொன்னது…

பேராசிரியர் ஐயாவுக்கு வணக்கம்; நன்றி. உங்களைப் பார்த்தும் நெடுநாட்களாகின்றன. 'திண்ணை'யிலும் பிற இடத்தும் உங்கள் எழுத்தும் இடம்பெறவில்லை. மற்றவர்களை ஊக்கி உயர்த்தும் உங்கள் பண்புக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.