அரசியல் கட்சிகளும் - தமிழும், தமிழ்வழிக்கல்வியும்!
----------------------------------------------
தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் அதன்வழி தமிழ்நாட்டின் மாநில அரசை உருவாக்கி ஆட்சி செய்யவும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம் முறை சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் 23, ஏப்பிரல் 2026 அன்று தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணியாகவும் தனித்தும் போட்டியிடுகின்றன.
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியாரும் தாம் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்வோம்; என்ன என்ன வளர்ச்சித் திட்டங்களையும் நலத்திட்டங்களையும் உருவாக்கிச் செயற்படுத்துவோம் என்று அவ்வக் கட்சியின் பல செயல்திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் தேர்தலுக்கு முன்னர்த் தேர்தல் அறிக்கைகள்வழி அறிவிப்பர்.
சில சிறிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளே வெளியிடாமல் இருந்துவிடுவதும் உண்டு; ஏதாவது உறுதிமொழிகளைக் கூறிவிட்டுப் பின்னர் நிறைவேற்ற முடியாமல் திண்டாடும் நிலையைத் தவிர்த்துவிட! கொள்கைகளே இல்லாத, வருமானத்தையே குறிக்கோளாகக் கொண்ட சில கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடுவதில்லை! சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! சில அரசியல் கட்சிகள் நம்பகத்தன்மை குறைந்தவையாக நமக்குத் தெரிந்தாலும், தேர்தல் அறிக்கை என்பது முகன்மையான ஆவணம் என்பதால் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.
இப்போது தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.கவும், எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.கவும் தனித்தனியே கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தனித்துப் போட்டியிடும் கட்சிகளும் உள்ளன. இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் தமிழரின் இருப்பிற்கும் உயர்வுக்கும் அடிப்படையான தமிழ்மொழியின் காப்பிற்கும் வளர்ச்சிக்கும் உயர்விற்கும் என்னென்ன அறிவிப்புகள் உள்ளன? இக் கட்சிகள் தமிழ்வழிக் கல்வியைச் செயற்படுத்த என்ன செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன என்ற இரண்டு கூறுகளை
மட்டும் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் தேடினோம். அவற்றை மட்டுமே திரட்டிக் கீழே தந்திருக்கின்றோம்.
1.திராவிட முன்னேற்றக் கழகம்:
ஒன்றிய அரசு “ஒரே நாடு ஒரே மொழி”என்ற திட்டத்தைக் கைவிடவேண்டும் என்றும், ஆங்கிலமும் தாய்மொழியும் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு மாற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படும்.
ஆங்கிலம் நிலையான ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் இணைப்பு மொழியாகவும் இருக்க வேண்டும். அரசியலமைப்பின் 8-ஆவது அடைவுப் பட்டியலில் (அட்டவணையில்) உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி களையும் ஆட்சி மொழிகளாக அறிவிக்கத் திமுக தொடர்ந்து போராடும்.
உயர் நயன்மன்றங்களில் அந்தந்த மாநிலமொழியை (தமிழ்நாட்டில் தமிழ்) நயன் மன்ற மொழியாகப் பயன்படுத்த இசைவளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தும்.
கழக(சங்க)த் தமிழ் முதல் கணினித் தமிழ் வரை தமிழின் வளர்ச்சியை ஆய்வுசெய்யவும், அதன் எதிர்காலச் செலவை (பயணத்தை)த் திட்டமிடவும் சென்னையில் “செம்மொழி மாநாடு” சிறப்பாக நடத்தப்படும்.
அனைத்து நாட்டு ஆய்விதழ்களில் வெளியாகும் முகன்மையான கட்டுரைகள் உடனுக்குடன் தமிழாக்கம் செய்யப்படும். இது தமிழ் வழியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பேருதவியாக அமையும்.
பள்ளிகளில் புதுத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தமிழ்மொழி கற்பித்தலுக்கான ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழ்மொழி ஆர்வத்தை அதிகமாக்க, மாநில அளவில் பேச்சு, கட்டுரை, பாப் போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு முதலமைச்சர் கிண்ணி(கோப்பை) வழங்கப்படும். வெளிநாட்டுச் சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
செயற்கை நுண்ணறிவு காலத்தில் தமிழுக்காகப் பல்வேறு வட்டார வழக்குகளை உள்ளடக்கிய உரைகள், பேச்சுகள் மற்றும் படங்கள் திரட்டப் பட்டுத் “தரவுக் களஞ்சியம்” உருவாக்கப்படும்.
தமிழ்மொழிக்கான செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் உருவாக்குவதை ஊக்குவிக்க, கல்வி நிறுவனங்களில் தமிழ்-செயற்கை நுண்ணறிவு புத்தாய்வு நிதி நல்கை (Tamil-AI Fellowship) வழங்கப்படும்.
மைசூரில் உள்ள இந்தியத் தொல்லியல் துறையிடமிருந்து தமிழ்க் கல்வெட்டுப் படிகளைப் பெற்று, அவற்றை ஆய்வு செய்து ‘தமிழ்நாட்டு கல்வெட்டுப் பெருங்களஞ்சியம்’ என்ற பெயரில் நூல் வரிசைகளாக வெளியிடப்படும்.
இளைய தலைமுறையினர் மொழிப்போர் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொள்ளாச்சியில் புதுமை(நவீன)க் காட்சித்தளம் அமைக்கப்படும்.
2. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்:
இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை நடுவண் அரசின் ஆட்சி மொழிகளாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
சென்னை உயர் நயன்மன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழைத் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நடுவண் அரசின் அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் தமிழிலேயே நடத்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.
வெளிமாநிலப் பல்கலைக்கழகங்களிலும் 25 அனைத்து நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்க நிதி உதவி யளித்துப் பிற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையை (தமிழும் ஆங்கிலமும்) அதிமுக அரசு தொடர்ந்து உறுதியுடன் கடைப்பிடிக்கும்.
நடுவண் அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் இருமொழிக் கொள்கைக்கு இடையூறு உண்டாக்குகின்ற (பாதிக்கின்ற), தமிழ்நாட்டின் கொள்கைகளுக்கு எதிரான கூறுகள் புறக்கணிக்கப்படும்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான (பெரும்பாலும் தமிழ்வழியில் பயில்பவர்கள்) மருத்துவப் படிப்பு உள்-இடஒதுக்கீடு 7.5 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக உயர்த்தப்படும்.
3. தமிழக வெற்றிக் கழகம்:
இக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தமிழ் பற்றியோ தமிழ்வழிக்கல்வி பற்றியோ எந்த அறிவிப்பும் காணப்படவில்லை.
4. நாம் தமிழர் கட்சி:
தமிழ்மொழி ஆட்சி மொழி, அதிகார மொழி, பண்பாட்டு மொழி, பயன்பாட்டு மொழி, வழிபாட்டு மொழி மற்றும் நயன்மன்ற மொழியாக மாற்றப்படும்.
சிற்றூர் ஆட்சிசார் அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை அனைத்து அரசு ஆவணங்கள், பதிவுகள், கோப்புகள் தமிழில் மட்டுமே பேண(பராமரிக்க)ப்படும். அரசு அலுவலகப் பெயர்ப் பலகைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருப்பதைச் சட்டம் மூலம் உறுதி செய்யப்படும்.
செய்தி ஒளிபரப்புத் துறையில் இருந்து தமிழ் வளர்ச்சியைப் பிரித்து, “தமிழ் மீட்சித் துறை” என்ற தனித் துறை உருவாக்கப்படும்.
உயர் நயன்மன்றம் முதல் உள்ளூர் நயன்மன்றம் வரை அனைத்து நயன்மன்றங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் மாற்றப்படும். அனைத்துப் படிவங்களும் தமிழில் அமைய ஆட்சிமொழிச் சட்டம் கொண்டுவரப்படும்.
தமிழகக் கோயில்களில் தமிழில் மட்டுமே வழிபாடு செய்யப்பட வேண்டும் என்பது சட்டமாக்கப்படும். சிற்றூர்ப்புறக் கோயில்களில் திருமுறைகள், (நாலாயிரத்) தெய்வத் திருப்பனுவல்கள் ஓதுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.
தமிழ் தெரியாதவர்கள் - பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள், தமிழை எளிதாகக் கற்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தனித்தமிழ்ப் பயிற்சி நடுவம்அமைக்கப்படும்.
தமிழ் இலக்கியக் கல்வி பள்ளி முதல் முனைவர் பட்டம் வரை ஊக்குவிக்கப்படும்.
மைசூரில் இருக்கும் பண்டையத் தமிழ்க்கல்வெட்டுகள் தமிழகத்திற்கு மீட்டுக் கொண்டுவரப்படும்.
தொடக்கக்கல்வி முதல் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற உயர்கல்வி வரை அனைத்தும் தமிழ்மொழியிலேயே கற்பிக்கப்படும்.
ஆங்கில மருத்துவப் படிப்புகள் அனைத்தும் தூய தமிழில் நடத்தப்படும். இதற்காகத் தமிழ்வழி மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு 20 விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடாக உயர்த்தப்படும்.
நன்னூல் அடிப்படையிலான மொழியறிவை மட்டும் வழங்காமல், தொல்காப்பியம் காட்டும் தமிழர்களின் வாழ்வியல், அறநெறிகளை உள்ளடக்கியதாகப் பாடத்திட்டங்கள் சீரமைக்கப்படும்.
5. (இரா.அன்புமணி தலைமை) பாட்டாளி மக்கள் கட்சி:
தமிழகத்தில் உள்ள மாநிலப் பாடத்திட்டம், மேல்நிலைக் கல்விக்கான நடுவண் கழகம் (சி.பி.எசு.இ) பாடத்திட்டம் உள்ள பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும்.
பள்ளிக்கல்வித் துறையில் தமிழ்வழிக் கல்வி முறைக்கு முன்னுரிமையும் முகன்மையும் அளிக்கப்படும். முதற்கட்டமாக 8-ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்கச் சட்டம் இயற்றப்படும்.
மருத்துவம், பொறியியல் படிப்புகள் தமிழ்வழியில் கற்பிக்கப்படும் அதற்கான பாடநூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வழங்கப்படும்.
அனைத்து வகையான துணை மருத்துவப் படிப்புகளும் (Paramedical courses) தமிழில் மட்டுமே கற்பிக்கப்படும்.
முனைவர்பட்டப் படிப்பு (Ph.D.) வரை தமிழையே பயிற்றுமொழியாக்குவதைத் தனது குறிக்கோளாககக் கொண்டு இக்கட்சி, பட்டப் படிப்பு வரை தமிழை ஒரு கட்டாயப் பாடமாக்க நடவடிக்கை எடுக்கும்.
உயர் நயன்மன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க நடுவண் அரசிடம் வலியுறுத்தப்படும்.
குழந்தைகளுக்ககுத் தூயதமிழில் பெயர் சூட்டும் பெற்றோர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தைத் தகை உயர்த்தித், “தமிழ் நடுவண் பல்கலைக் கழகமாக” மாற்ற நடுவண் அரசிடம் வலியுறுத்தப்படும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 8-ஆவது பட்டியலில் (அட்டவணையில்) உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக அறிவிக்க மற்ற மாநில முதல்வர்களுடன் இணைந்து பாடுபடும்.
நடுவணரசு நிறுவனங்களின் விளம்பரங்கள், செய்திகள் அந்தந்த மாநில மொழிகளில் (தமிழ்நாட்டில் தமிழில்) இருப்பதை உறுதி செய்ய அழுத்தம் கொடுக்கப்படும்.
தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
உலகம் முழுவதும் தமிழ் மொழியைப் பரப்பும் நோக்கில் “தமிழ் பரப்புரைக் கழகம்” என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும். வெளிநாடுகளில் இக்கழகத்தின் கிளைகள் தொடங்கப்பட்டு, அங்குள்ள வர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கப்படுவதுடன், தகுதியானவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மீப்பெரு “தமிழிசை அரங்கம்” அமைக்கப்படும். தமிழ் நாட்டுப்புற இசையை வளர்க்கும் வகையில் மாவட்டத் தலைநகரங்களில் “தமிழிசைப் பள்ளிகள்”தொடங்கப்படும்.
திரையிடப்படும் படங்களுக்குத் தனித்தமிழில் பெயர் வைத்தால், அவற்றுக்கு உள்ளாட்சி வரி விதிப்பிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்படும்.
6. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்:
தமிழ்மொழியை ஆட்சிமொழியாக அறிவித்து, தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்கள், வைப்பகங்கள் (வங்கிகள்) அனைத்தும் தமிழ்மொழியின் வழியாகச் செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
உச்ச நயன்மன்றக் கிளையைத் தமிழகத்தில் அமைத்திடவும், தமிழ்நாட்டில் உள்ள உயர் நயன்மன்றங்கள் உட்பட அனைத்து நயன் மன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்மொழியின் பெருமையையும் தொன்மையையும் உலகறியச் செய்யும் வகையில் உலகம் முழுக்க உள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் தமிழ்மொழிக்கான இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
7. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்:
தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வைப்பகங்களில் தமிழிலேயே அனைத்துப் படிவங்களும், பணிகளும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தல்.
“உயர் நயன்மன்றத்தில் தமிழ்” என்பது மதிமுக-வின் நீண்டகாலக் கோரிக்கை. 2026-ல் அமையும் புதிய ஆட்சியில் இதற்குத் தீர்வுகாண முன்னுரிமை அளிக்கப்படும்.
புதிய கல்விக் கொள்கை வழியாக நுழையும் மறைமுக இந்தித் திணிப்பைத் தமிழக மண்ணில் காலூன்ற விடமாட்டோம் என உறுதி பூண்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்தி, சமசுகிருதம் நுழைய இசைவளிக்கக் கூடாது என்பதில் கழகம் உறுதியான நிலைப்பாட்டைக்
கொண்டுள்ளது.
8. இந்திய பொதுவுடைமைக்கட்சி – மார்க்சியர் (CPI-M)
தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, நயன்மை (நீதி), ஆட்சிமுறை (நிர்வாகம்), கல்வி என அனைத்துத் துறைகளிலும் தமிழ் முழுமையாக ஆட்சி மொழியாக இருப்பதை உறுதி செய்யப்படும்.
ஒன்றிய அரசின் இந்தி, சமசுகிருதத் திணிப்பு முற்றிலுமாக எதிர்க்கப்படும்.
தமிழ் உள்ளிட்ட எட்டாவது பட்டியலில் (அட்டவணையில்) உள்ள அனைத்து மொழிகளையும் ஒன்றிய அலுவல் மொழியாக்க வலியுறுத்தப்படும். அதுவரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிப்பதை உறுதி செய்யப்படும்.
அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் சமமான நிதி ஒதுக்கீடு கோரப்படும்.
மருத்துவம், பொறியியல் உட்பட உயர்கல்வி வரை தாய்மொழியான தமிழில் பயின்றிட வழிவகை செய்யப்படும்.
தமிழகத்திலுள்ள அனைத்து ‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளிகளிலும் தமிழ் ஒரு மொழிப்பாடமாக இருப்பதை உறுதி செய்யவும், இதைக் கண்காணிக்க மாநில அரசுக்குச் சட்ட அடிப்படையில் உரிமை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நயனர் சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வற்புறுத்தப்படும்.
நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்பாளிகளின் நூல்களைப் பாடநூல் நிறுவனம் மூலம் அச்சிட்டு மலிவு விலையில் கிடைக்கச் செய்யப்படும்.
தமிழகத்தில் தமிழ்வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க வலியுறுத்தப்படும்.
மாநிலஅரசுப் பணிகளில் சேர தமிழ்மொழித் தேர்ச்சி கட்டாயமாக்கப் பட்டிருப்பதை வரவேற்பதுடன், அந்தந்த மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசுப் பணிகளிலும் அந்தந்த மாநில மொழித் தேர்ச்சியைக் கட்டாயமாக்க வலியுறுத்தப்படும்.
தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தை நடுவண் பல்கலைக் கழகங்களுக்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தி, அனைத்து நாட்டு அளவிலான மொழியியல் ஆய்வு மையமாக மாற்றப்படும்.
உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கைகள் அமைக்கப்படும்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு நூல்கள் எளிய விலையில் மக்கள் பதிப்பாகக் கொண்டு வரப்படும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய கலைச்சொற்களை உருவாக்க “தமிழ்க் கலைக்களஞ்சிய அறிஞர் குழு” அமைக்கப்படும்.
கோயில்களில் தமிழில் வழிபாடு (அருச்சனை) செய்வதைப் பரவலாக்கவும், குடமுழுக்கு உள்ளிட்ட வழிபாட்டு நிகழ்வுகளைத் தமிழில் நடத்தவும் குரல் கொடுக்கப்படும்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RTO) அலுவலகங்களில் வழங்கப்படும் படிவங்கள் அனைத்தும் தமிழிலும் இருப்பதை உறுதி செய்யப்படும்.
9. இந்திய தேசியப் பேராயக் கட்சி
மாநிலம் முழுவதும் தொடங்கப்படவுள்ள ஆறு மண்டலத் தனிச்சிறப்புத் தங்கிப் பயிலும் பள்ளிகளில் (Residential Schools of Excellence), வலுவான தமிழ் அடித்தளத்துடன் கூடிய ஆங்கில வழிக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகளில் இருமொழிக் கொள்கை (Tamil and English) கட்டாயம் பின்பற்றப்படும்.
அரசுப் பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியலோடு, மொழி மேம்பாட்டிற்காகவும் (Language development) செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கற்றல் கருவிகள் பயன்படுத்தப்படும்.
இத் தேர்தல் அறிக்கை உயர்தரக் கல்வியில் தமிழுக்கு வலுவான அடித்தளம் அமைப்பதையும், அதே நேரத்தில் மாணவர்களை உலகளாவிய அளவில் தயார்படுத்த ஆங்கில வழிக் கல்வியையும் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
10. இந்திய பொதுவுடைமைக்கட்சி:
மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ் வழிக் கல்வி கற்பிக்கப்படுவதை ஊக்குவித்தல் மற்றும் அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத் திட்டத்தை வலுப்படுத்துதல்.
மாநில அரசின் அனைத்து மட்டங்களிலும் தமிழ்மொழியே முதன்மையான ஆட்சிமொழியாக உறுதி செய்தல்.
தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வைப்பகங்கள், அஞ்சலகங்களில் தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துதல்.
ஒன்றிய அரசு மறைமுகமாக மேற்கொள்ளும் இந்தி மற்றும் சமசுகிருதத் திணிப்பைத் தடுத்தல்.
தமிழ்நாட்டின் தனித்தன்மையான குமுக-பண்பாட்டு விழுமியங்களை எதிரொளிக்கும் வகையில், பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று இக்கட்சி வலியுறுத்துகிறது,.
தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கு (தமிழ், ஆங்கிலம்) இக்கட்சி துணைதருகிறது.
மேற் குறித்தவற்றுள், வரிசை எண் ஒன்று முதல் ஒன்பதுவரை யிலுள்ள கட்சிகளின் அறிவிப்புகள் நேரடியாக அவர்கள் இத்தேர்தலுக்காக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளினின்றும் தொகுக்கப்பட்டவையாகும். வரிசை எண் பத்தாகவுள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் நேரடியான தேர்தல் அறிக்கை கிடைக்கவில்லை. அத் தேர்தல் அறிக்கை பற்றி வந்த செய்திகளிலிருந்து தொகுத்தவை தரப்பட்டுள்ளன.
இந்த ‘நற்றமிழ்’ இதழ் அச்சுக்குப் போகும்வரை பாரதிய சனதாக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை. இவ் விரண்டு கட்சிகளும் தேர்தல் அனிக்கை வெளியிட குழு அமைத்திருப்பதாகச் செய்திகள் வந்தன. அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இனிமேல் வந்தால், அவற்றில் நாம் தேடும் அறிவிப்புகள் நற்றமிழின் அடுத்த இதழில் இடம்பெறும்.
ஐயா இராமதாசு தலைமையிலான பா.ம.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையைத் தேடியும் கிடைக்கவில்லை. அதைப் பற்றிய நம்பகமான செய்திகளும் கிடைத்தில. இனி, தே.மு.தி.க., த.மா.கா. முதலிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவதாகத் தெரியவில்லை.
இத் தேர்தல் அறிக்கைகளில் தமிழ், தமிழ்வழிக்கல்வி குறித்த அரசியல்கட்சிகளின் நிலைப்பாடு, உறுதிமொழிகளைத் தமிழர் ஒப்பிட்டு அறிந்துகொள்வதற்காகவே ‘நற்றமிழ்’ இம்முயற்சியை மேற்கொண்டது. தமிழர் ஒப்போலையிடும்போது இச்செய்திகளும் அவர்கள் முடிவெடுக்க உதவுமெனக் கருதுகின்றோம்.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். – குறள்:508.
- த.ந.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக