திங்கள், 23 மார்ச், 2026

தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் இனம்!

 

தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் இனம்!

       

தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் இயல்பு உள்ள உயிரியினங்கள் சில உள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒருவகை எறும்புகள் (Camponotus saundersi) தம் குடியிருப்புக்குப் பெருந்தீங்கு ஏற்படும்போது, தம்முடைய உடலை வெடிக்கச்செய்து உள்ளிருக்கும் நச்சுத்தன்மையுடைய ஒட்டும் நீர்மத்தை எதிரி மீது தெளித்து, எதிரிகளை அழிக்கின்றன. இச் செயலின்போதே உடல்பிளந்து அவை இறந்து விடுகின்றன.

தேன்கூட்டைப் பாதுகாக்கத் தேனீக்கள் மேற்கொள்ளும் தாக்குதல் உலகறிந்ததாகும். மாந்தரோ, விலங்குகளோ தீங்கு செய்வதாக உணரும்போது தீங்கிழைப்போரைக் கொட்டிவிட்டுப் பறக்கமுயலும். அப்போது தேனீயின் கொடுக்கோடு சேர்ந்து அதன் செரிமானமண்டலமும் நரம்புகளும் தேனீயின் உடலில் இருந்து பிடுங்கப்படுவதால், தேனீ இறந்து விடும்.

சில வகைச் சிலந்திகளில் (Stegodyphus lineatus) தாய்ச்சிலந்தி குட்டிகள் ஈன்றவுடன், தன் உடலின் உட்பகுதியை நீர்மமாக மாற்றிக் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கிறது. குட்டிகள் வளரவளரத் தாயின் உடல் உறுப்புகள் முழுமையாக உண்ணப்பட்டு, தாய்ச்சிலந்தி எச்சமின்றி இறந்துவிடும்.

எண்காலி (Octopus) இனங்கள் சிலவற்றில், பெண் எண்காலி முட்டைகளைக் காக்கப் பல கிழமைகள் உண்ணாமலிருந்து, முட்டைகளிலிருந்து குஞ்சு பொரித்த பிறகு, வலுவெல்லாம் இழந்து இறந்து விடும்.

ஆறுகளில் இடும் முட்டையிலிருந்து பிறக்கும் வெண்மீன்கள் (Salmon fish) சில மாதங்களோ, சிலஆண்டுகளோ ஆற்றில் வளர்கின்றன. பின்னர்க் கடலுக்குச் சென்று பல ஆண்டுகள் வாழ்கின்றன. இந்தக் காலத்தில், கடலில் ஆயிரக் கணக்கான அயிரமாத்திரி தொலைவு செல்கின்றன. முழு வளர்ச்சிக்குப் பிறகு, வெண்மீன்களுக்கு உள்ள ஒரு விந்தையான திறனால், அவை தாம் பிறந்த ஆற்றிற்கு மீண்டும் திரும்புகின்றன. இந்தச் செலவின் (பயணத்தின்) போது எதுவும் உண்பதில்லை. இதனால், உடல் வலுவிழந்து, முட்டையிட்ட பிறகு சிலநாள்களில் இறந்துவிடுகின்றன.

மேலே கூறப்பட்ட எறும்புகள், தேனீக்கள், சிலந்திகள், எண்காலிகள், வெண்மீன்கள் ஆகியவை தம் இனத்தைக் காக்கவோ, தம் குட்டிகளுக்காகவோ தம்மைத்தாமே அழித்துக்கொண்டு தம் உயிரை ஈகம் செய்வதை அறிகிறோம். இனத்தைக் காப்பதில் அவற்றுக்குள்ள ஈக உணர்வு மிகவும் வியப்பளிப்பதாகும்.

மாந்தத் தொகுதியில் உள்ள பல இனங்களும் தம்மினத்தின் காப்பிற்காகவும் மேன்மைக்காகவும் எல்லா வகையிலும் ஈகம் செய்வதையும் கண்டுவருகின்றோம். ஆனால், ஓர் இனம் தான் மேற்கொள்ளும் வாழ்க்கைமுறையால், தன்செயல்களால், தன்புறக்கணிப்பினால், அறிந்தோ அறியாமலோ தன் இனத்தைத் தானே அழிக்கும் இரங்கத்தக்க நிலையைக் காண்கிறோம். அதைப்பற்றிப் பின்னர்ப் பார்ப்போம்.

‘மொழி அழிந்தால் இனம் அழியும்’ என்பது பலகாலமாக எடுத்துக் கூறப்படும் அறிஞர் கூற்றாகும். இது வெறும் உணர்ச்சி அடிப்படையிலான கூற்று அன்று; வரலாற்று அடிப்படையில் மெய்ப்பிக்கப்பட்ட, வரலாற்றில் பலமுறை நிகழ்ந்துள்ள தெளிந்த உண்மையாகும்.

தாய்மொழி என்பது வெறும் செய்தித் தொடர்புக் கருவி மட்டுமில்லை; அது, ஒரு குமுகத்தைக் கட்டமைக்கும் முதன்மைக் காரணியாகும். ஒரு குறிப்பிட்ட குமுகத்தின் அறங்கள், அழகியல் விழுமியங்கள், பண்பாடு, நாகரிகம் முதலியவை அதன் மொழியிலேயே பொதிந்துள்ளன. தாய்மொழி புறக்கணிக்கப்படும் போது, அந்த இனத்தின் தனித்த சிந்தனைமுறையும், பல தலைமுறைகளாக வழிவழி வந்த அறநெறிகளும் சிதைந்து விடுகின்றன. ஓர் இனம் தனது அடையாளத்தைக் காத்துக்கொள்ளவும், உலகளவில் செழிக்கவும் தாய்மொழி இன்றியமையாததாகும். ஓர் இனத்தின் அறிவுச் செல்வங்கள் அடுத்த தலைமுறைக்குச் சரியாகக் கையளிக்கப்படாமல் போனால், அந்தஇனம் தனது அறிவுசார் அடையாளம், வரலாற்றை இழந்து அழியும் நிலைக்குத் தள்ளப்படும்.

ஒரு கருத்தைச் சிந்திப்பதற்கும், ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் தாய்மொழி மிகச்சிறந்த ஊடகமாகும். தாய்மொழி கைவிடப்படும்போது, அந்த இனத்தின் சிந்தனைமுறையும், பல தலைமுறைகளாக மரபுவழி வந்த அறநெறிகளும் சிதைந்துபோகின்றன. மொழி என்பது அம்மொழி பேசும் மக்களின் பட்டறிவுகளின் “கூட்டு நினைவக வைப்பகம்” (collective memory bank) ஆகும். தாய்மொழி அழியும்போது, அந்த மொழி பேசும் இனம் தனது முன்னோருடனான தொடர்பையும், மரபுகளையும் முழுமையாக இழந்து விடுகிறது. இது மீளமுடியாத பண்பாட்டு இழப்பிற்கு வழிவகுக்கிறது என ‘ஒன்றிணைந்த நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு’ (UNESCO) எச்சரிக்கிறது,

ஒரு குமுகத்தின் தாய்மொழி, உறுப்பினர்களிடையே குமுக ஒருமைப்பாட்டையும் பிணைப்பையும் வலுப்படுத்துகிறது. இளைய தலைமுறையினர் தங்கள் தாய்மொழியில் புலமை பெறாதபோது, அவர்களால் தங்களின் மரபுவழி நடைமுறைகள், வாய்மொழி வரலாறுகள், அவர்களின் தொன்மை அறிவு அமைப்புகளுடன் (Indigenous knowledge systems) தொடர்புகொள்ள முடிவதில்லை. இது அந்த இனத்தின் குமுகக் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்கிறது.

சுமேரிய மொழி, இலத்தீன் மொழி போன்றவை இன்று பேச்சு வழக்கில் இல்லாததால், அந்தத் தொன்மையான நாகரிகங்களின் நேரடித் தொடர்ச்சி அறுந்துபோனதைச் சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன. உலகில் இன்று பேசப்படும் 7,000 மொழிகளில் 40% அழியும் நிலையில் உள்ளன; மொழி அழிவோடு அந்த இனத்தின் அடையாளமும் வரலாறும் அழிகிறது.

இன்றைய உலகவயமாக்கல் சூழலில், பல சிறிய மொழிகள் கொஞ்சம்கொஞ்சமாக அழிந்துவருகின்றன. ஒரு மொழியின் அழிவு என்பது வெறும் சொற்களின் இறப்பு இல்லை; அது அந்த இனத்தின் வரலாறு, வாழ்வியல் முறைகள், அறிவு, மரபு, தனித்த உலகப் பார்வை ஆகிய அனைத்து அடையாளங்களின் இறப்பாகும். மொழி அழிக்கப் பட்டதால் அடையாளத்தை இழந்த சில இனங்களைப்பற்றி இங்கே மிகச் சுருக்கமாகக் காணலாம். இந்தப் பட்டியல், அவ்வினங்களின் முழுமையான பட்டியல் இல்லை; சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே ஆகும்.

1. அமெரிக்கக்கண்டத்தின் பழங்குடிமக்கள் (Native Americans) தங்களின் நிலத்தை மட்டுமன்றி மொழியையும் இழந்ததால் இன்று பெரும் அடையாளச்சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

19, 20-ஆம் நூற்றாண்டுகளில் ‘உண்டுறை பள்ளிகள்’ (Boarding Schools) என்ற பெயரில் பழங்குடிச் சிறுவர்கள் அவர்களின் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர். குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் பேசினால் தண்டிக்கப்பட்டனர். இக் கட்டுப்பாடுகளால், சில தலைமுறைகளிலேயே அவர்களின் மொழியும், அத்துடன் பிணைந்திருந்த இயற்கை சார்ந்த மருத்துவ முறைகளும், சடங்குகளும் மறைந்து போயின. அவர்களுக்குரிய அடையாளங்களை இழந்தார்கள்.

2. காடோ (Caddo) இனம்: அமெரிக்காவின் ஓகலகோமாவில் வாழ்ந்த இந்தப் பழங்குடி அமெரிக்க இனத்தின் ‘காடோ’மொழி, 2025 சூலையில் அம்மொழியின் கடைசிப் பேச்சாளரான 95 அகவை ‘எட்மண்டு சான்ச’னின் இறப்புடன் முற்றிலுமாக அழிந்துபோனது. சான்சன் ஒரு ‘உயிருள்ள நூலகமாக’ விளங்கியதுடன், தன் பழங்குடியினரின் பண்பாட்டையும், கதைகளையும் கூறி வந்தார். அவர் மறைவு, அந்த இன மரபிற்கு ஈடற்ற பேரிழப்பாகும்.

3. உயுச்சி (Yuchi) இனம்: இவர்களும் ஓகலகோமாவில் வாழ்ந்தவர்கள். இவர்களின் மொழியான உயுச்சி, உலகின் வேறு எந்த மொழியுடனும் தொடர்பில்லாத ஒரு தனித்த மொழியாகும். 2021 ஆகத்து மாதத்தில், கடைசியாக அம்மொழியைப் பேசியவரான ‘மாக்கிசின் வைல்டுகேட்டு பார்னெட்டு’ இறப்புடன் அம்மொழியும் இறந்துபோனது.

4. மசுகோகி (Muscogee) இனம்: இவர்களின் மசுகோகி மொழியும் உயுச்சி மொழியும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாயின. பெருந் தொற்றுக் (covid-19) காலத்தில் மசுகோகி மொழி பேசுவோர் மிகப்பலர் இறந்துவிட்டதாக இனத்தின் தலைமைத் தலைவர் தெரிவிக்கிறார். “உங்கள் மொழியை இழந்துவிட்டால், உங்கள் பண்பாட்டையும் வரலாற்றையும் இழந்துவிடுவீர்கள், பிறகு நீங்கள் இல்லாமலேயே போய்விடுவீர்கள்” எனக் குறிப்பிட்டு, மொழிக்கும் இன அடையாளத்திற்கும் உள்ள ஆழமான தொடர்பை அவர் உணர்த்தியுள்ளார்.

5. ஆத்திரேலியாவில் நடந்த மொழி, பண்பாட்டு அழிப்பு, வரலாற்றில் மிகவும் கொடுமையானதாகும். ஆத்திரேலியப் பழங்குடியினரைக் (Aborigines ‘The Stolen Generations’) கிறித்துவ மதத்திற்கு மாற்றவேண்டும் என்றநோக்கில், பழங்குடியின மக்கள் தங்கள் தாய்மொழியைப் பேசினால் கடும் தண்டனை வழங்கப்பட்டது. 1910 முதல் 1970 வரை, அரசின் கொள்கைகளின்படி பல்லாயிரக் கணக்கான பழங்குடிக் குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு வெள்ளைக்காரக் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தம் தாய்மொழியையே கேட்காதவகையில் அவர்கள் தனியே வளர்க்கப்பட்டனர்.

மேலும், பழங்குடியினரின் மொழிகள் ‘குப்பை’, ‘பழமையான உளறல்’ என்றெல்லாம் இழிவுபடுத்தப்பட்டதால், மக்கள் தங்கள் சொந்தமொழிபேச வெட்கப்பட்டனர். இதனால், 250 க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்த ஆத்திரேலியாவில், இன்று பல மொழிகள் ‘அழிந்த

மொழிகள்’ பட்டியலில் உள்ளன. மொழியை இழந்ததால் அந்த இனக்குழுக்கள் தங்கள் முன்னோர் தொடர்பை இழந்து, இன்று குமுகத்தின் விளிம்பு நிலையில் அடையாளமின்றித் தவிக்கின்றனர்.

6. சப்பானின் வடக்குப்பகுதியில் வாழ்ந்த ஐனு மக்கள் (Ainu People) ஒரு தனித்தன்மையான மொழியையும் பண்பாட்டையும் கொண்டிருந்தனர். 1899-இல் சப்பான் அரசு கொண்டு வந்த சட்டங்கள் ஐனு மக்களைச் சப்பானியர்களாக மாறக் கட்டாயப்படுத்தின. அவர்களின் மொழி தடை செய்யப்பட்டு, சப்பானிய மொழி அவர்கள்மீது திணிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஐனு மொழி பேசும் மக்களே இல்லாத நிலை உருவானது.

7. கார்னிசு, மாங்கசு (Cornish & Manx) இனத்தவர் - ஐரோப்பா): பிரித்தனின் பகுதிகள் சிலவற்றில் பேசப்பட்ட கார்னிசு, மாங்கசு மொழிகள் ஆங்கிலத்தின் வல்லாளுமையால் முற்றிலுமாக அழிந்தன. 18-ஆம் நூற்றாண்டோடு கார்னிசு இனத்தின் தனித்தன்மை உடைய இலக்கியம், வாய்மொழி வரலாறுகள் அனைத்தும் புதைந்து போயின. இன்று அவர்கள் தங்களை மீட்டெடுக்க முயன்றாலும், தொலைந்துபோன மொழியின் நுணுக்கங்களை மீட்கமுடியாமல் ஒரு ‘பண்பாட்டு வெற்றிடத்தை’ உணர்கின்றனர்.

8. அந்தமான் தீவுகளின் அகா-போ (Aka-Bo) இனத்தினர் பேசிய ‘அகா-போ’ மொழி 2010இல் கடைசிப் பேச்சாளர் ‘போயா இசிரி’ இறந்ததும் அழிந்தது. 65,000 ஆண்டுகள் பழமையான இந்த இனத்தின் மொழிஅழிவு அவர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியை முற்றிலும் முடித்துவிட்டது.

9. உருசியாவில், சைபீரியாவின் சில பழங்குடி இனங்கள் தங்கள் மொழிகளை இழந்து அழிந்தன. எடுத்துக்காட்டாக, கமாசின்கள் (Kamasins) 17ஆம் நூற்றாண்டில் வெறும் 500 பேர் மட்டுமே இருந்தனர், இன்று அவர்களின் மொழி அழிந்துவிட்டது. அவர்கள் உருசிய மொழிக்கு மாற்றப்பட்டதால், இன அடையாளம் இழந்து வேறு இனங்களுடன் இணைந்தனர். வேட்டை, மான் வளர்ப்பு போன்ற மரபுகள் மொழியுடன் அழிந்தன.

10. மஞ்சு மக்கள் (Manchu people) சீன நாட்டில் ஒரு முகன்மை அரச இனமாக இருந்தனர். இவர்கள், குயிங்கு அரசமரபில் (Qing dynasty 1644 –1912) சீனாவை ஆட்சி செய்தவர்கள். இவர்களைச் சீன (Mandarin Chinese) மொழி ஏற்கச் செய்ததால், இன்று மஞ்சு மொழி பேசுபவர்கள் அரிதாயினர். அரச இனமாக இருந்தாலும், மொழி மறைந்ததால் தனித்த அடையாளம் போய் விட்டது.

மொழி அழிப்பால், முன்னோரின் பாடல்கள், கதைகள் மற்றும் கல்வெட்டுகளைப் புரிந்துகொள்ளும் திறன் அற்றுப் போகும். அதாவது, வரலாற்றுத் தொடர்பு அறுந்துபோகும். ஒவ்வொரு மொழியும் ஒரு தனித்த சிந்தனைப் போக்கைக் கொண்டது. மொழி அழியும்போது அந்த இனத்தின் தனித்தன்மையான அறிவுத்திறன் அழிகிறது. மொழி, ஓர் இனத்தைப் பிணைத்து வைத்திருக்கும் தொடரி (chain) ஆகும். அது அறுந்தால் அந்த இனம் சிதறிப் போய்ப் பிற இனங்களுடன் கரைந்துவிடும். மேலும், மொழிஅழிவு அம் மொழி பேசும் மக்களின் வழிவழி மருத்துவ அறிவு, நிலைத்திணை அறிவு, சுற்றுச்சூழல், உயிரியியல் அறிவு முதலியவற்றின் இழப்புக்குக் காரணமாகிவிடும்.

பள்ளிகளில் தாய்மொழி பேசத் தடை, தாய்மொழிக் கல்வி, தாய்மொழிவழிக் கல்விக்குத் தடை, குழந்தைகளைக் குடும்பத்திலிருந்து பிரித்து விடுதியிலிருந்து பள்ளிகளில் படிக்கவைப்பது, அரசுவேலை, ஊடகம், மேலாண்மை, நயன்மன்றம், வாணிகம் முதலிய அனைத்திலும் ஒரே வல்லாண்மை மொழியைக் கட்டாயப்படுத்துதல் முதலியவை பிற மொழியைத் திட்டமிட்டு அழிக்கும் வழிகளில் சிலவாகும்.



அறிஞர் சோம.வள்ளியப்பன் 28-10-2025 நாளிட்ட ‘தினமணி’ நாளிதழில் ‘தமிழில்மட்டுமே பேசுவோம்’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில், ‘தமிழ் தெரிந்தவர்களோடு தமிழிலே பேசுங்கள்’ என்றும், ‘தமிழைப் பிறசொற்கள் கலப்பின்றிப் பேசுங்கள், தமிழில் எழுதிப் பழகுங்கள், படியுங்கள்’ என்றும் மாணவர்களிடம் வலியுறுத்தியதைக் கூறியிருந்தார். மேலும், தாம் பேசுவது தமிழாக இல்லை என்று கூட அறியாமலே தமிழர்கள் பலமொழிச் சொற்களைக் கலந்து பேசிவரும் இரங்கத்தக்க நிலையையும் கூறி, ‘இணக்கம் செய்து கொள்கிறோம், நல்லவர்களாக நடந்து கொள்கிறோம்’ என்று நம் மொழியை விட்டுக்கொடுத்து, பிற மொழியைப் பயன்படுத்துகிறபோது நம்மொழி அழிவதைத் தடுக்க இயலாது என்ற உண்மையையும் எழுதியிருந்தார்.



அவரே, 21-11-2025 நாளிட்ட ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில், ‘தமிழைக் காக்க வேண்டாமா, தமிழர்களே?’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் தமிழே படிக்காமல் கல்வி கற்ற தமிழர்களைப் பற்றியும், சில பள்ளிகளில் தமிழில் பேசக்கூடாது என்ற நிலையிருப்பது பற்றியும் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்திலேயே பேசுவது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். மாணவர்களின் பெயர்கள் தமிழில் இல்லாத நிலையையும், மகிழுந்து ஓட்டுநர் ஒருவருக்கு இடப்பக்கம் வலப்பக்கம் என்றால் புரியவில்லை; ‘லெப்டு’, ‘ரைட்டு’ என்றால்தான் புரிகிறது என்றும் வருந்தியிருந்தார். ஊடகங்களில் பல மொழிச் சொற்களையும் தமிழில் கலந்துபேசும் நிலையை எடுத்துக்காட்டுடன் எழுதியிருந்தார். இன்றைய தமிழின் நிலையைக் கூறுவனவாக அவர் கட்டுரைகள் இருந்தன.



ஒரு தலைமுறைக்கு முன்னர், ஒரு தமிழாசிரியர் தம் பாட்டாலும் பேச்சாலும் தமிழ்உணர்வூட்டிப் பெரும்புரட்சி செய்தார். அந்தப் பாவேந்தர் உழைப்பின் பயனை இத் தமிழகம் கண்டது. ஆனால் இன்றோ பெரும் பின்னடைவில் உழல்கிறது. இன்றைக்கும் பல தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும் இல்லாமல் போய்விடவில்லை, விளைச்சல்தான் இல்லை!

தமிழர் பலர் தமிழே படிக்காமல் உயர்கல்விவரை படித்து முடித்து விடுகின்றனர். இந்தவகைத் தலைமுறை வளர்ந்து வருகிறது. பல தமிழ்க் குடும்பங்களில் வீட்டிலும் தமிழ்பேசும் நிலை இல்லை. இந்தப் போக்கு நாளுக்குநாள் அதிகமாகிவருகின்றது. இப்படிப்பட்ட குடும்பங்கள் பெருகி வருகின்றன.



பெயரில் தமிழ் இல்லை; தலைப்பெழுத்தையும் தமிழில் எழுதுவதில்லை; கல்வியில் தமிழில்லை; தமிழ்வழியில் கல்வியில்லை; வீட்டுச் சடங்குகளில், நிகழ்வுகளில், விழாக்களில் தமிழ் இல்லை; வழிபாட்டில் தமிழ் இல்லை; வழக்காடல் தமிழில் இல்லை; தமிழில் கையொப்பம் இடுவதில்லை; பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை; பேச்சில் தமிழில்லை; எழுத்தில் தமிழ் இல்லை; ஊடகங்களில் தமிழ் இல்லை; பெற்றோரை அம்மா, அப்பா என அழைப்பதில்லை; அலுவலக நடைமுறைகள், நிகழ்வுகள் தமிழில் இல்லை. இப்படியெல்லாம் தாய்த் தமிழைப் புறக்கணித்தால் தமிழ் அழியாமல் இருக்குமா? இவற்றிற்கு இந்தித்திணிப்பு வெறியும் ஆரியப் பார்ப்பனியமும் நேரடிக் காரணங்களாகக் கூற முடியுமா?

இந் நிலைகளால்தான் இந்தத் தமிழினத்தைத் தன்னைத்தானே அழித்துக் கொள்கின்ற ஓரினம் என்னும் உண்மையைத் தொடக்கத்தில் பெயர் குறிப்பிடாமல் தெரிவித்திருந்தோம். இது, மிகைக்கூற்று இல்லை என்பதை உணர்ந்தும் தாய்மொழிகாக்க முனையாத தமிழர்களுக்காக இரங்கவேண்டிய நிலையிலேயே இருக்கின்றோம்.

இந்நிலையிலுள்ள தமிழர்களை நோக்கியே மனங்குமுறிய ஒருவர் பாடிய பாடல், இது:

ஆரியர்க்குப் பாய்விரித்தாய்! ஆங்கிலர்க்குக் கற்பிழந்தாய்!

பூரியர்செய் இந்திக்குப் பொற்பிழந்தாய்! – யார்யார்க்குத்

தாள்பிடிக்கக் காத்திருக்கின் றாயோ தமிழ்மகனே,

வாள்பிடிக்குங் கையால் வணங்கியே! – கேளினிமேல்

மீசை மழித்துவிடு; முன்குடுமி வைத்துக்கொள்!

காசைப் பெரிதாய்க் கருத்தில்வை! - கூசுகிலா

மானம் அறக்கழற்று! மாண்பை உதறியெறி!

ஏனோ உனக்கு மனைவிமக்கள்? – ஊனுடலை

நன்றாய் வளர்ப்பதுவே நல்வாழ்க்கை! நாள்முழுதும்

தின்று கொழுத்துத் திரி!     
                          - பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

- த.ந.