திரு.வி.க. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரு.வி.க. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

திரு.வி.க. வின் இறுதிச் சொற்கள் – கி.ஆ.பெ..வி. எழுதிய செய்தி!






திரு.வி.க. வின் இறுதிச் சொற்கள் கி.ஆ.பெ..வி. எழுதிய செய்தி!
-------------------------------------------------------------

தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களும் நண்பர்களாக இருந்துள்ளனர். பல நேரங்களில் கி.ஆ.பெ.வி., திருவிகவைக் கண்டு பேசியிருக்கிறார்.

மறைமலையடிகளுக்கும் பெரியாருக்கும் முரண் ஏற்பட்ட காலத்தில், அடிகளார்மீது, பெரியாரைக் கொலைசெய்யத் தூண்டினார் எனக் குற்றம் சுமத்தி வழக்கொன்றும் போடப்பட்டிருந்தது. அவ்வழக்கைத் திரும்பப்பெறச் செய்ததற்குத் திரு.வி.க.வும் கி.ஆ.பெ.வி.யும் காரணமாக இருந்திருக்கின்றனர்.

திரு.வி.க., தாம் எழுதி வெளியிட்ட தம் வரலாற்றில், கி.ஆ.பெ.வி.யைப்பற்றி நீண்டதொரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.   

திரு.வி.க., அகவை முதிர்ந்து, நடைதளர்ந்து, கண்பார்வை குறைந்து, செயலிழந்து இல்லத்தில் இருக்கம் பொழுது, கி.ஆ.பெ.வி. பலமுறை சென்று அவரைப் பார்த்திருக்கிறார். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கச் சென்றபோதும், முனைவர் மு.வரதராசனார் அங்கு இருந்திருக்கிறார். மு.வ., திருவி.க.வைத் தம் தலைவராகவும் தம் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் கருதி வந்ததாகக்  கி.ஆ.பெ.வி. எழுதியுள்ளார்.

கடைசியாக ஒருமுறை கி.ஆ.பெ.வி., திரு.வி.க.வைக் காணச் சென்றநிகழ்வினை அவர் எழுதியவாறே கீழே காண்க:

திரு.வி.க. அவர்கள் படுக்கையில் அசைவின்றிக் கிடந்தார். கி.ஆ.பெ. வந்திருக்கிறார் என்று டாகடர் மு.வ., அவர்கள் காதருகில் சென்று உரக்கக் கூவினார். திரு.வி.க. கையை அசைத்து உட்காரச் சொன்னார்.

நான் அவரருகில் சென்று அவரது கையை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு,
ஐயா! நாட்டுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
மொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
மக்களுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
என்று கேட்டேன்.
அதையே அவர் மிகவும் ஓசை குறைந்த சொற்களால் திரும்பக் குறிப்பிட்டு,
நாடு இருக்கிறது... மொழி இருக்கிறது... மக்கள் இருக்கிறார்கள்... நீங்களும் இருக்கிறீர்கள்... பார்த்துக் கொள்ளுங்கள்
என்று கூறினார்கள். நாங்கள் கண்கலங்கினோம்....
வாழட்டும் திரு.வி.க. புகழ்!
வளரட்டும் திரு.வி.க. மரபு!
 - என்று முடித்திருக்கின்றார் கி.ஆ.பெ.வி.

(கி.ஆ.பெ.விசுவநாதம் படைப்புகள் 3, நெய்தல் பதிப்பகம், சென்னை-5., பக்கம் 397-399)
--------------------------------------------------------------


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பெரியாரைப் பற்றித் திரு.வி.க. எழுதியவை…!



பெரியாரைப் பற்றித் திரு.வி.க. எழுதியவை

           முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிரசு தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப் புகுந்தால் முதல் பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரசு நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது.
     அவர் காங்கிரசு வெறிகொண்டு நாலா பக்கமும் பறந்து பறந்து உழைத்ததை யான் நன்கு அறிவேன். நாயக்கரும் யானும் சேர்ந்து எங்கெங்கேயோ தொண்டு செய்தோம்; காடுமலை யேறியும் பணிபுரிந்தோம்!

            இராமசாமி நாயக்கர் ஒத்துழையாமையில் உறுதி கொண்டு பலமுறை சிறை புகுந்தனர். அவ்வுறுதிக்கு இடர் விளைத்தது சுயராச்சியக் கட்சி. சுயராச்சியக் கட்சியின் கிளர்ச்சிக்கு இணங்கிக் காங்கிரசு சட்டசபை நுழைவுக்கு ஆதரவு நல்கியது நாயக்கருக்கு எரியூட்டிற்று *தி.வா.கு.(ப. 433)

            வைக்கத்தில் (1924) தீண்டாமைப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கே சென்று சத்தியாக்கிரகம் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் வைக்கம் வீரர் என்ற தலைப்பீந்து நாயக்கரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது நாயக்கருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று - *தி.வா.கு.(ப.435-436)

            1938-இல் பெரியார் கட்டாய இந்தியை எதிர்த்ததால் சிறைப் படுத்தப்பட்டபோது திரு.வி.க. நவசக்தி ஆசிரியருரையாக எழுதியிருந்ததின் பகுதி:

            திரு.ஈ.வெ.இராமசாமி கடுங்காவல் தண்டனை ஏற்று, சிறைக்கோட்டம் நண்ணினர். வெள்ளிய தாடி அசைய, மெலிந்த தோல் திரங்க, இரங்கிய கண்கள் ஒளிர, பரந்த முகம் மலர, கனிந்த முதுமை ஒழுக ஒழுகத் தாங்கிய தடியுடன் அவர் சிறைபுகுந்த காட்சி, அவர்தம் பகைவர், நொதுமலர், நண்பர் எல்லார் உள்ளத்தையும் குழையச் செய்திருக்குமென்பதில் ஐயமில்லை!
     முதுமைப் பருவம்! காவல்! கடுங்காவல்!  என்னே! இந்நிலையை உன்ன உன்ன உள்ளம் உருகுகிறது.
                ______________ 

*தி.வா.கு திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்.

நன்றி! நூல்: தமிழ் இதழியல் சுவடுகள் (பக்கம் 118,177,178), மா.சு.சம்மந்தன், தமிழ்க் குடியரசுப் பதிப்பகம், சென்னை-5.
---------------------------------------------------------