வியாழன், 24 ஏப்ரல், 2008

'தினமணி', 'திண்ணை'யில் வந்த கட்டுரை பற்றிய இருவரின் எழுத்துக்கள் பற்றி ...!



            18-03-2008 'தினமணி'யில் 'தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்'  என்ற ஈர்ப்பான தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. அதன்பின் அதே கட்டுரை திண்ணையிலும் வந்தது. அக்கட்டுரை பற்றிய கருத்துரைகளை அடுத்துவந்த திண்ணையில் 'ரவிசங்கர்' எழுதியிருந்தார். அதற்குப்பின் 'கார்கில் ஜெய்' என்பார் 'தமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்' என்ற தலைப்பில் மேற்கண்ட செய்திகளைத் தொடர்பு படுத்தி எழுதியிருந்தார்.
            இரவிசங்கர் தம் கட்டுரையில், மூலக் கட்டுரை (தினமணி/ திண்ணையில் வந்தது) கூறும் முதன்மையான கருத்துக்களை எடுத்துக்கூறி அவை தொடர்பாக பன்னிரண்டு கேள்விகளை எழுப்பியிருந்தார். பிறமொழிகளில் உள்ள ஒலியை அப்படியே தமிழில் கொண்டுவர வேண்டும் என்றும் அதற்காகத் தமிழ் எழுத்துக்களை மாற்றவேண்டும் என்றும் கூறியுள்ளமை தொடர்பாகத் தம் கருத்துக்களைக் கூறியிருந்தார்.
            இறுதியில், பிறமொழிகளின் ஒலியைத் தம் மொழியில் ஏற்படுத்தற்காக புது எழுத்துகளைப் பெற்றுப் பரவலான மொழிகள் எவையெவை ? அவை தமிழுக்கு நிகராகத் தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவையா?  புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின என்பதற்குச் சான்றுளவா? என்ற கேள்விகளுக்கு மூலக் கட்டுரையாளரிடம் மறுமொழி இருக்காது என்றவாறு எழுதி இருந்தார்.
     கார்கில் ஜெய் தம் கட்டுரையின் தொடக்கத்திலேயே, தமிழில் புது எழுத்துக் குறியீடுகள் ஒலிப்பில் எந்த அளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை என்ற அவருடைய ஐயப்பாட்டைத் தெரிவித்தாலும் மூலக்கட்டுரை ஆசிரியைக்குச் சார்பாகவே கருத்துரைத் துள்ளார். சில கோளாற்றுக் குறும்புக் கூற்றுக்களும் கூட காணப்படுகின்றன.
     Small irrigation system - என்பதற்கு மிகச்சரியான மொழிபெயர்ப்பு 'சிறுநீர்ப் பாசனம்'  சங்கடப் படுத்துகிறது - என்று இவர் எழுதுகிறார். இதைப் பார்த்ததும் 2005இல் வெளிவந்த துளிப்பா (ஐக்கூ) நூலான 'சிதறல்கள்' பக்கம்19இல் உள்ள ஒரு துளிப்பா நினைவுக்கு வந்தது. அது இது:
'சிறுநீர்ப் பாசனம் !' - மொழிபெயர்த்துச் சிரிப்பாய்ச் சிரித்தார்கள்.
'சிறுபாசனம்' என்றோம்.
மொழிவெறி என்கிறார்கள்!
     இத்தமிழ் மண்ணில் ஓடி ஆடி உருண்டு புரண்டு நீர்நிலைகளில் குதித்துக் குளித்து முங்கி மூழ்கி இம்மண்ணை நக்கிச் சுவைத்து நலம் பெற்ற மண்ணின் மைந்தர் எவரும் 'சிறுநீர்ப் பாசனம்' என்று மொழிபெயர்க்க மாட்டார்கள். முடக்கொற்றான் கொடியென்றும் அறியாது அதை, முடக் கொற்றான் மரம் என்று எழுதுவார் போன்றவர்களைத் தவிர, அது மிகச்சரியான மொழிபெயர்ப்பு என்று எவரும் கூறமாட்டார்கள். ஏனென்றால், பாசனப்பயிர், பாசன வாய்க்கால், பாசன நீர் போன்ற வழக்குச் சொற்கள் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
      தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச்சொல் அகரமுதலி' ( Dictionary of Technical Terms) பக்கம் 626இல் 'சிறு பாசனம்' என்றே இருப்பதைக் காணலாம் (இன்னொரு செய்தி : Small irrigation system என்று வழங்குவதில்லை; Minor irrigation என்றுதான் கூறுவது வழக்கம்!)
'ரிஷபம்' , 'மேஷம்' என்றால் மாடு ஆடு என்பதை விட இனிமையாக இருப்பதாக இவரிடம் யாரோ கூறினாரென்றும், 'எருமை' எனச் சமற்கிருதத்தில் திட்டியபோது, இலயோலாக் கல்லூரி மாணவர் பொறுமை காத்தனர், மகிழ்வுற்றனர் எனவும் இவர் கூறுகிற போது 'சாக்குப்பையிலிருந்து பூனை வெளியே வந்து விடுகிறது'! இவற்றைப் படித்தபின் இவர் அந்தக் கட்டுரை ஆசிரியையின் புகழ் பாடுவது குறித்து நமக்கு ஐயம் எழ வாய்பு பறிபோய் விடுகிறது.
        இரவிசங்கர் அவருடைய கேள்விகளுக்கு மூலக் கட்டுரையாளரிடம் மறுமொழி இருக்காது என்றவாறு எழுதி இருந்தார். இது அவருடைய 'ஆணவம்' , திம்ர் என்கிறார் கார்கிலைப் பெயரில் கொண்டவர் அப்படியானால்,
'தமிழ் வெறி'
'தமிழ் அழிவை நோக்கிப் போகும்'
'தனித்தமிழில் எழுதுவது அபத்தம்' ... என்றும்,
(தக்க தமிழ்ச்சொல் தமிழில் இருந்தாலும் பயன்படுத்தாமல்) 'அந்தஸ்து' என்ற அயற் சொல்லைத் தான் பயன்படுத்துவேன் என்றும் - எழுதுவதை என்னவென்பார் இவர்?


ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

ஏமாற்றுத் தமிழ்ப்பற்று!


காலஞ்சென்ற மதிப்பிறகுரிய திரு. இராம சம்பந்தம் ஐயா 'தினமணி'யின் ஆசிரியர் பொறுப்பினின்றும் நீங்கிய பின்னர், அந்நாளேட்டின் போக்கை நடுவுநிலைத் தமிழர்கள் கவனித்து வருகின்றனர்.
7-7-2007ஆம் நாள் தினமணியின் ஆசிரியருரை தமிழில் ஆங்கிலம் கலக்கப் படுவதைப் பற்றி மிகவும் கவலை தெரிவித்தது. ஊடகங்களும் இதழ்களும் தமிழ்மொழியின் அழிவிற்கு வழிகோலுவதாகக் கூறியது. தமிழைக் காப்பாற்ற வேண்டுமெனக் கவலைப்பட்டது. ஆனால், அன்றைய தினமணியிலும் அதற்குப்பின் வந்தவற்றிலும் தங்கு தடை தயக்கமின்றி ஆங்கிலச் சொற்கள் கலந்தெழுதியதை - எழுதிவருவதை - எவரும் இல்லையென மறுக்க இயலாது. இப்போக்கே, அந்த ஆசிரியருரைப் போலித் தனமாகவும் ஏமாற்றுத் தனமாகவும் எழுதப் பட்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகின்றது. துணுக்கத் துணுக்கான குற்றச் செய்திகளைத் தொகுத்து அதற்குக் 'கிரைம் செய்திகள்' என்று தினமணி தலைப்பிட்டதும் கூட அந்த ஆசிரியருரை எழுதப் பட்டதற்குப் பின்னர்தான்!
இவையிருக்க, 18-3-2008ஆம் நாள் தினமணியில் "தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்" என்ற தலைப்பில் ஓர் கட்டுரை வந்தது. ஈர்ப்பான தலைப்பில் எழுதப்பட்ட அக்கட்டுரையில், தமிழ் சீரழிக்கப் படுவதற்குக் கவலைப்பட்டு எழுதுகின்ற ஏடுகளில் காணப்படும் பல்வேறு பிழைகள் சிரிப்பை வரவழைப் பதாகக் கூறப்பட்டிருந்தது. அக்கூற்று ஓரளவு உண்மையே! ஆனால், அக்கட்டுரையாசிரியை, தமிழ்காக்கும் நோக்கில் எழுதுகின்ற எல்லா ஏடுகளையும் ஒட்டுமொத்தமாக அங்ஙனம் கூறுவது அவரின் அறியாப் போக்கையே காட்டுகின்ற தெனலாம்.
ஒவ்வொரு நாளேடும் இதழும் தமிழை முறையாகப் பயின்றவரைக் கொண்டு பிழைதிருத்தம் செய்தால் பல்வேறுவகைப் பிழைகளைக் களையலாம் எனக்கட்டுரையாசிரியர் கூறுவது நற்றமிழ் நலம்நாடும் நல்லறிஞர் நெடுங்காலமாக வலியுறுத்திவரும் கருத்தே.
இந்திமொழிப் பாடலை இந்திப்பாடகர் பாடும்போது இருக்கும் இனிமை தமிழ்ப்பாடகர் பாடும்போது இல்லை என யாரோ ஒரு பாடகி கூறியதாக இந்தக் கட்டுரையாசிரியை எடுத்துக் காட்டியிருக்கிறார். தமிழ்ப்பாடலைத் தமிழ்ப் பாடகர் பாடும்போது இருக்கும் இனிமை ஓர் இந்திப்பாடகர் அத்தமிழ்ப்பாடலைப் பாடும்போது இருக்க இயலாது என்ற உண்மையை எண்ணிப்பார்க்க வேண்டாவா?

அடுத்து, எம்மொழியும் எல்லாவகை எழுத்துக்களையும் பெற்றிருக்க இயலாது. ஒவ்வொரு மொழியும், அம்மொழி பேசும் மக்கள் வாழும் இடத்தின் தட்பவெப்ப நிலைகளைப் பொருத்தும் அவர்களின் உணர்வு உணவுகளைப் பொருத்தும் ஒலிகளையும் அவற்றிற்கான எழுத்துக்களையும் பெற்றிருக்கின்றன. சீன எழுத்தின் ஒலிப்பை வேறு எந்த மொழி பெற்றுள்ளது?

ஒருமொழி தன் இயல்பிற்கேற்காத ஒலியினை ஏற்பின் நாளடைவில் தனக்குறிய சீர்சிறப்புத் தன்மைகளை இழந்து, சிதைந்து வேறோர் கலவை மொழியாகிப்போகும். இதுவேநடைமுறை உண்மையென மொழியறிஞர்கள் விளக்குகின்றனர்.
'' என்ற எழுத்து தமிழ் எழுத்தில்லை என்று புறக்கணிக்கும் தமிழ்வெறியால் தமிழுக்குப் பேரிழப்பு என்று கட்டுரையாசிரியை சீறுகிறார்! உண்மை அறியாமல் உணராமல் வரம்பு கடந்து வாயவிழ்க்கும் கூற்றே இது! தமிழ் என்பதை ஆங்கிலத்தில், "டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தமிஷ், தமிஸ்..." -என்றெல்லாம் தானே எழுதுகின்றனர்! பலுக்குகின்றனர்! '' என்னும் தமிழ் எழுத்தைப் புறக்கணிக்கும் ஆங்கில வெறியால், ஆங்கிலத்திற்குப் பேரிழப்பு என அம்மையார் கூறுவாரா? ', , ன..' போன்ற எழுத்துக்களைப்புறக்கணிக்கும் சமற்கிருத வெறியால், சமற்கிருதத்திற்குப் பேரிழப்பு என அந்த அம்மையார் எழுதிவிடுவாரா?

பிற மொழிகளிலுள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்துத் தமிழை வளப்படுத்த வேண்டும் என்று கூறுவதுதானே சரி. அவ்வாறின்றி, பிறமொழி எழுத்துக்களையும் பிறமொழிச் சொற்களையும் தமிழ் ஏற்றுக்கொள்ள வேண்டுவென வற்புறுத்துவது எவ்வாறு சரியாகும்? அவ்வாறு அயல் எழுத்தும் அயற்சொற்களும் கலந்தால், தமிழ் தன் இயல்பு கெடும்; சீர்மை குன்றும்! தமிழை அடையாளந் தெரியாத மொழியாக்கி அழித்தொழிக்கும் செயலாகவே அம்முயற்சி அமையும் அன்றோ?
"பற்றுதலுக்குப் பதிலாய் வெறியை மேற்கொண்டால் தமிழ் அழியும்" என்று சாவமிடும் கட்டுரையாசிரியை, 'பற்று'க்கும் 'வெறி'க்கும் என்ன விளக்கங்களை வைத்திருக்கின்றார் என்பதையும், அவற்றை அளந்து காட்ட வைத்திருக்கும் அளவுகோல் என்ன என்பதையும் வெளிப்படுத்தாமல் கமுக்கமாக வைத்துக்கொண்டு விட்டார்.
"தகுதி" என்ற தகைசான்ற சொல்லிருக்க, "அந்தஸ்து" என்ற அயற்சொல்லைத்தான் எழுதுவேன் - என்று அடம்பிடிக்கும் கட்டுரையாசிரியை தமிழை வளர்த்து உலகம் முழுதும் பரப்ப விரும்புவதாகக் கூறுவதைப் படிக்கையில் சிரிப்புமட்டுமா வரும்? உணர்வுமிக்க தமிழர்க்குச் சீற்றமும் வருவது இயல்பே யன்றோ?
தமிழை முறையாக அறிந்துணரவில்லையெனக் கூறிக்கொண்டே, தமிழில் பிறமொழி எழுத்துக்களையெல்லாம் கலந்தெழுத வேண்டுமென வற்புறுத்துவதற்கும், அவ்வெழுத்துக்களை எப்படியெல்லாம் ஒலிக்கவேண்டுமென வலிந்த ஆய்வு(?) மேற்கொண்டு வழிவகை கண்டு வலியுறுத்துவதற்கும் இம்மண்ணில் யாருக்கும் எந்தத் தடையுமில்லையே!
இவர்கள், சமற்கிருதத்தில், உலகிலுள்ள எல்லா ஒலிகளுக்குமான பல்வேறு மொழி எழுத்துக்களையும் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தியும், அவற்றை ஒலிப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து கண்டுபிடித்துக் கூறியும் தொண்டாற்றலாமே! இவற்றை விளக்கி, "சத்தான சமற்கிருதம் சகமுழுதும் பரவட்டும்" என்ற தலைப்பில் 'தினமணி'யில் கட்டுரை எழுதித் தெளிவுறுத்தலாமே? விரைவில் செய்வார்கள் என்று நம்புவோம்!
---------------------------------------------------------------------

வியாழன், 3 ஏப்ரல், 2008

தமிழர் என்று அழைப்பதா?


அறுசீர் மண்டிலம் 

(விளம் மா தேமா) 

ஓதலில் தமிழிங் கில்லை!
          உரைசெயல் தமிழில் இல்லை!
காதலில் அரங்கம் சென்றால்
          கனித்தமிழ் இசையும் இல்லை!
நோதலில் வழிப டற்கே
          நுழையினுந் தமிழே இல்லை!
ஆதலின் தமிழர் என்றே
          அழைப்பதும் சரியே இல்லை!

'பின்னே வரைபேர்' என்னென்றார்!


வஞ்சி (விருத்தம்) மண்டிலம் 

(மா - மா - தேமாங்காய்) 

முன்னே, நீங்கள் யார்?என்றார்;
சொன்னேன் பெயரை; 'இல்லை,உம்
பின்னே வரைபேர்' என்னென்றார்!
என்னே இழிவே! தூ!சாதி!