சனி, 19 ஜூலை, 2008

“யுகமாயினி”


பொருள் புரியவில்லையா?
அதைப்பற்றி யாருக்குக் கவலை?
பொருள் புரியா அயற்சொல்லைக் கூறவேண்டும்!
அதுதானே மேட்டுக்குடி படைப்பாளிக்கு அடையாளம்!

சரி,
யுகமாயினி’ – தெரிந்துகொள்ள வேண்டுமா?
உங்கள் கெட்ட நேரம்! கீழே படித்துக் கொள்ளுங்கள்! 

1. பணக்காரர்களால் பணக்காரர்களுக்காக பணக்காரர்கள் நடத்தும் பணக்கார இதழ். ஆம்! உண்மை அதுவெனினும், வசதியற்றோர்க்கும் ஏதாவது காரணத்தைக் கொண்டு இதழில் இடந்தருதலு முண்டு. 

2. கண்டிப்பாகத் தலைப்பிலும் உள்ளுரையிலும் அயற்சொற் கலப்பு இருந்தே தீர வேண்டும் பிறமொழிக் கலப்பை வைத்தே எழுத்து மதிப்பிடப்படும். குறிப்பாக, வடசொற் கலப்பு கட்டாயம். ஆங்கிலமும் பிறமொழிகளும் அவரவர் விருப்பப்படிக் கலந்தெழுதலாம்! இப்படி எழுதினால்தான் பெரிய எழுத்தாளர். அதனால்தான், இது மாபெரும் பெருமைக்குரிய இதழ்! 

3. நிறுவக ஆசிரியர்” – எஸ்.பொ. அதென்ன நிறுவக ஆசிரியர்? நிறுவுநர் நமக்குத்தெரியும். நிறுவனர் என்பதும் புரியும். -இப்படியெல்லாம் கேட்காதீர்கள். நிறுவக ஆசிரியர்என்றால் பெரிய பெரிய இதழாளர்க்குத்தான் புரியும். நம்மைப் போன்று தமிழைப் படித்த கைநாட்டுகளுக்குப் புரியாது!

சரி, பெயர்ச் சுருக்கத்திலும் பிறமொழிக் கலப்பு உள்ளதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எஸ்.பொ.!
எப்படி? இரண்டெழுத்திலும் ஒன்று ஆங்கிலம்.

ச.பொ.” – என்றால் அமங்கலமாகத் தெரிகிறதாம்!
சண்முகப் பொன்என்று எழுதலாமென்கிறீர்களா?
அது, நாட்டுப்புறத்தான் போல் தெரிகிறதாம்.
அது சரி, தனியொருவர் உரிமையில் (இதழாசிரியர் கூற்றுப்படி, ‘தனிநபர் சுதந்திரம்’) நாம் தலையிடக் கூடாது. 

4. தமிழர் உருபடியாகச் சிந்தித்துவிடக்கூடாது. அதற்காகவே மிகமிக ஆராய்ந்து எழுதப்படுகின்றன.

சிறிய எடுத்துக்காட்டு:
            மகிழ்வுந்து, சரக்குந்து, பேருந்து எண்களை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி நுண்ணறிவார்ந்த பா (கவிதை) உருவாக்கப் படுகின்றது.
அறிவு கூர்மையடையும் என்ற விளக்கமும் உண்டு -  நீங்களும் நான்கு உந்துகளின் எண்களை எழுதி அறிவைக் கூராக்கிக் கொள்ள!

5. உலகெங்கிலுமுள்ள பெரிய பெரிய எழுத்தாளர்களின் கசமலம்(!) எல்லாம் வழவழப்புத்தாளில் வக்கணையாக வண்ண அட்டையோடு தரப்படுகின்றன.

ஆனால்,- இந்தப்பணக்கார ஈழத்து நிறுவக ஆசிரியர்இதழில்  

கொடுங் கொடிய இனவெறிக் கொலைகாரச் சிங்களரின் முப்படைகளாலும் துன்புற் றுழன்றுச் செத்து மடியும் தமிழர்க்கென எழுத இடப் பற்றாக்குறை! 

இவ்வாசிரியரின் ஒரு பிள்ளை ஈழ உரிமைப்போரில் உயிரீந்திருக்கலாம்!
அது அவர் உணர்வு!
அதற்காக இந்தப் பணக்கார மேட்டுக்குடி இதழாளரிடம் நீங்கள் அதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது!

இன்னும் விளக்கலாம் தான்! உங்களுக்கு வேலையிருப்பதாகச் சொன்னீர்கள். எனக்கும் கூட வேலையிருக்கிறது. வருகிறேன். நன்றி!