பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 அக்டோபர், 2008

நல்லெண்ணம் வளர்ப்போம்!




மாந்தர்க்குத் தகைமைமதிப் புயர்வுசிறப் பளிப்பதெலாம்
          மனத்தின் எண்ணம்;
வேந்தெனினும் நல்லெண்ணம் இலையெனிலோ வெறும்மாவே,
          விரைவில் வீழ்வான்!
சாந்துணையும் உயர்வூட்டும் சாலஉயர் எண்ணங்கள்
          சரிவே காணா
ஏந்துடைய நல்வாழ்வு என்றென்றும் ஏய்ந்திடநல்
          எண்ணம் வேண்டும்!


ஒருவரைநீ வாழ்த்தினையேல் உனைநீயே வாழ்த்தினையென்
          றுணர்ந்து கொள்க!
ஒருவர்க்குத் தீங்குசெய நினைத்தாயேல் தீங்கினைநீ
உனக்கே செய்தாய்!
ஒருவரைநீ சினந்தாயேல் ஊறுன்றன் மனத்திற்கும்
          உடற்கும் உண்டே!
ஒருக்காலும் மாறாத உறுதியிது எண்ணங்கள்
          உயர்த்தும்; வீழ்த்தும்!


தப்பாதே நல்லெண்ணம் வளர்க்கின்ற சூழ்நிலைகள்
          தமையே தேர்க!
எப்போதும் நற்றொடர்பும் ஏற்றமுறும் நல்லுறவும்
          இணைத்துக் கொள்க!
இப்போது மனத்தினிலே எழுச்சிகொளும் நல்லெண்ணம்
          இனிமை சேர்க்கும்!
முப்போதும் செயல்களெலாம் முழுச்செப்ப வெற்றியுடன்
          முடியும், உண்மை!


ஓய்வினிலும் பொழுதோட்டும் ஒருநேரந் தனிலதிலும்
          உன்னும் நெஞ்சில்
ஏய்தலுற நல்லெண்ணம் எழக்கண்டும் கேட்டுரைத்தும்
          இயைந்து நின்றால்
ஆய்வறிவர் முடிவிதுவே அடரெண்ணம் ஏந்துமனம்
          அளிக்கும் வெற்றி!
தோய்கின்ற தொழிலதிலும் தூயவுள நல்லெண்ணம்
         துணையாய்க் கொள்க!


எண்ணத்தை ஆக்குவதார்? உள்வாங்கு்ம் செய்திகளே!
          எனவே என்றும்
ஒண்ணலுறுஞ் செய்திகளே உள்வாங்கும் படிச்சூழல்
          ஓர்ந்து தேர்க!
எண்ணவராம் வள்ளுவரும் உயர்வையுள ஓதியதை
          எண்ணிப் பாரீர்!
திண்ணரெனப் பொறிவாயில் தேர்ந்தவிக்கச் சொன்னதையும்
          தெளிந்து கொள்க!


நல்லெண்ணம் மனங்கொள்க! நல்லுணர்வைப் போற்றிடுக!
          நன்மை நாடி
நல்லாரோ டுறவாடி நல்லொழுக்கம் பேணிடுக!
          நயந்தே நாளும்
வல்லாரும் மெல்லியரும் வலியவுள நல்லெண்ணம்
          வளர்த்து வாழ்க!
எல்லாரும் நல்லவராய் இயங்கிநலந் தோய்ந்திடவே
          இனிது வாழ்க!


-----------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

புரட்சித்துறவி இராமலிங்க அடிகளார்

என்னதான் சொன்னார்?  எதைத்தான் கேட்டோம்?

[அறுசீர் ஆசிரிய மண்டிலம் (நான்குகாய், ஒருமா, தேமா)]


திருவருட்பே ரொளிவள்ளல் இராமலிங்க அடிகளெனும் 
திருப்பே ராளர்
மருளுறுத்தும் தெய்வியத்தில் கண்டபல பொய்ம்மைகளை 
மறுத்துச் சொன்ன
ஒருதனிச்செஞ் சிறப்பார்ந்த தூய்துறவி துணிவார்ந்தே 
உண்மை கூறி
உருகிடுநல் அருளுணர்வால் உலகத்தார் உள்ளத்தில் 
உயர்ந்த பெம்மான்!

வழிவழியே வந்தபல துறவுருவர் மொழிமறுத்து 
வழக்கம் மாற்றி
இழிபழிசேர் சாதிமதப் பொய்யினிலே புகுத்தாமல் 
இருள்சேர்க் காமல்
கழிபழியாம் வேற்றுமைகள் களைந்துபொது உணர்வுடனே 
கடமை ஆற்ற
செழிபிழிவாய் ஒற்றுமைதோய் தூயதொரு நல்லவழி 
சிறப்பைச் சொன்னார்!

ஒருதெய்வம் ஒளியென்றார் உருவுமுதற் படியென்றார் 
உண்மை நேய
அருண்மிகுத்தே ஆருயிர்கட் கெல்லாம்நாம் அன்புசெய 
அறிவும் சொன்னார்!
திருக்கோயில் மேளஇசை பழந்தேங்காய் படையலெலாம் 
தேவை இல்லை,
திருத்தமிலா வேதாக மம்புராணங் குழப்பமெனத் 
தெரிந்து சொன்னார்!

கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போகவெனக் 
கடிந்து சொன்னார்!
தண்ணருள்கொண் டெவ்வுயிர்க்கும் பசிபோக்கல் வேண்டுமென்றார்! 
தன்னைக் கூட
விண்தெய்வம் எனமக்கள் சுற்றமனம் வெம்பிநொந்தார்! 
விழைவின் மீறி
வெண்மையினால் கொன்றுபலி யிடுங்கொடுமை கண்டஞ்சி 
விடவும் சொன்னார்!

தருக்கியசங் கரரடங்க தலைமைசொலத் தந்தைமொழி 
தமிழே என்றார்!
உருக்கமுடன் பெண்கல்வி உதவியவர் கைம்மைநிலை 
ஒழிப்பீ ரென்றார்!
ஒருமைப்பாட் டுணர்வுசெழித் தெவ்வுயிரும் தம்முயிராய் 
உணரச் சொன்னார்!
அருளில்லாக் கொடுங்கோலும் ஒழிகவருள் நயந்தோரே 
ஆள்க என்றார்!

இறைக்கொள்கை ஏற்றாருள் இவர்போலும் புரட்சிமனம் 
எவர்க்கும் இல்லை!
முறையான அவருரையில் எதையேற்றோம்? என்செய்தோம்? 
முழுதும் விட்டோம்!
கறைசாதி மதஞ்சுமந்தோம்! கனிவிழந்தோம்! பொதுமைகெடக் 
கரவு சேர்த்தோம்!
நிறைவள்ள லவருரைத்த உயிரொருமைப் பாட்டுணர்வை 
நினைத்த துண்டோ?

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

மற்றெவரே?


[கலித்துறை (மா கூவிளம் விளம் விளம் மா)] 

சோழ மன்னரின் கொடியினைப் பெயரெனச் சொல்லும் 
வேழ மாமத விலங்கினை ஒத்தநல் வீரர் 
வாழ வேண்டிய நாளினில் வலிந்துயிர் ஈவோர் 
ஈழ மாமறத் திண்ணிய ரலாதுமற் றெவரே?

புதன், 23 ஜூலை, 2008

போனால் விளையும் நலமே...!


(கட்டளைக் கலித்துறை) 

தானும் முயலா நிலையில் முயலுவார் தம்முனைப்புக்
கூனும் படிக்கே உரைத்தே எழுதிக் குழப்பிவரும் 
தேனாம் தமிழின் பெயர்சொலித் தின்று திரிபவர்கள் 
போனால் நலமெலாம் பூக்கும் தமிழுக்குப் பொய்யிலையே!

புதன், 2 ஜூலை, 2008

எல்லாரும் ஏமாறல் இல்!



இன்னிசைச் சிந்தியல் வெண்பா 

சொல்லுவ தொன்று செயலொன்றா? - தொல்லுலகில் 
பல்லபல ரேமாற்றல் பைங்கண்ணாய் ஒல்லுமே!
எல்லாரும் ஏமாறல் இல்.


வியாழன், 3 ஏப்ரல், 2008

தமிழர் என்று அழைப்பதா?


அறுசீர் மண்டிலம் 

(விளம் மா தேமா) 

ஓதலில் தமிழிங் கில்லை!
          உரைசெயல் தமிழில் இல்லை!
காதலில் அரங்கம் சென்றால்
          கனித்தமிழ் இசையும் இல்லை!
நோதலில் வழிப டற்கே
          நுழையினுந் தமிழே இல்லை!
ஆதலின் தமிழர் என்றே
          அழைப்பதும் சரியே இல்லை!

'பின்னே வரைபேர்' என்னென்றார்!


வஞ்சி (விருத்தம்) மண்டிலம் 

(மா - மா - தேமாங்காய்) 

முன்னே, நீங்கள் யார்?என்றார்;
சொன்னேன் பெயரை; 'இல்லை,உம்
பின்னே வரைபேர்' என்னென்றார்!
என்னே இழிவே! தூ!சாதி!

திங்கள், 24 மார்ச், 2008

எத்தனென்று இருப்பாயோ?


அறுசீர் மண்டிலம் 

(குறிலீற்று மா - கூவிளம் - விளம் - விளம் - விளம் - காய்)

***********************************************************************************************

சோழ னென்றுனைச் சொல்லினர் ஐயகோ!
          சொத்தையென் றிருந்தாயே!
வேழ மென்றனர்; வீரனென் றார்த்தனர்
          வெளிறனென் றிருந்தாயே!
காழ முற்றசெவ் வுணர்வின னென்றனர்
          கரவனென் றிருந்தாயே!
ஈழ வீழ்வினை எண்ணவும் பொறையிலேம்!
          எத்தனென் றிருப்பாயோ?

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2008

குறள் வெண்பா

ஈர்க்கும் தமிழ்பேசி ஏய்த்தெத்தி வாழ்ந்திடுவார்             
பார்க்குள் பதராவார் பார்.

பணங்காசின் பித்ததைப் பார்த்தறிந்த பின்னே
இணங்கியுளம் ஏற்றல் இலை.

மூவாற்று நீரும் முழுதும் இழப்பதோ
போவாய் உனக்கேன் பொறுப்பு.

மதவுணர்வு மக்களை மாய்க்கவோ? முற்றும்
மதமதுவும் வேண்டா மறு.

வீழார்; விடுதலைப்போர் வெல்வாரெஞ் செந்தமிழர்
ஈழத் திதுவுறுதி யே!.

சனி, 29 டிசம்பர், 2007

தாய்த்தமிழ் நாட்டினனே......!


சிங்களவன் கொன்றழிக்க சிங்கை மலேசியம்மற்
றெங்கும் இழிவின்னா எவ்வமுற இங்கேநீ
முங்கி முயங்கித் திரி.

செவ்வாய், 18 டிசம்பர், 2007

மறந்திட்டோம், மாத்தமிழும் வீழவிட்டோம்!

உண்ணுங்கால் உலவுங்கால் உறங்குங் காலும்                                                  உரைத்ததுவும் கேட்டதுவும் தமிழுக் கென்றும்                                                      

கண்ணுங்கால் கவலுங்கால் களிக்குங் காலும்                                                        கனித்தமிழைக் காத்திடலே கருத்தாய்க் கொண்டும்                                             

 எண்ணுங்கால் எழுதுங்கால் எல்லாக் காலும்                                                                     எழிற்றமிழின் உயர்வொன்றே இலக்காய் வாழ்ந்தோர்                                               

மண்ணுங்கால் மகிழுங்கால் மற்றெக் காலும்                                                               மறந்திட்டோம்! மாத்தமிழும் வீழ விட்டோம்!                                                                                  
 - த. ந. - 01-08-2005.