சனி, 10 செப்டம்பர், 2016

கி.ஆ.பெ.வி. ஐயா காட்டும் தமிழரின் கலைச்சிறப்பு! (சில பகுதிகள்)



கி.ஆ.பெ.வி. ஐயா காட்டும் தமிழரின் கலைச்சிறப்பு!
(சில பகுதிகள்)

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஐயா 47ஆண்டுகட்கு முன்னர் தி.பி.2000த்தில் எழுதி வெளியிட்ட தமிழின் சிறப்பு என்னும் நூலில், கலைச்சிறப்பு என்னும் தலைப்பில் தந்துள்ள செய்திகளில் சில:



நிலத்தை ஐந்தாக, காற்றை நான்காக, மொழியை மூன்றாக, இலக்கணத்தை இரண்டாகக் கண்ட தமிழ்மக்கள், ஒழுக்கத்தை ஒன்றாக வைத்து மாந்தனோடு வைத்து இணைத்து எழுதிவிட்டனர். திணை என்றால் ஒழுக்கம்; உயர்திணை என்றால் ஒழுக்கமுள்ளவை எனவும், அஃறிணை என்றால் ஒழுக்கமற்றவை என்றும் பொருள்படும்....

திருச்சிக்கு கிழக்கே பன்னிரண்டு கல் தொலைவில் கல்லணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே தரையில் கட்டப்பட்டுள்ள அணை இது ஒன்றே. அதிலும் இருபுறங்களிலும் ஐந்தடிக்கு மேற்படாத கரையை வைத்துக்கொண்டே தண்ணீரைத் தேக்கி அத்தண்ணீரை ஆறுபகுதிகளுக்குப் பிரித்தனுப்புகிற கலை ஒரு தனிக்கலையேயாம்.

மற்ற அணைகள் எல்லாம் இருபுறங்களிலும் மலைகளையே கரைகளாகக் கொண்டதாகவும் பெரும் பள்ளத்தாக்குகளில் நீரைத் தேக்குவதாகவும் அமைந்திருக்கும்....

சதுப்பு நிலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் சில ஆண்டுகளுக் குள்ளாகவே வெடிப்பிட்டுப் போவதைக் காணும் நமக்குத் தண்ணீரிலேயே அடித்தளம் போட்ட கட்டடம் 2000 ஆண்டுகளாகியும் வெடிப்பு ஏற்படாமல் எப்படி இருக்கிறது?... இதுபற்றிப் பெரிய பெரிய பொறியியல் வல்லுநர்களும் புரியாது தவிக்கின்றனர்.

கி.பி.1003ஆம் ஆண்டில் தொடங்கி 1009க்குள் இராசராச சோழ மன்னனால் கட்டி முடிக்கப்பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் தமிழ்மக்களின் கட்டடக்கலைக்கு ஒரு பெரும் சான்று.

இதன் கோபுரத்தின்உயரம் 216அடி. அதன்உச்சியில் வைத்துள்ள கல் 25½ அடி. சதுரமுள்ள கல் அதன் எடை 80 டன். அதில் நான்குபுறமும் சுற்றி வைத்திருக்கும் நந்திகளின் எண்ணிக்கை எட்டு. அவை ஒவ்வொன்றின் உயரம் 5½ அடி. நீளம் 6½.. இவற்றை உச்சிக்குக் கொண்டுபோக நான்கு கல் தூரத்திலிருந்து சாரம் கட்டத்தொடங்கிய இடத்திற்கு சாரப்பள்ளம் என்ற பெயர் இன்றும் இருந்து வருகிறது....

திருச்சிக்கு வடக்கே நான்கு கல் தொலைவில் சிறீரங்கம் என்ற ஓர் ஊர் உள்ளது.அது நான்குபுறமும் நீர் சூழ்ந்த ஒரு தீவு....
தெற்குக்கோபுரத்திற்கு மொட்டைக்கோபுரம் என்றுபெயர். காரணம் கோபுரம் கட்டப்படாமல் கோபரத்திற்குரிய அடித்தளம் மட்டும் கட்டப்பட்டிருப்பதே. நான்கு புரமும் நான்கு கற்றூண்கள் நிற்கின்றன. (இப்போது, கோபுரம் 72 மீட்டர உயரத்தில் கட்டப் பட்டுள்ளது)         

கோயிலைச்சுற்றி நான்கு வெளிக்கோபுர வாயில்களிலும் 16 கற்றூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணின் அகலம் 3அடி, நீளம் 5அடி, உயரம் 62அடி. மேலே 42அடி தெரிவதால் மூன்றில் ஒருபங்கு 20 அடியாவது மண்ணில் புதைந்திருக்க வேண்டும்.இன்றேல் அது வலுவாக நில்லாது. இவ்வாறு 16 தூண்கள் ஒரே அளவில் எவ்வாறு கிடைத்தன?

இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் உள்ள மண்ற்பரப்பில் 20அடி ஆழம் எப்படி வெட்ட முடிந்தது? மூன்றடியிலேயே தண்ணீர் இருக்கும்போது அதற்கும் கீழ் எப்படித்தோண்ட முடிந்தது?...

தமிழகத்தின் சிற்பக்கலை உலகம் முழுதும் நன்கறிந்த ஒன்று... தமிழ் மக்களின் சிற்பக்கலையைத் தமிழகத் திருக்கோயில்கள் அனைத்திலும் காணலாம். இவற்றுள் பேரூர்க்கோயில், மதுரைக்கோயில் தூண்களின் சிற்பங்கள் மிகமிக உயர்ந்தவை...

சில கோயில் தூண்கள் இசைக்கருவிகளாக அமைந்திருக்கின்றன. ஒரே தூணில் 16 வகையாகப் பிரித்துச் செதுக்கப்பட்டிருக்கிறது. அது அரம் போட்டு அறுத்ததுபோல் காணப்படுகிறது... கண்பார்வை நுழைய முடியாவிடத்தில் கூட கைவேலைகள் நுழைந்திருக்கின்றன. ஒவ்வொரு சிறு பகுதியும் தட்டத்தட்ட ஒவ்வோர் ஒலி கிளம்புகிறது. அனைத்தையும் தட்டி அருமையான இசையை முழக்க முடிகிறது.

கற்றூண்கள் இசைபாடும் கலைக் காட்சியை மதுரை, திருநெல்வேலி, சுசீந்திரம், ஆழ்வார் திருநகரி முதலிய திருக்கோயில்களில் இன்றும் கண்டு மகிழலாம். இவற்றுள் நெல்லைக்கோயில் தூண்கள் மிகச்சிறந்தவை....

(தொகுப்பு நூல்: முத்தமிழ்க் காவலரின் அறிவுக்கு உணவு பக்கம் 235 முதல் 240 வரை. வெளியீடு: பெரியண்ணன் நூலகம், நல்லாமூர், விழுப்புரம் மாவட்டம்)
---------------------------------------------------------------------------------------------------------

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து ஐயாவின் அரிய உரை!



பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து ஐயாவின் அரிய உரை!

தி.பி.2047-8-21 (6-9-2016) செவ்வாயன்று புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும், விடுதலை வீரர் சீனுவாசன் தனலட்சுமி அறக்கடளையாரும் சேர்ந்து ஏற்பாடு செய்த ஒன்பதாம் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவனத்தின் தொல்காப்பியர் அரங்கில் நடைபெற்றது.

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து ஐயா தாய்நாடு, தாழ்மொழி: இந்தியாவில் இன்றைய நிலை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 


தாய்மொழி, தாய்நாடு என்பவற்றின் வரையறையைத் தெளிவாகக் கூறி இக்கால் இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு மக்களின் தாய்மொழி இருக்கும் நிலையை விளக்கினார். 2001ஆம் ஆண்டு குடிமதிப்பறிக்கையில் கண்டுள்ளபடி ஏறத்தாழ 25ஆயிரம் கோடி மக்கள்மட்டும் பேசும் இந்திக்கும், ஏறத்தாழ 14ஆயிரம்பேர் பேசுவதாகத் தவறாக்க் கூறப்படும் சமற்கிருதத்திற்கும் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான உருவா வீணே செலவழிப்பதைப் பற்றியும் எடுத்துக்காட்டினார்.

இன்றைய இந்திய ஒன்றியத்தில், பல்வேறு மொழிபேசும் மக்களின் நாடுகள் இன்றுள்ள மொழிவழி மாழநிலங்கள் நடைமுறையில்  எவ்வெந் நிலையில் வேறுபட்ட உரிமைகளோடு உள்ளன என்றெல்லாம் சான்றுகளுடன் விளக்கினார்.

தம் உரையின் இறுதிப் பகுதியில், ஆனைமுத்து ஐயா, பெரியார் ஆங்கிலத்திற்கு முதன்மை கொடுத்து அம்மொழி படிக்க அனைவரையும் வலியுறுத்தியது பற்றிய அரிய விளக்கமளித்தார். அன்றைய நிலையில், தமிழ் அறிவியல் துறைகளில் வளரா திருந்ததையும் மக்கள் மூடநம்பிக்கையோடு விழிப்புணர் வற்றவர்களாக இருந்ததால் அவர்களை விரைந்து முன்னேற்றக் கருதியுமே அவ்வாறு கூறினார். என்றாலும், தமிழைப் பலதுறை அறிவும் நிறைந்ததாக வளர்த்தெடுக்க வேணுமென்று வற்புறுத்தி யிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்றார்.

பெரியாரே, தாம் கூறியவாயினும் அவற்றை அப்படியே ஏற்க வேண்டாமென்றும், அறிவடிப்படையில் ஆராய்ந்து தத்தமக்குச் சரியென்று படுவதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாமென்றும் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளார் என்றும் விளக்கம் தந்தார்.

காலை பத்தரை மணிக்குத் தொடங்கிய பயனுள்ள நிகழ்ச்சி, பகல் ஒரு மணியளவில் நிறைவுற்றது. அறக்கட்டளையார், வந்திருந்த அனைவருக்கும் சுவையான பகல்உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.

குறிப்பு: படம் அளித்த  திரு.புதுவைத் தமிழ்நெஞ்சன், செல்வி தமிழ்மொழிக்கு நன்றி!
------------------------------------------------------------------------------------------------------