அகத்தியர் புரட்டு:
தமிழ், தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி! – 3
‘காசி தமிழ்ச் சங்கமம் 3.0’-இன் கருப்பொருளாக
அகத்தியரை இந்தியஒன்றியஅரசின் கல்விஅமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனம் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கியது. சென்னையில்
மாணவரைத் திரட்டி, அகத்தியர் புனைவு நடைச்செலவு, அகத்தியர் பற்றிய நூல்
வழங்கல், படையலுணா வழங்கல், அகத்தியர் கட்டுரைப்போட்டி நடத்தல், ஆங்காங்கே அகத்தியக்
கருத்தரங்கங்கள் நடத்தல் – என வேலைகள் நடந்தன. இவற்றுடன், காசி, அயோத்தி, பிரயாக்குராச்சிற்கும் பலரைக் கூட்டிச்சென்றனர். இவை எல்லாவற்றிற்கும் மக்கள்
வரிப்பணத்தை வாரி இறைத்ததை முன்னரே பார்த்தோம்.
மேலும், செய்தித்தாள்களில் அகத்தியர்
பற்றிக் கட்டுரைகள் எழுதப்பட்டன; மின்ஊடகங்களில்
அகத்தியர் பற்றி நிறைய பேசப்பட்டன. குமுகஊடகங்களில் எழுத்தாளர் மாலன் வகையாரின்
அறிவியல் தொடர்பற்ற பழங்கதை (புராண) அடிப்படையிலான கருத்துகள் வரத்
தொடங்கி, மிகக் கடுமையான எதிர்ப்பு
எழுந்ததால் பேரளவு அடங்கின என்றும் பார்த்தோம்.
தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் அகத்தியர் என்றும் பாரதியார் இதை உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் எழுத்தாளர் மாலன் பேசியும் எழுதியும் வந்தார். அதற்குச் சான்றாக அவர் பாரதி எழுதிய தமிழ்த்தாய்ப் பாடலின்,
ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். – என்னும் அடிகளைஎடுத்துக்காட்டினார். அவரும், அவர் வகையாரும், அவரைச் சார்ந்தோரும், அதே பாரதியின், ‘உயிர் பெற்ற தமிழர்’ என்னும் தலைப்பிலான வேறொரு பாட்டில்,
கடலினைத் தாவும் குரங்கும் - வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே - தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,
நதியி னுள்ளேமுழு கிப்போய் - அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த - திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம். – என்று பாடியுள்ளதை வசதியாக மறந்துவிடுகின்றனர்; மறைத்துவிடுகின்றனர்.
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில்வந்து சமன்செயும் குட்டைமுனி அகத்தியனே கற்பனை என்று பாரதி பாடுவதை நாம் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது. பல இடங்களில், பாரதி, இருவேறு நிலைகளில் இருவேறு வகையாகப் பாடியவர் என்பதை யாவரும் அறிவர்.
தொல்காப்பியர் ஐந்திரம் நிரம்பியவர் என்றும் ஐந்திரம் என்பது வடமொழி இலக்கணம் என்றும் பெருமையாக மாலன் முகநூலில் எழுதுகிறார். மொழிஞாயிறு பாவாணர், ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கணமும், ‘பிராதிசாக்கியங்கள்’ என்னுங் கிளை ‘வேத’ இலக்கணங்களும் தமிழிலக்கணத்தைப் பின்பற்றி எழுந்தவையே என்றும், ஐந்திரம் தமிழகத்திலேயே தோன்றித் தமிழகத்திலேயே அழிந்ததாகத் தெரிகிறதென்றும் ‘செந்தமிழ்ச் செல்வி’ 1979 பெப்பிரவரி கட்டுரையில்
கூறுகிறார். இவை தவிர, மாலன்வகையார்
திரும்பதிரும்பக் கூறும் உரையாசிரியர் கூற்றுகள், கம்பனின் பாடலடிகள் பற்றி முன்னரே விளக்கியுள்ளோம்.
புறநானூறு 201ஆம் பாடலில் வரும் ‘வடபால் முனிவன்’ என்ற பெயர் அகத்தியரைக் குறிப்பதென எழுத்தாளர் மாலனும் அவர்வகையாரும் கூறிக்கொள்கிறார்கள். சம்புமுனிவனை அகத்தியனாக்கும் இவர்கள் முயற்சி வீண் என்னும் வகையில் முன்பே அப் புறப்பாடலின் கருத்தை விளக்கிக் கூறியிருக்கின்றோம். (“வடபால் முனிவன் தடவினுள் தோன்றி” என்று கபிலர் கூறியிருப்பதற்கு, ‘விசுவபுராண சாரம்’ என்னும் தமிழ்நூலையும் ‘தெய்வீக உலா’ என்னும் நூலையும் அடிப்படையாக வைத்து, இங்கு முனிவன் என்று குறிப்பிடப்பட்டது சம்புமுனிவன் என்று உ.வே.சாமிநாத ஐயரே கருத்துரைக்கிறார். ‘தடவினுள் தோன்றி’ – என்றால் ‘வேள்வியில் தோன்றி’ என்று பொருள். இதுவும் கற்பனையான பழங்கதையாகலின் ஆராய்ச்சிக்குரியதன்று எனப் பாவாணரும் பிறரும் கூறுவர்)
அகத்தியர் பற்றி ஓர் ஆங்கில நூல் உட்பட ஏறத்தாழ ஏழு நூல்கள் ஆய்வாளர்களால் எழுதப்பட்டுள்ளன. இவையுந்தவிர, அறிஞர்கள் தனிக்
கட்டுரைகள் பல எழுதியும் அகத்தியர் பற்றி விளக்கம் தந்துள்ளனர். இதுவரை வந்த அகத்தியர்
பற்றிய ஆய்வு நூல்களாவன:
1. K.N. Sivaraja Pillai, “Agastya
in the Tamil Land’ University of Madras. 1930.
2. கா.நமச்சிவாய முதலியார், ‘அகத்தியர் ஆராய்ச்சி’, குடிஅரசுப் பதிப்பகம். 1931.
3. ந.சி.கந்தையா பிள்ளை, ‘அகத்தியர்’ ஆசிரியர் நூற்பதிப்புக்கழகம், 1931.
4. ஆ.சிவலிங்கனார்,
‘அகத்தியர்கள்’,
ஒற்றுமை அலுவலகம், 1948.
5. கவிராசபண்டிதர் செகவீரபாண்டியன், ‘அகத்திய முனிவர்’,
மதுரை, 1940.
6. துடிசைகிழார் அ.சிதம்பரனார், ‘அகத்தியர் வரலாறு’ தி. தெ. சை. நூ. கழகம், 1950, 1964.
7. முனைவர் ப.தங்கராசு, ‘தமிழ் இலக்கியங்களில் அகத்தியர்’, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1997.
அறிஞர் கே.என்.சிவராசப் பிள்ளை (1879-1941) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். கட்டுரையாளர்; பாவலர்; இதழாளர். இவருடைய ‘சங்க இலக்கியங்கள்’, ‘அகத்தியர்’, ‘கம்பராமாயணம்’ பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவையாகும். தமிழிலக்கியங்களின் காலக்கணிப்பிலும் ஈடுபட்டவர்.
இவர், “Agastya in the Tamil land” என்னும் தம்முடைய ஆங்கில நூலில், Early History of Deccan (Bhandargar), History of Ancient Sanskrit
Literature (Maxmuller), The Great Epic of India (Hopkins) ஆகிய மூன்று நூல்களின் அடிப்படையில் அகத்தியரை ஆராய்ந்தார் என்பர். அகத்தியர் என்னும் பழங்கதை(புராண)ப் பெயர் எப்படி வடஇந்தியப் பழங்கதைகளில் கையாளப்பட்டுள்ளது, தமிழில் அப்பெயர்
எவ்வண்ணம் பதிவாகியுள்ளது என்று இந்நூலில் ஆராய்கிறார். அகத்தியர் பற்றிய
ஆய்வுநூலாகவும், வரலாற்றுக்கு முந்தைய
தமிழ்ப்பண்பாட்டை விளக்கும் ஆய்வாகவும் இந்நூல் கருதப்படுகிறது. இந் நூலின்
தமிழ்மொழியாக்கம் இதுவரை வரவில்லை.
‘அகத்தியரை இராமாயண, இருக்குமறை
நூல்களின்படி பார்ப்பது வழக்கம். அகத்தியர் பற்றிய பழங்கதைகளும் தொன்மச்
சான்றுகளும் கம்போதியா, இந்தோனேசியா
தீவுகளிலும் உள்ளன. பெரும்பாலும் இவை கற்பனையின் அடிப்படையில் உருவானவை. காரிக்கண்ணனார், ஆலத்தூர் கிழார், தாமப்பல்கண்ணனார் போன்ற புலவர்களின் பாடல்களின் அடிப்படையில்
அகத்தியரைப் பார்ப்பனர் என்று முடிவு செய்துள்ளனர். எனவே அகத்தியர் குறித்த
பழங்கதையை மீளாய்வு செய்யவேண்டியுள்ளது’ என்கிறார். தொல்காப்பியர், அகத்தியரைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று உறுதியாகக் கூறுகிறார்.
தமிழ்நாட்டில் அகத்தியர் காலடி வைப்பதற்கு முன்பே, தொண்டைமண்டிலக் காட்டை (தண்டகாரணியத்தை) மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக்க இரு நூற்றாண்டுகளும், கருநாடகப் பகுதியில் ஆரியவல்லாண்மையை ஏற்படுத்த இரு நூற்றாண்டுகளும் ஆக நான்கு நூற்றாண்டுகள் கழிந்திருக்க இடமுண்டு என்றும் கூறுகிறார். மேலும் இவ்வாறு கணக்கில் கொண்டால் அகத்தியர் மெள்ளமெள்ள பொதியமலையை வந்து அடைய நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் ஆகியிருக்குமென்றும் இதனால் ஒரே அகத்தியர் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து இப்பணியைச் செய்திருக்க இயலாது என்றும் குறிப்பிடுகிறார். அகத்தியர்பெயரில் வந்த பலரே இங்ஙனம் ஆரிய வழியாக்கிய பணியைச் செய்திருக்கவேண்டும் என்று இவர் கருதுகிறார். மேலும் இருக்குமறைகால அகத்தியர், இராமாயணகால அகத்தியர் ஆகியோர் மட்டுமல்லாமல் மேலும் நான்கனுக்கு மேற்பட்ட அகத்தியர்கள் கருநாடகம், தமிழகம், இந்தோனேசியத் தீவுகள், கம்போதியா முதலிய கீழைநாடுகள் முதலிய பகுதிகளில் ஆரியமதம், ஆரியக்கோட்பாடுகள் ஆகியவற்றைப் பரப்பியிருத்தல் வேண்டும் என்றும் இவர் சுட்டிக்காட்டுவார்.
அகத்தியர் தென்பகுதிக்கும் பிறநாடுகளுக்கும் போந்ததன் நோக்கம் ஆரியமதம், ஆரியக்கோட்பாடுகள் முதலானவற்றைப் பரப்பவே என்றும், அவ்வாறு போந்த அகத்தியர் ஒருவரல்லர் என்பதும், அப்பெயரினைத் தாங்கியவர் பலரே என்பதும் இவருடைய கருத்தாகும்.
பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு ஆசிரியர்களால் அகத்தியர்பெயரால் தொகுத்தளிக்கப் பெற்றவையே இன்று அகத்திய நூற்பாக்கள் எனக் காணப்படுகின்றன என்றும், இவை முழுமையும் போலி நூற்பாக்கள்
என்றும் கூறுவார். மேலும் அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் ஆகியோர் மேற்கோளாகக் காட்டியுள்ள அகத்திய நூற்பாக்கள்கூட
அகத்தியர் செய்தன அல்ல என்றும், அவையும் பிற்கால
நூற்பாக்களே என்றும் சுட்டுவார்.
இந்நூலில் குறிப்பிட்டுள்ள சில கருத்துகளை முன்பே எடுத்துக்காட்டியிருந்தோம். இவர் கருத்துப்படி, அகத்தியமரபு என்பது, “பழங்கதையாளர் (புராணிகர்) படையணியின் கைகளில் கொடுக்கப்பட்ட வெற்றுக் குண்டறைத் துமுக்கிகள்” (“The array of puranic battalion... But its arms are loaded only with blank cartriges”) ஆகும்.
அறிஞர் கா.நமச்சிவாய முதலியார் ‘அகத்தியர் ஆராய்ச்சி’ என்னும் தம் நூலில் அகத்தியர் பிறப்பைப் பற்றிப் பல்வேறு பழங்கதைகளில் (புராணங்களில்)
பல்வேறுவகையாக உருப்பசி(ஊர்வசி)யைத் தொடர்புபடுத்திக் கூறப்படும் அருவருப்பான காமக்கதைகளைக் குறிப்பிடுகின்றார். பல்வேறு பழங்கதைகளில் (புராணங்களில்) இடம்பெறும்
அகத்தியர் பற்றிய வேறுபல செய்திகளையும் கூறுகின்றார். இந் நிலவுலகு தட்டையாக
இருக்கிறதென்றும், அதன் நடுப்பாகத்தை ஒரு
கோல் தாங்கிக்கொண்டிருக்கிறதென்றும், விந்தியமலை அடக்கப்பட்ட தென்றும் கூறுவது நம்பத்தக்கதாக
இல்லையென்றும், வாதாபி வில்வலன் கதையும் அவ்வாறே
என்றும் கூறுகிறார்.
முதற்கழகம் (சங்கம்), இடைக்கழகங்களில்
அகத்தியர் இடம்பெற்றதாகக் கூறப்படுவதைப் பற்றிய இவரின் கருத்தை முன்னரே பார்த்தோம். ‘அகத்தியம்’ இயல்இசைநாடகத்தமிழ் இலக்கணநூல்
என்பது நம்பவியலாததாக இருப்பதாகப் பல எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறார். அகத்தியரின்
மாணாக்கர் பன்னிருவர் என்ற செய்தியையும் ஐயத்தின்பாற்பட்டதாகக்
குறிப்பிடுகின்றார்.
“நமக்கு இப்போது கிடைத்துள்ள தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு ஆகிய நூல்களில் ஓரிடத்தும் அகத்தியனாரைப் பற்றி
ஒருசிறிதும் காணப்படவில்லை. இத்தகைய அரிய முனிவரைப்பற்றி – தமிழ்மொழிக்கு முதற்கண் இலக்கணம் வகுத்த ஆசிரியரைப்பற்றி – தமிழ்நாட்டில் வந்து இரண்டு கழகங்கள் (சங்கங்கள்) நிறுவிய
முனிவரைப்பற்றி - ஆயிரக்கணக்கான யாண்டுகள் வாழ்ந்த- வாழ்கின்ற பெரியாரைப்பற்றி, மிகப்பழமையாக வழங்கும்
சங்கநூல்கள் ஏதுங் குறித்துக் கூறாதது என்னே!” என்று வியந்து கூறுகின்றார்.
“அகத்தியர் மருத்துவம் எனத் தமிழ்நாட்டில் பலவகை நூல்கள் தோன்றியுள்ளன. இவையன்றி வாதம், சோதிடம் முதலியவற்றிற்கும் நூல்கள் குறிக்கப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும்பொழுதே அகத்தியர் செய்தனவல்லவென்று புலப்படும்” என்கின்றார்.
முடிவாகக் கூறும்போது, அகத்தியர் என்னும்
பெயரால் பற்பலர் காணப்படுகின்றனர் என்றும் அகத்தியர் பரம்பரை எனப் பலர் இருந்தனரென்றும்
பல எடுத்துக்காட்டுகளுடன் கூறுகின்றார். “முதற்கண் வந்த
அகத்தியனார் அகத்தியம் என்ற நூலைச் செய்தனர் என்பது நம்பத்தக்கதன்று. அவர்
முதலிரண்டு சங்கங்களை நிறுவினாரென்பதும் பொருந்தாதாம்” எனப் பல காரணங்களைக் காட்டி விளக்குகின்றார்.
அறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை ‘அகத்தியர்’ என்னும் தம் நூலில் பெரும்பாலும் அகத்தியர் தொடர்பாக பிற அறிஞர் கூறுவதையே எடுத்துக்காட்டுகின்றார். அவர் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சிலபகுதிகள்: “சமக்கிருதத்தில் இரண்டு அல்லது மூன்று அகத்தியர் பெயர்கள் காணப்படுகின்றன. வான்மீகருக்கு முற்பட்டவரும் வேத காலத்தவருமாகிய அகத்தியர் ஒருவர் இருந்தார். இவர் கங்கைக் கரையில் வாழ்ந்த ஆரியக் கூட்டத்தினரின் தலைவரும் உலோபாமுத்திரையின் கணவருமாவார். வேறு இரண்டு அல்லது மூன்று அகத்தியர்களைப் பற்றி ‘இதிகாசங்கள்’ கூறுகின்றன”.
“நாம் அகத்தியர் வரலாற்றைக் குறித்துப் பின் வருமாறு உய்த்துக் கூறலாம்: ஆரியர் வருகைக்கு முன் அகத்தியர் என்னும் பெயருடைய தமிழ்அறிஞர் ஒருவர் தமிழ்நாட்டில் விளங்கினார். இவர் சமக்கிருதத்தோடு தொடர்புபெற்ற அகத்தியரில் வேறானவர். இவர் தமிழர் மதிப்புஅளித்த அறிவர்களுள் ஒருவர். அகத்தியர் என்னும் தமிழ்ப்பெயரே “அகத்திய” என்னும் ஆரியப்பெயரோடு ஒற்றுமை காணப்பட்டமைகொண்டு அவர் ஆரியராக்கப்பட்டார்’ என்றும் குறிப்பிடுவர்.
“தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்னும் பழங்கதை வழங்குகின்றது. தொல்காப்பியர் அகத்தியரைப்பற்றி எங்கும் குறிப்பிடவில்லை.தொல்காப்பியர் அகத்தியரைக் குறித்து யாண்டும் கூறாமையால் அவர் அகத்தியரின் மாணவரல்லர் என்பது எளிதில் விளங்கும். இவர் அகத்தியர் மாணவர் ஆயின், மிகப்புகழ் படைத்த தன் ஆசிரியரைக் கூறாது மறைக்கும் நன்றியில்லாத குணத்தை இச் சிறந்த
ஆசிரியர் மீது ஏற்ற நேரும்.”.
“ தொல்காப்பியருக்குப் பிற்பட்ட மக்கள் ஆரிய சம்பந்தமான பல கற்பனைகளை அகத்தியரோடு சம்பந்தப்படுத்திக் கட்டி வைத்தார்கள். தமிழ்ப்பெயர்களை
ஆரியர் தம்முடையவையாகத் தமது பழங்கதைகளில் எடுத்து வழங்குவது இயல்பு. தமிழ்முருகன் சுப்பிரமணியராகவும், தமிழ்மால்
விஷ்ணுவாகவும் வழங்கப் படுகின்றமையை நாம் அறிவோம். தமிழ்க் கருத்துக்களை ஆரியமாக்குமிடத்துத்
தமிழ்க்கடவுளர் ஆரியராக மாறினர். தமிழ்நாட்டிலுள்ள இடங்கள், ஆறுகள், மக்களுக்கு ஆரியப்பெயர்கள்
இடப்பட்டன. வெண்காடு சுவேதாரணியமாகவும், தண்பொருநை
தாம்பிரபர்ணியாகவும் மாறின. ‘பண்டை’ என்னும் அடியாகத் தோன்றிய பாண்டிய பரம்பரைப் பெயர் பாண்டவ அல்லது பாண்டு வமிசமாக மாறிற்று. இவ்வாறே தமிழ்அகத்தியர் சமக்கிருத அகத்தியராக மாறியிருத்தல் வேண்டும்”.
“தமிழ்நாட்டில் வழங்கும் அகத்தியர் வரலாற்றுக்கு அடிப்படை பொதியமலையில் இருந்த ஒருவராதல் வேண்டும்; இல்லையேல் அகத்தியரைப்
பற்றிய பழங்கதைகள் அந்தரத்தில் எடுத்த கோட்டையாக மாறிவிடும்”.
“தமிழ்ப்புலவர்கள் ஆரியரொருவரைத் தமிழ்க்கல்விக்குத் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதினால் அகத்தியர் தமிழரேயாவார் என்பது வலியுறுகின்றது. பழங்கதை(புராண) காலத்தில் அகத்தியரைப்பற்றி ஆரியப்போக்கான கற்பனைக்கதைகள் வளரத் தொடங்கின. அகத்தியர் என்னும் தமிழ்ப்பெயர் அகத்திய என்னும் ஆரியப்பெயரோடு ஒற்றுமை காணப்பட்டமைகொண்டு அவர் ஆரியராக்கப்பட்டனர்.”…
“செங்கோன் தரைச்செலவு’ என்னும் நூலில் முத்தூர் அகத்தியர் என்னும் தமிழ்ப்புலவர் ஒருவர் பெயர் காணப்படுகின்றது. அவரை ஒப்ப மதிப்பைப் பெற்றிருந்த ஒருவரே அகத்தியராவர். முத்தூர் கன்னியாகுமரிக்குத் தெற்கேயிருந்து மறைந்துபோன பாண்டியநாட்டின் பகுதியில் உள்ளது. இதனால் ஆரியர் தென்னாடு வருவதன்முன்
அகத்தியர் என்னும் தமிழர் ஒருவர் இருந்தாரென்பது ‘செங்கோன் தரைச்செலவு’ நூலால் தெரியவருகின்றது.
தமிழ்நாட்டில், அகத்தியர் என்னும்
பெயருடன் பலர் விளங்கியிருத்தல் கூடும். அவர்களுள் ஒருவரே மிகப்புகழ்
படைத்தவர். இவருடைய பெயரைச் சுற்றி அவர் புகழை விளக்கும் பல கதைகள்
வந்து திரண்டன. இவ்வாறே ஆரியஅகத்தியரைக் குறித்த கதைகளும் அவர் பெயரைச்சுற்றித்
திரண்டன. சங்ககாலத்துக்குப் பின் ஆரியக்கதைகளும் தென்னாட்டு அகத்தியர் கதைகளோடு
வந்து கலந்தன”.
“கி.பி. முதல் ஆயிரம் ஆண்டுகளில் தோன்றிய இலக்கியங்கள் எவற்றிலாவது அகத்தியர் கடவுளிடமிருந்து தமிழைக் கற்றாரென்றாவது, அவர் தமிழைத் தோற்றுவித்தா ரென்றாவது கூறப்படவில்லை. அகத்தியர் தமிழுக்கு
இலக்கணம் செய்தாரென்றும், அவர் சிவபெருமானிடத்தும் சுப்பிரமணியக் கடவுளிடத்துமிருந்து தமிழைக் கற்றாரென்றும் வழங்கும் கதைகள் கி.பி.1000க்குப் பின்
தோன்றினவாதல் வேண்டும்”.
“சில செய்திகளில் சிறந்த மாந்தர் பெயரைச் சிறந்த பொருள்களுக்கு இட்டு அழைப்பது மாந்தர் கொள்கை. அது மலை, ஆறு, ஊர் முதலியவற்றிற்கும் பொருந்தும். அதுபோல் அகத்தியனார் சிறந்தவராயிருத்தலின் அவர் பெயரை விண்மீனுக்கு இட்டிருக்கலாம். அதனால் அவர் தமிழுக்கும் ஏதும் செய்தாரென்று நிச்சயிக்க முடியாது”
“சீத்தலைச்சாத்தனார் (‘மணிமேகலை’ ஆசிரியர்) காலத்தில் அகத்தியரைப் பற்றிய வரலாறு மிகப்
பழங்கதையாக வழங்கிற்றே யன்றி அகத்தியர் தமிழோடு தொடர்பு பெறவில்லை.
அக்காலத்தில் அகத்தியர் பொதியமலையில் இருந்தாரென்னும் வரலாறு வழங்கிற்று.
அகத்தியர் குடத்தில் பிறத்தல், பிரமதேவருக்கு
ஊர்வசியிடம் பிறத்தல் போன்ற கதைகளை ஆராய்தல் மணல் சோற்றில் கல்ஆராய்தல்
போலாகுமெனக் கருதி அவற்றை ஈண்டு ஆராய்ந்திலேம்.”
கவிராச பண்டிதர் செகவீரபாண்டியன் எழுதிய நூல் ‘அகத்திய முனிவர்’ என்பதாகும். இந் நூல், அகத்திய முனிவரின் பிறப்பு, இருப்பு, குணம், செயல், பெருமை என்னும் ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது. அகத்தியர் பிறப்பு பற்றிக்கூறும்போது, ‘நதி மூலத்தையும் முனிமூலத்தையும் முனைந்து காணலாகாதென மூதறிவாளர் புனைந்து
கூறியுள்ளார்’ என்று கூறிவிடுகிறார்.
சிவன்-சிவை திருமணத்தில் வடக்கு தாழ தெற்கு உயர்ந்ததாகக் கூறி சிவன் அகத்தியரைத் தெற்கே போகப் பணித்த கதை, அகத்தியர் பொதிகைமலைக்கு வந்து அகத்தியம் என்னும் இலக்கணநூலை எழுதியதாகக் கூறப்படும்
கதை முதலிய எல்லாவற்றையும் உண்மையாக நடந்ததாக எழுதுகிறார். அகத்தியர் ஒருவரே எனக் கருதுகின்றார். எல்லாப் பழங்கதைகளையும் தரவுகள் சான்றுகள் பற்றிக் கருதாது உண்மையென எழுதுகின்றார்.
முதல், இடை, கடை என முக்கழகங்களிலும் (சங்கங்களிலும்) அகத்தியர் இருந்ததாகக் கூறுகிறார். கூறப்படும் நிகழ்வுகளுக்கு இடையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருக்க, அகத்தியர் தம் ஆற்றலால் அவ்வளவு காலம் உயிர்வாழ்ந்ததாக எழுதுகிறார். எனவே எல்லாப் பழங்கதைகளையும் வெறும் நம்பிக்கை அடிப்படையில் நடந்ததாகக் கூறுவதால், ஏற்க இயலாதனவாக உள்ளன. மேலும், இந் நூல் அறிவுக்கும் அறிவியலுக்கும் தொடர்பற்ற செய்திகளைக் கூறுவதால், நம்பகத்தன்மை இல்லாததாக உள்ளது.
அறிஞர் ஆ.சிவலிங்கனார் ‘அகத்தியர்கள்’ என்ற தம் ஆய்வுநூலில், “அகத்தியர் ஒருவரல்லர். நால்வருக்கு மேற்பட்டிருந்திருத்தல் வேண்டும். அவருள் தமிழ்
அகத்தியர் இருவர். ஆரியஅகத்தியர் இருவர்... பிற அகத்தியர்களும் இருந்திருக்கின்றார்கள்” என்று எழுதியுள்ளார். இதை முன்னரே எடுத்துக்காட்டினோம். சிவலிங்கனார், பெரும்பாலும் பழங்கதை (புராணக்கதை)களை ஒட்டியே கருத்துரைக்கின்றார்.
‘இலிங்கம்’ - இதனை ’லிங்கம்’ என்று கூறி ஆரியச்சொல் என்பர். ஆரியர்களுக்கு இலிங்க வழிபாடேயில்லையென்றும்
அவர்கள் தமிழர்களுடன் கலந்தபின்னரே இலிங்க வழிபாட்டை மேற்கொண்டனர் என்றும்
ஆராய்ச்சியின் முடிபாக அறிஞர் கூறுகின்றனர்… ஆரியர்கள்
இந்தியாவிற்கு வந்தபின்னர் எழுதப்பட்ட இருக்குவேதத்திலும் இலிங்க வழிபாட்டைப் பற்றிக் கூறப்படவில்லை. அதனால் இலிங்கம் என்பது தமிழ்ச்சொல்லே யென்பது தேற்றம். ‘இலிங்கம்’ என்றசொல் எப்படி ஆரியச் சொல் எனப்பட்டதோ அதே போன்று அகத்தியர் என்ற
சொல்லும் ஆரியச் சொல்லாக்கப்பட்டது. இது தூய தமிழ்ச்சொல். அகம் என்ற பகுதியின்
அடியாகத் தோன்றியது. அகத்தியர் என்பது -. அர் விகுதி. ‘அத்து’ சாரியை. அகத்தர்
என்பது பின் அகத்தியர் என்றாகியிருக்கலாம்.
அகத்தியரைப் போல அக்காலத்தில் முத்தமிழையும் முறைப்பட ஓதியுணர்ந்து
தம்மகத்தில் நிறுத்தியவர் இன்மையின் அக்கால மக்கள் இவரைச் சிறப்பிப்பான் வேண்டி அகத்தியர்
என்று அழைத்தனராதல் வேண்டும். அச் சிறப்புப் பெயரே நிலைப்ப தாயிற்று”.
“அகத்தியர் வடநாட்டிலிருந்து தம்மொடு வந்த பார்ப்பனர்களுக்காக இலக்கணத்தை (அகத்தியம்) யியற்றினார் எனக் கூறுவாரும் உளர். அவர் கூற்று அகத்திய நூலாசிரியரை வடநாட்டகத்தியர் எனக் கொண்டமையால் நேர்ந்த பிழையாகும்” என்று எழுதுகின்றார்.
‘சிலர் தலைச்சங்கத்திலிருந்த அகத்தியரே இடைச்சங்கத்தும் இருந்தார் என்பர். அது பொருந்தாது’. தலைச்சங்கத்திருந்த அகத்தியரே
இடைச்சங்கத்தும் இருந்தார் என்றால் அகத்தியர் 4410 ஆண்டுகட்குமேல் இருந்திருக்க வேண்டும் அன்றோ? இது எள்ளளவும் நம்புதற்கியலாதது’ – என்கிறார்.
‘வடநாட்டகத்தியர்களைப் பற்றிக் கட்டிய கதைகள் பல. நடந்தன சில. ஆரியர்கள் தம்மை யுயர்த்திக் கொள்ளச் செய்த சூழ்ச்சிகள் பல. அவற்றுள் தலைசிறந்தது
வேதத்தைச் சூத்திரர் பயிலுதல் கூடாது என்றது. தமிழர்களை அவர்கள் சூத்திரர் என்றனர்… வேதம் இறைவன் உரைத்தது என்றனர். கடவுளிடத்து நம்பிக்கையும் ஆழ்ந்த பற்றுதலும் கொண்ட தமிழர் நம்பினர். அதனால் பலர் ஆரியமயமாயினர். தம்மைத் தாமேயிழிவுபடுத்திக் கொண்டனர்… அதன் விளைவுகள்தாம் ஆரிய
அகத்தியர்கள் தென்னாடு போந்ததும் ஆரியர் மிகுதியாகக் குடியேறியதும் ஆம்” - என்று குறிப்பிடுகின்றார்.
“இமயமலை யரசனிடம் சென்று சிவனார் பார்வதியை மணந்தகாலைத் தேவரெல்லாம் கூடிச் சேர இருந்தமையின் தென்திசை உயர்ந்ததாக அதனைச் சமப்படுத்துவான் வேண்டிச் சிவனார், அகத்தியரை நோக்கித் தென்திசைசென்று பொதிகையில் இருக்க என, அவர் தென்னாடு போந்தார்” – இதை யூன்றி நோக்கின் மறைவாக உள்ள ஓர் உண்மை புலப்படும். தென்திசை யுயர்ந்த தென்பது தென்னாடு பல வளங்களாலும் கல்வி கேள்விகளாலும் வீரம் முதலியவற்றாலும் சிறந்துயர்ந்த நிலையையே குறிக்கும். இதனைக் கேள்வியுற்ற ஆரியர் (இமயஅரசன் மகள் பார்வதி மணத்திற் கூடியவர்கள்) கூட்டத்துள் ஒருவர் தென்னாடு நம் நாட்டினும் உயர்வுற்றது அதனை எப்படியேனும் கீழ்ப்படுத்துதல் வேண்டும். நம்மால் வென்று கீழ்ப்படுத்த இயலாது. சூழ்ச்சி கொண்டுதான் கீழ்ப்படுத்த முடியும். அங்ஙனம் கீழ்ப்படுத்த வல்லவர் தென்னாட்டானின் பெயர் பூண்டவராகிய இவ் வகஸ்தியரே செல்லத் தகுதியுடையார். ஆதலின் இவர் செல்லின் நன்று என்றனர். அனைவரும் ஆம்ஆம் என்றனர். அவர்கள் கருத்துப்படியே ஆரிய அகத்தியர்-1 தென்னாடுநோக்கிப் புறப்பட்டார். இதுவே ஆரிய அகத்தியர்-1 தென்னாடு வரக்காரணம்”- என்று எழுதுகின்றார்.
அகத்தியர் பிறப்பு பற்றிய கதைகளைப் பற்றிக் கூறும்போது, “ஒரு பெண்ணுடன் கலவாமல் ஆடவனின் விந்திலிருந்தே ஒரு பிறவியுண்டாகும் என்றால் எவ்வளவு தூரம் பொய்யென்பதைக் கூறவேண்டுவதில்லை. இத்தகைய பொய்க்கதைகள் புனைவதற்கென்றே தேவர்கள் நினைத்த அமயத்தில் நினைத்தவற்றைச் செய்துமுடிக்கும் ஆற்றலினரென்றும், மாயமாய் மறைதல், வானத்திற் பறத்தல்
போன்ற இயலாத செயல்களையும் செய்வர் என்றும் அறிவுக்குப்
பொருத்தமில்லாதனவற்றைப் புளுகிக்கொண்டார்கள் என்பதில் என்ன வியப்பு?” - என்கிறார்.
ஆ.சிவலிங்கனார், முடிப்புரையில், அகத்தியர் ஒருவர் அல்லர் பலர் என்றும், அவருள்ளும் தமிழகத்தியர்கள் இருவர் இரண்டு சங்கங்களில் திகழ்ந்தனர் என்றும் ஆரிய அகத்தியர்களும் இருவர் என்றும், முத்தூர் அகத்தியன் என்பவரும் ஒருவர் இருந்தனர் என்றும், பிற அகத்தியர்களும் இருந்திருக்கின்றனர் என்றும் அவர்தம் வரலாறுகளும், ஆரியஅகத்தியர்களைப் பற்றிய கட்டுக்கதைகளும் ஒருவாறு உணரலாம் என்றும் கூறுகின்றார்.
இனி, முனைவர் தங்கராசு, துடிசைகிழார் அ.சிதம்பரனார் ஆகிய இருவரின் நூல்கள் அகத்தியர் பற்றிக்
கூறுவனவற்றையும், பிற அறிஞர் கட்டுரைகளில் அவரைப்
பற்றிக் கூறுவனவற்றையும் சுருக்கமாகப் பார்ப்போம்; முடிவான கருத்துரையுடன்
முடிப்போம்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------