வெள்ளி, 17 ஜூன், 2016

சங்க காலத்தில் சாதிப்பெயருண்டா?



சங்க காலத்தில் சாதிப்பெயருண்டா?
நாவலர் ந.மு.வேங்கடசாமியார் விளக்குகிறார்:


இப்பொழுது வழங்குவது போல ஐயர், ஐயங்கார், நாயுடு, செட்டி, பிள்ளை, முதலியார் என்னும் பட்டப் பெயர்களாவது, கள்ளர் வகுப்பினர் முதலானோர்பால் காணப்படும் அளவற்ற பட்டப் பெயருகளாவது சங்கநாளில் வழங்கவில்லை. அவையெல்லாம் இடைக் காலத்துத் தோன்றியவையே.

ஐயர் எனபது முனிவர் அல்லது பெரியாருக்கே சிறப்பாய் வழங்கியது.கண்ணப்பர், நந்தனார் முதலிய வேறுகுலத்துப் பெரியார்களையும் சிறப்புப்பற்றி ஐயர் என ஆன்றோர் வழங்கியிருக்கின்றனர். சிறப்புப் பெயர் வருங்காலும்,

சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்

என்ற விதிப்படி, அமரமுனிவன் அகத்தியன், தெய்வப்புலவன் திருவள்ளுவன், சேரமான் சேரலாதன் என்றாற்போல இயற்பெயர்க்கு முன் வருதலே மரபு. பிற்காலத்திற்றான் பெயர்கள் இம்முறைமாறி வரலாயின. சிறப்புப்பெயரும் முன்பு யாவர்க்கும் வழங்குவன அல்ல. எனவே பண்டை மக்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டப் பெரிதும் விரும்பவில்லையென்பது போதரும்

(நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்- 18, தமிழ்மண், சென்னை, பக்கம் 43, 44.)

--------------------------------------------------------------