Wednesday, July 8, 2009

ஈழம்: தமிழ்நாட்டு ஆட்சியாளர் நடிப்பும் நாடகமும்!

.

சென்னையில், ‘அனைத்து நாட்டுத் தமிழ்நடுவம்’ என்ற அமைப்பு ஒரு மாநாட்டை 8-6-2009 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில், வன்னிப்போர் நடந்தபோது, இந்தியத் தேசியப் பாதுகாப்பு அறிவுரைக் குழுவின் உறுப்பினராக இருந்த பேராசிரியர் வி.சூர்யநாராயண் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “ நம் (இந்தியாவின்) கைகள் இரத்தக் கறையால் களங்கப் பட்டுள்ளன” என்று அவர் ஒப்புக்கொண்டதோடு, ஈழச் சிக்கலில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு அரசைக் கலந்து கொள்ளாது புதுதில்லி எதையும் செய்ததில்லை என்று கூறி, கருணாநிதி முதல்வராயுள்ள தமிழ்நாட்டரசு, இந்திய அரசின் அனைத்துச் செயல்களுக்கும் உள்கையாக இருந்ததை வெளிப்படுத்தி விட்டார்!

தமிழ்நாட்டு ஆட்சி

தமிழ்நாட்டில் இப்போது கருணாநிதி முதலமைச்சராக உள்ள தி.மு.க.வின் சிறுபான்மை ஆட்சி, பேராயக் கட்சியின் துணைதரவோடு தான் நடந்து வருகிறது. ஆட்சியைப் பேராயக்கட்சி கவிழ்த்து விடாமல் எந்த நிலையிலும் எப்படியாவது காப்பாற்றிக கொள்ள வேண்டும் என்பதில் பதவி அதிகாரப் பேராசையை விடமுடியாத தி.மு.க. தீர்மானமாக இருக்கிறது. அதனாற்றான், எக்காரணங் கொண்டும் தலைமை அமைச்சர் மன்மோகனும் பேராயக்கட்சித் தலைமையும் மனங் கோணாதவாறு தி.மு.க.வும் அதன் தலைவரான முதலமைச்சர் கருணாநிதியும் நடந்து கொள்கின்றனர்.

குடும்பம், அதிகாரம்

தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி, தன் குடும்பத்தினர் பலருக்கும் அமைச்சுப் பதவி முதலானவற்றின் வழி நலன்களைச் சேர்த்துக் கொள்ளவும் காத்துக் கொள்ளவும் முதன்மை அளிப்பதை அவருடைய செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

நடுவண் அமைச்சரவையில் விரும்பிக் கேட்ட துறைகளோடு கேட்ட எண்ணிக்கையில் கருணாநிதி விரும்பிக் கூறும் ஆட்கள் அமைச்சர்களாகத் தொடர்ந்து இருந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அதன்வழி பதவி அதிகாரப் பயன் துய்க்க வேண்டும் என்றும் தி.மு.க. கருதுவது தெளிவாகத் தெரிகிறது.

கைக்கூலி

இவ்வாறான காரணங்களால்தான், தி.மு.க. இந்திய அரசின் கைக்கூலி அமைப்பாகவும், சோனியா காந்தியின் தலைமையிலான பேராயக் கட்சியின் கையாள் அமைப்பாகவும் செயல்படத் தயங்கவோ கூச்சப்படவோ இல்லை.

ஒரே கொள்கை

இம்முறை தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததுமே, முதலமைச்சர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு விடையளிக்கையில், ஈழச்சிக்கலில் நடுவண் அரசின் கொள்கையே தம் கொள்கை என்று கூறினார். அக்கூற்று முற்றிலும் உண்மை என்பதை இன்று வரை கருணாநிதியின் செயற்பாடுகள் மெய்ப்பித்து வருகின்றன!

உணர்வெழுச்சி

சென்ற ஆண்டு (2008) செப்தம்பர் மாதத்திலேயே, இனவெறிச்சிங்கள அரசு ஈழத்தமிழரைக் கடுமையாகத் தாக்கிக் கொன்று கொண்டிருந்தது. அக்தோபர் மாதம், தமிழ்நாட்டில் தா.பாண்டியன் தலைவராக உள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி நடுவண் அரசையும் தமிழக அரசையும் வற்புறுத்தித் தமிழ் உணர்வாளர்களோடு ஒருநாள் உண்ணா நோன்பை நடத்தியது.
தமிழக மக்கள், கொடுமையான இனஅழிப்புத் தாக்குதல்களால் அல்லலுற்று அழிந்து கொண்டிருக்கும் தம் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்குத் தம் துணைதரவை வெளிப்படுத்தும் வகையில் உணர்வு கொண்டெழுந்தனர்.

நடிப்பும் ஊடகப் பரப்புதலும்

இந்த எழுச்சியை மிக நன்றாகப் புரிந்துகொண்ட கருணாநிதி, தேர்ந்த திறமையோடும், மிகமிகத் தந்திரக் கரவோடும் தம் இன உணர்வு நடிப்பை வெளிப்படுத்தத் தொடங்கினார். அவருக்குச் சார்பாகவும் துணையாகவும் தமிழக மின் ஊடகங்களும் செய்தித் தாள்களும் செயற்பட்டன. இவ் ஊடகங்கள் கருணாநிதியின் குடும்பத்தினர்க்குச் சொந்தமானவையும் அரசு தரும் விளம்பரத்தின் வழி கிடைக்கும் வருமானத்திற்காகவும் பிறவற்றிற் காகவும் அரசிற்குச் சார்பாகவே இயங்குவனவாகும்.

ஈழத்தமிழர் துன்பத்தைக் கண்டு முதலமைச்சர் ஆறாத் துயருற்றதாகப் பலவாறு செய்திகளைப் பரப்பின. ஈழத்திலிருந்து வந்த குறுவட்டின் வழி, சிங்களர் இழைக்கும் கொடுமைகளைக் கண்டு அதிர்ச்சியும் கொதிப்பும் அடைந்து, அவர் வீறுகொண்டு எழுந்துள்ளதாகவும், தில்லியைப் பணிய வைத்து உடனே போரை நிறுத்தப் போகிறார் எனவும் பலவாறான செய்திகளைப் பரவலாகப் பரப்பின. அதற்கேற்ப அவரும் தம் தேர்ந்த போலித்தனமான செயற் பாட்டைத் தொடர்ந்தார்.

எழுச்சியைத் தணிக்க

தமிழ்நாட்டு மக்களின் எழுச்சியுற்ற போராட்ட உணர்வைப் புரிந்து கொண்ட அவர், தாமும் போராடுவதாக நடித்து மக்களின் எழுச்சியைத் தணிவித்து மழுங்கடிக்க முழுமுனைப்பாகக் கரவுத்தனத்துடன் ஈடுபட்டார் என்பதைப் பின்னரே தெரிந்து கொள்ள முடிந்தது.

இராசிவ் காந்திக்கு முன் பின் என்று ஈழச்சிக்கலைப் பார்க்க வேண்டும் என்றும் புலிகள் தலைமை முற்றதிகாரப் போக்குடையது என்றும் புலிகளைக் குறைகூறிப் பேசி வந்த கருணாநிதி, ஒரு நேர்காணலில் பிரபாகரன் தன் நண்பர் என்று கூறினார். மறுநாள், பேராயக்கட்சியின் எதிர்ப்பைக் கண்டு மிரண்டு, தான் கூறியதையே மழுப்பலாக மறுத்தார். தமிழ்ஈழம் அமையத் தாமும் உதவுவதாகத் திடுமென அறிவித்தவர், வழக்கம்போல் பேராயக் கட்சியின் சலசலப்பிற்குப் பின் வாய் மூடிக் கொண்டார்.

நடிப்பும் நாடகமும்

நடுவண் அரசு முயற்சி எடுத்து ஈழத்தில் போரை நிறுத்தாவிட்டால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்றார். பின் மற்ற கட்சிக் காரர்களைக் காரணம் காட்டி, பதவிவிலகப் போவதில்லை என்று அறிவித்தார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்குப் போட்டியாக, போலியாக ஒரு அமைப்பு தமிழ்நாட்டு அரசால் உருவாக்கப்பட்டது. இ.த.பா. இயக்கம் மாந்தத் தொடரிப் போராட்டம் என்றால், தி.மு.க.வும் மாந்தத் தொடரிப் போராட்டம் என்றது. இ.த.பா.இ. கடை அடைப்புப் போராட்டம் என்றால் தி.மு.க.வும் அவ்வாறே அறிவித்தது. இவ்வாறு, போலித்தனமான போட்டிப் போராட்டங்களை அறிவித்து மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கப் பெரும்பாடு பட்டனர்.

மாமறவன் முத்துக்குமாரின் ஈகச் சாவும் அதன்பின் 12 பேர் தீக்குளித்த நிகழ்ச்சிகளும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தின. ஊடகங்கள் உண்மையான ஈழச்செய்திகளை வெளியிடாது புறக்கணிப்புச் செய்ய மறைமுகமாக வலியுறுத்தி அதன்வழி மக்களின் எழுச்சியைத் தணிக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. எவ்வெவ் வாறோ முயற்சி செய்தும் மக்களின் எழுச்சியை அடக்கும் முனைப்பில் அரசு தோல்வியையே கண்டது!

எழுச்சியும் ஒடுக்கும் முயற்சியும்

கண்டனப் பேரணி, உண்ணா நோன்பு, மறியல், வேலை நிறுத்தம், கடைஅடைப்பு, உருவ எரிப்பு, முற்றுகை, தீக்குளிப்பு உயிர் ஈகம் போன்ற பல்வேறு வகைப் போராட்டங்கள் பல்லாயிரக் கணக்கில் சிற்றூர் முதல் பெருநகர் ஈறாக பல இலக்கக் கணக்கான மக்களின் பங்கெடுப்போடு நடைபெற்றன. ஆனால், நடுவண் அரசும் தமிழ்நாட்டு அரசும் இவற்றை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

போராட்டம் நடத்தியவர்கள் தளைப் படுத்தப்பட்டாலும், மிகச்சிலர் தவிர மற்ற அனைவரும் அன்றே மாலையில் விடப்பட்டனர். திரைப்பட இயக்குநர் சீமான் போன்று மக்களைக் கிளர்ச்சிக் கெழச்செய்த சொற்பொழிவாளர்களை இ.பா.சட்டத்தின் கீழ் சிறைவைத்து ஒடுக்க முனைந்தனர். மக்களின் போராட்டங்கள் அனைத்தும் ஆட்சியாளர்களால் பொருட்படுத்தப் படவில்லை; ஆறரைக் கோடி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் கொஞ்சங்கூட மதிக்கப் படவில்லை.

உளத்தியல் முயற்சிகள்

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் எழுச்சியையும் மழுங்கச் செய்ய உளத்தியல் அடிப்படையில் முயற்சிகள் தந்திரமாக மேற்கொள்ளப் பட்டன. ‘பிரபாகரன் தளை செய்யப்பட்டால் அலெகசாந்தர் போரசு மன்னனை நடத்தியதைப் போல் மதிப்புடன் நடத்த வேண்டும்’, ‘பிரபாகரன் கொல்லப் பட்டால் வருத்தப்படுவேன்’ போன்ற கூற்றுகளை வெளிப்படுத்தியதை இவற்றிற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஆனால், இக் கூற்றுகள், முதல்வரின் ஆழ் மனத்தில் போரை நிறுத்த வேண்டுமென்ற முனைப்பு இல்லை எனபதை மக்கள் புரிந்துகொள்ள வழி செய்தன.

இணையற்ற நடிப்பு

நடுவணரசின் தூதுவர்களாகக் கொழும்பு சென்ற அதிகாரிகள், அங்குச் சிங்கள ஆட்சியாளர்களிடம் போர்த் தாக்குதலை விரைவு படுத்தவும், அதற்கு அவர்களுக்குத் தேவை என்ன என்பதை அறிந்து வரவும், ஏதுமறியாத் தமிழர் பெரும் பேரளவில் கொல்லப்படுவதற்கு எந்த உலக நாடாவது எதிர்ப்பு தெரிவித்தால் இந்தியா இலங்கைக்குத் துணையாக இருக்கும் என்று உறுதி கூறவும் பிரபாகரன் இறந்துவிட்டதாகச் சிங்கள ஆட்சியாளரிடம் சான்றிதழ் பெற்று வரவுமே சென்றனர் என்று இப்போது செயதிகள் வெளிவந்து விட்டன.
அந்தத் தூதுவர்கள் ஒவ்வொரு முறை இலங்கைக்குச் சென்று திரும்பியதும், தமிழ்நாட்டு முதலமைச்சரை வந்துச் சந்தித்துச் சென்றனர். அப்போதெல்லாம், அத் தூதுவர்கள் போரை நிறுத்தச் சிங்கள அரசை வலியுறுத்திவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார்கள் என்று செய்தியாளருக்குத் தெரிவித்தனர். இந்த நாடகத்தில் யாருடைய நடிப்பு இணையற்றதெனக் கண்டுபிடிப்பது திறமைமிக்க மானாட்ட மயிலாட்டக் கிழட்டு நடுவருக்கும் மண்டையைக் குழப்பக் கூடியதே!

மூன்றுமணி நாடகம்

சென்னைக் கடற்கரையில் முதலமைச்சர் மேற்கொண்ட மூன்றுமணி நேர உண்ணாநோன்பு முயற்சி ஒரு அப்பட்டமான நாடகம் என்று மக்கள் அனைவரும் கூறுகின்ற வகையில் அமைந்து விட்டது. போர்நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று கூறி, உண்ணா நோன்பை முதலமைச்சர் முடித்த அன்றே, சிங்கள இனவெறி அரசு ஏதுமறியா ஈழத்தமிழர் 272 பேரைக் கொன்றது. அடுத்தநாள், 172 பேர் கொல்லப்பட்டனர். அதற்கடுத்தநாள் ஆயிரம் பேர் சாகடிக்கப் பட்டனர். ஆம், இனக்கொலை தொடர்ந்து பேரெண்ணிக்கையில் நடந்தது. ஆனால், இதற்கு அமைதி கூறும் வகையில் தூவானம் போல் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கிறது எனத் தயங்காது பொய் கூறினர்.

கருத்துச் செலுத்தவே இல்லை

இதுவரை, ஈழ விடுதலைப் போரில் ஓரிலக்கம் தமிழர் உயிர் இழந்துள்ளனர். போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததற்கு முன்னராகக் கடைசி இரண்டு மூன்று நாட்களில் ஈழத்தமிழர் 53000 பேர் கொல்லப் பட்டிருந்தனர்; 13000 பேர் காணாமற் போயிருந்தனர்! தமிழ்நாட்டு அரசோ, தமிழக முதல்வரோ இச்செய்தி குறித்து வாய் திறக்கவே இல்லை. இரங்கலுரையோ ஆறுதல் சொற்களோ இவர்களால் கூறப்படவில்லை!

போருக்குப் பின், ஏதுமறியாத் தமிழர் மூன்றிலக்கம் பேர், 41 இடங்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட முட்கம்பி வேலிகளால் சூழப்பட்ட கடுங்காவற் கூடாரங்களில் மந்தைகளைப்போல் அடைக்கப் பட்டனர். காயங்களாலும் நோய்களாலும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு, உணவு, உடை, மருந்து, நீர் கிடைக்கவில்லை எனச் செய்திகள் கூறுகின்றன. அங்கிருந்து இழுத்துச் செல்லப்படும் பெண்கள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப் படுகிறார்கள் என்றும், இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாது என்றும் செய்திகள் கூறுகின்றன. அவர்களின் சொல்லொணாத் துயர் நீக்கும் முயற்சியில் இன்னமும் தமிழ்நாட்டரசு கொஞ்சமும் கருத்துச் செலுத்தவில்லை என்பதே உண்மை நிலையாக உள்ளது.

சிங்களர்க்குப் பரிந்து

இப்படிப்பட்ட நிலையில், பணத்தை வாரி இறைத்தும் வேறுவகை மோசடி செய்தும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓரளவு வெற்றி பெற்றபின் தமிழ்நாட்டு முதல்வர் தில்லி சென்றார். நடுவண் அரசு அமைச்சரவையில் கேட்ட எண்ணிக்கை அளவில் தாம் விரும்புகின்றவர்களுக்கு அமைச்சர் பதவி பெறுவதற்காகத் தில்லியில் நாட்கணக்கில் தங்கிப் பேசி அவர் பெருமுயற்சி மேற்கொண்டிருந்ததைக் கண்டோம்! கேட்டவற்றைப் பெற்றுக் கொண்டதன் பின்னும்கூட ஈழத்தமிழர் நலன்காக்கத் தில்லியை வற்புறுத்தாத நிலையே தொடர்ந்து வருவதைப் பார்க்கின்றோம்!

அண்மையில், சட்டமன்றத்தில் சிங்களர் சினமுறாத வகையில் ஈழத்தமிழர் நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் கூறிய கூற்று, ஈழத்தமிழர்க்குச் சம உரிமையோடு வாழ வழி கூறுகிறதா இல்லை அவர்களைச் சிங்களரின் அடிமைகளாகவே இருக்க வலியுறுத்துகிறதா என்று மக்களை ஐயுறச் செய்துள்ளது.

வரலாறு அம்பலப்படுத்தும்

பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் குடும்பத்தினர் நலன்களை முன்னுரிமை தந்து பேணுவதற்காகவும் ஈன்ற இனத்திற்கே எதிராக நடந்துகொண்டு, அதை மறைக்க எத்தனை நடிப்பும் நாடகமும் நடத்தினாலும், உண்மையை நெடுங்காலத்திற்கு மறைக்க இயலாது! வரலாறு ஈகிகளையும் நல்லவர்களையும் தன்னலக்காரர்களையும் இரண்டகர்களையும் அம்பலப்படுத்துவதை யாராலும் மூடி மறைத்துவிட இயலாது.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும். – குறள்.114.


-----------------------------------------------------------------------------------------------------------

Friday, July 3, 2009

வ.அய்.சுப்பிரமணியம் ஐயாவை இழந்தோமே!

..
..




தலைமைப்பண் பாற்றல்சால் தமிழறிஞர் ஆய்வர் !

. தன்னிகரில் வினையாண்மைத் தகையாளர் ! என்றும்

நிலைத்திருந்து ஆய்கின்ற நிறுவனங்கள் தந்தார்

. நிறைவாகச் செந்தமிழில் நெடும்பணிகள் ஆற்ற !

தொலைநோக்கில் பல்கலையில் தூயதமிழ்க் கென்றே

. துறையொன்றைத் தொடக்கியவர் துய்யதமிழ் நெஞ்சர் !

இலையின்றே வ. அய்.சுப் பிரமணிய ஏந்தல்

. ஈடில்லாப் பெருந்தமிழர் இவரையிழந் தோமே !




Monday, June 22, 2009

இனியேனும் முயலாரென்றால்...!



இனவெறிச் சிங்க ளர்க்கே
. இலையெனா தெல்லாம் தந்தார்!
கனவிலும் உரிமை மீட்பே

. கருதிய தமிழர் குண்டுக்
கனலினில் கருகி மாளக்
. கழியமீ துள்ளோர் துன்பில்
மனஞ்சிதை வுறுதல் போக்க
. மனப்பத னிலைதில் லிக்கே!

ஈழமண் நொசிந்து நைந்தே
. இறந்தவர் ஓரி லக்கம்!
தோழத்தே அடைத்த மந்தைத்
. தொகுப்பெனக் குமைந்தி ழிந்தே
ஆழவே துயருள் மீழ்கி
. அமிழ்ந்துளார் மூன்றி லக்கம்!
சூழலோ அவர்க்க மைத்தச்
. சொல்லொணாக் கொடுமை அந்தோ!

அங்கவர் அடைப்பின் நீங்கி
. அவரவர் வீடி ருந்த
தங்கிடம் செல்லு தற்கே
. தடையிடா தீரென் றந்தச்
சிங்கள ஆட்சி யாளர்
. செவிப்பறை யறையச் சொல்ல
இங்குளார் தில்லி யாரை
. ஏன்வலி யுறுத்தா துள்ளார்?

தமிழினத் தலைமை வேட்டத்
. தகுதியைக் காட்டற் கேனும்
நிமிர்வுற நின்று தில்லி
. நிலையினை மாற்றி ஈழத்
தமிழரின் துயர் துடைக்கத்
. தாமினி முயலா ரென்றால்
இமிழுல கெல்லாந் தூற்றும்!
. இரண்டகர் இவரே என்னும்!


Thursday, June 11, 2009

தொடரும் இந்திய இரண்டகம்!

.
காவிரியாறு, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்றுநீர்ச் சிக்கல்களிலும், தமிழக மீனவர் பாதுகாப்புச் சிக்கலிலும் தமிழக நலனையும் தமிழர் நலனையும் இந்திய அரசுகள் புறக்கணித்தே வருகின்றன. ஈழச் சிக்கலிலோ இந்திராகாந்தி காலத்தில் தவிர மற்ற எல்லாருடைய ஆட்சிக் காலத்திலும் இந்திய அரசுகள் தமிழினத்திற்கு இரண்டகம் செய்து வரும் போக்கே நிலவி வருகிறது. இந்நிலைகளால், தமிழினம் முன் எப்போதையும் விட இக்கால் பெரு இழப்பையும் பேரழிவையும் சந்தித்து வருகின்றது.

இனஅழிப்பு

ஈழத்தில் நடந்த போரில், கடந்த மூன்றுமாத காலத்தில் மட்டும் 53,000க்கும் மேல் ஏதுமறியாத் தமிழர்கள் இனவெறிச் சிங்கள அரசால் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். 13000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போயுள்ளனர்.

பன்னாட்டுச் சட்டங்களும் ஒன்றிய நாடுகள் மன்றமும் தடை செய்துள்ள எரிப்பொறைய (phosphorus bombs) குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் (cluster bombs) இன்னும் வேதியற் குண்டுகளையும் பல்லாயிரக் கணக்கில் தொடர்ந்து பொழிந்தும், வன்படைக்கலன்களை எவ்வகைத் தடையோ தயக்கமோ இன்றிப் பல்லாயிரம் முறை பயன்படுத்தியும் அந்தக் கொடிய அரசு, குழந்தைகள் பெரியோர் என்று எந்த வேறுபாடும் கருதாமல் ஏதுமறியாத் தமிழர்களைக் கொன்று தீர்த்திருக்கிறது.

ஈழப் போரில் இதுவரை உயிரிழந்த தமிழர் தொகை ஓரிலக்கத்திற்கும் அதிகம் எனத் தாளிகைகள் கூறுகின்றன. நான்காம் விடுதலைப் போர் என்று குறிப்பிடப்படும் இந்தப் போரினால் சிறுவர்களும் பெரியோருமாக ஏறத்தாழ நாற்பதினாயிரம் தமிழர்கள் உறுப்பறையராகி உரிய மருத்துவமும் இன்றித் துன்புறுகின்றனர்.

கொடுமைகள்

ஏதுமறியாத் தமிழர் மூன்றிலக்கம் பேர் 41 இடங்களில் இக்கால் முட்கம்பிகளாற் சூழப்பட்ட கடுங்காவற் கூடாரங்களில் மந்தைகளைப் போல் அடைக்கப் பட்டுள்ளனர். உணவு, மருந்து, நீரின்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். நெருங்கிய உறவினரிடமிருந்து வலியவே பிரித்து வைக்கப் பட்டுள்ளனர். அங்கிருந்து கடத்திச் செல்லப்படும் இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாது. அங்கிருந்து இழுத்துச் செல்லப்படும் பெண்கள் நாசமாக்கப் படுவதாகத் தொடர்ந்து ஊடகங்கள் கூறிவருகின்றன.

இருட்டடிப்பும் வெளிப்படுத்தமும்

தமிழ்நாட்டை ஒரு மாநிலமாகவும் தமிழரை இங்கு வாழ்கின்ற ஓரின மக்களாகவும் கொண்டுள்ள இந்தியா, ஈழப்போர் தொடர்பாக என்னென்ன செய்ததென்றும் செய்து கொண்டு இருக்கிறதென்றும் ஈழத் தமிழர்க்கு இழைக்கப்படும் கொடுமைகளிலும் அங்குத் தடையின்றி நடந்துவரும் இன அழிப்பிலும் இந்தியாவின் பங்கு என்ன என்பது பற்றியுமான உண்மைகளை உள்ளபடி அறிய, இங்குள்ள ஊடகங்களும் பிறவும் உதவாததோடு பல செய்திகளை பலகாரணங்களால் இருட்டடிப்பும் செய்து வருகின்றன.

வலிமையான திரையிட்டு மூடி மறைக்கப்படும் செய்திகளையும் வெளிப்படுத்தும் ஊடகங்களும் திறஞ்சான்ற நடுநிலைச் செய்தியாளர் பலரும் உலகிலுள்ள உண்மை மாந்த நேய மாந்த உரிமை ஆர்வலரும் உண்மைச் செய்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றனர். இலங்கை ஆட்சியாளர்களின் கூற்றுகளின் வழியும் இந்தியாவின் கரவான வினைப்பாடுகளை அறிய முடிகின்றது.

இராசபக்சேக்கள் கூறுகிறார்கள்

அண்மையில், அம்பாறை மருத்துவ மனையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில், சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசின் தலைவர் மகிந்த இராசபக்சேவின் தம்பியும் மூத்த அரசு கலந்துரைஞருமான பசில் இராசபக்சே, இந்திய அரசின் முழுமையான துணைதரவை(ஆதரவை)ப் பெற்ற பின்னரே தாங்கள் போரை முன்னெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

‘தி வீக்’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், இலங்கையரசின் தலைவர் மகிந்தா, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இந்திய அரசு எங்களுக்கு அளித்த துணைதரவு மிகவும் முகன்மையானது என்று கூறியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. அதற்காக, இந்தியத் தலைவர்களைச் சந்தித்து நன்றி செலுத்துவதற்காகத் தாம் இந்தியா செல்ல இருப்பதாகவும் அந்த நேர்காணலில் இராசபக்சே கூறியுள்ளார்.

இவரே, “என்.டி.டி.வி” தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இலங்கைப் போரில் ஏதுமறியாத் தமிழர்கள் கொல்லப் படுவதைத் தடுக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக இந்திய வெளியுறவுத் துறை கூறியிருக்கிறது; ஆனால், இந்தியத் தரப்பிடம் இருந்து எங்களுக்கு எந்த வலியுறுத்தலும் வரவில்லை; இந்தியாவின் சார்பில்தான் நாங்கள் விடுதலைப் புலிகளுடன் போரிடுகிறோம் என்பது இந்திய அரசுக்குத் தெரியும் என்று கூறியிருந்தார்.

மாந்த உரிமைகள் கண்காணிப்பகம்

போரில் இலங்கைக்கு (சிங்கள அரசுக்கு) இந்தியா உதவியதை மாந்த உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு இயக்குநர் “பிறட் ஆடம்சு”ம் திறனாய்வில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய மனிதப் பேரழிவு ஏற்பட இருப்பதாக அனைத்துலகச் செங்குறுக்கைக் கழகம் எச்சரித்த பிறகும், இலங்கை இனச்சிக்கலில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்தாததற்காக அந்த நாடு என்ன காரணத்தைக் கூறினாலும் அதனை ஏற்க முடியாது! இதில் இந்தியா சற்று முனைப்புடன் செயல் பட்டிருந்தால் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றி யிருக்க முடியும் என ‘த டைம்சு’ நாளிதழிடம் பிறட் ஆடம்சு கூறியுள்ளார்.

இந்தியா கூறியது என்ன?

இனவெறிச் சிங்கள அரசுக்கு இந்தியா கருவிகளும் தொகை உதவியும் பிறவும் அளித்து வருவதாகத் தமிழகத்தில் குரலெழுப்பிய போதெல்லாம், இந்திய அரசும் அதிகாரிகளும் இலங்கை அரசுக்கு இந்தியா எந்த உதவியும் செய்யவில்லை என்றே கூறி வந்தனர்.
மிக நெருக்கடியான சூழல்களில் விடை சொல்லவேண்டிய நிலையில், இந்தியா இலங்கை அரசுக்குத் தற்காப்புக்காக மட்டுமே சிறிது உதவுகிறது என்று வாயவிழ்த்தனர்.

பொது மன்னிப்பு அவை

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது பேரெண்ணிக்கை யிலான மக்கள் கொல்லப் படுவார்கள் என்பது தெரிந்தும், சிறிலங்கா அரசுக்கு இந்தியா முழுமையாகப் போரில் துணையிருந்தது என்று பொது மன்னிப்புச் சவையின் ஆசிய இயக்குநர் ‘சாம் சரிஃபி’ கூறியுள்ளார்.

கோத்தபய கூற்று

இனவெறிச் சிங்கள அரசின் பாதுகாப்பு அமைச்சரும் அரசின் தலைவர் மகிந்த இராசபக்சேவின் உடன்பிறந்தாருமான கோத்தபாய இராசபக்சே இந்தியாவின் ‘பி.டி.ஐ.’ செய்தி நிறுவனத்துக்குக் கருத்து தெரிவிக்கையில், இறுதிப் போரின் முதல்நாளிலிருந்து முடிவு வரை இந்தியாவுக்கு முழுமையாகச் செய்திகளை அறிவித்து, சீனாவுடனோ பாகித்தானுடனோ அல்லது வேறெந்த நாட்டுடனோ நாங்கள் வைத்துள்ள உறவு காரணமாக எவ்வகை ஐயமும் ஏற்படாத வகையில் நடந்து கொண்டோம் என்றார்.

வெளியுறவு அமைச்சின் தொடர்புகளுக்கும் மேலதிகமாக நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் ஒரு கட்டமைப்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்தோம். இந்த கட்டமைப்பில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பாதுகாப்புச் செயலாளர் விசய் சிங் ஆகிய மூவரும் பங்கேற்றிருந்தனர் என்றும் கூறினார்.

அசோக்மேத்தா அறிவிக்கிறார்

இந்தியப் படையில் பணியாற்றி ஓய்வடைந்தவரும் முன்பு, இலங்கை சென்றிருந்த அமைதிப் படையின் தளபதியாக இருந்தவருமான ‘அசோக் மேத்தா’ இலண்டனில் இருந்து வெளிவரும் ‘த டைம்சு’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் இந்தியாவைக் கீழ்க் காணுகின்றவாறு குற்றம் சுமத்தியிருக்கிறார்:
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்த இந்தியா, இராசீவ் காந்தி படுகொலைக்காக விடுதலைப் புலிகளை பழிவாங்கும் நோக்குடன் சிறிலங்கா அரசுக்குப் பல்வேறு ஆய்த உதவிகளை அளித்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான இலங்கைப் போரின் கடைசிப் பகுதியில் சிறிலங்காவுக்கு இந்தியா மறைமுகமாகத் துணை போனது.

அதே நேரத்தில், களத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துத் தடுக்க இந்தியா தவறிவிட்டது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு வருத்தம் அளிப்பதாகவும் கவலை அளிப்பதாகவும் உள்ளது. இப்போதைய காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தியின் கணவரும் முன்னாள் இந்திய தலைமை அமைச்சருமான இராசீவ் காந்தி 1991 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப் பட்டதற்குப் பழிவாங்க வேண்டும் என்று இந்திய அரசு விரும்பியது என்றும் அசோக் மேத்தா கூறினார்.

நாளிதழ் கூறியது

இந்தியாவில் 6 கோடித் தமிழர்கள் இருக்கும் போதிலும் அவர்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாகவே கருதாமல் சிறிலங்காப் படையினருக்கு ஆய்த உதவி, போர்ப் பயிற்சி ஆகியவற்றை இந்தியா வழங்கியது; விடுதலைப் புலிகள் குறித்த உளவுத் தகவல்களையும் சிறிலங்காவுக்கு இந்தியா தெரிவித்தது; தொடர்ந்து தூதரக வழியில் சிறிலங்கா அரசுக்கு இந்தியாவின் துணைதரவு இருந்தது; போர்ப் பகுதியில் சிக்கியிருந்த தமிழ் மக்களைக் காப்பாற்ற, தனது செல்சொல்லை (செல்வாக்கை)ப் பயன்படுத்திப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது என்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்ததாக ‘த டைம்சு’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

வெளியுறவுச் செயலர்

புதுதில்லி வந்திருந்த இலங்கைத் தேசியத் தாளிகை (பத்திரிகை) களின் தலைமை ஆசிரியர்களை இந்திய வெளியுறவு அமைச்சகச் செயலாளர் சிவசங்கர் மேன்ன் சந்தித்துப் பேசினார்.
அப்போது, இலங்கையின் இனச்சிக்கல் தொடர்பான எந்தவொரு தீர்வு முயற்சியிலும் இந்தியா எவ்வகை அழுத்தத்தையும் இலங்கை மீது செலுத்தாது என்று கூறினார், (10-6-2009 – 4தமிழ்மீடியா)

இரிச்சர்டு டிக்சன் இடித்துரை

உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மாந்த உரிமை ஆர்வலருமான ‘இரிச்சர்டு டிக்சன்’, பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் 'மை டெலிகிராப்' நாளிதழில் எழுதிய கட்டுரையில் கீழ்க் காண்பவற்றைக் குறிப்பிட்டார்:

இலங்கைப் போரை ஒருங்கிணைந்து நடத்திய சில இந்திய தலைவர்கள் கொழும்புக்கு அடிக்கடி செலவு மேற்கொண்டனர். அவர்களின் செலவின் நோக்கம் போரைத் தடுத்து நிறுத்துவதன்று; அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுப்பது பற்றிப் பேசுவதன்று; மாறாக, போரில் எந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்காணிப்பதும், போரை நடத்தும் சிறிலங்கா அதிகாரிகளைப் பாராட்டு வதற்காகவும்தான்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தலையை எடுப்பது பற்றியும் பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக ஒரு சான்றிதழைப் பெறுவது பற்றியும்தான் அவர்கள் சிறிலங்கா ஆட்சியாளர்களுடன் பேசினர்.

உலகை ஏமாற்றுவதற்காகத்தான் இந்தியத் தலைவர்கள் சிறிலங்கா சென்று (போர்நிறுத்தம் பற்றிப்) பேசுவது போல நடித்தனர் - என்று இரிச்சர்டு டிக்சன் கூறியுள்ளார்.

மாந்த உரிமைக்குழுவில்

இந்த ஆண்டு சனவரி மாதத்தில் காசா பகுதி மீது குண்டுவீச்சு நடத்தி 926 பேரைப் படுகொலை செய்ததற்காக இசுரேல் மீது போரியல் குற்ற வழக்குத் தொடர்ந்து, உசாவல் நடத்தப்பட வேண்டும் - என்று ஒன்றிய நாடுகள் அவையில் தீர்மானம் வந்தபோது, அத் தீர்மானத்திற்குத் துணையாக நின்ற இந்திய அரசு, இலங்கைப் போரின் போது நடைபெற்ற மாந்த உரிமை மீறல்கள் குறித்துப் பொது உசாவல் நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்த போது, அத் தீர்மானத்தைச் சீனா, இரசியா, பர்மா, கியூபா போன்ற நாடுகளுடன் சேர்ந்து கொண்டு முறியடித்தது.

தென்மார்க்கு, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, பிரான்சு, செர்மனி, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகள் தீர்மானம் நிறைவேற்றத் துணைநின்ற போது, தீர்மானத்தை முறியடிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டது; முறியடித்தது. மேலும், சிறிலங்காவைப் புகழ்ந்து சிறிலங்காவே கொண்டுவந்த தீர்மானத்திற்குச் சார்பாகவும் இருந்தது. இச் செய்திகளை, ‘த டைம்சு’ இதழ் விளக்கமாக எழுதுகிறது.

இவ்வாறு, இலங்கை அரசின் இனஅழிப்புச் செயல்களுக்கும் மாந்த உரிமை மதியாக் கொடுஞ்செயல்களுக்கும் துணையிருந்து வரும் இந்தியா, இந்த மக்கள்நாயகக் குடியரசு நாட்டில் இவற்றை மக்களுக்குத் தெரியாமல் கமுக்கமாகவே செய்துவருகிறது.

சூர்யநாராயண் சொல்கிறார்

அனைத்து நாட்டுத் தமிழ் நடுவம் என்ற அமைப்பு 8-6-2009 அன்று சென்னையில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

இம்மாநாட்டில் இல்லினாய்சுப் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியின் அனைத்து நாட்டுச் சட்டப் பேராசிரியர் பிரான்சிசு பாயில் அவர்களும் வாசிஙடன் வழக்கறிஞர் புரூசு பெயின் அவர்களும் கலந்து கொண்டு இலங்கையின் இனஅழிப்புப் போக்கையும் அனைத்து நாட்டுக் குமுகாயம் என்ன செய்ய வேண்டுமென்றும் விளக்கிக்கூறினர். பிரானசிசு பாயில் ஈழத்தமிழர் தனிஅரசு கோரிக்கையை இந்தியா எதிர்க்கக் கூடாதென்றும் அறிவுறுத்தினார்.

வன்னிப்போர் நடந்தபோது, இந்தியத் தேசியப் பாதுகாப்பு அறிவுரைக் குழுவின் உறுப்பினராக இருந்தவர் பேராசிரியர் வி.சூர்யநாராயண். அவர் இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, “ நம் (இந்தியாவின்) கைகள் இரத்தக் கறையால் களங்கப் பட்டுள்ளன” என்று ஒப்புதலுரை செய்தார்.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு அரசைக் கலந்து கொள்ளாது (ஈழச் சிக்கலில்) புதுதில்லி எதையும் செய்வதில்லை என்று கூறி, கருணாநிதி முதல்வராயுள்ள தமிழ்நாட்டரசு அனைத்துச் செயல்களுக்கும் உள்கையாக இருந்ததை மறைமுகமாக வெளிப்படுத்தி விட்டார்!

சூர்யநாராயண் கருத்துப்படி, ‘இந்தியா தலையிடக் கூடும்’ என்ற அச்சம் நீக்கப்பட்ட நிலை, இந்திய அரசதந்திரத்தின் தோல்வியாகும்! அதன் விளைவு மாந்த உரிமைக்குழுவில் தெரிந்தது...

ஓர் இந்தியனாக, மாந்த உரிமைக் குழுவில் புதுதில்லி ஒப்போலை இட்ட தன்மை குறித்துத்தாம் வெட்கப்படுவதாகக் கூறினார். ஒப்போலை செலுத்துவதில் கலந்து கொள்ளாது தவிர்த்திருக்க வேண்டுமென்றார்.

மாந்த உரிமைக் குழுவில் சிறிலங்காவிற்குச் சார்பாக ஒப்போலைகள் பெற இந்தியா ஏற்பாடு செய்தது என்பதுதான் அனைத்து நாட்டு நோக்கர்கள் கருத்தாகும்.

சிறிலங்கா பற்றிய இந்தியாவின் கொள்கையில் வெளிப்படை நிலை (ஒளிவு மறைவு இல்லாமை) இல்லை என்பதைப் பெருவருத்த உணர்வோடு தெரிவிப்பதாகக் கூறினார்.
இந்தியாவின் சிறிலங்காக் கொள்கை ஒருசார்பான, நாடாளு மன்றத்திற் கப்பாற்பட்ட உயர்நிலையாளர் சிலரால் கையாளப் படுகின்ற தென்று இந்தியாவிற்கு வெளியிலுள்ள மக்கள் பல ஆண்டுகளாகவே சுட்டிக்காட்டுகின்றனர் என்றார்!...

எவ்வகைக்கட்டுப்பாடுமின்றி 500 கோடி உருபாவைச் சிறிலங்கா அரசிற்கு அளித்ததற்காக எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேன்னை அவர் குறைகூறினார். அந்தத் தொகையைச் செலவழிக்க சிறிலங்கா அரசால் அமர்த்தப் பட்ட 20 உறுப்பினர் குழுவில், 19 பேர் சிங்களர், ஒருவர் முசுலிம் என்றும் தமிழர் ஒருவருமில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்!...

‘தினமணி’யின் குமுறலுரை

29-5-2009 நாளிட்ட ‘தினமணி’ நாளிதழின் ஆசிரியருரையில் காணப்பட்ட கீழ்க் காணும் குறிப்பைப் பாருங்கள்:
“எங்கோ வியன்னாவில் தேராசச்கண்ட்டு தலைவர் நிரஞ்சன் தாசைக் கொலை செய்ய காலிசுத்தான் சிந்தாபாத் இயக்கத்தினர் முயன்றனர் என்பதற்காகப் பஞ்சாப் பற்றி எரிகிறது. தலைமை அமைச்சர் (பிரதமர்) பதறுகிறார். உள்துறை அமைச்சர் பதற்றமடைகிறார். ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால் 50 அயிரமாத்திரித் தூரத்தில் இலக்கக் கணக்கான தமிழர்கள் இலங்கையில் வீடின்றி வாசலின்றி, உடையின்றி உண்ண உணவின்றி யாருமற்றோராய் (அநாதைகளாய்) சொந்த மண்ணில் ஏதிலிகளாய் அல்ல்ல்படுகிறார்கள். கேட்க யாருமில்லை (நாதியில்லை). நமக்கும் கவலையில்லை.”

மதிக்கப்படாத உணர்வுகள்

இலங்கைச் சிங்கள இனவெறிக் கடற்படையால் 350க்கும் மேல் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கொல்வதும் தளைப்படுத்திக் கொண்டுசெல்வதும் தமிழக மீனவர்களின் மீன்களைக் கொள்ளையடிப்பதும் படகுகளைப் பாழ்செய்வதும் வலைகளை அறுத்து வீணாக்குவதுமான செயற்பாடுகள் தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஈழத் தமிழரை இனவெறிச் சிங்களரிடமிருந்து காப்பாற்றுங்கள் என்றும் தமிழக மீனவரை சிங்களக் கடற்படையினரிடமிருந்து காப்பாற்றுங்கள் என்றும் கடந்த பல மாதங்களாகப் பல்லாயிரக் கணக்கான, பல்வேறு வகையிலான அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் காந்தி தேசத்தில் அந்தப் போராட்டங்கள் கடுகளவும் - அணுவளவும் கூட மதிக்கப்படவில்லை. தமிழர்களின் உணர்வுகள் பொருடபடுத்தப் படவே இல்லை.

பொருட்படுத்தா மனப்போக்கு

நூறு, ஆயிரமெனப் பணத்தை வாரி யிறைத்தும் வேறுவகை மோசடி செய்தும் தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுக் கொள்ளலாம்; இவர்களை மதிக்கவோ பொருட்படுத்தவோ தேவையில்லை என்ற மனப்போக்கு உள்ளத்தில் காழ் கொண்டு விட்டது தெரிகிறது. மாந்த நேயமோ அறமோ பேசுவதில் பயனில்லை என்ற நிலையையே காணமுடிகின்றது.

இந்நிலையில், தமிழர்க்கு 967ஆம் எண் குறள்தான் நினைவில் வந்து உறுத்துகின்றது. அது இதுதான்:

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

-------------------

Wednesday, June 3, 2009

ஐயா திருமுருகனார் மறைவுக்கு இரங்கல்!

.
.


ஏற்கெனவே எம்முள்ளம் எரியத் தீய்க்கும்

. ஈழத்துச் செய்தியின்பின் இந்தச் செய்தி !

தேற்றமுற விடையளிக்க யாரைத் தேர்வம் ?

. தீந்தமிழின் இலக்கணத்தில் ஐயம் தோன்றின் !

ஏற்றமுற விளக்குதற்கே எவரிங் குள்ளார்

. இசைத்தமிழின் நுணுக்கங்கள் எடுத்துச் சொல்லி !

ஆற்றலுற தமிழறிந்த ஐயா எங்கள்

. அருந்திருமு ருகனாரே ! அழுகின் றோமே !



Monday, May 25, 2009

இரண்டகர் இரண்டுபேர்!


ஓரிலக்கம் பேர்கொன்றான் ஈழ மண்ணில் !

உடனிக்கால் மூன்றிலக்கம் மெல்லக் கொன்றே

ஓரினத்தை உருத்தெரியா தழிக்கின் றானே

உரிமைநிலத் தடயமெலாம் ஒக்க நீக்கி !

பூரியனின் கொடுமைகட்குத் துணையாய் நிற்போர்

பொய்ம்முகத்தி னித்தாலிப் பொல்லாப் பேயும்

சீரியநல் லார்காறித் தூ !தூ ! வென்றே

சினந்துமிழும் தன்னலப்பேய்க் கலைஞன் தானும் !


Sunday, May 17, 2009

புழுவாகிப் போனோம்!

உலகமே!
நீ குருடா?
செவிடா?

ஐயோ!
உலகில் மாந்த உணர்வே அற்றுப் போனதோ?
ஒரே நாளில் 25000 மாந்த உயிர்கள் சுடப்பட்டும் காயம்பட்டும் எரியுண்டும் பொசுங்கியும் சாவதா?

ஐ.நா. மன்றமே!
அமெரிக்காவே!
மாந்த உரிமைகள் பற்றிய உங்களின் பேச்செல்லாம் இவ்வளவுதானோ?
ஓ, ஈழத்தமிழன் வெள்ளைத் தோலன் இல்லை என்பது காரணமோ?

உலக நாடுகளே!
உங்கள் நாடுகளில் மாந்த நேயம் பற்றி எந்த அறிஞனும் எழுதவில்லையா? பேசவில்லையா?
ஈழத்தமிழருக்கு இன்று நேர்வது நாளை யாருக்கும் நடக்குமென்றுங்கூட எண்ணமில்லையா?

இந்திய ஆட்சியாளர்களே!
அதிகார வல்லாளரே!
நீங்கள் மாந்தர் தாமா?
வெட்கம்! வெட்கம்!
இந்தக் கொடுமைகளை நிறைவேற்றவா இலங்கையை நட்பு நாடென்கிறீர்?

உலக நாடுகளின் தலைவர்களே!
மாந்த உரிமை அமைப்புகளே!
ஐ.நா.மன்றமே!
மாந்தர்களே!
நாம் உயிரோடு இருக்கும் காலத்தில்தான் இந்தக் கொடுங் கொடிய பெரும் பேரழிவு நடக்கிறது!

சே!
இதற்குச் சான்றாக இருந்து கொண்டு செயலற்றிருக்கும் இழிவு,
அட, ஓ! எண்ணிப் பார்க்க முடியாத மானக்கேடு!
விலங்கினும் கீழாக,
பூச்சிப் புழுவாக -
மலத்தில் நெளியும் புழுவாகிப் போனோம்!

Monday, May 11, 2009

இனங்கொல்லும் இரண்டகம்!


2002-ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை, அவ் வொப்பந்தம் உருவாக்கக் காரணமாயிருந்த நாடுகளுக்கும் தெரிவிக்காமல், இராசபக்சே அரசு தன்விருப்பமாகவும் தடாலடியாகவும் திடீரென 2008 சனவரியில் முறித்துக்கொண்டது.

இனவெறித் தாக்குதலில், இலங்கை அரசின் முப்படைகளும் தமிழர்களை எவ்வகை வேறுபாடுங் கருதாது கொன்று குவித்து வருகின்றன. தங்கள் கொப்பூழ்க் கொடி உறவுகளின் இன்னல்களையும் உயிர் இழப்புகளையும் கண்டு, தமிழ்நாட்டின் எல்லாப்பிரிவு மக்களும் மனங் கலங்குகின்றனர்.


இக்கால் வன்னியில் தமிழ்மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது! நாள்தோறும் நூற்றுக்கணக்கில் ஏதுமறியாத் தமிழர்கள் கொல்லப் படுகின்றனர். இம் மாதம் 9, 10 ஆகிய இருநாட்களில் மட்டும் 3000 பேர் குண்டு வீச்சால் கொன்று குவிக்கப் பட்டுள்ளனர்.

கை கால் உறுப்பிழந்தும் நோயுற்றும் பசிக் கொடுமையிலும் நீரின்றியும் அவர்கள் படுந்துனபங்கள் விளக்க வியலாதன. வன்னிப் பகுதியினின்றும் வெளிவந்தோர் சிங்களக் கொடியோரால் படுந்துனபம் கேட்டாலே நடுங்கச் செய்வதாக உள்ளது.

இக் கொடுமைக்கு எதிராகப் பேரெழுச்சி கொண்டு தமிழ்நாட்டு மக்கள் கண்டனப் பேரணி, உண்ணாநோன்பு, மறியல், வேலைநிறுத்தம், கடைஅடைப்பு, உருவ எரிப்பு, முற்றுகை போன்ற அனைத்துவகைப் போராட்டங்களையும் ஊர்தோறும் நடத்தி, ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசையும், தில்லி நடுவண் அரசையும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காகவே, தமிழகத்தில் முத்துக்குமார் முதலாகப் பதின்மூன்று பேர் தீக்குளித்து இறந்தன ரென்பதையும் அறிவோம். இந்திய அரசோ, இலங்கை அரசின் இனஅழிப்புப் போரைத் தடுத்து நிறுத்தாமல், அச் சிங்கள இனவெறி அரசுக்குப் பல வழிகளிலும் உதவி செய்து வரும் போக்கே தொடர்கிறது.

இந்திய ஆளுங்கட்சியின் தலைமை, ஓர் உயிரின் இழப்பிற்குப் பழிவாங்க, ஓரினத்தையே அழித்தொழிக்கும் எண்ணத்தில், சிங்களரின் முயற்சிக்குத் துணை போகின்றதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. தொகை, பயிற்சி, கருவிகள், தொழினுட்பம், உளவு, ஆட்கள் முதலியவற்றை அளித்துப் பல்வேறு வகைகளிலும் சிங்கள இனவெறி அரசுக்கு உதவி வருகின்றது. தமிழர்களின் உணர்வுகளையும் மதிக்கவில்லை; போராட்டத்தையும் பொருட்படுத்தவில்லை.

தமிழக முதல்வர் கருணாநிதி, ஈழத் தமிழரின் இன்னலைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், நேரத்திற் கொன்றைப் பேசிக் குழப்பி வருவதையும், போலியான போராட்டங்களை அறிவித்து மக்களின் எழுச்சியை மழுங்கடிக்க முயல்வதையும் காண்கின்றோம்!

இச் சிக்கலில், இராசிவ்காந்திக்கு முன், பின் என்று பார்க்க வேண்டுமென்றார்; புலிகளின் 'உடன்பிறப்பா ருடனான போர், முற்றதிகாரப் போக்கு’ (சகோதர யுத்தம், சர்வாதிகாரம்) பற்றிப் பேசினார்; இந்திய அரசின் கொள்கையே தம் கொள்கை என்றார்; தில்லிக்குத் தொலைவரி தரும் போராட்டம் என்றார்; நாடாளுமன்ற உறுப்பினர் பதவிவிலகுவர் என்றார்; மாந்தத் தொடரிப் போராட்டம் என்றார்; ஓரளவுக்குத்தான் அந்நாட்டைக் கேட்டுக் கொள்ள முடியும் என்றார்; வேலைநிறுத்தம் என்றார்; மூன்றுமணி நேர உண்ணா நோன்பிருந்தார்; போர் நின்றுவிட்டது என்றார்; புலிகள் போரை நிறுத்த வேண்டுமென்றார்; பிரபாகரன் என் நண்பர் என்றார்; மறுநாளே மறுத்தார்; விடுதலையை நோக்கமாகக் கொண்டதே விடுதலைப் புலிகள் இயக்கம் என்றார்; பேராயக்கட்சி எதிர்த்துக் கருத்துரைத்ததும் அமைதியானார்.

அ.தி.மு.க.வின் தலைவி செயலலிதா, நாடாளு மன்றத் தேர்தல் பரப்புரையில், ஈழச் சிக்கலுக்குத் தீர்வு தனித்தமிழ் ஈழமே என்றும், தம் கூட்டணி வலிவாக வெற்றி பெற்றால், இந்திரா காந்தி வங்கதேச விடுதலைக்கு வழி செய்ததைப் போல், தானும், தன் கூட்டணியின் உதவியுடன் அமைய இருக்கும் புதிய இந்திய அரசு மூலம், ஈழம் விடுதலை அடையச் செய்வேன் என்றும் தமிழ்நாடெங்கும் தான் பேசிய பரப்புரைக் கூட்டங்களில் அறிவிப்புச் (பிரகடனம்) செய்தார்.

தமிழ்நாட்டு மக்கள் ஈழச் சிக்கலில் தம்பால் நம்பிக்கை இழந்து விட்ட நிலை தெளிவாகத் தெரிந்த பின்னர் முதல்வர் கருணாநிதி, திடுமெனத் தமிழ் ஈழம் அமையத் தானும் உதவுவதாகக் கூறினா ரென்றாலும், பேராயக்கட்சி அதை எதிர்த்துக் கருத்துக் கூறிய பின்னர் அமைதியானார். சென்னையில் பேராயக் கட்சித் தலைவி சோனியா காந்தியுடன் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அதைப்பற்றி வாயே திறக்க வில்லை.

தன் குடும்பத்தாரின் நலன்களையே முதன்மையாகக் கருதிப் பதவி, பொருள், அதிகாரங்களை அவற்றிற்காக மட்டுமே பயன்ப டுத்தும் கருணாநிதி, தமிழ்நாட்டு நலன்களையும் தமிழ்இன நலன்களையும் புறக்கணித்து வருவததோடு அதனை ஞாயப்படுத்தும் முயற்சியில் பல்வேறு வகையாக மாறிமாறிப் பேசி மக்களை ஏமாற்றிக் குழப்புகிறார் என்ற உண்மையைத் தமிழர்கள் உணர்ந்து கொண்டதை இக்கால் அறிய முடிகிறது.
--------------------------------------------------------------------------------------------

Tuesday, May 5, 2009

பாவேந்தர் இன்றிருந்தால்...!

(29-04-2009 அன்று பாவேந்தர் பேரவை நடத்திய பாவேந்தர் பிறந்தநாள் விழாவில் "பாவேந்தர் இன்றிருந்தால்" என்ற தலைப்பில் பாடிய மண்டிலப் பாக்கள்)


பெரியோரே! அறிஞர்களே! பெற்றெடுத்த தாய்க்குலமே!
பீடு சான்ற
அரிமாவின் குருளைகளே! அறிவார்ந்த பிள்ளைகளே!
அனைவ ருக்கும்
பரிவார்ந்த வணக்கங்கள்! பாவேந்தர் விழாவினிலும்
பதைப்பு நெஞ்சில்!
சொரிகின்ற குண்டுமழை சுட்டழிக்கும் ஈழத்தில்
சொந்தம் மாய்க்கும்!

பாவேந்தர்:

நோவேற்றித் தாய்த்தமிழை நொய்வித்தார் நொட்டுரையை
நொறுக்கி வீழ்த்தி
தாவாற்றி தலைநிமிர்த்தி தமிழ்த்தாயின் தளையறுத்து
தழைக்கச் செய்யப்
பாவாற்ற லாற்றமிழின் பகைஒடுக்கிப் படர்நீக்கப்
பாடு பட்ட
பாவேந்தை அறியாரைப் பலகற்றும் தமிழரெனப்
பகர லாமோ?

தன்னலத்தார்:

ஆர்த்தெழுந்த இளைஞர்களை அறிவார்ந்த காளைகளை
அணையச் சேர்த்தே
நேர்த்தியுறு போர்த்திறத்தில் நேரொழுங்கில் பயிற்றியவர்
நெடுமீ கத்தால்
கூர்த்தவினை முடித்தீழக் கொடியேற்றி ஆண்டாரைக்
குலைத்த ழித்துத்
தீர்த்தவழி தன்குடும்பம் திளைக்கவளம் தீக்கரவில்
தேர்ந்தார் அந்தோ!

பாவேந்தர் இன்றிருந்தால்...

அமுதூட்டல் போல்நஞ்சை அகமகிழ ஊட்டுந்தாய்
ஆனார் என்னே!
உமிழ்வாரே பாவேந்தர் உறுபழியர் முகத்திழித்தே
உலறிச் சீறி!
இமிழுலகில் தமிழர்க்கே இன்துணையாய் இருவென்றே
இருத்தி வைத்தால்
தமிழீழ இனமழிக்கத் தகவிலர்க்குத் துணைபோனாய்!
தாழ்ந்தாய் என்பார்!

பொங்குதமி ழர்க்ககின்னல் புரிவார்க்கே அழிவுறுதி
புரியு மாறே
சங்குமுழக் கோடுலகில் சாற்றியதை மறப்போமா?
சற்றுக் கூட
தங்குதயக் கின்றியந்தத் தகையறியாக் கொலைவெறியர்
தருக்குஞ் சொல்லார்
சிங்களவர் வீழ்ச்சிக்கே சீறிஅறம் பாடிடுவார்
சினத்தால் தீய்ப்பார்!

வேகுந்தீக் கிரையாகி வீணிலுயிர் இழப்பாரை
விளித்த ழைத்துச்
சாகின்ற தமிழாநீ சாகச்செய் வார்சாகச்
செய்வாய் என்பார்!
மாகுன்றத் தோளனுயர் மறத்திற்குப் பொருளானான்
மண்ணிற் காணா
வாகறிவுப் பெருவீரன் வரிப்புலிக்குத் துணையிருப்பாய்
வாழந்தே என்பார்!

உரஞ்செறிந்த எழுச்சியுடன் உலகிலுள்ள தமிழரெலாம்
ஒன்றாய் நிற்பீர்!
நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி
நண்ணி யந்தக்
கரம்புமன இனக்கொலையர் கடுமொடுக்கு முறையெதிர்த்தே
கனல்க என்பார்!
வரம்பறியாக் கொடுமையற வாழ,தமிழ் மண்மீட்க
வாழ்த்துச் சொல்வார்!

இரண்டகரை இனங்காண்பீர்! இழித்தொதுக்கி வைத்திடுவீர்!
ஈழம் சாய்த்த
வறண்டமனத் தில்லியரை வலிமையுடன் எதிர்த்தினத்தை
வாழ வைப்பீர்!
இரண்டுநிலை இந்தியனுந் தமிழனுமாய் இருக்காதீர்!
இனிஎ ழுந்தே
திரண்டிடுவீர் தமிழரென! தேர்ந்திடுவீர் அடையாளம்
தெளிவாய் என்பார்!

வாய்ப்புக்கு நன்றி! வணக்கம்.

------------------------------------------------------------------------------






Thursday, April 2, 2009

போர் நிறுத்தம் : 'மனோகரா' படமும் தி.மு.க. தேர்தல் அறிக்கையும்



கலைஞர் கருணாநிதி உரையாடல் எழுதிய 'மனோகரா' படத்தில் ஒரு காட்சி :

வசந்த சேனையின் மகனான கிறுக்கன் வசந்தனும் ஒரு மருத்துவனும் அக்காட்சியில் இருப்பார்கள்.

வசந்தன் மருத்துவனிடம், "என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்பான்.

அந்த மருத்துவன் கலுவத்தில் (குழி அம்மியில்) பச்சிலை மருந்து அரைத்துக் கொண்டே வசந்தனிடம் கூறுவான்: "இளவரசே! உங்க நோயும் நீடிச்சி, என்னுடைய வேலையும் நீடிக்கணும்னு வேண்டிக் கொண்டிருக்கிறேன், இளவரசே" என்று விடை கூறுவான்.

இன்று (2-3-2009) வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில், "இலங்கையில் போரை நிறுத்த தி.மு.க. தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்" என்று கூறப்பட்டுள்ளதாக, "சன்" தொலைக்காட்சித் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தது.

கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சி மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்குமாம்! இதுவரை ஈழப்போரில் இறந்த ஏதுமறியாத் தமிழ் மக்கள் மட்டுமே ஐந்தாயிரம் பேருக்கு மேல் என்றும் அடிபட்டுக் காயமுற்றோர் தொகை பத்தாயிரத்தைத் தாண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இவர்கள் கூற்றுப்படி, போரை உடனடியாக நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கப் போவதாகத் தெரியவில்லை! முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்! - அதாவது முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்... அவ்வளவுதான்!

இப்போது, 'மனோகரா' மருத்துவன் கூறியதை எண்ணிப் பாருங்கள்!

பித்துப் பிடித்த வசந்தனுக்கு அந்த மருத்துவனால் பி(பை)த்தியம் தீரப் போவதுமில்லை!

இலங்கையில், ஈழத் தமிழரைக் கொன்று குவிக்கும் போர், இவர்களால் தடுத்து நிறுத்தப்படப் போவதுமில்லை!

எத்தனை நுட்பமாக உள்ளத்தில் உள்ளது வெளிப்படுகிறது எனபதை எண்ணிப்பாருங்கள்.

Monday, March 23, 2009

உலகத் தீரே! உலகத் தீரே!

(நேரிசை ஆசிரியப்பா)

உலகத் தீரே! உலகத் தீரே!
விலகாக் கொடுமை வெங்கோற் கொற்ற
ஒடுக்கு முறைக்கு மடக்கு முறைக்கும்
நெடுக்க நைந்தவர் நிமிர்ந்தேழ்ந் ததனால்
கொத்துக் குண்டுகள்! கொடுந்தீ எரிப்புகள்!
நித்த மோலங்கள்! நீக்கமில் லழிப்புகள்!
குழவியர் சூலியர் கிழவரோ டூனர்
அழிவுற உறுப்பற அறங்கொற் றாக்குதல்!
நெறிமறுப் பழிப்புகள்! எறிகணைப் பொழிவுகள்!
வெறிமிகுங் குதறலில் வீழ்பலி தாய்க்குலம்!

நீண்டபல் லாண்டாய் நெடும்பழிச் சிங்களர்

கோண்மதிக் கொடுமையிற் குமைந்தழி உறவுகள்
காத்திடற் கார்த்தோம்! கடுங்குர லெழுப்பினோம்!
கோத்துகை நின்றோம்! மூத்தோ ரிளையோர்
பேரணி சென்றோம்! பெருவழி மறித்தோம்!
போரை நிறுத்தவும் புன்செய லறுக்கவும்
ஊர்தொறுங் கூடி உண்ணா திருந்தோம்!
தீர்த்திடு துயரெனத் தில்லியைக் கேட்டோம்!
பன்னிரு ஈகியர் பதைப்புற் றாற்றா
தின்னுயி ரெரிதழற் கீந்தும் வேண்டினோம்!

இந்திய அரசே! எடுநட வடிக்கை!
எந்தமிழ்ச் சொந்தம் ஈழத் தமிழரைக்
காத்திடென் றிறைஞ்சினோம்! கதறினோம்! கெஞ்சினோம்!
பூத்திடா அத்தியாய்ப் பொத்திய வாய
ரேதுங் கூறா திருந்தது மேனென
சூதரின் இரண்டகச் சூழ்ச்சிபின் சொலிற்று!
வெய்ய சிங்களர் வென்றிடற் கென்றே
பையவே அவர்க்குப் பல்வே றுதவிகள்
ஆய்தந் தொகையென அள்ளிக் கொடுத்தனர்!
போய்த்துணை செய்யப் போர்ப்படை வீரரைப்

புனைவி லனுப்பினர்! புலிகளின் வான்படை
தனைக்கண் டழித்திடத் தந்தனர் கதுவீ !
அரிய வுளவெலாந் தெரிந்தே சிங்களர்
புரிய வுரைத்தனர்! கரியவன் னெஞ்சொடு
பேரழி வின்பின் பிழைத்திருப் போர்க்கே
போரை முடித்தபின் போயங் குதவுவ
மென்றே வுரைத்து எல்லா வுதவியும்
குன்ற லின்றியக் கொடியவர்க் களிப்பர்!
இங்கிங் ஙனமே இழிநிலை யிருக்க
பொங்கிய உணர்வின் புலம்பெயர் தமிழர்

அங்கங் கவர்கள் தங்கிய நாட்டினில்
மங்கா ஊக்கொடு மக்களைத் திரட்டிக்
கவனம் ஈர்த்திடக் கடும்பனி மழையினில்
துவளா தார்ப்பொடு தூத ரகங்களில்
முற்றுகை செய்தனர்; முறையீ டிட்டனர்!
சற்றுந் தயக்கிலா முற்றிய உணர்வினர்
மூவ ரவர்களின் முழுவுடற் றீயில்
வேவுறக் குளித்தனர்! வெந்து மாண்டனர்!
தெள்ளத் தெரிந்தும் தீங்கினை யறிந்தும்
உள்ளம் உருகிடா உலகத் தீரே!

கிழக்குத் தைமூர் வழக்குதீர்த் திட்டீர்!
குழப்பறத் தெளிவுற கொசாவா விடுதலை
ஒப்பினீர்! காசா உறுதாக் குதல்கள்
தப்பெனக் கடிவீர்! தயங்கா தாப்கான்
அமைதிக் கெனவே ஆவன செய்வீர்!
குமைவிலா நோக்கிலக் கொள்கை போற்றுவம்!
ஆனா லீழத் தழிக்கப் படுமெம்
மானவர் கொடுந்துயர் மாற்றிடத் தயக்கேன்?
வல்லர செல்லாம் பொல்லார்க் குதவவோ?
அல்லவைக் காக்கம் அறமோ? எண்ணுவீர்!

கொஞ்சமும் கருதிடாக் கொடுமை தொடர்வதா?
நெஞ்சுதொட் டுரைப்பீர், நேர்மையோ? மாந்த
நேயமு மற்றதோ? நீளின அழிப்பு
ஞாயமோ? உலகீர், நல்லறங் கருதுக!
அடிமை நிலையெதிர்ப் பதுபெருங் கேடா?
கடிதீர் வெனவினம் முடிய அழிப்பதா?
மாந்தத் தகவொடும் மன்பதை அருளொடும்
பாந்தநல் லுணர்வில் ஏந்து நயன்மையில்

புலம்பிருள் நீக்க, புலர
உலகீ ரெழுவீர், உடனடி வினைக்கே!





Saturday, March 21, 2009

வேண்டுகோள்!



'காங்கிரசு'க் கட்சி என்று அழைக்கப் படுகின்ற -
இந்தியத் தேசியப் பேராயக் கட்சி
(Indian national congress party) -

* கொடிய இனவெறியரான சிங்களரின் ஈழத் தமிழின அழிப்பு வினைக்கு முழுத் துணையாகவும் முதன்மைக் கலந்துரைஞராகவும் உள்ளது.

* குழந்தைகள், சிறுவர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கான ஏதுமறியாத் தமிழர் கொல்லப்படவும் காயமுறவும் உடலுறுப்புகளை இழந்து சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாகவும் முதன்மைப் பொறுப்பாளராக உள்ளது.

+++++++++++

* நானூறுக்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்கள இனவெறிக் கடற் படையினர் கொன்றுள்ளனர்; தமிழக மீனவரின் படகுகளையும் வலைகளையும் நாசப் படுத்தி யுள்ளனர். அவர்களின் மீன்களையும் பிறவற்றையும் கொள்ளையடித் துள்ளனர். இதுவரை ஒருமுறை கூடப் பேராயக் கட்சியின் தலைமையிலான இந்திய அரசு, சிங்கள அரசுக்குச் சிறு கண்டனம் தெரிவிக்க வில்லை.

* தமிழகமே கொதித் தெழுந்து ஈழத் தமிழரையும் தமிழக மீனவரையும் காப்பாற்றக் கோரிப் பல்வேறு வகையிலும் போராட்டங்கள் நடத்தியும், தமிழர்கள் 11 பேர் இதற்காகத் தங்கள் உடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டு உயிர் ஈகம் செய்தும், தமிழ்நாட்டுச் சட்டமன்றமே ஒருங்கிணைந் தெழுந்து ஈழப்போரைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்திய அரசும் 'காங்கிரசு'க் கட்சியும் கொஞ்சம் கூடப் பொருட் படுத்தவில்லை.

* எனவே, 'காங்கிரசு'க்கு யாரும் ஒப்போலை (வாக்கு) அளிக்காதீர்கள்!
மாந்தநேயம் அறவே இல்லாதவர்கள் பதவியில் அமர வாய்ப்பு அளிக்காதீர்கள்!

' காங்கிரசை'த் தோற்றோடச் செய்யங்கள்!
============================================

Tuesday, March 17, 2009

காசி.ஆனந்தனார் உரையிலிருந்து சில குறிப்புகள்!

28-02-2009 அன்று புதுவையில் மீனவ விடுதலை வேங்கைகள் நடத்திய போர் நிறுத்தக் கோரிக்கை மாநாட்டில் பாவலர் காசி.ஆனந்தனார் ஆற்றிய உணர்வுரையிலிருந்து தொகுத்த சில குறிப்புகள்:

* ஓர் அரசியல் ஆய்வாளனாக இருந்து கூறுகிறேன்! உலகில் சில நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்திருந்தாலும் இலங்கையில் ஈழச்சிக்கலை, விடுதலைப் புலிகளைப் புறக்கணித்துத் தீர்க்க முடியாது. எடுத்துக்காட்டாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இலாரி கிளின்டன், விடுதலைப்புலிகள் 'தீவிரவாதிகள் அல்லர்; அவர்கள் ஒடுக்குமுறை எதிர்ப்பாளர்கள்' என்று முன்னர் கூறியதையும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி, விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போர்நிறுத்த அறிவிப்பை ஏற்று, இலங்கை அரசும் போர்நிறுத்தம் அறிவித்து, தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளதையும் கருத்தில் கொள்க.

* 1963 சூன்6 நாளிட்ட 'தி இந்து' நாளிதழில் காலஞ்சென்ற இராசாசியார் எழுதிய கட்டுரையில், 'சிலோன் தமிழர்கள் குடியேறியவர்கள் அல்லர்; அவர்கள் அத்தீவின் பழங்குடிகள்' (ceylon Tamils are not settlers; they are the aborigines of that island) என்று ஈழத் தமிழர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

* ஈழத்தில் சிங்களமொழித் திணிப்பால் தமிழ் அழிப்பு நடைபெற்று வருகிறது. 'சிங்களம் மட்டுமே' என்ற சட்டத்தைச் சிங்கள ஆட்சியாளர் நிறைவேற்றி தமிழ் அழிப்பு செய்து வருகின்றனர்,

* இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற போது தமிழ்மக்கள் 10 சதுர கற்கள் பரப்பளவிலும் சிங்களர் 15 கற்கள் பரப்பளவிலும் இருந்து வந்தனர். ஆங்கிலேயர் 04-02-1948இல் இலங்கையை விட்டு நீங்கியபோது, தமிழர்கள் 8 சதுர கற்கள் பரப்பிலும் சிங்களர் 17 சதுர கற்கள் பரப்பிலுமாக இருந்தனர். தமிழர் பகுதிகளிஈல் சிங்களக் குடியேற்றத்தினால் தமிழர் வாழிடம் சுருங்கி வருகிறது.

* ஆங்கிலேயர் சிங்களரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த போது 1948இல், தமிழர்களின் மக்கள்தொகை 35 இலக்கம்; சிங்களர் 65 இலக்கம். இப்போது, சிங்களர் தொகை ஒன்றரை கோடி. தமிழர்களோ அதே 35 இலக்கம். தமிழ்த் தாய்மார்கள் யாரும் கருவுறாமல் இருந்து விட்டார்கள் என்று கருதல் வேண்டா! சிங்கள இனவெறியர்களால் தமிழர்கள் நாடோறும் அழிக்கப்பட்டு வந்ததை இக் கணக்கே கூறும்.

எனவே, மொழி அழிப்பு, வாழிடப் பறிப்பு, இன அழிப்பு என்ற கூறுகளால் தமிழ்த் தேசிய இனஅழிப்பு இலங்கையில் நடைபெறுகின்றதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்குத தீர்வு, தமிழீழ விடுதலையே என்பதையும் உலகம் புரிந்து கொள்ள வேண்டும். உணர்வாளர்கள் இவற்றையே முழங்க வேண்டும்.

* இந்திய விடுதலைப்போரில் இறந்தோர் தொகை ஏறத்தாழ 10,000 பேர். ஈழ விடுதலைப் போரில் இதுவரை இறந்துள்ள ஏதுமறியாத் தமிழர்கள் ஒன்றரை இலக்கம் பேர். போராளிகள் 30,000 பேர். இவற்றோடு, தமிழர்களின் இரண்டரை இலக்கம் வீடுகள் அழித்துத் தரைமட்ட மாக்கப் பட்டுள்ளன. கடந்த ஈராண்டுகளில் ஊடகத் துறையினர் 70 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

* ஈழத் தமிழர்கள் அறப் போராட்ட வழியில், 28 ஆண்டுகள் சம உரிமைக்காகப் போராடினர். அப் போராட்டங்களால் கொஞ்சமும் பயன் கிடைக்கவில்லை என்பதோடு மேன்மேலும் தமிழர்கள் தாக்குதலுக் குள்ளாயினர். பின்னரே, கடந்த 32 ஆண்டுகளாகக் கருவியேந்திய அறவழிப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

* 1983ஆம் ஆண்டு ஆகத்து 15இல், அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் திருவாட்டி இந்திரா காந்தியார் தில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய போது, 'இலங்கையில் இனஅழிப்பு நடைபெறுகிறது; நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்' (genocide is going on at Srilanka; we will not stay as spectators) என்று முழக்கம் செய்தார்.

Thursday, March 12, 2009

எச்சரிக்கை வேண்டுகோள்!

இலங்கையின் முல்லைத்தீவில் முழுப் பேரழிவில் இரண்டரை இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களைக் கொன்றழிக்க சூழ்ச்சி நடைபெறுகின்றது.

சிங்களக் கொலைவெறிப் படையின் கொடுங்கொடிய தாக்குதலுக்கு அஞ்சித் தம் சொந்த வீடு வாசல் நிலபுலங்களைத் துறந்திழந்து சென்ற வடக்கிலங்கைத் தமிழர்கள் இரண்டரை இலக்கத்திற்கும் மேற்பட்டோர், பலமுறை இடம் பெயர்ந்து இப்போது முல்லைத்தீவில் அடைக்கலமாகி உள்ளனர்.

ஆனால், இலங்கையின் சிங்கள அரசும் இந்திய அரசும் முல்லைத்தீவில் அடைக்கலம் புகுந்துள்ள ஏதுமறியாத் தமிழர்களின் எண்ணிக்கையை எழுபதாயிரம் என்றும், எண்பதாயிரம் என்றும், அறுபத்தையாயிரம் மட்டுமே என்றும் இக்கால் மாற்றி மாற்றிக் கூறி வருகின்றனர்,

இந்த எண்ணிக்கை மோசடியின் பின்னே உலகே அதிர்ச்சி அடையக்கூடிய ஒரு கொடும் பேரழிவிற்கு அடிகோலும் சூழ்ச்சி இருப்பதாக மாந்த உரிமை ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

இலங்கை அரசு ஏதுமறியாத் தமிழர்களை வந்துவிடும்படிக் கூறும் பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் பெண்கள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப்படுகின்ற நிலைமையும் ஆண்களில் இளைஞகள் தனியே பிரிக்கப்பட்டுக் கொண்டுசென்ற பின், அவர்களின் பிணங்கள் கடலில் மிதக்கும் நிலைமையுமே நிலவுவதாலும் முல்லைத்தீவில் இப்போது குவிந்துள்ள தமிழர்கள் பாதுகாப்பு வளையங்களுக்குள் வர அஞ்சுகிறார்கள்.

இந்நிலையில், பாதுகாப்பு வளையத்திற்குள் வராதவர்களை, அவ்வாறு வராததையே காரணமாக்கி அவர்களைப் 'போரிடுவோர்' (combatant) எனக்கூறிவிட்டு குண்டுமழை பொழிந்து அந்த இலக்கக்கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்துப் பெரும் பேரழிவு நடத்த சூழ்ச்சி நடைபெறுகிறது.

நெஞ்சப் பதைப்புடன் எச்சரிக்கின்றோம்!
தமிழக அரசே! தமிழர்களே!
நடுவண் அரசில் மாந்த நேயமும் நயன்மையுணர்வும் அற்றுப்போகாதவர்களே!
இந்தக் கடைசி நேரத்திலாவது உடனடியாகச் செயல்படுங்கள்!
முழுப்பேரழிவு நடக்காமல் தடுத்து நிறுத்துங்கள்!
சிங்கள இனவெறியாளரிடமிருந்து அத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!

(மக்கள் தொலைக்காட்சியின் 'சங்கப் பலகை'ச் (8-3-2009)செய்தியைக் கேட்டு மனங்கசிந்து வேண்டிய வேண்டுகோள்!)

Thursday, February 26, 2009

இன்னநிலை புரிந்தெழுவோம்!


(அறுசீர் மண்டிலம் :
நான்கு காய் - மா - தேமா)

மூண்டெழுந்த கொந்தளிப்பை முகம்மாற்றித் தணித்துவிடும்
முடிவைக் கொண்டு
தூண்டலினால் காவலரும் துடிப்புவழக் குரைஞரு்மே
துலக்க மின்றி
வேண்டாராய்ப் பகையுணர்வில் வெறுப்புற்று மோதிடவும்
விளைவாய்ப் பல்லோர்
ஆண்டடிதாக் குதல்களுக்கே ஆளானார் அவற்றோடே
அவர்கள் ஊர்தி

காவலரின் கைத்தடிகள் கடுந்தாக்கில் நொறுங்கிவிழ
கலங்கா நின்ற
நாவலராம் வழக்குரைஞர் நனிமிகவே தாக்கமுற
நடுங்கா நெஞ்சின்
கோவமிகக் காவலர்குண் டாந்தடிகள் கட்டடத்தைக்
குறியாய்த் தாக்க
வேவலுற எரிந்ததுகாண் விளைவிலொரு காவலகம்
வெறுப்பி னாலே!

இன்னவகை மோதலினால் எவருக்கே இன்பயனென்(று)
எண்ணிப் பாரீர்!
முன்னணியில் நின்றிருந்து முனைந்தீழப் போர்நிறுத்த
முழக்கம் செய்தோர்
வன்குரலை ஒடுக்கிடவே வலிந்தங்குக் காவலரை
வரச்செய் தாரே!
இன்னநிலை புரிந்தெழுவோம்! ஈழஉற வைக்காக்க
எழுவோம் மீண்டும்!