ஞாயிறு, 29 நவம்பர், 2015

பெண்!...

பெண்!...
(மும்மொழி வல்லார் உரைவேந்தர் ஒளவை.துரைசாமி விளக்குகிறார்)

க. மனு நூலில்!
      “ஒருவன் ஒழுக்கமும் நற்பண்பும் எத்துணைச் சிறிதும் இலனாயினும், பொல்லாத காமுகனாயினும் அவன் மனைவி அவனையே தெய்வமாகக் கருதி பணிபுரிய வேண்டும் என்றும்,
     மகளிர்க்கெனத் தனித்த முறையில் வேள்வியோ தவமோ விரதமோ இல்லையாகலான், கணவனுக்குச் செய்யும் தொண்டும் பணியுமே மகளிர்க்கு மேலுலக இன்ப வாழ்வு பெறுதற்கு வாயிலாம் என்றும்,
     மணமான ஒருத்தி தன் பெற்றோர் மனையில் இருந்துகொண்டு தன் கணவனுக்குப் பணிந்து அவன் விருப்பிற்கேற்ப நடவாளாயின், நாடாளும் வேந்தன், சான்றோர் கூடிய பேரவையில் அவளை நிறுத்தி, வேட்டை நாய்கள் கடித்துத் துன்புறுத்துமாறு அவளை அந்நாய்களுக்கு இரையாக்க வேண்டுமென்றும்,
     தன்கணவன் நற்குண நன்மாண்புகளை இழந்து பொல்லாக் குடியனாயும் நோயுற்றவனாயும் மாறியது காரணமாக அவனை வெறுத்துப் புறக்கணிப்பாளாயின், அவள் மூன்று திங்களுக்கு உயரிய ஆடை அணிகலனின்றி வேறோர் தனியிடத்தே ஒதுக்கப்பட வேண்டுமென்றும் மனுநூல் கூறுகிறது.

உ. யாகஞவல்கியும், அத்திரியும், வாசிட்ட நூலும், ஆங்கீரசரும் கூறுவதென்ன?
      கணவன் சொல்வழி யடங்கி யொடுங்கி ஒழுகுவதே மகளிர் கடன்; அதுவே அவர்கட்கு உயர்ந்த அறமாம்என யாகஞவல்கியர் இயம்புகின்றார்.
     கணவன் உயிரோடு இருக்கும்போதே தான் பேறு விரதம் மேற்கோடலும் வேள்வி செய்தலும் உடையளாயின், அவள் தன் கணவன் தலையை வெட்டினவளாகின்றாள் எனவும், புண்ணிய நீராடும் ஒருத்தி, தன் கணவனுடைய அனிகளையோ உடல் முழுதுமோ நீராட்டி அந்நீரையே உட்கொள்பவள் புத்தேளிர் வாழும் உலகில் பெருஞ்சிறப்புப் பெறுவாள்எனவும் அத்திரி என்பார் அறிவிக்கின்றார்.
.
     மறுமையில் கணவன் எய்தும் கதியினும் மேற்கதியை மனைவியாவாள் பெறுவதில்லை யாகலான், கணவனுக்கு அடங்கா தொழுகுபவள் இறந்தால் இன்ப உலகு எய்தாள்; எனவே, அவள் என்றும் தன் கணவன் மனம் நோக நடவாளாதல் வேண்டும்என்று வாசிட்ட நூல் வற்புறுத்துகின்றது.
     கணவற்கு அடங்காது ஒழுகுபவள் கையில் எவரும் உணவு தரப் பெறுதல் கூடாது; அவள் காமி எனக் கருதப்படுவாள்என ஆங்கீரசர் கடிகின்றார்.

{நன்றி! செம்மொழிப் புதையல்’ - ஒளவை துரைசாமி, மணிவாசகர் பதிப்பகம் 2006, பக்கம் 160, 161.}

பெண்!...(தொடர்ச்சி)
(உரைவேந்தர் ஒளவை துரைசாமியார் விளக்கம்)
பெண்மக்கட்குரிய நலம் கூறப்புக்க தொல்காப்பியர், ”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலன” என்று தெரிவிக்கின்றார்.
கல்வி கேள்விகளால் உண்டாகும் திண்ணிய அறிவுஒழுக்கம் கற்புஎன்று தமிழ்ச் சான்றோரால் குறிக்கப்படும்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற வேந்தனது நலம் கூறப்புகுந்த சான்றோர், ‘உலகம் தோன்றிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை’ என்றும்,வேதங்களைக் குறிக்கக் கருதிய சான்றோர் அவற்றை ‘எழுதாக் கற்பு’ என்றும் குறிப்பதே இப் பொருண்மைக்கு ஏற்ற சான்றாகும்.
மகளிர்க்கு கல்வியறிவின் திணிநிலை ஒழுக்கத்தைக் கற்பென வாளா ஓதாமல், ‘செயிர்தீர் காட்சிக் கற்பு’ என்று தொல்காப்பியர் சிறப்பித்துக் கூறியருளுகின்றார். கற்பென்னும் திண்மையுண்டாவது மகளிர்க்குரிய தகுதிகளுள் பெருமை வாய்ந்தது என்று பண்டைத் தமிழர் பணித்துள்ளனர்.
மகளிர் மகப்பெறுதல் என்பது இயற்கையறம்; அதனால் உடற்கூறு வேறுபட்டதன்றி, ஆணுக்கு அடிமையாய்த் தனக்கென உரிமையும் செயலுமற் றிருத்தற்கன்று என்பது தமிழ் மரபு. ஆண்டவன் படைத்தளித்த இவ்வுலகில் ஆணைப்போலப் பெண்ணும் வாழப் பிறந்தமையின், ஆணுக்கு உரிமைதந்து பெண் அடிமையாய்க் கிடந்து மடிய வேண்டுமென்பது அறமாகாது.
ஆண்மக்களைப் போலாது பெண்மகள் ஒருத்தி மனையின்கண் செறிப்புண்டிருந்த போது உரிமை வேட்கையால் உந்தப் பெற்றமையின்,
“விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இன்செறிந் திருத்தல்
அறனும் அன்று ஆக்கமும் தேய்ம்”
என்று கூறுவது இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வாழ்க்கைத் துணையாவன. வாழ்க்கை இருபாலார்க்கும் பொது.; இருவரும் கூடியே அதனைச்செய்தல் இயற்கையாதலால் இருவர்க்கிடையே வேற்றுமை கண்டு புகுத்துவது, இயற்கை வாழ்க்கையை இடையூற்றுக் குள்ளாக்கும் என்பது கண்டே பண்டைச் சான்றோர் மனைவியை வாழ்க்கைத் துணை என்று வழங்கின்ர். அவளது துணையின் சிறப்புணர்ந்து தேற்கொண்ட கணவனைக் கொண்டான் என்று குறித்தனர்.
{நன்றி! ‘செம்மொழிப் புதையல்’ - ஒளவை துரைசாமி, மணிவாசகர் பதிப்பகம் 2006, பக்கம் 163, 164.}
-----------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 6 நவம்பர், 2015

அரணமுறுவலார் !


அரணமுறுவல்!

         இன்று (6.11.2015) காலை அன்பிற்கினிய முனைவர் தோழர் ந.அரணமுறுவல் மீளாத்துயில் ஆழ்ந்த செய்தியை ஐயா செந்தலை கவுதமனார் முகநூல் குறிப்பின் வழி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்  பெரு வருத்தத்திற் கிடையே பழைய நினைவுகள் நிழலாடின.

           1960ஆம் ஆண்டுகளின் இறுதியில், 1970ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், தேவநேயச்சித்திரன், பொதியவெற்பன், கு.அண்டிரன், அரணமுறுவல் ஆகியோர் அடங்கிய  அக்காலத் தென்மொழி அன்பர் குழு தமிழம் என்னும் தலைப்பில் தனி இதழ் தொடங்க முயன்றதும் அம்முயற்சி செயலாகும் முன்னரே ஐயா செம்பியன் பன்னீர்ச்செலவம் தமிழம் இதழைத் தொடங்கி நடத்தியதும் நினைவுக்கு வருகின்றது.

        1974ஆம் ஆண்டளவில் நான் திருக்கோவலூரில் பணியில் இருந்தபோது, சந்தைப்பேட்டையில் நான் குடியிருந்த வீட்டிற்கு வந்து பல செய்திகளைப் பேசிக்கொண்டிருந்ததும், போகும்போது நான் வைத்திருந்த நூல்கள் பாவாணரின் வடமொழி வரலாறு, தமிழர் மதம் மற்றும் இரண்டு நூல்களை வாங்கிச் சென்றதும் நினைவில் உள்ளன.

         கடலூரில், தென்மொழி அலுவலக/அக-த்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா நடத்தி வைத்த அரணமுறுவலின் திருமண நிகழ்வும் அதையொட்டி நடந்த சிறு விருந்தும் மறக்க முடியாதவை.

         பின்னர், அவர் சென்னை சென்றதும் தொடர்ந்து படித்ததும் முனைவரானதும் பல்வேறு தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டதும் அவரை அவ்வப்போது பார்க்கும்போது அவரே கூறவும் அவருடைய நெருங்கிய உறவினர் கு.அண்டிரன் ஐயா வழியும் அறிந்த செய்திகள்.

         அவர் தமிழியக்கம் இதழ் தொடங்கி நடத்திய போது, அவருக்கு இதழ் தொடர்பாக எழுதிய மடலும், அவர் உலகத் தமிழ்க் கழகத்தை மீண்டும் செயற்பட வைக்க எடுத்த பெருமுயற்சியும், அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டதும் முகன்மையாகக் குறிப்பிடவேண்டிய செய்திகளாகும்.

                    “முதன்மொழி இதழைச் சிறப்பாகக் கொண்டுவந்த வினைப்பாடும் பாராட்டப்பட வேண்டியதாகும். தமிழ் எழுத்து மாற்ற முயற்சியை எதிர்த்து வீழ்த்த நடந்த பெரும் பணியில் உ.த.க. சார்பில் அவர் பங்கு குறிப்பிடத் தக்கதாகும். குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை காப்புக்காக அவரும் மா.செ.தமிழ்மணியும் பிறரும் எடுத்த முயற்சிகள நினைவுக்கு வருகின்றன.

         கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு நிலைகளில் தமிழ், தமிழர் நலன் காக்கும் பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அவர் மறைவை, இன்று ஈடு செய்ய இயலாப் பேரிழப்பாகவே உணர்கின்றேன். அந்தத் தென்மொழி அன்பர்க்கு, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாசறையில் உருவெடுத்த தமிழ்ப்படை மறவருக்கு, அஞ்சா நெஞ்சுடன் களப்பணியாற்றிய வல்லவர்க்கு வீரவணக்கம் செலுத்துவோம்!
  
வீரவணக்கம்! வீரவணக்கம்! அரணமுறுவலுக்கு வீரவணக்கம்!
------------------------------------------------------------------------

செவ்வாய், 3 நவம்பர், 2015

குறள். 1107

   தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. குறள். 1107

      இது, காமத்துப்பாலில், புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில் ஏழாம் குறளாகும். இக்குறளின் பொருள் : அழகும் ஒளிறும் மாநிறமும் பெற்ற அருமை நிறைந்த காதலியொடு கொள்ளும் புணர்ச்சித் தழுவல்,  தமக்குச் சொந்தமான உரிமை இல்லத்தில் இருந்துகொண்டு,  தம்முடைய சொந்த முயற்சியால் முறையாக ஈட்டிய வருவாயைக்கொண்டு சமைத்து உருவாக்கப்பட்ட உணவைத்,  தாமும் விருந்தினருமாக,  நிறைவாரப் பகுத்துஉண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் இணையானது என்பதாகும்.      

      ஈண்டுத் திருவள்ளுவப் பெருந்தகை வேறுசில இடங்களில் கூறியிருக்கும் கீழ்க்காணும் கருத்துக்களும் ஒப்புநோக்கத்தக்கன:                

முயற்சிசெய்து ஈட்டியபொருள் முழுவதும் தகுதியுடையார்க்கு உதவி செய்வதற்கே ஆகும்  (கு.212)
முறையான முயற்சியால் கிடைத்தது தெளிந்த நீர் போன்ற கூழே ஆயினும் அதனை உண்பதைவிட இனிமையானது வேறில்லை – (கு.1065)       எப்போதும் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீயநோய் அணுகாது. – (கு.227)                                       கிடைத்த உணவை இயன்றவரைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டுப் பலவகை உயிர்களையும் பாதுகாத்தல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையான அறமாகும். – (கு.322) 
           
      இவற்றுடன், ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎன்னும் புறநானூற்று வரியும் (பு.17),  மணிமேகலை வரியும் (மணி.1255) ஒப்புநோக்கத் தக்கனவாம். மாந்தர் வாழ்வில் மிகஉயர்ந்த இனிமையை, இன்பநிலையைப் பகுத்துண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட,  மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் எனக் குறள் கூறுகிறது.
இக்குறளைப் படித்தறியும்போது, ஈடிணையற்ற நாகரிகம் பண்பாடு கொண்ட சான்றாண்மையராக முன்னோர் இருந்திருக்கின்றனர் என்ற எண்ணத்தால் நெஞ்சம் பெருமையால் இருமாந்து பூரிக்கும். ஆனால், அதேபோழ்தில், இன்றுள்ள தமிழரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆற்றொணாக் கவலைகள் நெஞ்சை அழுத்தும். இவை அடிக்கடி நிகழும்.


பொருத்தமான எதுகையும், முதலடியில் பொழிப்பு மோனையும் இரண்டாமடியில் இணை மோனையும் அமைந்து இனிய ஒழுகிசைச் செப்பலோசையுடன் குறள் படிக்க இன்பம் தருகிறது.                               

புதன், 28 அக்டோபர், 2015

புதுவை நல்லன்பர் ‘திருநாவு’ என்னும் திருநாவுக்கரசு ஐயா

புதுவை நல்லன்பர் திருநாவு என்னும் திருநாவுக்கரசு ஐயா நினைவுநாள் அக்தோபர் 27ஆம் நாள் ஆகும். அவர் மறைவின் போது  நடைபெற்ற இரங்கல் நிகழ்வில் படித்த பா இது:
          -----------------
     
கேட்டா ரதிரக் கிளையர் செயலறக்
கோட்டியாய் மற்றவர் குழுமிக் குமுற
தனித்தமிழ்க் கழகத் தனிச்சிறப் பாளர்
நனிநற் பண்பின் இனிய ரொப்பிலா
திருநா விறந்த செய்தி வந்ததே!
உருகினர் ஏங்கினர் உற்றார் தவித்தனர்!
ஆற்றல் சான்றவர் அருளுள் ளத்தர்
ஆற்றிடு அருவினை அறிவியா துதவுநர்!
இன்னோர்க் கென்னாது எல்லார்க்கு முதவிய
செந்நோக் கினரச் சிறப்புறு செம்மல்!
இன்னின் னார்க்கே இன்னலென் றறிந்தே
இன்முகத் தோடவர் எழுவா ருதவ!
எந்நே ரத்திலும் எவர்க்கும் உதவ
முந்தி முனையும் முனைப்பினர் உண்மை!
நட்பினர் குடும்ப நல்லது கெட்டதில்
நுட்பமாய் அறிந்தே ஒட்பத் துதவுநர்! 
எதிர்பா ராத இடுக்கண் எழுகையில்
மதிநுட் போடிவர் மாற்றிய கதைபல!
எவருரைப் பாரோ, இவரறிந் திடுவார்
கவலறுத் திடவே கடியவந் திடுவார்!
செந்தமிழ் நிகழ்வில் முந்தி நின்றிவர்
வந்து கனிந்து வருகவென் றழைக்கும்
ஒப்பருங் காட்சி உளத்தில் நிலைக்கும்!
செப்பருஞ் சிறப்பின் சீருக் குரியவர்!
ஆசாகு அய்யா தேசிகன் உயிரை
கூசாது நேர்ச்சி கொள்ளை கொண்டதே!
இழப்பு, இழப்பு, இழப்புபே ரிழப்பே!
உழப்புற லகற்றியவ் வுயர்ந்தோர்
சிறப்புறு செயல்கள் சிந்தையில் கொள்வமே!


----------------------------------------------

திங்கள், 26 அக்டோபர், 2015

தமிழர் நிலை!


    தமிழர் நிலை!
மூத்த தமிழே முதற்றாய் மொழியாம்
           
முடிவைச் சொல்கின்றார்!
ஏத்தும் ஆய்வர் இந்நா கரிகம்
           
எவர்க்கும் முதலென்றார்!
காத்தல் பேணல் கருதாத் தமிழர்
           
கடைகெட் டழிகின்றார்!
ஊத்தை உணர்வால் உறுதன் னலத்தால்
           
உலகில் இழிகின்றார்!

செவ்வாய், 20 அக்டோபர், 2015

காடு!

காடு!

தாய்மொழியில் பேசினால் தண்டனை பள்ளியிலே!
தாய்தந்தை பேரும் தமிழில்லை! போய்வணங்கச்
சொற்றமிழ்க் கில்லையிடம்! சொல்லுகநா டில்லையிது
கற்றைக்கு முட்டைக்குங் காடு.

அழகார் தமிழில் அயன்மொழிச் சொற்கள்
புழங்கக் கலந்தெழுதல் புன்மை! வழக்கமென
நற்றமிழ்க்(கு) ஊறுறுத்த நாடி எழுதுலகு
கற்றைக்கு முட்டைக்குங் காடு.

(கல் தைக்கும் முள் தைக்கும் காடு > கற்றைக்கு முட்டைக்குங் காடு)

புதுவை தெளிதமிழ் இதழில் வெளிவந்தவை.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

ம.பொ.சி.

எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்!

செந்தமிழ்நாட் டெல்லைபறி போகாமல் காத்தயிவர்
சிறைக்குச் சென்று
நந்தமிழின் சிலம்பாய்ந்தார்; நாவன்மை எழுத்தாற்றல்
நனிவாய்ந் தாரே!
இந்தியநா டுந்தமிழும் எனக்கிரண்டு கண்களென
இயம்பி வந்தார்!
பந்தமுறும் பெருமீசை பார்த்திருப்பீர் ம.பொ.சி.
படத்தில், தாளில்!

கடற்கரைசீர் வாய்ந்தநகர் கவின்சென்னை எளியகுடி
களிக்கத்தோன்றி
கடமையென மூவாண்டுக் கல்வியுடன் நெசவுசெயக்
கடுகிச் சென்றார்!
அடக்கமுறா வறுமையெதிர்த் தச்சகத்தில் கோப்பாளர்
ஆனார் பின்னர்த்
திடஞ்சான்ற மனத்தோடே தேசவிடு தலைக்குழைக்கத்
தேர்ந்து சென்றார்!

தேர்ந்தகட்சிப் பேராயம் சேர்ந்துப்புப் போர்மற்றும்
திமிர்கொள் ஆட்சிச்
சார்பறுக்கும் சட்டமறுப் பியக்கத்தும் பங்கேற்றார்;
சற்றும் சோரா(து)
ஆர்வமுற சிறைப்பட்டார்ஆறுமுறை; எழுநூற்றுக்
கதிக நாட்கள்!
சீர்மையுற சிறையடைப்பில் சிலம்புபடித் தாய்வுசெய்தார்!
சிறப்ப றிந்தார்!

தமிழ்தமிழர் உணர்விலவர் தமிழரசுக் கழகத்தைத்
தனியே தோற்றி
இமிழிந்தி யாமொழியால் இன்னின்ன மாநிலமென்
றியற்றுங் காலைத்
தமிழர்க்குக் குடியரசு தனியமைக்க வேண்டுமென்றார்
தனிய ராக!
துமித்துபெறக் கருதவிலை! தொடர்ந்திந்தி யாவிலொரு
தொகுதி என்றே!

செப்பமுற மாற்றுகபேர்! சிறப்புறவே தமிழ்நாடாய்ச்
செய்வீர் இன்னே!
ஒப்புறவே கல்விமொழி ஒண்டமிழே எனவாக்கி
உயர்வைச் செய்வீர்!
தப்பறவே ஆட்சிமொழி தமிழென்றே ஆக்கிடுவீர்!
தகைமை காப்பீர்!
இப்படியாய்க் குரல்கொடுத்தே இவற்றைவலி யுறுத்திவந்தார்
எழுதி பேசி!  

இவர்பணியில் முன்னிற்கும் எல்லைகளைக் காத்தபணி
இணையி லாதாய்!
இவறலுற ஆந்திரத்தர் எழிற்சென்னை நகர்கேட்டு
ஏழ்ந்த போது
சுவரெனவே நின்றுசிலர் துணையோடே இவர்காத்தார்!
சொல்வ துண்மை!
திவளலற இவரியங்கித் திருவேங்க டம்மீட்கச்
சிறையுஞ் சென்றார்!

பெரும்பிழையாய்த் திராவிடத்தைப் பேசிடுவோர் சறுக்கிவிட
பெரிய மீசை
திருத்தணியை மீட்டெடுத்தார்! சித்தூர்புத் தூர்பகுதி
சிலவும் மீட்டார்!
திருப்பதியாம் வேங்கடமும் செந்தமிழ்சேர் பகுதிகளும்
சென்ற போதும்
ஒருதனியர் பெருமுயல்வில் ஓரளவு வடவெல்லை
ஓம்பக் கண்டோம்!

பொற்புறுசீர் குமரியொடு தேவிகுளம் பீர்மேடு
பொலிசெங் கோட்டை
தெற்கெல்லை காத்திடும்போர் திடத்தலைவர் நேசமணி
திறத்தில் மூண்டு
பெற்றியிலார் சிறையிலிட இவரறிந்து விரைந்தங்கே
பீடிற் சென்றே
சற்றும்போ ராட்டத்தைச் சரியாதே மேல்நடத்தச்
சார்பு தந்தார்!

நூற்றுக்கும் மேற்பட்ட நூலெழுதித் தந்துள்ளார்
நுட்ப மாக!
ஏற்றமுற வரலாற்றை எடுத்தியம்பி பலவிளக்கம்
எடுப்பாய்ச் சொல்வார்!
சாற்றியபல் கூற்றிருக்கத் திராவிடத்தார் சார்ந்ததிவர்  
சறுக்கல் ஆகும்!
ஆற்றியநற் பணிகளையும் அரியசெயல் செய்த்தையும்
அகத்தில் கொள்வோம்!


(14-8-2011 ஞாயிறு அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற விழுப்புரம் தமிழ்ச்சங்க ஒன்பதாம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் பாடிய அறுசீர் மண்டிலப் பாக்கள்)

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

‘தாழி’யின் அழகிய அரியதொரு நாள்காட்டி.


 தாழியின் அழகிய அரியதொரு நாள்காட்டி.

     'அன்னை அருள்' வெளியீடான தாழி ஆய்வு நடுவத் திட்டத்தின் நாள்காட்டி கிடைக்கப் பெற்றேன். அதைப்பற்றி எழுத விரும்பியிருந்தும் பல காரணங்களால் காலந்தாழ்ந்தது. அந் நாட்காட்டியைப் பற்றிக் காலந்தாழ்ந்தாலும் எழுதவேண்டும் என்ற அழுத்தமான எண்ணம் இருந்தது.
     நாள்காட்டி 17 அகலமும் 24.5 அகலமுமாகப் பெரிய அளவில் எடுப்பாகத் தோன்றுகிறது. நாள்காட்டியின் முதல் தாளின் முதற் பக்கத்தில் ஆரியர் நாவலந்தீவு வருகையையும் பரவலையும் காட்டும் நாட்டுப்படம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், மொழியறிஞர் கிலபர்ட்டு சிலேட்டரின் தமிழ், தமிழர் தொடர்பான கருத்துக்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.
     கீழே, சிந்துசமவெளி பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியுமான செய்திகள் தரப்பட்டுள்ளன. மேலும், தமிழக ஊர்ப்பெயர்கள் சமற்கிருதம் ஆக்கப்பட்டதைக் குறிப்பிடுவதோடு, தமிழர் தம் அடையாளங்களைக் காக்க வேண்டுமென்ற வலியுறுத்தம் இடம்பெறுகின்றது. தெய்வம் குறித்த சித்தர் சிவ்வாக்கியர், பாரதியார், பாவேந்தர், திருமூலர் பாடல் வரிகள் தரப்பட்டுள்ளன.
     முதல் தாளின் இரண்டாம் பக்கத்தில், தென்னக வடவகக் கோயில்களின் அமைப்புகள் வரைபடத்துடனும் கலைச் சொற்களுடனும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. தஞ்சைப் பெருவுடையார் கோயில் அமைப்பும் கலைச்சொற்களுடன் காட்டப்பட்டுள்ளது. நாட்காட்டியின் பெயரே கோயில்களின் தாய்நிலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. செய்திகள் தூய தமிழில் எழுதப்பட்டுள்ளன.
     அடுத்து, நாள்காட்டியின் 12 மாதங்களிலும் 12 அழகிய தமிழகக் கோயில்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. அவை, தஞ்சைப் பெருவுடையார் கோயில், மதுரைக் கூடலழகர் கோயில், காஞ்சி ஓராடையுடையார் கோயில், திருச்சி அரங்கநம்பி கோயில், தில்லை நடவரசர் கோயில், திருவைகுண்டம் திருமாற்பெருமாள் கோயில், மாமல்லை கடற்கரைக் கோயில், உத்திரமேரூர் திருவழகுடை வரந்தருபெருமாள் கோயில், நெல்லை காந்திமதி-நெல்லையப்பர் கோயில், திருவில்லிப்புத்தூர் ஆண்டாள்-அழகர் கோயில், மதுரை அங்கயற்கண்ணி-அழகுடையார் கோயில், காஞ்சி வரந்தருங் கோப்பெருமாள் கோயில் ஆகியனவாகும்.
     ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் சுருக்கக் குறிப்பும், சிறப்பும் தரப்பட்டுள்ளன. கோயிற் படங்கள் மிக அழகாக அருமையாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நாள்காட்டியில், தமிழ் பிரெஞ்சு ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மாத கிழமைப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
     அன்னை அருள் மறுதோன்றி அச்சகமும் தாழி ஆய்வு நடுவமும் மிகவும் சிறந்த நாள்காட்டியைத் தந்துள்ளனர். அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

                                                            இறப்பு அறிவிப்பு


     விழுப்புரம் அ.தெ. இரகோத்தமன் மலர்க்கொடி இணையரின் இளைய மகள், புதுச்சேரி நீடராசப்பர் தெரு வேதானந்தன் என்னும் கண்ணன் மனைவி அன்பு பாசம் அருளே உருவாகிய திருவாட்டி சுடர் பிரான்சு ‘LE VERT DE MAISONS‘-இல் 3-11-2014 அன்று காலமானார் என்பதை ஆழந்த வருத்தக் கலக்கத்துடன் தெரிவிக்கின்றோம்.

கையறு நிலையில் கலங்கும் உள்ளங்கள்:
     விழுப்புரம் அ.தெ.இரகோத்தமன் மலர்க்கொடி,                                        நெய்வேலி எழில் குமரன் கா.குமரன்,                                              விழுப்புரம் இர.கதிரவன் வனிதா                                                    மற்றுமுள்ள உறவினர்கள்

ஞாயிறு, 8 ஜூன், 2014

வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரின் தமிழலங்காரம்

வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரின் தமிழலங்காரம்
              (விழுப்புரம் இலக்கியக்கூடலில் நூல் அறிமுக உரை)

1.1. இயல்பு
பிறப்பு  என்பது ஒரு நேர்ச்சி விபத்து - போன்றது ‘Birth is an accident” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எவரும் தாம் விரும்பிய நாட்டில், விருப்பமான பகுதியில், விருப்பமான மக்கள் கூட்டத்தில் பிறக்கின்ற வாயப்பைப் பெற்றிருக்கவில்லை. பிறந்தபின், தாய்நாட்டின் மீதும் தாய்மொழியின் மீதும் பற்றுள்ளவராக இருப்பதென்பது இயல்பானதே!
       காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பது போல அவரவருக்கும் அவரவருடைய இனம், அவரவர்களின் மொழி -உயர்ந்தது; சிறந்தது; பெருமை மிக்கது தான்! இருந்தபோதிலும், தமிழர்கள் வரலாறு தொடர்பாகவும், தமிழின் வரலாறு தொடர்பாகவும் கூறப்பட்டு வருகின்ற ஆய்வறிஞர்களின் கருத்துக்கள் வியப்பும் பெருமிதமும் அளிக்கக்கூடியனவாக இருக்கின்றன.

1.2.. குமரிக்கண்டம்  
இப்போதிருக்கும் இந்திய தேசப்படத்தில் கன்னியாக்குமரி முனைக்குக் கீழே நாம் பார்க்கும் அரபிக்கடல், வங்காள விரிகுடாக்கடல், இந்துமாக்கடல் ஆகிய மூன்றுகடல்களின் கூடலாகக் காணப்படும் கடல் பகுதி ஒருகாலத்தில் பெரும் நிலப்பரப்பாக இருந்தது என்பது ஆய்வாளர் கருத்தாகும்.
அதாவது இலட்சத் தீவுகள், அந்தமான் நக்காவரம் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா சேர்ந்த இப்போதிருக்கும் கன்னியாகுமரியின் தென்பகுதி முழு நிலப்பகுதியாக இருந்தது;
அப்பெரு நிலப்பரப்பைத் தமிழர், குமரிக்கண்டம் என்றனர். குமரியாறு, பஃறுளியாறு, குமரிமலை போன்றவை அப்பகுதியில் இருந்தன.
உயிரியல் ஆய்வாளர்கள் அதை இலெமூரியாக் கண்டம் என்கின்றனர். நிலத்தியல் ஆய்வாளர்களோ அதனைக் கோண்டுவானாக் கண்டம் என்கிறார்கள்.

1.3. மேற்குலக அறிஞர் உறுதிப்படுத்தல்
ஆப்பிரிக்காவையும் உள்ளடக்கிய அந்தக் குமரிக்கண்ட பெருநிலப் பகுதியிலேயே முதன் முதலாக மக்களினம் தோன்றியது என்பது ஆய்வாளர் கருத்தாக இருந்து வருகின்றது.
இதனை உறுதி செய்த மேற்குலக அறிஞர்கள் பலராவர். அவர்களுள், Sir John Evans, Prof. Hacckal, Sir Walter Ralegh, Sir T.W.Holderness, Dr.Macclean., Dr.heezer, Sir John Simmons போன்றோர் குறிப்பிடத் தக்கவராவர்.
சோவியத் அறிஞர் அலெக்சாந்தர் கோந்தரதோவ் எழுதிய “The Riddles of Three Oceans” என்ற நூல், தமிழிலே இந்துமாக்கடல் மர்மங்கள் என்ற பெயரில் பார்த்தசாரதி என்பாரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. NCBH  வெளியீடு, அந்நூல் குமரிக்கண்ட உண்மையை உறுதி செய்கின்றது.

1.4. இலக்கியச் சான்றுகள்
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என வரும் சிலப்பதிகார வரிகளும், நல்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே என்ற புறநானூற்று வரியும் இன்னும் சில இலக்கியச் சான்றுகளும் குமரிக்கண்ட உண்மையை மெய்ப்பிக்கின்றது.
(உறையூரை அடைந்த கோவலன் கண்ணகி கவுந்தியென்னும் மூவரும் அன்று அங்கு தங்கி வைகறையிற் புறப்பட்டுத் தென்றிசை நோக்கிச் செல்கின்றனர். ஒரு இளமரக்காவுட் புக்கனர். அப்போது பாண்டியனின் பல புகழையும் கூறி வாழ்த்திக்கொண்டு அவ்விடத்திருந்த மறையோன்...
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கை இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி!  .... என்றும் பாடுகின்றான்!

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் புறநானூறு 9ஆம் பாடலில்,

எம்கோ வாழிய குடுமி தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின், நெடியோன்
நல்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!  ... என்றும் பாடுகின்றார்)

இக் குமரிக்கண்டக் கருத்தை மொழிநூலறிஞர் மாகறல் கார்த்தி கேயனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பன்மொழிப்புலவர் கா.அப்பாத் துரையார், அறிஞர் கா.சுப்பிரமணியனார், அறிஞர் பூரணலிங்கனார் போன்ற தமிழ்நாட்டறிஞரும் ஏற்று உறுதிப் படுத்துகின்றனர்.

1.5. முதன்மொழி
ஓரிரு அறிஞர்கள் இவ் உண்மையை ஏற்கத் தயங்கினும், இக்கால் இலக்கியச் சான்றுகள், சொல்லாய்வுகள் போன்ற அகச்சான்றுகளும், கல்வெட்டு, தொன்மையான ஓவியங்கள், அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பு போலும் தொல்லியல் சான்றுகள் உள்ளிட்ட அறிவியற் கூறுகளாகிய புறச்சான்றுகளும் இதை உறுதிப் படுத்தி வருகின்றன. பேராசிரியர் மருதநாயகம், நாளுக்கு நாள், உலக ஆய்வறிஞர்களின் முடிவுகள் குமரிக்கண்ட உண்மையை வலியுறுத்தி வருவதை எடுத்துக் காட்டுகின்றார்.
கடற்கோள்களால் அழிந்த அந்தக் குமரிக்கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் முதன்முதலாகத் தோன்றிய மாந்தர் பேசிய முதல்மொழியே தமிழ்மொழி என்பது வரலாற்று அறிஞரும் மொழியியல் வல்லாரும் கூறும் கருத்தாகும்
பி.டி.சீனுவாச ஐயங்காரின் இந்தியக் கற்காலம் “The stone age of India” என்ற ஆங்கில நூலும், தமிழர் வரலாறு “The History of Tamils” என்ற ஆங்கில நூலும் இதை உறுதிப்படுத்துகின்றன.

1.6. தொல்காப்பியம்
இவையிருக்க, இப்போது நமக்குக் கிடைத்துள்ள பண்டைத்தமிழ் நூல்களுள் பழமையானது, காலத்தால் முந்தியது தொல்காப்பியம் என்னும் இலக்கண இலக்கிய நூலாகும். இதன் காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது என்று பாவாணரும், அறிஞர் இலக்குவனாரும் இன்னும் பலரும் தீர்மானமாகக் கூறினர். இக்கால் செம்மொழித் தமிழாய்வு நிறுவன ஆய்வாளரும் அதனை உறுதி செய்துள்ளனர்.
ஆகவே, 2700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியத்தில், அறிஞர் இன்னவாறு கூறுவர், இவ்வாறு கருதுவர் என்று விளக்கும் முறையில், என்ப, மொழிப, கூறுப, சொல்லினர், மொழியினர், என்மனார், என்றிசின், என்றிசினோரே, என்றவாறு பல இடங்களில் கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு: தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்தில், தொல்காப்பியம், எழுத்தெனப்படுப, அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப என்று கூறுகிறது. இவ்வாறு, தொல்காப்பியத்தில் 287 இடங்கள் சுட்டப் படுகின்றன.   

1.7. முன்னிருந்த நூல்கள்
இவை ஓர் உண்மையைச் சொல்கின்றன. தொல்காப்பியத்திற்கு முன்னராகவே பல்வேறு இலக்கியங்களும் கலை நூல்களும் தமிழில் இருந்திருக்கின்றன என்ற உண்மையைத் தான் அவை கூறாமல் கூறுகின்றன; உணர்த்துகின்றன.

1.8. மரபு
இன்னொன்று! தொல்பழங் காலந் தொட்டுத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும், நெறிகள் வழுவாது ஒழுகும் முறைமையை, மரபு என்று அறிஞர்கள் கூறுவார்கள்.
நெறிகள் என்றால், கொள்ளுவன கொண்டு, தவிர்ப்பன தவிர்த்தல், காப்பன காத்து கடிவன கடிதல் அறிவார்ந்த பெரியோர் விதித்தன செய்தலும் விலக்கியன தவிர்த்தலும் ஆகும். இப்படிப்பட்ட நெறிகளைத் தொன்று தொட்டுத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதே மரபு என்று சொல்லப்படுகின்றது.  
தொல்காப்பியத்தில் மரபு என்ற சொல்லாட்சி 86 இடங்களில் காணப்படுகின்றது. தொல்காப்பிய உட்பிரிவான இயல்கள் சிலவற்றின் பெயர்களே நூன்மரபு, மொழிமரபு, தொகைமரபு, விளிமரபு, மரபியல் என்றுள்ளன.
தொல்காப்பியத்தில் சுட்டப்படும் பல்வேறு மரபு நிலைகள், கடைப்பிடித்துவரும் பல்வேறு முறைமைகளை மட்டும் சுட்டவில்லை. தொன்று தொட்டுத்தொடர்ந்து கடைப்பிடித்து வருதல் என்பதால் வேறொன்றையும் தொல்காப்பியம் நமக்கு மறைமுகமாகவும் தெளிவாகவும் தெரிவிக்கின்றது! என்ன அது? எண்ணிப் பாருங்கள்!
       தொல்காப்பியத்திற்கும் முன்னரே ஒரு பெரும் நீண்ட அறிவுக்காலம்  இருந்திருப்பதையும் அல்லவா அவை கூறாமல் கூறுகின்றன?
தமிழ்மொழி, பலதுறை நூல்கள் நிறைந்த மொழியாய் நுட்பச் சிறப்போடும் வளச் செழுமையோடும் இருந்திருக்கிறது என்பதைத் தெரிவிக்கின்றன. அந்த நூல்களெல்லாம் என்னவாயின?

1.9. அழிந்தவகை
பாவாணரும் பரிதிமாற் கலைஞரும் விடைகூறுகின்றனர். இடைக்காலத் தமிழரின் பேதைமையால், பாழான மண்ணிற்கும் படையான சிதலுக்கும், படியாதார் நெருப்பிற்கும், பதினெட்டாம் பெருக்கிற்கும், பற்பல பூச்சிக்கும், பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான கலைநூல்கள் எத்துணை எத்துணையோ எனப் பாவாணர் பதைபதைப்பார். 
பரிதிமாற் கலைஞரென்னும் சூரிய நாராயண சாத்திரியார், தமிழ்மொழியின் வரலாறு (மொழிநூல்) என்ற பெயரிலான அவருடைய நூலில் கூறுவதைக்கேளுங்கள்: தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர் என்பார்.
அவரே, தமிழர்களின் மறைநூல் மந்திரநூல் போன்ற அரிய நூல்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு, மூல நூல்களை அழித்துவிட்டு வடமொழியனின்றே அவ்வரிய கருத்துக்கள் வந்தன போலக் காட்டினர் பிராம்மணர் என்று எழுதியுள்ளார். இவற்றிற்குள் இதற்குமேல் இப்போது போகவேண்டாம்!

1.10. அறிவியல் சார்ந்த மெய்ப்பிப்பு
மேற் கூறிய செய்திகளால், தமிழ்மொழியின் முன்மையையும் தொன்மையையும் அறியமுடிகிறது
       தொல்காப்பிய காலத்திற்கும் முன்னரே ஓர் உயர்ந்த நிலையில் அறிவார்ந்த செழுமைமிக்க வளஞ்சான்ற மொழியாகத் தமிழ்மொழி இருந்ததைப் பல்வேறு இலக்கியச் சான்றுகளாலும், அறிஞர் ஆய்வுரைகளாலும், தொல்லியல் ஆய்வு முடிவுகளாலும் அறிவியல் அடிப்படையில் அறிகிறோம்.

2.1. தமிழலங்காரம்
சரி. இவற்றிற்கும் தமிழலங்காரத்திற்கும் தொடர்புண்டா? உண்டு!  
தமிழலங்காரமும், தமிழின் உயர்வையும் முன்மையையும் தொன்மையையும் பெருமையையும் சிறப்புகளையும் நுட்பங்களையும் பலவாறாகப் போற்றிக் கூறுகின்றது.
வடமொழியால், வடமொழியாளரால்  தமிழ்மொழிக்கு ஏற்பட்ட, ஏற்படுகின்ற தாக்கத்தையும் கேட்டையும் கூறுகின்றது. வடமொழியைவிடத் தமிழ் எங்ஙனம் மேம்பட்டதாகும் என எடுத்துக் கூறுகின்றது.
ஆனால், அங்ஙனம் மேன்மையைக் கூற வேறுபட்ட கோணங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதே வேறுபாடாகும்.

2.2. தமிழலங்காரம் பிறந்த கதை
தமிழலங்காரம் சிறிய நூல். இதில் காப்புச் செய்யுளும் நூறு கட்டளைக் கலித்துறைப் பாடல்களும் உள்ளன. இந்நூலை இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாராவார்.
இவர், தேவார மூவர் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தியார் - போல பல ஊர்களுக்கும் சென்று, ஆங்காங்கு கோயில்கொண்ட சிவனைப் போற்றிப் பதிகம் பாடி வந்தார். அவ்வாறான நிலையில் ஒருமுறை வேலூரில் வந்து தங்கி அவ்வூர் உறையும் இறைவனைப் போற்றிப் பதிகமும், திருப்புகழும் பாடியிருந்தார்.
அக்கால், அவரைத்தேடி வந்த ஒரு பனவன் பனவன் என்றால் பார்ப்பனன், பிராமணன் என்று பொருள் அவரிடம் வடமொழியே உயர்ந்தது; வலிமை பெற்றது எனத் தருக்குரை செய்ய, இருவரும் பல்வேறு நிலைகளில் சொற்போர் புரிந்தும் முடிவுபெறாத நிலையில், சீட்டெழுதிப் போட்டு முருகப் பெருமானிடம் தீர்ப்பறிய முடிவு செய்தனர்.
அம்முடிவின் படியே முருகனின் திருஉருவின் முன் சீட்டெழுதிப் போட்டு ஒரு சிறு பெண்குழந்தையை விட்டு ஒரு சீட்டை எடுக்கச் சொல்லினர். அக்குழந்தை எடுத்த சீட்டில், தமிழே உயர்ச்சி என்று இருந்தது. இந் நிகழ்ச்சியே, தாம் தமிழலங்காரம் பாடக் காரணமாக இருந்தது என்று குருபர தத்துவம் என்ற தன்வரலாற்று நூலில் நூலாசிரியர் குறித்துள்ளார்.

2.3. நூலாசிரியர்
தமிழலங்காரம் இயற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரின் தந்தை, திருநெல்வேலி நெற்கட்டும் செவ்வல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில் நாயகம் ஆவார். தாய் பேச்சிமுத்து அம்மையார். இவர் 1839 -இல் பிறந்தவர். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். 

2.4. பாப் பொழியும் ஆற்றல்
       எட்டு அகவையிலேயே சுரண்டை என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள பூமிகாத்தாள் எனும் பெண் தெய்வத்தின் பெயரில் இவர் முதன்முதலாக ஒரு வெண்பா பாடினார்.
பதின்மூன்றாம் அகவையிலேயே வண்ணம் என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததார். இவ்வாறு இளமையிலேயே பாடல் பொழியும் ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராமனார் என்பார், இவருக்கு "ஓயா மாரி" என்ற பட்டப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
(வண்ணப் பா: முத்தைத்திரு பத்தித்திருநகை
              அத்திக்கிரு சக்திச்சரவண..................................   என தும்)                                    
2.5. பெயர்க் காரணம்
சரபம் எனபது ஒரு புனைவான, கற்பனையான எட்டுக்கால்களை உடைய பெரும் பறவை. இது பனிமலையில் வாழ்வதாகவும், சீயம், அரிமா என்னும் விலங்கரசான சிங்கத்தையும் தாக்கக் கூடியதென்றும் கூறுவர்.
இப் புனைவுப் பறவையைத் தமிழில் சிம்புள் என்பர். சிம்புட் பறவையே, சிறகை விரி, எழு! என்பது பாவேந்தரின் புகழ் பெற்ற பாடல் வரி!.  
       வண்ணம் என்றால் சந்தம். வண்ணப்பா இயற்றும் ஆற்றலில், அந்தப் பறவைக்கு இருந்த உடல் ஆற்றலை ஒத்த ஆற்றல் அவருக் கிருந்ததால் வண்ணச்சரபம் என்ற அடைமொழியுடன் அவர் அழைக்கப்பட்டார். வெண்பா எழுதுவதில் திறம் மிக்கவரை வெண்பாப் புலி என்று சொல்வார்கள். அதைப் போன்றே அடிகளார் வண்ணச்சரபம் என்றழைக்கப்பட்டார்.  (12 வண்ணங்கள் பாடியுள்ளார்)
(சரபம்: A large fabnulous bird with 8 legs regarded as the foe of the lion and as inhibiting  the snowy mountains. – வின்சுலோ அகராதி)
      உச்சி முதல் உள்ளங்கால் வரை திருநீறு பூசிக்கொண்டு இடுப்பில் நீர்ச்சீலை என்னும் கோவணமும், கையில் தண்டமும் வைத்துக்கொண் டிருந்ததால் தண்டபாணி அடிகள் என்றும்,  முருகனை மனம் உருகிப் பாடியதால், "முருகதாசர்" என்றும் அழைக்கப்பட்டார். அருணகிரியாரின் அடியொற்றித் திருப்புகழ் பல படைத்ததால்  திருப்புகழ்  அடிகள் என்றும் அழைக்கப்பட்டார்.                  

2.6. இயற்றிய நூல்கள்                                                                                                             திருவரங்கத் திருவாயிரம், சடகோபர் சதகத்தந்தாதி, பெருமாளந்தாதி, அறுசமயக் கடவுள்கட்கு ஆயிரம் ஆயிரமாக ஆறாயிரம் பாடல்கள்புலவர் புராணம்,  திருமாவாத்தூர் தலபுராணம், அருணகிரிநாதர் புராணம், முசுகுந்த நாடகம், மறுநெறித் திருநூல், நான்குநூல், கௌமார முறைமை, தியானாநுபூதி ஆகிய நூல்களையும்,
       சத்திய வாகசம் என்னும் உரைநடை நூலையும்,
       அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய இலக்கண நூல்களையும்,
       தமிழைப் போற்றி வணங்கும் முத்தமிழ்ப் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழலங்காரம் என்னும் நூல்களையும் இயற்றியுள்ளார்.
       ஆங்கிலேயரை எதிர்த்து ஆங்கிலியர் அந்தாதி என்ற நூலையும்  இன்னும் பலநூல்களையும் அடிகள் இயற்றியுள்ளார்.                                                     

2.7. தமிழிசைத் தொண்டர்                                                                                                                                          தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாத்திரி முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்துப் பாடிவந்த காலத்தில், வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் தமிழில் வண்ணம் (சந்தப்பாட்டு) பாடித் தமிழிசைக்கு உயிரூட்டினார். 
                சந்த வகைக்கு இலக்கணம் வகுத்து வண்ணத்தியல்புஎன்ற இலக்கண நூலை முதன்முதலாக இயற்றிவர் இவரே!. இவர் பாடிய தமிழிசைப் பாடல்கள்  ஒரு நூறாயிரத்திற்கும் ஓர் இலக்கத்திற்கும் மேற்பட்டவையாம்.                                                 

2.8. அடிகளும் ஆமாத்தூரும்                                               
                பல ஊர்களுக்கும் சென்று பதிகமும் திருப்புகழும் பாடிவந்த அடிகள், தம் இறுதிக் காலத்தில் நம் விழுப்புரம் நகருக்கு அருகிலுள்ள திருஆமாத்தூர் வந்துத் தங்கிக் கெளமார மடத்தை நிறுவித் தமிழ்ப்பணி யாற்றி யிருக்கிறார்.
அடிகளின் பெயரர் முருகதாசர் எழுதிய உரையுடன், தமிழலங்காரம் 1964-இல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், 34 ஆண்டுகள் கடந்தபின், நம் விழுப்புரம் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுநர் தலைவர் மருத்துவர் பாவலர் பாலதண்டாயுதம் ஐயா, தமிழலங்காரம் நூலை உரையுடன் 34 ஆண்டுகளுக்குப் பிறகு 1998-இல் மீண்டும் அச்சேற்றி வெளியிட்டார்.
                                                                  3.1. தமிழலங்காரம் தமிழின் உயர்வை எவ்வாறு விளக்குகிறது?           
தமிழலங்காரம், பல்வேறு தெய்வியக் கதைகள், கடவுளரின் வாழ்க்கை நிகழ்வுகள், நம்பிக்கைகள், இலக்கண இலக்கிய சிறப்புகள் துணையுடன் தமிழின் உயர்வை, பெருமைகளை, சிறப்புகளை, நுட்பங்களை விளக்கிக் கூறுகிறது.

3.2. தமிழலங்கார விளக்கங்களில் யார்யார் தொடர்பான செய்திகள் இடம் பெறுகின்றன?
       சிவபெருமான், திருமால், பிரமன், இந்திரன், பிள்ளையார், முருகன், கலைமகள், திருமகள், சூரியர், சந்திரர் போன்ற கடவுளர் தொடர்பான பல செய்திகளும்
விருத்திராசூரன், சூரபன்மன். இராவணன் தொடர்பான செய்திகளும்,
சனகன், வசிட்டர், திருமலை ராயன், கணிவண்ணன், ஆண்டாள், பரவை நாச்சியார், தொடர்பான செய்திகளும்,
திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், கச்சியப்ப சிவாசாரியார், ஒட்டக்கூத்தர், அம்பிகாபதி, இரட்டைப் புலவர், அகத்தியர், நக்கீரர், காளமேகம், முத்துவயிரப் புலவர், கந்தசாமிப் புலவர், வீரபாண்டியப் புலவர், சீநிவாசப் பெலவர், ஆறுமுகப் புலவர், பாணினி, தக்கன் தொடர்பான செய்திகளும்,
பகழிக் கூத்தர், பட்டினத்தடிகள், பத்திரகிரியார், பராசரமுனிவர், திருஞான சம்பந்தர், சுந்தர மூர்த்தியார், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர், குகை நமச்சிவாயர், அபிராமிபட்டர், வியாசர், சேரமான் பெருமாள் நாயனார், திருப்பாணாழ்வார், வீரபாகு, திருமங்கை யாழ்வார், இன்னும் சிலர் தொடர்பான செய்திகளும் தமிழின் உயர்வைக் கூறுவதற்கு வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரால் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

3.3. தமிழலங்காரம் சுட்டும் நிகழ்வுகள், நம்பிக்கைகளில் சில
       சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது,
       இறைவனின் திருமணத்திற்கு அனைவரும் இமயத்தில் குவிந்ததால் இமயம் தாழ, அதைச் சரிசெய்வதற்குச் சிவன் அகத்தியரைப் பொதிகை மலைக்குச் செல்லுமாறு பணித்தது,
       சுந்தரர், வறண்ட குளத்தில் நீர் வரவழைத்து, அதில் முதலை தோன்றச் செய்து, மூன்றாண்டுக்கு முன் அது விழுங்கிய பார்ப்பனச் சிறுவனை உரிய வளர்ச்சியுடன் உமிழச் செய்தது,
       திருஞான சம்பந்தருக்கு உமை ஞானப்பால் ஊட்டியது,  
       திருஞானசம்பந்தர், மயிலாப்பூர் குளக்கரையில் சுடப்பட்ட எலும்பிலிருந்து பெண்வரப் பாடியது,
       திருநாவுக்கரசர் கருங்கல்லைத் தெப்பமாகக் கொண்டு கரையேறச் செய்தது, கொல்லவந்த பட்டத்து யானையைப் பின்வாங்கச் செய்த்து, நீற்றறயைக் குளிரவைத்தது, இறந்த அப்பூதியார் மகனை உயிர்பெற்று எழச் செய்த்து,     
       தருமி பாண்டியனிடம் பொற்கிழி பெறச் செய்தது,
ஒளவையார், வெட்டப் பட்ட பலாமரம் தழைக்கப் பாடியது.
       சுந்தரர்க்காகப் பரவைநாச்சியிடம் சிவன் தூது சென்றது,
       அபிராம பட்டரைக் காப்பாற்றக் காருவா நாளில் அமாவாசையில் முழுநிலா தொன்றச்செய்தது - போன்ற பலப்பல கதைகளும், நிகழ்வுகளும் நம்பிக்கைகளும் தமிழின் உயர்வைக் கூற வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரால் தமிழலங்காரத்தில் பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கின்றன.

4.1. தமிழலங்காரப் பாடல்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
முதலில் காப்புச் செய்யுள்:
தித்திக்கும் நூறு தமிழலங்காரப் பாடல்களை நன்றாகத் தாம் பாடுவதற்குப் பிள்ளையார் துணையிருக்க வேண்டுமென வேண்டுகிறார் வண்ணச்சரபம் அடிகளார். அக்காப்புச் செய்யுள் இதுதான்:
இமிழ லங்கார மதநீர் அருவிகள் எப்பொழுதுதும்
உமிழ லங்காரத் தலைக்கண நாதனை உன்னுகின்றேன்
சிமி ழலங்கார முலையார் மொழியினும் தித்திப்பதாம்
தமிழ லங்காரக் கவிநூறும் நன்கு தருவதற்கே! 
மங்கையரின் இன்மொழியினும் தித்திப்பது தமிழ்மொழி என்கிறார். இந்தக் கருத்து, மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத்தமிழுக்கு ஈடில்லை என்று சொல்வேன் என்ற பாவேந்தரின் கூற்றை நினைவூட்டுகிறது அல்லவா?

4.2. ஆரிய வேள்வியில் உயிர்க் கொலை
பிரம்மன், தக்கன் போன்ற வடமொழியாளர், ஆரிய வேத்ததில் ஆ என்னும் பசு, ஆடு, குதிரை முதலியவற்றைக் கொன்று செய்யும் வேள்வியைப் பாராட்டிக் கூறுவர்.
ஆனால், திருவள்ளுவர் ஒளவையார் முதலானவர் கூறிய தமிழ்மறையோ கொலை எவ்விடத்தும் கூடாது என்று வலியுறுத்துவதால் உயர்ந்தமொழி தமிழே என்று வண்ணச்சரபம் ஐயா வலியுறுத்துகிறார். பாடல் இதோ:                                              
நான்முகன் தக்கன் முதலோர் அநேகர் நவின்றவட
நூன்முழு தும்கொலை வேள்வியைப் போற்றும் நுடங்கரிய
வேன்முனைக் கண்ஒளவை வள்ளுவன் ஆதியர் விண்டதென்னூல்
ஊன்முழுப் பாவம் எனவே அடிக்கடி ஓதிடுமே!            - 4
(மனோன்மணீயம் சுந்தரனாரும், மணிமேகலை ஆபுத்திரனும் நினைவுக்கு வருகின்றனர் அன்றோ?)

4.3 தென்றலும் வாடையும்
       தண்மையுடன் தமிழின் இனிமை சேர்ந்துவரும் தென்றல் காற்று உடலுக்கு நலத்தையும் மனத்திற்கு மகிழ்வையும் தரும்.
       கடினமான வடமொழித் தன்மை தாங்கிவரும் வாடைக்காற்று உடலுக்கு அயர்வும் கேடும் தரும்.
       இவற்றை ஆராய்ந்து மருத்துவநூல் வல்லாரே கூறுவர் என்று தமிழின் உயர்வைக் கூறுகிறார்.                                                               பாடல் இது:
தண்டமிழ் வாசம் கலந்து குலாவும் தனித்தென்றலும்
ஒண்டகை ஆரியச் சீர்தோயும் வாடையும் ஊனிலொன்றி
மண்டலத் தோர்க்குத் தரும்பயன் தன்னை மதித்தறிந்து
கண்ட வயித்தியர் வாய்மேன்மை தாழ்மையைக் காட்டிடுமே!      -10                       வாடைக் காற்று தமிழர்க் காகாது என்ற வரி நினைவுக்கு வருகின்றது.

4.4. இறைவன் தன்கையால் எழுதிய திருவாசகம்
       பராசர முனிவரின் மகனான வியாசர் கூறிய வடமொழியின் ஐந்தாம் மறையாகிய பாரதத்தை மேருமலையின் மீது எழுதும்படி பிள்ளையாரைப் பணித்தார் இறைவன்.
       ஆனால், அன்புருவான திருவாதவூரடிகள் பாடிய தென்மொழித் திருவாசகத்தை தம் கையாலேயே எழுதினார்.
       அதை உமாதேவி மகிழும்படிப் பொன்னம்பலத்தில் பாதுகாப்பாகவும் வைத்தார் என்று தென்மொழித் தமிழுக்கு இறைவன் அளித்த உயர்வை அடிகள் கூறுகிறார்.
பாடல் இதோ:
வண்மைப் பராசரன் மகன்சொல்ஐந் தாமறை வாசகத்தை
அண்மைப் புதல்வன் கரத்தால் வரைவித்த அண்ணலருள்
உண்மைத் தமிழ்த்திரு வாசகப் பாடல் ஒருங்கெழுதிப்
பெண்மைக் குவகை தருமரங் கூடுறப் பேணினனே!       - 17  
      
4.5. எகர ஒகரம் இல்லாத மொழி
       சீர்காழி அகன்ற பொய்கைக் கரையில் அழுத சிறுவரான திருஞான சம்பந்தருக்கு உமையவள் ஊட்டிய ஞானப்பாலின் இனிமை, அடியவர் அஞ்ஞான இருள் நீக்கும் தேவாரத் தமிழாக வெளிவந்ததே யல்லாமல்,
எ, ஒ போன்ற எழுத்துக்கள் இல்லாத வடமொழி மூலமாக வெளிவரவில்லை. எனவே, தமிழ் ஞானமொழி எனகிறார் அடிகள்.
அந்தப் பாடல் இதுதான்:
சீகாழி யூர்த்தடம் பொய்கைக் கரையிற் சிறிதழுத
வாகாரும் சேய்க்குமை நல்கிய பாலின் மதுரமன்பர்
சோகாந்த காரம் கெடத்தமி ழோடு துலங்கிற்றன்றி
ஏகாரத் தின்குறில் இல்லாக் கலையொ டிலங்கிற்றன்றே!         - 19
       தேவாரம் எகர ஒகரமில்லா வடமொழியிலா பிறந்தது? தமிழில்தானே பிறந்தது என்கிறார் வண்ணச்சரப அடிகளார்.

4.6. திரிந்த தமிழ்ச்சொல்
       புகல் என்னும் தமிழ்ச் சொல்லைப் போல் என்று இந்தியில் கூறுகின்றனர். இவ்வாறு பல தமிழ்ச் சொற்களை இந்துத்தானியில் திரித்து வழங்குகின்றனர்.
       உலகில் எம்மொழியின் சொற்களும், தமிழ்ச்சொல்லும் வடசொல்லும் கலந்தே அமைகின்றன.
எனவே, தமிழே உலக மொழிகளின் தாய் என்கின்றார்.
பாடல் இது:
புகல்எனும் சொல்லினைப் போல்எனச் சொல்லுதல் போற்பலசொல்
இகல்இந்துத் தானியும் செந்தமி ழிற்கொண் டியம்புகின்றார்
அகல்நிலத் துள்ள கலையாவும் தென்சொல் லதுவுமெதிர்
திகழ்வட சொல்லும் கலந்தே விளங்கும் தெரிந்திடினே!           - 22
        
4.7. ஒண்தமிழ் ஆற்றல்
       திருநாவுக்கரசரைக் கருங்கல்லிற் பிணித்துக் கடலில் வீசினர். அந்தக் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறச் செய்தது தமிழ்ப்பாடல்.
கொல்ல வந்த பட்டத்து யானையை அஞ்சி அடங்கச் செய்தது தமிழ்ப் பா. சுண்ணாம்புக் காளவாயாகிய நீற்றறையைக் குளிரவைத்தது அப்பரின் தமிழ்ப் பாட்டு.  
அப்பருக்கு உணவு பரிமாற இலை கொண்டுவரச் சென்ற போது பாம்பு கடித்து இறந்த அப்பூதியடிகளின் தலைமகனை உயிர்பெற்றெழச் செய்தது அப்பரின் தமிழ்ப் பதிகம்.
ஒண்டமிழின் ஆற்றல் என்னே! என்று பாடுகிறார்.
கடல்நீரில் கல்மிதக்கும் படிச்செய்து களிறுறுக்கும்
அடல்யாவும் குன்ற அடக்கிவெந் நீற்றறை அம்புயப்பூந்
தடமாகக் காட்டி அரவால் இறந்த தனயனையும்
உடலோ டெழச்செய்த தன்றோ ஒருவன்சொல் ஒண்டமிழே!              - 29             

4.8. பேய்க்கரும்பு இனிக்கும் பேறு தரும் தமிழ்
       திருவாரூரில் காமத்தால் இறந்த ஒருவனைப் பிழைக்கச் செய்தது பட்டினத்தார் தமிழ்ப் பா, இறந்த தாயின் உடலை நீரூறும் வாழை மரங்கொண்டு எரியூட்டியது அவர் தமிழ்ப் பாடல், காஞ்சியில் இகழ்ந்து பேசிய ஒருவனது பெருவயிறு பிளக்கச் செய்ததும் அவர் தமிழ்ப்பாவே, திருவொற்றியூரில் மாடு மேய்க்கும் சிறுவர்க்குப் பேய்க்கரும்பை இனிமை யுடையதாக்கியது (பட்டினத்தார் பாடிய) செந்தமிழே என்கின்றார்.                அது இந்தப் பாடல்:
ஆரூரில் மொத்துண்டு செத்தார்க் குயிர்நல்கி, அன்னையினால்
நீரூறும் வாழையில் தீமூட்டிக், கச்சியில் நிந்தைசெய்தோன்
பேரூன் வயிறு பிளந்து, கைப்பாகிய பேய்க்கரும்பும்
சீரீர்தென் ஒற்றியில் தித்திக்கச் செய்தது செந்தமிழே!                   - 53    
       (முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
       பின்னை யிட்டதீ தென்னி லங்கையில்
       அளன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
       யானு மிட்டதீ மூளக மூள்கவே! பட்டினத்தார் பாடல்)

4.9. தமிழை மற்றொருமொழி தந்ததென்பவன் பதர்!
                தமிழை உணர்ந்த பாவலன் போன்ற ஒருவன், தனது மொழியை அமிழ்தினும் உயர்வென்று அறிந்து மகிழாமல், பிறமொழியை விரும்புவது, வேறொரு பெண்ணின் கணவனை வியக்கும் ஒருத்தியின் செயலுக்கு ஒப்பாகும். அவன் புலவனல்லன் என்கிறார். அந்தப்பாடல் இது:
தமிழ்உணர் பாவலன் போல்வான் ஒருவன் தனதுகலை
அமிழ்தினும் ஏற்றமென் றேமாப் புறாமல் அயற்கலையால்
உமிழ்வதென் றொப்பிடில் மற்றோர் மடந்தைக் குரியகொண்கன்
குமிழ்மலர் நாசியி னால்மணந் தாள்நிகர் கோதினனே!            - 97   
       இவ்வாறு எல்லாப் பாடல்களும் சுவையோடு  தமிழின் உயர்வைத் தெரிவிக்கின்றன.

5.1 தண்டபாணியார் தமிழ்ப்பற்று                                 
"இளநகைச் சிறுமியர் சொல் மொழியினும்  தித்தித்திருக்கின்ற  தமிழ்" என்றும்,
"செந்தமிழே உயர்வென்று முன்னாள் சீட்டு எனக்குத்  தந்தனன் கந்தன்"  என்றும்
"தமிழ் மொழிக்கு உயர்மொழி  தரணியில் உளதெனில் வெகுளியற் றிருப்பவன் வெறும்  புலவோனே" என்றும்,
மதுரத் தமிழை இகழ் தீயோர் மணிநா அறுத்துக் கனலில் இட என்றும்
தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனில், அஃதுணர் அலகையில் தாழ்வெனல் அறமே! (பு. இ.) என்றும்

தண்டபாணி அடிளார் பாடிய பாடல் வரிகள் அவரின் ஒப்பற்ற தமிழ்ப்பற்றை உணர்த்துகின்றன.                                                                                                               
                                                                    5.2. தமிழலங்காரச் சிறப்பு
       வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார், தமிழின் உயர்வை விளக்கி மெய்ப்பிக்க, அவர் காலத்தில் (ஏறத்தாழ 160 ஆண்டுகளுக்கு முன்னர்) மக்களிடம் அழுத்தமாகக் கருத்தேற்றம் பெற்றிருந்த தெய்வியக் கதைகளையும், கடவுளர் வாழ்க்கை நிகழ்வுகளையும், பல்வேறு நம்பிக்கைகளையும், மொழிகளின் இலக்கண அமைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு, காலத்திற்கேற்ற உத்தியைக் கையாண்டு தமிழின் உயர்வைத் தமிழலங்காரம் நூல்வழி நிலைநாட்டி நிறுத்தியிருபதை உணர்ந்திட முடிகின்றது என்று கூறி என் உரையை முடிக்கின்றேன்.   


----------------------------------------------------------------------------------