ஞாயிறு, 15 ஜனவரி, 2012

அடிகளாசிரியர்க்கு இரங்கல்


அடிகளாசிரியர்க்கு இரங்கல்
                           
(விழுப்புரம் மாவட்டத்தில், சின்னசேலத்தை அடுத்த கூகையூர் என்னும் குகையூரில் குடத்திலிட்ட விளக்காய் வாழ்ந்த ஏற்றமிகு தமிழறிஞர், தொல்காப்பிய திருமந்திர ஆய்வாளர் அடிகளாசிரியர் கடந்த 8-1-2012இல் இயற்கை எய்திதினார். அப்பெரியாரின் நினைவேந்தும் பா இது)

உலகில்சீர் தொண்டாற்றி ஒளிசேர்த்தார் பலருள்ளும்
ஒப்பாய்க் கூறப்
பலகற்றும் ஆய்ந்தாழம் பற்பலநூல் விளக்கமுற
படைத்த ளித்தும்
இலகுறவே கூரையகம் ஏற்றதென கோரைப்பாய்
இருந்தே வாழ்ந்த
அலகில்லா எளிமைசேர் அடிகளாசி ரியருமைப்போல்
யாரே உண்டு?

மாறலிலாத் தமிழ்ப்பற்றில் மறைமலையார் நற்றொடர்பில்
மக்க ளுக்கே
தூறலற அழகழகாய்த் தூயதமிழ்ப் பெயரிட்டீர்!
தோய்ந்த ஆய்வுச்
சேறலுற செம்மொழியாம் செந்தமிழ்த்தொல் காப்பியத்தின்
சிறப்பு ரைக்கும்
சாறமுறு நூல்பலவும் சமைத்தளித்தீர்! ஐயமற
தமிழ்கற் பித்தீர்!

நூற்றியிரண் டாண்டகவை நுடங்காத வாழ்வினிலே
நுவன்றீர் தேர்ந்தே
தேற்றமுற ஆய்ந்தறிந்த தெளிவார்ந்த கருத்துக்கள்;
தேடி வந்த
ஏற்றமுறு சிறப்புபல என்றாலும் இவைவிடுத்தே
எங்கே போனீர்?
ஆற்றல்சால் உம்நினைவை அகத்தேற்றோம்! வணங்குகிறோம்!
அடிகள் ஐயா!

(இலகுற எளிமையுற; தூறல் பழிச்சொல்லல், சேறல் எழுச்சி)

---------------------------------------------------------------

சனி, 31 டிசம்பர், 2011

நூலகம்


நூலகம்

(அண்மையில் நடைபெற்ற நூலக விழாவில் பாடியது)

அனைவர்க்கு மென்றன் அன்பு வணக்கம்!
முனைதமிழ் மொழியில் நினைவறா வழக்குறும்

ஆலகம் என்பது ஆலடி நிழலாம்!
ஏலகம் என்பது எளிதிலொப் புளமாம்!
ஓலகம் என்பது ஒலிசெயும் கடலாம்!
காலகம் என்பது காற்றுசேர் நீராம்!

கீலகம் என்பது கேடுசெய் தந்திரம்!
கூலகம் என்பது குதிர்க ளஞ்சியம்!
சாலகம் என்பது சாளரம் பலகணி!
சூலகம் என்பது சூலுறு கருப்பை!
சேலகம் என்பது செறிகயல் சேரிடம்!
தாலகம் என்பது தாலாட்டு நா,வாய்!

கோலகம் என்பது குழகழகு வீடாம்!
தோலகம் என்பது தோற்பொருட் கடையாம்!
நீலகம் என்பது நெடுங்காழ் இருளாம்!
நோலகம் என்பது நோன்பிரு இடமாம்!

பேலகம் என்பது பெரும்புணை தெப்பம்!
போலகம் என்பது புகலுமகத் துவமை!
மேலகம் என்பது மேலுள்ள இல்லம்!
வாலகம் என்பது வயங்கொளி மாடம்!
மாலகம் என்பது மருந்தெனும் வேம்பாம்!
மூலகம் என்பது முழுத்தனி அணுவாம்!

நூலகம் என்பதோ நுவன்றிடின் பற்பல
சாலத் திரட்டிய நூலுள அகமாம்!

அறிவுக் கருவூலம், அறிவியல் திரட்டு,
செறிமொழி காக்கும் சிறந்த காப்பகம்!
இலக்கியப் பெட்டகம், துலக்க விளக்கமாய்ப்
பலவர லாறுகள் பாங்குறக் கூறகம்!

உளத்தியல் சமயம் உருளுகோள் கணியம்
புலன்கவர் விளக்கப் புத்தாய் வுரைகள்!
நெறியுற மாந்தனை நேர்பண் புறுத்தி
அறிவுத்திறனைச் செறிவுற அளிக்கும்!
நலவள உடலும் ஞானமும் முயன்றால்
செலவில் லாமல் சேர்ந்திட உதவிடும்!

மருத்துவ நூல்கள் மருந்துகள் இன்னும்
திருத்தமாய்க் கட்டுரை தேர்ந்த படங்கள்
விளக்கக் காணொளி துளக்கறும் காட்சிகள்!
துலக்க விளக்கமாய் அறுவை மருத்துவம்!

குழந்தைகள் அறிவைக் கூட்டி வளர்த்திடும்
கழிபெருந் திரட்சி! கல்விசேர் மாந்தனை
மாந்த னாகவும் மீமாந்த னாகவும்
ஏழ்ந்திட மாறி வாழ்ந்திட வழிதரும்!

இத்தகை நூலகம் ஏறிப் படித்தே
முத்தென ஒளிர்ந்தோர் எத்தனை யோபேர்!

கல்வெட் டெழுதியும் பல்வகை ஓவியம்
கல்லில் பாறையில் கவினுறத் தீட்டியும்
பதிவுசெய் தனர்நம் பழந்தமிழ் மக்கள்!

இதுநாம் அறிந்ததே! புதிதாய்க் குழைத்த
களிமண் தட்டினில் தெளிவுற எழுதி
வளிகுறை சூளையில் வகையுறச் சுட்டு
தனித்தனி ஏட்டைத் தகுதுறை பிரித்தே
இனிதுறுங் கோயிலில், நனிகாப் பரசிலில்
வைத்துப் போற்றி வந்தனர் அந்நாள்
மொய்ப்புகழ் மொசப்பத் தோமியோ மக்கள்!

நூலகத் தோற்ற நுனைமுன் முயற்சியிஞ்
ஞாலத் திவையென ஏல உரைக்கலாம்!

திறப்பீர் சிறந்தவோர் நூலகந் தன்னை!
திடமுடன் மூடுவீர் சிறைஒரு நூற்றினை!
என்ப தறிஞர் இயம்பிய பொன்மொழி!
என்றும் மாறா இலக்கணப் புதுமொழி!

நூறா யிரம்நூல் நூலக மொன்று
தீராச் சிறப்பின் தெற்கா சியாவில்
பெரிதென யாழ்நகர் பிறங்கி யிருந்ததைச்
சிறியர் சிங்களர் தீயிட் டழித்த
நெறியற் றசெயல் நீளுல கறிந்து
வெறிய ரவறின் வறிதறி விகழ்ந்தது!

புதிது பிதிதாய்ப் பொலிவுற வீடுகள்
இதுயெமக் குரியதென் றெழுச்சியில் கட்டுவோம்!
எதுஎதற் கெலாமோ எழிலுற அறைகள்
புதுவீட் டினிலே புழங்க அமைக்கிறோம்!
படித்தற் கென்றோர் படிப்பறை நூலகம்
எடுப்புற அமைக்க ஏனோ மறக்கிறோம்!

இக்கால் நூலகம் இனிது திரட்டிடும்
எக்கா லும்கெடா ஒலிஒளிப் பேழைகள்!
குறுவட் டுடன்நுண் படலந் தன்னில்
சிறுபெரு படங்கள் சிறப்பா வணங்கள்!

ஒலிநூ லகமொன் றுண்டமரிக் காவில்!
ஒலிஓ ரிலக்கம் ஒப்பிலாப் பதிவில்
இசையமைப் பாளர் இயைபில் பதிந்தவை
இசையும் பல்வேறு இயக்க ஒலிகளும்!

இணையநூ லகத்தினில் எண்மிய ஊடகம்
இணையிலா தியங்கும், எடுக்கலாம் பதிவுகள்!
எல்லாச் செய்தியும் இருக்கிற திங்கே
பொல்லாப் பழுதுறா தெல்லாக் காப்புடன்!
அரிய காட்சிகள் அழகுப் படங்கள்
உரிய ஓசைகள் உண்டே பிறவும்!

இறுதியாய், இளைஞரே, இங்குமக் கொருசொல்
உறுதியாய் ஏற்க உமைவேண் டிடுவேன்!
நூலகம் செல்லுதல் சாலவும் நன்று!
மேலும் வளர்க்கும் ஏலும் வகையெலாம்!
அதனாற் பயனுற அழைக்கிறேன்
எதனா லுயரலாம் எனவேங் கிளையரே!



தங்கப்பா ஐயா


தங்கப்பா ஐயா

தமிழ்கொரு தீங்கெனின் புடைத்தெழும் எம்தோள்!
தமிழ்நலம் காக்கத் தாவும்எம் கால்கள்!
தமிழ்க்குடி புரக்கத் தணலும்எம் நரம்பே
ஆதலின், ஊறுங் குருதியும் தமிழெனின் மிகுமே,
வாழ்தலுந் தமிழ்க்கென வாழ்ந்து
காதல்எந் தமிழ்க்குச் சாதலெங் கடனே!
      பரந்துபட்ட மணற்பரப்பின்மீது அலை எழுப்பாமல் அமைதியாய் நடக்கும் ஆறு போன்றது என் வாழ்க்கை என்று தம் வாழ்க்கையைக் குறிப்பிடும் நம் தங்கப்பா ஐயாவின் பாடல் வரிகளே இவை. 
      தொடக்கத்தில், தென்றல், வானம்பாடி போன்ற இதழ்களில் ஐயாவின் படைப்புகள் வந்தன.
      ஈடெடுப்பற்ற பாவலராகவும், ஒப்பற்ற தமிழ் உணர்வாளராகவும், எடுத்துக்காட்டான தமிழ் உரிமைப் போராளியாகவும், உணர்வு கொளுத்தும் தமிழுணர்வுக் கட்டுரையாளராகவுமே இவர் தென்மொழி, நற்றமிழ், தெளிதமிழ் இதழ்களின் வழி அன்பர்களால் முதலில் அறிந்து கொள்ளப்பட்டார். இவருடைய தமிழாக்கத்தில் பாவலர் இரசூல் கம்சதேவ் முதலான பாவலர்களின் மொழிமீட்சி, விடுதலை உணர்வுப் பாடல்கள், மெய்த்தமிழ் அன்பர்களுக்கு ஈர்ப்பாக விளங்கினவெனலாம்.
      அவருடைய வாழ்வியல் கட்டுரைகளும் அவருடைய மொழிபெயர்ப்புப் பணிகளும் இதுவரை அறிவுலகம் காணாத அருமை சான்றவை எனில் மிகையன்று.
      அன்பியக்கமே வாழ்வியக்கம் என்றும் அன்பை முதன்மையாகக் கொண்டே மாந்தரின் பிற எல்லாச் செயல்களும் அமைய வேண்டுமென்றும் கூறுவார். உள்ளத்துக்குள் அன்பின் பசை சிறிதுமின்றி வெறும் அறிவாளியாக அல்லது படிப்பாளியாக இயங்குவோரைத் தம்மால் மதிக்க முடிவதில்லை என்பார்.
      குழந்தைப் பருவத்திலிருந்து வாழ்க்கைமீது அன்பு கொண்டிருந்ததைப் போலவே தமிழ்மீதும் அன்பு கொண்டிருந்த தாகவும் இளமையிலேயே தமிழ் தம்முட் புகுந்து தம்மை ஆட்கொண்டதெனவும் குறிப்பிடுவார்.
      ஐயாவின் தந்தையார் தென்காசி வட்டம் குறும்பலாப்பேரிப் புலவர் மதனபாண்டியன் என்னும் பெயருடைய தமிழாசிரியர் ஆவார். அவருடைய குடும்பத்தில் தமிழ் பரவிப் பரந்திருந்தது. நெருங்கிய உறவினர் பலரும் தமிழ்ப் புலவர்களாகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ் எழுத்தாளராகவும் இருந்தனர். எனவே, தமிழ் அவர் குருதியில் ஊறியுள்ளமை இயல்பான ஒன்றே எனலாம்.
      தமிழைப்போலவே கல்லூரியில் ஆங்கிலத்தைக் கற்றார். தமிழ்நூல்களைவிடவும் ஆங்கில நூல்களை மிகுதியாகப் படித்திருக்கிறார். அவர் படைப்பாற்றலை ஆங்கில மொழியில் செலுத்தியிருந்தால், ஆங்கிலத்தில் உலகறிந்த ஓர் எழுத்தாளராகவோ படைப்பாளராகவோ ஆகியிருக்க முடியும்.
      கல்லூரிக் காலத்திலேயே தமிழ் இலக்கியங்களையும் ஆங்கில இலக்கியங்களையும் படித்து, அவற்றில் மூழ்கித் திளைத் திருக்கிறார். அப்பொழுது அவர் எழுதிய ஆங்கிலமொழிப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களும் நண்பர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றவை.  
                ஐயா, பாளையங்கோட்டைக் கல்லூரியில் வரலாறு, ஏரணம் அடங்கிய இடைநிலைக் கல்வியும், பொருளியல் வரலாறு அரசியல் அடங்கிய இளங்கலையும் படித்தார்.
      உயர்நிலைப்பள்ளிக் காலத்திலேயே அவரிடம் பகுத்தறிவு, சாதிமறுப்பு எண்ணங்கள் தோன்றி பாவேந்தர் பாடல்கள் படித்ததால் செழித்திருந்தன. அக்கால், தமிழிலும் ஆங்கலத்திலும் பாடல்கள் எழுதியிருக்கிறார்; தமிழாக்கமும் செய்திருக்கிறார்.
      இளங்கலை தேறியதும் பாளையில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரானார். அப்போது, தமிழாசிரியரிடம் இரண்டே மணித்துளியில் வெண்பா இலக்கணம் கற்று எழுதிய முதல் பாவிற்கே தென்றல் இதழின் பரிசு கிடைத்திருக்கிறது.  
                தமிழும் தமிழிலக்கியமும் சார்ந்த வாழ்வில் தமக்குத் துணைநின்றவருள் முதன்மையானவர் பாவலர் த.கோவேந்தன் என்று குறிப்பிடுகிறார். பல்லாற்றானும் பல நேரங்களிலும் தமக்கு உதவிய அன்பராக அவரைக் கூறுகிறார். கழக இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அவர் ஊக்கியதைக் குறிப்பிடுகிறார்.
      கோவேந்தன் வழி அறிமுகமான சிறந்த வரலாற்றாய்வரும் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் நூற்பதிப்பாளரும் ஆகிய முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி ஐயா செய்த கழகப்பாடல்களின் மொழிபெயர்ப்பைப் பார்த்து மகிழ்ந்து சில திருத்தங்களையும் கூறியுள்ளார். ஐயாவின் உழைப்பில், கழகப்பாடல்களின் ஆங்கிலவாக்கம் பெங்குவின் பதிப்பாக வந்ததற்கு சலபதி விடாமுயற்சி எடுத்ததை நினைவுகூர்கிறார்.
      தம் தமிழுணர்வு தனித்தமிழ் உணர்வாக மாறுதற்கும் இலக்கிய உணர்வு மேலும் ஆழம் அடைவதற்கும் வழிகாட்டியவராக தென்மொழி பெருஞ்சித்திரனாரைக் குறிப்பிடுகிறார். அவரின் ஆற்றல்களைப் போற்றிடும் ஐயா, தமிழுரிமை வேட்கையில் இருவரும் ஒரு கோட்டிலேயே நின்றதாக்க் கூறுகிறார். தம்பார்வையில் ஏதேனும் மங்கல் படிந்திருக்குமானால் அதை நீக்கித் தெளிவுபடுத்தியவ ரென்றும், பாட்டுணர்வை ஆழப்படுத்தியவ ரென்றும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரைக் குறிப்பிடுகிறார்.
      1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் சிறைப்படுத்தப் பட்டபோது, தங்கப்பா ஐயா தென்மொழி ஆசிரியராக இருந்து எழுதிய ஓர் அட்டைப் படப் பாடல் இது: 
அரியேற்றைச் சிறைபுகுத்தின் அதன்முழக்கம் அடங்கிடுமோ   
                                          அண்ட மெல்லாம்
எரியேற்றும் பெரும்பிழம்பைச் சிறுநீர்தான் அவித்திடுமா
                                          அறமில் சூழ்ச்சி
நரியேய்க்கும் சிறுமனத்தீர்! நல்லுணர்வைப் புன்சிறையால்
                                          தெறநி னைத்தீர்!
விரைவேற்ற லானீர்நும் வீழ்ச்சிக்கே! தமிழகத்தின்
                                          விடுதலைக்கே!
தென்மொழி அன்பர்களின் நினைவில் நிலைத்த பாடல் இது.
     தென்மொழியோடு சில ஆண்டுக் காலம் சேர்ந்திருந்ததன்பின், அதைவிட்டு விலகி வந்ததற்கு ஐயா தந்துள்ள விளக்கும் தெளிவானதாகும். 
                "குறிக்கோளுக்கு முதன்மை வழங்கித் தம் பணியினை ஒரு வேள்வியாகவே நடத்தியவர் பெருஞ்சித்திரனார். வேள்வி நெருப்புச் சீறி எழுந்து கொழுந்துவிட்டெரிதல் வேண்டும். அதற்கு எதையும் எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டவர் அவர். நான் வாழ்க்கையை அன்பு வெள்ளமாகக் கருதினேன். வேள்வியாகக் கருதியவன் அல்லேன். ஒரு நலனுக்காக இன்னொன்று அழிந்துவிடுதல் கூடாது என்ற எண்ணம் கொண்டவன் நான். ஒருபுள்ளியில் நில்லாமல் எல்லாவற்றிலும் என்னைப் பரப்பிக் கொள்பவனாக நான் இருந்தேன்" என்று அவர் மிகத் தெளிவாக விளக்குகிறார்.
      ஆசிரியராகப் பணியாற்றுகையில், வகுப்பறைப் பாடங்களுடன் தமிழ் விழிப்புணர்வு, இயற்கை ஈடுபாடு, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, வாழ்வியல் அறிவு ஆகியவற்றையும் மாணவர் உள்ளத்தில் பதித்திருக்கிறார்.
      புதுவை அரசின் 2000ஆம் ஆண்டுக்கான தமிழ்மாமணிப் பட்டம் இரா.திருமுருகன் அவர்கட்கும், இயற்றமிழ்க்கான கலைமாமணிப் பட்டம் தங்கப்பா ஐயாவுக்கும் தரப்பட்டன. பட்டங்களை வழங்கிய அரசை மதிக்கும் வகையில் அவற்றை ஏற்றுக்கொண்டாலும், அரசு அலுவலர்கள் தமிழிலேயே கையொப்பமிடல் வேண்டும் என்ற அரசு ஆணையை நடைமுறைப்படுத்த அரசுக்கு ஒருமாத கால இடைவெளி வழங்கி அதற்குள் ஆணை செயல்படாவிடின், பட்டங்களை அரசின்பால் திருப்பிக்கொடுப்பதாக இருவரும் அறிவித்தனர்.
      அவ்வாறு அரசின் ஆணை செயல்படுத்தப் படாததால், 10-4-2001 அன்று இருவரும் ஊர்வலமாகச் சென்று கலை பணபாட்டுத்துறை இயக்குநரிடம் பட்டங்களையும் உரிய தொகையினையும் திருப்பிக்கொடுத்தனர்.
     
      தமிழ், தமிழர் உரிமை என்று பேசுவதும் செயற்படுவதும் உலகப் பொதுவான மாந்தர் முன்னேற்றத்துக்குத் தடையாக இல்லை என்பதை ஐயா தெளிவுறுத்துவார்.
      தமிழ் மட்டுந்தான் நமக்கு வேண்டும் என்றால் அது குறுகிய நோக்கமே, நாம் அப்படிச் சொல்லவில்லை. தமிழ் சொந்த மண்ணிலேயே உரிமையிழந்து நிற்கின்றது. அவ்வுரிமையை அதற்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இது மிகத்தேவையான பணி. உலக முன்னேற்றத்திற்காக உழைக்கிறவர்கள் உலகம் எல்லாவற்றையும் ஒன்றாய் இழுத்துப்போட்டுக்கொண்டு பாடுபடத் தேவையில்லை. தம் பணிக்குத்தம்மால் முடிந்த ஓர் எல்லையை வகுத்துக்கொள்ளலாம். தமிழர் மாந்த இனத்தின் ஒருபகுதி. காலிலோ கையிலோ காயம்பட்டால் அதை ஆற்றித்தானே ஆக வேண்டும் அதை ஆற்றாமல் உடம்பின் பொதுநலம்தான் முதன்மையானது. கை காலுக்கு அவ்வளவு முதன்மை கொடுக்கத் தேவையில்லை என்று கூறமுடியுமா என்பார். 
      இந்தியத் தேசியம் என்ற விரிவான நோக்கத்தோடு நீங்கள் ஏன் பாடுபடக்கூடாது? அதில் தமிழர் நலனும் அடங்குமே என்பார்க்கு ஐயா எளிதில் புரியும்படி ஐயா விடையிறுக்கிறார்.
      இந்தியத் தேசியத்தில் தமிழர் நலன் அடங்கினால் சரி. அடகவில்லையே! இது மிக வெளிப்படையான, மறுக்கமுடியாத உண்மை. இந்தியத் தேசியம் பொய்த் தேசியம். போலித் தேசியம். தமிழர்களை அழிக்கும் தேசியமாக இருக்கின்றதே. தனது நாட்டின் குற்றம் செய்யாக் குடிமக்களை மற்றொரு நாட்டான் சுட்டுக் கொல்வதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது என்ன தேசியம்? உலகிலேயே இதுவரை காணப்படாத, இழிந்த தேசியம் அது.
      குற்றம் இழைக்காத தமிழ் மீனவர்களைத் தொடர்ந்து பலாண்டுகளாகச் சிங்கள இனவெறி அரசு துன்புறுத்தியும் கொன்றும் வருகிறது. கண்ணையும் வாயையும் மூடிக் கொண்டிருக்கிறதே இந்திய அரசு! சீ என்று அதன் முகத்தில் காறி உமிழத் தேவையில்லையா? இதற்குத் தேசியம் என்று பெயர் சொல்வதைவிட நான்று கொண்டு சாகலாமே! என்றும் இன்னும் இவை தொடர்பாக விளக்கமாகப் பல செய்திகளையும் ஐயா எழுதிய நானும் என் தமிழும் என்ற நூலில் காணலாம். இந்நூல், கோவை ஞானி அவர்களால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகும்.
      தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய காவிரி நீரை, முல்லைப்பெரியாற்று நீரை, பாலாற்று நீரைப் பெற்றுத்தர முடியாத இந்திய ஒருமைப்பாடு எவ்வளவு போலியானது! இதைத் தாங்கிக்கொண்டு நாமும் சும்மாவிருக்கிறோம் என்று எழுதுவார். 
      நாற்பத்தைந்திற்கும் மேற்பட்ட நூல்களை ஐயா எழுதியுள்ளார். இவற்றுள் தமிழ் நூல்களும் ஆங்கில நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும் பா நூல்களும், கட்டுரை நூல்களும், குழந்தைகளுக்கான பாடல்களும், வாழ்வியற் சிந்தனைகளும், இயற்கை யீடுபாட்டு எழுத்துக்களும் உண்டு. ஐயாவின் எழுத்துக்கள் 15க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களிலும் பத்திற்கும் மேற்பட்ட ஆங்கில இதழ்களிலும் வந்துள்ளன.
      ஐயாவின் உயிர்ப்பின் அதிர்வுகள் என்ற பா நூல் சிற்பி இலக்கியப் பரிசைப் பெற்றது. இந்நூலில் புதுப்பா வகையிலமைந்தவையும் உள்ளன. கள்ளும் மொந்தையும் தனி நூலாக வந்தபோது, அதற்கு ஐயா எழுதிய முன்னுரை அரியதொரு அறிவுக் கருவூலம்; படைப்பு, படைப்பாளி, மரபுப்பா, புதுப்பா என்பவற்றிற்கு இதுவரை எவரும் அளித்திரா தெளிவு விளக்கம் உள்ளதைப் படிப்பார் உணரலாம்.
      ஐயா தம் கல்லூரி நாட்களிலேயே மொழிபெயர்ப்பில் சிறந்து விளங்கினார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்கும் ஐயா பல மொழியாக்கங்களைச் செய்திருக்கிறார். கழக இலக்கியப் பாடல்களின் ஆங்கில ஆக்க நூலான ‘Love Stands Alone’, முத்தொள்ளாயிரத்தின் ஆங்கில ஆக்க நூலான ‘Red lilies and Frightened Birds’ ஆகிய இரண்டும் உலகப் புகழ்பெற்ற பெங்குவின் பதிப்பக வெளியீடாக வந்துள்ளன. இந்நூல்கள் ஆங்கில தமிழ் அறிஞர்களாலும் மிகச் சிறந்தவை எனப் பாராட்டப்படுகின்றன.    
      இவை தவிர, அவார் மொழிப்பாவலன் இரசூல் கம்சதேவ் பாடல்களையும் பிரெஞ்சுப் படைப்பாளர் ஆந்திரே ழீது கட்டுரைகளையும் தமிழாக்கம் செய்திருக்கிறார். வள்ளலார், சித்தர் பாடல்கள், முத்தொள்ளாயிரம், அற நூல்கள், பாரதி, பாவேந்தர் பாடல்களையும் தமிழாக்கம் செய்துள்ளார். சில கதைகளையும் கூட ஆங்கில ஆக்கம் செய்துள்ளார்.
      மொழிபெயர்ப்புலகில் ம.இலெ.தங்கப்பா என்னும் தேவமைந்தனார் கட்டுரையும், இலக்கணச்சுடர் முனைவர் திருமுருகனார், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பேராசிரியர் பரமசிவம் போன்ற பிற அறிஞர்களின் உரைகளும் உயரவுக்குச் சாற்றுரைக்கின்றன.
வள்ளலாரின் பாடல் ஒன்று.
இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் என்கோவே துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.   
இப்பாடலின் தங்கப்பா ஐயா மொழிபெயர்ப்பு இது:
Will it be today, or will it be tomorrow?
When will it be at all, the one event of my life…
My discarding of all this ignorance and reaching beyond
The immeasurable within the immeasurable…
To come at last into the quiet bliss of inaction?
எவ்வளவு எளிமை! எண்ணிப் பாருங்கள்.
      காலச்சுவடு இதழ் ஐயாவை அறிமுகப்படுத்திய போது இவ்வாறு எழுதியது: இயற்கையும் அன்பும் தங்கப்பாவின் வலிமையான இரண்டு அடிப்படைகள். இயற்கையின் நேசர் அவர் என்று சொல்வது குறைத்துச் சொல்வதாகிவிடும். அவரது வீட்டின் பெயர் வானகம். குழந்தைகள் செங்கதிர், இளம்பிறை, விண்மீன், மின்னல்.
      சிறுவர், சிறுமியரை ஏரி, காடு, வயல், மலை, ஆற்றுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று செடி, கொடி, மரம், பறவை ஆகியவற்றைச் சிறப்புத் செய்திகளுடன் அறிமுகப்படுத்தி வைப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். சிற்றூர் வாழ்க்கை அறிவும் இயற்கையைப் பேசிய கழக(சங்க) இலக்கியப் பயிற்சியும் கொண்ட தங்கப்பா போன்றவர்களே இத்தகைய இயற்கை அறிமுகத்தைச் செய்ய முடியும். இவ்வகைத் தமிழ் மரபின் கடைசிக் கண்ணிகளுள் தங்கப்பா ஒருவர்.
      அன்புதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது, பல சமூக, மொழிப் போராட்டங்களில் கலந்துகொண்ட தங்கப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. தங்கப்பாவின் வலிமைகளுள் மற்றொன்று அவரது தமிழ் நடை. பாடலிலும் சரி, உரையிலும் சரி கலப்பு நீங்கிய தெளிவுமிக்கது.
            அரசின் பல விருதுகள், சிற்பி பரிசு எனப் பல பாராட்டுகள் தங்கப்பாவை அடைந்தாலும் அவை அவரை ஒன்றும் செய்யவில்லை. கல்லுப் பிள்ளையார் போல எதற்கும் அவர் அசைந்து கொடுத்ததாகத் தெரியவில்லை
      எது வாழ்க்கைஎன்னும் உங்கள் நூலில் வெளிப்படுத்திய வாழ்க்கை பற்றிய பார்வையை எவ்வளவு தூரம் உங்கள் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடிந்தது? என்ற வினாவிற்கு ஐயா தந்த விடை:
      புறவுலகச் சீர்கேட்டுக்கு இயற்கையழிவு காரணமாக இருப்பதுபோல் அகவுலகச் சீர்கேட்டுக்கு அன்பின்மை காரணமாக இருக்கின்றது. அன்பென்பது பிறர்மீது ஈடுபாடு. கோடிக்கணக்கான மக்கள் - உயிரினங்கள் -கூடி வாழும் இவ்வுலகில் பிறர்மீது ஈடுபாடு கொள்வது -அன்பு செலுத்துவது இன்றியமையாதது. பிறரோடு நல்லுறவு கொள்வதுதான் உலகுக்கும் சொந்த வாழ்க்கைக்கும் நன்மை பயக்கும். அன்பு, உணர்ச்சியின் பாற்பட்ட ஒரு கொள்கையன்று, அது அறிவியல் மெய்ம்மை. மீறக் கூடாத இயற்கைச் சட்டம்.
      என் திருமணமும் என் பிள்ளைகளின் திருமணங்களும் சாதி மறுப்புத் திருமணங்களே. எந்த மதத்தையும் வழிபாட்டு முறையையும் நாங்கள் பின்பற்றுவதில்லை. கொடுத்தல்தான் வாழ்க்கை, பெறுதல் அன்று என எங்கள் பிள்ளைகட்கு நாங்கள் கற்றுக் கொடுத்திருக்கின்றோம். ஆயினும் வாழ்க்கை பல்வேறுபட்ட தன்மையோருடனும்  பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதால் சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். எனினும் குறைகள் மூடிமறைக்கப்படுவதில்லை. மேற்பூச்சுகளும் மூடிமறைத்தலும் இல்லாமல் திறந்த புத்தகமாகவே எங்கள் வாழ்க்கை அமைகின்றது
      தங்கப்பா ஐயா அவர்கள் களப் போராளியாகவும் திகழ்கின்றவராவார். தமிழ் நலத்திற்கெனவும் தமிழுரிமை மீட்சிக்கெனவும் நடக்கும் போராட்டங்களிலும் ஈழத் தமிழர் இன்னல் தீர்க்க விழைந்த போராட்டங்களிலும் புதுவையில் மட்டுமின்றி தமிழ்நாடெங்கிலும் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கின்றார்.
சுருங்கக்கூறின், தங்கப்பா ஐயா...
எடுத்துக்காட்டான மாந்தர்;
தலைசிறந்த பாவலர்;
சீரிய கட்டுரையாளர்;
அன்பையும் இயறகையோடியைந்த வாழ்வையும் வலியுறுத்தும் வாழ்வியற் சிந்தனையாளர்;
ஒப்பற்ற தமிழ் உணர்வாளர்;
உண்மையான போராளி;
எப்போதும் அமைதியாக இருப்பவர்; எல்லாப் போதும் தமிழ் தமிழர் நலத்திற்கெனக் குமுறி வெடிக்கும் எரிமலை!
அவரைப் பாராட்டி மகிழ்வதோடு, அவருடைய அறிவார்ந்த கருத்துக்களை ஏற்று நடப்பதே நம்மை உயர்த்திக் கொள்ளும் செயலாக அமைவதாகும்.

---------------------------------------------------------------------
எழுத உதவியவை:
  1. நானும் என் தமிழும் ம.இலெ.தங்கப்பா. இதனுடன் ஐயாவின் பிற எழுத்துக்களும்.
  2. காலச்சுவடு இதழ்
  3. பேராசிரியர் அ.பசுபதி என்னும் தேவமைந்தனாரின் தமிழ்க்காவல் கட்டுரைகளும், திண்ணை கட்டுரைகளும்.
  4. பேராசிரியர் பெஞ்சமின் லெபோவின் இணையக்கட்டுரை.
உதவியோர்க்கு நன்றி.
------------------------------------------------------------------
.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

தங்கப்பா ஐயாவின், “சோளக்கொல்லைப் பொம்மை”க்கு இந்திய அரசு இலக்கியக் கழகத்தின் (சாகித்திய அகாதமி) பரிசு!


சாகித்திய அகாதமி என்னும் இலக்கியக் கழகம் இந்திய அரசினல் 1954ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் 24 மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளைத் தேர்வுசெய்து பரிசளித்தும் பிறமொழிகளில் மொழிபெயர்த்தும் ஊக்கப்படுத்தி வருகின்றது. படைப்பாளிகளுக்கு மதிப்பளித்து அவர்களை உலகிற்கு அறிமுகம் செய்யும் ஊடகமாகவும் உள்ளது.
     இந்த அமைப்பு, பரிசுக்குரிய நூலைத் தேர்ந்தெடுக்கும் முறை ஓராண்டுக்கால நீட்சியுடையதாகக் கூறுகின்றனர். முதலில், இக்கழகத்தின் தலைவரால் அமர்தப்பட்ட ஓரிரண்டு வல்லுநர் நூல்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்நூல்கள் தகுதிசான்ற அறிஞர் பதின்மருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அப் பதின்பரும் ஆளுக்கு இரண்டிரண்டு நூல்களைத் தேர்வுசெய்து பரிசுக்குப் பரிந்துரைக்கிறார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட நூற்களின் பட்டியல் மூன்று நடுவர்களின் தேர்ந்தெடுப்பிற்கு அனுப்பப்படுகின்றன. அவர்களில் பெரும்பான்மையர் தேர்ந்தெடுக்கும் நூலே இவ் இலக்கியக் கழத்தின் செயற்குழுவால் ஏற்பிசைவு பெற்று அறிவிக்கப்படுகின்றது.
     இப்படிப்பட்ட நடைமுறைகள் உள்ளதெனக் கூறப்பட்டாலும், இப்பரிசுக்குத் தேர்வு செய்யப்படுவோருள் சிலரின் தகுதிகுறித்து படைப்பாளிகள் தம் நிறைவின்மையை வெளிப்படுத்துவதும் உண்டு.
     இந்த இலக்கிய அமைப்பு சென்ற 2010ஆம் ஆண்டு முதல் சிறுவர் இலக்கிய மதிப்பளிப்பு (பால சாகித்திய புரசுகார்) என்ற பெயரில் இந்தியாவின் 24 மொழிகளிலும் எழுதப்பெறும் சிறந்த குழந்தை இலக்கியத்திற்குப் பரிசளிக்கின்றது. வாழ்நாள் குழந்தை இலக்கியப் பணிக்காவும் சிலருக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
     இந்த 2011ஆம் ஆண்டு தமிழ்மொழிக்கான குழந்தை இலக்கியப் பரிசுக்குரிய நூலாக, இவ்வமைப்பு, நம் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழ்வல்லார் பாவலர் ம. இலெனின் தங்கப்பா ஐயா எழுதிய, சோளக்கொல்லைப் பொம்மையைத் தேர்ந்தெடுத்து அறிவித்துப் பெருமை பெற்றுள்ளது.
     இப்பரிசு, ஐம்பதாயிரம் உருபாவுக்கான காசோலையும், ஒரு செதுக்கப்பட்ட செப்புப்பட்டயமும் கொண்டதாகும். எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் இப்பரிசு வழங்கப்படும்.
     இப்பரிசளிப்பு குறித்து தங்கப்பா ஐயா  கூறுகையில், உண்மையான தகுதி மதிக்கப்பட வேண்டும் என்றும் குழந்தைகளோடு பழகி,  இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததன் வெளிப்பாடாக, "சோளக்கொல்லை பொம்மை நூலை எழுதியதாகவும் தகுதியான நூலுக்குப் பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
     நம் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவிப்பதோடு தங்கப்பா ஐயாவின் தகுதிக்குரிய பரிசுகள் இன்னும் அளிக்கப்பட வேண்டும் என்ற விழைவையும் குறிப்பிட விரும்புகிறோம். 
     (அடுத்த பதிவு தங்கப்பா ஐயாவைப் பற்றிய செய்தித் தொகுப்பாக இருக்கும்.)
------------------------------------------------------------------------    

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்!


எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்!
                             
செந்தமிழ்நாட் டெல்லைபறி போகாமல் காத்தயிவர்
சிறைக்குச் சென்று
நந்தமிழின் சிலம்பாய்ந்தார்; நாவன்மை எழுத்தாற்றல்
நனிவாய்ந் தாரே!
இந்தியநா டுந்தமிழும் எனக்கிரண்டு கண்களென
இயம்பி வந்தார்!
பந்தமுறும் பெருமீசை பார்த்திருப்பீர் ம.பொ.சி.
படத்தில், தாளில்!

கடற்கரைசீர் வாய்ந்தநகர் கவின்சென்னை எளியகுடி
களிக்கத்தோன்றி
கடமையென மூவாண்டுக் கல்வியுடன் நெசவுசெயக்
கடுகிச் சென்றார்!
அடக்கமுறா வறுமையெதிர்த் தச்சகத்தில் கோப்பாளர்
ஆனார் பின்னர்த்
திடஞ்சான்ற மனத்தோடே தேசவிடு தலைக்குழைக்கத்
தேர்ந்து சென்றார்!

தேர்ந்தகட்சிப் பேராயம் சேர்ந்துப்புப் போர்மற்றும்
திமிர்கொள் ஆட்சிச்
சார்பறுக்கும் சட்டமறுப் பியக்கத்தும் பங்கேற்றார்;
சற்றும் சோரா(து)
ஆர்வமுற சிறைப்பட்டார்ஆறுமுறை; எழுநூற்றுக்
கதிக நாட்கள்!
சீர்மையுற சிறையடைப்பில் சிலம்புபடித் தாய்வுசெய்தார்!
சிறப்ப றிந்தார்!

தமிழ்தமிழர் உணர்விலவர் தமிழரசுக் கழகத்தைத்
தனியே தோற்றி
இமிழிந்தி யாமொழியால் இன்னின்ன மாநிலமென்
றியற்றுங் காலைத்
தமிழர்க்குக் குடியரசு தனியமைக்க வேண்டுமென்றார்
தனிய ராக!
துமித்துபெறக் கருதவிலை! தொடர்ந்திந்தி யாவிலொரு
தொகுதி என்றே!

செப்பமுற மாற்றுகபேர்! சிறப்புறவே தமிழ்நாடாய்ச்
செய்வீர் இன்னே!
ஒப்புறவே கல்விமொழி ஒண்டமிழே எனவாக்கி
உயர்வைச் செய்வீர்!
தப்பறவே ஆட்சிமொழி தமிழென்றே ஆக்கிடுவீர்!
தகைமை காப்பீர்!
இப்படியாய்க் குரல்கொடுத்தே இவற்றைவலி யுறுத்திவந்தார்
எழுதி பேசி!  

இவர்பணியில் முன்னிற்கும் எல்லைகளைக் காத்தபணி
இணையி லாதாய்!
இவறலுற ஆந்திரத்தர் எழிற்சென்னை நகர்கேட்டு
ஏழ்ந்த போது
சுவரெனவே நின்றுசிலர் துணையோடே இவர்காத்தார்!
சொல்வ துண்மை!
திவளலற இவரியங்கித் திருவேங்க டம்மீட்கச்
சிறையுஞ் சென்றார்!

பெரும்பிழையாய்த் திராவிடத்தைப் பேசிடுவோர் சறுக்கிவிட
பெரிய மீசை
திருத்தணியை மீட்டெடுத்தார்! சித்தூர்புத் தூர்பகுதி
சிலவும் மீட்டார்!
திருப்பதியாம் வேங்கடமும் செந்தமிழ்சேர் பகுதிகளும்
சென்ற போதும்
ஒருதனியர் பெருமுயல்வில் ஓரளவு வடவெல்லை
ஓம்பக் கண்டோம்!

பொற்புறுசீர் குமரியொடு தேவிகுளம் பீர்மேடு
பொலிசெங் கோட்டை
தெற்கெல்லை காத்திடும்போர் திடத்தலைவர் நேசமணி
திறத்தில் மூண்டு
பெற்றியிலார் சிறையிலிட இவரறிந்து விரைந்தங்கே
பீடிற் சென்றே
சற்றும்போ ராட்டத்தைச் சரியாதே மேல்நடத்தச்
சார்பு தந்தார்!

நூற்றுக்கும் மேற்பட்ட நூலெழுதித் தந்துள்ளார்
நுட்ப மாக!
ஏற்றமுற வரலாற்றை எடுத்தியம்பி பலவிளக்கம்
எடுப்பாய்ச் சொல்வார்!                                         சாற்றியபல் கூற்றிருக்கத் திராவிடத்தார் சார்ந்ததிவர்
சறுக்கல், உண்மை!
ஆற்றியநற் பணிகளையும் அரியசெயல் செய்ததையும்
அகத்தில் கொள்வோம்!  

(14-8-2011 ஞாயிறு அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற விழுப்புரம் தமிழ்ச்சங்க ஒன்பதாம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் பாடிய அறுசீர் மண்டிலப் பாக்கள்)
 
--------------------------------------------------------------------------  

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஒன்று... இரண்டு... மூன்று...!

ஒன்று இரண்டு... மூன்று...!

ஒன்றும் ஒன்றும் இரண்டு!
உலகம் சுழலும் உருண்டு!

இரண்டும் ஒன்றும் மூன்று!
இனிமைக் குத்தேன் சான்று!

மூன்றும் ஒன்றும் நான்கு!
மூத்தோர் அன்பைத் தாங்கு!

நான்கும் ஒன்றும் ஐந்து!
நாயின் நன்றி ஏந்து!

ஐந்தும் ஒன்றும் ஆறு!
ஆழ உழுவார் ஏரு!

ஆறும் ஒன்றும் ஏழு!
அன்பால் அமுதாம் கூழு!

ஏழும் ஒன்றும் எட்டு!
எழிலைக் கூட்டும் பொட்டு!

எட்டும் ஒன்றும் ஒன்பது!
என்றும் கோவம் தீயது!

ஒன்பதும் ஒன்றும் பத்து!
ஒளிரும் அழகு முத்து!


(23-7-2011ஆம் நாள் தினமணி சிறுவர் மணியில் வந்தது)

புதன், 8 ஜூன், 2011

ஆட்சிக்கட்டில் அமர்ந்தார்க்கு!

ஆட்சிக்கட்டில் அமர்ந்தார்க்கு!

இரண்டகஞ் செய்தே இனக்கொலைக் குத்துணை போனவரை
முரண்படப் பேசி மொழிநலந் தீய்த்தவம் மொய்ம்பிலரை
உரங்கெட வீழ்த்தின ராட்சி பறித்தார் உணர்ந்திடுக!                             நிரந்தினி தாள்க! நெடுந்தன் முனைப்பை நிறுத்துகவே!


திங்கள், 16 மே, 2011

பாவாணரின் மடல்கள்

   பாவாணரின் மடல்கள்

மாந்தர் செய்திப் பரிமாற்றத்திற்குத் தொடக்கத்தில் சைகைகளையும் ஒலிகளையும் பயன்படுத்தியிருக்கின்றனர்.  பின்னர், தொடர்ந்த வளர்ச்சி நிலையில், படிப்படியே சொற்களை உருவாக்கி, மொழியை அமைத்து, அம் மொழி வழி பேசத் தொடங்கினர். அதன்பின் வரிவடிவங்கள் அமைத்துக் கொண்டு, அதன் வழியாகத்  தம் எண்ணங்களை எழுத்திலும் வெளிப்படுத்தத் தொடங்கினர். முதலில் உருவான எழுத்து வழியான செய்தித் தொடர்பு ஊடகமே மடல் அல்லது கடிதம். தொலைவில் இருப்பாருடன் தொடர்பு கொள்ளப் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டுவரும் இந்த ஊடகம், கணிப்பொறி கைப்பேசி வருகைக்குப்பின் பெரிதும் குறைந்து அறவே மறைந்துவிடும் நிலைக்குச் சென்றுகொண்டுள்ளதைக் காண்கிறோம். 

மடல் ஊடகத்தின் சிறப்பு
இயல்பாகவே நாம் பேசுகின்ற நிலையைவிட, எழுதுகின்ற நிலையில் பிழையின்றியும், அழகிய சொல்லிய அமைப்புக்களோடும் செப்பமாக இருக்கக் கவனம் கொள்கிறோம். கடிதம், இலக்கு நோக்கிச் செலுத்தும் அம்பைப் போல், ஒருவரையோ, ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தையோ விளித்து, உணர்வார்ந்த கருத்துகளைச் சொல்லும்போது எண்ணியவாறு பயன் விளைகின்றது என்பதனால் இந்தக் கடிதம் எழுதி கருத்துரைக்கும் உத்தி, இன்றளவும் பலராலும் கையாளப்படுகின்றது.

மடல் இலக்கியம்
அடிப்படையில், செய்திப் பரிமாற்றத்திற்காக அறிஞர்கள் எழுதிய மடல்கள், பலருக்கும் பயன்படும் இலக்கியமாகத் திகழ்கின்றன. சில எழுத்தாளர்கள், புதினங்கள் சிலவற்றைக் கடித வடிவிலேயே எழுதியுள்ளனர். கடித இலக்கியம் உலகின் இலக்கிய வகைகளில் தொன்மையான வடிவாகும். தமிழர் செய்தியை ஓலையில் எழுதியதால், கடிதத்தை ஓலை என்றழைத்ததும், எழுதிய ஓலையை வளைத்துச் சுருளாகச் செய்ததால், அது முடங்கல் எனக் கூறப்பட்டதும் கருதத் தக்கன. பழந்தமிழ் அகத்திணை இலக்கியங்களிலும் புறத்திணை இலக்கியங்களிலும் காணப்படும் தூது, மடல் இலக்கிய வளர்ச்சி எனலாம்.

இலக்கியங்களில் மடல்கள்
சிலம்பில், மாதவி கோவலனுக்கு இரண்டு கடிதங்கள் எழுதுகிறாள்.
வெண்தாழை மடலில் பித்திகை அரும்பை எழுதுகோலாகக் கொண்டு செம்பஞ்சுக் குழம்பிலே தோய்த்து எழுதிய காதற் கடிதம் முன்னது. கோசிகன் வழி கோவலனுக்கு விடுக்கும் மடல் இரண்டாவது. சீவகசிந்தாமணியில் நாகமாலை தான் எழுதிய ஓலைக் கடிதத்தைக் குவளை மலரினுள்ளே வைத்துக் கொடுக்க, தூதி அதனைத் தன் கூந்தலின் உள்ளே பொதிந்துவைத்துக் கொணர்ந்து சீவகனிடம் தருகிறாள். இவ்வாறு, இலக்கியங்களில் கண்ட மடல் எழுதலே பாவோலைத் திருமுகமாக (சீட்டுக் கவியாக) மாற்றம் பெற்றது ஒரு வளர்ச்சி நிலையாகும்.

இக்கால மடல் இலக்கியங்கள்
தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரின் கோகிலாம்பாள் கடிதங்கள் புகழ்பெற்ற புனைகதையாக உள்ளது. அறிஞர் மு.வரதராசனார், தங்கைக்கு, தம்பிக்கு, நண்பர்க்கு, அன்னைக்கு என எழுதிய நான்கு கடிதத் தொகுப்புகளின் வழியே இல்வாழ்க்கைக்கும்,  குமுகாய வாழ்க்கைக்கும் தேவையான வழிகாட்டு நெறிகளைத் திருக்குறளின் துணையோடு நன்கு விளக்குகிறார்.
அறிஞர் அண்ணாவின் தம்பிக்கு கடிதங்கள், இளைஞர்களுக்கு எழுச்சியூட்டி, ஆட்சி மாற்றத்திற்கே அடிகோலியது. மறைமலையடிகள் கடிதங்கள் என்ற பெயரில் அடிகளாரின் கடிதங்கள் அன்புப் பழம் நீ என்பாரால் தொகுக்கப்பட்டுத் தமிழ் உலகிற்கு அளிக்கப்பட்டுள்ளன. இக்கால், சில புதின எழுத்தாளர்களின் மடல்களும் போற்றப் படுகின்றன.
ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்கத் தன் உடலைத் தீக்கிரையாக்கி இன்னுயிர் ஈந்த ஈடிணையற்ற ஈகி முத்துக்குமார், தீயிட்டுக்கொள்ளும் முன் வெளியிட்ட நெடுமடல் தமிழின வரலாற்றில் மறைக்கவோ மறக்கவோ  இயலாத அரியதோர் இலக்கியமாகத் திகழ்வதை யாரே மறுக்கவல்லார்!
புதுவைத் தனித்தமிழ்க் கழகம், தமிழ் வழிபாட்டுக்கு மாறாகக் கருத்துரைத்த புலவர் கீரன் என்பாருக்கு எழுதிய விளக்கங்களும் அதற்கவர் அளித்த பொருந்தா விடைமடல்களும் கொண்ட  தொகுப்பு நூல், அரிய தமிழ்க்காப்பு நூலாகும்.
புதவைத் தமிழிலக்கிய இலக்கணத் திங்களிதழான நற்றமிழ் இதழின் நிறுவுநர் தமிழ்மாமணி இறைவிழியனார் தொடங்கி நடத்திவந்த நற்றமிழ் நெறிமடல் இயக்கம் தமிழுக்குத் தாழ்வும் தீங்கும் கண்டபோதெல்லாம், தொடர்புடையோர்க்குப் பேரெண்ணிக்கையிலான மடல்கள் விடுத்துத் திருத்த முயன்றதைப் புதுவைவாணரும் நற்றமிழ் அன்பர்களும் நன்கறிவர்.  
சவகர்லால் நேரு, தம் மகள் இந்திரா பள்ளிக்குச் செல்ல இயலவில்லை என்ற ஆற்றாமையில், அவருக்கு எழுதிய கடிதங்கள்  “Discovery of India” என்ற வரலாற்று நூலாகியுள்ளன. 
மெய்ப்பொருள் அறிஞர் இலியோ தால்சுதாயும் மோகன்தாசு கரம்சந்து காந்தி என்ற இளைஞரும் ஒருவருக்கொருவர் எழுதிய கடிதங்கள் சிறந்த கருத்து வெளிப்பாடுகளாக விளங்குகின்றன.
பேரறிஞர் காரல் மார்க்சு தன் காதல் மனைவி சென்னிக்கு எழுதிய கடிதங்கள் சிறந்தவையாகப் போற்றப்படுகின்றன.
ஆபிரகாம்லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் புகழ்பெற்றுத் திகழ்கிறது.

பாவாணர்
இவ்வாறே, பாவாணர் என்றழைக்கப் பெறும் மொழிநூலறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய கடிதங்கள் தனிச்சிறப்புடைய வகையனவாக உள்ளன. பாவாணர் பன்மொழி பயின்ற ஒப்பற்ற மொழியியற் சிந்தனையாளர். தமிழின் விடுதலைக்காகவும் வளர்ச்சிக்காகவும் சொல்லொணாத் துன்ப துயரங்களுக்கிடையே அரும்பாடுபட்ட ஈக வாழ்வினர். ஈடிணையற்ற சொல்லாய்வர். அருமையான ஐம்பது நூல்ளை ஆக்கித் தந்தவர்.
தம் நுண்மாண் நுழைபுல ஆய்வுகளால், இன்றைய தமிழ்நாட்டின் தெற்கே கடலில் அமிழ்ந்து போன குமரிநாடே தமிழர் தொல்லகம் என்றும், அதுவே தமிழ் தோன்றிய இடமென்றும், உலக முதன்மொழி தமிழ் என்றும், அது திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும் என்றும் கண்டறிந்து வலியுறுத்தி வந்தவர்.
நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள், சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும் அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றோம் என்று பாவாணருக்குச் சான்றளித்துள்ளார்.

தமிழ்க்கெனப் பிறந்து தமிழ்க்கென வளர்ந்து
தமிழ்க்கெனப் பயின்று தமழ்க்கெனப் பயிற்றித்
தமிழ்க்கென ஓய்ந்து தமிழ்க்கென ஆய்ந்து
தமிழ்க்கென வாழுந் தமிழே வாழி! என்று பாவாணரைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்த்திப் பாடியிருக்கின்றார்.

பாவாணர் மடல்கள்
பாவாணர் பல்வேறு அறிஞர்களுக்கும், தலைவர்களுக்கும், இதழாளர்க்கும், பதிபகத்தார்க்கும், நண்பர்க்கும், அன்பர்க்கும் ஆயிரக்கணக்கான மடல்கள் எழுதியிருக்கிறார். இதுவரை அவற்றுள் ஏறத்தாழ பாதி எண்ணிக்கை யளவிலான மடல்களின் பகுதிகளே தொகுக்கப்பட்டு, இரண்டு நூல்களாக வடிவம் பெற்றுள்ளன. இலக்கியச் செம்மல் புலவர் இரா.இளங்குமரன் ஐயா அவர்களே இவ்விரண்டு நூல்களுக்கும் தொகுப்பாசிரியர். முதல் தொகுப்பு பாவாணர் கடிதங்கள் என்ற பெயரிலும், இரண்டாம் தொகுப்பு, பாவாணர் மடல்கள் என்ற பெயரிலும் வந்துள்ளன. முதல் நூலில் 28 தலைப்புகளின் கீழும், இரண்டாம் நூலில் பத்துத் தலைப்புகளின் கீழும் மடல்களின் பகுதிகள் தொகுக்கப் பட்டுள்ளன.
தமிழர் வைப்பாகப் போற்றத் தக்கனவும், மொழிவழியால் நலங்காண விழையும் முழுதுணர்வாளர்களுக்குள் முட்டுதல் பிரித்தல் - பிளத்தல் பிணங்கல் இன்னவற்றுக்கெல்லாம் இடந்தராதனவுமாகிய பகுதிகள் மட்டுமே இத் தொகுப்புப் பொருளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன! என்று தொகுப்பாசிரியர் முதல் தொகுப்பின் முன்பகுதியில், நூல்வரு நிலையும் நன்றியுரையும் என்ற தலைப்பில் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும், முதல் தொகுப்பின் கடைசித் தலைப்பான சில கடிதங்கள் என்பதின் கீழ் மட்டும், 12 மடல்கள் முழுமையாக உள்ளன. இவற்றில் முதல் 11 மடல்கள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் தாமரைத்திரு வ. சுப்பையா அவர்களுக்கும், 12ஆம் மடல் தெகுப்பாசிரியரான இரா. இளங்குமரனார்க்கும் எழுதப்பட்டவை. பிற இடங்களில், ஓரிரு மடல்களே முழுமையாகத் தரப்பட்டுள்ளன.

முதல் தொகுப்பு
முதல் தொகுப்பில், சற்றேறக் குறைய 50 ஆண்டுகளில் பாவாணரால் எழுதப்பட்ட ஏறத்தாழ 1520 மடல்களின் பகுதிகள் பல்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. இத் தொகுப்பு நூல், பொருட்பகுப்பு முறையால் 28 தலைப்புகளுடன் 18 பக்க விரிந்த முன்னுரையுடன் 191 பக்கங்கள் கொண்டுள்ளது. இவற்றில், 1931 முதல் 1963வரை உள்ளவை அனைத்தும் சை.சி.நூ. கழகத்திற்கு எழுதியவை. அதற்குப் பின்னரே, பிறர்க்கும் கழகத்திற்கும் எழுதியவை என்று தொகுப்பாசிரியர் குறிக்கிறார்.
  கொடுத்துள்ள தலைப்புக் கேற்றவகையில், பாவாணரின் உயர்ந்த கருத்துக்களையும், சிறப்பியல்புளையும், அவருடைய ஆய்வு முடிவுகளையும் பிறவற்றையும் பற்றி எழுதும் தொகுப்பாசிரியர், அவ்வத் தலைப்புகளோடு தொடர்புடைய பாவாணரின் மடல் பகுதிகளைத் தனித்தனியே அளித்திருக்கிறார். அடிக்குறிப்பாக மடல் நாளும் மடல் எழுதப்பட்டவரின் பெயர்ச் சுருக்கமும் கிட்டத்தட்ட எல்லா மடல்பகுதிகளுக்கும் தந்திருக்கின்றார்.
மடல்கள் கால வரிசைப்படி இல்லாமல், தலைப்புகளுக் கேற்பத் தரப்பட்டுள்ளன. முதல் தொகுப்பின் முதற்பதிப்பு பெப்புரவரி 1985-இல் சை.நூ.கழக வெளியீடாக வந்துள்ளது. இத் தொகுப்பில் உள்ள மடல்களின் எண்ணிக்கையில் ஆயிரத்திற்கும் அதிகமானவை, சை.சி.நூ. கழக ஆட்சியாளர் வ.சுப்பையா அவர்களுக்குப் பாவாணர் எழுதியவை. அம் மடல்களைக் கழக ஆட்சியர் வ.சு. ஐயா, அட்டையில் ஒட்டி ஆவணமாக்கிப் பேணிக் காத்து மறைமலையடிகள் நூலகத்தில் வைத்திருந்தாராம். அவற்றுடன் தொகுப்பாசிரியர் உள்ளிட்ட பன்னிருவருக்குப் பாவாணர் எழுதிய மடல்களின் பகுதிகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

மடல் விளக்கம்
பாவாணர், உயர்தரக் கட்டுரை இலக்கணம் என்ற நூலில் கடிதம் எழுதுவதைப் பற்றி எடுத்துக்காட்டுடன் விளக்கியிருக்கின்றார். கி.மு. முதலாம் நூற்றாண்டில் சிசரோ என்னும் அறிஞர் வரைந்த இலத்தீன் கடிதங்கள் இன்று கற்றோர் உள்ளத்திற்கு இன்ப விருந்தாக உள்ளன. ஆதலால் இலக்கியம் போல் போற்றப்பட்டு வருகின்றன. கற்றாரெல்லாம் இத்தகைய கடிதம் எழுதப் பயிலவும் முயலவும் வேண்டும் என்று அந்நூலில் பாவாணர் கூறுகிறார்.
மேலும், கடிதத்தின் உறுப்புகளைத் தெளிவாகக் கூறி விளக்குகின்றார். அவை:  1. தலைப்பு (வலப்புற மேன்மூலையில் எழுதப்பட்ட நாளும் இடமும் குறித்தல்)       2. விளி (இடப்புறத்தில் தனியாய் கடிதம் விடுக்கப் படுவோரை விளிப்பது)            3. செய்தி (விளிக்குக் கீழாகப் பல பாகிகளாகப் பிரித்து எழுதப்படும் செய்தி)           4. உறவுத் தொடர்மொழி (செய்திக்குக் கீழாக வலப்புறத்தில் நண்பன், அன்பன் போன்று கடிதம் விடுப்போர்க்கும் விடுக்கப் படுவோர்க்கும் உள்ள உறவைக் குறிக்கும் தொடர்மொழி)                                                                     5. கைந்நாட்டு (உறவுத் தொடர்மொழிக்குக் கீழாகக் கடிதம் விடுப்போரின் கையொப்பம்) 6. முகவரி (உறையின் மேல் கடிதம் விடுக்கப் படுவோரின் முழுமுகவரி எழுதல்).

பாவாணர் மடல்களில் எழுதிய வகை
பாவாணர், மன்னார்குடியில் இருந்த 1931-ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆங்கில ஆண்டு மானத்தையே குறிப்பிட்டுள்ளார். விளிப்பாக, ஐயா, அன்பார்ந்த ஐயா, அன்பார்ந்த ஐயன்மீர், அன்பரீர், பேரன்பரீர், அருந்தமிழ் அன்பீர், அருந்தமிழ்ப் புலவீர் எனபவற்றை ஆண்டுள்ளார். விளிப்பை அடுத்து, வணக்கம், நலம்; நலமாக, தங்கள் கடிதம் கைவயம் என்பன இடம் பெற்றன. பின்னே செய்திகள் தொடரும்.
பெரும்பாலும் அட்டையிலேயே மடல்கள் எழுதுவார். பாவாணர் கையெழுத்து, பொதுவில் எவரும் படித்து அறிந்துகொள்ளத் தக்க பொது நிலை எழுத்தாகும். பாவாணர் கடிதத்தில் பிழை கண்டதே இல்லையென்றும், தொடக்கநாள் கடிதங்களில் ஓரிரு வடசொற் கலப்பும் ஆங்கிலச் சொல் பெய்வும் இருந்தனவென்றும் சில ஆண்டுகளில் அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்தன என்றும் தொகுப்பாசிரியர் கூறுகிறார்.

வ.சு.வுக்கு எழுதிய மடல்கள்
பாவாணர் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியர் வ.சு. அவர்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மடல்களில் பல்வேறு செய்திகளை எழுதியுள்ளார். தமக்கு வேண்டிய ஆங்கிலம் தமிழ் நூல்களை விலைக்கு வாங்கித் தரவும், கழக வெளியீட்டு நூல்களை தமக்குக் கேட்டும், கிடைக்காத நூல்களை எங்கிருந்தேனும் பெற்றுத் தரவும், மூர் அங்காடியில் எங்கோ பழைய நூற் கடையில் பார்த்த நூலை வாங்கி அனுப்பவும், பாவாணருடைய நூல்கள் விற்பனை வழி வந்த தொகையில் அவற்றின் விலையைக் கழித்துக் கொள்ளவும், கடன் கேட்டும், விலைக்கு நூல் கிடைக்காத வரை வ.சு.வின் நூலைப் பயன்படுத்திவிட்டுத் திருப்பித் தருவதாகக் கூறியும் நிறைய மடல்கள் எழுதியிருக்கிறார்.
மேலும், இந்தி எதிர்ப்பு தொடர்பான வினைப்பாடுகள் குறித்தும், தம் அறிவாய்வின் உயர்வு சிறப்பை விளக்கியும், கட்டுரை, நூல்களில் திருத்தம் செய்வது குறித்தும், தம் குடும்ப நிலைகள் குறித்தும், வாழ்வு நோக்கம் குறித்தும் பிறவற்றைப் பற்றியும் பற்பல செய்திகள் எழுதியிருப்பதைக் காண்கிறோம்.

அன்பர்க்கும் ஆர்வலர்க்கும் எழுதிய மடல்கள்
அன்பர்க்கும் ஆர்வலர்க்கும் எழுதிய மடல்களில், தம் நுண்ணறிவு ஆய்வாற்றல் குறித்தும், தமிழ் மீட்பு குறித்தும், வாழ்வு நோக்கம் குறித்தும், இயக்கம் குறித்தும், நூல் வெளியீட்டுக்குப் பொருள் தேவை குறித்தும், தம் பணியை இன்னொருவர் செய்ய இயலாநிலை குறித்தும் எழுதியவற்றையும், மாந்தநேய உணர்வுடன் எழுதப்பட்ட வற்றையும், உலகத் தமிழ்க் கழகம் தொடர்பாக எழுதியவற்றையும் பிற செய்திகளையும் காண்கிறோம்.

முதல் தொகுப்பில் கொடுத்துள்ள மடற்பகுதிகளில் சில:

தேடிச் சேர்த்த திருவும் பன்மொழிப்பயிற்சியும்:
என் சொத்தெல்லாம் நூல்நிலையமும் ஆராய்ச்சியுமே
என் நூலகம் மட்டும் 7 நிலைப்பேழைகள் கொண்டது. ( 20.3.64. தமிழ்ப்பாவை வி.அ.கருணைதாசன்)

முத்துவீரியம் கிடைக்குமட்டும் உங்களதை அனுப்பிவையுங்கள். மிகப் பத்திரமாய் வைத்திருப்பேன் (29.7.31 சை.சி நூ. கழக ஆட்சியர் வ.சு.)

“Peeps at Many Lands – Australia  மூர் அங்காடிப் பழங்கட்டடத்தில் ஒரு நடுக்கடையிலுள்ளது. விலை 8 அணா சொன்னான். வாங்கி வைக்க (26.12.39 வ.சு.)

கால்டுவெல் 3 ஆம் பதிப்பும் (இங்கிலாந்து) படியொன்று எடுத்து வைக்க. சாமவேதம் ஒரு தொகுதி மறவற்க, The Holy Shank பொருட்காட்சி சாலையில் கிடைக்காவிடின் மூர் அங்காடியில் வாங்கிவைக்க (11. 12.41. வ.சு.)

மூர் அங்காடியில் பழைய கட்டிடத்திலுள்ள புத்தகக்கடை வரிசையில் வட பகுதியில் ஒரு கடையில் மலையாள இலக்கணப்புத்தகம் ஒன்று கண்டேன். பொருளில்லாமல் வந்துவிட்டேன். 5 அணாவிற்குக் கேட்டேன். இசையவில்லை. 8 அணாவிற்கு இசைவான். எங்ஙனமும் ரூ. 1க்கு மேற்படாது. இசையுமாயின் வாங்கிச் செல்வியொடு சேர்த்தனுப்புக (4.10.34 வ.சு.)
(செல்வி என்பது கழக வெளியீடான செந்தமிழ்ச்செல்வி என்னும் பெயருடைய அரிய மாத இதழ்)

 “தயவு செய்து உடனே Arabic grammar, Hebrew grammar, Chinese self-taught & grammar Higginbothams வாயிலாய் வருவித்துத் தருக. French grammar, German grammar இவ்விரண்டும் சென்னை மூர் அங்காடியில் கிடைக்கும் (23.8.37 வ.சு.)

ஆஸ்திரேலியம் மிகத் தேவை. சீனம் மலேயம் என்பவற்றிற்குக் கிடைத்தாலும் வாங்கி வைக்க 29.12.37 வ.சு.)

தொண்டின் உறைப்பு:
இந்த ஞாயிறு 10உ சென்னையில் கூட்டமென்று பத்திரிகையிற் பார்த்தேன். 2 வாரமாய் இந்தியால் வருங் கேட்டை முற்றுமாராய்ந்து இன்று தமிழ் அடியோடு தொலைவதற்கு ஒப்பானதைக் கண்ணுறுகின்றேன். எவரும் ஏற்கும்படி தக்க நியாயங்களும் விடைகளும் கண்டுள்ளேன். தயவுசெய்து அங்குப் போகவர முழுச் செலவு 7 ரூ கொடுக்க முடியாவிட்டாலும் அரைச் செலவிற்காவது ஒழுங்கு செய்க. அருமையான 30 பாட்டுகள் அச்சாகின்றன. இவ் வெள்ளி வரும். அதனுடன் வருவேன் (5.10.37 வ.சு.)

மதுரை மாணவர் அனைவரும் ஓரிடத்திற் கூட இயலின் நான் வந்து மொழிச்சிக்கல் பற்றி விளக்கமாய்ப் பேச அணியமாயிருக்கிறேன். போகவரப் பேரியங்கிக் கட்டணம் கொடுத்தாற் போதும். அதுவும் இல்லாக்காலும் வருவேன் (20.1.68 வீ.ப.கா.சுந்தரம்.)

நம் உயிர் உள்ளவரையில் தமிழ் கெடவிடக் கூடாது. முடிவான வழி நாம் பேசியதே (12.10.37 வ.சு.)

கல்வியமைச்சர் எங்கள் கல்லூரியில் ஏரணம் வரலாறு ஆகிய இரு பாட நூலகளையும் தமிழில் கற்பிக்கப் பணித்திருப்பதால் அவற்றுள் ஆங்கிலம் மட்டும் கற்ற ஆசிரியர்கள் கற்பித்தற்கு அரிதான ஏரணத்தை இரவு பகலாய் மொழிபெயர்த்து வருகின்றோம். இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிந்துவிடும். குறியீடுகள் பெரும்பாலும் தனித்தமிழில் அமையப் பெறுகின்றன (15.7.51 வ.சு.) 

சங்கரலிங்க நாடார் வடக்கிருந்தென்ன? சின்னச்சாமி தீக்குளித்தென்ன? தமிழன் திருந்துவதாயில்லை (3.10.46.வ.சு.)

பாவாணர் வீறு:
எனது மொழிநூலைத் திரு.சுப்பிரமணியப் பிள்ளை போல்வாரே பார்க்கத் தக்கார். பெரிய ஆங்கில இலக்கணங்களை ஆதாரமாகக் காட்டியிருப்பதால் ஏனையோர்க்கு விளங்கா (29.7.31 வ.சு.)

அகத்தியரும் தொல்காப்பியரும் ஆரியர் அல்லர் என்னும் திரிபுணர்ச்சி நமக்கு இன்னும் இருப்பது பற்றி வருந்துகிறேன். செல்வியில் வெளியிடாவிடில் மட்டும் அவ்விருவரும் தமிழர் ஆய்விடுவரா? ஆரியர் என்பதற்கு எத்துணையோ ஆதாரங்கள் இருக்கின்றன. என் கட்டுரைக்கு எவரேனும் மறுப்பெழுதினால் விடையளிக்கத் தயாராயிருக்கிறேன் (12.10.31 வ.சு.)

திராவிட மரபு தோன்றிய இடம் குமரிநாடே என்னும் பொருள் பற்றிய எனது இடுநூலைப் பல்கலைக் கழகம் தள்ளிவிட்டது. இது எனக்கு வியப்பாக இல்லை. இற்றைத் தமிழ்நிலை என்ன என்பதை மட்டும் தெரிவிக்கின்றது. இனிமேல் இந்தியாவிற்குள் எனக்கு ஒரு தேர்வும் இல்லை. ஆகையால் எனது நூல்களை யெல்லாம் ஒவ்வொன்றாய் வெளியிடப் போகிறேன் (11.2.39 வ.சு.)

நான் ஒரு பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவனாயின் தமிழ் விரைந்து ஆக்கம் பெறும். (4.7.47 வ.சு.)

மறைமலையடிகட்குப் பின் தமிழ்த்தூய்மை பேணும் பேராசிரியன் யான் ஒருவனே என்பது தங்கட்குத் தெரியும். தமிழ்ப்பற்று என்பது தமிழ்த் தொண்டனைப் போற்றுவதே (9.11.56 வ.சு.)

இனிமேல்தான் என் மொழியாராய்ச்சி உலகிற்கு வெளியாகும். அதனால் தமிழ் ஓங்கும். கழக நூல் விற்பனையும் உயரும் ( 9.11.56 வ.சு.)

என் புலமையைப் பொறுத்தவரையில் மறைமலையடிகள் ஒருவரே மதிப்புரையோ
முன்னுரையோ வழங்கத்தக்கவர் (28.12.50 வ.சு.)

என் காலத்திற்குப்பின் வேறெவரும் என்போல் எழுதவும் முடியாது (8.8.64 மி.மு.சின்னாண்டார்)

உண்மையில் அயலிடத்திற் பெருங்கூட்டத்திற் காத்திருந்து கல்வி அறிவில் தாழ்ந்த அமைச்சரைப் பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. அம்மையாருக்காகத்தான் பார்க்க விரும்புகிறேன்.அதுவும் வீணாயின் எனக்கு மனவருத்தம் மிகுதியாயிருக்கும். மானக்கேட்டுணர்ச்சியும் தோன்றும் (10.7.68  மி.மு.சி)
(அம்மையார் என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்ற விளக்கம் தரப்படவில்லை)

என் திருக்குறள் தமிழ் மரபுரை ஒன்றே என் தகுதியை நாட்டப் போதுமே
(16.10.69 த.கு.)

மறைமலையடிகள் ஒருவரே என்னைப் பாராட்டத் தக்கவரும் என் பெருமதிப்பிற்
குரியவரும் ஆவர் (20.12.69 த.கு.)

எனக்குச்செய்வதெல்லாம் தமிழுக்குச் செய்வதென்று கருதிக்கொள்க. எனக்குப்பின் என்னைப்போல் ஆய்பவர் தோன்ற ஒரு நூற்றாண்டாவது செல்லுமாதலால் யாக்கை நிலையாமை நோக்கி இதுவரை முடிந்த முடிவாகக் கண்டவற்றையெல்லாம் விரைந்தெழுதுவதில் இறங்கிவிட்டேன் (12.1.49 வ.சு.)

யான் இன்று முதற்றாய் மொழி, வடமொழி வரலாறு என்ற இரு முதன்மையான நூல்களை எழுதுவதில் அழுந்தியிருப்பதால் எங்கும் எதற்கும் வரமுடியாது. இவற்றை எழுதி முடித்தபின் தெரிவிப்பேன் (30.4.48 வ.சு.)

வடமொழி வரலாறும், தலைநாகரிகமும் (தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலுக்கு முற்படப் பாவாணர் கருதிய பெயர் போலும்!) புகழ்வேண்டி எழுதுபவையல்ல. தமிழை வடமொழியினின்று மீட்டற்கு எழுதுபவை. இத்துணைக் காலமும் (20 ஆண்டுகளாக) இதே நோக்குடன் கற்றும் ஆராய்ந்தும் இருக்கிறேன். ஆராய்ச்சி முடிந்தது. உண்மையும் கண்டுவிட்டேன். இதற்கென்றே கடவுள் என்னை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது எனது உணர்ச்சி (6.4.49 வ.சு.)

முதல் தாய்மொழியும் ஆங்கில நூலும்:
முதல் தாய்மொழி, என் முப்பதாண்டு ஆராய்ச்சியின் விளைவு அது. அதனால்தான் எதிர்காலத் தமிழுக்கு ஆக்கம் உண்டாகும். இதுவரை எழுதப்பட்ட சொல்லாராய்ச்சி மொழியாராய்ச்சி நூல் போன்றதன்று; தமிழ்ப் பகையையெல்லாம் தலைமடக்குவது (17.12.51 வ.சு.)

ஒரு வீட்டின் உரிமையைக் காப்பது ஆவணம். ஒரு நாட்டின் உரிமையைக் காப்பது உண்மை வரலாறு. நம் நாட்டு வரலாறு மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் இருக்கின்றது. இற்றை ஆளுங்கட்சி ஆரியச் சார்பானது. தமிழுக்கும் தமிழர்க்கும் மாறானது. ஒரு நாட்டிற் பல நூற்றாண்டாகக் குவிந்து கிடக்கும் குப்பைக் கூளங்களை ஆறுதான் அடித்துக்கொண்டு போகும். அதுபோல் நீண்ட காலமாகக் குவிந்து கிடக்கும் ஆரியக் குப்பைகளை வரலாறுதான் அடித்துக்கொண்டு போகவேண்டும். மேனாட்டார் இந்திய நாகரிகம் ஆரியரது என்றும் தமிழ் சமற்கிருதத்தால் வளப்படுத்தப்பட்டதென்றும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். கால்டுவெல்லும் அதைத்தான் வலியுறுத்துகிறார். தமிழ் வடமொழித் துணையின்றித் தழைத்தோங்கும் என்று ஓரிடத்திற் கூறியிருப்பது முரணானது. நம்மவர் இன்னும் அவர் நூலைச் சரியாகப் படிக்கவில்லை

மேனாடு இக்காலத்து அறிவியல் ஊற்றுக் கண். ஆயின் மொழிநூற்கு அடிப்படை தமிழாதலின்  அதைமட்டும் மேனாட்டார் அறிந்திலர். அவர் ஒப்புமாறு தமிழ்த் தொன்மை, முன்மை, தாய்மை, தலைமைகளை நாட்டிவிடின்இங்குள்ள அறியாமையும் ஏமாற்றும் தாமாக நீங்கிவிடும். இப்பயன் நோக்கியதே என் The Primary Classical Language of the World என்னும் ஆங்கிலநூல் (கரு கும்பம் 1995 வி.பொ.ப.)

என் தமிழ்ப் போராட்டம் அண்மையில் தொடங்கும். எனக்குப்பின் தமிழையும் உண்மையான மொழிநூலையும்  வளர்க்கப் பன்னிரு மாணவரை அமர்த்துவேன் (20.1.68. வீ.ப.கா.சு)  

வேர்ச்சொற் போலிகை (மாதிரி):
 “......வேர்ச்சொல் வரிசையைப்பற்றி நீங்கள் மாதிரி கேட்பது வியப்பாயிருக்கிறது. உங்கள் ஐயத்தையும் குறிக்கிறது. அறிஞரை நம்பி அவர்வயின் நல்ல வினையை ஒப்புவிக்கும் திறன் இன்னும் நம்மவர்க்கு ஏற்படவில்லை. ஒரேஒரு சொல்லுக்கு மட்டும் மாதிரி தருகிறேன்:

இறு இறுதல் வளைதல், முடிதல், மடிதல்.

       சூரியன், பயிர்கள்: வளைவதையும் பின் முடிவதையும் அல்லது மடிவதையும்;
       வளைவதையும் முடிவதையும் அது மடிதல் போல்வதையும் நோக்குக.

ஒ.நோ: சாய்தல் வளைதல், இறத்தல்.
       சாயுங்காலம்  Eve - Evening
       சாய் சா இறு இற.
       முடம் வளைவு, முட முடி மட(ங்கு) மடி.

இறு + ஐ = இறை வளைந்த முன்கை.
ஒ.நோ: elbow

இறு + ஆ = இறா இறால் இறாட்டு = வளைந்த கூனி
                       ஒ.நோ: கூன் + இ = கூனி
              குனி கூன் = வளைவு.

இறால் = தேன் கூடு (வளைந்தது, வட்டமானது),

இறாட்டி = எரு, (தேன் கூடு போன்றது)
வறட்டி என்றும் சொல்ல்லாம்.

இறுத்தல் = சூரியன் மேற்கே அடைதல் அல்லது தங்குதல்

இறு + ஐ = இறை.  கதவுள், அரசன் (எங்கும் தங்கியிருப்பவன்)

இறை +அன் = இறையன்
இறுத்தல் = தங்குதல், பாளையமிறங்கல்.

இறுதல் = முடிதல்; இறு + உ அல்லது வு இறவு

இறுதல் = வளைதல், சாய்தல்.  இறப்பு, இறவாணம், சாய்ந்த தாழ்வாரம்.    .
              இன்னும் விரிக்கிற் பெருகும்.

இறு என்னும் சொல் இற(ங்கு) என்பதினின்றும் பிறந்தது.
              இறத்தல் இறங்குதல்.

இற இறகு இறங்கு. இற என்பது அண்மையும் கீழ்நிலையும் குறிக்கும் இகரச்
       சுட்டடியாய்ப் பிறந்தது. சூரியன் கீழே யிறங்கும்போது வளைவதனால் இறங்கற்
       கருத்தில் வளைவுக் கருத்தும் முடிவுக் கருத்தும் தோன்றின வென்றறிக.

-இங்ஙனம் எத்தனை சொற்களுக்கு வேண்டுமானாலும் எழுதலாம்.... (31.7.40 வ.சு.)

வேர்ச்சொற் சுவடியில் இறு என்னும் வேரின் கீழ், இறாட்டி = வட்டமான எரு என்பது ஓர் உன்னிப்புத்தான். வறட்டி என்ற உலக வழக்குச் சொல் வல் என்னும் வேரடியாயும் வறள் என்னும் பகுதியடியாயும் வந்தது.

       வறள் + து = வறட்டு. பிறவினை.

       வறட்டி = காயவைத்த எரு.

இதைக் குறித்துக் கொள்க  (25.940 வ.சு.)

சொல்லாக்க விளக்கங்கள்: 
சில எடுத்துக்காட்டுகள்:
ஆதி : ஆதல் = உண்டாதல், ஆ ஆதி = தோற்றம், தொடக்கம் எனலாம். தி ஈறு.

உத்தரம், தக்கணம் :  உ+ தரம் = உத்தரம்.  உயர்ந்த வடக்கு
                    
தக்கு = தாழ்வு. தக்கு = தக்காணம், தாழ்ந்த தெற்கு.

ஏர்க்காடு :  ஏரிக்காடு என்று யார் சொன்னது? ஏட்டுச் சான்றுண்டா? ஏர்க்காடு, கொத்துக்காடு எனக் காடு இருவகை. முன்னது உழுவது; பின்னது மண்வெட்டியாற் கொத்துவது.
       மலையடிவாரத்தில் ஏர்க்காடு இருந்தாலும் அப் பெயர் பெறும். ஏறைக்கோன் என்றொரு சிற்றரசன் புறநானூற்றில் பாடப்பட்டுள்ளான். ஏறைக்குட்டி என்று பெயர் கொண்டார் குமாரசாமிப் பட்டியிலுண்டு. ஏறைக்காடு என்பதும் ஏற்காடு என மருவியிருக்கலாம். ஏரிக்கரையூர் எங்குமுளது. கோடைக்கானல் நீலமலை முதலிய இடங்களிலுமுண்டு. காடு என்னும் சொல் கவனிக்கத் தக்கது. ஏர்க்காட்டிலுள்ள முதியோரையும் வினவியறியலாம். (15.4.68  .........?)

குமுகாயம் :  கும்முதல் = கூடுதல்
              குமுகம் = சமுகம் (வ)
              ஆயம் = பெருங் கூட்டம்
              குமுகம் + ஆயம் = குமுகாயம் (மரூஉப் புணர்ச்சி)
                                  சமுதாயம் (வ)
                                     
திணை : ஐந்திணை நிலப் பெயர்கள் நிலத்திணை பற்றியவையே. திணை என்னும்                               
        சொற்கு ஒழுக்கம் எனல் வழிப் பொருளே; முதற் பொருளன்று.
        
மருதம் சான்ற மருதம் = மருதத்திணை சான்ற மருதநிலம்.

வேய்தல் : வேய்தல் = முடியணிதல். வேய்ந்தோன் = வேந்தன்.
             
       கொன்றை வேந்தன் கொன்றை மலரை முடியில் அணிந்தவன் (சிவன்).         

தூரி :  தூரி = ஊஞ்சல். இது தூய தென்சொல். வடமொழியில் இல்லை.

ஊசல் ஊஞ்சலும் தூரியுமாம் என்பது பிங்கலம். (அனுபோக வகை 569) கயிற்று வளையத்திற்குள் தூர்ந்து (புகுந்து) ஆடுவது தூரி. வழங்காமையினாலேயே பல சொற்கள் அருஞ்சொற்கள் ஆகின்றன.

பிழையும் திருத்தமும் :   
 “விரற்கடை என்பது விரற்கிடை என்றிருத்தல் வேண்டும். நாட்டியம் என்பது வடசொல் வடிவு.  நடம், நடனம் என்பவே தமிழ் (20 கும்பம் 99 வி.பொ.பழனிவேலனார்.)

எத்தனைமுறை பார்ப்பினும் சிலர் கண்ணிற்குச் சில பிழைகள் தப்பியே விடுகின்றன. அதனால் அடுத்த நூல்களுக்கு ஐவரை அமர்த்த விருக்கிறேன். மேனாடுகளில் எழுவர்க்குக் குறையாது திருத்துவதாகத் தெரிகின்றது (22.3.67 மி.மு.சி.)

பொய்கை என்பது வற்றாத நீர்நிலை. குளம் ஆண்டுதோறும் மழைநீரால் நிரம்பிக் கோடையில் வற்றுவது (19.7.70 மி.மு.சி)

தனித் தமிழ்க் கழகம் :
தனி என்ற சொல்லை நீக்கித் தமிழ்க் கழகம் என்றே பெயர் வைக்கச் சொல்லி யிருக்கிறேன் (1.9.64 எழுதப்பெற்றவர் பெயர் இல்லை)

உறுப்பினர் அனைவரும் தனித்தமிழே பேச வேண்டும் என்னும் யாப்புரவில்லை. தனித்தமிழ்ப் பற்றிருந்தால் போதும் (1.8.64 எழுதப்பெற்றவர் பெயர் இல்லை)

தனித்தமிழ்ப் பெயரீடு :
சின்னச் சாமியைச் சின்னாண்டார் என மாற்றிக் கொள்க, வேறு பெயரும் தாங்கிக் கொள்ளலாம் ( 15.4.64  மி.மு.சி)

நுங்கள் பெயரை ஆமலையழகர் என மாற்றிக் கொள்க. அல்லது வேறு தனித்தமிழில் சொல் வேண்டும் (31.1.68 பசுமலைப் புலவர் வீ.ப.கா.சுந்தரம்)

சாத்தையா என்னும் விளிவடிவைச் சாத்தையன் என்று மாற்றுக (16.10.79  த.கு.)

முதலாவது தங்கள் பெயரை அருள், அருளையன், அருளப்பன், அருளாளன், அருளன், அருளுடையான், அருளாண்டான் என்பவற்றுள் ஒன்றாக மாற்றிக் கொள்க.....

ஆரியப் பெயர் தாங்கி ஆரியம் அல்லது பிறமொழி கலந்து பேசுவதாலேயே, ஆரியரும் வடவரும் தமிழரைத் தாழ்வாய்க் கருதி இந்தியைப் புகுத்தினர். அதைத்தமிழர் எதிர்க்க வில்லை. ஒரு சில கூட்டங்கள் கூட்டி ஒரு சில சொற்பொழிவாற்றுவது எதிர்ப்பாகாது. ஆங்கிலேயரை எதிர்த்ததுபோல் இறுதிவரை எதிர்ப்பதே எதிர்ப்பு. இந்தி வந்ததனாலேயே தேவநாகரியும் வருகின்றது. (17.11.61  வி.அ.க.)

தமிழ்ப் புலவர் கழகம் :
...தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே புலவர் அல்லது அறிஞர் கழகம் இருத்தல் வேண்டும். மெள்ள மெள்ள இவ்வறிஞர் கழகமே அரசியலில் தலையிட்டுத் தமிழ்நாட்டுக் கட்சியாகி அரசியலைக் கைப்பற்ற வேண்டும். தமிழறியாதவரையும் தமிழரல்லாத திராவிடரையும் நம்பிக்கொண்டிருப்பது கழிபெரு மடமையாகும்..... (23.10.41  வ.சு.)

ஆடவை (சூன்) நடுவில் திருச்சியில் நடைபெறவிருக்கும் தமிழ்ப்புலவர் மாநாடு, தமிழர் பழங்குடி மக்களா? வந்தேறிகளா? என்னும் வினாவுக்கு அறுதியும் இறுதியும் உறுதியுமாக முடிவுசெய்யப் பெறுமாதலால் மிக முதன்மையானதாக இருக்கும்  (15.4.68  மி.மு.சி.)

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி :   
அண்ணாமல்ப் பல்கலைக்கழகத்தில் உள்ளவரை ஆரியத்திற்கு மாறான என் ஆராய்ச்சி நூல்களை வெளியிட முடியாது. அதினின்று விலகிய பின்னரே முடியும் (9.2.59  வ.சு.)

உலகத் தமிழ்க் கழகம் :
உ.த.க.விற்கு மதவியற் கொளகையில்லை. கடவுளை நம்புவாரும் நம்பாதவரும் ஒருவரை ஒருவர் குறைகூறாது அதில் இருக்கலாம்

தென்மொழிக் கொள்கையாகிய தமிழ்நாட்டுப் பிரிவினை உ.த.க. கொள்கையன்று
(கு.பூ 3.6.80)

அகரமுதலிப் பணி :
 “சென்னை அகரமுதலியைத் திருத்தாது தமிழைக் காக்கவோ வளர்க்கவோ முடியாது. அதை நான் ஒருவன்தான் திருத்த முடியும். நான் இளைஞனல்லேன். கண்ணொளி வேறு குன்றி வருகின்றது. மிகப் பிந்திவிட்டால் என் ஆராய்ச்சியையும் அறிவையும் பயன்படுத்த முடியாது. தமிழனுக்குத் தமிழே உயிர்நாடியானது. மட்ட அரிசி விலையில் அரைக்கால் ரூபா குறைந்ததினால் தமிழனுக்குப் பெருநன்மை ஏற்பட்டு விடாது.
தமிழுக்கு அடிப்படையான வேலை செய்யாவிட்டால் தமிழக அரசுத் தலைமைச் செயலகம் என்னும் பலகையை எந்தக் கட்சியும் ஒரு நிமையத்தில் எடுத்துவிடலாம்  (20.5.67  மி.மு.சி.)

நம் அகரமுதலி பொதுவகையானதன்று; சொற்பிறப்பியற் கூற்றைச் சிறப்பாகக்
கொண்டது (26.9.75 இரா. இளங்குமரன்)

(கழகத் தமிழ்க்) கையகராதியில் புத்ச்சொற்கள் சேர்க்கப்படுவதுடன் பழஞ்சொற்பொருள் திருத்தப்படவும் வேண்டும்.
(எ-டு) அகணி பனை மட்டையின் உள்நார் என்றுளது. அகணி புறநாரே அன்றி அகநாரன்று. இங்ஙனம் பலவுள (13.7.46  வ.சு.)

தொல்காப்பியச் சீர்மை :
மொழியாராய்ச்சியும் உலக வரலாற்றறிவும் இல்லாதவர் தொல்காப்பியத்தைத் தெளிவாய் உணரமுடியாது (8.8.66  மி.மு.சி.)

இற்றைத் தமிழிலக்கியத்திற்கு ஆணியாய் இருப்பதும், தமிழன் தான் இழந்த உரிமைகளைப் பெறுதற்கு ஆவணம் போல் உதவுவதும் தொல்காப்பியம் ஒன்றே    (28 சிலை 2000 தமிழ்க்குடிமகன்)

விளம்பரம் விலக்கல் :
என் குடும்பத்தில் பிறந்தநாட் கொண்டாடும் வழக்கமில்லை. நானும் விளம்பர வெறுப்பினன். இதைப் பன்முறை சொல்லியும் சில கிளைகள் கேட்கவில்லை. மறைமலையடிகளையே மாண்பாகக் குறிப்பிடுக (6.3.80 கு. பூங்காவனம்)

......பொன்னாடை போர்த்தினால் என் வருத்தம் மிகும் என்று சொல்லியிருந்தேன். அதுவுமன்றிப் பன்னாடை போர்த்தியது என் மனக்குறையைப் பன்மடங்காக்கியது. (23.1.68  மி.மு.சி.)

கிழங்கு வகைகள் :
( சேலம் பகுதியில் கிடைக்கும் சுவையான மயிர்க் கிழங்கு பாவாணர்க்கும் அவர் மக்களுக்கும் விருப்பமானதாகும். சேலம் அரிமாப் புலவர் மி.மு.சின்னாண்டார், தம் தாய் உடல் நலமின்றி இருந்த காலத்தில், தாயின் மருத்தவம் தொடர்பான பணிகளுக்கிடையிலும் கிழங்கை வாங்கிப் பாவாணர்க்கு அனுப்பியிருக்கிறார். கிழங்கு கிடைத்தபோதே சின்னாண்டார் தாயின் உடல்நலமின்மைச் செய்தியும் பாவாணர்க்குக் கிடைத்திருக்கிறது. அந்த நிலையில் பாவாணர் புலவர்க்கு எழுதிய மடலில் குறிப்பிடிருந்த செய்தி கீழே!)
தாய் நன்னிலையில் இல்லாதபோது மயிர்க்கிழங்கு வாங்கி அனுப்பியிருக்கக் கூடாது. ஆயினும், இவ்வட்டை சேரும்போது தாய் நலம் பெற்றிருக்குமென நம்புகின்றோம். உடனே தெரிவிக்க. மறுமொழி கண்டபின்தான் கிழங்கை உண்போம் (7.1.65 மி.மு.சி)

மனைவி மக்கள் :
நானும் என் மனைவியும் ஓருயிரும் ஈருடலுமாக இருந்தோம். அவர் பிரிவு என்னாற் பொறுக்குந் தரமன்று. பல்சான்றீரே, பல்சான்றீரே என்னும் புறச் செய்யுளை நோக்கினால் என் கூற்று விளங்கும். காதல் பெண்பாற்கு மட்டும் உரியதன்று. முக் கடமைகளை நிறைவேற்றவே உயிரோடிருக்கிறேன். அவற்றுள் ஒன்று வடமொழியினின்று தமிழை மீட்டல் (9.8.57 வ.சு.)
[பாவாணர் கூறும் மற்ற இரு கடமைகள் அவருடை மகளுக்கும் கடைசி மகனுக்கும் திருமணம் செய்ய வேண்டுமென்பவையே!)

நோய் நொடி நொம்பலம் :
இப்போது 20உக்குள் தயவுசெய்து 10ரூ அனுப்பி உதவுக. பணத்திற்கு பெரிய முடை. தாட்செலவுக்கும் தபாற்செலவுக்கும் கூடப் பணமில்லை. என் கடன் தொலைந்துவிட்டால் உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன் (14.2.31 வ.சு)

இப் பனிக்கால முழுதும் ஈளை நொய் என்னைத் தாக்கும் போலும்! (30.12.64 மி.மு.சி.)

எனக்கு இடக்கண் அறுவையாகிச் சிறிது சிறிதாய் நலம் பெற்று வருகிறேன் (22.6.66 மி.மு.சி.)

அளவிறந்த அழுக்காறும் தந்நலமும் தமிழையும் என்னையும் கெடுக்கின்றன. பண்டைத் தமிழ்ப்புலவர் போற் பரிசில் வாழ்க்கையன் ஆனேன்” (13.12.66 மி.மு.சி.)

முதுவேனிலிற் சிறப்பாகத் தீ நாட்களைக் கழிப்பது ஆண்டு தோறும் பெரும்பாடாக இருக்கிறது  (23.3.68  மி.மு.சி.)

உட்சட்டை ஒன்றுகூடக் குப்பாயமின்றி அணியக்கூடிய நன்னிலையில் இல்லை  (15.6.68  மி,மு.சி)

சிதறிய மணிகள் :
பாவாணர், அன்பர்களுக்கு எழுதிய மடல்களில் காணப்படும் பல் துறைசார்ந்த பல்வேறுவகைச் செய்திகள் சிதறிய மணிகள் ன்னும் தலைப்பின் கீழ், குறுந் தலைப்புகளோடு தரப்பட்டுள்ளன. அவற்றுள் சில: 
அளவான அமைப்பு :
நமது இலக்கணம் சில இலக்கணங்களைப்போலக் குன்றக் கூறலாகவும், மிகைபடக் கூறலாகவும் இல்லாமல் அளவாக உள்ளது. ஆகையால் குறைக்க வேண்டாம். யான் எழுதியபடியே இருக்கட்டும்  (4.10.34  வ.சு.)

ஆவணம் :
குமரிநாட்டு வரலாறு, நமது உரிமையைப் பெறுவதற்கு இன்றியமையாத ஆவணம்.  இதை அறிந்துதான் எனது எம்.ஓ.எல் இடுநூலைப் பார்ப்பனர் தள்ளிவிட்டனர் (16.1.43 வ.சு.)

பழமொழி அகராதி :
பழமொழியகராதி பல்லாண்டு பாடுபட்டுத் தொகுத்தது. முன் அச்சுக்கு வந்தவை 8000உம், வராதவை 5000உம் ஆக மொத்தம் 13000 உள்ளன. தமிழின் வளர்ச்சிக்குத் தக்க தமிழ்ப் புலவரைத் தாங்குதல் இன்றியமையாதது  (30.4.45  வ.சு.)  

மறதி :
இங்கு வந்தபோது கண்ணாடியையும் சீப்பையும் அங்கு விட்டு வந்துவிட்டேன். கூடத்திலிருக்கும். போற்றி வைக்க. காவற்காரனுக்கு என் கணக்கில் 4 அணா கொடுத்துவிடுக. நான் புறப்பட்டபோது அங்கில்லாததால் கொடுக்கவில்லை
(26.9.49 வ.சு.)

கலைச்சொற்கள் :
கலைச்சொற்களை யெல்லாம் தனித்தமிழில் ஆக்கிக்கொண்ட பின்னல்லது தமிழை வளர்க்க முடியாது  (24.7.51  வ.சு.)

மாதங்களின் பெயர் :
பண்டைத் தமிழர் ஓரை (இராசி)ப் பெயராலேயே மாதங்களைக் குறித்து வந்திருக்கின்றனர். நாள் (நட்சத்திரம்) பெயராக மாற்றியது ஆரியர்செயல்
(8.5.64 மு.மு.சி)

மருத்துவம் :
[குடற்காய்ச்சல் (டைபாய்டு) உள்ளபோது],வலிமையுள்ள உணவை இளம்பதமாய் அல்லது நீர் வடிவில் சன்னஞ் சன்னமாய் உட்கொள்ள வேண்டும். உழைப்பு வேலை அரையாண்டிற்கு இருத்தல் கூடாது (25.7.65  வி.அ.க.)

மரத்திற்றாழ்ந்த மாந்தன் :
மாந்தன் உயிரினத்தில் எத்தனை உயர்ந்தவனாயினும் நிலையாமையை நினைக்குங்கால் ஐயாயிரம் ஆண்டு உயிரோடிருக்கும் மரத்தினும் தாழ்ந்தவனாகின்றான்றான். (13.8.66 மி.மு.சி.)  

குறிக்கோள் :
என் வாழ்க்கைக் குறிக்கோள் தமிழை ஆரியத்தினின்று மீட்பது (22.10.66 கரு.)

எழுத்து வரலாறு :
இற்றை யெழுத்துக்களுள் ழ ள ற ன தவிர ஏனையவெல்லாம் தலைக்கழகக் காலத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் காலம் வரை எகர ஒகர உயிரும் உயிர்மெய்யும் குற்றியலிகர குற்றியலுகரங்களும் மகரமும் புள்ளியுடன் வழங்கப்பெற்றன. கடைக்கழகக் காலத்தில் அல்லது சற்றுப்பின் அவை நீக்கப்பெற்றன. ஈகாரத்தின் பண்டை வடிவம் (சுழித்தது). இவை என் தமிழ் வரலாற்றில் ஓரளவு விளக்கப் பெற்றுள்ளன.
       திரு. தி.நா.சுப்பிரமணியன் எழுதிய பண்டைத் தமிழெழுத்துக்கள் பிராமி வரிவடிவின் வரலாற்றையே விளக்குவது.
ஹீராசு பாதிரியார், மொகஞ்சோதரோ எழுத்துக்களே தமிழெழுத்துக்களின் மூலம் என்பர். அவரெழுதிய ஆங்கிலநூல் பெரிய நூல்நிலையங்களில் இருக்கும் மொகஞ்சொதரோ எழுத்துக்கள் தலைக்கழக எழுத்துக்களின் முந்தின நிலையாக இருக்கலாம் (28.1.67 மி.மு.சி)

கருத்துக்கு ஒப்பு :
தாமரைத் திருச் சுப்பையாப்பிள்ள அவர்களை நிகழ்ச்சிநிரலில் குறித்துக் கொள்க. அவர் வராவிடினும் குற்றமில்லை.......நூல் முழுமையிலுமுள்ள சிறப்புக் கூறுகளையெல்லாம் படித்தறிந்தவர். ஆதலால் அவரே வெளியீட்டுரை நிகழ்த்தத் தகுதி வாய்ந்தவர். என்றும் என் கருத்துக்கும் ஒத்தவர் (க சிலை 2000 த.கு.)

பிரித் தறிதல் :
திரு.வி.க. சமயப் பொதுஉணர்வு, பெண்ணின் பெருமை, தொழிலாளியுரிமை முதலியவற்றை நாட்டினவர்தான், ஆயின், மொழித்துறையில் எல்லாரும் பினபற்றவேண்டிய ஈடிணையில்லா மாமலை மறைமலையடிகளே (உக விடை 2002 த.கு.)

முற்றதிகாரித் தலைவன் :
தனித்தமிழ் மறவருள் ஒரு கடுங்கோல் முற்றதிகாரி தலைவனாக வந்தாலொழியத் தமிழ்த் தொண்டர் எத்துணையர் தோன்றினும் தமிழ் பேசும் நடைப்பிணங்கள் செவிக்கொளா; மனந்திருந்தா; ஆயினும் நம் பணியைத் தளராது செய்வது நம் கடமையே (5.11.79  வி.பொ.ப.)

எழுத்து மாற்றம் :
தமிழெழுத்து மாற்றம் தேவையில்லை. மாற்றின் தமிழின் தனி நிலைமையே மாறிவிடும். அது பெரியாரின் அடிப்படைக் கொள்கையுமன்று (9.11.79 வி.பொ.ப)

முத்துமாலை :   
முத்துமாலை என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ள செய்திகள் பெரும்பகுதியும் பாவாணர் தம் ஆய்வுக்கு நூல்கள் வாங்குவது தொடர்பாகவும் ஆய்வைப் பற்றியும் எழுதியவையே. ஆய்வாளர்க்குக் கருவி நூல்களின் தேவையையும் அவற்றைப் பெற ஆய்வாளர் பாவாணர் காட்டும் பெருவிருப்பையும் இப்பகுதிகளால் அறியமுடிகிறது. சை.நூ.க. ஆட்சியாளர் வ.சு.விற்குப் பாவாணர் 1970-லும் பின்பும் எழுதிய மடல் பகுதிகளின் தொகுப்பே இங்குள்ளவை. அவற்றுள் சில :

கழக வெளியீடு :
அடிகட்குப்பின் அரும்பாடுபட்டுத் தமிழைக் காப்பது நான் ஒருவனே யாதலானும்,  என் பொருளியல் நிலைமை கருதியும் தங்கள சொந்த வெளியீடெல்லாம் ஒவ்வொரு படி அன்பளிப்பாகத் தந்தால் நன்றாயிருக்கும் (29.6.70) 

சேந்தன் செந்தமிழ் :
பாம்பன் சுவாமிகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எழுதிய சேந்தன் செந்தமிழ் பார்க்கவில்லை. 1906இல் நான் நாலாட்டைச் சிறுவனாயிருந்த போதும் அடிகட்குப் பத்தாண்டு முன்பும் அவர்கள் தனித்தமிழ்க்காப்பு நூல் முதன்முதலாக எழுதினார்களென்பது  மிக மிக மெச்சத்தக்கதே. உடனே ஒரு படி வாங்கி அனுப்புக. தமிழர் வரலாற்றில் அவர்களைப் பாராட்ட வேண்டும். தமிழ் வரலாறு அச்சிட்டபோது தாங்கள் இச்செய்தியைத் தெரிவிக்க வில்லையே (17.8.71  வ.சு.)

பொதுவுடைமை :
மக்கள் தொகை அளவுக்கு மிஞ்சிப் பெருத்து வருவதினால் எதிர்கால ஆட்சி பொதுவுடைமை முறையில்தான் இருக்கும் (27.6.72  வ.சு.)

நிலையாணை :
எனக்குப் பயன்படும் வரலாறு மொழிநூல் மாந்தனூல் ஆகிய முத்துறைப் பொத்தகங்கள் என்று வெளிவரினும் என்னைக் கேளாதே வாங்கலாம் (7.7.72 வ.சு.)

குமரிநாட்டு மொழி :
தமிழ் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக நாம் நாட்ட வேண்டிய உண்மை, தமிழ் குமரிநாட்டு மொழி என்பதே (29.7.72 வ.சு.)

தொண்டுக்கு அன்பளிப்பு :
திரு. சுத்தானந்த பாரதியார் தென்னாப்பிரிக்காவில் நற்றொண்டு செய்திருக்கின்றார். அவர் என் நூல்களில் எதை விரும்பினும் அன்பளிப்பாகக் கொடுக்க. அவர் தம் பாரத சக்தி மாகாவியம் எனக்கு அன்பளிப்பாகத தந்தாரே  (3.7.73  வ.சு.)

ஊற்றுத் தூவல் :
ஊற்றுத் தூவல் (Fountain pen) முள்ளில் கூர் நுனி மழுக்க நுனி என இரண்டிருப்பின் கூர் நுனியே வாங்கச் சொல்க (5.2.74  வ.சு.)

உண்மை வெளிவரவேண்டும் :
பேரா. மதிவாணன் மீண்டும் முளவுமா முயலே என்னும் கட்டுரை விடுத்திருக்கின்றார். இம்மாதச் செல்வியில் அதை வெளியிடுக. புலவர் இளங்குமரன் மீண்டும் மறுக்கட்டும். உண்மை வெளிவரவேண்டும். கடுப்பும் காழ்ப்புமின்றி நட்பு நிலையில் ஆய்வு மனப்பாண்மையுடன் இது நடைபெறுக (31.1.75 வ்சு.)

நோய், நொடி நொம்பலம் என்னும் தலைப்பின்கீழ் தந்துள்ள மடல் பகுதிகள் பாவாணர் வறுமையாலும், நோயாலும் பிறவகையாலும் உற்ற துன்பங்களைக் கூறுகின்றன. சொல்லாக்க விளக்கங்கள் என்னும் தலைப்பின் கீழ் உள்ள பகுதிகள் யாருக்கு எப்போது எழுதப்பட்டவை என்ற குறிப்பில்லை.
இஞ்சிமுரப்பு, ஊறுகாயும் பிறவும் என்ற தலைப்புகளின் கீழுள்ள மடல் பகுதிகள், பாவாணர் அவற்றை விரும்பியதையும் அன்பர்களுக்கு அதன் தொடர்பாக எழுதியதையும் தெரிவிக்கின்றன. தம் ஒரே மகளுக்குப் பாவாணர் மான்குட்டி வாங்கிக் கொடுத்ததையும் அதன் தொடர்பானவற்றையும் மகளார்க்கு ஆக வாங்கிய மான்குட்டி என்ற தலைப்பின் கீழுள்ள மடல்பகுதிகளால் அறிகிறோம்.
பார்ப்பனர் குலப் பாவாணர் என்னும் தலைப்பின் கீழ் உள்ளவை 27.10.60, 2.11.60, 1.12.60 நாள்களில் கழக ஆட்சியர் வ.சு. வுக்கு எழுதப்பட்ட மடல்களின் பகுதிகளாகும். இவற்றில், மறை.திருநாவுக்கரசு எழுதிய, மறைமலையடிகள் வரலாறு என்னும் நூலில் பாவாணரின் குலம் பற்றித் தவறாக எழுதியிருந்ததை மறுத்துத் தம் தாய் தந்தையரைப் பற்றிப் பாவாணர் விளக்கி எழுதியுள்ளார்.      

மடல்களின் பகுதிகளை மட்டும் தந்திருப்பதால், ஓரிரு இடங்களில் செய்தியை விளங்கிக்கொள்ள முடியவில்லை. எடுத்துக்காட்டாக, 7.4.46-ஆம் நாளிட்டதான வ.சு.வுக்கு எழுதிய மடலின் பகுதியில், மாநாட்டுச் செய்தி என்ன? இங்கு தமிழ் மாகாணப் பிரிவினை மாநாடொன்று தமிழ்நாட்டுப் பல்கட்சித் தலைவர்களையும் கூட்டி நடத்த எங்கள் தலைவர் கருதுகிறார் என்றிருக்கிறது. அவர் எந்த மாநாட்டின் செய்தியைக் கேட்டார் என்பதை மீண்டும் முன்பக்கத்தைத் திருப்பிப் படித்தபின் இந்தி எதிர்ப்பு மாநாடாக இருக்கக்கூடும் என்று எண்ணமுடிகிறது. ஆயினும், எங்கள் தலைவர் என்று பாவாணர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை.

இரண்டாம் தொகுப்பு
இலக்கியச்செம்மல் இரா. இளங்குமரனார் ஐயாவே பாவாணர் மடல்கள் என்னும் இரண்டாம் நூலையும் தொகுத்திருக்கின்றார். இவ்விரண்டாம் தொகுப்பில், முதல் தொகுப்பின் பின்னர்க் கிடைத்த 586 மடல்களின் பகுதிகள் பத்துத் தலைப்புகளின் கீழ் தரப்பட்டுள்ளன. இம் மடற்பகுதிகள் 37 பேருக்கு எழுதப்பெற்ற மடல்களில் உள்ளனவாகும். இத் தொகுப்பு நூல் ஏறத்தாழ 173 பக்கங்களைக் கொண்டது.  இதன்பின் வந்த 30 மடல்களின் பகுதிகள், இணைப்பு என்னும் பெருந்தலைப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
முதல் தொகுப்பில்,  தொகுப்பாசிரியரின் கருத்துரைகளோடு மடல் பகுதிகள் தரப்பட்டன. இவ் விரண்டாம் தொகுப்பில் அவ்வாறின்றி, மடல் பகுதிகள் மட்டும் மடல் பெற்றவரின் பெயர்ச் சுருக்கத்தோடும் நாளோடும் உள்ளன. பாவாணர் எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு முதல் தொகுப்பிலும் இரண்டாம் தொகுப்பிலும் உள்ளது.

இரண்டாம் தொகுப்பில் உள்ள மடல்பகுதிகளில் சில :
வாழ்க்கை :
ஏமாற்று :
இக்காலத்தில் எல்லாரையும் நம்பக்கூடாது. பொத்தகம் விற்றுத்தருகிறோ மென்று என்னை ஏமாற்றிய புலவரும் மாணவரும் உளர். துறவியர் சிலருமுண்டு 
(26 அலவன்1999  கா. இளமுருகனார்)

முன் தோன்றலர் மூவர் :
மறைமலையடிகளும் யானும் ஒரு தனிவகையரேம். எம் வாழ்வைத் தமிழ் வாழ்வொடு ஒன்றுவித்துக் கொண்டோம். தமிழை வடமொழியினின்று மீட்கவே இறைவனாற் படைக்கப்பட்டோம். தமிழ் ஆரியப் போராட்டத்திற்கு ஆங்கில அறிஞர் ஒருவரும், பிராமணர் ஒருவரும், சிவநெறியார் ஒருவருமாக மூவர் எனக்குமுன் தோன்றினர். மேலையர்க் கறிவிக்க யான் ஏற்பட்டுள்ளேன். என்னோடு இப்போராட்டம் முடிகின்றது. இத்தகைய போராட்டம் உங்கட்கில்லை (4.11.71 கா.இ.மு.)

என் தொண்டு :
என் தமிழிலக்கியத் தொண்டில் தலைமையானது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி. தமிழ்க் காப்புத் தொண்டில் தலைமையானது The Lemurian Language and its ramifications”(கு.பூங்காவனம் 9.10.79)

நாளும் பத்துமணி வேலை :
நான் ஏழுநாளும் பத்துமணி நேர வேலைக்காரன். வேனில் மும்மாதம் வேலை குன்றுகிறது. சொந்த வீட்டில் செந்தண (Air-conditioned) அறை அமைத்துக்கொண்டு முழுப்பகலும் வேலை செய்வேன். இது எனக்கு இன்பமானது  (அன்புவாணன் வெற்றிச்செல்வி 16.4.80)

இறைவன் செயல் :
திருவள்ளுவர், பிராமணர் ஏமாற்றை வெளிப்படுத்தித் தமிழ் நாகரிக உயர்வை நாட்டினார். மறைமலையடிகள் தமிழ் தனிமொழி யென்று நாட்டினார். பெரியார் கல்லாத் தமிழரிடைத் தன்மான உணர்ச்சியூட்டினார். நான் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்று நாட்டிப் பிராமணியப் பேயைத் தமிழ்நாட்டினின்று ஓட்டுவேன். இதற்கு இறைவனே என்னைத் தோற்றுவித் திருக்கின்றான். இது என் செயலன்று. இறைவன் செயலே (அ.வா.வெ.செ. 2.5.80)  

கரும்பு தின்னக் கூலி :
மொழிநூற் கல்வியும் ஆராய்ச்சியும் எனக்கு இன்பமான பாடத்துறை. ஆனால், இன்று நான் பெறுஞ்சம்பளம் கரும்பு தின்னக் கூலியாகும். ஆதலால் வேலை செய்யாது காலத்தைக் கழிக்கவோ வேறு வேலை செய்யவோ இயலவே இயலாது
(அ.வா.வெ.செ. 2.5.80)  

உடலும் உள்ளதும் :
மயக்கம் :
20 நாட்கு முன் ஒரு வைகறை திடுமென மயங்கி விழுந்துவிட்டேன். அரத்தக் கொதிப்பின் விளைவாகத் தெரிகின்றது. இன்னும் முழுநலமில்லை. ஆயினும் கூட்டமும் என் வரவும் தவிர்க்க முடியாமல் என் மகனைத் துணைக்கொண்டு வருகின்றேன்

கேட்கு முறை :
(அரசை) இரந்து கெஞ்சாது உரிமையொடும் அதிகாரத்தொடும் கேட்க (தி.வை.சொக்கப்பா  28.10.70)

அன்பும் நண்பும் :
இலக்குவனார்:
இலக்குவனார் ஒருவரே இந்தியை எதிர்க்குமாறு மாணவரைத் தூண்டினார். அதனால் வேலையிழந்தார். அதைத் தமிழ்ப் புலவர்குழுவும் கண்டிக்கவில்லை (வி.அ.க. 22.10.66)

ஆடசியும் அமைச்சரும் :
இன்றிருப்பது திரவிட ஆட்சியே யன்றித் தமிழாட்சி யன்று. அதுவரப் பத்து அல்லது பதினைந்தாண்டு செல்லும். அதற்கு இன்றிருந்தே கடுவுழைப்பும் பெரு முயற்சியும் செய்தல் வேண்டும். இன்று தமிழாட்சியிருப்பின் தமிழ் நிலையும் என் நிலைமையும் இங்ஙனம் இரா... 
       அடிகள் படிமைத் திறப்பு தனித்தமிழ ரல்லாதவரைக் கொண்டு நிகழ்த்தின் நான் வரமுடியாதென்று சென்ற ஆண்டே நாகைக் கோவையிளஞ்சேரனுக்கு எழுதிவிட்டேன்...
சிலை என்னும் சொல் பற்றிய ஒரு கட்டுரை மட்டும் விடுத்தேன். அது மலரில் வரும். பாராட்டுச் சொற்பொழிவிற்கு என்னை இசைக்குமாறு புலர் கோவையிளஞ்சேரன் சென்ற கிழமை ஓரன்பரை அனுப்பியிருந்தார். நான் முன்பு செய்த முடிவே முடிவென்று சொல்லியனுப்பிவிட்டேன். ஆரவாரம் வேறு; அமைதி வேறு. உண்மை வேறு, போலி வேறு. திருவேறு, தெள்ளறிவு வேறு. (ந.பிச்சுமணி 1 ஆடவை 2000)

கட்சிப்பற்று :
மொழிப்பற் றின்றிக் கட்சிப்பற்றே யுடைய அமைச்சரை, இனி நம்பிப் பயனில்லை. நம் தமிழும் அவர் தமிழும் வெவ்வேறாம். மேலும், தமிழால் வயிறு வளர்த்துத் தமிழால் பெரும் பொருளீட்டும் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரே தமிழுக்கு மாறாயிருக்கின்றனர் (ந.பி 1 ஆடவை 2000)

மணமகள் :
சேலங்கல்லூரி மேனாள் முதல்வர் அ.இராமசாமிக் கவுண்டரின் இளைய மகன் (கடைக்குட்டி) வெங்கடேசன், உரு அகவையினன். பொறியியல் இளங்கலைஞன் (B.E.).  சென்னையில் அரசியல் அலுவலன். 1500 உருபாச் சம்பளம் பெறுவோன், அழகன், பொன்னிறத்தன், நற்குணன், திறமையன், மணப்பருவத்தன். ஆதலால் பெண்தேடுகின்றனர். இதுவரை தக்கபெண் அமையவில்லை. பொன்னிறமும் பொற்பும் ஒண்கல்வியும் உயர்குணமுமுள்ள  பெண் உம் இனத்திலிருந்தால் உடனே தெரிவிக்க. வந்து பார்க்கச் சொல்கின்றேன். மணமகன் வீட்டார் கொங்கு வேளாண்குடியினரே. நும் இரு முதுகுரவர்க்கும் அன்பான வினவலைத் தெரிவிக்க (மறை.நித்தலின்பன்  17.8.71)

எழுத்துமாற்றம், பெரியார் :
பெரியார்க்குத் தமிழ் எழுத்தை மாற்றவேண்டும் என்பது கருத்தன்று. சிக்கனம் பற்றியே தம் சொந்த இதழில் அதை மாற்றிக் கொண்டார். 25 ஆண்டுகள் அவரோடு தொடர்பு கொண்டிருந்தேன். ஒரு முறை கூடப் பொதுமேடையிலோ என்னிடமோ எழுத்து மாற்றத்தைப் பற்றிச் சொன்னதில்லை.
       1938-இல் அவர் ஈரோட்டிலிருந்து எனக்கெழுதிய ஏழு பக்கக் கடிதம் மரபெழுத்திலேயே இருந்தது.
       1947-இல் எனக்கும் புலவர் பொன்னம்பலத்திற்கும் பெரியார் வழங்கிய வெள்ளிப் பட்டயத்திலும் மரபெழுத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. (கு.பூ.  17.9.79)  

பெரியார் நான் காட்டுப்பாடியில் இருந்தபோது வருமான மில்லையென்று வீடு தேடிவந்து இருநூறு உருபா அளித்தார். சேலங்கல்லாரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர் இறந்தபின் அவர் மனைவியாரிடம் ஐயாயிரம் உருபா நீட்டினார். ஆயின் அவ்வம்மையார் தன் பண்பாடு பற்றி அதைப் பெறவில்லை (கு.பூ. 9.11.79)

ஆய்வும் அறிவுறுத்தமும் :
அயலொலி :
ஆய்த வரியைச் சில அயலொலி குறிக்கப் பயன்படுத்தி  ஃப் (F) என்றும் ஃச் (S) என்றும் பிறவாறும் ஆண்டுவருதல் பகைவர் கையில் குடுமியைக் கொடுக்கும் பேதைமை போலாகும். எழுத்தென்பது ஒலியேயன்றி வரியன்று. ஒலியின் குறியே வரி. அயலெழுத்து வேண்டாமென்று நாமே சொல்லிக்கொண்டு, நாமே அயலெழுத்தை ஆள்வோமாயின் அதை என்னென்பது?
       தமிழ்மொழி அயலொலியாற் கெடுமேயன்றி அயல்வரியாற் கெடாது. அயல் ஒலியைப் பயன்படுத்தும் வரையில் அதைக்குறிக்கும் வரி எதுவந்தாலும் ஒன்றுதான்.
       ஆய்த ஒலியைத் தவறாகப் பயன்படுத்துவதனால் அதன் இயல்பான ஒலியும் கெடுகிறது. கஃசு என்பதை kahsu என்றொலிப்பதா? கஷூ (kashu) என்றொலிப்பதா?
       ஒலியிலக்கணமும் தமிழியல்பும் அறியா மாற்றம செய்தலால் பகைவர்க்குப் பிடிகொடுத்து அவர் எள்ளி நகையாட நேரும்  (வ.சு. 31.1.52) 

முறைகேடு :
அரசு எந்த அளவில் தமிழைப் புறக்கணித்ததுடன் அவமதித்தது என்பதை எண்ணிப் பாரக்க. மறைமலையடிகளை முற்றும் மறந்துவிட்டுப் பிறர்க்குப் படிமை நிறுவியது. எனக்கு ஆராய்ச்சி வேலை வேண்டியதற்கு அகவை கடந்துவிட்டது என்று சொல்லிவிட்டது. தமிழ்க் கூட்டுச்சொற்களையும் சொற்றொடர்களையும் புணர்ச்சியின்றி எழுதி வருகின்றது.... (மு.த.கு. 24.10.69)

வாழ்க்கைத் துணை :
வாழ்க்கைத் துணை இளம் பெண்ணாதலால் உலகியல் நன்றாய் அறியும்வரை தங்கையைக் கவனிப்பதுபோற் கவனிக்க. மாணிய (பிரமசரிய) நிலையில் விடுதலையும் குடும்பக் கவலையின்மையும் மகிழ்ச்சிக் கேதுவாம். மணவாழ்க்கையின் சில இன்பங்களும் ஏந்துகளும் மகிழ்ச்சி விளைவிக்கும். அவ்விரண்டும் இன்றேல் மணவாழ்க்கையிலும் மாணிய வாழ்க்கையே சிறந்ததாம். ஆயின் கற்பைக் காத்துக் கொள்ளவேண்டும். அது கோடியில் ஒருவர்க்குத்தான் இயலும் (ந.பி.  25 நளி 2001)

நால்வகை எழுத்து :
நால்வகை எழுத்து எவ்வகைக்கும் முற்பட்டது மொழி. எகுபதியக் கருத்தெழுத்து விளக்கம் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப் பட்டுவிட்டது. ஆயின் சிந்து நாகரிகக் கருத்தெழுத்து விளக்கம் கண்டுபிடிப்பு நிலையிலேயே இன்றும் இருக்கிறது
(இல.க.இர. 5.6.70)

வேனில் உணவு :
உடம்பைப் பேணுவதையே முதற்கடமையாகக்கொள்க. வேனிற் காலத்தில் குளிர்ச்சிக் கேற்ற உணவுவகைகளையே உண்டு வருக (கு.பூ. 5.7.79)

அதிகாரம் :   
தமிழ் வளர்ச்சியும் தமிழன் உயர்வும் ஒன்றையொன்று தழுவியவை. அதிகாரமின்றி அங்குமிங்கும் ஓடியாடித் திரிநிலையினும் அதிகாரத்துடன் ஓரிடத்திலிருக்கும் நிலையே தொண்டு செய்யச் சிறந்தது (கு.பூ. 17.9.79)

பிறந்தநாட் செய்தி :
தமிழ்ப் பெயர் தாங்குபவரே உண்மைத் தமிழராவார். தமிழ்ப் பெயர் ஏற்றபின் தமிழிலேயே திருமணத்தையும் இருவகைச் சடங்குகளையும் செய்தலும் செய்வித்தலும் வேண்டும். கடவுள் நம்பிக்கையுள்ளவர் திருவழிபாட்டையும் தமிழிலேயே ஆற்றுதல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து செய்துவரின் இன்னும் ஐந்தாண்டிற்குள் தமிழர் தம் அடிமைத்தனமும் அறியாமையும் அடியோடு நீங்கி மேலையர் போல் புதுப்புனைவு தலைப்படுவர் என்பது திண்ணம்.
       ஆங்கிலர் நீங்கியதால் தமிழ்நாடு விடுதலை யடையவில்லை. ஆரியம் நீங்குவதே உண்மையான தமிழர் விடுதலையாம் (மி.மு.சி. 3.2.71)

முந்நோய்கள் :
அறியாமை தன்னலம் அழுக்காறு ஆகிய முந்நோய்கள் நம் இனத்தைப் பல்வேறு துறையில் தொன்றுதொட்டுக் கெடுத்து வருகின்றன (கா.இ.மு. 8.2.73)

பொதுவுடைமை :
தனித்தமிழும் பொதுவுடைமையென்னும் கூட்டுடைமையும் வருகின்ற தேர்தலில் வெற்றிபெறப் பாடுபடுக. இங்குவரின், அதற்கான வழிவகைகளைச் சொல்வேன் (தரங்கை பன்னீர்ச்செல்வனார் 22.5.73)

உ.த.க.வும் பணியும் :
கட்சிச்சார்பு :
உ.த.க. கட்சிச்சார்பு கடுகளவுமின்றித் தமிழ் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது (வி.அ.க. 31.12.68)

வேறு :
உ.த.க. வேறு. (அதன்) முயற்சி யானையைப் பூனை எதிர்ப்ப தொத்ததே
(இல.க.இர. 14.7.72)

அமைப்புகளும் நிகழ்ச்சிகளும் :
குறிக்கோள் :
தனித்தமிழை வளர்த்தல், திருமணமும் வழிபாடும் ஏனையிருவகைச் சடங்குகளும் தனித்தமிழில் நடத்தலும் இயன்றவரை நடப்பித்தலும்

நடப்பு முறை :
மறைமலையடிகள் நூல்களையும் பிறர் எழுதிய தனித்தமிழ் நூல்களையும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினின்று (1/140, பிராட்வே, சென்னை 1) வாங்கி ஒரு தனித்தமிழ் நூல்நிலையம் அமைத்துக் கொள்ளுதலும் அந்நூல்களை ஒழுங்காய்ப் படித்தலும்.
       ஆண்டு தோறும் தனித்தமிழ் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து விழா நடத்துதல். நூல்நிலையத்திற்கும் கழக அலுவற்கும் சொந்தமாகவேனும் வாடகைக்கேனும் ஒரு கட்டடம் அமைத்தல்

நூலார்வமும் நூலாக்கமும் :
மொழியாராய்ச்சி :
மொழி முந்தியதும் தெளிவானதும் ஆதலால் மொழிநூல் முறைப்பட்ட சொல்லாராய்ச்சி முடிவுகளை எவரும் மறுக்க முடியாது. மொழியாராய்ச்சி, கருத்தெழுத்து விளக்கத்தை மாற்றலாம். ஆயின், கருத்தெழுத்து விளக்கம் முறைப்பட்ட மொழியாராய்ச்சி முடிவை மாற்ற முடியாது. அதனால்தான் இத்துறையில் இறங்கினேன்  (இல.க.இர. 5.6.70)

தமிழ்நாட்டு விடுதலை :
பெரியாரும் தமிழ்நாட்டு விடுதலைக் கொள்கையைப் பரப்பி வருவதாகத் தெரிகின்றது. நாளடைவில் கிளர்ச்சி வலுக்கத்தான் தெரியும். ஆயின் கொல்குறும்பும் உட்பகையும் மிக்கிருப்பதால் கீழ்வங்கம் போல் எளிதாய் விடுதலை பெற்றுவிட முடியாது. ஆகவே போராட்ட மறவர்க்குத் துணையாய்ப் பல்வகை வரலாற்று நூலும் அணியமாயிருத்தல் வேண்டும் (கா.இ.மு.  5.8.72)

அச்சீடும் மெய்ப்புப் பார்த்தலும் :
நூற் கட்டடவினை :
கட்டட வினையிற் குத்தித் தைக்காது கோத்துத் தைக்கச் சொல்க (கா.இ.மு. 29.5.72)

(இணையற்ற நூல்) அச்சீடு :
என் வாழ்க்கைக் குறிக்கோளை நிறைவேற்றுவதும், மேலையறிஞரின் ஆரிய மயக்கறுப்பதும், தமிழை மீண்டும் அரியணை யேற்றுவதுமான அகரமுதலி யல்லாத என் தனி நூல்களுள் இணையற்றதுமான The Lemurian Language and its ramifications என்னும் ஆங்கில நூல் (500 பக்கம்) அச்சேற விருக்கிறது.
(மடல்நாள், மடல்பெற்றார் குறிப்பு காணப்படவில்லை)

செந்தமிழ்ச் சொற்பிறப்பில் அகரமுதலிப் பணி :
நற்காலம் :
நாம் இறைவனை நம்பியிருந்தவாறே, மிகப்பிந்தியேனும் தமிழுக்கு நற்காலம் கிட்டிற்று. இது முற்றும் தவத்திருக் குன்றக்குடியடிகளின் தனிப்பெரு முயற்சியின் விளைவாகும். அகரமுதலிப் பணிக்கு இன்னும் தனியிடம் அமையவில்லை... (மு.வ.பரணன் 28.5.74)

விடுதலைக்கும் வழிகோலும் :
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் தி.மு.க. அரசு இதுவரை செய்துள்ள தமிழ்த்தொண்டுகளுள் சிறந்தது. அது திரு. அருட்செல்வனார் ஆட்சியை நிலைப் படுத்துவது மட்டுமன்றி, நாளடைவில் தமிழ்நாடு முழு விடுதலையடையவும் வழிகோலும் (ந.பி. .......?) 

சொல்வளம் :
துளை வகைகள் :
இல்லி மிச்சிறிய துளை (இல்லிக்குடம்)
முழை குகை குவை (cave)
துளை தொளை, தொள்ளை (தொள்ளைக் காது)
தொண்டு சிறு துளை
புழை புடை (hollow in the side of a wall)
பூழை hole of a basal
பொள்ளல் பொத்தல்
நுளை நூழில், செக்குக்குழி
நூழை சிறு வாயில் 
முழை (postern) முகை (cave)  (இல.க.இரத்தினவேலு 10.9.69)

எழுத்து மாற்றக் கேடு :
எழுத்து மாற்றத்திற்கு இடந்தரவே கூடாது. அது பிற்காலத்தில் தமிழ்க் கேட்டுக்கே வழிகாட்டும்” (கு.பூ. 17.9.79)  

பாரி :
நுங்கள் பாரியைப் பார்த்தேன். முற்றும் சரிதான்.ஆயின் அவல் சிறிது மாற்றம் பெறல் வேண்டும். மேலும், அவலம் என்பது இதனொடு தொடர்புடைய தன்று.
அல் அ, அவலம் வலமின்மை, நோய் வருத்தம். என்னிடம் சிறிது பயிற்சி பெறின், என்போன்றே செந்தமிழ்ச் சொற்பிறப்பியற் பணியாற்றலாம் (இரா.இ. 20.11.80)

கதம்பம் :
கதம்பம் தென்சொல்லே.
கல கலம்பு கலம்பம். கலம்பகம் -18 பகுதிகள் கலந்த பனுவல்.
கலம்பகம் கதம்பம் பலவகைப்பூ கலந்த மாலை.
ஒ.நோ: சலங்கை சதங்கை (ச.கருப்பையா, பாவாணர் தமிழ்க் குடும்பம் 20.11.80)

இணைப்பு :
இரட்டை மாட்டு வண்டி :
கணவன் மனைவியர் இல்லற வாழ்க்கை இருபகட் டொரு சகடு போன்.து. அதாவது இரட்டைமாட்டு வண்டியை ஒத்தது. இரு காளைகளும் ஒருமுகமாக இழுத்தால்தான் வண்டி செல்லும். (கல்லைப் பெருஞ்சித்திரன் உஅ சிலை2000)

இசைந்து வாழ்தல் :
இனிமேல் உங்கள் இருவருள் யார் எழுதினாலும் சரி; நாங்கள் இருவரும் இசைந்து வாழ்கிறோம் என்றே தொடங்கவேண்டும் (க.பெ.சி. 20 துலை 200க)

பெண்ணுரிமை :
பெண்களுக்குச் சமஉரிமை நம்நாட்டில் இல்லாததனாலும் அதிகாரம் செல்வம் வலிமை ஆகிய மூன்றும் ஆடவரிடத்திலேயே இருப்பதனாலும் பொதுவாகப்  பெண்களின் குற்றங் குறைகளையே எடுத்துக்கூறுவார்கள். கணவன், மனைவியைக் கவனிக்காவிடின் கண்டிப்பாரில்லை (அன்னகாமு க.பெ.சி. 20 துலை 200க)

கவலைக் கேடு :
கடுகளவுங் கவலைக்கிடமான எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. கவலை கறியைத் தின்னும்; பேராசைப்படவுங் கூடாது போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து... உள்ளதே போதுமென்று பெற்றதுகொண்டு பொந்திகைப் படவேண்டும். வருவாய்க்குத் தக்கவாறே செலவு செய்ய வேண்டும். வளவனாயினும் அளவறிந் தளித்துண் என்பது ஒளவையார் பொன்மொழி.
வளவன் வளநாடுடைய சோழன்.
கடந்து போனதை நினைத்துக் கவலைப்படக் கூடாது.
போனதை நினைப்பார் புத்தி கெட்டவர்
இறைவன் துணையைத் தேடி இயன்றவரை முயன்று கூழானாலும் தன் உழைப்பால் வந்ததைக் குடித்து மகிழ்ச்சியாயிருந்தால் நீடு வாழலாம் ( க.பெ.சி. 2அ சுறவம் 200க)

இருவருக்கும் அனுப்புக :
பெருஞ்சித்திரனார் இங்குக் குடியமர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகின்றது. (1,லால் பேகம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை5). தென்மொழி அச்சக வேலை நடக்கிறது.
நாங்கள் இருவரும் ஒரே யிடத்தில் இருப்பதால் தேன் அனுப்பின் இருவர்க்கும் அனுப்ப வேண்டும். எனக் கனுப்பாவிடின் குற்றமில்லை. (க.பெ.சி. 25.5.77)

கண் மருத்துவம் :
கண்ணில் வலியிருக்குப்போது படிக்கக் கூடாது. இது வேனிற் காலமாதலால் வெயில் நேரத்தில் வெளியில் செல்லவுங் கூடாது. விளக்கொளியைப் பார்ப்பதும் நீண்ட நேரம் கண்விழித்திருப்பதும் கூடா. திரைப்படத்தைப் பார்க்கவே கூடாது. சூடும் பித்தமும் ஊதையும் (வாயுவும்) விளைக்கும் உணவுப் பொருள்களை முற்றும் விலக்கிவிட வேண்டும். நாள்தொறும் தண்ணீரிற் குளித்து அறிவன் காரி நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்துக் குளித்து வருக. குளம்பியை (காப்பியை) நிறுத்திவிட்டு மோர், பதநீர், இளநீர் முதலிய தண்குடியையே பருகி வருக. பழையதும் தயிர்ச்சோறும் உண்டுவருவது நன்று.
       எலுமிசஞ் சாற்றைக் கலந்து தேய்த்துக் குளிக்கலாம். சீனி சேர்த்துக் குடிக்கலாம். நுங்கு, கொடிமுந்திரி, வெள்ளரிப்பழம் முதலியன உண்ணலாம். காலிமுள்ளங்கி (carrot)  கண்ணிற்கு நன்றென்பர்.  அதை அடிக்கடி சமைத்துண்க... நண்பகலில் தலையை (மண்டையை) குளிர்ந்த துணியால் மூடிக் கொள்க
(க.பெ.சி. க0 மீனம் 200க)

குழந்தை நலம் :
குழந்தைகள் மேனி மென்மையாயும் உடம்பு நொய்ம்மையாயும் இருப்பதால், தட்ப வெப்ப நிலைமாறினும், தாயுணவு தகாவிடினும், நெடுந்தொலைவழிச் செல்லினும், தீய நாற்றம் வரினும், முரட்டுத் தனமாய்த் தூக்கினும், நெடுநேரம் உடம்பு அசைவுறினும், ஊட்டங் குன்றினும், உடை காலநிலைக் கொவ்வா விடினும் எளிதாய் நோய்தாக்கும்.
       குழந்தை நலம் பேணுவதில், பின் மருந்தினும் முன்தடுப்பே எல்லா வகையிலும் ஏற்றதாகும். தாய்ப்பாலுண்ணும் குழவிக்கும் தாய் தன் உணவைச் சரிப்படுத்திக் கொள்வதே நோய் தடுக்கும் சிறந்த முறை.
       குழவிக்கு மார்ச்சளியிருக்கும் போது, தாய் குளிர்ச்சியான உணவை உண்ணக்கூடாது. முந்திரிச்சாறு (பிராந்தி) ஒருசில துளிகளில் நீர் கலந்து உறை மருந்துபோல் கொடுக்கலாம். குழந்தை மருத்துவத்தில் அல்லது வளர்ப்பில் தேர்ச்சி பெற்ற மூதாட்டியார் அல்லது மருத்துவர் ஒருவரைத் துணைகொள்வது நல்லது. இறைவன் திருவருளை வேண்டுவதும் இன்றியமையாதது. ஆறு மாதம் முடியும் வரை மிகக்கண்ணுங் கருத்துமாகப் பேணிக் காத்தல் வேண்டும்.
       பூவைப் போல் தொடவும் பொன்னைப் போற் போற்றவும் புத்தேள் (தெய்வம்) போல் தூய இடத்தில் வைக்கவும் வேண்டும் (க.பெ.சி. மீனம் 2002 18.3.71)

மருத்துவம் :
மஞ்சட் காமாலைக்குக் காக்கைக் கறி நன்மருந்தென்பர். அதை மறைவாகச் சமைத்துக் கொடுத்தல் வேண்டும். திருச்சித் திரு.வெள்ளிமலையாரும் சென்ற ஆண்டு அந்த நோயால் வருந்திப் பின்னர் மருத்துவம் பெற்று நலமடைந்தார். அவரையும் வினவியறிதல் வேண்டும்.
       நோய் நீக்கத்தினும் நோய்த்தடுப்பே சிறந்ததாதலின் நோய் முதல்நாடி மீண்டும் நேராவாறு முற்காப்பாயிருந்து கொள்க. காயச்சரக்கு (மல்லி சீரகம்) அரைப்பதும் மாவாட்டுவதும் கடிய வேலை. மாலை அ மணிக்கு நீங்கள் திரும்பா விடினும் தப்பாது உண்டுவிடச் சொல்க (இரா.மு.கி. 30.1.70)

குறிஞ்சி :
குறிஞ்சியில் ஈராண்டிற் கொருமுறையும் நாலாண்டிற் கொருமுறையும்
ஆறாண்டிற் கொருமுறையும் பன்னீராண்டிற் கொருமுறையுமாகப் பூக்கும் நால்வகை யுண்டெனச் சென்ற ஆண்டு ஏர்க்காட்டுப் பயிர்த்தொழில் அலுவலர் சொல்ல அறிந்தேன். பத்தாண்டிற் கொருமுறை பூப்பதும் உண்டெனின், மொத்தம் ஐவகை உண்டெனக் கொள்ளல் வேண்டும்.
       குடந்தை விழாப்போல் பன்னீராண்டிற் கொருமுறை பூக்கும் வகையொன்று இருத்தலாலேயே, அது மாமாங்கம் (மகாமகம்) செடி என்று பெயர் பெற்றுள்ளது. அப்பெயரே ஏர்க்காட்டுப் பொதுமக்களிடம் வழங்குகின்றது. முந்தின பூப்பு கஉ ஆண்டிற்குமுன் நிகழ்ந்ததாகச் செய்தித்தாளிலும் ஒருவர் எழுதியிருந்தார். மாநாட்டுச் சமையத்தில் ஒரு செடி பூப்பதாயிருந்தாலும் பார்த்தல் நன்றே (க.பெ.சி. 22 நளி 2000)

நயன்மைக் கட்சி :
தமிழ்நாட்டில் நயன்மைக் கட்சி (Justice Party)  தோன்றிப் பதினோராண்டு ஆண்டது. நூற்றிற்கு மூவரான பிராமணர்க்கு நூற்றிற்கு மூன்றே அரசியல் அலுவல் என்று சட்டமானபின் பிராமணரெல்லாரும் ஒன்றுகூடி எல்லா வகுப்பாரையும் படிக்கவைத்து முன்னேற்றிப் பதவியளித்த ஆங்கில அரசை நீக்கினாலன்றி நயன்மைக் கட்சியை வீழ்த்த முடியாதென்று கண்டு பேராய இயக்கத்தைத் தமிழ்நாட்டிற் புகுத்தி முனைந்து வளர்த்தனர்.
       நயன்மைக் கடசித் தலைவர் நாட்டு மொழிகளைப் புறக்கணித்து, ஆங்கிலத்தையே போற்றியதாலும் பொதுமக்கள் தொடர்பு இன்மையாலும் ஆங்கிலவரைச் சார்ந்ததனாலும் இறுதியில் தோல்வியடைந்தனர்.
       பேராயத்தில் தமிழர் பெரும்பான்மையரா யிருந்தாலும் தலைவர் பிராமணராகவே யிருந்ததனால் தமிழர் தலைவர் காட்டிக் கொடுக்கும் தன்னலக்
காரராகவே யிருந்து விட்டனர். ஆங்கிலத்தை ஒழித்து இந்தியைத் திணிப்பதில் இருவகைப் பே