திருக்குறளை அன்று! உனை நீயே இழிவு செய்தாய்!
பீகாரில் பிறந்த இர.நா.இரவி என்னும்
இரவீந்திரநாத்து நாராயண இரவி, நாகாலாந்து, மேகாலயா
ஆளுநராக இருந்தவர். அம் மாநிலங்களில் கெட்டபெயரெடுத்தவர். அவர் தமிழ்நாட்டுக்கு
மாற்றப்பட்டபோது கோகிமா செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற வழியணுப்பு நிகழ்ச்சியைச் செய்தியாளர்கள் அனைவரும்
புறக்கணித்தனர் என்று அறிகின்றோம்.
18-09-2021-இல்
தமிழ்நாட்டு ஆளுநராகப் பொறுப்பேற்றதி- லிருந்தே
இர.நா.இரவி தமிழுக்கும், தமிழர்க்கும்,
தமிழ்நாட்டிற்கும் எதிராகவே இயங்கிவந்தார். இவருடைய நடவடிக்கைகள் நாட்டின்
கூட்டாட்சிக் கட்டமைப்பின் அடிப்படைகளைத் தகர்க்கிறது என்றுகூறி உச்சநயன்மன்றம்
கண்டித்தது. தமிழ்நாட்டுச் சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டவரைவுகளை நிறுத்திக்
கிடப்பில் போட்டுத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஆனார். இவர்
செயற்பாடுகளை உச்சநயன்மன்றம் கண்டித்ததோடு எச்சரிக்கையும் செய்திருக்கின்றது.
இவரைக் கண்டித்ததைப் போன்று வேறு எந்த ஆளுநரையும் உச்சநயன்மன்றம் கண்டித்ததில்லை
என்கின்றனர்.
இர.நா.இரவி, ‘சநாதனம்’ மேலானது
என்றும், தமிழ்நாட்டைத்
தமிழகம் என்றுதான் கூறவேண்டுமென்றும், கால்டுவெல் பள்ளிப்படிப்பைப் பாதியில்
விட்டவர் என்றும், மக்களுக்குக் கேடு செய்யும் செம்பு ஆலையைத்
தமிழ்நாட்டில் திறக்கவேண்டுமென்றும், தமிழ்நாடு மட்டும் முன்னேறுவது சரியில்லை
என்றும், இந்தி,
சங்கதத் திணிப்பை வரவேற்றும் பேசிவந்ததைக் கண்டோம்.
பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் என்று கூறுவது திருக்குறள். பிறப்பிலேயே வேறுபாடு கற்பிப்பது ‘சநாதனம்’. இர.நா.இரவி, திருவள்ளுவரைப் ‘பாரத
சநாதனத் துறவி’ எனக்
கூறி இழிவுறுத்தினார். சி.யு.போப்பு திருக்குறளை அவமதித்துள்ளார் என்றும், திருக்குறளில்
இருக்குமறைச் சொற்கள் உள்ளனவென்றும் (இருக்குமறைக் கருத்துகளே குறளில் உள்ளதெனும்
பொருளில்) பலவாறு கூறி தமிழ்மக்களின், தமிழறிஞர்களின் கண்டனத்திற்குள்ளானார்.
“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச்
சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே
அபிமானித் தலைகின்ற உலகீர்!
அலைந்தலைந்து
வீணேநீர் அழிதல் அழகலவே!” – என
அனல் தெறிக்கப் பாடியவர் வள்ளலார்பெருமான்! அவரை, ஆதன்நேய
ஒருமைப்பாடு கூறிய வடலூர் இராமலிங்க வள்ளலை, ‘சநாதன
தருமத்தின் உச்சவிண்மீன்(நட்சத்திரம்)’ என்று கூறி இழிவுபடுத்தினார், இந்த
இரவி! ‘நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றக் கலைச்சரிதம்
எலாம் பிள்ளை விளையாட்டே’
- எனத் தெளியக் கூறிய இராமலிங்கப் பெருமகனை, ‘இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா
இந்திரசாலங் கடையா உரைப்பர்!’ - எனக்கூறி இடித்துரைத்த நம் பசிப்பிணி
மருத்துவரை ‘இந்து
மத சநாதனி’ என்றார்
இந்த இரவி.
சனவரி 2024-இல் திருவள்ளுவரைக் காவி உடையோடும், திருநீற்றுப்
பூச்சோடும் பூணூலோடும் மதஞ்சார்ந்தவராக்கி வரைந்த படத்தை வைத்திருந்ததினாலும், அழைப்பிதழில்
வெளியிட்டதினாலும் தமிழர்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார். திருக்குறளைப்
பற்றிய இரவியின் பேச்சுகள்
திருக்குறள் கூறும் மெய்ப்பொருளைத்
திசைதிருப்பும் முயற்சி என்று
பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அரசியல்காரர்கள், குமுகப்
பண்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், தமிழ்
இயக்கத் தலைவர்கள் முதலிய அனைவரும் ஆளுநரின் நடவடிக்கைகளைப் பொறுப்பற்றவை எனக்
குற்றம்சாட்டினர். அவர் செயல்கள், தமிழ்நாட்டின் மதநல்லிணக்க நிலையையும்
பண்பாட்டு மதிப்புகளையும் மறுக்கும் வகையில் இருப்பதாகவும், மதஉணர்வைத்
திணிப்பதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தமிழ்நாட்டரசு
உச்சநயன்மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 08-04-2025-இல் அளித்த
தீர்ப்பு, ஆளுநர்
மாநிலச் சட்டமன்றம் இயற்றிய சட்டங்களைத் தடுத்துவைத்தது "அரசியல்
சட்டத்திற்கு எதிரானது"
என்றும், "தவறானது" என்றும் கூறியது. ஆளுநர் பதவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதது என்பதால், அவர்
மாநிலஅரசின் செயல்பாடுகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்று உச்சநயன்மன்றம் வலியுறுத்தியது. ஆளுநர்க்குச் சட்ட வரைவுகளை
காலவரையின்றித் தடுத்துவைக்கும் அல்லது மறுக்கும் அதிகாரம் (pocket veto) இல்லை என்று தெளிவுபடுத்தியது. ஆளுநர் அரசியலமைப்பை மதித்து, மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்குத் துணையிருக்க வேண்டும் என்றும், அவர்
செயல்கள் அரசியல் நோக்கங்களால் தாக்கம்பெறக் கூடாது, மாறாக
அரசியலமைப்பின் உயர்ந்த குறிக்கோள்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும்
தெளிவுறுத்தியது.
இந்தத் தீர்ப்பு வந்தபின் கொஞ்சம் காலம்
அமைதியாயிருந்த இர. நா. இரவி, இப்போது, மறுபடியும்
தமிழுக்கும் தமிழர்க்கும் எதிரான செயல்பாட்டைத் தொடங்கிவிட்டார் எனத் தோன்றுகிறது.
13-7-2025-இல் சென்னையில் ஆளுநர்வளமனையில் ‘தேசிய
மருத்துவர்கள் நாள்’ விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் ‘எண்ணித்
துணிக’ என்ற
நிகழ்ச்சி இடம்பெற்றிருக்கிறது. அந் நிகழ்வில் ஆளுநர் இரவி, தேர்வு
செய்யப்பட்ட ஐம்பது மருத்துவர்களுக்கு விருதுகளும் நினைவுப்பரிசுகளும்
வழங்கியிருக்கிறார். அவரால் அளிக்கப்பட்ட நினைவுப்பரிசுக் கேடகத்தில் திருக்குறள்
என்று ஒன்று இவ்வாறு பொறிக்கப்பட்டிருந்தது:
“செருக்கறிந்து
சீர்மை பயக்கும் மருப்பொடு
மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு. – திருவள்ளுவர்
(குறள் 944)”.
திருவள்ளுவர் எழுதிய 1330 குறள் வெண்பாக்களில் 944-ஆம்
குறளிலோ வேறு எங்குமோ இப்படி ஒன்று
கிடையாது. திருக்குறளில் 123ஆம் பாடலாகிய,
“செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்” – என்னும் குறளைப் பார்த்துப் போலியாகப் புனையப்பட்ட ஒன்றையே கேடகத்தில் 944-ஆம் குறளென்று பொறித்துத் தந்துள்ளனர்.
வள்ளுவர் பெருமான் இயற்றிய 944-ஆம் எண்ணுக்குரிய குறள் -
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. -
என்ற குறளாகும். இங்ஙனம், திருக்குறளில்
இல்லாத ஒன்றைத் திருக்குறள் 944 என்று
குறித்த கேடகத்தை ஆளுநர் இரவி ஐம்பது மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசாகக்
கொடுத்திருக்கின்றார்.
உலக அறிஞர்கள் மிகச்சிறப்பாகப் போற்றுகின்ற, தமிழர்
உயிரெனக் கருதுகின்ற, ஈடெடுப்பற்ற உலகஇலக்கியமாகிய திருக்குறள்
இவ்வாறு அவமதிப்புக்குள்ளாக்கப்பட்டு, இழிவுறுத்தமுயன்ற நிகழ்ச்சியால் தமிழரின்
பண்பாட்டை, மரபு
இலக்கியத்தைத் தமிழ்நாட்டின் ஆளுநர் இரவி தலைமையேற்று நடத்திய விழா
அவமதித்திருக்கின்றது.
நினைவுக்கேடகம்
பெற்றுச்சென்ற மருத்துவர்களில் தமிழ் தெரிந்தார், திருக்குறளில்
இல்லாத ஒன்றைத் திருக்குறள் என்று ஆளுநர் தந்த கேடகத்தில் பொறித்திருப்பதை அறிந்து
வியப்பும் வருத்தமும்மிகச் செய்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இது
திருக்குறளுக்கும், வள்ளுவருக்கும் அவமானம் எனப் பலரும்
செய்தியறிந்து கொதிப்படைந்தனர். தமிழறிஞர்களும், இந்திய
ஒன்றிய ஆளுங்கட்சி தவிர்த்த பிற அரசியல் கட்சித்தலைவர்களும் தமிழ்மக்களும் ஆளுநர்
இரவிக்குத் தம் கண்டனத்தைத் தெரிவித்தவண்ணம் இருந்தனர். திருக்குறளுக்கு நேர்ந்த
நிலைக்கு ஆளுநர் பதவிவிலக வேண்டுமெனவும், மன்னிப்புக்கேட்க வேண்டுமெனவும், குரல்கள்
எழுந்தன.
முன்னாள் இந்திய ஒன்றிய நிதிஅமைச்சரான
ப.சிதம்பரம், “13-07-2025 அன்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில்
திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில் ஒரு போலிக் 'குறள்' பொறிக்கப்பட்டிருந்தது
என்பது தான் அதிர்ச்சிச் செய்தி. 'குறள் 944' என்று பொறிக்கப்பட்ட 'குறள்' திருக்குறள்
நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக்குறளின் எல்லாக்
குறள்களையும் படித்துப் பார்த்தால் அது போன்ற பாடலே நூலில் இல்லை என்று
தெரியவருகிறது.
குறள் 123-லிருந்து திருடி, திருத்தி, இல்லாத
பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தகுதி தாழ்ந்த செயல். காவி உடை
போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத
பாடலைக் 'குறள்' என்று
பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல். போலிச் சித்திரம், போலிக்
குறள்....இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்?” என்று
எழுதித் தம் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
கண்டனக்
குரல்கள் பெருகிச் செவிப்பறை தாக்கவே, விழிப்படைந்த ஆளுநர் அலுவலகம், இந்தத்
தவற்றைச் செய்தது யார் என்பது குறித்து உசாவல் நடத்தப்படும் என்றும் தவறாக எழுதி
யிருந்த 50 நினைவுப்பரிசுக் கேடகங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளனவென்றும், தவற்றைச்
சரி செய்து மூன்று நாள்களுக்குள் திரும்ப வழங்கப்படும் என்றும் கூறியது.
அது மட்டுமன்றி,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.சி.மோகன் பிரசாத்து வெளியிட்ட
அறிக்கையில், “மூத்த மருத்துவ வல்லுநர்களுக்குத் திருக்குறள் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் ஒரு பிழை ஏற்பட்டது. இந்தப் பிழைக்கு
நாங்கள்தான் முழுப்பொறுப்பு” என்று குறித்திருந்தார்.
இருந்தபோதிலும், ஆளுநர்
அலுவலகம் சார்பில் வழங்கப்படும் ஒரு நினைவுப்பரிசில் இத்தகைய ஒரு தவறு நிகழ்ந்தது, செயல்பாட்டுக்
குறைபாட்டையும், உரிய
சரிபார்ப்பு இல்லாததையும் சுட்டிக்காட்டுகிறது. எனவே, ஆளுநர்
அலுவலகத்தின் தலைவராக, இந்த நிகழ்வுக்கு முழுமையான பொறுப்பை ஏற்க
வேண்டியது ஆளுநரின் கடமை என்று பலரும் கருதுகின்றனர். இது ஒரு மாந்தத் தவறு
என்றாலும், திருக்குறள்
போன்ற ஒரு முதன்மைச் சிறப்பு வாய்ந்த இலக்கியத்திற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகப்
பார்க்கப்படுவதால், ஆளுநரின் பொறுப்பு குறித்து கேள்விகள்
எழுப்பப்படுகின்றன. இந்த நிகழ்ச்சி, ஆளுநர் இரவியின் முந்தைய நடவடிக்கைகளுடன்
இணைந்து, அவர்
மீதான கண்டனங்கள் குவிகின்றன.
எது, எப்படி
இருந்தாலும், திருவள்ளுவருக்கும்
திருக்குறளுக்கும் இழிவுநேர முயற்சிசெய்த இந்தச் செயலுக்கு யார் காரணமாக
இருந்தாலும் அந்த ஆளிடம் நற்றமிழ் கூறவிரும்புவது இதுதான்:
“திருக்குறளை அன்று! உனை நீயே இழிவு செய்தாய்!”
----------------------------------------------------------------------------------------------
புதுவை 'நற்றமிழ்' தி.ஆ.2056 மடங்கல் (ஆகத்து - 2025) இதழில் வந்தது.
-----------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக