வெள்ளி, 18 ஜூலை, 2008

தமிழ்மக்கள் சிந்தனைக்கு...!


            தமிழர்களுக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள், தொல்காப்பியம் என்னும் இலக்கண இலக்கிய நூலே மிகப்பழமையான நூலாக உள்ளது. இந்நூல் 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என மொழியாய்வர் கூறுகின்றனர்.

            இந்நூலில், நூலாசிரியர் தொல்காப்பியர் அவருக்கும் முன்னர் இத்தமிழ் மண்ணிலிருந்த மொழி அறிஞர்களும் நுண்கலை வல்லாரும் பிற பெரியோரும் இவ்விவ்வாறு கருதினர் என்பதைக் குறிக்கும் வகையில், 'என்ப', 'என்மனார்', 'கூறுப', 'மொழிப' முதலான சொற்களை இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கையாண்டிருக்கின்றார்.


            இவையுந் தவிர, மரபு என்னும் சொல் தொல்காப்பியத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகின்றது. மரபியல் என்று ஓர் இயலே தொல்காப்பியத்தின் உறுப்பாக உள்ளது.


            இவற்றிலிருந்து சில செய்திகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது. தொல்காப்பியத்திற்கும் முன்னரேயே, பல துறைகளிலும் தமிழர்கள் நுண்ணறிவோடு பல நூல்களை உருவாக்கித் தந்திருக்கின்றார்கள் என்ற உண்மை தெரிகிறது. உயர்ந்த இலக்கியங்களையும் கலை அறிவியல் நூல்களையும் படைத்தளித் திருந்தமையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இவற்றிற்கான சான்றுகளையும் தொல்காப்பியத்தில் காணமுடிகிறது.


            தொல்காப்பியத்திற்கும் முன்பே தமிழ் இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாகத் தெரிகின்றது. அவற்றிற்கும் முனபே உயர்ந்த இலக்கியங்களும் நுண்கலை நூல்களும் இருந்திருக்க வேண்டுமெனவும் அவற்றிற்கும் முன்னரே பேச்சு மொழி வளர்ந்திருக்க வேண்டுமெனவும் தெளியத் தெரிகின்றது.


                        ஆம்! தமிழர் தொன்று தொட்டே - அதாவது மாந்தனாகப் படிமலர்ச்சி யடையத் தொடங்கிய காலத்திலிருந்தே - படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மொழி, பண்பாடு, நாகரிகத்தில் வளர்ந்து, உயர்ந்த நிலையெய்திச் செழித்திருந்த உண்மை தெரிகிறது. இந்நிலை எப்போது மாற்றமுற்று இன்றுள்ள தாழ்வுக்குக் காரணமாகியது?


            இந்தியாவிற்குள் புகுந்த ஆரியர், தெற்கு நோக்கிய அவர்களின் செலவின்வழி, தமிழ் மொழியின் வளச் சிறப்பையும் தமிழரின் வாழ்வியற் சிறப்பையும் கண்டறிந்து வியந்தனர். அவர்தம் கரவான சூழ்ச்சி வினைகளால் அச்சிறப்புகளைக் கவர்ந்து கொண்டு, அவர்தம் மொழியையும் வாழ்வையும் உயர்த்திக கொள்ளவும், தமிழையும் தமிழரையும் இழித்துத் தாழ்த்தவும், பலவாறாக முனைந்தியங்கினர்.


            இவ்வுண்மைகளைப் பரிதிமாற் கலைஞரின் 'தமிழ்மொழியின் வரலாறு' என்னும் நூலும் பிற ஆய்வறிஞர்களின் நுண்மாண் நுழைபுல ஆய்வு வெளிப்பாடுகளும் தெள்ளிதின் விளக்குகின்றன.


            மெல்ல மெல்ல, சிறிதுசிறிதாகத் தமிழில் வடசொற் கலப்பையும் தமிழ்ச்சொற்கள் வழக்கொழிப்பையும் மிகக் கரவோடும் திறத்தோடும் அவர்கள் மேற்கொண்டனர். தமிழர்தம் வீட்டு நிகழ்ச்சிகளில் திறக்கரவாகச் சமற்கிருதத்தை நுழைத்தனர். தமிழ், தன் நிலையிழந்து குலைந்துலைந்து இழிந்திட நேர்ந்தது.


            மடமுடவர்களாகவும் மதமடவர்களாகவு மிருந்த தமிழ் மன்னர்கள் ஆரியச் சூழ்ச்சியில் மயங்கி அவர்களின் எல்லாச் செயல்களுக்கும் துணை போயினர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்வீழ்ச்சிநிலை தொடர்ந்தது; இப்போதும் கூடத் தொடர்ந்து வருகின்றது.


            இற்றைக்கு இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர், உணர்வுற் றெழுந்த தமிழர்சிலர், தம் தாய்மொழியும் தாமும் தம் நாடும் வீழ்ந்துவிட்ட நிலையறிந்தனர். எப்பாடு பட்டேனும் அவற்றை மீட்க உறுதிபூண்டுச் செயற்படத் தொடங்கினர்.


            இப்பணியில், அவ்வணியில், தமிழறிஞர்களும் குமுகாய விடுதலைச் சிந்தனையாளரும் இருந்தனர். தமிழர்கள் நிலையிழந்து வீழ்ந்து கிடக்கும் அவலத்தை அவர்களுக்கு எழுத்து, பேச்சு, கூத்து போன்றவற்றால் விளக்கித் தமிழர் எழுச்சிபெறச் செய்யப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர்.


            நிறை தமிழ் மலையாம் மறைமலையடிகள், மாகறல் கார்த்திகேயனார், திரு.வி.க., வ.உ.சி., அயோத்திதாசர், பாவாணர், பாவேந்தர், வ.சுப.மா., பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற தமிழறிஞர்களும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணாத்துரை போன்ற பெரியோர்களும் தமிழரின் மொழி, பண்பாடு, நாகரிகம், வரலாறு போன்றவற்றின் மீட்சிக்கும் தமிழரின் உயர்ச்சிக்கும் அரும்பாடு பட்டோருள் சிலராவர். தந்தை பெரியார் தமிழர் தன்மான உணர்வு பெறவேண்டு மென்பதற்காகவே ஓர் இயக்கம் தொடங்கினார்.


            கொஞ்சம் கொஞ்சமாக, பையப் பைய பயன் விளைந்தது. தமிழர் தம் தாய்மொழியைப் பிறமொழிக் கலப்பின்றி எழுதவேண்டு மெனவும், தமிழ்ப் பெயரே தாங்கவேண்டு மெனவும், தம் குடும்ப நிகழ்ச்சிகளிலும் தாம் வழிபடும் தமிழகக் கோவில்களிலும் வடமொழியை அறவே விலக்கித் தழிழே இடம்பெறச்செய்யவேண்டுமெனவும் விழிப்புணர்வு கொளுத்தப் பட்டனர்.


            வேதாசலம் சுவாமிகள், மறைமலை அடிகளாகி வழிகாட்டினார். அவரின் 'ஞானசாகரம்' இதழ் 'அறிவுக்கடல்' ஆயிற்று. நாராயணசாமி தம் பெயரை நெடுஞ்செழியன் என்று மாற்றிக் கொண்டார். இராமையா அன்பழகனானார். இவ்வாறே பலரும் தமிழ்ப்பெயர் தாங்கியதோடு அவர்களின் பிள்ளைகளுக்கும் தூயதமிழ்ப் பெயரையே சூட்டி வழங்கினர்.


            தந்தை பெரியாரின் தளராத பேருழைப்பால், தமிழர் தனமானத் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தில் மூடநம்பிக்கை இழிவுகள் நீக்கி, வடமொழியை விலக்கி, நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கின. தாய்மொழியில் எல்லாருக்கும் புரியும் வகையில் சடங்கு நிகழ்ச்சிகள் நடத்தத் தொடங்கினர்.


            ஆனால், தமிழப் பற்றையும் தனமானத்தையும் வலியுறுத்தி வந்தோர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த சில ஆண்டுகளிலேயே, வரலாறு திரும்பத் தொடங்கி விட்டது. இன்றைய நிலையை எண்ணிப் பாருங்கள்! தமிழ் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழர்களிடமிருந்து விலக்கப்பட்டு வருகிறது.


            பல தமிழ்க் குடும்பங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் எழுதத் தெரியவில்லை. தமிழில் பேசுவதையும் இழிவாக எண்ணும் மனப்போக்குக் காளாகி விட்டனர். தமிழ்ப்பெயர் தாங்கிய பாட்டன்களின் பெயரன்களுக்கு மொழி புரியாத, பொருள் விளங்காத பெயரிட்டழைக்கும் போக்கு வளரத் தொடங்கி யுள்ளது. ஆங்கிலமும் வடமொழியும் தமிழர் வாழ்வை வன்கைப்பற்றலாகப் பற்றிப் பறித்துவிட்ட நிலை நிலவிடுவதைக் கண்டு கொண்டு வருகின்றோம்.


            செய்தித்தாள்கள், இதழ்கள், மின் ஊடகங்களில் ஆங்கிலம் வடமொழி முதலான அயல்மொழிகளில்தான் எந்தப்பேச்சும் உரையாடலும்! இடையிலே இணைப்பிற்காக ஓரிரு தமிழ்ச்சொற்கள்!


            கோயில்களில் பல்லாண்டுகளாகப் பெரும் போராட்டம் நடத்திய பின்னும் சில மணித்துளிகள் தேவாரம் திருவாசகம் ஓதலாம் என்று சலுகையாம்! தில்லையில் மட்டுமன்று! தமிழ்நாட்டின் எல்லா ஊர்க் கோயில்களிலும் தமிழ் வழிபாடு எனபது அறவே இல்லை!


            நம் சிற்றூர்க் காத்தமுத்துவுக்கும் கருத்தமுத்துவுக்கும் இடையிலான வழக்கு நயன் மன்றத்தில் ஆங்கிலத்தில்தான் நடைபெறுகிறது. சிற்றூர்ச் சின்னத்தாயி முறையீட்டுக்கு அரசு ஆங்கிலத்தில் விடைமடல் விடுக்கிறது!


            இசையரங்குகளில் தமிழிசைக்கு இடமில்லை. தெலுங்கும் வடமொழியும் பரக்கவிரித்து அமர்ந்து கொண்டு தமிழை உள்புகவிடாத நிலை!


            கவர்ச்சி ஓவியக் கழிசடைத் தாளிகைகள் இளைஞர்களைப் பாழ்வழிக்குத் துரத்துகின்றன. தப்ப முயல்வாரைத் தொலைக்காட்சியின் சோடி எண் ஒன்று, மானாட்ட மயிலாட்ட ஆட்ட பாட்டங்கள் பணபாட்டுச் சீரழிவை நோக்கி மின்னல் வேகத்தில் செலுத்து கின்றன.


            தமிழக மீனவர்கள் இனவெறிச் சிங்களக் கொலைவெறிப் படையால் நாள்தோறும் - கிழமைதோறும் - மாதந்தோறும் - தாக்கப் படுவதும், சுட்டுக் கொல்லப் படுவதும் அவர்களின் மீன்களும் வலைகளும் கொள்ளையடிக்கப் படுவதும் இங்கு வாடிக்கையான இயல்பு நிகழ்ச்சிகள்! இலங்கைத் தமிழன் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு பூண்டோடு கொன்றழிக்கப் படுவதைப் பற்றி இங்கு எவருக்கும் கவலையில்லை!


            இரண்டு, மூன்று தலைமுறைக்குள், எழுந்துநிற்க முயன்ற இத்தமிழன் ஆழக்குழியில் குப்புற வீழ்ந்துவிட்ட நிலையையே காண்கின்றோம். இனியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேண்டுமா? இன்னொரு பெரியாரும் இன்னொரு மறைமலையும் வருவார்களா? இல்லை, இப்படியே தமிழர் வரலாறு முடிந்துவிட வேண்டுமா?


            தமிழ்மக்களே, தமிழிளைஞரே, சிந்திப்பீர்!