வெள்ளி, 30 ஜனவரி, 2009

முத்துக்குமார் நினைவாக...!

அவரும் இவரும் நீயும்!
அவர்:
ஒருவருடை இறப்பினுக்கே ஓரினத்தைப் பழிவாங்கும்
     உளங்கொண் டாரோ?
உருளுலகில் இந்நாட்டை உயர்வல்ல அரசாக்க
     உளங்கொண் டாரோ?
உருவாகும் ஈழத்தால் ஒற்றுமைக்கிங்(கு) ஊறென்றே
     உளங்கொண் டாரோ?
ஒருமுடிவாய்ப் பலவகையும் உதவுகிறார் சிங்களர்க்கே
     உணமை ஏதோ?
இவர்:
ஈழத்தில் இனமழிய இவ்வாட்சி எதற்காக
     இனியெம் சொந்தம்
ஆழத்தாழ் துயர்மூழ்கி அழிகின்ற நிலைமாற்ற
     ஆளும் தில்லி
தாழவிடா தாட்சியினைத் தாங்குகின்றோம் ஈழப்போர்
     தடுப்போம்! என்றே
சூழல்கண் டுரைத்தார்பின் சோர்ந்தாரே! பதவிக்காய்ச்
     சுருங்கி னாரே!
நீ:
இங்குதமிழ் நாடாளும் இயலாத்தன் னலத்தாரின்
     ஏய்ப்புக் கூறி
பொங்கீழத் தமிழினத்தைப் பொல்லாரோ டிணைசேர்ந்து
     போரில் மாய்க்கும்
எங்குமிலாக் கொடுமைசெயும் இந்தியத்தின் இரண்டகத்தை
     எடுத்துக் கூறி
மங்கலிலாப் புகழோடே மாய்ந்தமுத்துக் குமாரேயெம்
     மறமே வாழ்க!