திங்கள், 19 அக்டோபர், 2009

இன்னும் முடிந்த பாடில்லை!


இன்னும் முடிந்த பாடில்லை!


இன்னும் முடிந்த பாடில்லை
     இவர்கள் நடிப்பும் நாடகமும்!
சொன்னார் ஐயா யிரம்பேர்கள்
     சொந்த இடத்திற் கனுப்பியதாய்!
இன்னோர் அடைப்பிற் கனுப்பியதை
     இப்படிப் பொய்யாய்ச் சொல்கின்றார்!
முன்னும் பின்னும் முரணாக
     முழுப்பொய் சொல்லிக் குழப்புகிறார்!

ஐந்து நூறு கோடிதொகை
     அள்ளித் தரவே போகின்றார்!
மெய்யாய் முன்னர் கொடுத்ததொகை
     மீளாத் துனபத் தமிழர்தம்
பைதற் குறைக்க உதவியதா?
     படித்தோம் செய்தி யத்தொகையைக்
கையர் சிங்க ளப்படையர்
     களிக்க அவர்க்கே கொடுத்தாராம்!

எதுவும் இவர்க்குப் பொருட்டில்லை!
     யாரைக் குறித்தும் கவலையிலை!
பதுங்கிப் பலவும் செய்கின்றார்
     பச்சை யாய்ப்பொய் சொல்கின்றார்!
எதுசெய் துந்தன் குடும்பநலம்
     என்றும் ஓங்கி நிலைத்தலெனும்
அதுவே அவரின் குறிக்கோளாய்
     ஆன தறிவோம் தமிழவரே!

------------------------------------------

2 கருத்துகள்:

உமா சொன்னது…

//எதுசெய் துந்தன் குடும்பநலம்
என்றும் ஓங்கி நிலைத்தலெனும்
அதுவே அவரின் குறிக்கோளாய்
ஆன தறிவோம் தமிழவரே!//

உண்மை.
இதில் இவர் புகழ் பாடி சரித்திர பதிவு செய்ய ஒரு மாநாடு வேறு. தமிழ் மாநாடாக அது இருக்கப் போவதில்லை, தம்பட்ட மாநாடாகவே அமையும். இலங்கைத் தமிழரின் இன்னல் தீர்த்தவராய் அதில் பாராட்டப் படுவார்.

தமிழநம்பி சொன்னது…

உண்மை இதுவே!
சரியாகச் சொன்னீர்கள்.
நன்றி.