செவ்வாய், 21 ஜனவரி, 2025

தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரின் அருந்தமிழ்த் தொண்டு!

 

தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரின்                            அருந்தமிழ்த் தொண்டு!


சொக்கநாதர் என்பார், நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராகப் பணியாற்றிவந்தார். அவர் மனைவி சின்னம்மையாருடன் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில் குடியிருந்து வந்தார். திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் அவர்களுக்குக் குழந்தைப்பேறு இல்லாமலிருந்து, 1876ஆம் ஆண்டு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. திருக்கழுக்குன்றம் கோயிலில் உள்ள சிவன் வேதாசலத்தை வேண்டி நோன்பிருந்ததால்தான் குழந்தை பிறந்ததாக நம்பிய அவர்கள், தம் குழந்தைக்கு வேதாசலம் என்றே பெயரிட்டனர்.

வேதாசலம் வளர்ந்து, தம் நாற்பதாம் அகவையில், 1916இல், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்துத் தம் பெயரையும் மறைமலை என்று மாற்றிக்கொண்டார். வேதாசலம் என்ற வடமொழிச்சொல் வேதம்+அசலம் எனப் பிரியும். வேதம் எனும் வடசொல்லிற்குத் தமிழ், மறை என்பதாகும். அசலம் என்ற வடசொல்லிற்குத் தமிழ், மலை என்பதாகும். எனவே வேதாசலம் மறைமலை ஆனார்.

வேதாசலம் நாகையில் ஒரு கிறித்துவப் பள்ளியில் நான்காம் படிவம்வரை படித்தார். தந்தையாரின் மறைவு காரணமாகப் பள்ளிப்படிப்பை அவரால் தொடரமுடியவில்லை. நாகையில் புத்தகக்கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிக்க நாராயணசாமிப்பிள்ளை என்பார் புத்தக விற்பனை செய்ததுடன், தமிழ்கற்பிக்கும் பணியும் செய்துவந்தார். மனோன்மணியம் சுந்தரனார் இவரிடம் தமிழ் பயின்றவராவார். வேதாசலம், நாராயணசாமியாரிடம் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்களையும், இலக்கிய நூல்களையும், தருக்க நூல்களையும் முறையாகக் கற்றுச் சிறந்த தமிழறிவு பெற்றார். பிறகு சூளை சோமசுந்தர நாயகரிடம் சிவனியக் கொண்முடிபு (சைவ சித்தாந்தம்) கற்றார். தம் 21ஆம் அகவைக்குள் தொல்காப்பியம், கழக இலக்கியப் பாடல்கள், சிவனியக் கொண்முடிபு நூல்கள் முதலியவற்றை மனப்பாடமாகக் கற்றிருந்தார். பின்னர்த் தம் தாய் சின்னம்மையார் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்று இளம் அகவையிலேயே மிகச்சிறந்த கல்விமானாக விளங்கினார். தம்முடைய தனி முயற்சியில் படித்து ஆங்கிலத்திலும் வடமொழியிலும் புலமை உடையவரானார்.

தமிழாசிரியர் ஆகவேண்டும் என்ற விருப்பத்தில் அதற்கான தேர்வுகளை எழுதி வெற்றிபெற்ற வேதாசலம், சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழாசிரியர் பணிக்கு இவருடைய திறமையை ஆய்வுசெய்தவர், பரிதிமாற் கலைஞராவார். இவர்கள் இருவரும் இக்கல்லூரியில் தமிழாசிரியர்களாகப் பணியாற்றினார்கள். பின்னர் இவர்கள் இருவரும் தனித்தமிழ் இயக்கத்திலும் முனைப்புடன் செயல்பட்டனர்.


சிவனியம் பற்றிய கட்டுரைகளைப் பல இதழ்களில் முன்னரே எழுதியிருந்த வேதாசலம், தனியாக இதழ் தொடங்க விரும்பி 1902ஆம் ஆண்டுஞானசாகரம்எனும் இதழைத் தொடங்கினார், 1905-ல்சைவ சித்தாந்த மகாசமாசம்அமைப்பைத் தொடங்கினார். பின்னர் 1912ஆம் ஆண்டு வள்ளலாரின் வழியில் சென்னைப் பல்லாவரத்தில்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்தொடங்கினார்.

வேதாசலத்துக்குச் சமற்கிருதத்தின் மீதோ ஆங்கிலத்தின் மீதோ வேறு எந்த அயல்மொழியின் மீதோ வெறுப்புணர்வு கிடையாது. 1916-ஆம் ஆண்டு வேதாசலம் தம்வீட்டுத் தோட்டத்தில் தம் மகள் நீலாம்பிகையாருடன் உலாவிக் கொண்டு இருந்தார். அப்போது, ‘திருவருட்பாபாடலாகிய

பெற்றதாய்தனை மகமறந் தாலும்

பிள்ளை யைப்பெறு தாய்மறந் தாலும்

உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்

உயிரை மேவிய உடல்மறந் தாலும்

கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்

கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்

நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்

நமச்சி வாயத்தை நான்மற வேனே.” - என்ற பாட்டைப் பாடினார்.

பிறகு தம் மகளிடம்இப்பாட்டில்உள்ளதேகம்என்னும்  வடசொல்லை நீக்கி  அவ்விடத்தில் யாக்கை என்ற தமிழ்ச்சொல் இருக்குமானால் செய்யுளின் ஓசையின்பம் இன்னும் இனிமையாக இருக்கும்என்றார். மேலும், பிறமொழிச் சொற்கள் வழங்கி வருவதால் தமிழ்ச் சொற்கள் மறைந்து விடுகின்றனஎன்றார். உடனே நீலாம்பிகையார் தந்தையிடம், நாம் இனி அயன்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும், எழுதுதல் வேண்டும். அதற்கான முயற்சிகளைக் கைவிடாது செய்தல் வேண்டும் என்று ஆர்வத்துடன் கூறினார். இந்நிகழ்வே தனித்தமிழ் இயக்கம் தோன்ற அடித்தளமிட்டது. தனித்தமிழ் இயக்கம் 1916-இல் தோற்றம் பெற்றது.

வேதாசலம் தம் பெயரை, மறைமலை என்று மாற்றிக்கொண்டார். தம் பிள்ளைகள் திருநாவுக்கரசுநீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப் பெயர்களைத், திருஞானசம்பந்தம்அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம்மணிமொழி, சுந்தரமூர்த்திஅழகுரு, திரிபுரசுந்தரிமுந்நகரழகி எனத் தமிழாக்கினார். “சமரச சுத்த சன்மார்க்க சங்கம், “பொதுநிலைக் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. தாம் நடத்தியஞானசாகரம்இதழின் பெயரைஅறிவுக்கடல்என மாற்றினார். சுவாமி வேதாசலம் என்று குறிப்பிட்டவர்கள் மறைமலையடிகள் என்று குறிப்பிடத் தொடங்கினர்.


இவ் வகையிலான அடிகளாரின் செயற்பாடு, திராவிட இயக்கத்தவர் பலர் தம் பெயரைத் தூய தமிழ்ப்பெயராக மாற்றிக்கொள்ள உணர்வூட்டி வழிகாட்டியது. இதன்பிறகுதான் பெரும்பாலான அயற்சொற்கள் தமிழ்ச் சொற்களாக மாற்றப்பட்டு வழக்கிற்கு வந்தன. அடிகளார் வழிகாட்டுதலில் நீலாம்பிகையார்வடசொல்-தமிழ் அகரவரிசை எனும் நூலை எழுதி வெளியிட்டார். தனித்தமிழ் குறித்த அடிகளாரின் சொற்பொழிவுகள், தமிழக மேடைப் பேச்சாளர்களை நல்ல தமிழில் பேசவைத்தன. அடிகளின் தூயதமிழ் எழுத்துகள், தூயதமிழ் எழுத்தாளர்களை உருவாக்கி வளர்த்தன.

சமற்கிருதம் என்னும் சங்கதம் நீக்கிய தனித்தமிழ்த் திருமணங்களைத் தம் பிள்ளைகளுக்கும் பிறருக்கும் அடிகளாரே செய்துவைத்தார். தமிழர்களுக்கெனத் தனி ஆண்டுமுறையாகத் திருவள்ளுவர் ஆண்டைத் தமிழறிஞர்களுடன் கூடி ஆராய்ந்து அறிவித்தார். திருவள்ளுவராண்டுக் கி.மு.31ஐத் தொடக்கமாகக் கொண்டதாகும். இவ்வாண்டு முறையைத் தமிழ் உணர்வாளர் அனைவரும் ஏற்றுப்போற்றினர். தமிழ்நாட்டரசும் 2009இலிருந்து இவ்வாண்டு முறையைப் பின்பற்றியது.

மறைமலையடிகள், சிவனியத் தொண்டோடு சாதிபற்றி ஆய்வு செய்திருக்கின்றார். குமுகாய சீர்திருத்தங்கள் சிலவற்றை முயன்று மேற்கொண்டிருக்கின்றார். எல்லாக் குலத்தவரையும் சமமாக நடத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோருக்குச் சமஉரிமை தரவேண்டும். கைம்பெண்கள் தாலியறுத்தல், மொட்டையடித்தல், பட்டினிப்போடல் முதலியவற்றை நிறுத்தவேண்டும். ஆண்களுக்கு 25 அகவையும் பெண்களுக்கு 20 அகவையும் ஆகுமுன் திருமணம் செய்யக்கூடாது. மணக்கொடை (சீதனம்) அறவே கூடாது. கலப்புமணத்தையும் காதல் மணத்தையும் வரவேற்க வேண்டும். சிறுவர் மணத்தை முழுதும் தவிர்க்கவேண்டும் என்றார். வள்ளலார் போன்றே, தேவையற்ற மதச்சடங்குகளை தவிர்க்க வேண்டுமென்றார். ஒளி வழிபாட்டை ஏற்றார்.

மறைமலையடிகள், சிறந்த மொழியாசிரியர், இதழாசிரியர், எழுத்தாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், மருத்துவர் என்ற பல்வேறு நிலைகளில் ஈடுபட்டிருக்கின்றார். ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள் 56க்கும்மேல் எழுதியிருக்கின்றார். ஆங்கில இதழ்கள் இரண்டை நடத்தியிருக்கின்றார். புதினம், நாடகம், பாடல், வரலாறு எனப் பலவகை நூல்களையும் எழுதியுள்ளார். நூல்கள் நான்காயிரத்திற்கும் மேல் தொகுத்துமணிமொழி நூல்நிலையம்அமைத்திருந்தார். இப்பொழுது, கன்னிமாரா நூலகத்தில் ஒருபகுதியாக அஃது இயங்குகிறது.


அடிகளாரின் தொண்டுவாழ்க்கை முகன்மையாக மூன்று பிரிவுகளைக் கொண்டது என்று கூறலாம். ஒன்று, தமிழ்த்தொண்டு வாழ்க்கை, இரண்டாவது, சிவனியச் சமயத்தொண்டு வாழ்க்கை. மூன்றாவது ஆங்கில நூலாக்கம், தமிழாக்கம் தொடர்பான தொண்டு ஆகியவையாகும். இம்மூன்று நிலைகளில், அடிகளின் சமயத் தொண்டு வாழ்க்கைபற்றி அவர்காலத்திற்குப் பின் சிவனியஞ் சார்ந்தவர்களாலேயே பெரிதாகப் பேசப்படவில்லை. அவருடைய ஆங்கில நூல்களில் இந்தி எதிர்ப்பு, தமிழ்த்திருமணம் தமிழ்ப்பாவலர் குறித்தவை மட்டுமே தமிழறிஞர்களால் எப்போதாவது குறிப்பிடப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்த நூல்களும்கூட சிறப்பாகக் குறிப்பிடப்படுவதில்லை. எனவே, அடிகளாரின் தொண்டுநிலைகளில் தலைசிறந்ததாக அவருடைய தமிழ்த்தொண்டே முன்நிற்கிறது. மறைமலையடிகள் என்றால் தனித் தமிழ்த்தந்தை என்ற தகுதியே வரலாற்றில் நிலைத்துவிட்டது.

அடிகளின் தனித்தமிழ்த்தொண்டு பற்றி அறிய முதலில் தனித்தமிழ் பற்றிய சில செய்திகளைத் தெரிந்துகொள்வது தேவையாகும். தனித்தமிழ் என்றால் அயல்மொழிச் சொற்களை நீக்கிய கலப்பில்லாத தமிழ் என்றே பொருளாகும். ‘தமிழென ஒன்றும் தனித்தமிழ் என்றும் தானிருமொழி யில்லை; தமிழது தானே தனித் தமிழாகும் தவிர்த்திடின் பிறசொல்லைஎன்று பாவாணர் பாட்டில் குறிப்பிடுவார்.

சரி, தனித்தமிழ் அல்லது தூயதமிழின் தேவை என்ன? அயற்சொற்களை ஏன் கலக்கக்கூடாது?

1. வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால் தமிழ் பன்மொழிக் கலவையாக மாறுகிறது; தமிழ்ச்சொற்கள் வழக்கிழந்து மறைந்து போகின்ற கெடுதல் நேர்கிறது.

2. அயற்சொற் கலப்பு தமிழ்ப் பண்பாடு, கலை, நாகரிகத்தின் மீது வல்லாண்மை செலுத்துகிறது.

3. அயற்சொல் கலப்பு, தமிழின் இயல்பைக் கெடுக்கிறது. தமிழின் இனிமையையும் அழகையும் குறைக்கிறது; தமிழின் வளர்ச்சியைக் குன்றச் செய்கின்றது.

 4. கலப்புநிலை தொடரும்போது, காலப்போக்கில், தமிழர் அடையாளமற்றவர்களாக, வரலாறற்ற மக்களாக மாறும் கேட்டிற்கு வழி செய்கிறது. எப்படி? சேரநாட்டுத் தமிழ்மக்கள் பேசிய தமிழில் சங்கதம் என்ற சமற்கிருத மொழி அளவுகடந்து கலந்ததால், அப்பகுதியில் வழங்கிய தமிழ், மலையாளமாக மாறிவிட்டது. அம்மக்கள் மலையாளிகளாகி விட்டனர். அதனினுங் கொடுமை, அவர்கள் தமிழர்களிடம் இப்போது பகையுணர்வு பாராட்டுகிறார்கள். தமிழர்களாகிய நாம், சேரநாட்டையும் இழந்தோம்; சேரநாட்டுத் தமிழ்மக்களையும் இழந்தோம்.


5. “இன்னொரு மொழியின் சிறந்த நூல்களையும் கருத்துகளையும் தமிழில் பெயர்த்துக்கொள்ளுதல் நல்லதும் தேவையும் ஆகும். ஆனால் அயல்மொழிச் சொற்களைக் கலப்பது தமிழை அழித்துவிடும் நிலையாகும் என்று மறைமலையடிகள் விளக்குவார். எனவே, தமிழைக் காக்கின்றமுயற்சியே, தமிழ்க் காப்புணர்வே தனித்தமிழ் இயக்கம் அல்லது தூயதமிழ் முயற்சி தோன்றக் காரணமாகும்.

சரி, உலகத்தில் தமிழர்கள் மட்டும்தானா  இவ்வாறு அயற்சொற் கலப்பை எதிர்க்கிறார்கள்? மொழித்தூய்மையை வலியுறுத்துகிறார்கள்?

1. ஆங்கில வரலாற்று ஆசிரியர் பிரீமன், ஆங்கிலத்தில் பிரெஞ்சு இலத்தீன் மொழிச்சொற்கள் கலந்து பொருட்குழப்பத்தை ஏற்படுத்துவதால், அம்மொழிகள் கலப்பற்ற தூய ஆங்கிலம் எழுத வேண்டுமென்றார். “தூய ஆங்கிலக் கழகம் (Society for pure English) என்ற அமைப்பு 1918 முதல் இயங்கி வருகின்றது.

2. பிரெஞ்சு மொழியில் பிறமொழிச் சொற்களை நீக்குவதற்காக பிரான்சின் தலைவராயிருந்த சார்லசு திகால் என்பார் பல சட்டங்களை இயற்றினார்.

3. செருமானியர் மொழிச் சீர்திருத்தம் செய்து பல அயற்சொற்களை விலக்கினர்.

4. புரட்சியாளர் இலெனின், ‘உருசிய மொழியைக் கெடுப்பதை நிறுத்துங்கள், பிறசொற் கலப்பை எதிர்த்துப் போரிடுங்கள்என்று அறிக்கை வெளியிட்டவராவார்.

5. துருக்கியின் வல்லாட்சியர் அத்தாதுர்க்கு என்ற கமால்பாச்சா துருக்கி மொழியிலிருந்து இருபதாயிரம் அரபி, பாரசீகச் சொற்களை நீக்கிவிட்டு 1,58,000 தூய துருக்கிச் சொற்களை உருவாக்கச் செய்தார்.

6. சீனமொழி தூயதாக்கப்பட்ட பிறகு, மாண்டரின் எனப்பட்டது. தூய சீனமொழியையே பேசவேண்டுமென்று பொதுவுடைமை அரசு கட்டளையிட்டது.

 பிரெஞ்சு, சீனம், உருசிய மொழிகளில் அயற்சொற்கலப்பு தண்டனைக்குரிய குற்றமாக இருக்கின்றது.

7. இங்கே, இந்தியாவில் தூயகன்னட இயக்கம் திருள் கன்னடம் என்றும் அச்சகன்னடம் என்றும் வழங்கப்பட்டது. அச்சதெலுங்கு இயக்கம் தூய தெலுங்கில் இலக்கியங்களைப் படைத்தது. பச்ச மலையாளம் என்ற பெயரில் தனி மலையாளம் வழங்கப்படுகிறது.

இயற்கை மொழியாகிய தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலப்பது எல்லா உடல் உறுப்புகளும் சரியாக அமைந்த அழகியதோர் உடம்பிலுள்ள உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு மண்ணாலும் மரத்தாலும் அந்த உறுப்புகளைப் போல் செயற்கையாகச் செய்து அவற்றை அந்த உடம்பில் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கின்றதுஎன்று மறைமலையடிகள் கூறுகிறார்.

அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத் தோற்றத்திற்கு முன்னரே, 1856இல் இராபர்ட்டு கால்டுவெல் என்னும் அறிஞர், தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்தியங்க வல்லது என்றும் தமிழ் வடமொழியின் கலப்பை எந்தஅளவு நீக்குகிறதோ அந்த அளவுக்குத் தூய்மையுடன் சிறந்து விளங்கும் என்றும்தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்என்ற அவருடைய நூலில் கூறியிருந்தார். அவ்வாறு கூறியிருந்ததுடன், ‘எதற்கும் பார்ப்பனமூலங் கற்பிக்கும் தன்மை வடமொழிப் பண்டிதர்களின் இயல்புஎன்றும்கூட அவர் எழுதியிருந்தார். 1905ஆம் ஆண்டில், பாண்டித்துரைத்தேவர் தோற்றுவித்த நான்காம் தமிழ்க்கழக விழாவில், மறைமலையடிகள் சொற்பொழிவாற்றும் பொழுதே தனித்தமிழ் இயக்கக் கருத்துகளை வெளியிட்டிருந்தார். அங்கு இருந்த பாண்டித்துரைத் தேவரின் அரசவைப்புலவர் இரா. இராகவ ஐயங்காருக்கு அடிகளாரின் கருத்துகள் அறவே பிடிக்கவில்லை என்ற செய்தி பதிவாகி இருக்கின்றது.

தனித்தமிழில் பேசுவோரையும் எழுதுவோரையும் இப்பொழுதும் கூட எள்ளல், பகடி செய்கின்ற கூட்டம் கற்றாரிடையே இருக்கின்ற நிலையில், 108 ஆண்டுகளுக்கு முன்னால் அடிகளாரின் தனித்தமிழ்க் கொள்கையை எப்படியெல்லாம் எள்ளல் செய்திருப்பார்கள்! பலருக்கும் தெரிந்த மூன்று செய்திகள்: மொழிஞாயிறு பாவாணர், ‘காபிஎன்ற ஆங்கிலச்சொல்லின் மூலம்அறிந்து அறிவியற்படி அதற்குப் பொருத்தமாகக்குளம்பிஎன்று தமிழில் பெயர்த்திருந்தார். அதை எதிர்க்கக் கிளம்பிய கிறுக்கர்கள், குளம்பி என மொழிபெயர்த்ததைக்குழம்பிஎனப் பெயர்த்ததாகச் சொல்லியும் எழுதியும் எள்ளி நகையாடி மகிழ்ந்து கொண்டனர். ஆனால், புதுவையில்சவகர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி ஆராய்ச்சி நிறுவனமருத்துவமனை என்னும்சிப்மர்மருத்துவமனை எதிரில்குளம்பியகம் என்ற பெயரில் ஒரு கடையே இருந்தது; இப்பொழுதும் உள்ளதா என்று தெரியவில்லை.

அதே உணர்வுடன் அவர்களில் சிலர், ‘டிரங்க் கால்என்னும் ஆங்கிலச் சொல்லிற்குமுண்டக்கூவிஎன்றொரு பொருந்தாத மொழிபெயர்ப்பைச் செய்து கொண்டு, தனித்தமிழ் இயக்கத்தார் அப்படி மொழிபெயர்த்ததாகப் பொய்யுரைத்து முக்கிமுக்கிச் சிரித்துக்கொண்டு இருந்தார்கள்! நாம், ஐயா, ‘டிரங்க் கால்என்றால் முண்டக்கூவி இல்லைதொலை அழைப்புஎன்றோம். உடனே, மொழிவெறி என்று பேசத் தொடங்கிவிட்டார்கள்!

ஒருமுறை, அவ்வகையினர், ‘மைனர் இர்ரிகேசன்என்பதைச்சிறுநீர்ப் பாசனம்என்று மொழிபெயர்த்துக்கொண்டு சிரிப்பாய்ச் சிரித்தார்கள்! நாம், - ஐயா,மைனர் இர்ரிகேசன்என்றால் சிறுநீர்ப்பாசனமில்லை, ‘சிறுபாசனம்என்றோம். வழக்கம்போல் மொழிவெறி என முணுமுணுத்தார்கள்!

தனித்தமிழை வலியுறுத்திய மறைமலையார் பலவகையான எதிர்ப்புகளை நேர்கொண்டார். தமிழைத் தமிழாக இருக்கவிடுங்கள் என்று அடிகளார் வலியுறுத்தியதை நகையாடி எதிர்த்தவர் பலர். அவருள் சிலர்இது கலிகாலக் கொடுமைஎன்று இகழ்ச்சியாகப் பேசினர். அவர்களுக்கெல்லாம் அடிகளார் சிரித்தவாறே விடை கூறினார். ‘நம் தமிழ்த்தாயைப் பிறமொழிச்சொற்கள் என்னும் கோடரியினால் வெட்டிச்சாய்க்க முயல்வதுதான் கலிகாலக் கொடுமை! இத் தீவினையைத் தடுத்துத் தமிழைப்பாதுகாக்க முன்நிற்கும் எம் போல்வாரது நல்வினைச்செயல் ஒருகாலும் கலிகாலக்கொடுமை ஆகாதுஎன்றார். இன்னும் சிலர், ‘மொழியை என் விருப்பத்துக்குப் பேசுவது என் உரிமை. வேற்றுமொழிச்சொற்கள் கலந்தும் பேசுவேன், இருக்கின்ற சொற்களைத் திரித்தும் பேசுவேன்என்று கூறினர். இப்போதும் சிலர் அவ்வாறு கூறுவதைக் கேட்கிறோம். அவர்களுக்கும் அடிகளார் மறுமொழி தந்தார். ‘ஒவ்வொருவரும் அவர் விருப்பத்துக்கு மொழியில் கலப்படம் செய்தும் திரித்தும் பேசினால், அவர்களுக்குள்ளேயே தொடர்பு அறுந்து போகும். ஓவ்வொரு சிறு கூட்டத்திற்கும் ஒவ்வொரு மொழி தோன்றும்.  காலந்தோறும் ஒவ்வொரு புதுமொழி உருவாகி அந்த மக்களை ஒன்றுசேரவிடாமல் பிரித்துவிடும்என்று விளக்கினார்.

சில புலமையாளர்கள், தனித்தமிழ் என்பதை, தனித்து + அமிழ் என்று பிரித்துக்காட்டித் தனியே அமிழ்ந்துபோ, மூழ்கிப்போ என்று பொருள்கூறிக் கிண்டல் செய்தனர். வேறுசிலர், வடசொற் கலவாமல் ஒரு நூலையேனும் தமிழில் எழுதமுடியுமா? என அறைகூவலிட்டனர். ஒரு சிறுகதை எழுத்தாளர் கூடஎன்ன செய்தாலும் இந்தத் தனித்தமிழால் ஒன்றைமட்டும் செய்ய முடியாது. இலக்கியம் படைக்கவே முடியாதுஎன்று செருக்கிக்கூறினார். இரங்கத்தக்க அவருக்குப் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் எங்கே தெரிந்திருக்கப் போகின்றது? பாவாணர் முதலான மொழி ஆய்வறிஞர்கள் எழுதிய நூல்களை எங்கே படித்திருக்கப் போகின்றார்? தனித்தமிழ்ச் செழுமைமிக்க ஈடற்ற இலக்கியங்களை இருபதாம் நூற்றாண்டில் இயற்றித் தந்த தென்மொழி ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரைத் தெரிந்திருந்தாலும் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அவருடைய நூல்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப் பட்டிருக்கின்றன. நம் பெருமதிப்பிற்குரிய ஐயா .இலெ.தங்கப்பா எழுதிய தூயதமிழ் நூல்களுக்கு, இந்திய இலக்கிய அமைப்பு (சாகித்திய அகாதமி) இரண்டுமுறை பரிசளித்திருக்கின்றது. இன்னும் இலக்குவனார், .சுப.மாணிக்கனார், தமிழண்ணல், இரா. இளங் குமரனார், அருளியார், இரா.இளவரசு, தமிழ்க்குடிமகன், இறைக்குருவனார், தி.நா. அறிவொளி, மா. பூங்குன்றன், கு. அரசேந்திரன், மா. பொழிலன், முதலானோர் பலர் எழுதியுள்ள தூயதமிழ் நூல்கள் எண்ணற்றவை அவர்களுக்கு விடைகூறுவனவாக உள்ளன.

1933 திசம்பரில்சென்னைப் புத்தகாலயப் பிரசார சங்கத்தார்என்ற அமைப்பின் ஏற்பாட்டில்தமிழ் அன்பர் மாநாடுஎன்ற மாநாடு ஒன்று நடக்கவிருந்தது. அந்த மாநாட்டின் தலைவர் கே.வி.கிருட்டினசாமி ஐயர், பொருளாளர் இராமசாமி ஐயர், வரவேற்புக்குழுத் தலைவர் .வே.சாமிநாத ஐயர், பிற பொறுப்பாளர்கள் அனைவரும் பார்ப்பனர்களே! அம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கே.வி.கிருட்டினசாமி ஐயர் மறைமலையடிகளார்க்குக் கடிதமும் அழைப்பும் விடுத்தார்; தொலைவரி ஒன்றும் அனுப்பினார். அதற்கு அடிகளார் எழுதிய விடைமடல் வரலாற்றுச் சிறப்பிற்குரியதாகும். அம் மடலில், “கடிதங்கள்,  அழைப்புகள்,  தொலைவரி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும் .வே.சாமிநாதையர் அவர்களுக்கும் நன்றி! தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க்கூட்டத்திலும் கலந்து கொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். பண்பட்ட பழையமொழிகள் எல்லாவற்றிலும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டை நலஞ்சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிறமொழிக்கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும் அதன் வளர்ச்சியினைக் குன்றச் செய்யுமென்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைப்பிடிக்காத உங்களுடைய மாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக!” என்று எழுதியிருந்தார்.

தமிழில் வடசொற்கலப்பு தொடங்கி, ஊர்ப்பெயர், கடவுளர் பெயர், மலை, ஆறு முதலியவற்றின் பெயர்களை எல்லாம் வடமொழிச் சொற்களாக மாற்றிவிட்டனர். கண்டமண்டலமாகத் தமிழில் கலந்திருந்த சங்கதச் சொற்கள், தமிழ்ச்சொற்களை வழக்கு ஒழித்திருந்தன. அவற்றை மீட்டெடுக்க எப்படி எல்லாம் போராடினார்கள் என்பதை அறியவேண்டும். குறிப்பாக இரண்டு எடுத்துக்காட்டுகள்: 1942ஆம் ஆண்டிற்கு முன்னால், அரசு அலுவலகங்களிலும் பிற இடங்களிலும் தமிழர்கள் பெயருக்கு முன்னால் பெயரடையாக மகாராச ராசசிறீ என்று எழுதிவந்தனர். 1942இல் அரசின் பொதுப்பணித்துறை, மகாராச ராசசிறீ நீளமாக உள்ளது; சிறீ என்று மட்டும் இருந்தால் போதும் என்று ஆணை பிறப்பித்தது. அப்போது, “தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்ற அமைப்பும் மறைமலையடிகள் வழியினரும்சிறீயை நீக்கிவிட்டு அவ்விடத்தில்திருவைப் பயன்படுத்த வேண்டுமெனக் கோரினர். பொதுப்பணித்துறை 7-3-1942இல் ஓர்அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், பொதுமக்கள் சிறீ, திரு இரண்டில் எதைப் பயன்படுத்தவேண்டும் என்ற தங்கள் கருத்தை 15-4-1942க்குள் எழுதி விடுக்குமாறு கேட்டிருந்தது. ‘திருபயன்படுத்தக்கூடாதுசிரீயே வேண்டுமென இரா. இராகவையங்கார், .வே.சாமிநாதையர் முதலானோர் சுதேசமித்திரன் இதழில் எழுதினர். ‘திருஎன்பதே தொன்றுதொட்ட வழக்கு எனச் சான்றுகளோடு விளக்கமாக நாவலர் சோமசுந்தர பாரதியாரும் பண்டிதமணி கதிரேசன் செட்டியாரும் நாவலர் .மு.வேங்கடசாமி நாட்டாரும் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும் எழுதினர். பாவேந்தரும் திருவை எதிர்ப்பவர்களைக் கண்டித்துப் பாட்டெழுதினார். முடிவாகத், திரு என்ற சொல்லே பயன்படுத்த வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இன்னொரு செய்தி, காரைக்குடிப் பகுதியில், காரைக்குடி சாமி, இராம.சுப்பையா முதலானோர் நடுத்தெருவில் நின்றுகொண்டு, போவோர் வருவோர்க்கெல்லாம்வணக்கம் ஐயா, வணக்கம் அம்மாஎன்று வலிந்து வணக்கம் சொல்லி வந்தார்களாம்! எதற்காக? நமசுக்காரத்தை விரட்டித் தொலைத்து வணக்கத்தை மீட்டெடுப்பதற்காக!

அண்மைக் காலமாகச் சிலர், தூயதமிழ் இயக்கம் தோல்வியடைந்து விட்டது; அந்த இயக்கம் வெற்றி பெறாது என்றெல்லாம் முகநூலிலும் வெளியிலும் எழுதுகின்றனர். தனித்தமிழ் இயக்க முயற்சி தமிழைக் காக்கும் முயற்சி! வெற்றி பெறுவதற்கும் தோல்வி அடைவதற்கும் அது என்ன மட்டைப்பந்து ஆட்டமா? சடுகுடுப் போட்டியா? ஒவ்வொரு தமிழ்ச்சொல்லை மீட்டெடுக்கும் போதும் தூயதமிழ் இயக்கம் வெற்றி பெறுகின்றது. அயன்மொழிச் சொல் தமிழில் கலக்காமல் தவிர்க்கும் ஒவ்வொரு முறையும் தமிழ் வெற்றி பெறுகிறது. புதியதாகத் தூயதமிழில் ஒருகலைச்சொல் உருவாக்கும்போது தமிழ் வெற்றிபெறுகிறது. இஃதொரு தொடர் முயற்சி! ஒரேநாளில் செய்துமுடித்துவிடும் செயல் இல்லை! நூறாண்டுகளுக்கும் முன்னால் எழுதிய தமிழ் நடையில் இப்போது யாராவது எழுதினால், அவர் பகை உணர்வோடு தமிழில் வேண்டுமென்றே வலிந்து அயற்சொற்களைக் கலந்து எழுதுகிறார் என்று அடையாளம் காணும் அளவிற்கு இன்று தனித்தமிழ் பேணும் முயற்சி முன்னேற்றம் கண்டுள்ளது எனக்கூறலாம். இந்நிலையே நிறைவளிக்கக்கூடியது இல்லை என்பது உண்மை! நமக்கு நன்றாகத் தெரியும், போகவேண்டிய தொலைவு இன்னும் மிகுதியாக உள்ளது. இன்று, சமற்கிருதத்துடன் இந்தி, ஆங்கிலம் முதலிய பல மொழிச் சொற்களும் தமிழில் கலக்கத் தொடங்கிவிட்டன.

அடிகளாரைத் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணி மிகுந்துள்ளது.  மறைமலையடிகள், தமிழில் சங்கதக்கலப்பை நீக்கவேண்டுமென்ற தாலும், தூயதமிழே வேண்டும் என்றதாலும். ஆரியவேத}க் கருத்துகளை எதிர்த்ததாலும், சாதிவேற்றுமையை எதிர்த்ததாலும் மதச் சடங்குகளைத் தேவையில்லை என்றதாலும். இந்தித் திணிப்பை எதிர்த்ததாலும், கலப்பு மணத்தையும் காதல்மணத்தையும் வரவேற்றதாலும், வல்லாண்மைச் சாதியினர் அவரைக் கடுமையாக எதிர்த்தனர்; அவர்பால் வெளிக்காட்டாத பகைகொண்டனர். அதனாலேயே அவரும், அவர்வழியினரும்  புறக்கணிக்கப்பட்டனர், இப்போதும் புறக்கணிக்கப் படுகின்றனர். இதழ்களிலும் ஊடகங்களிலும், பிற இடங்களிலும் நீக்கமற இடம்பெற்றுள்ள வல்லாண்மைச்சாதியினர், அடிகளின் முயற்சி அனைத்தையும் வெற்றி பெறாத முயற்சி என்று தூற்றிஎழுதி மகிழ்ந்துகொள்வதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்ப் பெருங்கடலான மறைமலையடிகளார் தமிழ் மறுமலர்ச்சியின் விடிவெள்ளி; கன்னல் குரல்தனில் பேசிக் கேட்போர்க்கெல்லாம்  காதினிக்கக் கருத்தினிக்க வைத்த செம்மல். சொற்பொழிவுக் கலையில் அந்நாளில் ஒப்பவர் யாருமின்றி உயர்ந்தோங்கி நின்றவர். பழைய பாடல்களுக்குப் புதுமையான பொருள் விளக்கம் அளித்தவர். மேடைத் தமிழ் வளர்ச்சிக்குக் காரணமாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர் அடிகளார். தமிழில் பேசவந்த இளைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்என்று பலராலும் போற்றப்பட்டார். 

மறைமலையடிகளார், தாம் நிகழ்த்த விரும்பும் சொற்பொழிவின் பொருளை நன்கு எண்ணி அதுபற்றிக் கூறவிரும்பும் கருத்துகளை முறைப் படத் தொகுத்தும் வகுத்தும் எழுதிக் கொள்வது வழக்கம். அவையே பின்பு நூல் வடிவில் வெளிவரும்என்பார் ஒளவை.சு.துரைசாமியார்

மறைமலையடிகளின் சொற்பொழி வின்பத்தில் மூழ்கிவிட்டேன். அவர் இனிய பேச்சொலிகள் என் இரண்டு செவிகளிலும் இன்ப முழக்கஞ் செய்கின்றன.” என .வே.சாமிநாதர் குறிப்பிட்டுள்ளார்

பனிமலையின் உயரம்; நீல் ஆற்றின் நீளம்; அமைதிவாரியின் ஆழம் - ஆகியவை ஒருங்கே அமைந்தவர் மறைமலையடிகள்.” - என்று பாவாணர் அடிகளாரைப் போற்றிக் கூறினார்.  

மறைமலை அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்என்று தமிழ்த்தென்றல் திரு.வி.., புகழாரம் சூட்டியுள்ளார்.

தாம் வாழ்ந்த 75ஆம் அகவை வரை மறைமலையடிகள் தளராது மேற்கொண்ட தனித்தமிழ்த் தொண்டு, முன்னினும் எழுச்சி, வீறோடு தொடரவேண்டும். இல்லையேல், இந்த நூற்றாண்டில் இன்னுமொரு மலையாளமோ, இந்தி சமற்கிருத ஆங்கிலக் கலப்பு மொழியோ தோன்றித் தமிழர்களைப் பிரித்துவிடும் வாய்ப்பு நேரும். சிலகோடித் தமிழர்கள் இன்னொருவகை மொழி இனத்தவராக மாறிவிடுவர் என்றால் மிகை உரை இல்லை.  உண்மையாகும்!

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்

நல்லாள் இல்லாத குடி.

என்று வள்ளுவர் பெருமான் எச்சரிப்பதைக் கருத்தூன்றி எண்ணிப் பார்ப்போம்! 

               தமிழயரத் தாழ்ந்தான் தமிழன்அவனே

      தமிழுயரத் தானுயர்வான் தான்!

                -  பாவாணர்.


(புதுவை நற்றமிழ் அதழில் வந்தது)


மாவீரர் நாள்

                             மாவீரர் நாள்

 

தாய்நாட்டின் விடுதலைக்குத் தம்முயிரை ஈந்தோர் 

        தகுநினைவு கூர்ந்தவரை வணங்கிடுநாள் அன்றே 

ஏய்ந்தமைய அழைக்கின்ற மாவீரர் நாளாம்!  

        ஏனையபல் நாட்டாரும் நினைந்திடுமோர் நாளாய் 

வாய்தலுற குறிப்பிடுவர் வணங்கிடுவர் அன்றே! 

        வாயார அவர்புகழை வழுத்திமகிழ் வாரே! 

ஓய்வறியாத் தலைவரந்நாள் உள்ளபல செய்தி 

        ஓர்ந்தறிய விளக்கிடுநல் லுரையாற்று வாரே!   

 

ஈழத்தில் நவம்பரிலே இருபத்தி ஏழில் 

        ஈகியரை நினைந்துருகி இரங்குகின்ற நாளே!   

ஆழமென உணர்வுறைசத் தியநாதன் சங்கர் 

        அவர்தலைவர் மடியினிலே உயிர்நீத்த நாளே! 

காழமுறு தமிழீழம் காணுகின்ற கொள்கைக் 

        கணந்தோறும் நெஞ்சிருக்கக் களத்துயிரீந் தோரைச் 

சூழலுற உறவுசுற்றம் சோர்ந்துவணங் கும்நாள்! 

        தூயீகி யர்நினைப்பில் தோய்கின்ற நாளே!  


            மற்றபல இயக்கம்சார் மாவீர்ர் ஈகம் 

        மாற்றமின்றி வழிபடுநல் மனமும்பெற் றாரே!  

சற்றும்வேற் றுமையின்றிச் சமமாக எண்ணிச் 

        சமைவுறவே புலிகளெலாம் சார்புகரு தாரே!   

உற்றார்மா வீரர்நாள் ஊர்தோறும் போற்றி 

        உறுநினைவில் கடைப்பிடித்தல் உண்டென்ற போதும் 

மற்றுகிளி நொச்சியிலே கனகபுரம் தன்னில் 

        மாவீரர் துயிலிடத்து மாபெருநி கழ்வாம்! 

 

மணியோசை நினைவமைதி மாச்சுடரை ஏற்றல் 

        மனமுருக வணங்கிடுதல் மாத்துயரில் மாழ்கல்! 

துணிவார்ந்த புலித்தலைவர் துலக்கவுரை செய்தல்!  

        தொடர்ந்துவந்த இறுதிப்போர் துன்பத்தின் பின்னே 

பணிந்தமனத் தோடுருகி பற்பலமா வீரர் 

        பரிவார்ந்த உறவெல்லாம் படையலிட்டு விம்மல் 

பிணிப்புற்று மனங்கலங்கிப் பேதுறவே வைக்கும்! 

        பிற்றையெவர் வருவாரோ பெருந்துயரை மாற்ற!  

பிரபாகரன் எழுபது!

 பிரபாகரன் எழுபது!

 

ஆண்டிரண்டா யிரத்தின்பின் அரும்பெறலாய் இனத்துதித்த

ஆற்ற லானாய்!

மூண்டபெரும் உணர்வேற்றி முப்படையும் உருவாக்கி

மொய்ம்பு மிக்க

திண்டோளப் புலிப்படையைத் திறங்கெட்ட இவ்வுலகே

திரும்பிப் பார்க்க

தொண்டிளையோர் துணைநின்ற துணிவுருவே, உரிமைப்போர்

துவளா நெஞ்சே!

 

அமைதிப்போ ராட்டத்திற் கணுவளவும் மதிப்பில்லை

அதுவீண் என்றே

அமைந்தாய்ந்தே எடுத்தாயே ஆய்தம்கை அஞ்சினரே!

ஆனால் கூட

இமையளவும் தாக்குதலில் எளியகுடி சிங்களவன்

இலக்கில் லாமல்

குமையழிவு செய்கின்ற கொடும்படையே குறியாகக்

கொண்டு வென்றாய்!

 

மக்களெலாம் உன்பின்னே! மறப்போரில் பலமகளிர்!

மாந்த நேயம்

எக்காலும் மறவாத ஏந்தலென ஒளிர்ந்தாயே!

இந்த நாட்டில்

அக்கரையித் தாலிப்பேய் அழிவினைக்கே வந்திங்கே

ஆட்டம் போட

குக்கலொன்றிங் காட்சியிலே குந்திதுணை கொடுத்ததெலாம்

கொடுமைக் கன்றோ?


 

 

 

 

அற்றையநாள் நெடுஞ்செழிய! அருங்கரிகால் பெருவளத்த!

அரிய வெற்றிப்

பொற்புறுசெங் குட்டுவனே! போந்திமயம் கயற்புலிவில்

பொறித்தல் போலும்

வெற்றியெலாம் பின்தள்ளி வென்றவனே தமிழீழம்!

வியக்கும் வண்ணம்

அற்றமற ஆண்டவனே! அருமொழுக்கப் பேராண்மை

ஆன மாந்த!

 

நான்ககவை தனிலேயே நடக்கின்ற இனக்கொடுமை

நாளும் கண்டு

யான்தடுப்பேன் உரிமைமீட்(டு) எனப்பதினெட் டாமகவை

எழுச்சி யோடே

மேன்மையுறு வித்திட்டாய்! மேலுமிரு பத்தொன்றில்

மிகமுன் னேறி

தோன்றலென புலிப்படையைத் தொடக்கினையே பகைமருளத்

துணிந்த வீரா!

 

முப்பத்தா றாமகவை மூன்றிலொரு பங்கிலங்கை

முழுதும் வென்றாய்!

துப்பிழந்த தமிழினமே தொலைத்ததைம்பத் தைந்திலுனை

துன்பில் ஆழ்ந்தோம்!

இப்போதோ எழுபதையா, இன்னுயிரில் தோயுறவே

எண்ணி ஏங்கி

ஒப்பரிய உன்பெருமை ஓயாதே பேசிபுகழ்ந்(து)

ஓய்கின் றோமே!

நல்லவொரு தலைவர் நல்லக்கண்ணு ஐயா!

 

நல்லவொரு தலைவர் நல்லக்கண்ணு ஐயா!

விடுதலைப் போராட்ட வீரர்; கொள்கைச் செயற்பாடுகளில் போராட்டங்களில் நெகிழ்ச்சி இல்லாக் களப்போராளி; அரசியல் கட்சிகள் அனைத்தையும் பற்றிய ஏற்ற இறக்கங்களை அறிந்த மூத்த தலைவர்; அகவை வேறுபாடின்றி அனைவராலும் தோழர் என்றழைக்கப்படுபவர்;. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்; இன்றைக்கும் நாம் காணும் பொருள் அவா இல்லாத, ஊழலற்ற நேர்மையான எளிமையான தலைவர் இரா. நல்லக்கண்ணு ஐயா ஆவார்.

நல்லக்கண்ணு திருவைகுண்டத்தில் 10பேர் கொண்ட எளியதோர் உழவர் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாக 26.12.1925இல் பிறந்தார். பள்ளிக்குச் செல்லுகின்ற காலத்திலேயே ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் தந்தை இராமசாமியாரின் மன வருத்தத்திற்குக் காரணமானார். மதுரை இந்துக்கல்லூரியில் தமிழ் இடைநிலை வகுப்புவரை படித்தார். பாரதியின் பாடல்களாலும் செக்கிழுத்த செம்மல் வ. உ .சிதம்பரனாரின் இயக்கத்தின் வழியாகவும் விடுதலை வேட்கை பெற்றார்.

பேராய(காங்கிரசு)க் கட்சியில் இளம் அகவையிலேயே சேர்ந்த நல்லக்கண்ணு, இந்திய விடுதலைப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 15ஆம் அகவையில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். முறைப்படியான கட்சி உறுப்பினராவதற்கு இன்னும் அவருக்குச் சற்று அகவை கூடுதலாக வேண்டியிருந்தது. ஆனால் அடுத்த சில பத்தாண்டுகளில் தமிழ்நாட்டுப் பொதுவுடைமை இயக்கத்தின் மிக முதன்மையான ஆளுமையாக நல்லக்கண்ணு ஐயா உருவானார்.

அவர் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்த காலத்தில், இரண்டாம் உலகப்போர் காரணமாக இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பத்தினிக் கோட்டம்என்ற இடத்தில் நெல்மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதை அறிந்த நல்லக்கண்ணு, பொதுவுடைமைக் கட்சி நாளிதழில் அதுகுறித்து எழுதி வெளிப்படுத்தினார். அரசு அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்று ஆயிரம் நெல் மூட்டைகளை வெளியில் கொண்டு வந்தார். இது பஞ்சத்தால் பசியில் வாடிய மக்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்ததன் விளைவே, ‘’இந்தச் சுத்து வட்டாரமே இன்று சாப்பிடுகிறது என்றால் அதற்கு நல்லக்கண்ணு ஐயாதான் காரணம்’’ என 80 ஆண்டுகள் கடந்தபிறகும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நன்றியுணர்வுடன் பாராட்டுவதாகும்.

அந்த அகவையிலேயே அன்று தொடங்கிய போராட்ட வாழ்க்கை, இன்றுவரை அகவை நூறு ஆகியும் ஒடுக்கப்பட்டோர், ஏழைகள், தொழிலாளர், உழைக்கும் பிரிவார், விளிம்பு நிலை மக்கள் ஆகியோரின் நலனுக்கான போராட்ட வாழ்க்கையாகத் தொடர்கிறது.

இந்திய விடுதலைக்குப் பின், பொதுவுடைமைக் கட்சியார் மீது இந்திய அரசு மேற்கொண்ட ஒடுக்குமுறைகளை மனத்திடத்தோடு எதிர்த்துப் போராடினார். இதனால் அவரும் இன்னும் பல தலைவர்களும்


ஆய்தப் புரட்சியைத் தூண்டியதாகவும், அரசுகளைக் கவிழ்க்க முயன்றதாகவும்கூறி, ‘நெல்லை வஞ்சக (சதி) வழக்குப் போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். 1952ஆம் ஆண்டு இந்த வழக்கில் நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்களுக்கு வாணாள் சிறை எனத் தண்டனை தரப்பட்டது. அப்போது அவருடைய அகவை வெறும் 27 மட்டுமே. குறைக்கப்பட்ட 7 ஆண்டுக்கால சிறைவாழ்க்கையில், காவல்துறையின் கொடிய அடக்குமுறை அடிதடிக்கு ஆளாகிய நிழ்வுகள் எல்லாம் வாழ்வில் அவர் பெற்ற மாறாத விழுப்புண்களாகும்.

இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராகவும், சுற்றுச்சூழல்மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். குறிப்பாகப் பொருநை(தாமிரபரணி) ஆற்றை அழித்து அதை நம்பி இருந்த மக்கள் வாழ்வின் அடித்தளத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த மணல்கொள்ளைக் கும்பலுக்கு எதிராகப் போராடினார். நயன்மன்றில் இதற்காக அவரே வழக்கில் உறழாடிச் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். பொருநையில் மணல் அள்ளுவது உயர்நயன்மன்றத்தால் தடை செய்யப்பட்டது.

நாங்குநேரி வானாமாமலைப் பெருமாள்கோயில் நுழைவுப் போராட்டம், சாதிச் செருக்குப் படுகொலை எதிர்ப்பு, மணல் கொள்ளையைத் தடுக்க உயர் நயன்மன்றம் வரை சென்று போராடியது எல்லாம் நல்லக்கண்ணு ஐயாவின் நெகிழ்ச்சியற்ற போராட்ட குணத்திற்கான சான்றுகளாக உள்ளன. 80 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வரும் நல்லக்கண்ணு ஐயா, இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருந்தது இல்லை. தம் துணிவுமிக்க போராட்டங்களாலேயே மக்கள் மன்றத்தில் இன்று வரை அவர் அடையாளங் காணப்பட்டு வருகிறார். அரசியலில் சில ஆண்டுகள் இருந்துவிட்டாலே சொந்த வீடு, சொத்து, மகிழ்வுந்து என்று வாழும் ஆள்களுக்கிடையில் எளிமையின் உச்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். பெரிய போராட்டம், சிறிய போராட்டம் என்று பார்க்காமல் போராட்டத்தின் நோக்கத்தை மட்டுமே அறிந்து அதில் கலந்துகொள்ளும் மாமாந்தர் நல்லக்கண்ணு ஐயா, ஆவார்.

ஐயாவின் 80 ஆவது பிறந்தநாளில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அவருக்கு உருவா ஒரு கோடி திரட்டிக் கொடுத்தது. அதைத் தம் சார்பாக மீண்டும் கட்சிக்கே திருப்பிக்கொடுத்தார். அதேபோல், தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் விருதைப் பெற்ற நல்லக்கண்ணு, அரசு வழங்கிய ஓர் இலக்கம் உருவா பரிசுத் தொகையை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியைக் கட்சிக்கும் மீதியை உழவுத் தொழிலாளர் அமைப்புக்கும் அளித்தார். அவருக்குத் தமிழ்நாடு அரசு தகைசால் தமிழருக்கான விருதை அறிவித்து உருவா பத்து இலக்கம் அளித்தது. அரசுதந்த உருவா பத்திலக்கம் காசோலையுடன் தம் சொந்தப்பணம் உருவா ஐந்தாயிரத்தைச் சேர்த்து மொத்தம் பத்திலக்கத்து ஐயாயிரம் உருவாவை முதல்-அமைச்சரின் பொதுத் துயர்துடைப்பு நிதிக்கு வழங்கினார்.


நல்லக்கண்ணு ஐயா மிகவும் தன்னடக்கமானவர். அவர் கலந்து கொண்ட போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், பெரிய நிகழ்வுகள் எதிலும் முதன்மையாகத் தன்னை நிறுத்திக் கொள்ளாதவர். அவற்றில் சிலவற்றில் அவரின் பங்கு மிகவும் முகன்மையானது என்றாலும் தன்னை முன்னிறுத்தி அந் நிகழ்வுகளை விரித்துரைக்காத விந்தை மாந்தர் அவர்.

இராசாசி ஆட்சிக்காலத்தில், நிலங்கள் பார்ப்புத்தேய’ (பிரம்மதேய) முறைப்படி ஆட்சியாளர்களால் இலவயமாகப் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அவர்கள் அந்த நிலத்தில் வரும் விளைச்சலை எடுத்துக் கொண்டனர். அவர்கள் நேரடியாகச் சென்று பயிர் செய்யமாட்டார்கள். ஆனால் விளைச்சலை மட்டும் பெற்றுக் கொள்வார்கள். தேவதான முறைப்படி இத்தகைய நிலங்கள் கொடையாகக் கோவில்களுக்கு வழங்கப்பட்டன. சில நேரங்களில் ஒரு சிற்றூர் முழுமையும் கூட கோவிலுக்கு வழங்கப்பட்டது. சிறு உழவர்களும் பணியாளர்களும் அவர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். எதிர்த்து யாரேனும் நின்றால் அவர்களை வெளியேற்றி விடுவார்கள். இவற்றை எதிர்த்து நல்லக்கண்ணு ஐயா கலந்துகொண்ட உரிமைப் போராட்டங்கள் 1948-ம் ஆண்டு தொடங்கி 1960-ம் ஆண்டு வரை தொடர்ந்தன. முதலமைச்சராக இருந்த இராசாசி, நிலக்கிழார்களின் பக்கமும் மடங்களின் பக்கமும் நின்று கொண்டார். உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்எனக் கூறியபோது, இராசாசி நிலத்துக்கான ஆவணங்களைக் கொண்டிருப்பவர்களுக்குதான் நிலம் சொந்தம் என்றார். ஆனால், நல்லக்கண்ணு ஐயாவும் தோழர்களும் மேற்கொண்ட போராட்டங்களினால், இந்தக் கோவில்களும் மடங்களும் கொண்டிருந்த அதிகாரம் உடையத் தொடங்கியது. அவர்களின் அறுவடை விதிகளையும் முறைகளையும் தொழிலாளர்கள் போராடி எதிர்த்தனர். அடிமைகளாக இருக்க மறுத்தனர்.

மாநிலம் முழுவதும் உழவர்களுக்கான இயக்கத்தை உருவாக்கி உழவர் (சங்கம்) அமைப்புக்கான அடித்தளத்தை உருவாக்கியவர் என்று பொதுவுடைமைக் கட்சிகளின் தலைவர்கள் நல்லக்கண்ணு ஐயாவைப் பாராட்டுகிறார்கள்.

பொதுவுடைமை இயக்கத்தின் நூற்றாண்டும் நல்லகண்ணு ஐயாவின் நூற்றாண்டும் ஒரே நேரத்தில் அமைந்துள்ளது ஒரு சிறப்பான பொருத்தமாகும்.

பொதுவாழ்க்கையில் நேர்மையோடும் உண்மையோடும் ஊழலற்றும் எளிமையாகவும் இருக்கவேண்டியதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கும் மக்களின் உண்மைத் தொண்டர் ஈடற்ற தலைவர் நல்லக்கண்ணுஐயா நீடுவாழ நற்றமிழ் உளமார வாழ்த்துகின்றது.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு. - குறள்.1025.

                                                                             -..

(புதுவை நற்றமிழ் இதழில் வந்தது)

அதிர்ச்சியளித்த தமிழரிமாவின் இறப்பு!

 அதிர்ச்சியளித்த தமிழரிமாவின் இறப்பு!

புதுச்சேரித் தனித்தமிழ்க் கழகத்தின் செயலாளர் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய அரிமாப்பாண்டியன் ஐயா, இடஒதுக்கீட்டுப் போராளி ஆனைமுத்து ஐயாவின் மகள் அரி.தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகன் புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு அரங்கசாமி அவர்களின் துணைத் தனிச்செயலராக இருந்த த.அ.தமிழரிமா அவர்கள் தி.பி 2055 நளி 30ஆம் நாள்          (15-12-2024) ஞாயிற்றுக்கிழமை சாலை நேர்ச்சியில் காலமானார்.

எதிர்பாராத இந்நிகழ்வு, அனைவரையும்  அதிர்ச்சிக்குள்ளாக்கி மீத்துயரில் ஆழ்த்தியது.

இளங்காளையான மகனை இழந்த அரிமாப்பாண்டியன் ஐயாவுக்கும் தமிழ்ச்செல்வி அம்மாவுக்கும் இன்னும் இளம் அகவையில் கணவரை இழந்திருக்கும் சுபாசினி அவர்களுக்கும் மகன் தமிழாதனுக்கும் யார் எப்படிச் சொல்லி ஆறுதல் அளிப்பதென்று தெரியாமல் கலங்குகிறோம்.

29-12-2024 அன்று தமிழரிமாவின் படத்திறப்பு மலர்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. புதுவை முதல்வர் தமிழரிமாவின் படத்தைத் திறந்துவைத்தார்.

என்னசொல்லித் தேற்றுவோம் எவ்வகையில் தாய்தந்தை 

அன்புத் துணைவியொடு ஆதனுக்கும் முன்னின்றே

ஆறாத் துயராற்ற ஆகும்? தமிழரிமா

கூறாமல் சென்றாயே கூறு. 

-       ..

 

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மைக் கடை   - குறள்

 

 

புல்நுனிமேல்  நீர்போல்  நிலையாமை  என்றெண்ணி

இன்னினியே  செய்க  அறவினை;-  இன்னினியே

நின்றான்  இருந்தான்  கிடந்தான்தன்  கேள்அலறச்

சென்றான்  எனப்படுத  லால்.

                                                                                     நாலடியார்

 

                                                           (புதுவை நற்றமிழ் இதழில் வந்தது)


சனி, 11 ஜனவரி, 2025

கொஞ்சமும் பொருத்தமற்ற பதவிஅமர்த்தம்!

 

கொஞ்சமும் பொருத்தமற்ற பதவிஅமர்த்தம்!

திருவாட்டி சுதா சேசையன் என்பார் தமிழ்நாட்டின் எம்.சி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் மருத்துவப் பேராசிரியராகவும் பணியாற்றி, 30 திசம்பர் 2022இல் பணிநிறைவு பெற்றவர். இவர் தமிழ் பத்திமை (ஆன்மிக) இலக்கியங்களைப் பற்றிய மேடைப் பேச்சாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் இருப்பவர்.

இந்நிலையில் அண்மையில், திருவாட்டி சுதா சேசையன் செம்மொழித் தமிழ் உயராய்வு நடுவத்தின் துணைத்தலைவராக அமர்த்தப்படுவதாகச் செய்தி வந்திருக்கிறது. இந்தப் பதவி அமர்த்தம் இந்த நிறுவனத்தின் நோக்கங்களுக்கே முரணானதாக இருக்கிறது என்றநிலை மனம் கவலச்செய்வதாக உள்ளது. இந் நிறுவனத்தின் தலைவரான தமிழ்நாட்டு முதலமைச்சரைக் கலந்துபேசி இந்த அமர்த்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

திருவாட்டி சுதாசேசையன், தமிழின் செவ்வியல் இலக்கியங்களை முறையாகக் கற்றவரில்லை. செவ்வியல் தமிழ் உயராய்வு நடுவத்தின் உயர்பொறுப்பிற்கு வருவோர், தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும், ஆராய்வு நுட்பமும், பரவலாக இதுவரை வந்துள்ள செவ்வியல் தமிழ்நூல் ஆய்வுகள் எல்லாவற்றையும் பற்றிய அறிவும் பெற்றிருத்தல் இன்றியமையாத் தேவைகளாகும்.

நல்ல மருத்துவர் என்றோ, மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் என்பதாலோ, நன்றாகப் பத்தி இலக்கியச் சொற்பொழிவு செய்கிறார் என்னும் தகுதியிலோ வேண்டியவர் என்ற அடிப்படையிலோ, உறவுக்காரர் என்ற தொடர்பிலோ, நம்மவர் என்ற எண்ணத்திலோ, அமர்த்தப்படும் பதவி செம்மொழித் தமிழாய்வு நடுவ நிறுவனத் துணைத்தலைவர் பதவி இல்லை!


இவர், காசியில் பா.ச.க அரசு நடத்திய சங்கமம்நிகழ்வினில் இந்தியிலும் தமிழிலும் தொகுப்புரை தந்தவராம். இந்திய நாடாளு மன்றக் கட்டடத் திறப்புவிழா நிகழ்ச்சியிலும் இவர் இந்தியிலும் தமிழிலும் வண்ணனைத் தொகுப்புரை தந்தாராம். இவையும் கூட செம்மொழித் தமிழாய்வு நடுவ நிறுவனத் துணைத்தலைவர் பதவிக்கான தகுதிகள் என்று எந்த அறிவாளியும் கூறார். சுதா சேசையன் விகடன் குழுமத்தின் அறிதி (தகவல்) களஞ்சியத்தின் பதிப்பாசிரியராக இருந்தாராம். இது எவ்வகையிலும் அண்மைப் பதவி அமர்த்தத்திற்கான தகுதியாக இருக்கமுடியாது. இவர் பெற்றுள்ளகேப்டன் சேசாத்திரிநாதன் பட்டம் எந்தவகையும் இந்தப் பதவி அமர்த்தத்திற்குத் தொடர்புடையதன்று.

கொஞ்சம்கூட பொருத்தமற்ற இப்பதவி அமர்த்தத்தை நற்றமிழ்கடுமையாகக் கண்டிக்கின்றது. இந்தப் பதவி அமர்த்தம் உண்மையான தமிழறிஞர்களையும் தமிழ் ஆய்வாளர்களையும் இழிவுபடுத்தும் செயலாக நற்றமிழ் கருதுகின்றது. உடனே இப்பதவி அமர்த்த ஆணையைத் திரும்பப்பெற வேண்டுமென்றும் தகுதியான தமிழாய்வறிஞர் ஒருவரைத் தேர்ந்து அமர்த்தம் செய்யவேண்டுமெனவும் இந்திய ஒன்றியஅரசை நற்றமிழ்வலியுறுத்துகின்றது.

இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்து

அதனை அவன்கண் விடல். கு.517.

(புதுவை 'நற்றமிழ்' செபுதம்பர் -அக்குதோபர் 2024 இதழில் வந்தது)


வணிகர் தலைவர் த.வெள்ளையனார் மறைந்தார்!

 

வணிகர் தலைவர் த.வெள்ளையனார் மறைந்தார்!


 

தமிழ்நாடு வணிகர் அமைப்புகளின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன் உடல்நலக் குறைவால் 10-9-2024 அன்று அவருடைய 76ஆம் அகவையில் காலமானார்.

வணிகர்கள் அன்றைய காலக்கட்டத்தில் எதிர்கொண்ட குமுகப் பகைவர்களின் அச்சுறுத்தல், அரசு அதிகாரிகளின் வரம்புமீறல் முதலியவற்றை முடிவுக்குக் கொண்டுவர, தமிழகத்தில் பல்வேறு அணிகளாகப் பிரிந்து கிடந்த வணிகர்களை ஒருங்கிணைத்தவர் த. வெள்ளையனார் ஆவார்; வணிகர்களின் உரிமைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்; வணிகர்களின் கோரிக்கைகளை வெற்றிபெறச் செய்தவர்.

வாணிகம் தொடர்பான அரசின் வரி விதிப்புக் கொள்கைகள்வணிகர்களைத் தாக்காமல் இருக்கக் கேடகமாகச் செயல்பட்டவர். நாட்டுமக்களின் பொதுச்சொத்தான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்க்குத் தாரைவார்க்கும் நிலையையும், சில்லறை வணிகத்தில் அயலவர் முதலீட்டிற்குத் திறந்துவிட இந்திய ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கடுமையாக எதிர்த்துப் போராடியவர். இடச்சாரிக் கட்சிகளோடும், மக்கள்நாயக ஆற்றல்களோடும் இணைந்து செயல்பட்டவர். வணிகர் நலன்களைப் பாதுகாக்கும் போராட்டத்தில் உழவர்கள் பெருந்துணையிருக்கக் காரணமானவர்.

வணிகர்அமைப்பின் தலைவர் என்பதையும் கடந்து, ஈழத்தமிழர் நலனுக்காக நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். தமிழினத்துக்கான அத்தனைப் போராட்டங்களிலும் துணையாக இருந்தவர். தூத்துக்குடித் துமுக்கிச்சூடு நிகழ்வைக் கண்டித்து மாநிலம் முழுவதும் வணிகர்களின் கடையடைப்புப் போராட்டத்தை நடத்திய தமிழ்க்குமுக நன்மையில் நாட்டம் கொண்ட மாந்தர் அவர்.

தலைவர் வெள்ளையன் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர்; தமிழ்த்தேசிய உணர்வாளர்; தமிழீழ விடுதலை, ஏழு தமிழர் விடுதலைப் போராட்டங்களுக்குத் துணைநின்றவர். அவரது மறைவு வணிகர்களுக்கு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டுக்கே ஏற்பட்டுள்ள பேரிழப்பு ஆகும்.

(புதுவை 'நற்றமிழ்' செபுதம்பர் அக்குதோபர் 2024 இதழில் வந்தது)