சனி, 10 செப்டம்பர், 2016

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து ஐயாவின் அரிய உரை!



பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து ஐயாவின் அரிய உரை!

தி.பி.2047-8-21 (6-9-2016) செவ்வாயன்று புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும், விடுதலை வீரர் சீனுவாசன் தனலட்சுமி அறக்கடளையாரும் சேர்ந்து ஏற்பாடு செய்த ஒன்பதாம் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவனத்தின் தொல்காப்பியர் அரங்கில் நடைபெற்றது.

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து ஐயா தாய்நாடு, தாழ்மொழி: இந்தியாவில் இன்றைய நிலை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 


தாய்மொழி, தாய்நாடு என்பவற்றின் வரையறையைத் தெளிவாகக் கூறி இக்கால் இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு மக்களின் தாய்மொழி இருக்கும் நிலையை விளக்கினார். 2001ஆம் ஆண்டு குடிமதிப்பறிக்கையில் கண்டுள்ளபடி ஏறத்தாழ 25ஆயிரம் கோடி மக்கள்மட்டும் பேசும் இந்திக்கும், ஏறத்தாழ 14ஆயிரம்பேர் பேசுவதாகத் தவறாக்க் கூறப்படும் சமற்கிருதத்திற்கும் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான உருவா வீணே செலவழிப்பதைப் பற்றியும் எடுத்துக்காட்டினார்.

இன்றைய இந்திய ஒன்றியத்தில், பல்வேறு மொழிபேசும் மக்களின் நாடுகள் இன்றுள்ள மொழிவழி மாழநிலங்கள் நடைமுறையில்  எவ்வெந் நிலையில் வேறுபட்ட உரிமைகளோடு உள்ளன என்றெல்லாம் சான்றுகளுடன் விளக்கினார்.

தம் உரையின் இறுதிப் பகுதியில், ஆனைமுத்து ஐயா, பெரியார் ஆங்கிலத்திற்கு முதன்மை கொடுத்து அம்மொழி படிக்க அனைவரையும் வலியுறுத்தியது பற்றிய அரிய விளக்கமளித்தார். அன்றைய நிலையில், தமிழ் அறிவியல் துறைகளில் வளரா திருந்ததையும் மக்கள் மூடநம்பிக்கையோடு விழிப்புணர் வற்றவர்களாக இருந்ததால் அவர்களை விரைந்து முன்னேற்றக் கருதியுமே அவ்வாறு கூறினார். என்றாலும், தமிழைப் பலதுறை அறிவும் நிறைந்ததாக வளர்த்தெடுக்க வேணுமென்று வற்புறுத்தி யிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்றார்.

பெரியாரே, தாம் கூறியவாயினும் அவற்றை அப்படியே ஏற்க வேண்டாமென்றும், அறிவடிப்படையில் ஆராய்ந்து தத்தமக்குச் சரியென்று படுவதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாமென்றும் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளார் என்றும் விளக்கம் தந்தார்.

காலை பத்தரை மணிக்குத் தொடங்கிய பயனுள்ள நிகழ்ச்சி, பகல் ஒரு மணியளவில் நிறைவுற்றது. அறக்கட்டளையார், வந்திருந்த அனைவருக்கும் சுவையான பகல்உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.

குறிப்பு: படம் அளித்த  திரு.புதுவைத் தமிழ்நெஞ்சன், செல்வி தமிழ்மொழிக்கு நன்றி!
------------------------------------------------------------------------------------------------------  
 

கருத்துகள் இல்லை: