நூலெனப்படுவது...!
தமக்குத் தோன்றும் கருத்துக்களை விளக்கமாக வெளிப்படுத்தும் நோக்கில் சிலர் நூல் எழுதுகின்றனர். இன்னும் சிலர், சான்றடிப்படைச் செய்திகளோடும் படங்களோடும் பிறவற்றோடும் சொல்ல விரும்பி, அவற்றைப் பரந்த பாரிய வடிவில் தருவதற்கு நூல் எழுதுகின்றனர். பொழுது போக்குப் படிப்பிற்கு எழுத விரும்புவோரும், இலக்கியம் படைப்போரும், ஆய்வு செய்வாரும், மறுக்க விரும்புவாரும் நூல் எழுதுவதைப் பார்த்து வருகின்றோம். இன்னும், அறிவியல் கலை தொடர்பினவான பல புத்தகங்களையும் பலர் எழுதுகின்றனர்.
எந்த வகை நூலாயினும் அது படிப்போர் விரும்பும் வகையிலும் வாசகரைக் கவரும் வகையிலும் இருக்க வேண்டுவதும் மக்களுக்குப் பயன் விளைக்குமாறு இருக்க வேண்டுவதும் முதன்மையாகும்.
நூலின் வகைகள்:
நினைவுக் குறிப்புகளையும் ஒவ்வொரு நாளின் நிகழ்ச்சி நிரல்களையும் எழுதுவது குறிப்பேட்டுப் புத்தகம்.
ஒரு துறையினருக்காக, அத்துறை நிகழ்ச்சிகள், அண்மைக்கால வளர்ச்சி நிலைகள், இடையூறுகள், எடுக்கப்படும் நடவடிக்கைகள், செயற்பாடுகள் பற்றிய செய்திகள் அடங்கிய விளக்கப் புத்தகம் செய்தி மடல்.
உள்நாடு மற்றும் உலகளாவிய பல்வேறுவகை செய்திகளையும் குறிப்புகளையும் அடிப்படையான புள்ளி விளத்தங்களுடன் தொகுத்து ஆண்டுதோறும் வெளியிடும் நூல் ‘ஆண்டு நூல்.’
சிற்றூர்கள், நகரங்கள், மாவட்டங்கள் முதலியவற்றைப் பட்டியலிட்டு அவ்வவ்விடங்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் முதலிய பல்வேறு செய்திகளைத் தொகுத்து அரசு வெளியிடும் நூல் ‘அரசிதழ்.’
மாணவர்களுக்கான பாடநூல், வாய்பாடு, பயிற்சி நூல் போலும் பலதிறத்தன பள்ளி நூல்கள்.
சிறந்த ஆசிரியர்களால் இலக்கிய நூல்கள் எழுதப் படுகின்றன. இவை, உரைநடை, பா வடிவிலான படைப்பிலக்கியம் மற்றும் கட்டுரை, திறனாய்வு போன்ற இலக்கிய நூல்கள்.
சமயம் சார்ந்தவை வழிபாட்டு நூல், திருமறை நூல், திருப்பாடல் தொகுதி நூல்கள் போன்றவை.
நாட்டு வரலாறு, உலக வரலாறு, சமய வரலாறு, மொழி வரலாறு, இன வரலாறு, இலக்கிய வரலாறு போன்றவை வரலாற்று நூல்கள். வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு போன்றவை மாந்த வரலாற்று நூல்கள்.
சிறுகதை, குறும் புதினம், புதினம், காதற் புதினம், அறிவியற் புதினம் போன்றவை ஒரே வகைமை நூல்கள் ஆகும்.
செயற்பாட்டு வழிகாட்டும் நூல்கள், குடும்ப அறிவு நூல்கள், ஊர்ச் செலவு வழிகாட்டு நூல்கள், சுற்றுச் செலவு கட்டுரை நூல்கள் போன்று நூல்கள் பல்வேறு வகையினவாம்.
நூலுக்குத் தொல்காப்பியம் தரும் விளக்கம் :
நூல் என்று கூறப்பெறுவது -
1. தொடக்கமும் முடிவும் பொருள் முரண் இன்றி இருக்கவேண்டும்.
2. தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்ட வேண்டும்.
3. விரிய உரைக்கும் வகையிலாகப் பொருத்தம் உடையவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும்.
4. நுண்ணிதாகப் பொருளை விளக்க வேண்டும்.
நூலுக்கு நன்னூல் கூறும் பெயர்க்காரணங்கள் இரண்டு :
கைதேர்ந்த பெண் பஞ்சினால் நூல் நூற்றல் போல், புலவன் சொற்களால் நூலை இயற்றுகின்றான். பெண்ணின் கை போல புலவனின் வாயும் (எண்ணமும்) நூற்கும் கதிர் போல அறிவும் உதவுகின்றன.
மரத்தின் வளைவை அறுத்து நேராக்க நூலைப் பயன் படுத்துவர். அதுபோல அறிவைப் பெருக்கித் தீமையை அழிக்க உதவும் நூல்களும் மக்களின் மனக்கோட்டத்தைத் தீர்த்துச் செவ்விதாக்கும்.
தொல்காப்பியம் கூறும் நூலின் வகைகள் :
மரபிலிருந்து திரியாது சிறப்பொடு கூடிய நூல்கள் முதல் நூல், வழிநூல் என்று இரண்டுவகையின.
செய்வினைப் பயனை அடையாத, தூய்மையான அறிவினை உடைய முன்னோரால் செய்யப்பட்டது முதல்நூல்.
முதல்நூல் வழியில் வருவது வழிநூல். வழிநூல் நான்கு வகைப்படும். தொகுத்து நூலாக்கல், விரித்து நூலாக்கல், தொகுத்தும் விரித்தும் நூலாக்கல், மொழிபெயர்த்தல் என நான்குவகை நூல்களும் வழக்கு வழிப்பட இயற்றல் வேண்டும். வழிநூல்கள் இலக்கணத்தில் மரபுகளில் மாறுபட்டால் சிதைந்த நூலாகும். தூய அறிவுடையோர் செய்த நூலில் சிதைவு இருக்காது.
தொல்காப்பியம் கூறும் நூலின் குற்றங்கள் :
1. முன்பு கூறியதையே பின்பு கூறல்
2. முன்பு கூறியதற்கு முரணாகப் பின்பு கூறல்
3. முழுவதுங் கூறாமல் குறைவாகக் கூறல்
4. தேவைக்கு அதிகமாக மிகுதிப்படுத்திக் கூறல்
5. பொருள் தராதவற்றைக் கூறல்
6. படிப்போர் பொருள் மயக்கமடையும்படி கூறல்
7. கேட்போர்க்கு இனிமை யில்லாத நிலையில் கூறல்
8. பெரியோர் பழித்த சொல்லைப் பயன் படுத்தி தாழ்ந்த நிலையில் கூறல்
9. நூலின் கருத்தைக் கூறாது தன் கருத்தை மனத்துட் கொண்டு கூறல்
10. கேட்போர், படிப்போர் மனம் கொள்ளாத நிலையில் கூறல் - இவையும் இவை போன்றன பிறவும் நூலின் குற்றங்களாம்.
உத்தி :
உத்தியை எழுதும் திறன் என்றும் கூறலாம். நூலின் உத்தி என்பது, நூல் கூறும் வழக்கை உலக வழக்குடன் பொருத்திக் காட்டி, ஏற்ற இடமறிந்து, இந்த இடத்தில் இவ்வாறு கூற வேண்டுமென, தக்க முறையில் நிறைவுற எழுதி முடிக்கும் திறமையேயாகும்.
தொல்காப்பியம் கூறும் நூலின் உத்தி வகைகள் :
1. சொன்னதைத் தெளிவாக அறிதல்
2. அதிகாரங்களை முறையாக அமைத்தல்
3. இறுதியில் தொகுத்துக் கூறல்
4. கூறுபடுத்தி உண்மையை நிலைநாட்டல்
5. சொன்ன பொருளோடு ஒன்ற சொல்லாத பொருளை இடர்ப்பாடின்றி முடித்தல்
6. வராதனவற்றைக் கூறுவதால் ஏனைய வரும் என முடித்தல்
7. வந்ததைக் கொண்டு வராதனவற்றை உணர்த்தல்
8. முன்பு கூறியதைப் பினபு சிறிது பிறழக் கூறுதல்
9. பொருந்தும் வண்ணம் கூறல்
10. ஒரு பக்கத்தே சொல்லுதல்
11. தன் கொள்கையைக் கூறுதல்
12. நூலில் வைத்துள்ள முறை பிறழாதிருத்தல்
13. பிறர் உடம்பட்டதைத் தானும் ஏற்றுக் கொள்ளுதல்
14. முற்கூறியவற்றைக் காத்தல்
15. பின்னர் வரும் நெறியைப் போற்றுதல்
16. தெளிவு படுத்திக் கூறுவோம் என்றல்
17. கூறியுள்ளோம் என்றல்
18. தான் புதிதாகக் குறியிடுதல்
19. ஒரு சார்பு இன்மை
20. முன்னோர் முடிபைக் காட்டல்
21. அமைத்துக் கொள்க என்று கூறல்
22. பல பொருள்கள் இருந்தாலும் நல்ல பொருளைக் கொள்ளுதல்
23. தொகுத்த மொழியான் வகுத்துக் கூறல்
24. எதிர்ப்போர் கருத்தை மறுத்துத் தன்கருத்தை உரைத்தல்
25. பிறர் கொள்கைகளையும் சான்றாகக் கூறல்
26. பெரியோர் கருத்தை ஏற்றுக் கொண்டு தான் அதையே கூறல்
27. கருத்து விளக்கத்திற்கு வேறு பொருள்களையும் இடையே கூறுதல்
28. முரணான பொருள்களையும் உணர்த்தல்
29. சொல்லின் குறையை நிறைவு செய்து கூறுதல்
30. தேவைக்குத் தகத் தன் கருத்தைந் தந்து இணைத்து உரைத்தல்
31. நினைவு படுத்திக் கூறுதல்
32. கருத்தை உய்த்து உணரும்படி கூறல். – இவற்றுடன் பிற உத்திகளையும் சேர்த்துக் கொண்டு சுருக்கமாக ஆனால் விளக்கமாத் தெளிவு படுத்த வேண்டும்.
நன்னூல் கூறும் நூலின் இயல்புகள் :
1. பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் [இக்கால், முகவுரை அணிந்துரை எனலாம்] ஆகிய இருவகைப் பாயிரம் உடையதாக இருக்க
வேண்டும்.
2. முதல் வழி சார்பு என்னும் மூன்று நூல்வகையுள் ஒன்றாக இருக்க வேண்டும்.
3. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்கள் அடையப் பயன்பட வேண்டும்.
4. ஏழு வகை எழுதும் கோட்பாடுகள் (மதம்) பெற்றிருக்க வேண்டும்.
5. பத்துவகைக் குற்றங்கள் இல்லாததாக இருக்க வேண்டும்.
6. பத்துவகை அழகு பொருந்தப் படைக்கப்பட்டிருக்க வேண்டும்.
7. 32 உத்திகளும் கொண்டு திறம்பட எழுதியிருக்க வேண்டும்.
8. சூத்திரம் என்னும் மூலபாடமும் ஓத்து, படலம் (இயல், அதிகாரம்) என்னும் உறுப்புகளும் பெற்றிருக்க வேண்டும்.
[இலக்கண நூலகளுக்கு இந்த உறுப்புகள் கூறப்பட்டுள்ளன. ஏனைய நூல்களுக்கு ஏற்றவாறு உறுப்புகள் அமைந்திருக்க வேண்டும்]
நன்னூல் கூறும் நூலின் வகைகள் :
முதல்நூல், வழிநூல், சார்பு நூல் என்று நூல்களை மூன்று வகையாகக் கூறுகிறது நன்னூல்.
முதல்நூல், செய்வினைப் பயனை அடையாத, தூய்மையான அறிவினை உடைய முன்னோர் படைப்பதாகும்.
முன்னோர் நூலின் முடிபுடன் முழுவதும் ஒத்து, முதனூல் இருக்கவும் வழிநூல் வேறே செய்வதற்குக் காரணமாகிற வேறுபாடுகளைக் கூறி, மரபு சிதையாமல் படைப்பது வழிநூலாகும்.
முதல்நூல் வழிநூல் இரண்டிற்கும் ஓரளவு ஒத்து, வேறுபட மாற்றிப் படைப்பது சார்புநூலாகும்.
வழிநூல்கள் முன்னோர் நூலில் வரும் சொற்களையும் கருத்துக்களையும் பொன்னேபோல் போற்றிக் கொள்ள வேண்டும். வேறு நூல் செய்தாலும் முதனூலில் இருந்து சிலவற்றை மேற்கோளாக அப்படியே எடுத்தாள வேண்டும்.
நூலாசிரியர் பின்பற்ற வேண்டியனவாக நன்னூல் கூறும் ஏழு கோட்பாடுகள் :
1. உடன்படல்.
2. மறுத்தல்.
3. பிறர் கோட்பாட்டை ஏற்குமளவு ஏற்று, மற்றவற்றை நீக்குதல்
4. தானொரு பொருளை எடுத்து நாட்டி அதனை வருமிடந்தோறும் இறுதிவரை நிலைநாட்டுதல்.
5. இருவர் கருத்து வேறுபடுமிடத்து, ஒருபக்கம் துணிதல்.
6.பிறர் நூல்களிலுள்ள குற்றங்களை எடுத்துக்காட்டுதல்.
7. பிறர் கோட்பாட்டை ஏற்காது தன் கொள்கைப்படியே எழுதுதல்.
நன்னூல் கூறும் நூலின் குற்றங்கள் பத்து :
1. குன்றக் கூறல்
2. மிகைபடக் கூறல்
3. கூறியதுகூறல்
4. மாறுகொளக் கூறல்
5. வழுச்சொற் கூறல்
6. மயங்க வைத்தல்
7. வெற்றெனத் தொடுத்தல்
8. மற்றொன்று விரித்தல்
9.சென்று தேய்ந்து இரிதல்
10. நின்று பயன் இன்மை.
நன்னூல் கூறும் நூலில் அமைய வேண்டிய பத்து வகை அழகு :
1. சுருங்கச் சொல்லல்
2. விளங்க வைத்தல்
3. படிப்போர்க்கு இனிமை
4. நல்ல சொற்களையே பயன்படுத்தல்
5. ஓசை இனிமை உடைமை
6. ஆழமுடைத்தாதல்
7. வைப்பு முறை
8. உலகம் மலைக்காதபடி (எளிமையாக) எழுதுதல்.
9. விழுமிய வற்றையே விளைவாகத் தரும்படி எழுதுதல்
10. விளங்கும் வண்ணம் எடுத்துக் காட்டுகள் உடையதாதல்.
நன்னூல் கூறும் 32 வகை உத்திகள் :
1. (இதனைச் சொல்லுவேன் என்று முதலில்) சொல்லித் தொடங்குதல் 2. இயல்களை யாதாயினும் ஓர் ஏற்ற முறைப்படி வைத்தல்
3. பலவற்றையும் திரட்டிச் சொல்லுதல்
4. தொகுத்ததை வெவ்வேறாக விரித்துக் கூறல்
5.தன் கருத்தை முடித்துக் காட்டல்
6. முடியுமிடம் முன்பே கூறுதல்
7. தானாக ஒன்றை எடுத்து மொழிதல்
8. பிறர் கருத்தை மேற்கோள் காட்டல்
9. சொல்லின் பொருள் விளங்கும்படி விரித்தல்
10. ஒன்றுக் கொன்று தொடர்புடைய சொற்களை ஆளுதல்
11. இரட்டுற (இரு பொருள்பட) மொழிதல்
12. முன்பு காரணம் விளங்காததாகச் சொல்லப் பட்டதற்குக் காரணம் விளங்கக் காட்டி முடிவு செய்தல்
13. ஒப்புமை காட்டி முடித்தல்
14. ஒன்றற்குச் சொல்லப் பட்டதை அதனைப் பெறுதற்குரிய மற்றொன்றிற்கு மாட்டிச் சொல்லி நடத்தலாகிய மாட்டெறிந்து ஒழுகல்
15. வழக்கொழிந்ததை விலக்கல்
16. புதியனவற்றை ஏற்றல்
17. முன்னே ஓரிடத்தில் ஒன்றைச் சொல்லிப்பின் அதனை வேண்டுமிடந் தோறும் எடுத்தாளுதல்
18. பின்பு அதை நிறுவுதல்
19. முன்னதினின்றும் வேறுபட முடித்தல்
20. வேறுபடாது முன்னதின் படி முடித்தல்
21. பின்னே சொல்லப் போவதை, முன்னே ஒரு காரணத்திற்காகச் சொல்ல வேண்டின், சுருக்கிச் சொல்லி, இதனைப் பின்னே சொல்வோம் என்றல்
22. பின்னே சொல்லப் படுவதை முன்னே ஒரு காரணத்திற்காகச் சொல்லப் பட்டதை, பின்னே சொல்ல வேண்டிய இடத்து, முன்னரே சொன்னோம் என்றல்
23. ஐயம் வந்துழி ஒருபக்கம் துணிதல்
24. எடுத்துக் காட்டி நிறுவுதல்
25. தான் தொடங்கிய சொல்லின்படி முடிவெய்த வைத்தல்
26. ஐயப்படுகின்ற இடத்து, இன்னது அன்று இது; இது வேறு என்று துணிந்து சொல்லுதல்
27. செல்லாது விடப் பட்டதையும் பொருந்த முடிவு பெறுமாறு சொல்லுதல்
28. பிறநூற் கருத்தைத் தானும் உடம்படுதல்
29.தான் புதுமையாகக் குறித்து வழங்குவதைப் பல இடங்களில் எடுத்துச் சொல்லுதல்
30. சொல் முடியுமிடத்தே பொருளும் முடியச் செய்தல் 31. இனமானவற்றை ஒருசேரக் கூறுதல்
32. மறைமுகமானவற்றை ஆராய்ந்தறியும்படி வைத்தல்.
இக்காலத்தில் எழுதப்படும் நூலின் பல்வேறு பகுதிகள் :
நூல் எழுதுவார் தாம் தேவையென்று கருதுகின்றவாறும் தாம் விரும்புகின்றவாறும் நூலின் பகுதிகளை அமைக்கின்றனர். அமைப்பு முறையையும் தம் விருப்பத்திற்கேற்ப முன்பின்னாகவும் வைக்கின்றனர். எனினும் பொதுவான அமைப்பையும் பகுதிகளையும் காண்போம்.
1. நூலின் அட்டை
2. தலைப்புத் தாள் பக்கம் – இதை அரைத் தலைப்புப் பக்கம் என்றும் கூறுவர்
3. தலைப்புப் பக்கம்
4. பதிப்புரிமை பக்கம் அல்லது நூற்குறிப்புப் பக்கம்
5. படையல் அல்லது உரிமையுரை
6. அணிந்துரை
7. முன்னுரை
8. அறிமுகம்
9. நன்றியுரை
10. பொருளடக்கம்
11. படங்களின் பட்டியல்
12. நூல்
13. பின்னிணைப்பு
14. துணைநூற் பட்டியல்
15. பிழைதிருத்தம் (பிழையே இல்லாதிருப்பின் சிறப்பு)
16. பின்அட்டை
நூலின் கட்டடமும் உறையும் :
நூல் எளிதில் கிழிந்து விடாமல் இருக்கவும், வேறு வகையில் பழுதுபடா திருக்கவும், நூலிற்கு அழகு சேர்க்கவும் கட்டடம் (Binding)அமைக்கப் படுகிறது. தடித்த அட்டையைக் கொண்டும் மெல்லிய அட்டையைக் கொண்டும் கட்டடம் செய்யப் படுகின்றது.
பருமனான பெரிய புத்தகங்கள் பெரும்பாலும் தடித்த அட்டையைக் கொண்டு கட்டடம் செய்யப் படுகின்றன. இவ்வாறு கட்டடம் செய்யப்பட்ட மேலட்டையின் மேல் சுற்றி அதனைக் காத்தவாறு அமையும் கொஞ்சம் தடிப்பான வண்ணத்தாள் மேலட்டை உறை ஆகும்.
முன்னும் பின்னுமுள்ள மேலட்டைகளை மூடி, உட்புறம் மடித்தவாறு விடப்படும் தாளின் இரண்டு மடிப்புகளிலும், நூலின் சிறப்பைக் கூறும் செய்திகள் இக்கால் அச்சிடப்படுகின்றன.
நூலாசிரியர் பெயர், அகவை, கல்வி, தொழில், பெற்ற பரிசுகள், வாழ்க்கைக் குறிப்பு போன்றவற்றை மேலுறையின் முன் மடிப்பிலும், நூல் கூறும் முகன்மைக் கருத்து, இயல் சிறப்புகள், முதன்மை முடிவுகள், நடைச்சிறப்பு போன்றவற்றைப் பின் மடிப்பிலும் அச்சிடுவதும் உண்டு.
முன்பக்க மேலுறை மேல், புத்தகப்பெயரும் ஆசிரியர் பெயரும் பொருத்தமான ஓவியம் அல்லது ஒளிப்படம் இடம் பெறுகின்றன.
உறையின் முதுகு அல்லது நடுப்பகுதியில் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ நூற்பெயரும் நூலாசிரியர் பெயரும் அச்சிடப் படுகின்றன.
நூலை அறிமுகப்படுத்தி நூலுறையின் பின் பக்கத்தில் சிறு குறிப்பு எழுதுவது நூல் வாங்க விரும்புவார்க்கு உதவியான செய்தியைத் தருவதாக அமையும்.
மூத்த எழுத்தாளர் கூறும் வழிகாட்டும் நல்லுரைகள் :
மொழியின் நிலைத்த வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் மக்கள் வழக்கு இன்றியமையாதது ஆவது போலவே அதன் தூய்மைக்கும் பண்பாட்டிற்கும் மரபு, இலக்கணம், பழவழக்கு, இலக்கியம் ஆகியவை இன்றியமையாதவை ஆகின்றன. சான்றோர் மொழி ஆட்சிகளை மூலமாகக் கொண்டே பண்பாடும் உருப்பெறுகின்றது.
கொச்சை மொழி, அயற்சொல் பயன்பாட்டிற்கு வரம்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பல பேர்கள் சேர்ந்து ஒரு பிழையைச் செய்துவிட்டு அதையே மரபாக்கிவிடும் தன்னலத்தை இன்று எங்கும் காண்கிறோம்.
பண்பட்ட இலக்கியமொழி -செம்மொழி- களுங்கூட மரபைப் போற்றியே வாழவேண்டும். காலத்திற்கு ஒவ்வாத சில வரையறைகளைக் காலத்திற் கேற்பச் சீர்திருத்திக் கொள்வது தவறன்று. அதுவும் மொழிவல்லுநர் துணையின்றிச் செய்யப் படுமானால் தவறுதான்.
“தப்புத் தப்பாக யாப்பும் கோப்புமின்றி ஆயிரம் ‘கவிதைகள்’ எழுத முயல்வதைக் காட்டிலும் எளிமையும் தூய்மையும் தனித்தன்மையும் இலங்க நான்கு ‘வாக்கியங்கள்’ நன்றாகவும் அழகாகவும் எழுதிவிடுவது எவ்வளவோ சிறந்தது.
பிழையில்லாமல் தெளிவாக எழுதுவதே ஓர் அறம்”
- இவ்வாறு எழுத்தாளர்க்கும் நூலாசிரியர்க்கும் வழிகாட்டி நெறிப்படுத்துவார் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளராகிய நா.பார்த்தசாரதி.
முடிவாக...
மக்களுக்காக மக்களால் எழுதப்படுவனவே நூல்கள். நூல்களை மக்கள் வாங்கிப் படிக்க அவர்களை ஈர்க்கும் வகையிலும், படித்தோரை நன்னெறிப் படுத்தி ஊக்கும் வகையிலும் அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு தருவதைத் தொடர்புடைய அனைவரும் இன்றியமையாக் கடமையாகக் கருத வேண்டும். ஈடுபாட்டோடு இதனைச் செய்வதே உயர்ந்த மக்கள் தொண்டாகும்.
------------------------------------------------------------------------------------------------
நன்றியுரைப்பு :
1. தொல்காப்பியம் – இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகள்.
2. நன்னூல் – விசாகப்பெருமாளையர், சடகோபராமானுசாச்சாரியார் உரைகள்
3. நன்னூல் எழுத்ததிகாரம் – தமிழண்ணல் உரை
4. மொழியின் வழியே - நா.பார்த்தசாரதி
5. புத்தகக்கலை – முனைவர் அ.விநாயகமூர்த்தி
அனைவர்க்கும் நன்றி.
-------------------------------------------------------------------------------------------------
ஞாயிறு, 1 நவம்பர், 2009
புதன், 28 அக்டோபர், 2009
நிறுத்தக் குறிகளும் பயன்படுத்தமும்
கருத்துக்களை வெளிப்படுத்தவும் விளக்கவும் எழுதும்பொழுது பல்வேறு குறிகளைப் பயன்படுத்துகின்றோம். இவ்வாறு குறிகள் இடுவதை நிறுத்தக் குறியீடு (punctuation) என்று கூறுகின்றோம். இந்த நிறுத்தக் குறிகள் சொற்றொடர்களைப் பிரித்துக் காட்டவும் பொருளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் பெரிதும் உதவுவனவாக உள்ளன. படிப்பவருடைய கவனத்தை ஈர்ப்பதற்கும் நிறுத்தக் குறிகள் மிகவும் பயன்படுகின்றன.இப்படி இடப்பெறும் குறியீடுகள் பற்றிப் பலருக்கும் தெரியும் என்றாலும், இக் குறிகளைப் பயன்படுத்துவதற்கெனப் பின்பற்றப்படும் வகைமுறைகளை அறிந்து, அதன்படி பயன்படுத்துகிறார்களா எனபது ஐயப்பாடே!
பண்டைக் குறியீடுகள் :
பண்டைக் காலத்தில் (பனைஓலை) ஏடுகளில் எழுதும் பொழுதும் கல்வெட்டுகளிலும் ஒரு பாடல் அல்லது உரைநடைப் பகுதி எழுதி முடிந்ததும், அது முடிந்தமைக்கு அடையாளமாக, அதன் இறுதியில் ‘சுழியம்’ (0) இடுதல் அல்லது // என்று இரண்டு கோடுகள் இடுதல் அல்லது / என்று ஒரு கோடு இடுதல் என்னும் வழக்கம் இருந்துள்ளது.
அறிமுகமும் எச்சரிக்கையும் :
அய்ரோப்பியர்களே பல்வேறு நிறுத்தற் குறியீடுகளை நமக்கு அறிமுகப்படுத்தி, எவ்வெவ்விடங்களில் எவ்வெக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டுமென விளக்கினர். நிறுத்தக் குறியீடுகளைப் பயன்படுத்துகையில் தமிழ்மொழி இலக்கணத்திற்குக் கேடு நிகழாவாறு பார்த்துக் கொள்ள வேண்டுவதும் இன்றியமையாததாகும்.
பரவலாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு நிறுத்தற் குறிகளாவன :
காற்புள்ளி - ,
அரைப்புள்ளி - ;
முக்காற்புள்ளி - :
முற்றுப்புள்ளி - .
வினாக்குறி - ?
உணர்ச்சிக்குறி - !
ஒற்றை மேற்கோள் குறி - ‘ ’
இரட்டை மேற்கோள் குறி - “ ”
விடுகுறி (அல்லது) எச்சக்குறி - ’
மேற்படிக்குறி - ”
சிறுகோடு - -
தொடர் விடுநிலைக் குறி - ....
இடைப்பிறவரல் வைப்புக் குறி - -....-
பிறை அடைப்பு - ( )
பகர அடைப்பு - [ ]
சாய் கோடு - /
அடிக்கோடு - -
நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்தும் முறைகள் :
காற்புள்ளி :
பொருள்களை எண்ணுமிடங்களிலும், விளி முன்னும், வினையெச்சங்களுக்குப் பின்னும், மேற்கோள் குறிக்கு முன்னும், ஆதலால் ஆகவே ஆயினும் முதலிய சொற்களுக்குப் பின்னும், முகவரியில் இறுதிவரிக்கு முன்னைய வரிகளின் இறுதியிலும் இடப்படுகின்றது.
காற்புள்ளி இடுதல் தொடர்பான சில முகன்மையான செய்திகள் :
1. சொற்களைத் தனித்தனியாகவோ அடுக்கடுக்காகவோ பிரிக்கும்போது காற்புள்ளி இடவேண்டும்.எடுத்துக்காட்டு :
(அ) தனித்தனியாகப் பிரித்தல் :அறம், பொருள், இன்பம், வீடு என்பன உறுதிப் பொருள்களாகும்.
(ஆ) அடுக்கு அடுக்காகப் பிரித்தல் :நட்புக்குக் குகனும் பரதனும், பிசிராந்தையாரும் கோப்பொருஞ் சோழனும், உதயணனும் யூகியும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.
(இ) சொற்றொடரில், எழுவாய் ஒன்றாக நின்று, பல பயனிலைகளைப் பெற்றுவரும்போது, இறுதிப்பயனிலை தவிர பிறவற்றிற்குப்பின் காற்புள்ளி இட வேண்டும்.
எடுத்துக்காட்டு : கணவன் கொலை செய்யப்பட்டான் என்று கேட்ட கண்ணகி பொங்கி எழுந்தாள், விம்மினாள், அரற்றினாள், ஏங்கினாள், கலங்கினாள், மயங்கினாள், விழுந்தாள்.
(ஈ) பொருள்மயக்கம் நீக்கித் தெளிவுபடுத்த வேண்டிய இடத்தில் காற்புள்ளி இடவேண்டும்.
எடுத்துக்காட்டு : அண்ணன், தம்பி வீட்டுக்குச் சென்றதால் நான் பார்க்கவில்லை.
(உ) கல்வி, அறமும் பொருளும் இன்பமும் வீடும் நல்கும் – என்னும் சொற்றொடரில் எண்ணும்மைகளுக்குப் பின் காற்புள்ளி இடுதல் தவறு.பெரிய சொற்றொடர்கள் இணைக்கப்படும் பொழுது எண்ணும்மை இருப்பினும் தெளிவுக்காகக் காற்புள்ளி இடவேண்டும்.
எடுத்துக்காட்டு : குறிஞ்சிக் காட்சிகளைக் கூறுவதில் வல்லவராகிய கபிலரும், வரலாற்றுக் குறிப்புகளை வழங்குவதில் சிறந்தவராகிய பரணரும், பத்துப்பாட்டில் இரண்டு பாடல்களை இயற்றியவராகிய நக்கீரரும் கடைக்கழகப் புலவர்கள்.
‘உம்’ இடைச்சொற்கள் நெருங்கி வரும் இடங்களில் காற்புள்ளி இடவேண்டிய தில்லை. அவை ஒன்றற்கொன்று தொலைவில் அமைந்திருக்குமாயின் காற்புள்ளி இடவேண்டும் எனபதை மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.
அரைப்புள்ளி :
1. ஒரே எழுவாயில் பல பயனிலைகள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும், எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் பயன்படுத்தப் படுகின்றது.
எடுத்துக்காட்டு :
(அ) பலர் வயிற்றளவை மீறி உண்பர்; பசியாலும் உண்பர்; கிடைத்தபோதெல்லாம் உண்பர்; நாவிற்காக உண்பர்; வயிறு கெட்டும் உண்பர்.(ஆ) கண்ணன் தேர்வு எழுதினான்; ஆனால் அதில் தேரவில்லை.
2. காரணம் காட்டும் ஏனென்றால் என்பதற்கு முன் அரைப்புள்ளி இடவேண்டும்.
எடுத்துக்காட்டு : நான் இன்று பேசமாட்டேன்; ஏனென்றால், என் தொண்டை நோயுற்றிருக்கிறது.
முக்காற்புள்ளி :
உள் தலைப்பு அமைக்கும் போதும், ஒருவர் கூற்றை விளக்குமிடத்தும், சொற்றொடரில் கூறியதொன்றை விரித்துக் கூறும்போதும் முக்காற்புள்ளி இடப்படுகின்றது.எடுத்துக்காட்டு :
1. வாழ்வு இரு திறத்தது : ஒன்று உயிர் வாழ்வு; மற்றொன்று உடல் வாழ்வு.
2. பொருள் கூறுக : களிறு, பிணிமுகம்.
முற்றுப்புள்ளி :
1. சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி இடப்படுகின்றது.
எடுத்துக்காட்டு : நீ உள்ளே வா.
2. சுருக்கச் சொற்களுக்கும் எழுத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி இட வேண்டும். எடுத்துக்காட்டு :
(அ) திரு. மணி. திருநாவுக்கரசு.
(ஆ) திரு. திரு.வி.க.
3. பட்டப் பெயர்களுக்குப்பின் முற்றுப்புள்ளி இடவேண்டும்.
எடுத்துக்காட்டு :
திரு. இ. செழியன், க.மு.
வினாக்குறி :
வினாச் சொற்றொடர்களின் இறுதியில் இடப்படுகின்றது.
எடுத்துக்காட்டு : பாடுபட்டால் பயன் இல்லாமல் போகுமா?
சொற்றொடருக்கு நடுவில் கேள்விக்குறி வரக்கூடாது. ‘நீங்கள் யார் என்று அவர் கேட்டார்’ என்னும் சொற்றொடரில் யார் என்ற சொல்லுக்குப் பின்னால் வினாக்குறி கண்டிப்பாக இருக்கக் கூடாது.
உணர்ச்சிக்குறி :
வியத்தல், வரவேற்றல், வாழ்த்தல், வைதலின் போது பயன்படுத்தப் படுகின்றது. நம்ப முடியாது என்பதையும் இகழ்ச்சியுடையது என்பதையும் காட்டுமிடங்களிலும் உணர்ச்சிக்குறியிடுதல் உண்டு.
எடுத்துக்காட்டு :
(அ) அந்தோ! பல பழந்தமிழ் நூல்கள் அழிந்தனவே.
(ஆ) வாழி! வாழி! தமிழ்நாடு வாழியவே!
கண்டபடி உணர்ச்சிக்குறியை !, !!, !!! இவ்வாறெல்லாம் இடுதல் விரும்பத் தக்கதன்று.
ஒற்றை மேற்கோள் குறி :
சிறப்புக் காரணம் கருதி ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரைக் குறித்துக் காட்டுகின்ற இடங்களிலும், உரையாடலுக்குள் இடம்பெறும் மற்றோர் உரையாடலைக் குறிக்கவும் ஒற்றை மேற்கோள் இடப்படுகின்றது.
எடுத்துக்காட்டு :
பரதன், “நான் என் செய்வேன்! அண்ணன், ‘நீபோ. நான் பதினான்கு ஆண்டுகள் கழித்தே வருவேன்’ என்று சொன்னார். அதனால் வந்துவிட்டேன்”
பிரித்துக் காட்டுதற்கும், பிறருடையது என்று அறிவித்தற்கும், பழமொழிகளைத் தெரிவித்தற்கும் ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப் படுகின்றது.
எடுத்துக்காட்டு :
(அ) ‘வு’, ‘வூ’, ‘வொ’, ‘வோ’ என்னும் எழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வரா. (ஆ) ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது பழமொழி.
இரட்டை மேற்கோள் குறி :
தன் கூற்றை வலியுறுத்தத் தன்னினும் சிறந்தோர் கூறியவற்றை எடுத்தாளுகின்ற இடங்களிலும், பிறர் உரையாடலை அப்படியே கூறுமிடங்களிலும் இரட்டை மேற்கோள் இடவேண்டும்.
எடுத்துக்காட்டு :
(அ) “அறம்தலை நின்றார்க்கு இல்லை அழிவு” என்றார் கம்பர்.
(ஆ) நெடுஞ்செழியன், “இப்போரில் நான் வெல்லாமற் போனால் என் குடிகள் தூற்றும் கொடுங்கோலனாவேனாக!” என்று சூளுரைத்தான்.
விடுகுறி (அல்லது) எச்சக்குறி :
சில எழுத்துக்களை அல்லது எண்களை விட்டுவிடும் போது ’ இக் குறியிடுக.
எடுத்துக்காட்டு :
26-11-’54 என்பதில் 1954இல் உள்ள 19 விடப்பட்டது காண்க.
மேற்படிக்குறி :
மேற்குறித்ததே இஃது என்று காட்டுவது மேற்படிக்குறி.
எடுத்துக்காட்டு :
ஆடுகொடி – வினைத்தொகை
கடிநாய் - ” ”
சிறுகோடு :
ஒன்றைச் சேர்ப்பதைக் குறித்ததற்கும் விரித்துக் கூறுபவற்றைத் தொகுத்துக் கூறுமிடத்தும் சிறுகோடு இடப்படும்.
எடுத்துக்காட்டு :
நண்பர், சுற்றத்தார், ஊரார் – எல்லாரும் என்னைக் கைவிட்டார்.
தொடர் விடுநிலைக் குறி :
வேண்டாததை விடும்போது ...... இக் குறியிடப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
அருமை மாணாக்கர்களே, உங்கள் படிப்பைக் கவனியுங்கள்! உங்கள் வீட்டைக் கவனியுங்கள்! உங்கள் நாட்டை நோக்குங்கள்! ........... குற்றங்குறை இருப்பின் மன்னிப்பீர்களாக!
இடைப்பிறவரல் வைப்புக் குறி :
இக் குறி ஒரு சிறு சொற்றொடரின் முன்னும் பின்னும் உள்ள சிறு கோடுகளைக் குறிக்கும். கூறுகின்ற சொற்றொடரின் நடுவில் இலக்கண முறையில் தொடர்பில்லாது, இடைப்பிறவரலாக வரும் தனிச் சொற்றொடரைப் பிரிக்க இக்குறி இடப்படும்.
எடுத்துக்காட்டு :
இறுதியாக – சுருங்கக் கூறுமிடத்து – நாங்கள் வீட்டுக்கே திரும்பி வந்தோம்.
பிறை அடைப்பு :
ஒன்றனை விளக்க மற்றொரு சொல்லைப் பிறை அடைப்புக்குள் குறிப்பது உண்டு.
எடுத்துக்காட்டு :
பாரதியார் நுழைவுத்தேர்வில் (entrance examination) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
பிறை அடைப்பு சொற்றொடரின் இறுதியில் வந்தால் பிறை அடைப்புக்குப் பிறகு புள்ளி வைக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு :
குற்றங்கள் மூன்றாவன : இணைவிழைச்சு (காமம்), வெகுளி (குரோதம்), மயக்கம் (மோகம்).
முழுச் சொற்றொடரும் பிறை அடைப்புக்குள் இருப்பின் முற்றுப் புள்ளியையும் பிறைஅடைப்புக்குள் இட வேண்டும்.
எடுத்துக்காட்டு :
நான் முதன்முதலாகச் சென்ற வெளியூர் திருப்பெருந் துறையாகும். (அது இக்காலத்தில் ஆவுடையார் கோயில் என்று வழங்கப் படுகின்றது.)
பிறை அடைப்புக்குள் மேலும் பிறைஅடைப்பு தேவைப்பட்டால், பகர அடைப்பு இடவேண்டா; பிறை அடைப்பையே பயன்படுத்தலாம்.
பகர அடைப்பு :
பிறருடைய உரைகளை மேற்கோளுக்காக எடுத்தாளும் போது, எழுதுகிறவர் இடையிடையே தம் கருத்தைத்தெரிவிக்கத் தம் கருத்தைப் பகர அடைப்பிற்குள் எழுதவேண்டும்.
எடுத்துக்காட்டு :
“நரசிம்ம வர்மனின் படைத்தலைவர் விக்கிரம கேசரி [பிற்காலத்தில் பரஞ்சோதி] இரண்டாம் புலிகேசியை வெற்றிகொண்டு திரும்பும்போது பிள்ளையார் சிலையைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தார்”.
சாய் கோடு :
இரண்டில் ஒன்றை அல்லது பலவற்றில் ஒன்றைத்தேர்வு செய்யக்கூடிய இங்களில் சாய் கோடு இடப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
பால் : ஆண்/ பெண்
தொகையைக் குறிக்கும் எண்ணை அடுத்து, இருசிறு படுக்கைக் கோடுகளுடன் இணைந்து இடப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
உருவா 5000/=
அடிக்கோடு :முகன்மையான ஒன்றைக் கவனத்தை ஈர்க்குமாறு தருவதற்கு அடிக்கோடு இடப்படுகின்றது.
எடுத்துக்காட்டு :
ஒப்போலை அளிக்க வருவோர் கண்டிப்பாக அடையாள அட்டை எடுத்துவர வேண்டும்.
மேற்கண்ட குறியீடுகளைத் தவிர, நூலில் அடிக்குறிப்பைப் பார்க்குமாறு கூறும் சில குறியீடுகளும் பயன்படுத்தப் படுகின்றன.
அவற்றுள் சில குறியிடுகளாவன :
உடுக்குறி - *
குத்துவாட் குறி - +
பிரிவுக்குறி - $
சதுரக்குறி - #
இணை குறி - ll
செய்யுளில் நிறுத்தக்குறிகள் :
செய்யுளில் நிறுத்தக்குறிகள் இடுவது பற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. இருந்தபோதிலும், எளிதில் புரிந்து கொள்ள இயலாதாருக்கு உதவியாக தேவை நேருமிடங்களில், பொருத்தமான குறிகளை இடலாம். எனினும், ‘நிறுத்தக் குறிகளை மூலத்துள் நுழைப்பது முறையன்று; சொல் பிரிக்கையில் அடைப்புக் குறிக்குள் சந்திகளை நுழைப்பதும் முறையன்று; சீர் ஒழுங்கைக் குலைத்து அச்சிடுவது, பாவடிவை மாற்றும்’ என்று கூறுவாரின் கவலையைப் புறக்கணிக்கணித்தல் தவறாகும்.
எடுத்துக்காட்டு :
கீழே காண்பது நல்வழி 15ஆம் பாடல். எந்த நிறுத்தக் குறியுமின்றி உள்ளது.
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளு மில்லை உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
இப்பாடலில் கீழ்க்காணுமாறு குறீயீடு இட்டால், எளிதில் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது.
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளு மில்லை! - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
இப்பாடலையே கீழ்க்காணுமாறு தவறாகக் குறியிட்டால் பொருளைக் கெடுத்துக் குழப்பிவிடும்.
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம்! ஒருநாளு மில்லை உபாயம்!
இதுவே மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
எனவே, தக்க இடத்தில் தகுந்த நிறுத்தற்குறியிடத் தெரியாத போது, செய்யுளில் நிறுத்தற்குறியிடாமல் விடுதலே சாலச் சிறந்ததாகும்.
------------------------------------------------------------------------------------------------
நன்றியுரைப்பு :
துணையிருந்த நூல்கள்:
1. பிழையின்றி எழுதுங்கள் - மு.வை.அரவிந்தன்.
2.. நல்லதமிழ் எழுத வேண்டுமா? - அ.கி.பரந்தாமனார்.
3. புத்தகக்கலை - அ.விநாயகமூர்த்தி.
துணைசெய்தார்க்கு நெஞ்சார்ந்த நன்றி.
---------------------------------------------------------------------------------------------
லேபிள்கள்:
எழுதுவார்க்கு,
நிறுத்தற் குறிகள்,
மொழி
புதன், 21 அக்டோபர், 2009
அண்ணா நூற்றாண்டு நினைவேந்தல்
விழுப்புரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நினைவேந்தல் விழாப் பாவரங்கில் அளித்த நேரிசை ஆசிரியப்பா
*
அருந்தமிழ்ப் பாவரங் கணிசெயுந் தலைவ !
இருந்தமிழ்ப் பாவலீர் ! பொருந்தவை யமர்ந்த
அறிஞரீர் ! பெரியீர் ! அன்புறு தாய்க்குல
நறுந்தமிழ் உணர்வீர் ! நற்றிற இளமையீர் !
தோழமை சான்ற தூயநல் லுளத்தீர் !
ஆழன் பார்ந்தே அனைவரை வணங்கினேன் !
அண்ணா நூற்றாண் டணிதிகழ் நிறைவில்
எண்ணிப் பாவரங் கெளிமையில் அமைத்தனர் !
‘பாவலர் நெஞ்சில் பேரறி ஞர் ’என
மேவுறு தலைப்பில் பாவளி என்றனர்! -10
அண்ணா ! அட,ஓ ! எண்ணம் இனிக்கும்
வண்ணத் திருப்பெயர் ! ஈரா யிரமாண்(டு)
இழிதளைப் பட்டஎம் இனத்தினைக் காக்க
எழுச்சியோ டிளைஞரை ஈர்த்தவர் பெயரிது !
ஆரையும் விடவும் ஆரிய அராவை
நேருறத் தாக்கி நிலைகெடக் கிடத்திய
ஒருதனிப் பெரும்பணிப் பெரியார் தேர்ந்தசெந்
தெருள்தெளி மாணவர் தீந்தமிழ்ப் பெயரிது !
மூடுற்ற தமிழினப் பீடு விளக்கிய
ஈடிலா அறிஞரின் சூடெழும் பெயரிது ! -20
தாய்நிலந் தன்னைத் தமிழ்நா டென்றே
வாய்மகிழ்ந் தழைக்க வைத்தவர் பெயரிது !
ஆட்சியில் கல்வியில் காட்சியில் இசையில்
நீட்சி தமிழின வீழ்ச்சியென் றுணர்த்தி
நலங்களைச் சிதைத்தோர் கலக்குற துலக்கமாய்ச்
சொலல்வல் திறத்தரின் சுருக்கப் பெயரிது !
செத்ததை விலக்கிய செந்தமிழ்த் திருமணம்
ஒத்தொப் பிடவோர் சட்டஞ் சமைத்தவர் !
பிறப்பிற் பிரிவினை இறக்கங் கூறிய
சிறப்பிலா ஆரிய மாயை செகுத்தவர் ! -30
தமிழர் உணர்வுத் தழல்தீப் பரவவும்
இழிவொழித் திவ்வினம் ஏற்றமுற் றிடவும்
அயரா துழைத்த வயவரி யாரவர் !
பெயராப் பெரும்புகழ்ப் பேற்றில் நிலைத்தவர் !
இராசாசி சூழ்ச்சியில் நேரு தட்சிண
இராச்சியம் கொணர இங்கதற் கெதிராய்
மொழிவழி அரசுகள் வழிவழி அமைய
கழிபெரு மாற்றலாய்க் கடுங்குர லார்த்தவர்!
இந்திய தேசிய மெதிர்த்தா ராயினும்
நந்தமி ழினநல நாட்டமிக் கிருந்தும் -40
தெரிந்தே திராவிடத் தேசியம் பேசி
அருந்தமிழ்த் தேசியம் பொருந்திடா தெதிர்த்தமை
ஒப்போலை அரசியல் தப்பதே! சறுக்கலே !
இப்பிழை யிவர்புகழ் இறக்கிட வில்லை !
செந்தமிழ்ச் சீருரை தந்திடும் வெற்றியால்
எந்த நிலையையும் சந்தித்த திவர்நா !
அடுக்கு மொழியுடன் அண்ணா தமிழை
ஒடுக்கம் உடைத்தே உலாவரச் செய்தார் !
இருமொழி போதும் இந்திவேண் டாவென
மருட்டலாய்த் திட்டம் மறுத்துக் கொணர்ந்தார் ! -50
அறிஞர் இவரென பெர்னாட் சாவென
அறிவித் தேத்தினார் அண்ணாவைக் ‘கல்கி’ !
ஆங்கிலந் தனிலிவர் பாங்குற ஆற்றிய
ஓங்குரை நேருவின் உளங்கவர்ந் தீர்த்தது !
ஈழத் தமிழர் இன்னலைத் தீர்க்க
ஆழவு ணர்ந்தே அன்றவர் முயன்றார் !
ஓர்வோம் அண்ணா உயிர்த்திருந் தாரேல்
ஓரிலக் கம்பேர் சூருற மடிவரோ ?
இன்றுமூ விலக்கம் இழிவினி லின்னலில்
குன்றி யங்கவர் நின்றிட விடுவரோ ? -60
தன்னலந் தன்னுடை இன்குடும் புறுப்பினர்
நன்னலங் கருதா செந்நலத் தொண்டர் !
ஒருமுறை அண்ணா உரோமிற்குப் போனார்
திருவுறை போப்பிடம் தேர்ந்திவர் கேட்டதோ
விடுதலை மறவர் இரானடே விடுதலை
வடுவறுந் தொடுப்பில் எடுப்புற அடுக்கி
அண்ணா கேட்டதா லவர்விடு பட்டார் !
எண்ணிய வெல்லாம் நன்மாந்த நேயம் !
பெரிதுபெரி தண்ணா பெரும்புகழ் விரிக்க!
உரிமைபெற் றிங்குநாம் உயர்வுறற் கெனவே -70
ஆர்த்தார்; உழைத்தார்; அதன்வழி
சீர்த்திசால் தமிழினங் காத்தனர் அவரே!
-----------------------------------------------------------------------------------------
லேபிள்கள்:
அண்ணா,
அண்ணா நூற்றாண்டு நினைவேந்தல்,
அண்ணாவின் சறுக்கல்,
அண்ணாவின் பெருமை
திங்கள், 19 அக்டோபர், 2009
இன்னும் முடிந்த பாடில்லை!
இன்னும் முடிந்த பாடில்லை
இவர்கள் நடிப்பும் நாடகமும்!
சொன்னார் ஐயா யிரம்பேர்கள்
சொந்த இடத்திற் கனுப்பியதாய்!
இன்னோர் அடைப்பிற் கனுப்பியதை
இப்படிப் பொய்யாய்ச் சொல்கின்றார்!
முன்னும் பின்னும் முரணாக
முழுப்பொய் சொல்லிக் குழப்புகிறார்!
ஐந்து நூறு கோடிதொகை
அள்ளித் தரவே போகின்றார்!
மெய்யாய் முன்னர் கொடுத்ததொகை
மீளாத் துனபத் தமிழர்தம்
பைதற் குறைக்க உதவியதா?
படித்தோம் செய்தி யத்தொகையைக்
கையர் சிங்க ளப்படையர்
களிக்க அவர்க்கே கொடுத்தாராம்!
எதுவும் இவர்க்குப் பொருட்டில்லை!
யாரைக் குறித்தும் கவலையிலை!
பதுங்கிப் பலவும் செய்கின்றார்
பச்சை யாய்ப்பொய் சொல்கின்றார்!
எதுசெய் துந்தன் குடும்பநலம்
என்றும் ஓங்கி நிலைத்தலெனும்
அதுவே அவரின் குறிக்கோளாய்
ஆன தறிவோம் தமிழவரே!
------------------------------------------
லேபிள்கள்:
இந்திய இரண்டகம்,
இரண்டகம்,
இரண்டகர்,
ஈழம்
திங்கள், 5 அக்டோபர், 2009
புதுவையில் மீண்டும் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கு
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கு நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் 4-10-2009 முற்பகலில் புதுவையில் நடைபெற்றது.
தோழர்கள் இரா.சுகுமாரன் அவர்களும் கோ.சுகுமாரன் அவர்களும் கலந்துரையாடல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
இக் கலந்துரையாடலில் 17 பேர் கலந்து கொண்டனர்.2010 சனவரியில் பொங்கல் விழாவிற்கு முன்னர் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கைப் புதுவையில் நடத்துவது என்றும், பயிலரங்கைத் தொடக்கி வைக்கப் புதுவைத் துணைநிலை ஆளுநர் அவர்களை அழைப்பது என்றும் கலந்துரையாடல் கூட்டம் முடிவு செய்தது.
கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் :
1. இரா.சுகுமாரன்
2. கோ.சுகுமாரன்
3. தமிழநம்பி
4. இரா.முருகப்பன்
5. வீரமோகன்
6. கு.இராம்மீர்த்தி
7. எ.சீனுவாசன்
8. வெங்கடேசு
9. க.அருணபாரதி
10. இரா.இராசராசன்
11. சீ. பிரபாகரன்
12. ஆனந்தகுமார்
13. நா.இளங்கோ
14. மகரந்தன்
15. இரா.செயப்பிரகாசு
16. சி.முருகதாசு
17. ந.இரவி
கலந்துரையாடல் கூட்டச் செய்திகளைப் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் வலையிலும் ( http://puduvaibloggers.blogspot.com/ ) காணலாம்.
மேலும் செய்திகளுக்குக் கைப்பேசி எண் : 94431 05825 ஐத் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி : தமிழநம்பி
தோழர்கள் இரா.சுகுமாரன் அவர்களும் கோ.சுகுமாரன் அவர்களும் கலந்துரையாடல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
இக் கலந்துரையாடலில் 17 பேர் கலந்து கொண்டனர்.2010 சனவரியில் பொங்கல் விழாவிற்கு முன்னர் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கைப் புதுவையில் நடத்துவது என்றும், பயிலரங்கைத் தொடக்கி வைக்கப் புதுவைத் துணைநிலை ஆளுநர் அவர்களை அழைப்பது என்றும் கலந்துரையாடல் கூட்டம் முடிவு செய்தது.
கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் :
1. இரா.சுகுமாரன்
2. கோ.சுகுமாரன்
3. தமிழநம்பி
4. இரா.முருகப்பன்
5. வீரமோகன்
6. கு.இராம்மீர்த்தி
7. எ.சீனுவாசன்
8. வெங்கடேசு
9. க.அருணபாரதி
10. இரா.இராசராசன்
11. சீ. பிரபாகரன்
12. ஆனந்தகுமார்
13. நா.இளங்கோ
14. மகரந்தன்
15. இரா.செயப்பிரகாசு
16. சி.முருகதாசு
17. ந.இரவி
கலந்துரையாடல் கூட்டச் செய்திகளைப் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் வலையிலும் ( http://puduvaibloggers.blogspot.com/ ) காணலாம்.
மேலும் செய்திகளுக்குக் கைப்பேசி எண் : 94431 05825 ஐத் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி : தமிழநம்பி
வியாழன், 17 செப்டம்பர், 2009
மூன்று வெண்பாக்கள்!
'அமுதசுரபி' மாத இதழில் வெண்பாப் போட்டிப் பகுதியில் ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதச் சொல்கின்றனர்.
கடந்த மூன்று இதழ்களில் வந்த என்னுடைய வெண்பாக்கள் :
1. கொடுக்கப்பட்ட ஈற்றடி : நன்றாகச் செய்க நயந்து
என் பாடல் :
நாடு நனிநல்ல! நாடா தொதுக்கிடுக
கேடு விளைக்கின்ற கீழ்மைகளை! - தேடுபணி
பொன்றாப் புகழும் பொதுநலனும் நாடிமிக
நன்றாகச் செய்க நயந்து!
2. கொடுக்கப்பட்ட ஈற்றடி : நெஞ்சில் எரியும் நெருப்பு
என் பாடல் :
தன்னல வாழ்வே தமதாக்கித் தம்குடும்ப
இன்னலம் தன்னையே எண்ணிடுவார்! - என்றென்றும்
வஞ்சஞ் செயவஞ்சார் வாழ்வை நினைக்கையில்
நெஞ்சில் எரியும் நெருப்பு.
3. கொடுக்கப்பட்ட ஈற்றடி : என்றும் திருநாள் எனக்கு
என் பாடல் :
வீதிதொறும் மாழ்கமது! வேகவுணா! ஊதுபுகை!
ஊதியமும் கிம்பளமும் உண்டய்யா! - ஏதிங்கே
ஒன்றிவரா மேலாள்! ஒருக்காலும் சிக்கலிலை!
என்றும் திருநாள் எனக்கு!
லேபிள்கள்:
அமுதசுரபி வெண்பாப் போட்டி,
நேரிசை வெண்பா
ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009
மேலாண்மையில் தமிழ்!
(வழுப்புரம் ‘மருதம்’விழாப் பாட்டரங்கில் கலந்துகொண்டு பாடிய
அறுசீர்மண்டிலப் பதிகம்)
பெருமதிப்புக் குரியோரே! பேரன்பீர்! தலைமையமர்
பெரும்பா வாண!
அருந்தமிழ்ப்பா யாத்தளிக்கும் ஆற்றல்சால் பாவலரே!
அன்பு நண்பீர்!
இருளகற்றும் அறிஞர்களே! இன்னன்புத் தாய்மாரே!
இளமை யோரே!
தெருளார்ந்த தமிழ்வணக்கம் தெரிவித்தேன் எல்லோர்க்கும்
தெளிந்த அன்பால்!
விழுப்புரத்தில் மருதவிழா! விருப்பூட்டும் இனியவிழா!
விளக்க மாக
செழுமரபுக் கலைகளெலாம் சீருறவே தொகுத்தளிக்கும்
சிறப்பு மிக்க
எழுச்சிமிகு சுறவவிழா! எல்லாரும் மகிழ்கின்ற
இவ்வி ழாவின்
கெழுவலுறு பாட்டரங்கில் கிழமையிழந் தேங்குதமிழ்
கிளத்த வந்தேன்!
மேலாண்மை செய்மொழியாய் மேற்குலக மொழியின்னும்
மேலி ருக்க
ஏலாத மொழியிங்கே எமையாள ஏற்றமிகும்
எம்த மிழ்த்தாய்க்(கு)
ஆலாத்தி எடுத்ததன்பின் அங்கோர்மூ லைதொலைப்பார்
அதையு ணர்ந்தால்
மேலான இந்தஇனம் மீத்தாழ்ச்சி உற்றகதை
மிகவி ளங்கும்!
வரப்பகலந் தொடர்பாக வழக்கொன்று நம்சிற்றூர்
வடிவே லுக்கும்
பரப்புகுறை நிலமுடைய பச்சையப்பன் இருவருக்கும்
பட்ட ணத்தில்
உரத்தகுரல் வழக்கறிஞர் உகைத்தெழுந்தே ஆங்கிலத்தில்
உரைசெய் கின்றார்!
கரப்பின்றிக் கூறின்இவர் கவலைமிகப் புரியாமல்
கலங்கி நிற்பார்!
சிற்றூரில் வாழ்கின்ற சின்னத்தாய் மனைஉரிமை
சிறுகு டிற்குக்
கொற்றத்தார் அலுவலகம் கொடுத்தவிடை ஆங்கிலத்தில்!
கூறும் செய்தி
கற்றறியாச் சின்னத்தாய் கலங்கிடுவாள் புரியாமல்!
காணீர் ஈதே
உற்றநிலை! தமிழிலதை உரைத்திருந்தால் சின்னத்தாய்
உணர்வாள் அன்றோ?
ஆண்டைம்பைத் தொன்றாயிற்(று) ஆட்சிமொழி சட்டமினும்
ஆழத் தூங்கும்!
மாண்தமிழில் எழுதாது மக்களுக்குப் புரியாத
மயக்க மூட்டும்
வேண்டாத மொழியினிலே விடைதருவார்! அரசாணை
விடுப்ப தெல்லாம்
ஈண்டெமக்கு விளங்காத இன்னொருவர் மொழியிலெனில்
இதுவா ஞாயம்?
அரசாணை நூற்றுக்கும் அதிகமுண்டு! தேவையெலாம்
அவற்றை மெய்யாய்
அரசுநடை முறைப்படுத்தல்! ஆட்சிதமிழ் வழிநடந்தால்
அதனால் மக்கள்
அரசாளும் முறைபுரிந்தே அதன்நிறைகள் குறைகளையும்
அறியக் கூடும்!
அரசினிலும் பங்கேற்க அதன்வழியாய்த் தொண்டாற்ற
ஆகும் யார்க்கும்!
அதிகாரம் மக்களளித்(து) அரியணையில் அமர்ந்திடுவோர்
அச்சம் இன்றி
அதிர்தலுற செயற்படுவீர்! ஆட்சிமொழி தமிழென்றே
அறுத்துச் சொல்வீர்!
மதியாதார் ஒதுக்கிதமிழ் மக்களுக்கு விளங்குவகை
மாண்பில் ஆள்வீர்!
புதியமொழி குழப்பமற பொருத்தமுற மக்களுக்குப்
புரியும் அன்றோ?
அலுவலகப் பணியாளர் ஆசிரியர் மற்றவரும்
அவர்கை யொப்பம்
பொலிதலுறத் தாய்மொழியில் பொறித்திடுவீர்! மக்களுக்குப்
புரியும் வண்ணம்
சலியாதே தந்திடுவீர் தமிழினிலே உம்விடையைச்
சட்ட திட்டம்
புலனாகும்! அவருணர்ந்தே போயடுத்த பணிபார்ப்பார்
பொல்லாப் பில்லை!
அலுவலக நடைமுறைகள் அரசாணை தமிழினிலே
அளிக்க வேண்டும்!
மலியமிகக் கணிப்பொறிகள் மாத்தமிழில் மென்பொருள்கள்
மன்ற வேண்டும்!
நலிவில்லாத் தொடர்புமொழி நற்றமிழே எனுமுறுதி
நாளும் வேண்டும்!
வலிவோடே இவைசெய்தால் வண்டமிழிங் காட்சிசெயும்
வாழ்வும் ஓங்கும்!
---------------
அறுசீர்மண்டிலப் பதிகம்)
பெருமதிப்புக் குரியோரே! பேரன்பீர்! தலைமையமர்
பெரும்பா வாண!
அருந்தமிழ்ப்பா யாத்தளிக்கும் ஆற்றல்சால் பாவலரே!
அன்பு நண்பீர்!
இருளகற்றும் அறிஞர்களே! இன்னன்புத் தாய்மாரே!
இளமை யோரே!
தெருளார்ந்த தமிழ்வணக்கம் தெரிவித்தேன் எல்லோர்க்கும்
தெளிந்த அன்பால்!
விழுப்புரத்தில் மருதவிழா! விருப்பூட்டும் இனியவிழா!
விளக்க மாக
செழுமரபுக் கலைகளெலாம் சீருறவே தொகுத்தளிக்கும்
சிறப்பு மிக்க
எழுச்சிமிகு சுறவவிழா! எல்லாரும் மகிழ்கின்ற
இவ்வி ழாவின்
கெழுவலுறு பாட்டரங்கில் கிழமையிழந் தேங்குதமிழ்
கிளத்த வந்தேன்!
மேலாண்மை செய்மொழியாய் மேற்குலக மொழியின்னும்
மேலி ருக்க
ஏலாத மொழியிங்கே எமையாள ஏற்றமிகும்
எம்த மிழ்த்தாய்க்(கு)
ஆலாத்தி எடுத்ததன்பின் அங்கோர்மூ லைதொலைப்பார்
அதையு ணர்ந்தால்
மேலான இந்தஇனம் மீத்தாழ்ச்சி உற்றகதை
மிகவி ளங்கும்!
வரப்பகலந் தொடர்பாக வழக்கொன்று நம்சிற்றூர்
வடிவே லுக்கும்
பரப்புகுறை நிலமுடைய பச்சையப்பன் இருவருக்கும்
பட்ட ணத்தில்
உரத்தகுரல் வழக்கறிஞர் உகைத்தெழுந்தே ஆங்கிலத்தில்
உரைசெய் கின்றார்!
கரப்பின்றிக் கூறின்இவர் கவலைமிகப் புரியாமல்
கலங்கி நிற்பார்!
சிற்றூரில் வாழ்கின்ற சின்னத்தாய் மனைஉரிமை
சிறுகு டிற்குக்
கொற்றத்தார் அலுவலகம் கொடுத்தவிடை ஆங்கிலத்தில்!
கூறும் செய்தி
கற்றறியாச் சின்னத்தாய் கலங்கிடுவாள் புரியாமல்!
காணீர் ஈதே
உற்றநிலை! தமிழிலதை உரைத்திருந்தால் சின்னத்தாய்
உணர்வாள் அன்றோ?
ஆண்டைம்பைத் தொன்றாயிற்(று) ஆட்சிமொழி சட்டமினும்
ஆழத் தூங்கும்!
மாண்தமிழில் எழுதாது மக்களுக்குப் புரியாத
மயக்க மூட்டும்
வேண்டாத மொழியினிலே விடைதருவார்! அரசாணை
விடுப்ப தெல்லாம்
ஈண்டெமக்கு விளங்காத இன்னொருவர் மொழியிலெனில்
இதுவா ஞாயம்?
அரசாணை நூற்றுக்கும் அதிகமுண்டு! தேவையெலாம்
அவற்றை மெய்யாய்
அரசுநடை முறைப்படுத்தல்! ஆட்சிதமிழ் வழிநடந்தால்
அதனால் மக்கள்
அரசாளும் முறைபுரிந்தே அதன்நிறைகள் குறைகளையும்
அறியக் கூடும்!
அரசினிலும் பங்கேற்க அதன்வழியாய்த் தொண்டாற்ற
ஆகும் யார்க்கும்!
அதிகாரம் மக்களளித்(து) அரியணையில் அமர்ந்திடுவோர்
அச்சம் இன்றி
அதிர்தலுற செயற்படுவீர்! ஆட்சிமொழி தமிழென்றே
அறுத்துச் சொல்வீர்!
மதியாதார் ஒதுக்கிதமிழ் மக்களுக்கு விளங்குவகை
மாண்பில் ஆள்வீர்!
புதியமொழி குழப்பமற பொருத்தமுற மக்களுக்குப்
புரியும் அன்றோ?
அலுவலகப் பணியாளர் ஆசிரியர் மற்றவரும்
அவர்கை யொப்பம்
பொலிதலுறத் தாய்மொழியில் பொறித்திடுவீர்! மக்களுக்குப்
புரியும் வண்ணம்
சலியாதே தந்திடுவீர் தமிழினிலே உம்விடையைச்
சட்ட திட்டம்
புலனாகும்! அவருணர்ந்தே போயடுத்த பணிபார்ப்பார்
பொல்லாப் பில்லை!
அலுவலக நடைமுறைகள் அரசாணை தமிழினிலே
அளிக்க வேண்டும்!
மலியமிகக் கணிப்பொறிகள் மாத்தமிழில் மென்பொருள்கள்
மன்ற வேண்டும்!
நலிவில்லாத் தொடர்புமொழி நற்றமிழே எனுமுறுதி
நாளும் வேண்டும்!
வலிவோடே இவைசெய்தால் வண்டமிழிங் காட்சிசெயும்
வாழ்வும் ஓங்கும்!
---------------
லேபிள்கள்:
ஆட்சிமொழி,
ஆட்சியில் தமிழ்,
மேலாண்மையில் தமிழ்
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
இன்முகத்தோடு உள்ளனராம்!
இனக்கொலையர் வெங்கொடுமை எல்லை மீற
_____இனியுமிதைப் பொறுப்பதுவோ என்றெ ழுந்த
மனக்கனலர் திரண்டறிவு ஆற்றல் வீரம்
_____மாசற்ற ஈகத்தால் மண்ணை மீட்டே
இனக்கொடியை ஈழத்தில் ஏற்றி ஆண்டார்!
_____எல்லாரும் நல்லாட்சி இதுவென் றாரே!
தனக்கெனவே வாழ்ந்திடுவார் தில்லி யோடு
_____தன்மானம் கெட்டுஓர்ஒப் பந்தம் போட்டார்!
சிங்களனை ஆளாக்கித் தில்லி யங்கே
_____செந்தமிழ இனந்தன்னைச் சிதைத்த ழிக்க
இங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை மாற்ற
_____ஏய்த்துநடித்(து) ஏமாற்றி எல்லாம் செய்தார்!
எங்குமிலாக் கொடுங்குண்டு வீசி அங்கே
_____எண்ணற்ற தமிழர்களைக் கொன்றார் இங்குப்
பொங்குணர்வில் பதின்மூவர் பொசுங்கிச் செத்த
_____போதுமதைப் பொருட்படுத்தாக் கொடுமை என்னே!
உயிரிருந்த மூன்றிலக்கம் பேரை அங்கே
_____ஒருசேர முள்வேலி அடைப்புக் குள்ளே
செயிர்உருவர் சிறைவைத்துச் சிதைக்கின் றாரே
_____சிந்தைமிக நொந்தவரும் சிறுகச் சாக!
அயிறற்கும் உணவில்லை அருந்த நீரும்
_____அழற்காயம் நோய்கட்கு` மருந்து மில்லை!
எயிலிருக்கும் கோட்டையிருந்(து) இரண்ட கத்தில்
_____இவருரைத்தார் இன்முகத்தோ(டு) இருப்ப தாக!
அடைத்துவைத்த கூடாரம் மிதந்த தங்கே
_____அடைமழையின் வெள்ளத்தில் அவர்ந னைந்தே
முடைநாற்ற நீரினிலே நின்ற வாறே
_____முன்னறியாத் துனபத்தில் மூழ்கிப் போனார்!
கடைகெட்ட தொலைக்காட்சி காட்டு மிங்கே
_____களிப்போடு பேசியமர்ந் திருப்ப தாக!
விடைசொல்லும் நாளொன்று வந்தே தீரும்!
_____விழிப்புவரும்! விடிவுவரும்! வீழ்வார் வஞ்சர்!
லேபிள்கள்:
இரண்டகர்,
ஈழம்,
எண்சீர் மண்டிலம்,
பா
திங்கள், 17 ஆகஸ்ட், 2009
பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர்!
தமிழ்ஈழம் என்று இக்காலத்தில் நாம் அழைக்கும் பகுதி, சிரீலங்கா என்று பெயர் மாற்றப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளாகக் குறிக்கப் படுகின்றது. இலங்கையின் மேற்குக் கரையிலும் மிக நெடுங்காலமாகவே தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். அங்குப் பிறந்த அரிய ஆற்றல் மிக்க அறிஞர் பன்மொழிப் புலவர் சய்மன் காசிச் செட்டி ஆவார்.
தமிழர் வாழ்ந்த மேற்குக்கரை :
மேற்குக்கரையில் அமைந்துள்ள முனீசுவரர் கோயிலும், அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளும், அங்கு வாழ்ந்த மூதாதையர் பயன்படுத்திய தமிழில் எழுதப்பட்ட காணி நிலங்களுக்கான உறுதிகளும் சான்றுகளாக உள்ளன.
மேலும் இலங்கையின் மேற்குக் கரையோரமாக உள்ள பெருநிலப்பரப்பில், சிலாபம், உடப்பு, கருக்குப்பனை, மங்கலவெளி, கட்டைக்காடு, நாவற்காடு, நுரைச்சோலை, புளிச்சாங்குளம், நரைக்களி, மாம்புரி, பாலாவி, முந்தல், பாலைக்குடா, குறிஞ்சிப்பிட்டி, கற்பிட்டி, புத்தளம், மருதங்குளம், பலகைத்துறை, முன்னைக்கரை, நஞ்சுண்டான் கரை, கண்டல் குடா, முதலிய பல இடங்கள் தூயதமிழ் மணக்கும் ஊர்களாக நிலவி வந்துள்ளன என்பதற்குப போதிய சான்றுகள் உள்ளன என்று திருவாளர்கள் க.சி.குலரத்தினமும், தமிழ்ஒளி க.செபரத்தினமும் குறிப்பிடுகிறார்கள்.
உலகச் செலவரான (world traveller) இபன்பற்றுற்றா என்பவர், 1344இல் இலங்கைக்கு வந்திருந்த போது, யாழ்ப்பாண அரசரான செகராச சேகரனை, புத்தளத்திலிருந்த அரண்மனை ஒன்றில் சந்தித்ததாக தம் நூலான ‘சாவர்நாமா’ வில் குறிப்பிட்டுள்ளதால், புத்தளம் பகுதி யாழ்ப்பாண அரசனின் ஆட்சியிலிருந்த தமிழ்ப்பகுதி என்பதை அறியலாம்.
பிறப்பும் கல்வியும் :
மேற்குக் கரையோரத்தில் பெரிய ஊராகவும் துறைமுகமாகவும் விளங்கியது கற்பிட்டி ஆகும். இவ்வூரில் 21-3-1807ஆம் ஆண்டில் காபிரியேல் என்பார்க்கும் மேரி என்பார்க்கும் பிறந்தவர் சய்மன் காசிச் செட்டி என்பவராவார். ‘செட்டி’ என்பது செட்டிமார் என்று அழைக்கப்பட்ட வணிகர் குலத்தைக் குறிக்கிறது.
சய்மன் காசி, கற்பிட்டியிலும், புத்தளம் கொழும்பு ஆகிய இடங்களிலும் கல்வி பயின்றார். தம் பதினேழாம் அகவைக்குள் தாய்மொழியாகிய தமிழுடன் சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றுப் புலமை பெற்றார். மேலும், சமற்கிருதம், ஒல்லாந்தம், போர்த்துக்கீசியம், இலத்தீனம், கிரேக்கம், எபிரேயம், அரபி, பாளி ஆகிய மொழிகளையும் தாமே கற்றுத் தேர்ந்து பன்மொழிப் புலவரானார்.
பணியாற்றிய பதவிகள் :
1824இல் கற்பிட்டி நயன்மன்ற மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்டார்.
1828இல் புத்தளம் சிலாபம் பகுதிகளுக்கான ‘மணியக்காரர்’ என்றழைக்கப்படும் ஊர்த் தலைமகனாகவும், 1833இல் அவர்தம் 27ஆம் அகவையில் மாவட்ட ‘முதலிய’ராகவும் அமர்த்தப்பட்டார். 1838இல் சய்மன் காசி, சட்டமன்ற உறுப்பினராக அமர்த்தம் பெற்றார். 1845இல் இலங்கை ஆட்சிப் பணியில் (Ceylon civil service) சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1848இல் மாவட்ட நயனகராக அமர்த்தப்பட்டார். மாவட்ட நயன்மன்ற நடுவராக இருந்த போதே 1860ஆம் ஆண்டில், தமது 53ஆம் அகவையில் காலமானார். மாவட்ட நயனகராக பதவியமர்த்தப் பட்ட முதல் இலங்கையர் இவரே ஆவார்.
ஆற்றிய அரிய பணிகள் :
காசியின் பணிகள், அவருடைய புதுமையான ஆற்றல்களைக் காட்டுவனவாக விளங்கின. அவர் வரலாற்றறிவைப் புலப்படுத்துவன வாகவும், தமிழ் இனம் குமுக உயர்வு பற்றியனவாகவும், தமிழ் இலக்கியம் தமிழ்ப்புலவர்கள் பற்றினவாகவும் சமய அடிப்படை கொண்டனவாகவும் இருந்தன.
உலக உருண்டையில் இலங்கைத் தீவு அமைந்துள்ள அகலாங்கு நெட்டாங்கு அளவுகள் பற்றி, அக்கால நிலவரைவியலர் வியக்கும் வகையில் எடுத்துக் கூறியவர் காசி. புதும அளவைக் கருவிகள் எவையுமின்றி, மேலைநாட்டு அறிஞர் வியக்கும் வகையில், இலங்கையின் நீளம், அகலம், சுற்றளவு, பரப்பு முதலியவற்றை முதலில் கூறியவரும் அவரே.
இலங்கையின் அனைத்து இன மக்களின் வரலாறு பற்றியும், ஊர்ப் பெயர்களின் வரலாறு பற்றியும் ஆய்ந்தெழுதினார். “சிலோன் கருப்பொருட் களஞ்சியம்” (Ceylon gazetteer) என்னும் பெயரோடு 1834 இல் இச்செய்திகள் வெளிவந்தன. இந்நூல், காசிக்குப் பெயரும் புகழும் பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் அரசு வெளியிட்ட அரசிதழுக்கும் பிற இதழ்களுக்கும் முன்னோடியாக இருந்தது.
வரலாற்று நூல்கள் :
கற்பிட்டிப் பகுதியில் கரையோரத்திலுள்ள ’குதிரைமலை’ என்னும் இடத்தின் தொன்மைச் சிறப்புகளை ஆய்ந்து எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொல் பழங்காலத்தில் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிய 1658ஆம் ஆண்டு வரையில் எழுதிய காசியின் நூல், பிற்கால வரலாற்று ஆசிரியர்களுக்குக் கைவிளக்காக உதவியது.
பரதவர் குல வரலாற்று நூலையும் காசி எழுதியுள்ளார். பல்வேறு நூல்களை ஆராய்ந்து இவர் எழுதிய ‘இலங்கை வரலாற்றுக் குறிப்பு’ என்னும் நூலின் மூலம் சிறந்த வரலாற்று ஆசிரியராகக் காசி மதிக்கப்பட்டார்.
ஆக்கிய அகராதிகள் :
தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக்கண்டறிந்து, அவற்றை நிரல்படுத்தி எழுதியிருக்கிறார். தமிழ் – வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்ப் புதலியல்(botany) அகராதி ஆகிய நூல்களை எழுதினார். தமிழ் நூல்களின் பட்டியல் ஒன்றை அகராதி அமைப்பில் உருவாக்கினார். தமிழ்ப் புலவர்கள் 202 பேரின் வரலாறு கூறும் நூலை, ‘தமிழ் புளூடாக்’ (Tamil Plutarch) என்ற பெயரில் எழுதினார்.
(பண்டை கிரேக்கத்தில் வாழ்ந்த 46 புலவர்களின் வரலாற்றை எழுதிய அறிஞர் புளூடாக்(Plutarch)கின் நூல், அவர் பெயரிலேயே ‘புளூடாக்’ என்று வழங்கப்பட்டது.)
மாலத்தீவு மொழியில் சிங்களமொழி கலந்துள்ளது பற்றி ஆராய்ந்தும், யாவாத்தீவின் மொழிக்கும் சமற்கிருத மொழிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்தும் சய்மன் காசி எழுதியிருக்கிறார்.
தமிழர் தொடர்பான நூல்கள் :
காசி எழுதிய தமிழ்ப்புலவர் வரலாறு கூறும் நூல், தெ.பொ.மீ., விபுலானந்த அடிகளார் ஆகியோரின் அணிந்துரையை ஏற்று 1946இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.
தமிழ்மொழியில் ஆக்கப்பட்டிருந்த நூல்களின் பட்டியலை அந்நூல்களின் பெயர், நூலாசிரியர் பெயர், நூல்கள் கூறும் பொருள், ஆக்கிய ஆண்டு முதலிய விளக்கங்களுடன் தொகுத்து 1848இல் வெளியிட்டார். இவ்வகையில் வெளிவந்த நூல்களில் இதுவே முதல் நூலாகும்.
சய்மன் காசி அவர்களுக்குப் புகழ் தந்த நூல் தமிழரின் சாதிப்பாகுபாடு, பழக்க வழக்கங்கள், குணவியல்புகள், இலக்கிய இலக்கண நூல்கள் தொடர்பானதாகும். மருத்துவக் கலாநிதி எசு.சிபோல் அவர்களின் பாராட்டு அணிந்துரையுடன் 1934இல் இந்நூல் வெளிவந்தது. இவரின் மற்றைய நூல்களைப் போலவே இந்நூலையும் காசி ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.
இந்நூல், தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ்மொழியின் பழமை, தமிழரின் உடைகள் அணிகலன்கள், நாகரிகச் சிறப்பு, உணவு வகைகள், மூத்தோரை மதிக்கும் பண்பு, பெண்கள் உயர்வாகப் போற்றப்படுதல், தமிழரின் திருமணச்சடங்கு முறைகள் மலையாள மொழி பற்றிய விளக்கம் முதலியவற்றைக் கூறுகிறது.
தமிழர்கள் 3300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் வாழந்து வருகின்றனர் என்றும் இந்நூல் விளக்குகிறது. 1833ஆம் ஆண்டுக்கு முற்பட்ட இலங்கை, மாநில மாவட்டப் பிரிவுச் சிக்கல்கள் இன்றி இருந்ததாகவும் அறிவிக்கிறது.
அறிஞர் சய்மன் காசி அவர்களுடைய நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் அந்தக் காலத்தின் தேவைக்கேற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த போதிலும்,
அவையனைத்திலும் தமிழ் உணர்வு இழையோடி இருப்பதனால், அவருடைய பணிகள் யாவும் தமிழ்த் தொண்டுகளாகவே கொள்ளப்படும் என்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.
காசி, தமிழில் ‘உதயாதித்தன் ’ என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை 1841இல் தொடங்கிச் சிறிது காலம் நடத்தியதும் அவரின் தமிழ்ப்பற்றைக் காட்டுவதாகும் எனபதும் அறிஞர்களின் மதிப்பீடாகும்.
பிற நூல்கள் :
காசி சமயஞ் சார்ந்த நூல்களையும் எழுதி இருக்கின்றார். திருக்கேணேசு வரத் திருக்கோயில் பற்றிய கவிராச வரோதயரின் பழைய தொன்மப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 1831இல் வெளியிட்டார். கடவுள்மா முனிவரின் ‘திருவாதவூரர் தொன்ம’த்தின் பகுதிகளையும் அல்லியரசாணி வரலாற்றையும் அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
முசுலிம்களின் ‘சீறாப் புராண’த்தை ஆய்வுசெய்து, “சீறாப் புராணத்தின் சிறப்பு” என்னும் நூலை எழுதினார். கத்தோலிக்கத் திருச்சவைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பற்றி எழுதியிருக்கின்றார். பிலிப்-டி-மெல்லோ, ஓசப் வாசு ஆகியோரின் வரலாறுகளையும் எழுதியிருக்கின்றார். மேலும், கிறித்தவ மறைதோன்றியத்தின் (வேதாகமம்) பழைய ஏற்பாட்டிலுள்ள ஆதித் தோன்றியம் பற்றிய ஒரு நூலையும் அவர் எழுதியுள்ளார்.
குமுகப் பணி :
சய்மன் காசி, தம் சொந்த ஊராகிய கற்பிட்டியில் ஐம்பது பிள்ளைகள் படிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அப்பள்ளியில் இலவயமாகக் கற்பிக்க ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
கற்பிட்டியில் அவரது சொந்தச் செலவில், திருச்சவை ஒன்றையும் கட்டிக் கொடுத்தார்.
பாராட்டுகள் :
மக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி நூலாக்கி வெளியிடும் காசியின் முயற்சியைப் பாராட்டி, சர் இராபர்ட்டு ஆட்டன், அவர் எழுதிய நூலின் பதிப்புச் செலவிற்கு 100கினி பணமும் அன்பளிப்பாகத் தந்தார். சர் சார்லசு மார்சல், சர் சான் வில்சன், எசு.சிபோல், சிலோன் அப்சர்வர் என்ற ஆங்கில ஏடு, ஆளுநர் மக்கன்சி ஆகியோரும் இவரைப் பாராட்டியுள்ளனர்.
விபுலானந்த அடிகளார், தெ.பொ.மீ., களத்தூர் வேதகிரியார், முனைவர் கால்டுவெல், தி.பி.எ.என்றி ஆராய்ச்சி, எப்.எக்சு.சி.நடராசா ஆகியோரும் சய்மன் காசியைப் பாராட்டியுள்ளனர்.
கற்பிட்டியில், காசியின் வீடு இருந்த தெரு, அவரைப் பெருமைப் படுத்தும் வகையில் ‘செட்டித்தெரு’ என்று அழைக்கப் படுவதாயிற்று. காசியின் புகழுரைக்கும் பாராட்டு வாசகமொன்று, புத்தளம் நயன்மன்றத்தில் 1983இல் பொறிக்கப்பட்டது. 1987இல் அவர் உருவப்படந் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
முடிவாக...
பதினேழே அகவையில் பதினொரு மொழிகளுக்கும் மேல் கற்றுப் பன்மொழிப் புலமை பெற்ற அறிவாற்றலராகத் திகழ்ந்தவர் சய்மன் காசி அவர்கள். அரசுப்பணிகளில் இருந்து கொண்டே, ஐம்பத்து மூன்று அகவைக்குள், பல்வேறு களப்பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்; ஏறத்தாழ ஐம்பதிற்கும் குறையாத நூல்களையும் நிறைய கட்டுரைகளையும் எழுதித் தந்துள்ளார்.
மாந்தநேயப் பற்றாளராகவும், குமுகப்பணியில் வல்லவராகவும் காசி திகழ்ந்திருக்கிறார். பல்துறை அறிஞராகவும் வினையாண்மை மிக்கவராகவும் விளங்கிய சய்மன் காசியின் வாழ்க்கை, இளையோர்க்கு அரிய செயல்களை ஆற்ற வழிகாட்டி ஊக்கும் என்பதில் ஐயமில்லை.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------
உசாத் துணை நன்றியுரைப்பு:
தமிழ் வலைக் கலைக் களஞ்சியம் (விக்கிபீடியா)
தமிழ்ப் பேரறிஞர் சைமன் காசிச் செட்டி வரலாறும் பணிகளும் –தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி.
ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் – தமிழ்ஒளி க.செபரத்தினம்.
kalaikesari.com.
துணை செய்தார்க்கு நெஞ்சார்ந்த நன்றி.
-------------------------------------------------------------------
தமிழர் வாழ்ந்த மேற்குக்கரை :
மேற்குக்கரையில் அமைந்துள்ள முனீசுவரர் கோயிலும், அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளும், அங்கு வாழ்ந்த மூதாதையர் பயன்படுத்திய தமிழில் எழுதப்பட்ட காணி நிலங்களுக்கான உறுதிகளும் சான்றுகளாக உள்ளன.
மேலும் இலங்கையின் மேற்குக் கரையோரமாக உள்ள பெருநிலப்பரப்பில், சிலாபம், உடப்பு, கருக்குப்பனை, மங்கலவெளி, கட்டைக்காடு, நாவற்காடு, நுரைச்சோலை, புளிச்சாங்குளம், நரைக்களி, மாம்புரி, பாலாவி, முந்தல், பாலைக்குடா, குறிஞ்சிப்பிட்டி, கற்பிட்டி, புத்தளம், மருதங்குளம், பலகைத்துறை, முன்னைக்கரை, நஞ்சுண்டான் கரை, கண்டல் குடா, முதலிய பல இடங்கள் தூயதமிழ் மணக்கும் ஊர்களாக நிலவி வந்துள்ளன என்பதற்குப போதிய சான்றுகள் உள்ளன என்று திருவாளர்கள் க.சி.குலரத்தினமும், தமிழ்ஒளி க.செபரத்தினமும் குறிப்பிடுகிறார்கள்.
உலகச் செலவரான (world traveller) இபன்பற்றுற்றா என்பவர், 1344இல் இலங்கைக்கு வந்திருந்த போது, யாழ்ப்பாண அரசரான செகராச சேகரனை, புத்தளத்திலிருந்த அரண்மனை ஒன்றில் சந்தித்ததாக தம் நூலான ‘சாவர்நாமா’ வில் குறிப்பிட்டுள்ளதால், புத்தளம் பகுதி யாழ்ப்பாண அரசனின் ஆட்சியிலிருந்த தமிழ்ப்பகுதி என்பதை அறியலாம்.
பிறப்பும் கல்வியும் :
மேற்குக் கரையோரத்தில் பெரிய ஊராகவும் துறைமுகமாகவும் விளங்கியது கற்பிட்டி ஆகும். இவ்வூரில் 21-3-1807ஆம் ஆண்டில் காபிரியேல் என்பார்க்கும் மேரி என்பார்க்கும் பிறந்தவர் சய்மன் காசிச் செட்டி என்பவராவார். ‘செட்டி’ என்பது செட்டிமார் என்று அழைக்கப்பட்ட வணிகர் குலத்தைக் குறிக்கிறது.
சய்மன் காசி, கற்பிட்டியிலும், புத்தளம் கொழும்பு ஆகிய இடங்களிலும் கல்வி பயின்றார். தம் பதினேழாம் அகவைக்குள் தாய்மொழியாகிய தமிழுடன் சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றுப் புலமை பெற்றார். மேலும், சமற்கிருதம், ஒல்லாந்தம், போர்த்துக்கீசியம், இலத்தீனம், கிரேக்கம், எபிரேயம், அரபி, பாளி ஆகிய மொழிகளையும் தாமே கற்றுத் தேர்ந்து பன்மொழிப் புலவரானார்.
பணியாற்றிய பதவிகள் :
1824இல் கற்பிட்டி நயன்மன்ற மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்டார்.
1828இல் புத்தளம் சிலாபம் பகுதிகளுக்கான ‘மணியக்காரர்’ என்றழைக்கப்படும் ஊர்த் தலைமகனாகவும், 1833இல் அவர்தம் 27ஆம் அகவையில் மாவட்ட ‘முதலிய’ராகவும் அமர்த்தப்பட்டார். 1838இல் சய்மன் காசி, சட்டமன்ற உறுப்பினராக அமர்த்தம் பெற்றார். 1845இல் இலங்கை ஆட்சிப் பணியில் (Ceylon civil service) சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1848இல் மாவட்ட நயனகராக அமர்த்தப்பட்டார். மாவட்ட நயன்மன்ற நடுவராக இருந்த போதே 1860ஆம் ஆண்டில், தமது 53ஆம் அகவையில் காலமானார். மாவட்ட நயனகராக பதவியமர்த்தப் பட்ட முதல் இலங்கையர் இவரே ஆவார்.
ஆற்றிய அரிய பணிகள் :
காசியின் பணிகள், அவருடைய புதுமையான ஆற்றல்களைக் காட்டுவனவாக விளங்கின. அவர் வரலாற்றறிவைப் புலப்படுத்துவன வாகவும், தமிழ் இனம் குமுக உயர்வு பற்றியனவாகவும், தமிழ் இலக்கியம் தமிழ்ப்புலவர்கள் பற்றினவாகவும் சமய அடிப்படை கொண்டனவாகவும் இருந்தன.
உலக உருண்டையில் இலங்கைத் தீவு அமைந்துள்ள அகலாங்கு நெட்டாங்கு அளவுகள் பற்றி, அக்கால நிலவரைவியலர் வியக்கும் வகையில் எடுத்துக் கூறியவர் காசி. புதும அளவைக் கருவிகள் எவையுமின்றி, மேலைநாட்டு அறிஞர் வியக்கும் வகையில், இலங்கையின் நீளம், அகலம், சுற்றளவு, பரப்பு முதலியவற்றை முதலில் கூறியவரும் அவரே.
இலங்கையின் அனைத்து இன மக்களின் வரலாறு பற்றியும், ஊர்ப் பெயர்களின் வரலாறு பற்றியும் ஆய்ந்தெழுதினார். “சிலோன் கருப்பொருட் களஞ்சியம்” (Ceylon gazetteer) என்னும் பெயரோடு 1834 இல் இச்செய்திகள் வெளிவந்தன. இந்நூல், காசிக்குப் பெயரும் புகழும் பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் அரசு வெளியிட்ட அரசிதழுக்கும் பிற இதழ்களுக்கும் முன்னோடியாக இருந்தது.
வரலாற்று நூல்கள் :
கற்பிட்டிப் பகுதியில் கரையோரத்திலுள்ள ’குதிரைமலை’ என்னும் இடத்தின் தொன்மைச் சிறப்புகளை ஆய்ந்து எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொல் பழங்காலத்தில் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிய 1658ஆம் ஆண்டு வரையில் எழுதிய காசியின் நூல், பிற்கால வரலாற்று ஆசிரியர்களுக்குக் கைவிளக்காக உதவியது.
பரதவர் குல வரலாற்று நூலையும் காசி எழுதியுள்ளார். பல்வேறு நூல்களை ஆராய்ந்து இவர் எழுதிய ‘இலங்கை வரலாற்றுக் குறிப்பு’ என்னும் நூலின் மூலம் சிறந்த வரலாற்று ஆசிரியராகக் காசி மதிக்கப்பட்டார்.
ஆக்கிய அகராதிகள் :
தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக்கண்டறிந்து, அவற்றை நிரல்படுத்தி எழுதியிருக்கிறார். தமிழ் – வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்ப் புதலியல்(botany) அகராதி ஆகிய நூல்களை எழுதினார். தமிழ் நூல்களின் பட்டியல் ஒன்றை அகராதி அமைப்பில் உருவாக்கினார். தமிழ்ப் புலவர்கள் 202 பேரின் வரலாறு கூறும் நூலை, ‘தமிழ் புளூடாக்’ (Tamil Plutarch) என்ற பெயரில் எழுதினார்.
(பண்டை கிரேக்கத்தில் வாழ்ந்த 46 புலவர்களின் வரலாற்றை எழுதிய அறிஞர் புளூடாக்(Plutarch)கின் நூல், அவர் பெயரிலேயே ‘புளூடாக்’ என்று வழங்கப்பட்டது.)
மாலத்தீவு மொழியில் சிங்களமொழி கலந்துள்ளது பற்றி ஆராய்ந்தும், யாவாத்தீவின் மொழிக்கும் சமற்கிருத மொழிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்தும் சய்மன் காசி எழுதியிருக்கிறார்.
தமிழர் தொடர்பான நூல்கள் :
காசி எழுதிய தமிழ்ப்புலவர் வரலாறு கூறும் நூல், தெ.பொ.மீ., விபுலானந்த அடிகளார் ஆகியோரின் அணிந்துரையை ஏற்று 1946இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.
தமிழ்மொழியில் ஆக்கப்பட்டிருந்த நூல்களின் பட்டியலை அந்நூல்களின் பெயர், நூலாசிரியர் பெயர், நூல்கள் கூறும் பொருள், ஆக்கிய ஆண்டு முதலிய விளக்கங்களுடன் தொகுத்து 1848இல் வெளியிட்டார். இவ்வகையில் வெளிவந்த நூல்களில் இதுவே முதல் நூலாகும்.
சய்மன் காசி அவர்களுக்குப் புகழ் தந்த நூல் தமிழரின் சாதிப்பாகுபாடு, பழக்க வழக்கங்கள், குணவியல்புகள், இலக்கிய இலக்கண நூல்கள் தொடர்பானதாகும். மருத்துவக் கலாநிதி எசு.சிபோல் அவர்களின் பாராட்டு அணிந்துரையுடன் 1934இல் இந்நூல் வெளிவந்தது. இவரின் மற்றைய நூல்களைப் போலவே இந்நூலையும் காசி ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.
இந்நூல், தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ்மொழியின் பழமை, தமிழரின் உடைகள் அணிகலன்கள், நாகரிகச் சிறப்பு, உணவு வகைகள், மூத்தோரை மதிக்கும் பண்பு, பெண்கள் உயர்வாகப் போற்றப்படுதல், தமிழரின் திருமணச்சடங்கு முறைகள் மலையாள மொழி பற்றிய விளக்கம் முதலியவற்றைக் கூறுகிறது.
தமிழர்கள் 3300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் வாழந்து வருகின்றனர் என்றும் இந்நூல் விளக்குகிறது. 1833ஆம் ஆண்டுக்கு முற்பட்ட இலங்கை, மாநில மாவட்டப் பிரிவுச் சிக்கல்கள் இன்றி இருந்ததாகவும் அறிவிக்கிறது.
அறிஞர் சய்மன் காசி அவர்களுடைய நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் அந்தக் காலத்தின் தேவைக்கேற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த போதிலும்,
அவையனைத்திலும் தமிழ் உணர்வு இழையோடி இருப்பதனால், அவருடைய பணிகள் யாவும் தமிழ்த் தொண்டுகளாகவே கொள்ளப்படும் என்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.
காசி, தமிழில் ‘உதயாதித்தன் ’ என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை 1841இல் தொடங்கிச் சிறிது காலம் நடத்தியதும் அவரின் தமிழ்ப்பற்றைக் காட்டுவதாகும் எனபதும் அறிஞர்களின் மதிப்பீடாகும்.
பிற நூல்கள் :
காசி சமயஞ் சார்ந்த நூல்களையும் எழுதி இருக்கின்றார். திருக்கேணேசு வரத் திருக்கோயில் பற்றிய கவிராச வரோதயரின் பழைய தொன்மப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 1831இல் வெளியிட்டார். கடவுள்மா முனிவரின் ‘திருவாதவூரர் தொன்ம’த்தின் பகுதிகளையும் அல்லியரசாணி வரலாற்றையும் அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
முசுலிம்களின் ‘சீறாப் புராண’த்தை ஆய்வுசெய்து, “சீறாப் புராணத்தின் சிறப்பு” என்னும் நூலை எழுதினார். கத்தோலிக்கத் திருச்சவைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பற்றி எழுதியிருக்கின்றார். பிலிப்-டி-மெல்லோ, ஓசப் வாசு ஆகியோரின் வரலாறுகளையும் எழுதியிருக்கின்றார். மேலும், கிறித்தவ மறைதோன்றியத்தின் (வேதாகமம்) பழைய ஏற்பாட்டிலுள்ள ஆதித் தோன்றியம் பற்றிய ஒரு நூலையும் அவர் எழுதியுள்ளார்.
குமுகப் பணி :
சய்மன் காசி, தம் சொந்த ஊராகிய கற்பிட்டியில் ஐம்பது பிள்ளைகள் படிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அப்பள்ளியில் இலவயமாகக் கற்பிக்க ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
கற்பிட்டியில் அவரது சொந்தச் செலவில், திருச்சவை ஒன்றையும் கட்டிக் கொடுத்தார்.
பாராட்டுகள் :
மக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி நூலாக்கி வெளியிடும் காசியின் முயற்சியைப் பாராட்டி, சர் இராபர்ட்டு ஆட்டன், அவர் எழுதிய நூலின் பதிப்புச் செலவிற்கு 100கினி பணமும் அன்பளிப்பாகத் தந்தார். சர் சார்லசு மார்சல், சர் சான் வில்சன், எசு.சிபோல், சிலோன் அப்சர்வர் என்ற ஆங்கில ஏடு, ஆளுநர் மக்கன்சி ஆகியோரும் இவரைப் பாராட்டியுள்ளனர்.
விபுலானந்த அடிகளார், தெ.பொ.மீ., களத்தூர் வேதகிரியார், முனைவர் கால்டுவெல், தி.பி.எ.என்றி ஆராய்ச்சி, எப்.எக்சு.சி.நடராசா ஆகியோரும் சய்மன் காசியைப் பாராட்டியுள்ளனர்.
கற்பிட்டியில், காசியின் வீடு இருந்த தெரு, அவரைப் பெருமைப் படுத்தும் வகையில் ‘செட்டித்தெரு’ என்று அழைக்கப் படுவதாயிற்று. காசியின் புகழுரைக்கும் பாராட்டு வாசகமொன்று, புத்தளம் நயன்மன்றத்தில் 1983இல் பொறிக்கப்பட்டது. 1987இல் அவர் உருவப்படந் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
முடிவாக...
பதினேழே அகவையில் பதினொரு மொழிகளுக்கும் மேல் கற்றுப் பன்மொழிப் புலமை பெற்ற அறிவாற்றலராகத் திகழ்ந்தவர் சய்மன் காசி அவர்கள். அரசுப்பணிகளில் இருந்து கொண்டே, ஐம்பத்து மூன்று அகவைக்குள், பல்வேறு களப்பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்; ஏறத்தாழ ஐம்பதிற்கும் குறையாத நூல்களையும் நிறைய கட்டுரைகளையும் எழுதித் தந்துள்ளார்.
மாந்தநேயப் பற்றாளராகவும், குமுகப்பணியில் வல்லவராகவும் காசி திகழ்ந்திருக்கிறார். பல்துறை அறிஞராகவும் வினையாண்மை மிக்கவராகவும் விளங்கிய சய்மன் காசியின் வாழ்க்கை, இளையோர்க்கு அரிய செயல்களை ஆற்ற வழிகாட்டி ஊக்கும் என்பதில் ஐயமில்லை.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------
உசாத் துணை நன்றியுரைப்பு:
தமிழ் வலைக் கலைக் களஞ்சியம் (விக்கிபீடியா)
தமிழ்ப் பேரறிஞர் சைமன் காசிச் செட்டி வரலாறும் பணிகளும் –தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி.
ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் – தமிழ்ஒளி க.செபரத்தினம்.
kalaikesari.com.
துணை செய்தார்க்கு நெஞ்சார்ந்த நன்றி.
-------------------------------------------------------------------
லேபிள்கள்:
ஈழத்தமிழறிஞர்,
சய்மன் காசிச் செட்டி
திங்கள், 10 ஆகஸ்ட், 2009
நா.பார்த்தசாரதியின் "மொழியின் வழியே"
தமிழ் வாசகர்களால் புதின ஆசிரியராகப் பரவலாக அறியப்பட்டவர் நா.பார்த்தசாரதி. தமிழ்த் தாளிகை உலகில் 1960, 70ஆம் ஆண்டுகளில் முதன்மையான புதின எழுத்தாளராகத் திகழ்ந்தவர் இவர். தமிழ் படித்துத் தமிழாசிரியராக வேலை செய்தவர்!
‘கல்கி’ இதழின் துணையாசிரியராகப் பணி செய்தவர். ‘தீபம்’ என்ற இதழைத் தொடங்கி, விடாமுயற்சியுடன் 23 ஆண்டுகள் நடத்தியவர். ‘தினமணிக் கதிர்’ ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.
நா.பா., ஏறத்தாழ பதினைந்து புதினங்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள், குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம், சமுதாய வீதியிலே போன்றவை பலராலும் விரும்பிப் படிக்கப்பட்ட புதினங்கள் எனலாம். புதினங்கள் மட்டுமின்றிக் கட்டுரை நாடகம் பாடல்களும் கூட இவர் எழுதியிருந்தாலும், புதின ஆசிரியராகவே பரவலாக அறியப்பட்டுப் பெயர் பெற்றார்.
மொழியின் வழியே
“மொழியின் வழியே’ என்ற தலைப்பைக் கொண்ட இவருடைய கட்டுரை நூல், 1961இல் முதற் பதிப்பாகவும் 2002இல் இரண்டாம் பதிப்பாகவம் வந்தது. 144 பக்கங்களைக் கொண்ட இந்நூல், நம் தாய்மொழியாகிய தமிழ் தொடர்பான பல்வேறு கூறுகளைக் கூறும் 21 தலைப்புகளில் எழுதப்பெற்ற கட்டுரைகளைக் கொண்டதாகும்.
கட்டுரை நூலாகையால் இது பரவலாக அறியப்படவில்லை. இந்நூலில் காணப்படும் சில கருத்துக்கள், புதின ஆசிரியராக இவரைப் படித்தவர்களுக்கு வியப்பளிக்கக் கூடியவையாக இருக்கக் கூடும்!
இந்நூலில் பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை நா.பா. கூறியுள்ளார். தலைப்புகளையும் அத் தலைப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும் மிகச் சுருக்கமாகக் கீழே காண்போம்.
மொழியும் பண்பாடும்
மரபும் இலக்கணமும் தூய்மைக்கும், வழக்கும் இலக்கியமும் பண்பாட்டிற்கும் காரணமாக நிற்கின்றன. காற்றையும் நீரையும் பெற்று வளர்ந்து கிளைத்து வளமடைந்த பழுமரம் ஒன்றிற் கனியும் கனியைப்போல, மரபையும் இலக்கணத்தையும் போற்றி ஒழுகும் மொழியில் பண்பாடு கனியும்.
மொழியின் நிலைத்த வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் மக்கள் வழக்கு இன்றியமையாதது ஆவது போலவே அதன் தூய்மைக்கும் பண்பாட்டிற்கும் மரபு, இலக்கணம், பழவழக்கு, இலக்கியம் ஆகியவை இன்றியமையாதவை ஆகின்றன.
சான்றோர் மொழி ஆளுகைகளை மூலமாகக் கொண்டே மொழியின் பண்பாடும் உருப்பெறுகின்றது.
மொழியின் முன்னேற்றம்
பழமையும் பண்பாடும் பொருந்திய எந்த மொழியும் தனது மரபிலிருந்து விலகியபின் முன்னேற இயலாது. மரபுடன் கைகோத்து நடவாத மொழி தனது கட்டுக்குலைந்து சீரழிவது ஒருதலை.
பண்பட்ட இலக்கியமொழி -செம்மொழி- களுங்கூட மரபைப் போற்றியே வாழவேண்டும். காலத்திற்கு ஒவ்வாத சில வரையறைகளைக் காலத்திற் கேற்பச் சீர்திருத்திக் கொள்வது தவறன்று. அதுவும் மொழிவல்லுநர் துணையின்றிச் செய்யப்படுமானால் தவறுதான்.
ஒரு மொழி முன்னேற வேண்டுமானால், மொழியை ஆர்வத்தோடு பேணுகின்ற பெருமக்கள் மிகுதியாக இருக்கின்ற நாடாக அம்மொழி பயிலும் நாடு இருக்க வேண்டும். அது வளர்ச்சிக்கு முதற் காரணம்.
“மொழியை எழுதுவதிலும் பேசுவதிலும் மிகுதியான கவனம் கொள்ள வேண்டும். முழுமுதலாகிய இறைவனிடம் பக்தி செலுத்துவது போல் மொழியின் மேல் பயபக்தி ஏற்படவேண்டும். கடவுளைப்போல் முதன்மை வாய்ந்தது ஆகும் மொழி.
மொழியுணர்ச்சியற்ற மக்கள் வாழ்கின்ற நாடு நாகரிகத்திலோ, அறிவு வளர்ச்சியிலோ பண்படவே முடியாது. மொழிப் பற்ற்றின்றி விழிப்பற்றுக் கிடக்கும் மக்கள் விலங்குகளினும் இழிந்தவர். தாய்மொழியை ஏற்றமுறவும் முன்னேற்றவும் மறந்துவிடுகின்ற சமுதாயம் வாழத் தகுதியற்றது.
பிழையற எழுதுதல், பிழையறப் பேசுதல், மரபு குலையாது நூலியற்றல், தான்தோன்றிகளாகாது, ஆன்றோர் சென்ற நெறியைப் பாதுகாத்தல், புதிய முறையைப் பழைய முறைக்குக் கேடின்றி ஏற்றுக் கொள்ளுதல் முதலிய செயல்களாலல்லவா ஒரு மொழி முன்னேற முடியும்?”
எந்த ஒரு மொழியும் அரசியலோடு இசையாதவரை தனித்து முன்னேற முடியாது.
மொழியும் வரலாறும்
போர் பூசல்களையும் அரசாட்சிக்கு இருவேறு வேந்தர் போட்டி யிடுதலையும் ஒழுக்க வரையறை கடந்த அரசியற் சூழ்ச்சிகளையுமே பெரும்பாலும் உலக வரலாறுகள் பரக்க விரித்துப் பேசுகின்றன.
தமிழகத்து வரலாற்றில் இவற்றிற்கு ஒரு சிறிதும் இடமில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், இவை மிகக் குறைவான அளவிலும், ஒழுக்கத்தையும் அறவுணர்ச்சியையும் வற்புறுத்தும் உண்மைகள் நிறைந்த அளவிலும், தமிழகத்து வரலாற்றில் விளங்கும்.
ஒழுக்கமும், அறமும், அவையிரண்டுங் கலந்த பண்பாடும் உலகின் எந்த வரலாற்றிலும் இவ்வளவு கலந்ததுங் கூட இல்லை. போரிலும் கூட, வடக்கிருந்து மானம் காக்க உயிர்விடும் அரசர்களையும், பகைவன் கை நீர் பருக நாணி உயிர் துறந்த கணைக்கால் இரும்பொறைகளையுமே நாம் காண்கிறோம்.
கால முற்பாடு பிற்பாட்டிற்குரிய அடையாளமாக, அடிமை முத்திரையான கி.மு – கி.பி.யைத் தவிர்த்து தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) என்றும் தொ.மு. (தொல்காப்பியருக்கு முன்) தொ.பி. (தொல்காப்பியருக்குப் பின்) என்று எழுதினால் என்ன?
மொழியும் கற்பிக்கையும் (போதனையும்)
தமிழுக்கு கல்வி மொழித் தகுதி இல்லை என்றும் அதை உண்டாக்குவதும் அருமை என்றும் கூறுவது அறியாமையால் நேரும் பிழைபட்ட முடிவு; பொருந்தாத துணிவு; இந்த முடிவால் தமிழ் உள்ளம் குமுறாமல் இருக்க முடியாது.
(இந்த வகையில் பாரதியாரின் தமிழ் உள்ளம் குமுறியதாக அவரின் “சொல்லவுங் கூடுவதில்லை அவை....” என்ற பாரதியின் பாடலை எடுத்துக் காட்டி எழுதுகிறார்)
தமிழில் கலைகளைக் கற்பிக்கலாம்; கலைச் சொற்கள் உள்ளன; இன்றியமையா நிலையில் கலைச் சொற்களை உண்டாக்கிக் கொள்ளலாம். தமிழ் மொழியைப் போல எல்லாக் கலைகளுக்கும் இடங்கொடுக்கும் பரந்த இயல்புடைய மொழி மற்றொன்று காண்பதரிது.
மொழியும்இசையும்
இசைக் கலையைப் பகுதி பகுதியாகப் பிரித்து நுண்ணிதாக ஆராய்ந்து இவை குணம், இவை குற்றம், இவை இலக்கணம், இவை வழு என அக் கலைக்கு நிலையான வரையறைகள் கண்ட பெருந்திறன் பழந் தமிழர்க்கு இருந்துள்ளது.
(இசை மரபு என்னும் பழந்தமிழ் இசைநூல் குறித்தும் உள்ளாளப் பாடல் முறை குறித்தும் விளக்குகிறார்)
மொழியும்பாட்டும்
பாட்டைச் சுவைக்கிறவர்கள் பண்பட்டு உயரவேண்டும் என்பதைப் பாடுகின்றவன் நோக்கமாகக் கொள்ளவேண்டும். உலகின் உயர்நிலை இழிநிலைக் காட்சிகளை மற்றவர்கள் காணாத ஒரு புதிய நோக்குடன் கண்டு தனக்கே உரிய சிந்தனைக் கலவையோடு அணிசெய்து படிப்போர்க்குக் கவர்ச்சி நிறைந்து தோன்றும்படி கூறும் தகுதி வாய்ந்தவன் எவனோ, அவன் பாட வேண்டும்.
(தொல்காப்பியம் கூறும் “பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல்...” என்ற பாட்டிலக்கண மரபை எடுத்துக்காட்டுகிறார்)
பொது(சாதாரண) நடையில் பொது(சாதாரண)க் கருத்தை உரைபோலச் சொல்லுகின்ற ஒருவகைப் பாட்டு மேல்புலத்தார் வழக்கில் உண்டு. இக் காலத்தில் தமிழ் வழக்கிலும் அது பரவி வருகிறது. நடைச் செய்யுள் என்பர் அதனை. உயரிய பொருட்பாடு அமையாவிட்டால் இவ்வகைச் செய்யுள்களும் பயனற்றவையே எனகிறார்.
(மொழியும் செவிப்பயனும் என்ற கட்டுரையில் கேள்விச்செல்வம் குறித்து திருக்குறளை எடுத்துக்காட்டி விளக்குகிறார்.)
மொழியும் மரபும்
அறிபுலனுக்கும் நுகர்புலனுக்கும் அவை பிறக்கும் மனத்திற்கும் ஆகிய இம் மூன்றோடும் தொடர்புபடும் இலக்கியம், மரபை விலக்கிய முறையிலே தோற்றுவிக்கப் படுமானால் சமுதாயத்தோடு இயைபு இழப்பது உறுதி. இலக்கியங்களைச் சமூகத்தோடு இணைக்கும் பொறுப்புடையதே மரபு.
(மரபு வழுக்களையும் வழுவமைதிபற்றியும் விளக்குகிறார்.)
பாட்டு, உரை, எழுத்து, பேச்சு ஆகிய எல்லாத் துறைகளிலும் மரபை எதிர்ப்பது, மீறுவது என்பது ஒரு பொழுது போக்கு விளையாட்டாகி விட்டது இப்போது. மரபின் சிதைவு மொழியையும் சிதைக்கத் தொடங்காது என்பதற்கு என்ன உறுதி?
(மொழியும் ‘மனத்தத்துவமும்’ என்ற தலைப்பில் ‘அப்பனைப் போல் மகன்’ என்ற கூற்றைச் சரியென்று நிறுவ முயலும் நா.பா.வின் முயற்சி இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலையில் ஏற்றுக் கொள்ளுமாறு இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.
இரண்டு மணிமொழிகள் கட்டுரையில் இரு குறள்களின் சிறப்பை விளக்குகிறார்.
மொழியில் ஒப்புநயம் என்ற கட்டுரையில் திருக்குறளில் ஒரே உவமை, ஒன்றில் ‘நிலையாத தொடர்பின்மை’யையும் மற்றொன்றில் நிலைத்த தொடர்பையும் பொதுத் தன்மைகளாகப் பொருத்திக் கூறப்பட்டிருக்கும் நயத்திற்காக வள்ளுவரைப் பாராட்டுகிறார்.
தென்னிந்திய மொழிகள், மொழியும் நாடகமும் கட்டுரைகளில் தலைப்புக் கொத்த பல செய்திகளைக் கூறுகிறார்.)
மொழியும் சிறுகதைகளும்
எழுத்தாளர்களே! இன்றைய வளர்ச்சியின் வேகத்தில் உங்களுக்கிருக்கும் பொறுப்பைத் தவற விட்டுவிடாதீர்கள். தமிழ் மரபும், தமிழ்ப் பண்பும், தமிழ் மக்கள் இனமும் என்றும் எதற்காகவும் பொறுப்பின்மைக்குத் தொடர்ந்து ஆதரவளித்தது இல்லை.
(மொழியும் புதின வளர்ச்சியும் கட்டுரையில், தமிழ்ப் புதின வரலாற்றை வளர்ச்சியைக் கூறுகின்றார்.)
தாளிகை(பத்திரிகை)களும் மொழிநடையும்
நாளிதழிலிருந்து மாத இதழ்கள் வரை பெரும்பாலானவற்றின் மொழி நடையில் காணும் பிழைகளைக் களைய வேண்டும். சந்திப் பிழையும், மரபுப் பிழையும், பொருட் பிழையும் மலியப் பெரும்பாலான பிறமொழிச் சொற்களைக் கலந்து ஆசிரியருரை எழுதுவதும் தவறாக மொழி பெயர்ப்பதும் அச்சுக்கோப்பில் தவறு செய்வதும் இதழின் மொழிநடையைக் கெடுக்கும்.
கொச்சை மொழி, அயற்சொல் பயன்பாட்டிற்கு வரம்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒழுங்கும், மரபும், இலக்கணமும் இல்லாத மொழிநடையில் கருத்துக்கள் தங்குமா? தங்கத்தான் முடியுமா?
மொழியைப் பாதுகாக்க முடியாவிட்டாலும் அதன் தூய்மையைக் கெடுத்துக் கறைப்படுத்தும் ‘பணி’யை அல்லது பழியை நீங்கள் செய்ய வேண்டாம்.
மொழியும் உரைநடையும்
சொற்களின் வகையும் பொருள்நிலையும் தெரிந்து பயன்படுத்த வேண்டும். மொழியை எளிமையாகவும், தூய்மையாகவும், தெளிவாகவும் பயன்படுத்துகிறவர்களைப் போற்ற வேண்டும்.
பல பேர்கள் சேர்ந்து ஒரு பிழையைச் செய்துவிட்டு அதையே மரபாக்கிவிடும் தன்னலத்தை இன்று எங்கும் காண்கிறோம்.
தப்புத் தப்பாக யாப்பும் கோப்புமின்றி ஆயிரம் ‘கவிதைகள்’ எழுத முயல்வதைக் காட்டிலும் எளிமையும் தூய்மையும் தனித்தன்மையும் இலங்க நான்கு ‘வாக்கியங்கள்’ நன்றாகவும் அழகாகவும் எழுதிவிடுவது எவ்வளவோ சிறந்தது. பிழையில்லாமல் தெளிவாக எழுதுவதே ஓர் அறம்
தெளிவுக்குச் சுருக்கம் தேவை. சுருக்கத்தில் அழகு அதிகம். தெளிவும் சுருக்கமும் இருந்தால் முறையும் இருக்கும்.
(மொழியும் சுவையும் கட்டுரையில், நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எண்வகை மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் வரிசைப் படுத்தியமைக்குக் காரணங்களை விளக்குகிறார்.
ஏனைச்சுவைகளுக் குள்ளது போல, சமனிலைச் சுவைக்கு மெய்யின் கண் நிகழும் வேறுபாடு இன்மையின் ஆசிரியர் தொல்காப்பியர் அதனைக் கூறாராயினர் என்னும் பேராசிரியர் கருத்தை எடுத்துக் காட்டுகிறார்.
மொழியும் புதிய விளைவுகளும் கட்டுரையில், பிறமொழிப் பயிற்சி காரணமாகத் தமிழ் மொழி மரபுக்கு ஏலாத சொல்லிய அமைப்புகளை எடுத்துக் காட்டுகிறார். இடம் போட்டு வைத்தல், பங்கெடுத்துக்கொள்ளல், முயற்சிக்கிறேன், ஒருநூறு, மோசமானவராக இருக்கிறீர்கள் போன்ற தவறான ஆட்சிகளை விளக்குகிறார்.
இருமொழி இணைந்து பிரியாது ஒரு தொடராய் நிற்கும் பிறமொழிச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவது நல்லதாகாது என்கிறார். “தமிழ் புதிய வளர்ச்சியைப் பெறுவதற்குப் பழமையின் ஆசியும் அறிவுரையும் வேண்டும். புதுமையின் உழைப்பும் வேண்டும்” என்று கூறுகிறார்.)
மொழியும் பொறுப்புணர்ச்சியும்
இலக்கியத்தில் படைப்போர் படிப்பொர் ஆகிய இருபாலார்க்கும் பொறுப்புணர்ச்சி குன்றும் போது தம் நிலையினின்று தாழ்கின்றனர். பொலிவு குன்றுகின்றனர். பண்பிழக்கின்றனர்.
யார் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்தல் தவறு. உரையாடலாகப் பேசும் பேச்சிலும், சொற் பொழிவிலும் செய்யப்படும் தவறுகள் காற்றோடு போய்விடும்.
எழுத்தில் செய்யப்படும் பிழைகளோ செய்தவரின் பொறுப்பின்மைக்கு நிலைத்த சான்றாக என்றும் இருந்துவிடக்கூடியவை.
மொழியும் அறநூல்களும்
நல்லவற்றை விரும்பவும் தீயவற்றை வெறுக்கவும் கற்றுக் கொடுத்த பண்பை நமக்கு அளித்தது எது? இந்த நாளிலும் கூட நமக்கு அறத்திலும் ஒழுக்கத்திலும் நம்பிக்கை பய்விடவில்லையே! இதற்குக் காரணம் நமது பழமையான அறநூல்களே எனபதில் ஐயமில்லை.
அறநூல்கள் விதை நெல்லைப் போன்றவை. வாழ்வை ஒழுங்குப் படுத்தும் உண்மைகளை நாம் அவற்றிலிருந்துதான் பயிர் செய்து வளர்க்க வேண்டும். சமய நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள், காவியங்கள் என்ற மற்றைய துறைகள் எல்லாம் அறநூல்கள் என்ற விதை நெல்லிலிருந்து பயிர் செய்யப்பட்டவைதாம்.
நூலின் முன்னுரையில் நா.பா.
மனம் நடக்கிற வழியில் கால்கள் நடக்க வேண்டும் என்று நினைப்பது சிறந்தது. என்னுடைய மனம் நடக்கின்ற வழி எப்போதுமே தமிழ்வழி. உலகத்துச் சிந்தனைகளை எல்லாம் சிந்தித்தாலும் அவற்றைத் தமிழ்நாட்டு மனத்தோடு தமிழனாக இருந்து தமிழின் வழியே சிந்திக்க வேண்டும் என்பது என் குறிக்கோள்.
தமிழ்வழியில் நடக்காதவர்களுக்கு அருகே என்னுடைய கால்கள் நடக்க நேரும்போதும் கூட மனம் தமிழ் வழியிலேயே நடந்துகொண்டிருக்கும். கால்கள் எந்தெந்த வழிகளில் நடக்க நேர்ந்தாலும் மனம் ஒரே வழியில் நடக்கும்படி பழக்கிக் கொள்வதைத்தான் தவம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அந்தத் தவத்தைத் தமிழ்த் தவமாகச் செய்து கொண்டு வருகின்றேன்.
இந்தத் தமிழ்வழி நடையில் வாசகர்களை எல்லாம் என்னோடு அழைத்துச் செல்ல ஆசைப் படுகிறேன். அந்த ஆசை காரணமாகத்தான் இந்த நூலுக்கு ‘மொழியின் வழியே’ – என்ற பெயரையும் சூட்டினேன்.
இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே வங்காளிகளுக்கு ஏற்பட்டிருக்கிற தாய்மொழியுணர்ச்சி நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் தமிழர்களுக்கு ஏற்படவில்லையே என்பதை நினைக்கும் போது – சிற்சில ‘சந்தர்ப்பங்களில்’ நான் மனம் புழுங்கியது உண்டு. தமிழ் நன்றாகத் தெரிந்த தமிழர்களே தங்கள் தாய் மொழியில் உரையாடுவதற்கு வெட்கப்படுகிறார்களே!
இந்த நிலைகள் யாவும் மாறி நாட்டுணர்ச்சி பெருக வேண்டும். அப்படிப் பெருகுவதற்கு எதைச் சிந்தித்தாலும் நம்முடைய ‘மொழியின் வழியே’ சிந்திக்கப் பழக வேண்டும். மாசுகோவிலோ, அமெரிக்காவிலோ, லண்டனிலோ உங்கள் கால்கள் எந்த நாட்டின் வழியில் நடந்தாலும் மனம் தமிழ் வழியில் நடக்கட்டுமே! இது என் வேண்டுகோள்.
இவை நா.பா. முன்னுரையில் எழுதியிருந்ததின் பகுதிகளாகும்.
முடிவாக...
நா.பார்த்தசாரதி அவர்கள் தனித்தமிழ் இயக்கஞ் சார்ந்தவரல்லர். தனித்தமிழ்க் கொள்கையாளரும் அல்லர். அவருடைய எழுத்தாக்கங்கள் வடசொற் கலந்தே எழுதப்பட்டுள்ளன.
ஆனால், இந்நூலில் காணப்படும் கட்டுரைகளில் பல இடங்களில் மரபு, தூய்மை, வழக்கு, இலக்கணம் பேணப்பட வேண்டும் என்று பலவாறு வலியுறுத்துவதைக் காண்கின்றோம். அறிவுரையாகவும் வேண்டுகோளாகவும் இவற்றையே அழுத்தமாகக் கூறுகிறார்.
அவர் வலியுறுத்தும் இக் கருத்துக்கள் தமிழுக்குப் பாதுகாப்பளித்து நலன் சேர்ப்பவையும், தமிழரை உயர்த்தக் கூடியவையுமானவை என்பதில் ஐயமில்லை. இந்நூலை அவர் தம்முடைய ஏனைய நூல்களைப் போலன்றி நடையில் செறிவோடு எழுதியிருப்பதைப் பல இடங்களில் காணலாம்.
----------------------------------------------------------------------------------------------
‘கல்கி’ இதழின் துணையாசிரியராகப் பணி செய்தவர். ‘தீபம்’ என்ற இதழைத் தொடங்கி, விடாமுயற்சியுடன் 23 ஆண்டுகள் நடத்தியவர். ‘தினமணிக் கதிர்’ ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.
நா.பா., ஏறத்தாழ பதினைந்து புதினங்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள், குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம், சமுதாய வீதியிலே போன்றவை பலராலும் விரும்பிப் படிக்கப்பட்ட புதினங்கள் எனலாம். புதினங்கள் மட்டுமின்றிக் கட்டுரை நாடகம் பாடல்களும் கூட இவர் எழுதியிருந்தாலும், புதின ஆசிரியராகவே பரவலாக அறியப்பட்டுப் பெயர் பெற்றார்.
மொழியின் வழியே
“மொழியின் வழியே’ என்ற தலைப்பைக் கொண்ட இவருடைய கட்டுரை நூல், 1961இல் முதற் பதிப்பாகவும் 2002இல் இரண்டாம் பதிப்பாகவம் வந்தது. 144 பக்கங்களைக் கொண்ட இந்நூல், நம் தாய்மொழியாகிய தமிழ் தொடர்பான பல்வேறு கூறுகளைக் கூறும் 21 தலைப்புகளில் எழுதப்பெற்ற கட்டுரைகளைக் கொண்டதாகும்.
கட்டுரை நூலாகையால் இது பரவலாக அறியப்படவில்லை. இந்நூலில் காணப்படும் சில கருத்துக்கள், புதின ஆசிரியராக இவரைப் படித்தவர்களுக்கு வியப்பளிக்கக் கூடியவையாக இருக்கக் கூடும்!
இந்நூலில் பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை நா.பா. கூறியுள்ளார். தலைப்புகளையும் அத் தலைப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும் மிகச் சுருக்கமாகக் கீழே காண்போம்.
மொழியும் பண்பாடும்
மரபும் இலக்கணமும் தூய்மைக்கும், வழக்கும் இலக்கியமும் பண்பாட்டிற்கும் காரணமாக நிற்கின்றன. காற்றையும் நீரையும் பெற்று வளர்ந்து கிளைத்து வளமடைந்த பழுமரம் ஒன்றிற் கனியும் கனியைப்போல, மரபையும் இலக்கணத்தையும் போற்றி ஒழுகும் மொழியில் பண்பாடு கனியும்.
மொழியின் நிலைத்த வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் மக்கள் வழக்கு இன்றியமையாதது ஆவது போலவே அதன் தூய்மைக்கும் பண்பாட்டிற்கும் மரபு, இலக்கணம், பழவழக்கு, இலக்கியம் ஆகியவை இன்றியமையாதவை ஆகின்றன.
சான்றோர் மொழி ஆளுகைகளை மூலமாகக் கொண்டே மொழியின் பண்பாடும் உருப்பெறுகின்றது.
மொழியின் முன்னேற்றம்
பழமையும் பண்பாடும் பொருந்திய எந்த மொழியும் தனது மரபிலிருந்து விலகியபின் முன்னேற இயலாது. மரபுடன் கைகோத்து நடவாத மொழி தனது கட்டுக்குலைந்து சீரழிவது ஒருதலை.
பண்பட்ட இலக்கியமொழி -செம்மொழி- களுங்கூட மரபைப் போற்றியே வாழவேண்டும். காலத்திற்கு ஒவ்வாத சில வரையறைகளைக் காலத்திற் கேற்பச் சீர்திருத்திக் கொள்வது தவறன்று. அதுவும் மொழிவல்லுநர் துணையின்றிச் செய்யப்படுமானால் தவறுதான்.
ஒரு மொழி முன்னேற வேண்டுமானால், மொழியை ஆர்வத்தோடு பேணுகின்ற பெருமக்கள் மிகுதியாக இருக்கின்ற நாடாக அம்மொழி பயிலும் நாடு இருக்க வேண்டும். அது வளர்ச்சிக்கு முதற் காரணம்.
“மொழியை எழுதுவதிலும் பேசுவதிலும் மிகுதியான கவனம் கொள்ள வேண்டும். முழுமுதலாகிய இறைவனிடம் பக்தி செலுத்துவது போல் மொழியின் மேல் பயபக்தி ஏற்படவேண்டும். கடவுளைப்போல் முதன்மை வாய்ந்தது ஆகும் மொழி.
மொழியுணர்ச்சியற்ற மக்கள் வாழ்கின்ற நாடு நாகரிகத்திலோ, அறிவு வளர்ச்சியிலோ பண்படவே முடியாது. மொழிப் பற்ற்றின்றி விழிப்பற்றுக் கிடக்கும் மக்கள் விலங்குகளினும் இழிந்தவர். தாய்மொழியை ஏற்றமுறவும் முன்னேற்றவும் மறந்துவிடுகின்ற சமுதாயம் வாழத் தகுதியற்றது.
பிழையற எழுதுதல், பிழையறப் பேசுதல், மரபு குலையாது நூலியற்றல், தான்தோன்றிகளாகாது, ஆன்றோர் சென்ற நெறியைப் பாதுகாத்தல், புதிய முறையைப் பழைய முறைக்குக் கேடின்றி ஏற்றுக் கொள்ளுதல் முதலிய செயல்களாலல்லவா ஒரு மொழி முன்னேற முடியும்?”
எந்த ஒரு மொழியும் அரசியலோடு இசையாதவரை தனித்து முன்னேற முடியாது.
மொழியும் வரலாறும்
போர் பூசல்களையும் அரசாட்சிக்கு இருவேறு வேந்தர் போட்டி யிடுதலையும் ஒழுக்க வரையறை கடந்த அரசியற் சூழ்ச்சிகளையுமே பெரும்பாலும் உலக வரலாறுகள் பரக்க விரித்துப் பேசுகின்றன.
தமிழகத்து வரலாற்றில் இவற்றிற்கு ஒரு சிறிதும் இடமில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், இவை மிகக் குறைவான அளவிலும், ஒழுக்கத்தையும் அறவுணர்ச்சியையும் வற்புறுத்தும் உண்மைகள் நிறைந்த அளவிலும், தமிழகத்து வரலாற்றில் விளங்கும்.
ஒழுக்கமும், அறமும், அவையிரண்டுங் கலந்த பண்பாடும் உலகின் எந்த வரலாற்றிலும் இவ்வளவு கலந்ததுங் கூட இல்லை. போரிலும் கூட, வடக்கிருந்து மானம் காக்க உயிர்விடும் அரசர்களையும், பகைவன் கை நீர் பருக நாணி உயிர் துறந்த கணைக்கால் இரும்பொறைகளையுமே நாம் காண்கிறோம்.
கால முற்பாடு பிற்பாட்டிற்குரிய அடையாளமாக, அடிமை முத்திரையான கி.மு – கி.பி.யைத் தவிர்த்து தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) என்றும் தொ.மு. (தொல்காப்பியருக்கு முன்) தொ.பி. (தொல்காப்பியருக்குப் பின்) என்று எழுதினால் என்ன?
மொழியும் கற்பிக்கையும் (போதனையும்)
தமிழுக்கு கல்வி மொழித் தகுதி இல்லை என்றும் அதை உண்டாக்குவதும் அருமை என்றும் கூறுவது அறியாமையால் நேரும் பிழைபட்ட முடிவு; பொருந்தாத துணிவு; இந்த முடிவால் தமிழ் உள்ளம் குமுறாமல் இருக்க முடியாது.
(இந்த வகையில் பாரதியாரின் தமிழ் உள்ளம் குமுறியதாக அவரின் “சொல்லவுங் கூடுவதில்லை அவை....” என்ற பாரதியின் பாடலை எடுத்துக் காட்டி எழுதுகிறார்)
தமிழில் கலைகளைக் கற்பிக்கலாம்; கலைச் சொற்கள் உள்ளன; இன்றியமையா நிலையில் கலைச் சொற்களை உண்டாக்கிக் கொள்ளலாம். தமிழ் மொழியைப் போல எல்லாக் கலைகளுக்கும் இடங்கொடுக்கும் பரந்த இயல்புடைய மொழி மற்றொன்று காண்பதரிது.
மொழியும்இசையும்
இசைக் கலையைப் பகுதி பகுதியாகப் பிரித்து நுண்ணிதாக ஆராய்ந்து இவை குணம், இவை குற்றம், இவை இலக்கணம், இவை வழு என அக் கலைக்கு நிலையான வரையறைகள் கண்ட பெருந்திறன் பழந் தமிழர்க்கு இருந்துள்ளது.
(இசை மரபு என்னும் பழந்தமிழ் இசைநூல் குறித்தும் உள்ளாளப் பாடல் முறை குறித்தும் விளக்குகிறார்)
மொழியும்பாட்டும்
பாட்டைச் சுவைக்கிறவர்கள் பண்பட்டு உயரவேண்டும் என்பதைப் பாடுகின்றவன் நோக்கமாகக் கொள்ளவேண்டும். உலகின் உயர்நிலை இழிநிலைக் காட்சிகளை மற்றவர்கள் காணாத ஒரு புதிய நோக்குடன் கண்டு தனக்கே உரிய சிந்தனைக் கலவையோடு அணிசெய்து படிப்போர்க்குக் கவர்ச்சி நிறைந்து தோன்றும்படி கூறும் தகுதி வாய்ந்தவன் எவனோ, அவன் பாட வேண்டும்.
(தொல்காப்பியம் கூறும் “பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல்...” என்ற பாட்டிலக்கண மரபை எடுத்துக்காட்டுகிறார்)
பொது(சாதாரண) நடையில் பொது(சாதாரண)க் கருத்தை உரைபோலச் சொல்லுகின்ற ஒருவகைப் பாட்டு மேல்புலத்தார் வழக்கில் உண்டு. இக் காலத்தில் தமிழ் வழக்கிலும் அது பரவி வருகிறது. நடைச் செய்யுள் என்பர் அதனை. உயரிய பொருட்பாடு அமையாவிட்டால் இவ்வகைச் செய்யுள்களும் பயனற்றவையே எனகிறார்.
(மொழியும் செவிப்பயனும் என்ற கட்டுரையில் கேள்விச்செல்வம் குறித்து திருக்குறளை எடுத்துக்காட்டி விளக்குகிறார்.)
மொழியும் மரபும்
அறிபுலனுக்கும் நுகர்புலனுக்கும் அவை பிறக்கும் மனத்திற்கும் ஆகிய இம் மூன்றோடும் தொடர்புபடும் இலக்கியம், மரபை விலக்கிய முறையிலே தோற்றுவிக்கப் படுமானால் சமுதாயத்தோடு இயைபு இழப்பது உறுதி. இலக்கியங்களைச் சமூகத்தோடு இணைக்கும் பொறுப்புடையதே மரபு.
(மரபு வழுக்களையும் வழுவமைதிபற்றியும் விளக்குகிறார்.)
பாட்டு, உரை, எழுத்து, பேச்சு ஆகிய எல்லாத் துறைகளிலும் மரபை எதிர்ப்பது, மீறுவது என்பது ஒரு பொழுது போக்கு விளையாட்டாகி விட்டது இப்போது. மரபின் சிதைவு மொழியையும் சிதைக்கத் தொடங்காது என்பதற்கு என்ன உறுதி?
(மொழியும் ‘மனத்தத்துவமும்’ என்ற தலைப்பில் ‘அப்பனைப் போல் மகன்’ என்ற கூற்றைச் சரியென்று நிறுவ முயலும் நா.பா.வின் முயற்சி இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலையில் ஏற்றுக் கொள்ளுமாறு இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.
இரண்டு மணிமொழிகள் கட்டுரையில் இரு குறள்களின் சிறப்பை விளக்குகிறார்.
மொழியில் ஒப்புநயம் என்ற கட்டுரையில் திருக்குறளில் ஒரே உவமை, ஒன்றில் ‘நிலையாத தொடர்பின்மை’யையும் மற்றொன்றில் நிலைத்த தொடர்பையும் பொதுத் தன்மைகளாகப் பொருத்திக் கூறப்பட்டிருக்கும் நயத்திற்காக வள்ளுவரைப் பாராட்டுகிறார்.
தென்னிந்திய மொழிகள், மொழியும் நாடகமும் கட்டுரைகளில் தலைப்புக் கொத்த பல செய்திகளைக் கூறுகிறார்.)
மொழியும் சிறுகதைகளும்
எழுத்தாளர்களே! இன்றைய வளர்ச்சியின் வேகத்தில் உங்களுக்கிருக்கும் பொறுப்பைத் தவற விட்டுவிடாதீர்கள். தமிழ் மரபும், தமிழ்ப் பண்பும், தமிழ் மக்கள் இனமும் என்றும் எதற்காகவும் பொறுப்பின்மைக்குத் தொடர்ந்து ஆதரவளித்தது இல்லை.
(மொழியும் புதின வளர்ச்சியும் கட்டுரையில், தமிழ்ப் புதின வரலாற்றை வளர்ச்சியைக் கூறுகின்றார்.)
தாளிகை(பத்திரிகை)களும் மொழிநடையும்
நாளிதழிலிருந்து மாத இதழ்கள் வரை பெரும்பாலானவற்றின் மொழி நடையில் காணும் பிழைகளைக் களைய வேண்டும். சந்திப் பிழையும், மரபுப் பிழையும், பொருட் பிழையும் மலியப் பெரும்பாலான பிறமொழிச் சொற்களைக் கலந்து ஆசிரியருரை எழுதுவதும் தவறாக மொழி பெயர்ப்பதும் அச்சுக்கோப்பில் தவறு செய்வதும் இதழின் மொழிநடையைக் கெடுக்கும்.
கொச்சை மொழி, அயற்சொல் பயன்பாட்டிற்கு வரம்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒழுங்கும், மரபும், இலக்கணமும் இல்லாத மொழிநடையில் கருத்துக்கள் தங்குமா? தங்கத்தான் முடியுமா?
மொழியைப் பாதுகாக்க முடியாவிட்டாலும் அதன் தூய்மையைக் கெடுத்துக் கறைப்படுத்தும் ‘பணி’யை அல்லது பழியை நீங்கள் செய்ய வேண்டாம்.
மொழியும் உரைநடையும்
சொற்களின் வகையும் பொருள்நிலையும் தெரிந்து பயன்படுத்த வேண்டும். மொழியை எளிமையாகவும், தூய்மையாகவும், தெளிவாகவும் பயன்படுத்துகிறவர்களைப் போற்ற வேண்டும்.
பல பேர்கள் சேர்ந்து ஒரு பிழையைச் செய்துவிட்டு அதையே மரபாக்கிவிடும் தன்னலத்தை இன்று எங்கும் காண்கிறோம்.
தப்புத் தப்பாக யாப்பும் கோப்புமின்றி ஆயிரம் ‘கவிதைகள்’ எழுத முயல்வதைக் காட்டிலும் எளிமையும் தூய்மையும் தனித்தன்மையும் இலங்க நான்கு ‘வாக்கியங்கள்’ நன்றாகவும் அழகாகவும் எழுதிவிடுவது எவ்வளவோ சிறந்தது. பிழையில்லாமல் தெளிவாக எழுதுவதே ஓர் அறம்
தெளிவுக்குச் சுருக்கம் தேவை. சுருக்கத்தில் அழகு அதிகம். தெளிவும் சுருக்கமும் இருந்தால் முறையும் இருக்கும்.
(மொழியும் சுவையும் கட்டுரையில், நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எண்வகை மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் வரிசைப் படுத்தியமைக்குக் காரணங்களை விளக்குகிறார்.
ஏனைச்சுவைகளுக் குள்ளது போல, சமனிலைச் சுவைக்கு மெய்யின் கண் நிகழும் வேறுபாடு இன்மையின் ஆசிரியர் தொல்காப்பியர் அதனைக் கூறாராயினர் என்னும் பேராசிரியர் கருத்தை எடுத்துக் காட்டுகிறார்.
மொழியும் புதிய விளைவுகளும் கட்டுரையில், பிறமொழிப் பயிற்சி காரணமாகத் தமிழ் மொழி மரபுக்கு ஏலாத சொல்லிய அமைப்புகளை எடுத்துக் காட்டுகிறார். இடம் போட்டு வைத்தல், பங்கெடுத்துக்கொள்ளல், முயற்சிக்கிறேன், ஒருநூறு, மோசமானவராக இருக்கிறீர்கள் போன்ற தவறான ஆட்சிகளை விளக்குகிறார்.
இருமொழி இணைந்து பிரியாது ஒரு தொடராய் நிற்கும் பிறமொழிச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவது நல்லதாகாது என்கிறார். “தமிழ் புதிய வளர்ச்சியைப் பெறுவதற்குப் பழமையின் ஆசியும் அறிவுரையும் வேண்டும். புதுமையின் உழைப்பும் வேண்டும்” என்று கூறுகிறார்.)
மொழியும் பொறுப்புணர்ச்சியும்
இலக்கியத்தில் படைப்போர் படிப்பொர் ஆகிய இருபாலார்க்கும் பொறுப்புணர்ச்சி குன்றும் போது தம் நிலையினின்று தாழ்கின்றனர். பொலிவு குன்றுகின்றனர். பண்பிழக்கின்றனர்.
யார் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்தல் தவறு. உரையாடலாகப் பேசும் பேச்சிலும், சொற் பொழிவிலும் செய்யப்படும் தவறுகள் காற்றோடு போய்விடும்.
எழுத்தில் செய்யப்படும் பிழைகளோ செய்தவரின் பொறுப்பின்மைக்கு நிலைத்த சான்றாக என்றும் இருந்துவிடக்கூடியவை.
மொழியும் அறநூல்களும்
நல்லவற்றை விரும்பவும் தீயவற்றை வெறுக்கவும் கற்றுக் கொடுத்த பண்பை நமக்கு அளித்தது எது? இந்த நாளிலும் கூட நமக்கு அறத்திலும் ஒழுக்கத்திலும் நம்பிக்கை பய்விடவில்லையே! இதற்குக் காரணம் நமது பழமையான அறநூல்களே எனபதில் ஐயமில்லை.
அறநூல்கள் விதை நெல்லைப் போன்றவை. வாழ்வை ஒழுங்குப் படுத்தும் உண்மைகளை நாம் அவற்றிலிருந்துதான் பயிர் செய்து வளர்க்க வேண்டும். சமய நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள், காவியங்கள் என்ற மற்றைய துறைகள் எல்லாம் அறநூல்கள் என்ற விதை நெல்லிலிருந்து பயிர் செய்யப்பட்டவைதாம்.
நூலின் முன்னுரையில் நா.பா.
மனம் நடக்கிற வழியில் கால்கள் நடக்க வேண்டும் என்று நினைப்பது சிறந்தது. என்னுடைய மனம் நடக்கின்ற வழி எப்போதுமே தமிழ்வழி. உலகத்துச் சிந்தனைகளை எல்லாம் சிந்தித்தாலும் அவற்றைத் தமிழ்நாட்டு மனத்தோடு தமிழனாக இருந்து தமிழின் வழியே சிந்திக்க வேண்டும் என்பது என் குறிக்கோள்.
தமிழ்வழியில் நடக்காதவர்களுக்கு அருகே என்னுடைய கால்கள் நடக்க நேரும்போதும் கூட மனம் தமிழ் வழியிலேயே நடந்துகொண்டிருக்கும். கால்கள் எந்தெந்த வழிகளில் நடக்க நேர்ந்தாலும் மனம் ஒரே வழியில் நடக்கும்படி பழக்கிக் கொள்வதைத்தான் தவம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அந்தத் தவத்தைத் தமிழ்த் தவமாகச் செய்து கொண்டு வருகின்றேன்.
இந்தத் தமிழ்வழி நடையில் வாசகர்களை எல்லாம் என்னோடு அழைத்துச் செல்ல ஆசைப் படுகிறேன். அந்த ஆசை காரணமாகத்தான் இந்த நூலுக்கு ‘மொழியின் வழியே’ – என்ற பெயரையும் சூட்டினேன்.
இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே வங்காளிகளுக்கு ஏற்பட்டிருக்கிற தாய்மொழியுணர்ச்சி நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் தமிழர்களுக்கு ஏற்படவில்லையே என்பதை நினைக்கும் போது – சிற்சில ‘சந்தர்ப்பங்களில்’ நான் மனம் புழுங்கியது உண்டு. தமிழ் நன்றாகத் தெரிந்த தமிழர்களே தங்கள் தாய் மொழியில் உரையாடுவதற்கு வெட்கப்படுகிறார்களே!
இந்த நிலைகள் யாவும் மாறி நாட்டுணர்ச்சி பெருக வேண்டும். அப்படிப் பெருகுவதற்கு எதைச் சிந்தித்தாலும் நம்முடைய ‘மொழியின் வழியே’ சிந்திக்கப் பழக வேண்டும். மாசுகோவிலோ, அமெரிக்காவிலோ, லண்டனிலோ உங்கள் கால்கள் எந்த நாட்டின் வழியில் நடந்தாலும் மனம் தமிழ் வழியில் நடக்கட்டுமே! இது என் வேண்டுகோள்.
இவை நா.பா. முன்னுரையில் எழுதியிருந்ததின் பகுதிகளாகும்.
முடிவாக...
நா.பார்த்தசாரதி அவர்கள் தனித்தமிழ் இயக்கஞ் சார்ந்தவரல்லர். தனித்தமிழ்க் கொள்கையாளரும் அல்லர். அவருடைய எழுத்தாக்கங்கள் வடசொற் கலந்தே எழுதப்பட்டுள்ளன.
ஆனால், இந்நூலில் காணப்படும் கட்டுரைகளில் பல இடங்களில் மரபு, தூய்மை, வழக்கு, இலக்கணம் பேணப்பட வேண்டும் என்று பலவாறு வலியுறுத்துவதைக் காண்கின்றோம். அறிவுரையாகவும் வேண்டுகோளாகவும் இவற்றையே அழுத்தமாகக் கூறுகிறார்.
அவர் வலியுறுத்தும் இக் கருத்துக்கள் தமிழுக்குப் பாதுகாப்பளித்து நலன் சேர்ப்பவையும், தமிழரை உயர்த்தக் கூடியவையுமானவை என்பதில் ஐயமில்லை. இந்நூலை அவர் தம்முடைய ஏனைய நூல்களைப் போலன்றி நடையில் செறிவோடு எழுதியிருப்பதைப் பல இடங்களில் காணலாம்.
----------------------------------------------------------------------------------------------
லேபிள்கள்:
நா.பா.,
மொழி,
மொழி மரபு,
மொழித்தூய்மை
சனி, 1 ஆகஸ்ட், 2009
சொல்லும் சொல்லலும்!
ஞ
ஞ
உலகப் பொதுமறையான திருக்குறளில், ஆசிரியர் திருவள்ளுவர் சொல்லைப் பற்றியும் சொல்லுவதைப் பற்றியும் ஒரு குறளில் விளக்குகிறார். நாம் சொல்ல வந்த செய்தியைச் சொல்லும் போது, நாம் பயன்படுத்தும் சொறகள் தேர்ந்தெடுத்த வையாக இருக்க வேண்டுமாம். எப்படித் தேர்ந்தவை தெரியுமா? நாம் தேர்ந்த சொல்லை நீக்கிவிட்டு வேறு சொல்லை அந்த இடத்தில் பயன்படுத்தினால் முன்னைவிட சிறப்பாக அமைய இயலாதபடியாகத் தேர்ந்தெடுத்தவையாம்!
இவ்வாறு சொல் ஆட்சி பற்றி விளக்கியுள்ள ஆசான் திருவள்ளுவர், சொல் என்ற சொல்லைத் திருக்குறளில் 125 இடங்களில் பயன்படுத்தி உள்ளார். இவற்றில் ‘சொல்’ என்ற வடிவிலேயே 50 இடங்களிலும் பின்னொட்டுகள் சேர்ந்து 75 இடங்களிலும் ஆண்டிருக்கின்றார்.
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், சொல்லும் வகைகளாக
எடுத்துச் சொல்லியுள்ள சொற்களை அறியும் போது, தமிழின் சொல்வளம் நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது. அச்சொற்களை அவற்றின் பொருளுடன் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. அசைத்தல் : அசை பிரித்துச் சொல்லுதல்.
2. அறைதல் : உரக்கச்சொல்லுதல்.
3. இசைத்தல் : கோவைபடச் சொல்லுதல்
4. இயம்புதல் : இயவொலியுடன் (இசையோடு) சொல்லுதல்.
5. உரைத்தல் : செய்யுட்கு உரை சொல்லுதல்.
6. உளறுதல் : அச்சத்தினால் ஒன்றிற்கின்னொன்றைச் சொல்லுதல்.
7. என்னுதல் : ஒரு செய்தியைச் சொல்லுதல்.
8. ஓதுதல் : காதில் மெல்லச் சொல்லுதல்.
9. கரைதல் : அழுது சொல்லுதல்.
10. கழறுதல் : கடிந்து சொல்லுதல்.
11. கிளத்தல் : ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்.
12. குயிற்றுதல் : கியிற் குரலுல் சொல்லுதல்.
13. குழறுதல் : நாத் தடுமாறிச் சொல்லுதல்.
14. கூறுதல் : கூறுபடுத்துச் சொல்லுதல்.
15. கொஞ்சுதல் : செல்லப் பிள்ளைபோற் சொல்லுதல்.
16. சாற்றுதல் : அரசன் ஆணையைக் குடிகளுக்கு அறிவித்தல்.
17. செப்புதல் : வினாவிற்கு விடை சொல்லுதல்.
18. சொல்லுதல் : இயல்பாக ஒன்றைச் சொல்லுதல்.
19. நவிலுதல் : பலகால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல்.
20. நுதலுதல் : ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.
21. நுவலுதல் : நூலைக் கற்பித்தல்.
22. நொடித்தல் : கதை சொல்லுதல்.
23. பகர்தல் : பகிர்ந்து விலை கூறுதல்.
24. பலுக்குதல் : உச்சரித்தல்.
25. பறைதல் : ஒன்றைத் தெரிவித்தல்.
26. பன்னுதல் : நுட்பமாய் விரித்துச் சொல்லுதல்.
27. பிதற்றுதல் : பித்தனைப் போலப் பேசுதல்.
28. புகலுதல் : ஒன்றை விரும்பிச் சொல்லுதல்.
29. புலம்புதல் : தனிமையாய்ப் பேசுதல்.
30. பேசுதல் : உரையாடுதல் அல்லது மொழியைக் கையாளுதல்.
31. மாறுதல் : மாறிச் சொல்லுதல்.
32. மிழற்றுதல் : கிளிக்குரலில் சொல்லுதல்.
33. மொழிதல் : சொல் திருத்தமாகப் பேசுதல்.
34. வலத்தல் : கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்.
35. வலித்தல் : வற்புறுத்திச் சொல்லுதல்.
36. விடுதல் : மெல்ல வெளியிடுதல்.
37. விதத்தல் : சிறப்பாய் எடுத்துச்சொல்லுதல்.
38. விள்ளுதல் : வெளிவிட்டுச் சொல்லுதல்.
39. விளத்துதல் : விரித்துச் சொல்லுதல்.
40. விளம்புதல் : பலர்க்கு அறிவித்தல்.
41. நொடுத்தல் : விலை கூறுதல்.
42. பாராட்டல் : போற்றி உரைத்தல்.
43. பொழிதல் : இடைவிடாது சொல்லுதல்.
44. பனுவுதல் : செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்.
45. கத்துதல் : குரலெழுப்பிச் சொல்லுதல்.
தமிழ், இயற்கை மொழி என்றும் முதல் தாய் மொழி என்றும் உலக முதன் மொழி என்றும் பாவாணர் முதலான மொழியியல் அறிஞர்களால் பாராட்டப் படுகின்றது. இப்படிப்பட்ட தகுதிகள் கொண்டதாகத் தமிழ் இருப்பதால்தான் தமிழ் சொல்வளம் மிக்க மொழியாக உள்ளது என்பது பாவாணர் கருத்தாகும்.
சொல்லும்வகைச் சொற்கள் போன்ற வினைச்சொற்களுக்கு மட்டுமின்றி பல்வேறு பெயர்ச் சொற்களுக்கும் மற்ற வகைச் சொற்களுக்குமான பட்டியலை ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்’ என்ற நூலிலும் அவருடைய பிற நூல்களிலும் கட்டுரைகளிலும் எடுத்துரைப்பதைக் காணலாம்.
-----------------------------------------------------------------------------------------
ஞ
உலகப் பொதுமறையான திருக்குறளில், ஆசிரியர் திருவள்ளுவர் சொல்லைப் பற்றியும் சொல்லுவதைப் பற்றியும் ஒரு குறளில் விளக்குகிறார். நாம் சொல்ல வந்த செய்தியைச் சொல்லும் போது, நாம் பயன்படுத்தும் சொறகள் தேர்ந்தெடுத்த வையாக இருக்க வேண்டுமாம். எப்படித் தேர்ந்தவை தெரியுமா? நாம் தேர்ந்த சொல்லை நீக்கிவிட்டு வேறு சொல்லை அந்த இடத்தில் பயன்படுத்தினால் முன்னைவிட சிறப்பாக அமைய இயலாதபடியாகத் தேர்ந்தெடுத்தவையாம்!
இவ்வாறு சொல் ஆட்சி பற்றி விளக்கியுள்ள ஆசான் திருவள்ளுவர், சொல் என்ற சொல்லைத் திருக்குறளில் 125 இடங்களில் பயன்படுத்தி உள்ளார். இவற்றில் ‘சொல்’ என்ற வடிவிலேயே 50 இடங்களிலும் பின்னொட்டுகள் சேர்ந்து 75 இடங்களிலும் ஆண்டிருக்கின்றார்.
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், சொல்லும் வகைகளாக
எடுத்துச் சொல்லியுள்ள சொற்களை அறியும் போது, தமிழின் சொல்வளம் நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது. அச்சொற்களை அவற்றின் பொருளுடன் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. அசைத்தல் : அசை பிரித்துச் சொல்லுதல்.
2. அறைதல் : உரக்கச்சொல்லுதல்.
3. இசைத்தல் : கோவைபடச் சொல்லுதல்
4. இயம்புதல் : இயவொலியுடன் (இசையோடு) சொல்லுதல்.
5. உரைத்தல் : செய்யுட்கு உரை சொல்லுதல்.
6. உளறுதல் : அச்சத்தினால் ஒன்றிற்கின்னொன்றைச் சொல்லுதல்.
7. என்னுதல் : ஒரு செய்தியைச் சொல்லுதல்.
8. ஓதுதல் : காதில் மெல்லச் சொல்லுதல்.
9. கரைதல் : அழுது சொல்லுதல்.
10. கழறுதல் : கடிந்து சொல்லுதல்.
11. கிளத்தல் : ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்.
12. குயிற்றுதல் : கியிற் குரலுல் சொல்லுதல்.
13. குழறுதல் : நாத் தடுமாறிச் சொல்லுதல்.
14. கூறுதல் : கூறுபடுத்துச் சொல்லுதல்.
15. கொஞ்சுதல் : செல்லப் பிள்ளைபோற் சொல்லுதல்.
16. சாற்றுதல் : அரசன் ஆணையைக் குடிகளுக்கு அறிவித்தல்.
17. செப்புதல் : வினாவிற்கு விடை சொல்லுதல்.
18. சொல்லுதல் : இயல்பாக ஒன்றைச் சொல்லுதல்.
19. நவிலுதல் : பலகால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல்.
20. நுதலுதல் : ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.
21. நுவலுதல் : நூலைக் கற்பித்தல்.
22. நொடித்தல் : கதை சொல்லுதல்.
23. பகர்தல் : பகிர்ந்து விலை கூறுதல்.
24. பலுக்குதல் : உச்சரித்தல்.
25. பறைதல் : ஒன்றைத் தெரிவித்தல்.
26. பன்னுதல் : நுட்பமாய் விரித்துச் சொல்லுதல்.
27. பிதற்றுதல் : பித்தனைப் போலப் பேசுதல்.
28. புகலுதல் : ஒன்றை விரும்பிச் சொல்லுதல்.
29. புலம்புதல் : தனிமையாய்ப் பேசுதல்.
30. பேசுதல் : உரையாடுதல் அல்லது மொழியைக் கையாளுதல்.
31. மாறுதல் : மாறிச் சொல்லுதல்.
32. மிழற்றுதல் : கிளிக்குரலில் சொல்லுதல்.
33. மொழிதல் : சொல் திருத்தமாகப் பேசுதல்.
34. வலத்தல் : கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்.
35. வலித்தல் : வற்புறுத்திச் சொல்லுதல்.
36. விடுதல் : மெல்ல வெளியிடுதல்.
37. விதத்தல் : சிறப்பாய் எடுத்துச்சொல்லுதல்.
38. விள்ளுதல் : வெளிவிட்டுச் சொல்லுதல்.
39. விளத்துதல் : விரித்துச் சொல்லுதல்.
40. விளம்புதல் : பலர்க்கு அறிவித்தல்.
41. நொடுத்தல் : விலை கூறுதல்.
42. பாராட்டல் : போற்றி உரைத்தல்.
43. பொழிதல் : இடைவிடாது சொல்லுதல்.
44. பனுவுதல் : செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்.
45. கத்துதல் : குரலெழுப்பிச் சொல்லுதல்.
தமிழ், இயற்கை மொழி என்றும் முதல் தாய் மொழி என்றும் உலக முதன் மொழி என்றும் பாவாணர் முதலான மொழியியல் அறிஞர்களால் பாராட்டப் படுகின்றது. இப்படிப்பட்ட தகுதிகள் கொண்டதாகத் தமிழ் இருப்பதால்தான் தமிழ் சொல்வளம் மிக்க மொழியாக உள்ளது என்பது பாவாணர் கருத்தாகும்.
சொல்லும்வகைச் சொற்கள் போன்ற வினைச்சொற்களுக்கு மட்டுமின்றி பல்வேறு பெயர்ச் சொற்களுக்கும் மற்ற வகைச் சொற்களுக்குமான பட்டியலை ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்’ என்ற நூலிலும் அவருடைய பிற நூல்களிலும் கட்டுரைகளிலும் எடுத்துரைப்பதைக் காணலாம்.
-----------------------------------------------------------------------------------------
லேபிள்கள்:
சொல்,
சொல்லும் வகைகள்,
பாவாணர்
வெள்ளி, 31 ஜூலை, 2009
களித்தாரைக் கண்ட காட்சி...!
ஞ
ஞ
அன்று திங்கட்கிழமை. காலை ஒன்பதரை மணி இருக்கும். வெளிநாட்டு அஞ்சல் தொடர்புக் கட்டணம் பற்றித் தெரிந்து கொள்ள நகரின் தலைமை அஞ்சலகத்திற்குச் சென்றிருந்தேன்.
பெரிய அறையொன்றில் நடு இருக்கையில் இருந்தார் அலுவலகப் பொறுப்பதிகாரி. அவரைப் பார்க்கும்போது, அந்தக்காலத்து அரசவையில் வீற்றிருக்கும் அரசரைப் போலத் தெரிந்தார்; மணிமுடி ஒன்றுதான் குறை!
மடிப்புக் கலையாத உலர்சலவை உடை; அழுந்த வாரிவிடப்பட்ட தலைமுடி; நடு நெற்றியில் ¾” x ½” அளவெடுத்து இடப்பட்டதைப் போன்ற திருநீறு! பார்ப்பவர் அனைவரும் மதித்து வணங்கும்படியான தூய்மையான ஆளுமைமிக்க தோற்றம்!
வருகின்றவர்களைச் சிறு புன்னகையுடன் தலையைச் சிறிதே அசைத்து
மறுவணக்கம் கூறி வரவேற்கிறார். தேவையான அளவிற்கு மட்டும் வெட்டித் தறித்தாற் போல் பேசுகிறார்.
நான் சென்றபோது கூட்டம் குறைவாக இருந்தது. நான் கேட்ட செய்திக்குச் சுருக்கமாக விடைகூறி விளக்கினார். நன்றி கூறிவிட்டு வெளியே வந்தேன். பத்துமணிக்குள் என் அலுவலகம் செல்வதற்காக விரைந்தேன்.
அன்று மாலை மணி ஆறேகால் அல்லது ஆறரை இருக்கும் என்று எண்ணுகிறேன், அலுவலகத்திலிருந்து நூலகத்திற்கச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். ஊரின் நடமாட்டம் மிகுந்த பெரிய கடைத் தெருவின் வழியே வந்துகொண்டிருந்தேன். தொலைவில் ஓர் ஆள், வலப்புறமும் இடப்புறமுமாகத் தள்ளாடிக் கொண்டே எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்தார்.
கொஞ்சம் நெருங்கிச் சென்றதும் அந்த ஆளை எங்கேயோ பார்த்ததாற் போன்ற மங்கலான நினைவு(!) தோன்றியது. இடக்கையில் கடலைச் சுண்டல் பொட்டலம் ஒன்று இருந்தது. வேட்டி, சட்டை, கை, தலை எல்லாம் பட்டை பட்டையாக புழுதி ஒட்டியிருந்தது.
எங்கோ விழுந்து கிடந்திருக்க வேண்டும். வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. கால்கள் நேரே நிற்காது தள்ளாடிக் கொண்டே இருந்தன. எங்கேயோ விழுந்துவிடப் போவதைப் போன்ற மிகத் தள்ளாட்டமான தடுமாற்ற நடை! வாய்க்கு வந்தபடியான தொடர்பற்ற குழறிய சொற்கள்!
ஓர் அம்மா, சவளிக்கடை ஒன்றிலிருந்து இறங்கிச் சாலைக்கு வந்தார். ஐயோ! அந்த அம்மையார் மேல் மோதிவிடுவாரோ? அரண்டுபோய் விலகிச் சென்றுவிட்டார் அந்த அம்மையார்.
என்ன கொடுமை! ஓ! இவர்... இவர்... இவர் நான் காலையில் பார்த்த அந்த அலுவலகப் பொறுப்பதிகாரி அல்லவா?
ஒரு பால்காரர், தம் மாடுகளுக்குத் தீனி வாங்க வந்தவர், இவரைப் பார்த்தார். இந்தப் பால்காரர்தாம் இவர் வீட்டுக்குப் பால் தருகிறவராம்! பால்காரர் இவரை வலிய அழைத்துச் சென்று தம் மிதிவண்டியின் அகன்ற பின்னிருக்கையில் அமர்த்திக் கொண்டு இவருடைய வீட்டை நோக்கிச் சென்றார்.
மிதிவண்டியில் அமர்ந்திருந்த அவர், கிடையாகவும் சாய்வாகவும் ஆடிக்கொண்டே செல்கையில், அவர் அமர்ந்திருந்த அந்த மிதிவண்டியும் குடித்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது!
மதுவருந்தும் ஒருவன், தான் மது அருந்தாத நிலையில் தெளிவாக இருக்கிறான் என்று கருதிக் கொள்ளுங்கள். அப்பொழுது, மது அருந்திய வேறு ஒரு ஆள் மனத்தாலும் பேச்சாலும் செயலாலும் தன் கட்டுப்பாட்டை இழந்து இழிந்த நிலையில், ஆடையிழந்து, உளறிக் கொண்டு, கண்ட இடத்தில் விழுந்து எழமுடியாத நிலையில் கிடப்பதைப் பார்க்கிறான்.
அந்தக் காட்சியைக் கண்ட பிறகாவது, தான் மது அருந்துவதால் தனக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்; மது அருந்தலைக் கைவிட்டு அதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என உணர வேண்டும். இதையே இரண்டடிகளில் வலியுறுத்திக் கூறுகிறது குறள்.
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
------------------------------------------------------------------------
ஞ
அன்று திங்கட்கிழமை. காலை ஒன்பதரை மணி இருக்கும். வெளிநாட்டு அஞ்சல் தொடர்புக் கட்டணம் பற்றித் தெரிந்து கொள்ள நகரின் தலைமை அஞ்சலகத்திற்குச் சென்றிருந்தேன்.
பெரிய அறையொன்றில் நடு இருக்கையில் இருந்தார் அலுவலகப் பொறுப்பதிகாரி. அவரைப் பார்க்கும்போது, அந்தக்காலத்து அரசவையில் வீற்றிருக்கும் அரசரைப் போலத் தெரிந்தார்; மணிமுடி ஒன்றுதான் குறை!
மடிப்புக் கலையாத உலர்சலவை உடை; அழுந்த வாரிவிடப்பட்ட தலைமுடி; நடு நெற்றியில் ¾” x ½” அளவெடுத்து இடப்பட்டதைப் போன்ற திருநீறு! பார்ப்பவர் அனைவரும் மதித்து வணங்கும்படியான தூய்மையான ஆளுமைமிக்க தோற்றம்!
வருகின்றவர்களைச் சிறு புன்னகையுடன் தலையைச் சிறிதே அசைத்து
மறுவணக்கம் கூறி வரவேற்கிறார். தேவையான அளவிற்கு மட்டும் வெட்டித் தறித்தாற் போல் பேசுகிறார்.
நான் சென்றபோது கூட்டம் குறைவாக இருந்தது. நான் கேட்ட செய்திக்குச் சுருக்கமாக விடைகூறி விளக்கினார். நன்றி கூறிவிட்டு வெளியே வந்தேன். பத்துமணிக்குள் என் அலுவலகம் செல்வதற்காக விரைந்தேன்.
அன்று மாலை மணி ஆறேகால் அல்லது ஆறரை இருக்கும் என்று எண்ணுகிறேன், அலுவலகத்திலிருந்து நூலகத்திற்கச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். ஊரின் நடமாட்டம் மிகுந்த பெரிய கடைத் தெருவின் வழியே வந்துகொண்டிருந்தேன். தொலைவில் ஓர் ஆள், வலப்புறமும் இடப்புறமுமாகத் தள்ளாடிக் கொண்டே எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்தார்.
கொஞ்சம் நெருங்கிச் சென்றதும் அந்த ஆளை எங்கேயோ பார்த்ததாற் போன்ற மங்கலான நினைவு(!) தோன்றியது. இடக்கையில் கடலைச் சுண்டல் பொட்டலம் ஒன்று இருந்தது. வேட்டி, சட்டை, கை, தலை எல்லாம் பட்டை பட்டையாக புழுதி ஒட்டியிருந்தது.
எங்கோ விழுந்து கிடந்திருக்க வேண்டும். வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. கால்கள் நேரே நிற்காது தள்ளாடிக் கொண்டே இருந்தன. எங்கேயோ விழுந்துவிடப் போவதைப் போன்ற மிகத் தள்ளாட்டமான தடுமாற்ற நடை! வாய்க்கு வந்தபடியான தொடர்பற்ற குழறிய சொற்கள்!
ஓர் அம்மா, சவளிக்கடை ஒன்றிலிருந்து இறங்கிச் சாலைக்கு வந்தார். ஐயோ! அந்த அம்மையார் மேல் மோதிவிடுவாரோ? அரண்டுபோய் விலகிச் சென்றுவிட்டார் அந்த அம்மையார்.
என்ன கொடுமை! ஓ! இவர்... இவர்... இவர் நான் காலையில் பார்த்த அந்த அலுவலகப் பொறுப்பதிகாரி அல்லவா?
ஒரு பால்காரர், தம் மாடுகளுக்குத் தீனி வாங்க வந்தவர், இவரைப் பார்த்தார். இந்தப் பால்காரர்தாம் இவர் வீட்டுக்குப் பால் தருகிறவராம்! பால்காரர் இவரை வலிய அழைத்துச் சென்று தம் மிதிவண்டியின் அகன்ற பின்னிருக்கையில் அமர்த்திக் கொண்டு இவருடைய வீட்டை நோக்கிச் சென்றார்.
மிதிவண்டியில் அமர்ந்திருந்த அவர், கிடையாகவும் சாய்வாகவும் ஆடிக்கொண்டே செல்கையில், அவர் அமர்ந்திருந்த அந்த மிதிவண்டியும் குடித்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது!
மதுவருந்தும் ஒருவன், தான் மது அருந்தாத நிலையில் தெளிவாக இருக்கிறான் என்று கருதிக் கொள்ளுங்கள். அப்பொழுது, மது அருந்திய வேறு ஒரு ஆள் மனத்தாலும் பேச்சாலும் செயலாலும் தன் கட்டுப்பாட்டை இழந்து இழிந்த நிலையில், ஆடையிழந்து, உளறிக் கொண்டு, கண்ட இடத்தில் விழுந்து எழமுடியாத நிலையில் கிடப்பதைப் பார்க்கிறான்.
அந்தக் காட்சியைக் கண்ட பிறகாவது, தான் மது அருந்துவதால் தனக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்; மது அருந்தலைக் கைவிட்டு அதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என உணர வேண்டும். இதையே இரண்டடிகளில் வலியுறுத்திக் கூறுகிறது குறள்.
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
------------------------------------------------------------------------
லேபிள்கள்:
குறள்,
மது,
மதுவருந்தலால் கேடு
வியாழன், 30 ஜூலை, 2009
ஆற்றாமைச் சீற்றத்தில் ஐந்து!
1
2
ஓருயிர்க்கே வஞ்சமென ஓரினத்தைக் கொன்றழித்தார் !
நேரதற்கு நீதுணையாய் நின்றா'யே ! – பூரியனே !
சீருறையும் செந்தமிழர் செப்பும் தலைவனெனப்
பேருனக்கேன் சீச்சீ பிழை !
3
4
எல்லா நிலையிலும் ஈழத் தமிழரின்
பொல்லா நிலைக்குப் பொறுப்பு நீ ! – நல்லார்
உமிழ்கிறார்! தூ!தூ! உனக்குப் பதவி
அமிழா திருக்கும் அமர்.
5
6
கட்டபொம்மை ஆங்கிலர்க்குக் காட்டிக் கொடுத்திட்ட
எட்டப்பன் போலானார் எம்முதல்வர் ! – திட்டமுடன்
சிங்களர் ஈழத்தில் செந்தமிழர் கொன்றழிக்கப்
பங்கேற்றார் தில்லியுடன் பார் !
ஆய்தங் கொடுத்தாய் ! அரிய உளவுரைத்தாய் !
2
ஓருயிர்க்கே வஞ்சமென ஓரினத்தைக் கொன்றழித்தார் !
நேரதற்கு நீதுணையாய் நின்றா'யே ! – பூரியனே !
சீருறையும் செந்தமிழர் செப்பும் தலைவனெனப்
பேருனக்கேன் சீச்சீ பிழை !
3
4
எல்லா நிலையிலும் ஈழத் தமிழரின்
பொல்லா நிலைக்குப் பொறுப்பு நீ ! – நல்லார்
உமிழ்கிறார்! தூ!தூ! உனக்குப் பதவி
அமிழா திருக்கும் அமர்.
5
6
கட்டபொம்மை ஆங்கிலர்க்குக் காட்டிக் கொடுத்திட்ட
எட்டப்பன் போலானார் எம்முதல்வர் ! – திட்டமுடன்
சிங்களர் ஈழத்தில் செந்தமிழர் கொன்றழிக்கப்
பங்கேற்றார் தில்லியுடன் பார் !
ஆய்தங் கொடுத்தாய் ! அரிய உளவுரைத்தாய் !
போய்நின்று போரும் புரிந்திட்டாய் ! – ஏய்த்திட்டாய் !
சீச்சீ ! சிறுமையாய் ! சிங்களர்க்கும் கீழானாய் !
தீச்செயலில் தில்லி திளைத்து.
9
0
ஏடுமழும் ஈழத்தே எந்தமிழர் துன்பெழுதில்
வீடுநா டெல்லாம்போய் வெந்துயரில் ! – ஈடு
சொலவுலகில் யார்க்கின்னல் சூழ்ந்ததிதைப் போன்றே
உலகிலறம் ஓய்ந்ததென ஓது !
ஞ
ஞ
நூல் எழுதுவோர், ‘பாயிரம்’ அறிவோம்!
ஞ
ஞ
பாயிரம் என்பது முகவுரை. எந்த நூல் எழுதுவதாயினும் அந்த நூலுக்குப் பாயிரம் எழுத வேண்டுமென்பது மரபு. சிறந்த நூல்களுக்கு முகவுரை இன்றியமையாதது. அதனால் நூலை ஆராய்ந்து, அதன் முன்னதாக, அழகிய நுட்ப உரையாக, அணிந்துரையை, எந்த ஒரு நூற்கும் பெரிதும் இயைபுபட நந்தமிழ்ப் பெரியோர் வைத்தனர்.
“ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே” என்கிறது நன்னூல். ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும், பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப் படாது என்பதே இதன் பொருளாகும்.
பாயிரத்தின் தேவை
பாயிரம், நூலிற்குப் புறத்தே உரைக்கப் படுவதால், புறவுரையாகும். கணவனுக்கு நல்ல மனைவி போல இன்றியமையாச் சிறப்பினதாகவும் அழகிய பெரிய நகரத்திற்கு வடிவமைந்த வாயில் மாடம் போல அழகியல் சிறப்பினதாகவும் அமைவது பாயிரம் என்பர்.
மேலும், பாயிரம் யானைக்குப் பாகன் போலவும், வானத்திற்கு விளக்கமாகிய நிலவும் கதிரவனும் போலவும் இன்றியமையாச் சிறப்புடையது என்றும் கூறுவர். பாயிரமின்றி நூல் படிப்பார், குன்று முட்டிய குருவியைப் போலவும் மலைப் பகுதிகளில் மாட்டிக் கொண்ட மான் போலவும் இடர்ப் படுவராம்.
பாயிரம்
பாய் என்ற சொல் பரந்து கிடப்பது என்று பொருளுடையது என்றும் இதனை அடியாகக் கொண்டு பிறந்த பாயிரம் என்ற சொல், பரந்து விரிந்து செல்லும் நூலின் தொடக்கப் பகுதி என்று பொருள்படும் என்றும் அறிஞர் கூறுவர்.
பாயிரத்திற்கு மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தரும் விளக்கத்தைக் காண்போம்: போர் மறவர் போர்க்களத்தில் முதலில் பகைவரை விளித்துக் கூறும் நெடுமொழி என்னும் மறவியல் முகவுரையைப் பாயிரம் குறித்தது. பின்பு பொருள் விரிவாக்கமாக நூலின் முகவுரையைக் குறித்தது என்கிறார். பயிர்தல் என்றால் ஊர்கின்ற விலங்குகளும் பறவைகளும் தமக்குள் ஒன்றை ஒன்று அழைத்தல்.
பயிர் > பயிரம் > பாயிரம் = அழைப்பு : போருக்கு அழைக்கும் முகவுரை, நூலின் முகவுரை.
பாயிரம், பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம் என இரண்டு வகையினதாகும்.
பொதுப் பாயிரம்
எல்லா நூல்களின் முன்பும் பொதுவாக உரைக்கப் படுவது பொதுப் பாயிரம். நூலுள் சொல்லும் பொருளல்லாத, நூலின் இயல்பு, நூலாசிரியனின் இயல்பு, கூறுகின்ற முறை, படிப்போர் இயல்பு, படிக்கும் முறை ஆகிய ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரமாகும்.
( கற்பிக்கப்படும் நூலாயின், நூல், கற்பிக்கும் ஆசிரியன், கற்பிக்கும் முறை, கற்கும் மாணவன், கற்கும் முறை ஆகிய ஐந்தினையும் பொதுப் பாயிரம் விளக்கும்)
சிறப்புப் பாயிரம்
பொதுப்பாயிரத்தின் ஐந்து கூறுகளும் எல்லா நூல்களுக்கும் பொதுவாய் கூறப்படுவதாகும். அவையெல்லாம் நூலுள் சொல்லும் பொருளல்லாத புறப்பொருளைக் கூறுவன.
அப் பொதுப் பாயிரம் போலன்றி நூலிற் சொல்லப் படுகின்ற பொருள் முதலிய உணர்த்துவது சிறப்புப் பாயிரமாகும். இப் பாயிரம், நூலுக்கு இன்றியமையாததாகும். அணியிழை மகளிர்க்கு, அணிகளில் சிறந்த ஆடை போல நூலுக்குச் சிறப்பானது சிறப்புப் பாயிரம் என்பர்.
சிறப்புப் பாயிரத்தில் கூறுவன
நூலாசிரியர் பெயர், நூல் வந்த வழி, தமிழகம் முதலாக நூல் வழங்கப்படும் நிலப்பரப்பு, நூலின் பெயர், நூலின் வகை அல்லது கட்டமைப்பு, நூலிற் கூறப்பட்டுள்ள பொருள், நூல் யாருக்காக எழுதப்படுகிறது என்ற குறிப்பு, நூலால் பெறக்கூடிய பயன் ஆகிய எட்டுச் செய்திகளையும் சிறப்புப் பாயிரம் செப்பமாகக் கூறும்.
இவற்றுடன் நூல் எப்பொழுது, எவ்விடத்தில், எக்காரணம் பற்றி எழுதப்பட்டது என்பனவும் கூறப்படும்.
மேற்கண்ட பதினொரு குறிப்பையும் ஒருங்கேயேனும் ஒன்றிரண்டு குறைவாகவேனும் கூறி, அந்நூலைச் சிறப்பிப்பதும் மதிப்புரையும் சிறப்புப் பாயிரமே.
சிறப்புப்பாயிரத்தை எழுதத் தகுந்தோர்
நூலாசிரியரின் ஆசிரியர், நூலாசிரியரோடு உடன் பயின்றவர், நூலாசிரியரின் மாணவர், நூலின் உரை ஆசிரியர் சிறப்புப் பாயிரம் எழுதுதற்கு உரியோர் ஆவர்.
இதுகாறும் தோன்றாத சிறந்த நூல்களைப் படைத்து, பல துறைகளிலும் நிறைவான புலமையைப் பெற்றிருந்தாலும் ஒருவர் தம்மைத்தாமே புகழ்ந்து தம் நூலில் தாமே சிறப்புப் பாயிரம் எழுதிக் கொள்ளுதல் பெருமைக்குரிய தகுதி ஆகாது.
ஆயினும் கடவுள் வணக்கம், அவையடக்கம், நூற் பொருள், நூல் வந்த வழி, நூற் பெயர் முதலியவற்றை நூலாசிரியர் கூறுவதே பொருத்தம் ஆகையானும் அவை எவ்வகையினும் தற்புகழ்ச்சிக்கு இடந் தராமையானும் அவற்றை நூலாசிரியர் கூறுவது தக்கது என்று கொள்ளப்படும். அவ்வாறு கூறுவது தற் சிறப்புப் பாயிரம் என்று பெயர் பெறும்.
பாயிரத்தின் பெயர்கள்
மேற்கூறிய பொதுப் பாயிரம் சிறப்புப் பாயிரம் இருவகைக்கும் பொதுவாகவும் சிறப்பாகவும்பல பெயர்கள் உள்ளன. அவை, முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, பாயிரம் என்னும் எட்டாம். இவற்றின் பொருள் விளக்கம் வருமாறு:
முகவுரை : இது நூலுக்கு முகத்தைப் போன்று இருப்பது. பெரும்பாலும் நூல், ஆசிரியன், பதிப்பு முதலியவற்றின் வரலாற்றைக் கூறுவது.
பதிகம் : இது நூலாசிரியனின் பெயர், நூல் வந்த வழி முதலிய பத்து அல்லது பதினொரு குறிப்புகளைத் தருவது.
அணிந்துரை : நூலுக்கு அணியாக (அழகாக) அமைவது.
நூன்முகம் : இது நூல் முகத்து உரைக்கப் படுவது.
புறவுரை : நூலின் கருத்து அல்லாமல் நூலோடு தொடர்புடைய செய்திகளை வரலாற்றை எடுத்துரைப்பது.
தந்துரை : இது நூலிற் சொல்லப்படாத பொருளைத் தந்துரைப்பது. பேரறிஞர்களின் முன்னுரை பெரும்பாலும் தந்துரையாக இருக்கும்.
புனைந்துரை : இது நூலின் சிறந்த கூறுகளை எடுத்துரைத்துப் போற்றுவது. ( புனைதல் = சிறப்பித்தல், புகழ்தல்)
பாயிரம் : இது முதன்முதல் பொருகளத்துப் போர் முகவுரையாகப் பகைவரை விளித்துத் தம் வலிமைச் சிறப்பைக் கூறும் நெடுமொழியைக் குறித்தது. பின்பு நூல் முகவுரைக்கும் வழங்கத் தலைப்பட்டது.
இக் கால நூல் வழக்கில், புறவுரை, பாயிரம் என்னும் இரண்டு பெயர்களும் பொதுப் பாயிரத்திற்கும் சிறப்புப் பாயிரத்திற்கும் பொதுவாக உள்ளன. மற்றவை சிறப்புப் பாயிரத்திற்கே சிறப்பாக உள்ளன்.
“உரைமுகம், தோற்றுவாய், முன்னுரை, பதிப்புரை, மதிப்புரை, சாத்துப்பா (சார்த்துப்பா) முதலிய பெயர்கள் இக்காலத்து எழுந்த புது வழக்கு. இவற்றுள் முன்னிரண்டும் தற்சிறப்புப் பாயிரத்தையும் பின் மூன்றும் சிறப்புப் பாயிரத்தையும், இடையொன்றும் அவ்விரண்டையும் சாரும். சாத்துப்பா என்பது செய்யுள். ஏனைய உரைநடை” என்று மொழிநூற் கதிரவன் பாவாணர் விளக்கிக் கூறுகிறார்.
............................................................................................................................................
உதவிய நூல்களும் இயற்றியோரும்:
1, தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை.
2. நன்னூல் – எழத்ததிகாரம் தமிழண்ணல் உரை.
3. தேவநேயம் -10 தொகுப்பாசிரியர் : புலவர் இரா.இளங்குமரன்.
4. நன்னூல் - மூலமும் தெளிவுரையும் முனைவர் சுயம்பு
உதவியோர்க்கு உளமார்ந்த நன்றி.
_________________________________________________________________________________
ஞ
பாயிரம் என்பது முகவுரை. எந்த நூல் எழுதுவதாயினும் அந்த நூலுக்குப் பாயிரம் எழுத வேண்டுமென்பது மரபு. சிறந்த நூல்களுக்கு முகவுரை இன்றியமையாதது. அதனால் நூலை ஆராய்ந்து, அதன் முன்னதாக, அழகிய நுட்ப உரையாக, அணிந்துரையை, எந்த ஒரு நூற்கும் பெரிதும் இயைபுபட நந்தமிழ்ப் பெரியோர் வைத்தனர்.
“ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே” என்கிறது நன்னூல். ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும், பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப் படாது என்பதே இதன் பொருளாகும்.
பாயிரத்தின் தேவை
பாயிரம், நூலிற்குப் புறத்தே உரைக்கப் படுவதால், புறவுரையாகும். கணவனுக்கு நல்ல மனைவி போல இன்றியமையாச் சிறப்பினதாகவும் அழகிய பெரிய நகரத்திற்கு வடிவமைந்த வாயில் மாடம் போல அழகியல் சிறப்பினதாகவும் அமைவது பாயிரம் என்பர்.
மேலும், பாயிரம் யானைக்குப் பாகன் போலவும், வானத்திற்கு விளக்கமாகிய நிலவும் கதிரவனும் போலவும் இன்றியமையாச் சிறப்புடையது என்றும் கூறுவர். பாயிரமின்றி நூல் படிப்பார், குன்று முட்டிய குருவியைப் போலவும் மலைப் பகுதிகளில் மாட்டிக் கொண்ட மான் போலவும் இடர்ப் படுவராம்.
பாயிரம்
பாய் என்ற சொல் பரந்து கிடப்பது என்று பொருளுடையது என்றும் இதனை அடியாகக் கொண்டு பிறந்த பாயிரம் என்ற சொல், பரந்து விரிந்து செல்லும் நூலின் தொடக்கப் பகுதி என்று பொருள்படும் என்றும் அறிஞர் கூறுவர்.
பாயிரத்திற்கு மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தரும் விளக்கத்தைக் காண்போம்: போர் மறவர் போர்க்களத்தில் முதலில் பகைவரை விளித்துக் கூறும் நெடுமொழி என்னும் மறவியல் முகவுரையைப் பாயிரம் குறித்தது. பின்பு பொருள் விரிவாக்கமாக நூலின் முகவுரையைக் குறித்தது என்கிறார். பயிர்தல் என்றால் ஊர்கின்ற விலங்குகளும் பறவைகளும் தமக்குள் ஒன்றை ஒன்று அழைத்தல்.
பயிர் > பயிரம் > பாயிரம் = அழைப்பு : போருக்கு அழைக்கும் முகவுரை, நூலின் முகவுரை.
பாயிரம், பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம் என இரண்டு வகையினதாகும்.
பொதுப் பாயிரம்
எல்லா நூல்களின் முன்பும் பொதுவாக உரைக்கப் படுவது பொதுப் பாயிரம். நூலுள் சொல்லும் பொருளல்லாத, நூலின் இயல்பு, நூலாசிரியனின் இயல்பு, கூறுகின்ற முறை, படிப்போர் இயல்பு, படிக்கும் முறை ஆகிய ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரமாகும்.
( கற்பிக்கப்படும் நூலாயின், நூல், கற்பிக்கும் ஆசிரியன், கற்பிக்கும் முறை, கற்கும் மாணவன், கற்கும் முறை ஆகிய ஐந்தினையும் பொதுப் பாயிரம் விளக்கும்)
சிறப்புப் பாயிரம்
பொதுப்பாயிரத்தின் ஐந்து கூறுகளும் எல்லா நூல்களுக்கும் பொதுவாய் கூறப்படுவதாகும். அவையெல்லாம் நூலுள் சொல்லும் பொருளல்லாத புறப்பொருளைக் கூறுவன.
அப் பொதுப் பாயிரம் போலன்றி நூலிற் சொல்லப் படுகின்ற பொருள் முதலிய உணர்த்துவது சிறப்புப் பாயிரமாகும். இப் பாயிரம், நூலுக்கு இன்றியமையாததாகும். அணியிழை மகளிர்க்கு, அணிகளில் சிறந்த ஆடை போல நூலுக்குச் சிறப்பானது சிறப்புப் பாயிரம் என்பர்.
சிறப்புப் பாயிரத்தில் கூறுவன
நூலாசிரியர் பெயர், நூல் வந்த வழி, தமிழகம் முதலாக நூல் வழங்கப்படும் நிலப்பரப்பு, நூலின் பெயர், நூலின் வகை அல்லது கட்டமைப்பு, நூலிற் கூறப்பட்டுள்ள பொருள், நூல் யாருக்காக எழுதப்படுகிறது என்ற குறிப்பு, நூலால் பெறக்கூடிய பயன் ஆகிய எட்டுச் செய்திகளையும் சிறப்புப் பாயிரம் செப்பமாகக் கூறும்.
இவற்றுடன் நூல் எப்பொழுது, எவ்விடத்தில், எக்காரணம் பற்றி எழுதப்பட்டது என்பனவும் கூறப்படும்.
மேற்கண்ட பதினொரு குறிப்பையும் ஒருங்கேயேனும் ஒன்றிரண்டு குறைவாகவேனும் கூறி, அந்நூலைச் சிறப்பிப்பதும் மதிப்புரையும் சிறப்புப் பாயிரமே.
சிறப்புப்பாயிரத்தை எழுதத் தகுந்தோர்
நூலாசிரியரின் ஆசிரியர், நூலாசிரியரோடு உடன் பயின்றவர், நூலாசிரியரின் மாணவர், நூலின் உரை ஆசிரியர் சிறப்புப் பாயிரம் எழுதுதற்கு உரியோர் ஆவர்.
இதுகாறும் தோன்றாத சிறந்த நூல்களைப் படைத்து, பல துறைகளிலும் நிறைவான புலமையைப் பெற்றிருந்தாலும் ஒருவர் தம்மைத்தாமே புகழ்ந்து தம் நூலில் தாமே சிறப்புப் பாயிரம் எழுதிக் கொள்ளுதல் பெருமைக்குரிய தகுதி ஆகாது.
ஆயினும் கடவுள் வணக்கம், அவையடக்கம், நூற் பொருள், நூல் வந்த வழி, நூற் பெயர் முதலியவற்றை நூலாசிரியர் கூறுவதே பொருத்தம் ஆகையானும் அவை எவ்வகையினும் தற்புகழ்ச்சிக்கு இடந் தராமையானும் அவற்றை நூலாசிரியர் கூறுவது தக்கது என்று கொள்ளப்படும். அவ்வாறு கூறுவது தற் சிறப்புப் பாயிரம் என்று பெயர் பெறும்.
பாயிரத்தின் பெயர்கள்
மேற்கூறிய பொதுப் பாயிரம் சிறப்புப் பாயிரம் இருவகைக்கும் பொதுவாகவும் சிறப்பாகவும்பல பெயர்கள் உள்ளன. அவை, முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, பாயிரம் என்னும் எட்டாம். இவற்றின் பொருள் விளக்கம் வருமாறு:
முகவுரை : இது நூலுக்கு முகத்தைப் போன்று இருப்பது. பெரும்பாலும் நூல், ஆசிரியன், பதிப்பு முதலியவற்றின் வரலாற்றைக் கூறுவது.
பதிகம் : இது நூலாசிரியனின் பெயர், நூல் வந்த வழி முதலிய பத்து அல்லது பதினொரு குறிப்புகளைத் தருவது.
அணிந்துரை : நூலுக்கு அணியாக (அழகாக) அமைவது.
நூன்முகம் : இது நூல் முகத்து உரைக்கப் படுவது.
புறவுரை : நூலின் கருத்து அல்லாமல் நூலோடு தொடர்புடைய செய்திகளை வரலாற்றை எடுத்துரைப்பது.
தந்துரை : இது நூலிற் சொல்லப்படாத பொருளைத் தந்துரைப்பது. பேரறிஞர்களின் முன்னுரை பெரும்பாலும் தந்துரையாக இருக்கும்.
புனைந்துரை : இது நூலின் சிறந்த கூறுகளை எடுத்துரைத்துப் போற்றுவது. ( புனைதல் = சிறப்பித்தல், புகழ்தல்)
பாயிரம் : இது முதன்முதல் பொருகளத்துப் போர் முகவுரையாகப் பகைவரை விளித்துத் தம் வலிமைச் சிறப்பைக் கூறும் நெடுமொழியைக் குறித்தது. பின்பு நூல் முகவுரைக்கும் வழங்கத் தலைப்பட்டது.
இக் கால நூல் வழக்கில், புறவுரை, பாயிரம் என்னும் இரண்டு பெயர்களும் பொதுப் பாயிரத்திற்கும் சிறப்புப் பாயிரத்திற்கும் பொதுவாக உள்ளன. மற்றவை சிறப்புப் பாயிரத்திற்கே சிறப்பாக உள்ளன்.
“உரைமுகம், தோற்றுவாய், முன்னுரை, பதிப்புரை, மதிப்புரை, சாத்துப்பா (சார்த்துப்பா) முதலிய பெயர்கள் இக்காலத்து எழுந்த புது வழக்கு. இவற்றுள் முன்னிரண்டும் தற்சிறப்புப் பாயிரத்தையும் பின் மூன்றும் சிறப்புப் பாயிரத்தையும், இடையொன்றும் அவ்விரண்டையும் சாரும். சாத்துப்பா என்பது செய்யுள். ஏனைய உரைநடை” என்று மொழிநூற் கதிரவன் பாவாணர் விளக்கிக் கூறுகிறார்.
............................................................................................................................................
உதவிய நூல்களும் இயற்றியோரும்:
1, தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை.
2. நன்னூல் – எழத்ததிகாரம் தமிழண்ணல் உரை.
3. தேவநேயம் -10 தொகுப்பாசிரியர் : புலவர் இரா.இளங்குமரன்.
4. நன்னூல் - மூலமும் தெளிவுரையும் முனைவர் சுயம்பு
உதவியோர்க்கு உளமார்ந்த நன்றி.
_________________________________________________________________________________
லேபிள்கள்:
நூல் எழுதுவோர்க்கு,
பாயிரம்
புதன், 29 ஜூலை, 2009
வள்ளல்கள் எழுவரும் அவர்தம் சிறப்பும்!
ஞ
ஞ
பள்ளிப் படிப்பின்போது, ‘கடையெழு வள்ளல்கள்’ என்று படித்த நினைவு பலருக்கும் இருக்கும். அந்த ஏழு வள்ளல்கள் யார் யார்? என்று கேட்டால், பெரும்பாலோர் ‘பாரி’ என்று உடனே தொடங்கி, அங்கேயே நிற்பதைக் காணலாம். சிலர் பாரி, காரி, ஓரி வரை வந்து நின்று போவதைக் காணலாம்.
தமிழ்மொழி சார்ந்த அலுவலில் இருக்கும் பலரே உடனே விடை சொல்ல முடியாத நிலையில் இருக்கும் போது நாம் இதைப் பெரிய குறையாக எண்ண வேண்டியது இல்லைதான்!
கழக(சங்க) இலக்கியமான பத்துப்பாட்டில் மூன்றாம் பாடல் சிறு பாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார்.
கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பது உண்மையாகும்.
இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன.
இனி, அந்த ஏழு வள்ளல்களின் பெயரையும் அவர்களின் சிறப்பையும் காண்போம்:
பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி ஆகியோரே அவர்களாவர்.
பேகன் பொதினி(பழனி) மலைக்குத் தலைவர். மழைவளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம் மயிலுக்குக் கொடுத்தார் - அம்மயிலுக்குப் போர்த்தினார்.
மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.
புறநானூற்றுப் பாடல் 142இல் புலவர் பரணர், “கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழைபோலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான்” என்ற கருத்தமைத்துப் பாடியுள்ளார்.
பாரி பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.
பாரியின் வள்ளன்மையைக் கபிலர் பல புறநானூற்றுப் பாடல்களில் போற்றிப் பாடியுள்ளார். அவற்றுள், உரை விளக்கம் தேவைப் படாத ஒரு பாடல் இது:
பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே. - (புறம். 107)
காரி, திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே ‘மலாடு’ ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார்.
இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர். உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை இதுதான்: ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையை ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்!
காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.
ஆய், பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தவராம்!
வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.
அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான், அதிகைமான், அஞ்சி எனப் பல பெயர்களில் வழங்கப் படுகிறார். இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்.
இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக் கனி, தன்னை உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழவைக்கும் வலியுடையது. அக் கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.
அதியமான் நெடுமான் அஞ்சியைப் போற்றிப் புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.
நள்ளி, மலைவளஞ் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர்.
நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாத
வாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.
நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.
ஓரி சிறிய மலைகள உடைய நல்ல நாட்டிற்குத் தலைவராவார். இவர் விற்போரில் வல்லாராதலின், இவ் வள்ளலை ‘வல்வில் ஓரி’ என்றும் அழைப்பர்.
ஒரி, நெருங்கிய கிளைகளும், பூத்துக் குலுங்கியிருக்கின்ற நல்ல மலர்களையும் உடைய, இளமையும் முதிர்ச்சியும் கொண்ட சுரபுன்னை மரங்களும், சிறிய மலைகளும் அமைந்த நல்ல நாட்டைக் கூத்தாடுவோர்க்குப் பரிசிலாக் கொடுத்தவன். ஓரியிடம் பெருவளத்தைக் கொடையாகப் பெற்றதால், புலவர் வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய தொழில்களைச் செய்யாது சோம்பியிருந்து, அவற்றை மறந்து போயினராம்!
ஓரியின் சிறப்பைக் கூறும் வன்பரணரின் பாடல்களைப் புறநானூற்றில் காண்கிறோம்.
வள்ளல்களின் சிறப்பை, புறநானூற்றுப் பாடல்களில் மட்டுமின்றி நற்றிணை, அகநானூறு போன்ற பிற கழக இலக்கியங்களிலும் கூட காணலாம்.
--------------------------------------------------------------------------
ஞ
பள்ளிப் படிப்பின்போது, ‘கடையெழு வள்ளல்கள்’ என்று படித்த நினைவு பலருக்கும் இருக்கும். அந்த ஏழு வள்ளல்கள் யார் யார்? என்று கேட்டால், பெரும்பாலோர் ‘பாரி’ என்று உடனே தொடங்கி, அங்கேயே நிற்பதைக் காணலாம். சிலர் பாரி, காரி, ஓரி வரை வந்து நின்று போவதைக் காணலாம்.
தமிழ்மொழி சார்ந்த அலுவலில் இருக்கும் பலரே உடனே விடை சொல்ல முடியாத நிலையில் இருக்கும் போது நாம் இதைப் பெரிய குறையாக எண்ண வேண்டியது இல்லைதான்!
கழக(சங்க) இலக்கியமான பத்துப்பாட்டில் மூன்றாம் பாடல் சிறு பாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார்.
கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பது உண்மையாகும்.
இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன.
இனி, அந்த ஏழு வள்ளல்களின் பெயரையும் அவர்களின் சிறப்பையும் காண்போம்:
பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி ஆகியோரே அவர்களாவர்.
பேகன் பொதினி(பழனி) மலைக்குத் தலைவர். மழைவளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம் மயிலுக்குக் கொடுத்தார் - அம்மயிலுக்குப் போர்த்தினார்.
மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.
புறநானூற்றுப் பாடல் 142இல் புலவர் பரணர், “கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழைபோலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான்” என்ற கருத்தமைத்துப் பாடியுள்ளார்.
பாரி பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.
பாரியின் வள்ளன்மையைக் கபிலர் பல புறநானூற்றுப் பாடல்களில் போற்றிப் பாடியுள்ளார். அவற்றுள், உரை விளக்கம் தேவைப் படாத ஒரு பாடல் இது:
பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே. - (புறம். 107)
காரி, திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே ‘மலாடு’ ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார்.
இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர். உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை இதுதான்: ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையை ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்!
காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.
ஆய், பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தவராம்!
வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.
அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான், அதிகைமான், அஞ்சி எனப் பல பெயர்களில் வழங்கப் படுகிறார். இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்.
இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக் கனி, தன்னை உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழவைக்கும் வலியுடையது. அக் கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.
அதியமான் நெடுமான் அஞ்சியைப் போற்றிப் புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.
நள்ளி, மலைவளஞ் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர்.
நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாத
வாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.
நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.
ஓரி சிறிய மலைகள உடைய நல்ல நாட்டிற்குத் தலைவராவார். இவர் விற்போரில் வல்லாராதலின், இவ் வள்ளலை ‘வல்வில் ஓரி’ என்றும் அழைப்பர்.
ஒரி, நெருங்கிய கிளைகளும், பூத்துக் குலுங்கியிருக்கின்ற நல்ல மலர்களையும் உடைய, இளமையும் முதிர்ச்சியும் கொண்ட சுரபுன்னை மரங்களும், சிறிய மலைகளும் அமைந்த நல்ல நாட்டைக் கூத்தாடுவோர்க்குப் பரிசிலாக் கொடுத்தவன். ஓரியிடம் பெருவளத்தைக் கொடையாகப் பெற்றதால், புலவர் வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய தொழில்களைச் செய்யாது சோம்பியிருந்து, அவற்றை மறந்து போயினராம்!
ஓரியின் சிறப்பைக் கூறும் வன்பரணரின் பாடல்களைப் புறநானூற்றில் காண்கிறோம்.
வள்ளல்களின் சிறப்பை, புறநானூற்றுப் பாடல்களில் மட்டுமின்றி நற்றிணை, அகநானூறு போன்ற பிற கழக இலக்கியங்களிலும் கூட காணலாம்.
--------------------------------------------------------------------------
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
