பாவாணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவாணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 நவம்பர், 2016

பாவாணர் விளக்கும் மதிப்படைச் சொற்கள்



பாவாணர் விளக்கும் மதிப்படைச் சொற்கள்


 
..இளந்தை (youth) கடந்த ஆடவர் பெயருக்கு முன்: திருவாளர் (Mr.)
இளந்தை கடந்த பெண்டிர் பெயருக்கு முன்: திருவாட்டி(Mrs.)
கண்ணியம் வாய்ந்த ஆடவர் பெயருக்கு முன்: பெருமான்
கண்ணியம் வாய்ந்த ஆடவர் பெயருக்கு முன்: பெருமாட்டி....
இளந்தை = இளமை...

மதிப்பான மக்கட்டன்மையைக் குறிக்கும் திருவாளன் என்னும் அடைச்சொல், திரு. என்று குறுகிநிற்கும்போது முற்றுப்புள்ளி பெறவேண்டும். அல்லாக்கால், தெய்வத்தன்மையுணர்த்தும் திரு என்னும் சொல்லோ டொப்பக்கொண்டு மயங்க நேரும்.
எ-டு: திருநாவுக்கரசு (இறையடியார் பெயர்)
     திரு. நாவுக்கரசு (பொதுமகன் பெயர்)
இறையடியார் பெயரே, பொதுமகன் பெயராயின் அப்படியே யிருக்கலாம். புள்ளி வேண்டியதில்லை.

துறவியர் பெயருக்கு முன் தவத்திரு என்பதையும், தமிழ்த்தொண்டர் பெயருக்கு முன் தமிழ்த்திரு என்பதையும், 
மறையொழுக்கத்தினர் பெயருக்குமுன் மறைத்திரு என்பதனையும் அடைச்சொல்லாக ஆளலாம்.
எ-டு: தவத்திரு குன்றக்குடியடிகள்
     தமிழ்த்திரு மறைமலையடிகள்
     மறைத்திரு மணியம் அவர்கள்

சிறீலசிறீ என்னும் சிவமடவழக்கை திருத்தவத்திரு அல்லது பெருந்தவத்திரு என்று குறிக்கலாம்.
திருமதி என்னும் அடைச்சொல், திரு என்னும் தென் சொல்லையும் மதி என்னும் வடமொழியீற்றுத் திரிபையும் கொண்ட இருபிறப்பி (hybrid) ஆதலால், உதை அறவே விலக்கல் வேண்டும். 
திருமகன் திருமான் >சிறீமத் (வடமொழி) சிறீமதி (பவண்பால்)
திருவாட்டி சிறீமதி
திருவாட்டி என்னும் தூய தென்சோல்லை நீக்கிவிட்டுத் திருமதி என்னும் இருபிறப்பியை ஆள்வது,
பேதைமை என்ப தியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்                      - (குறள்.831)
என்னும் திருக்குறட்கே எடுத்துக்காட்டாம்….

இனி, மதிப்படைச்சொற்கள் (1) முன்னடைச்சொற்கள் (2) பின்னடைச்சொற்கள் என இரு வகைய.
கண்ணியம் வாய்ந்தவர் பெயருக்குப்பின் அவர்கள் என்று குறிப்பது பின்னடைச்சொல்லாகும்.அது உயர்வுப்பன்மை. அதற்கு ஒருமையும் பன்மையும் இல்லை.
எ-டு: திரு. மாணிக்கவேல் அவர்கள்

ஆற்றலும் தேர்வுப்பட்டமும்:
புலமையும் தொழிலும் குறித்துவரும் சோற்கள் முன்னடையாக வரின் வேறடை தேவையில்லை.
எ-டு: பண்டிதமணி கதிரேசனார்
     புலவர் சின்னாண்டார்
     பேராசிரியர் சொக்கப்பனார்
     மருத்துவர் கண்ணப்பர்
     புதுப்புனைவர் கோ.துரைசாமி...
பேராசிரியர் என்பதை பேரா. என்று குறுக்கலாம்.

சிலசொற்கள் முன்னடையாகவும் பின்னடையாகவும் ஆளப்பெறும்.
எ-டு: புலவர் புகழேந்தியார், புகழேந்திப் புலவர்...

அவர்கள் என்னும் பின்னடையை எவர் பெயர்க்கும் பின் குறிக்கலாம். அது எழுதுவாரின் நிலைமையையும் விருப்பத்தையும் பொருத்தது...

அரசியல் பதவிகள் பற்றிய முன்னடைகள்:
The Hon’ble                 : பெருந்தகை
The Right Hon’ble        : மாபெருந்தகை
His Worship                 : வணங்குதகை
His Lordship                 : குருசில்தகை
His Excellency  : மேன்மை தங்கிய
His Highness                 : உயர்வு தங்கிய
His Majesty                  : மாட்சிமை தங்கிய

மதவியல் பற்றிய முன்னடைகள்:
Rev.                             : கனம்
Rt. Rev.                        : மாகனம்
His Grace                     : அருட்டிரு
His Holiness                 : தவத்திரு

(பாவாணர் தமிழ்க்களஞ்சியம் -33, தமிழ்மண், சென்னை-17)
-------------------------------------------------------------

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

‘கல்வி’யின் தொடக்கம் – பாவாணர் விளக்கம்!



கல்வியின் தொடக்கம் பாவாணர் விளக்கம்!


      மக்கள் நாகரிகமில்லாத மாண்முது பழைமையிற் குறுந் தொகையராய்க் குறிஞ்சி நிலத்து வாழ்ந்தபோது காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருள்களையே உண்டு வந்தனர். உண்பதும் உறங்குவதுமே அவர்க் கிருபெருந்தொழில். மக்கட் டொகை மிகமிக இயற்கை விளைவு போதாதாயிற்று.

     விதைகள் நிலைத்திணை வகையினின்றும் கீழே விழுந்து நிலத்தில் முளைப்பதை முன்னமே உற்று நோக்கி உன்னித்திருந்தனர். அஃதன்றி வள்ளிக்கிழங்கைப் பன்றிகள் உழுதவிடத்து விழுந்த விதைகள் விரைவில் முளைத்து, அடரந்தோங்கி, விழுமிய பலன்றந்ததையுங் கண்டிருந்தனர். ஆதலால் அவரே அத்தகை யிடங்களிற் செயற்கையிற் பயிர்பச்சைகளை விளைக்கத் தொடங்கினர்.

  பன்றியுழுதவிடத்துப் பயிர் விளைப்பதை...
     அருவி யார்க்குங் கழையி ன்னந்தலைக்
     கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
     கொடுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
     கடுங்கட் கேழ லுழுத பூழி
     நன்னாள் வருபத நோக்கிக் குறவ
     ருழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை  -(புறம்.168) என்பதாற் காண்க.

     ஆகவே, முதன்முதல் மக்கள் கற்ற கல்வி உழவுத்தொழில் என்பதே புலனாகின்றது. உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு அதனாற் பெறப்படுதலின், கல்வி என்னும் சொல்லும் உழவுத்தொழிலையே முதன்முதன் குறித்தது.....

     உழவாவது நிலத்தை அகழ்தலும் நிலைபெயர்த்தலும் பூழியாக்கலும் ஏருமெருதுங்கொண்டுழவறியாத பழங்காலத்துக் கல்லுங் கழியுங் கருவியாக நிலத்தை அகழ்தலே உழவாயிற்று.  அக்காலத்தும் குறிஞ்சிநிலத்தும் மழைக்குக் குறையின்மையின் நீர்பாய்ச்சவும் வேண்டாதாயிற்று.

     கல்லல், தோண்டல், உழுதல் என்பன ஒருவினை குறித்தலின் ஒருபொருட் கிளவி. ஆகவே கல்வி என்பது முதன்முதல் உழவு குறித்த கிளவியே யென்பது பெற்றாம்.
 (பண்பாட்டுக் கட்டுரைகள் பாவாணர், தமிழ்மண், பக். 96,97)
---------------------------------------------------------------------


வியாழன், 7 ஜூலை, 2016

சொல்விளக்கம்: ஐயன்



சொல்விளக்கம்:
ஐயன்:

ஐ என்பது தலைவனைக் குறிக்கும் பெயர்.
என் ஐ முன் நில்லன்மின் என்பது குறள்.

தலைவன் எனினும் பெரியோன் எனினும் ஒக்கும்.
அரசன் ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன் என ஒருவர்க்கு ஐந்து பெரியோர் உளர். அவர்க்கெல்லாம் ஐ என்பது பொதுப்பெயர்.
தாயைக் குறிக்கும்போது அது ஆய் என்று திரியும்.
ஐ என்பது அன் ஈறு பெரின் ஐயன் என்றாகும்.
ஐயன் என்பதற்கு ஐயை என்பது பெண்பால்.
அண்ணனைக் குறிக்கும்போது ஐ, ஐயன் என்னும் சொற்கள் தன்னை, தமையன் எனத் தன் தம் என்னும்முன்னொட்டுப் பெறும்.

தமிழருட் பலவகுப்பார், அவருள்ளும் சிறப்பாகத் தாழ்த்தப்பட்டவர், தந்தையை ஐயன் அல்லது ஐயா (விளிவடிவம்) என்றே அழைக்கின்றனர். ஆசிரியர் எவ் வகுப்பாராயிருப்பினும், அவரை ஐயர் என்றழைப்பது வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தார் வழக்கு.

பெரியோரை எல்லாம் ஐயா என்று குறிப்பதும் விளிப்பதும் தொன்றுதொட்டுத் தமிழர் வழக்கம். மக்களுட் பெரியார் முனிவர் என்னும் கருத்துப்பற்றி, அவரைச் சிறப்பாக ஐயர் என்பது தமிழ் நூன்மரபு.

ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்பது தொல்காப்பியம்.

பிங்கல நிகண்டில் முனிவரைப் பற்றிய 3ஆம் பகுதி ஐயர் வகை எனப் பெயர் பெற்றுளது.

முனிவரிலும் பெரியவர் தெய்வங்க ளாதலின், தெய்வங்கட்கும் கடவுகட்கும் ஐயன் என்னும் பெயர் விளங்கும்.
ஐயன் = சாத்தன் (ஐயனார்), கடவுள்.
ஐயை = காளி, மலைமகள்.
இங்ஙன மெல்லாம் தொன்றுதொட்டு வழங்கும் ஐயன் என்னும் தென்சொல்லை, ஆர்ய என்னும் வடசொற் சிதைவென்பர் வடவர்.

(பாவாணருக்கு நன்றி! தமிழியற் கட்டுரைகள் பக்கம்-11. தமிழ்மண், சென்னை)

--------------------------------------------------------------     

வெள்ளி, 1 ஜூலை, 2016

பெயர் முன் அடை

பெயர் முன் அடை

      திரு என்பது சிறீ என்று திரியவே, திருமான் என்பதை சிறீமான், சீமான் என்றும் திருமாட்டி என்பதை சிறீமாட்டி, சீமாட்டி என்றும் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர்.

திருமான் என்பது திருமகன் என்பதன் மரூஉ.
ஒப்புநோக்கு: பெருமகன் பெருமான்.

பெருமானுக்குப் பெண்பால் பெருமாட்டியாதல் போல, திருமானுக்குப் பெண்பால் திருமாட்டியகும்.

     சிறீ என்பது திரு என்பதன் திரிபே யாதலால், சிறீ அல்லது சீ என்னும் அடைமொழி பின்வருமாறு தமிழில் எழுதப்படும்.

வடமொழி வடிவம்              தென்மொழி வடிவம்
    
     சிறீ                             திரு
     மகா ராஜ ராஜ சிறீ             மா அரச அரசத்திரு
                                     பேர் அரச அரசத்திரு
     சிறீலசிறீ                       திருவத்திரு
                                     திருப்பெருந்திரு
     சீகாழி                          திருக்காழி
     சீகாளத்தி                       திருக்காளத்தி               

     திருநாவுக்கரசு திருமங்கையாழ்வார் முதலிய பெயர்களில் வரும் திரு என்னும் அடை ஆங்கிலத்தில் அடியார் பெயர்முன் சேர்க்கப்படும், St. (Saint)  என்பதற்குச் சமமாய்த் தூய்மை குறிப்பதா யிருப்பதால், அடியாரல்லாத பிற மக்களைக் குறிக்கும்போது திருவாளர், திருவாட்டியார் என்ற அடைஎளையே முறையே ஆண்பாற்கும் பெண்பாற்கும் வழங்குவது தக்கதாகும்.
திருவாளன்மார், திருவாட்டிமார் என்பன பலர்பால் அடைகள்.

     சீகாழியைச் சீர்காழி என்று வழங்குவது சரியாய்த் சோன்றவில்லை. சிறுதனம் சிறீதனம் என்று தவறாய் வழங்குகிறது.

(பாவாணருக்கு நன்றி! மொழிநூற் கட்டுரைகள் பக்கம் 55. தமிழ்மண், சென்னை.)

புதன், 6 மார்ச், 2013

பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு – அறிமுக உரை


பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு அறிமுக உரை


புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் புதுவைத் தனித்தமிழ்க் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளையின் பத்தாம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் புதுவைத் தாகூர் கலைக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் அ.பசுபதி ஐயா அறக்கட்டளை சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில் முன்னதாகத் தமிழநம்பி ஆற்றிய அறிமுகரை கீழே:

     புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புதுவைத் தனித்தமிழ்க் கழகத்துடன் இணைந்து நடத்துகின்ற தேவநேயப்பாவாணர் அறக்கட்டளை பத்தாம் சொற்பொழிவு நிகழ்ச்சியின் தலைவர் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய அரிமாப்பாண்டியன் ஐயா அவர்களே!
      வரவேற்புரை யாற்றிய பு.மொ.ப.ஆ.நிறுவனத்தின் இயக்குநர் பண்பாட்டு மாந்தவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி அவர்களே!
இவ்வாய்வு நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகளே, பணியாளர்களே!
      அரியதொரு ஆய்வுச் சொற்பொழிவாற்ற இருக்கும் பெருமதிப்பிற்குரிய இனிய அன்புப் பேராசிரியர், கணிப்பொறி, தமிழ்க்கணினிப் பயன்பாட்டில் முதன்மையராக விளங்கும் பசுபதி ஐயா அவர்களே!
      மதிப்பிற்குரிய கெழுதகை அன்பர்களாகிய தனித்தமிழ்க் கழகத் தொண்டுள்ளங்களே!
      பல்வேறு பணிகளையும் கவன ஈர்ப்புகளையும் தவிர்த்துவிட்டுத் தமிழ் கருதி குழுமியுள்ள அறிஞர்களே! அன்புத் தமிழ்நெஞ்சங்களே!
      அனைவர்க்கும் வணக்கம்.

      இன்றைக்கு நாம் செவிமடுக்க இருக்கும் அறக்கட்டளைச் சொற்பொழிவின் தலைப்பு மொழிஞாயிறு பாவாணரும் இணையமும் என்பதே. மொழிஞாயிறு பாவாணர் ஐயாவைப் பற்றியும், சொற்பொழிவாற்ற இருக்கும் பேரா.பசுபதி ஐயாவைப் பற்றியும் அறியாத கற்ற புதுச்சேரித் தமிழர் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறலாம்.
     
      மேலும், இக்காலத்தில் இணையத்தைப் பயன்படுத்துவோர், குறிப்பாக இணையத்தில் தமிழில் கணினியைப் பயன்படுத்தும் தமிழர்கள் பெருகி இருக்கின்றனர். தமிழர்களில் பலருக்குத் தனியே வலைப்பதிவு உண்டு. முகநூலில் நாள்தோறும் எழுதுகின்ற தமிழர், குறிப்பாகப் புதுச்சேரித் தமிழர் பலர் இருக்கின்றனர்.  இத்தகு சூழலில் இத்தலைப்பு பொருத்தமானதும் பயன்விளைப்பதுமான ஒன்றென்பது தெளிவு..
       
      அண்மைக் காலத்தில் பாவாணரின் நூற்களைத் தொகுப்பாக வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக நிறுவனரும், பதிப்பாளருமான தமிழ்த்திரு கோ. இளவழகனார், அந்நூல்களின் பதிப்புரையில் ஒருவரைப் பற்றிக் கீழ்காணும் வகையில் நன்றியுணர்வோடு போற்றி வணங்கி குறிப்பிட்டெழுதுகிறார்: "இவர் தோன்றி யிராவிடில்,  குடத்துள் இட்ட விளக்காக இருந்த மொழிநூல் மூதறிஞர் பாவாணர் அவர்களைத் தமிழுலகம் ஏற்றிப் போற்றியிருக்காது; எங்களைப் போன்றவர்களும் அவர்தம் பேரறிவைக் கண்டு மகிழ்ந்திருக்க முட்டியாது."
               
      இளவழகனாரால் இவ்வாறு குறுப்பிடப் பட்டவர்  பாவலரேறு பெருஞ்சித்திரனார்  ஆவார். இத்தகைய சிறப்பிற்குரிய பாவலரேறு ஐயா, பாவாணரைப் பற்றி எழுதுகையில்,  “இவர் வாயினின்று சரமாரியாக வந்துவிழும் தனித்தமிழ் ஆராய்ச்சிக் கருத்துக்களை இதுவரை எந்த அறிஞரும் தமிழ்மொழிக்கு வழங்கிவிட வில்லை. தமிழ்த் துறைக்கு அவர் தொண்டு புதியது; தமிழர்க்கு அவர் கருத்துக்கள் மயக்கறுப்பன; மேனாட்டார்க்கு அவர் நூல்கள் வியப்பளிப்பன. அவர் எடுத்துக்கொண்ட முயற்சி அரியது. தொல்காப்பியர் காலத்திற்குப்பின், தமிழ் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் ஒட்டுமொத்த முயற்சிக்குப் 'பாவாணர்' என்றே பெயரிடலாம்" என அழுத்தம் திருத்தமாகக் கூறுவார்.

தமிழ்க்கெனப் பிறந்து தமிழ்க்கென வளர்ந்து
தமிழ்க்கெனப் பயின்று தமிழ்க்கெனப் பயிற்றித்
தமிழ்க்கென ஓய்ந்து தமிழ்க்கென ஆய்ந்து
தமிழ்க்கென வாழும் தமிழே வாழி!  எனப் பாவாணரை அவர் பாடுவார்.

                இப்போது பாவாணரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் இல்லை என்னும் துணிவிலேதான் நாகங்கள் நச்சு உமிழத் தொடங்கி இருக்கின்றன! எழுத்தே இல்லாமல், செயற்கை வகையால் உருவாக்கப்பட்டது ஒருமொழி. மக்கள் வழக்கு மொழியாக என்றுமே இருந்திடாத அது, வேள்விச்சடங்கு மொழியாக இருந்தது. இவனை அழி; அவனை அழி; எமக்கு இடையூறானவனை அழி எனப் பகைப் பழிமொழியாகச் செவியால் கேட்டுக் கேட்டுச் சொல்லும் மொழியாக இருந்தது அது. அம் மொழியைக் கொண்டுதான், தமிழ், எழுத்தும் சொல்லும் பொருளும் இலக்கணமும் இலக்கியமும் அறநெறியும் மெய்யியலும், வழிபாடும் கலைகளும் அமைத்துக்கொண்டது என்று ஆங்கிலத்திலே நூலாக எழுத ஒ,ருவருக்குத் துணிச்சல் வந்திருக்கிறது!
     
      4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்திர எழுத்துக்கள் கொண்ட செம்பியன் கண்டியூர் கைக்கோடரியைக் கண்டெடுத்த பிறகும், பொருந்தல் அகழாய்வு எழுத்துக்கள காலம் கி.மு. 750 கி.மு.490 என்று அமெரிக்க ஆய்வகம் ஆணித்தரமாக அறிவித்த பின்னரும், ஆதிச்சநல்லூர் தாழி எழுத்துப பொறிப்பின் காலம் கி.மு. 1700 என்று அறிந்த பின்னரும் பொய்யை நச்சாகக் கக்க நாகசாமிகளுக்குத் தெம்பும் திடாரிக்கமும் வரக்காரணம் பாவாணர் இல்லையென்ற அச்சந் தவிர்ந்த நிலையென்றால், மிகையன்று.   
     
      அது நிற்க..., பாவாணர் நாற்பதிற்கும் அதிகமான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்றவர்; எண்பதிற்கும் அதிகமான மொழிகளோடு தமிழின் தொடர்பைக் கண்டு காட்டியவர். மறைமலையடிகளார் வழி நின்று தம் அறிவுழைப்பால் தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் ஆனவர்.
     
      ஐம்பதாண்டுக் கடுங்கடிய உழைப்பில் பாவாணர் எழுதிய 39 தமிழ் நூல்களும், இரண்டு ஆங்கில நூல்களும், 152 கட்டுரைகளும், அருஞ்சிறப் பார்ந்த நூற்றுக் கணக்கான மடல்களும் தமிழருக்கும் உலக மொழியாராய்ச்சி யாளர்க்கும் அரிய விளக்கந் தந்து வருகின்றன. பாவாணரின் அஃகியகன்ற ஆய்வின் பயனாய் விளக்கம் பெற்ற முடிவுகள் ஐந்து. அவையாவன:
  1. தமிழே உலக முதன்மொழி.
  2. தமிழே திராவிடத்திற்குத் தாய்.
  3. தமிழே ஆரியத்திற்கு மூலம்.
  4. மாந்தன் பிறந்தகம் கடலுள் மூழ்கிய குமரிக்கண்டம்.
  5. தமிழனே குமரிக்கண்டத்தில் தோன்றிய மாந்தன்

      பத்தாண்டுகளுக்கும் முன்னரே, மொழிஞாயிறு பாவாணர் அவர்களைப் பற்றிய செய்திகள் இணையத்தில் நிரம்ப இடம்பெற்றிருந்ததாக, மலேசியாவில் வெளியிடப்பட்ட பாவாணர் நூற்றாண்டு விழா மலரில் குறிப்பிட்டிருந்தார்கள். பாவாணர் என்று ஆங்கிலத்தில் தட்டித் தேடினால் செய்தி கிடைக்கும் இணையதளங்களில் சில என்று குறிப்பிட்டுப் பதின்மூன்று இணையதள முகவரிகளையும் தந்திருந்தார்கள்.
     
      இப்போது, கூகுள் தேடலில், தேவநேயப்பப்பாவாணர் என்று தட்டித் தேடினால், பாவாணர் பற்றிய செய்திகள் இடம்பெறும் இடங்கள் இவையிவை என 54 பக்கங்களில் தளங்களின் குறிப்பு கிடைக்கிறது. ஒருபக்கத்திற்கு ஏறத்தாழ பத்துத் தளத்தின் பெயர்கள் இடம்பெற் றிருக்கும். ஆக, 540 இடங்களில் பாவாணரைப் பற்றி எழுதிய செய்திகளை நம்மால் பார்க்க முடியும் என்ற நிலை இருக்கிறது.

      பாவாணர்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டிருந்த மலேசியாவைச் சேர்ந்த கோவலங்கண்ணனார் குடும்பத்தினரின் www.Devaneyan.net என்ற இணைய தளத்திலும், பாவாணரின் மகன்களில் ஒருவரான திரு.மணிமன்ற வாணனின் புதல்வரும் பாவாணனின் பெயரனுமாகிய இம்மானுவல் என்பாரின்  www.devaneyappavanar.com என்ற இணையதளத்திலும் இப்போதும் பாவாணர் பற்றிய செய்திகளையும் அவர் நூல்களையும் காணலாம்.

      பொள்ளாச்சி நசன் என்பாரின் www.thamizham.net என்னும் தளத்திலும் இன்னும் சில தளங்களிலும், நாம் பாவாணரின் நூல்களைப் படிக்கவும் தரவிறக்கிக் கொள்ளவும் முடியும். இன்னும் பலப்பல வலைப்பதிவுகளும் பாவாணரைப் பற்றிய செய்திகளை எழுதி வருகின்றன. அவர் கருத்துக்களைப் பாராட்டியும் மறுத்தும் செய்திகள் வருகின்றன. இவற்றைப்பற்றியெல்லாம் பேராசிரியர் ஐயா  விளக்க விருக்கின்றார்.

      பேராசிரியர் பசுபதி ஐயாவிடம் பயின்ற மாணவர்கள் சிலரும் இங்கு வந்திருக்கக் கூடும். அவர் இன்றும் ஆசிரியராக இருந்து இணையப் பயன்பாடு குறித்து யார் எந்த ஐயம் எழுப்பினாலும், சற்றும் தயங்காது உடனுக்குடன் விளக்கமாக ஐயத்தைத் தெளிவிப்பவர். இணையத்தில் தமிழைக் கையாளல் பற்றியும் வலைப்பதிவு, முகநூல் முதலான பல பயன்பாடுகள் தொடர்பாகவும்  பயிற்றி உதவுவோரில் அவர் முதன்மையானவர். ஒரு கைப்பேசியை வைத்துக்கொண்டே உலகத் தமிழரொடு இடையறாக் கணனித் தொடர்பில் இருக்கின்றவர். அவருடைய வலைப்பதிவுகள்:
  1. http://kalapathy.blogspot.com/
  2. http://httpdevamaindhan.blogspot.com
     தேவமைந்தன் என்ற புனைப்பெயர் கொண்ட அ. பசுபதி ஐயா ஒரு பாவலர்; எழுத்தாளர்; பேச்சாளர். தமிழ்நாட்டிலுள்ள கோவையில் பிறந்தவர். புதுச்சேரி அரசின் தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து தம் 52-ஆம் அகவையில் விருப்ப ஓய்வு பெற்றார். 1968ஆம் ஆண்டு முதல் இவர் படைத்த பாடல்கள், ‘உங்கள் தெருவில் ஒரு பாடகன் (1976)  ‘புல்வெளி (1980) ‘போன்சாய் மனிதர்கள் (1993) என்ற மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன. 1969 முதல் இவர் வானொலி உரைகள் நிகழ்த்தி வருபவர். செந்தமிழும் நாப்பழக்கம்- என்ற இவர்தம் வானொலி உரைத்தொடர் பலமுறை ஒலிபரப்பாகி வருகிறது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்துப் புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தில் தேவமைந்தன் ஆற்றிய உரை,  பல வலைப்பூக்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பாடல்களும் கட்டுரைகளும் எழுதிவரும் தேவமைந்தனின் பாடற் பக்கங்கள் பல வலையேடுகளில் வெளிவந்துள்ளன. என்ற இந்தச் செய்தியும் இணையத்திலிருது திரட்டியதே.
      பேரா. பசுபதி ஐயா பாவாணரைப் பற்றி நன்கறிந்தவர். ஏறத்தாழ பதினொரு ஆண்டுகளுக்கு முன்னரே அவர், பாவாணரும் திருக்குறளும் என்ற தலைப்பில் பாவாணர் நூற்றாண்டு விழா மலரொன்றில் எழுதிய கட்டுரையைப் படித்திருக்கின்றேன். அதற்கும் முன்னரே கூட அவர் பாவாணரைப் பற்றியும் அவர் நூல்களைப் பற்றியும் எழுதியிருக்கக்கூடும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து                                     அதனை அவன்கண் விடல்.                                                                                               என்ற குறளை நன்குணர்ந்த தனித்தமிழ்க் கழகமும் பு.மொ.ப.ஆ.நிறுவனமும் தகுதியான ஒருவரைத் தக்க தலைப்பில் பொருத்தமாக அறக்கட்டளைச் சொற்பொழிவாற்ற அழைத்துள்ளனர். இந்த உரையைக் கேட்கும் நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது என்று கூறி இனியும் இடையில் நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் வாய்ப்பளித்தோர்க்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு. என் உரையை முடித்துக்கொள்கின்றேன்.
-----------------------------------------------------------------

திங்கள், 16 மே, 2011

பாவாணரின் மடல்கள்

   பாவாணரின் மடல்கள்

       அருமையான இலக்கியமாகவும், அரிய ஆய்வுத் திரட்டாகவும், திறமிக்க சொல்லாக்கம் மொழியாக்கங்களின் விளக்கமாகவும், தமிழ்த் தொண்டின் நிலை கூறும் ஆவணமாகவும், அறிவாற்றல் சான்ற வீற்றின் வெளிப்பாடாகவும் பாவாணர் மடல்கள் இருக்கின்றன.
தமிழ்மொழி, தமிழின, தமிழ்நாட்டு நலன்களின் மீட்பில்  நாட்டமுள்ள தமிழிளையோர் தவறாது அறியவேண்டிய பல செய்திகளையும் அவர் மடல்கள் தருகின்றன.
---------------------------------------------------------------------------------
உதவிய நூல்கள்:
1. பாவாணர் கடிதங்கள்                    : புலவர் இரா. இளங்குமரன்
  (கழகம், 1985)
2. பாவாணர் பாடல்களும் மடல்களும்      : இரா. இளங்குமரன்
  (விகனேஷ் வெளியீடு, 2006)
3. தேவநேயப் பாவாணர்                   : இரா. இளங்குமரன்  
  (சாகித்திய அக்காதமி, 2002)
4. பாவாணர் வரலாறு                     : இரா. இளங்குமரன்
  (கழகம், 2000)
5. தென்மொழி (சுவடி: 7, ஓலை: 6-7)  :ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.        
நன்றி!
_______________________________________________________________________________________

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

சொல்லும் சொல்லலும்!

          சொல்லும் சொல்லலும்!

      
     உலகப் பொதுமறையான திருக்குறளில், ஆசிரியர்  திருவள்ளுவர் சொல்லைப் பற்றியும் சொல்லுவதைப் பற்றியும் ஒரு குறளில் விளக்குகிறார். நாம் சொல்ல வந்த செய்தியைச் சொல்லும் போது, நாம் பயன்படுத்தும் சொறகள் தேர்ந்தெடுத்த வையாக இருக்க வேண்டுமாம். எப்படித் தேர்ந்தவை தெரியுமா? நாம் தேர்ந்த சொல்லை நீக்கிவிட்டு வேறு சொல்லை அந்த இடத்தில் பயன்படுத்தினால் முன்னைவிட சிறப்பாக அமைய இயலாதபடியாகத் தேர்ந்தெடுத்தவையாம்!
    
இவ்வாறு சொல் ஆட்சி பற்றி விளக்கியுள்ள ஆசான் திருவள்ளுவர், சொல் என்ற சொல்லைத் திருக்குறளில் 125 இடங்களில் பயன்படுத்தி உள்ளார். இவற்றில் சொல் என்ற வடிவிலேயே 50 இடங்களிலும் பின்னொட்டுகள் சேர்ந்து 75 இடங்களிலும் ஆண்டிருக்கின்றார்.   

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், சொல்லும் வகைகளாக
எடுத்துச் சொல்லியுள்ள சொற்களை அறியும் போது, தமிழின் சொல்வளம் நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது. அச்சொற்களை அவற்றின் பொருளுடன் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. அசைத்தல் : அசை பிரித்துச் சொல்லுதல்.
2. அறைதல் : உரக்கச்சொல்லுதல்.
3. இசைத்தல் : கோவைபடச் சொல்லுதல்  
4. இயம்புதல் : இயவொலியுடன் (இசையோடு) சொல்லுதல்.
5. உரைத்தல் : செய்யுட்கு உரை சொல்லுதல்.
6. உளறுதல் : அச்சத்தினால் ஒன்றிற்கின்னொன்றைச்
              சொல்லுதல்.                                     
7. என்னுதல் : ஒரு செய்தியைச் சொல்லுதல்.
8. ஓதுதல் : காதில் மெல்லச் சொல்லுதல்.
9. கரைதல் : அழுது சொல்லுதல்.
10. கழறுதல் : கடிந்து சொல்லுதல்.
11. கிளத்தல் : ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்.
12. குயிற்றுதல் : கியிற் குரலுல் சொல்லுதல்.
13. குழறுதல் : நாத் தடுமாறிச் சொல்லுதல்.
14. கூறுதல் : கூறுபடுத்துச் சொல்லுதல்.
15. கொஞ்சுதல் : செல்லப் பிள்ளைபோற் சொல்லுதல்.
16. சாற்றுதல் : அரசன் ஆணையைக் குடிகளுக்கு அறிவித்தல்.
17. செப்புதல் : வினாவிற்கு விடை சொல்லுதல்.
18. சொல்லுதல் : இயல்பாக ஒன்றைச் சொல்லுதல்.
19. நவிலுதல் : பலகால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல்.
20. நுதலுதல் : ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.
21. நுவலுதல் : நூலைக் கற்பித்தல்.
22. நொடித்தல் : கதை சொல்லுதல்.
23. பகர்தல் : பகிர்ந்து விலை கூறுதல்.
24. பலுக்குதல் : உச்சரித்தல்.
25. பறைதல் : ஒன்றைத் தெரிவித்தல்.
26. பன்னுதல் : நுட்பமாய் விரித்துச் சொல்லுதல்.
27. பிதற்றுதல் : பித்தனைப் போலப் பேசுதல்.
28. புகலுதல் : ஒன்றை விரும்பிச் சொல்லுதல்.
29. புலம்புதல் : தனிமையாய்ப் பேசுதல்.
30. பேசுதல் : உரையாடுதல் அல்லது மொழியைக் கையாளுதல்.
31. மாறுதல் : மாறிச் சொல்லுதல்.
32. மிழற்றுதல் : கிளிக்குரலில் சொல்லுதல்.
33. மொழிதல் : சொல் திருத்தமாகப் பேசுதல்.
34. வலத்தல் : கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்.
35. வலித்தல் : வற்புறுத்திச் சொல்லுதல்.
36. விடுதல் : மெல்ல வெளியிடுதல்.
37. விதத்தல் : சிறப்பாய் எடுத்துச்சொல்லுதல்.
38. விள்ளுதல் : வெளிவிட்டுச் சொல்லுதல்.
39. விளத்துதல் : விரித்துச் சொல்லுதல்.
40. விளம்புதல் : பலர்க்கு அறிவித்தல்.
41. நொடுத்தல் : விலை கூறுதல்.
42. பாராட்டல் : போற்றி உரைத்தல்.
43. பொழிதல் : இடைவிடாது சொல்லுதல்.
44. பனுவுதல் : செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்.
45. கத்துதல் : குரலெழுப்பிச் சொல்லுதல்.

     தமிழ் இயற்கை மொழி என்றும் முதல் தாய் மொழி என்றும் உலக முதன் மொழி என்றும் பாவாணர் முதலான மொழியியல் அறிஞர்களால் பாராட்டப் படுகின்றது. இப்படிப்பட தகுதிகள் கொண்டதாகத் தமிழ் இருப்பதால்தான் தமிழ் சொல்வளம் மிக்க மொழியாக உள்ளது என்பது பாவாணர் கருத்தாகும்.
    
     சொல்லும்வகைச் சொற்கள் போன்ற வினைச்சொற்களுக்கு மட்டுமின்றி பல்வேறு பெயர்ச் சொற்களுக்கும் மற்ற வகைச் சொற்களுக்குமான பட்டியலை சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்ற நூலிலும் அவருடைய பிற நூல்களிலும் கட்டுரைகளிலும் எடுத்துரைப்பதைக் காணலாம். 

--------------------------------------------------------------    


திருக்குறள் அரிய வாழ்வியல் நூல். மொழி, நாடு, இனம் கடந்த நிலையில், உலகின் மக்கள் அனைவர்க்கும் பொதுவான வாழ்வியல் கூறுகளை அறங்களை ஆட்சிமுறைகளை அக வாழ்க்கை அன்புறவுத் துய்ப்புகளைக் கூறும் நூல். உலகப் பொதுமறை என்று போற்றப்படும் நூல்.
     எல்லாப் பொருளும் இதன்பாலுள, இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை என்பார் மதுரைத் தமிழ்நாகனார். இத்தகைய ஒப்பற்ற உயர்ந்த சிறப்புக்குரிய அறிவார்ந்த நூல் தமிழ்மொழியில்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பேரறிவார்ந்த தமிழ மூதாதையால் எழதப்பட்டுள்ளது என்று தமிழர் பெருமை கொள்ள உரிமையுண்டு. ஆனால், அந்த ஈடிணையற்ற நூல் கூறுகின்றவாறு வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற கடமையைத் தமிழர் மறந்து விடுவதுதான் வருத்தம் தரும் செய்தியாகும்.                              

-----------------------------------------------------------------------------------------------------------