புதன், 22 மார்ச், 2017

நல்லவர்போல் நயன்மையர்போல் முகமூடியணிந்தோர்!




நல்லவர்போல் நயன்மையர்போல் முகமூடியணிந்தோர்!
-----------------------------------------------------------------------------------------------------------

ஒழியா ஒடுக்குமுறைக் கொடுமையிலிருந்து விடுபட முயன்றோரை ஒழித்துக்கட்ட உலகிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்தன!

மாந்த உணர்வே அற்ற மாந்த உருவின னொருவனின் வெறிபிடித்த தலைமையின் கீழ் இயங்கிய வெறிப்படை ஏறத்தாழ ஒன்றரை இலக்கம் தமிழர்களைக் கொன்று குவித்தது!


 

                                 உயிர்மட்டும் எஞ்சிய தமிழர் எண்ணற்றோர் உறுப்பிழந்தும், உறவிழந்தும், வாழ்விழந்தும் வதங்கி உழல்கின்றனர்!

இக் கொடுங் கொடிய கொடுமைகள் நிகழ்ந்து பத்தாண்டுகள் முடிய இருக்கின்றன!

நடுவு நிலையாளர் நல்லுளத்தர் சிலர் நடந்த கொடுமைகளை உசாவி (விசாரித்து) உலகுக் கறிவித்து இனி எங்கும் அத்தகு கொடுமைகள் நிகழாது தடுக்கவும் கொடுமைக் குள்ளானோர் வாழ்க்கைக்கு உறுதி தரவும் பெருமுயற்சி எடுத்தனர்!

தன்னல நோக்கே தம் நோக்காகக் கொண்ட மாந்த நேயமற்ற வளர்ந்த வளராத வல்லாளுமை அரசைக் கொண்ட நாடுகள், கொடியவர்க்கே வெட்கமின்றி நாணமின்றி உதவும் போக்கினராயுள்ளனர்!

கொடுமைகள் நடந்தேறிப் பத்தாண்டுகள் முடியும் நிலையிலும் கொடுமை புரிந்தோர், காரணமானோர், துணை போனோர் பற்றியும், கொடுமைக் காளானோர், காணாமல் ஆக்கப்பட்டோர், சிறைக்கொடுமையில் இன்னும்கூட சொல்லொணாத் துன்புறுவோர் பற்றியும் சிங்கள இனவெறி அரசுகள் எந்த முடிவையும் எடுக்க முன்வரவில்லை!

இன்னும் இரண்டாண்டு காலம் வேண்டுமாம்! ஏய்க்க! அதற்கு ஏதுங்கெட்ட இந்தியா உள்ளிட்ட நாணமற்ற வெட்கமற்ற நாடுகள் ஆமாம் போடுமாம்!

உலகத்து ஒன்றிய நாடுகள் அவை, உரிமைக்குழு உசாவல் முடிவு வேறு எப்படி இருக்கும்? மாந்தநேயமற்ற, தன்னலமே நோக்காயுள்ள நாடுகளே பெரும்பான்மை உறுப்பாண்மை பெற்றிருக்கையில்!

தூ! அறங்கொல்லத் துணைபோகும் இந்த அமைப்புகளின் கீழ்மை, என்னே! என்னே!

நல்லவர்போல், நயன்மையர்போல் முகமூடியணிந்து நல்லறம் தீய்க்கும் தீயர் திருந்தும் நாள் வரவே வராதா?
----------------------------------------------------------------------